Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

தமிழ்நாடு சாலியர் பட்டாரியர் சமுதாய வரலாறு – ஆசிரியர் திரு. எஸ்.எம். நயினார்.

சாலியர் வரலாறு - அத்தியாயம் 1

நாடு: பண்டைக் காலத்தில் தமிழ்நாடு மிகவும் பரந்திருந்தது. இப்பொழுது குமரி முனைக்குத் தெற்கேயுள்ள தென்கடல், முன்பு பெரும் பரப்பான நிலப்பகுதியாக இருந்தது என்று அறிஞர்கள் ஆராய்ந்து எழுதியுள்ளனர். 

இப்பொழுது நமது நாட்டின் மேற்கேயுள்ள மேற்குத் தொடர்ச்சி மலை அந்த பழைய நிலப் பகுதியில் நீண்டு தொடர்ந்திருந்ததென்றும் தெரிகிறது.  அந்நிலத்தின் வடக்கிலும் தெற்கிலும் குமரியாறு, பஃறுளியாறு என்று இரண்டு ஆறுகள் ஒடி அந்நிலப் பகுதிகளை செழுமை செய்தன.

இவற்றின் நீர் மலிவால் ஏழ் தெங்கநாடு, ஏழ் மதுரை நாடு, ஏழ் முன்பாலை நாடு, ஏழ் பின்பாலை நாடு, ஏழ் குன்ற நாடு, ஏழ்குண கரை நாடு, ஏழ்குறும்பனை நாடு என நாற்பத்தொன்பது நாடுகளும் பிறவும் செழுமை வாய்ந்து திகழ்ந்திருந்தன என்று சங்க நூல்களால் அறியப்படுகின்றது.  அந்நிலப்பரப்பை முழுமையாய் ஆராய்ந்த அறிஞர்கள் அது தென் அமெரிக்கா தொடங்கி ஆப்பிரிக்கா, இந்தியா என்னும் நாடுகளோடு இணைந்து ஆஸ்திரேலியா வரையில் விரிந்திருந்ததென்று சொல்கிறார்கள்.  இந்நிலப் பகுதியை ‘ஸ்காட் எலியட்’ என்ற அறிஞர் அழிந்து போன ‘லெமோரியா’ என்னும் நூலில் ஆப்பிரிக்கா கண்டம் முதல் கிழக்கிந்தியத் தீவுகள் வரையிலுள்ள பரந்ததொரு நிலப்பரப்பு அமைந்திருந்தது.  அங்கு மனிதனைப் போன்ற குரங்குகள் இருந்தன.  இவற்றை ‘லெமூர்’ என்று ‘ஸ்கிலேட்டர்’ குறிப்பிடுவதால் அவை வாழ்ந்த நாட்டை ‘லெமூரியா’ என்ற பெயரால் குறிப்பிடுகிறார்.இக்கருத்தினை ‘சர் ஜான் எலான்சு’ என்பவர் தென் இந்தியாவே மனித இனத்தின் மூலாதாரமாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.  இது போன்றே ‘ஸர் வால்டர் ராலே’ என்பவரும், லெமோரியாவே மக்களினம் தோன்றிய முதல் நிலப்பரப்பு என்றும் கூறியுள்ளார்.

இப்பொழுது இமயமலை இருக்குமிடம் முன்பு கடலாக இருந்ததென்றும் கூறப்படுகிறது.  பின்பு தெற்கேயிருந்து அப்பெரிய நிலப்பகுதி பல கடல்கோள்களால் பல வகையான நீருள் அமிழ்ந்து போயிற்று எனவும், வடக்கே இமயமலை இடங்கள் மேலே எழுந்தன  எனவும் கூறுகின்றனர்.  இதனால் தெற்கே இருந்த மக்கள் இமயமலை இடங்களிலும் பரவினர்.  அக்காலங்களில் நிகழ்ந்த கடல் கோள்களில் மிகப்பெரிய கடல் கோள்கள் நான்கு என்று கூறப்படுகின்றன.  அவை நிகழ்ந்த பின் அப்போது இந்நாட்டின் எவ்லைகள் வடக்கே இமயமலையும் தெற்கே பஃருளியாற்றுக்குத் தென்பால் இருந்த நிலத்தின் கோடிப்பகுதியும், கிழக்கும் மேற்கும் கடலுமாயிருந்தன.
ஏறத்தாழ கி.மு. 3000 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரு வெள்ளத்தின் பின்பு இலங்கையானது தமிழ் நாட்டினின்று பிரிவுபட்டதென்பார். காலஞ்சென்ற வரலாற்று ஆசிரியர் கார்த்திகேய முதலியாரவர்கள். குமரியாற்றிற்கும் பஃருளியாற்றிற்கும் இடை பெருவளநாடே பழந்தமிழ் நாடாகும்.

