நாடு: பண்டைக் காலத்தில் தமிழ்நாடு மிகவும் பரந்திருந்தது. இப்பொழுது குமரி முனைக்குத் தெற்கேயுள்ள தென்கடல், முன்பு பெரும் பரப்பான நிலப்பகுதியாக இருந்தது என்று அறிஞர்கள் ஆராய்ந்து எழுதியுள்ளனர்.
இப்பொழுது நமது நாட்டின் மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அந்த பழைய நிலப் பகுதியில் நீண்டு தொடர்ந்திருந்ததென்றும் தெரிகிறது. அந்நிலத்தின் வடக்கிலும் தெற்கிலும் குமரியாறு, பஃறுளியாறு என்று இரண்டு ஆறுகள் ஒடி அந்நிலப் பகுதிகளை செழுமை செய்தன.
இவற்றின் நீர் மலிவால் ஏழ் தெங்கநாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ்குண கரை நாடு, ஏழ்குறும்பனை நாடு என நாற்பத்தொன்பது நாடுகளும் பிறவும் செழுமை வாய்ந்து திகழ்ந்திருந்தன என்று சங்க நூல்களால் அறியப்படுகின்றது. அந்நிலப்பரப்பை முழுமையாய் ஆராய்ந்த அறிஞர்கள் அது தென் அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா, இந்தியா என்னும் நாடுகளோடு இணைந்து ஆஸ்திரேலியா வரையில் விரிந்திருந்ததென்று சொல்கிறார்கள். இந்நிலப் பகுதியை ‘ஸ்காட் எலியட்’ என்ற அறிஞர் அழிந்து போன ‘லெமோரியா’ என்னும் நூலில் ஆப்பிரிக்கா கண்டம் முதல் கிழக்கிந்தியத் தீவுகள் வரையிலுள்ள பரந்ததொரு நிலப்பரப்பு அமைந்திருந்தது. அங்கு மனிதனைப் போன்ற குரங்குகள் இருந்தன. இவற்றை ‘லெமூர்’ என்று ‘ஸ்கிலேட்டர்’ குறிப்பிடுவதால் அவை வாழ்ந்த நாட்டை ‘லெமூரியா’ என்ற பெயரால் குறிப்பிடுகிறார்.இக்கருத்தினை ‘சர் ஜான் எலான்சு’ என்பவர் தென் இந்தியாவே மனித இனத்தின் மூலாதாரமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது போன்றே ‘ஸர் வால்டர் ராலே’ என்பவரும், லெமோரியாவே மக்களினம் தோன்றிய முதல் நிலப்பரப்பு என்றும் கூறியுள்ளார்.
இப்பொழுது இமயமலை இருக்குமிடம் முன்பு கடலாக இருந்ததென்றும் கூறப்படுகிறது. பின்பு தெற்கேயிருந்து அப்பெரிய நிலப்பகுதி பல கடல்கோள்களால் பல வகையான நீருள் அமிழ்ந்து போயிற்று எனவும், வடக்கே இமயமலை இடங்கள் மேலே எழுந்தன எனவும் கூறுகின்றனர். இதனால் தெற்கே இருந்த மக்கள் இமயமலை இடங்களிலும் பரவினர். அக்காலங்களில் நிகழ்ந்த கடல் கோள்களில் மிகப்பெரிய கடல் கோள்கள் நான்கு என்று கூறப்படுகின்றன. அவை நிகழ்ந்த பின் அப்போது இந்நாட்டின் எவ்லைகள் வடக்கே இமயமலையும் தெற்கே பஃருளியாற்றுக்குத் தென்பால் இருந்த நிலத்தின் கோடிப்பகுதியும், கிழக்கும் மேற்கும் கடலுமாயிருந்தன.
ஏறத்தாழ கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரு வெள்ளத்தின் பின்பு இலங்கையானது தமிழ் நாட்டினின்று பிரிவுபட்டதென்பார். காலஞ்சென்ற வரலாற்று ஆசிரியர் கார்த்திகேய முதலியாரவர்கள். குமரியாற்றிற்கும் பஃருளியாற்றிற்கும் இடை பெருவளநாடே பழந்தமிழ் நாடாகும்.
பெரியதொரு ஆற்றிடை குறையாகலின், அதற்கு அலங்கமெனும் பெயராகும். அலங்கம் - லங்கா- லங்கையாயிற்று என்று கூறியுள்ளார். இதே கருத்தினை இலங்கை வரலாறு ‘மகாவம்சமும்’ கீழ்வருமாறு கூறியுள்ளது. இலங்கைத் தீவு இந்தியத் தென்முனையிலிருந்து கி.மு. 2350 ல் ஏற்பட்ட கடல் கோளின்போது பிரிந்து விட்டது. இனி தெற்கேயிருந்து வடநாடு சென்ற தமிழ் முன்னோர்கள் அவ்விடமே நிலைபெற்றனர். அதனால் மொழி வழக்குகளும் வேறுபட்டு நாளடைவில் வேறு வேறு மொழிகளாக மாறின. ஒரு காலத்தில் இப்படி வடக்கே பனிமலை தொட்டுத் தெற்கே தென்குமரி ஆறு வரையில் தமிழகமாய் இருந்த இந்நாடு பின்பும் வர வர இடம் சுருங்கி வந்தது.