பெரியதொரு ஆற்றிடை குறையாகலின், அதற்கு அலங்கமெனும் பெயராகும். அலங்கம் - லங்கா- லங்கையாயிற்று என்று கூறியுள்ளார்.  இதே கருத்தினை இலங்கை வரலாறு ‘மகாவம்சமும்’ கீழ்வருமாறு கூறியுள்ளது.  இலங்கைத் தீவு இந்தியத் தென்முனையிலிருந்து கி.மு. 2350 ல் ஏற்பட்ட கடல் கோளின்போது பிரிந்து விட்டது. இனி தெற்கேயிருந்து வடநாடு சென்ற தமிழ் முன்னோர்கள் அவ்விடமே நிலைபெற்றனர்.  அதனால் மொழி வழக்குகளும் வேறுபட்டு நாளடைவில் வேறு வேறு மொழிகளாக மாறின.  ஒரு காலத்தில் இப்படி வடக்கே பனிமலை தொட்டுத் தெற்கே தென்குமரி ஆறு வரையில் தமிழகமாய் இருந்த இந்நாடு பின்பும் வர வர இடம் சுருங்கி வந்தது. 

இமயமலைக்கு வடக்கே இருந்த மக்களில் சிலர் இந்நாட்டினுள் நுழைந்து இமயமலை இடங்களில் இருந்த தமிழர்களோடு கலந்து அவ்விடங்களில் நிலைபெற்றனர்.  மேல்ல மெல்ல அவர்களுடைய மொழிகளும் தமிழ்மொழியோடு கலந்தன.  அறிஞர் ராப்பன் என்பவர் ஆரியர்கள் வடமேற்கு வழியாக இந்தியாவுக்குள் புகுந்த காலத்து பெலுசிஸ்தான் முதலிய இடங்களிலும் வடமேற்கு இந்தியாவிலும் தமிழ் சார்பான மொழிகள் வழங்கின என்று கூறியுள்ளார்.  இதே போன்ற கருத்தினை எஸ்.கே. சட்டர்ஜி என்பவரும் ‘வட இந்தியா முழுமையும் பலுசிஸ்தானத்திலிருந்து வங்காளம் வரை திராவிட மொழி பேசுவோரே பரவி இருந்தனர்’ என்றும் கூறியுள்ளார். 
எனவே தமிழ்மொழி வழ்க்கு ஆங்காங்கே வேறுபட்டு இருந்தமையால் இப்பிற மொழிகளும் வந்து கலந்த பொழுது அவை பற்பல மொழிகள் தோன்றுவதற்கு இடமாயின.  இப்படி இந்நாட்டின் வடபகுதி பிறமொழிப் பகுதிகளாக மாறிவிட்டன.  அப்பொழுது வடக்கே விந்திய மலையிலிருந்து தெற்கே தென் குமரியாறு வரையில் தமிழ் மொழி வழங்கி வந்தது.

விந்திய மலைக்கு வடக்கே வட நாடு என்றும், அதற்குத் தெற்கே தென்னாடு என்றும் ஒரு பிரிவு தோன்றுவதற்கு இடமாயிற்று. அதன்பின்னரும் தமிழ் மக்கள் தமது மொழியில் பிறமொழி மிகுதியாகக் கலக்க இடம் தந்து வந்தனர்.  அதனால் வேங்கட மலைக்கு வடக்கே இருந்த தமிழரும் பிற மொழியர்களாய் மாறிவிட்டனர்.  அப்பொழுது தமிழகத்தின் வடக்கெல்லை விந்திய மலையிலிருந்து வர வரக் குறைந்து கொண்டே வந்தது.  ஒரு காலத்தில் தமிழகத்தின் வடக்கெல்லை கிருஷ்ணா நதி வரை இருந்ததென்றும் கூறப்படுகிறது.  அதன்பின் சில காலங்களில் அவ்வெல்லையும் குறைந்து தமிழ்நாட்டிற்குத் திருவேங்கடம் வட எல்லையாயிற்று.  அப்பொழுது இந்த நாட்டின் வடக்கே திருவேங்கடமும், தெற்கே குமரி ஆறுமாக ஆயின.  5500 ஆண்டுகளுக்கு முன் இருந்த எல்லைகள் இவை. இவ்வாறிருந்த இத்தமிழகம், அதன்பின் நடந்த ஒரு சிறு கடல்கோளால் தெற்குப் பக்கமும் இடம் சுருங்கிவிட்டது. அப்போது குமரியாறும், அதற்குத் தெற்கேயிருந்த சிறு நிலப்பகுதியும் கடலில் மறைந்து போயின.

அதிலிருந்து இந்நாட்டின் தென்முனை குமரிக்கடல் எனப்படுகிறது.  இவ்வாறு தமிழக எல்லை சுருங்கி வரவே வட வேங்கடத்திற்கு இப்பாலும் பிற மொழிகள் வேரூன்றியிருக்கின்றன.  சென்னைக்கு வடக்கே பெரும்பாலும் தெலுங்கு மொழி வழங்குகின்றது.  வடமேற்கே கன்னடம், துளுவம் முதலிய மொழிகள் வழங்குகின்றன.  இந்நாட்டின் மேற்குக் கரையோரம் முழுமையும் மலையாள மொழி வழங்கும் தனி நாடாக மாறியிருக்கின்றது.  எஞ்சிய இடங்களிலும் அயல்மொழியாளர் பரவி இருக்கின்றனர்.  இன்றைக்கு பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்திய நாடு முழுவதும் தமிழ் மக்கள் வாழ்ந்து விளங்கினர் என்பதற்கு சான்றாக ஹரப்பா, மொகஞ்சதாரோ முதலிய இடங்களில் நிலத்தை அகழ்ந்து கண்ட பொருள்கள் அங்கே மிகப் பழைய காலத்தில் சிறந்த தமிழ் திராவிட நாகரிகம் பரவி இருந்ததென்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.  இதை டாக்டர். திரு. மா. ராசமாணிக்கனார் தம் ஆய்வுகளில் உறுதி செய்துள்ளார்.

மொஹஞ்சதாரோவில் வாழ்ந்த மக்களும், தென் இந்திய திராவிடரும் ஒரே இனத்தவரே.  இரு பிரிவினரும் பேசிய மொழி ஒன்றே.  சிந்துவெளி மொழி திராவிடம் என்பதில் ஐயமில்லை.  அது தமிழையே பெரிதும் ஒத்துள்ளது என்று உறுதியாகக் கூறலாம்.

இந்தக் கருத்தினை எச். ஹெராஸ் எனப்படும் கிறிஸ்துவ ஆராய்ச்சிப் பேராசிரியர் மொஹஞ்சதாரோ மக்கள் திராவிடர்களே என்று தெரிவிக்கிறார்.