இமயமலைக்கு வடக்கே இருந்த மக்களில் சிலர் இந்நாட்டினுள் நுழைந்து இமயமலை இடங்களில் இருந்த தமிழர்களோடு கலந்து அவ்விடங்களில் நிலைபெற்றனர். மேல்ல மெல்ல அவர்களுடைய மொழிகளும் தமிழ்மொழியோடு கலந்தன. அறிஞர் ராப்பன் என்பவர் ஆரியர்கள் வடமேற்கு வழியாக இந்தியாவுக்குள் புகுந்த காலத்து பெலுசிஸ்தான் முதலிய இடங்களிலும் வடமேற்கு இந்தியாவிலும் தமிழ் சார்பான மொழிகள் வழங்கின என்று கூறியுள்ளார். இதே போன்ற கருத்தினை எஸ்.கே. சட்டர்ஜி என்பவரும் ‘வட இந்தியா முழுமையும் பலுசிஸ்தானத்திலிருந்து வங்காளம் வரை திராவிட மொழி பேசுவோரே பரவி இருந்தனர்’ என்றும் கூறியுள்ளார்.
எனவே தமிழ்மொழி வழ்க்கு ஆங்காங்கே வேறுபட்டு இருந்தமையால் இப்பிற மொழிகளும் வந்து கலந்த பொழுது அவை பற்பல மொழிகள் தோன்றுவதற்கு இடமாயின. இப்படி இந்நாட்டின் வடபகுதி பிறமொழிப் பகுதிகளாக மாறிவிட்டன. அப்பொழுது வடக்கே விந்திய மலையிலிருந்து தெற்கே தென் குமரியாறு வரையில் தமிழ் மொழி வழங்கி வந்தது.
விந்திய மலைக்கு வடக்கே வட நாடு என்றும், அதற்குத் தெற்கே தென்னாடு என்றும் ஒரு பிரிவு தோன்றுவதற்கு இடமாயிற்று. அதன்பின்னரும் தமிழ் மக்கள் தமது மொழியில் பிறமொழி மிகுதியாகக் கலக்க இடம் தந்து வந்தனர். அதனால் வேங்கட மலைக்கு வடக்கே இருந்த தமிழரும் பிற மொழியர்களாய் மாறிவிட்டனர். அப்பொழுது தமிழகத்தின் வடக்கெல்லை விந்திய மலையிலிருந்து வர வரக் குறைந்து கொண்டே வந்தது. ஒரு காலத்தில் தமிழகத்தின் வடக்கெல்லை கிருஷ்ணா நதி வரை இருந்ததென்றும் கூறப்படுகிறது. அதன்பின் சில காலங்களில் அவ்வெல்லையும் குறைந்து தமிழ்நாட்டிற்குத் திருவேங்கடம் வட எல்லையாயிற்று. அப்பொழுது இந்த நாட்டின் வடக்கே திருவேங்கடமும், தெற்கே குமரி ஆறுமாக ஆயின. 5500 ஆண்டுகளுக்கு முன் இருந்த எல்லைகள் இவை. இவ்வாறிருந்த இத்தமிழகம், அதன்பின் நடந்த ஒரு சிறு கடல்கோளால் தெற்குப் பக்கமும் இடம் சுருங்கிவிட்டது. அப்போது குமரியாறும், அதற்குத் தெற்கேயிருந்த சிறு நிலப்பகுதியும் கடலில் மறைந்து போயின.
அதிலிருந்து இந்நாட்டின் தென்முனை குமரிக்கடல் எனப்படுகிறது. இவ்வாறு தமிழக எல்லை சுருங்கி வரவே வட வேங்கடத்திற்கு இப்பாலும் பிற மொழிகள் வேரூன்றியிருக்கின்றன. சென்னைக்கு வடக்கே பெரும்பாலும் தெலுங்கு மொழி வழங்குகின்றது. வடமேற்கே கன்னடம், துளுவம் முதலிய மொழிகள் வழங்குகின்றன. இந்நாட்டின் மேற்குக் கரையோரம் முழுமையும் மலையாள மொழி வழங்கும் தனி நாடாக மாறியிருக்கின்றது. எஞ்சிய இடங்களிலும் அயல்மொழியாளர் பரவி இருக்கின்றனர். இன்றைக்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய நாடு முழுவதும் தமிழ் மக்கள் வாழ்ந்து விளங்கினர் என்பதற்கு சான்றாக ஹரப்பா, மொகஞ்சதாரோ முதலிய இடங்களில் நிலத்தை அகழ்ந்து கண்ட பொருள்கள் அங்கே மிகப் பழைய காலத்தில் சிறந்த தமிழ் திராவிட நாகரிகம் பரவி இருந்ததென்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர். இதை டாக்டர். திரு. மா. ராசமாணிக்கனார் தம் ஆய்வுகளில் உறுதி செய்துள்ளார்.
மொஹஞ்சதாரோவில் வாழ்ந்த மக்களும், தென் இந்திய திராவிடரும் ஒரே இனத்தவரே. இரு பிரிவினரும் பேசிய மொழி ஒன்றே. சிந்துவெளி மொழி திராவிடம் என்பதில் ஐயமில்லை. அது தமிழையே பெரிதும் ஒத்துள்ளது என்று உறுதியாகக் கூறலாம்.
இந்தக் கருத்தினை எச். ஹெராஸ் எனப்படும் கிறிஸ்துவ ஆராய்ச்சிப் பேராசிரியர் மொஹஞ்சதாரோ மக்கள் திராவிடர்களே என்று தெரிவிக்கிறார்.
சிந்து சமவெளி நாகரீக நகைகளிலும், பாத்திரங்களிலும் காணப்படும் எழுத்து, தமிழ் எழுத்துதான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. லெமூரியா எனப்படும் நாட்டிலுள்ள மக்கள் அந்நாடு கடல்வயப்பட்ட பொழுது சிதறுண்டு, பல்வேறு திசைகளில் சென்று ஆங்காங்கே தங்கி வாழ்ந்தனர். ஆப்பிரிக்காவில் சிதறுண்டு தங்கியவர் ‘ஆப்பிரிக்கர்’ என்றும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ‘திராவிடர்கள்’ என்றும், ஜாவா சுமத்திரா வழியாக சீனா போன்ற பகுதிகளுக்குச் சென்றவர்கள் ‘மங்கோலியா’ என்றும் பலவகை மக்களாக வாழ நேரிட்டது. இந்நாட்டில் திராவிடர்கள் நன்கு நாகரீக வளர்ச்சி அடைந்தனர்.
பின்னர் அவர்கள் மேற்குத்திசை நோக்கிப் பயணம் செய்தனர். பல்வேறு நாடுகளில் தங்களுடைய குடியிருப்புகளை அமைப்பதில் அவர்கள் வெற்றியும் கண்டனர். மெசப்படோமியாவிலிருந்து பிரிட்டீஷ்; தீவுகள் வரையில் அவர்கள் பயணம் செய்ததோடு தங்களுடைய இனத்தை மேலை நாடுகளிலும் பரப்பினர். பின்னர் வாழ்ந்த இடத்தின் பெயரால் நடுநிலக்கடல் இனத்தவர் என்ற பெயரையும் அவர்கள் பெற்றனர். தங்களுடைய நாகரீகத்தை இருபெரும் கண்டங்களில் பரவச் செய்ததோடு, இன்றைய உலக நாகரீகத்தையும் அவர்கள் தோற்றுவித்தனர்.
டாக்டர் மக்லீன் என்பவர் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார். ‘திராவிடர் என்ற மக்களினத்தவர் சிந்துவெளியில் வாழ்ந்து வந்தனர். அவர்களுள் ஒரு பிரிவினர் கடல்வழியாகவும், நிலவழியாகவும் மேற்கு நோக்கிச் சென்றனர். கிழக்கு பாபிலோனியாவில் உள்ள சூமர் மாநிலத்தில் அவர்கள் சுமேரியா என்ற பெயரைப் பெற்றனர். முதலில் அவர்களின் புனித பூமியான பாலஸ்தீனம், ஜெருசலேம் வரைக்கும், பின்னர் அங்கிருந்து ஆப்பிரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் சுமேரியா திராவிட நாகரீகத்தைக் கொண்டு சென்று பரப்பினர்.
இதே கருத்தினை திரு. வீ. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார். குமரிக் கண்டம் முதல் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து, நிலநடுக்கடல், நாடுகள் ஆகியவற்றில் மொத்த நாகரீகம் தமிழருடையதே.
எனவே தமிழ்நாடு மிகவும் பழமையானது என்பதும் அப்போது அது மிகப் பெரிய நிலப்பரப்புடையதாக விரிந்திருந்தது என்பதும், பண்டுதொட்டே சிறந்த நாகரீகமுடையதாகத் திகழ்ந்திருந்ததென்பதும் புலப்படும்.