சிந்து சமவெளி நாகரீக நகைகளிலும், பாத்திரங்களிலும் காணப்படும் எழுத்து, தமிழ் எழுத்துதான் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன.  லெமூரியா எனப்படும் நாட்டிலுள்ள மக்கள் அந்நாடு கடல்வயப்பட்ட பொழுது சிதறுண்டு, பல்வேறு திசைகளில் சென்று ஆங்காங்கே தங்கி வாழ்ந்தனர்.  ஆப்பிரிக்காவில் சிதறுண்டு தங்கியவர் ‘ஆப்பிரிக்கர்’ என்றும், இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ‘திராவிடர்கள்’ என்றும், ஜாவா சுமத்திரா வழியாக சீனா போன்ற பகுதிகளுக்குச் சென்றவர்கள் ‘மங்கோலியா’ என்றும் பலவகை மக்களாக வாழ நேரிட்டது.  இந்நாட்டில் திராவிடர்கள் நன்கு நாகரீக வளர்ச்சி அடைந்தனர்.

பின்னர் அவர்கள் மேற்குத்திசை நோக்கிப் பயணம் செய்தனர். பல்வேறு நாடுகளில் தங்களுடைய குடியிருப்புகளை அமைப்பதில் அவர்கள் வெற்றியும் கண்டனர். மெசப்படோமியாவிலிருந்து பிரிட்டீஷ்; தீவுகள் வரையில் அவர்கள் பயணம் செய்ததோடு தங்களுடைய இனத்தை மேலை நாடுகளிலும் பரப்பினர்.  பின்னர் வாழ்ந்த இடத்தின் பெயரால் நடுநிலக்கடல் இனத்தவர் என்ற பெயரையும் அவர்கள் பெற்றனர். தங்களுடைய நாகரீகத்தை இருபெரும் கண்டங்களில் பரவச் செய்ததோடு, இன்றைய உலக நாகரீகத்தையும் அவர்கள் தோற்றுவித்தனர்.

டாக்டர் மக்லீன் என்பவர் கீழ்க்கண்டவாறு எழுதியுள்ளார்.  ‘திராவிடர் என்ற மக்களினத்தவர் சிந்துவெளியில் வாழ்ந்து வந்தனர்.  அவர்களுள் ஒரு பிரிவினர் கடல்வழியாகவும், நிலவழியாகவும் மேற்கு நோக்கிச் சென்றனர். கிழக்கு பாபிலோனியாவில் உள்ள சூமர் மாநிலத்தில் அவர்கள் சுமேரியா என்ற பெயரைப் பெற்றனர். முதலில் அவர்களின் புனித பூமியான பாலஸ்தீனம், ஜெருசலேம் வரைக்கும், பின்னர் அங்கிருந்து ஆப்பிரிக்காவிற்கும், ஐரோப்பாவிற்கும் சுமேரியா திராவிட நாகரீகத்தைக் கொண்டு சென்று பரப்பினர்.

இதே கருத்தினை திரு. வீ. ஆர். இராமச்சந்திர தீட்சிதர் அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார்.  குமரிக் கண்டம் முதல் சிந்துவெளி, சுமேரியா, எகிப்து, நிலநடுக்கடல், நாடுகள் ஆகியவற்றில் மொத்த நாகரீகம் தமிழருடையதே. 

எனவே தமிழ்நாடு மிகவும் பழமையானது என்பதும் அப்போது அது மிகப் பெரிய நிலப்பரப்புடையதாக விரிந்திருந்தது என்பதும், பண்டுதொட்டே சிறந்த நாகரீகமுடையதாகத் திகழ்ந்திருந்ததென்பதும் புலப்படும்.

மாசி மாத ராசிபலன்கள் 13.02.2016 முதல் 13.03.2016 வரை

மேஷம்:  ராசிநாதன் செவ்வாய் ராசிக்கு 7ம் இடத்தில் அமர்ந்து பிப்ரவரி 20 வரை ராசியை பார்ப்பதால் சில நன்மைகள் எற்படும். எடுத்த காரியம் வெற்றியடையும்.  பஞ்சமாதிபதியான சூரியன் கும்பத்தில் அமர்ந்து குருபார்வை பெறுவதால் இம்மாதம் மிகவும் சிறப்பாகும்.  பாக்கியாதிபதி குருபார்வை ராசிநாதன் செவ்வாய் பார்வை படுவதால், 10ம் இடமான தொழில் ஸ்தானத்தை பார்ப்பதால் புதிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். சூரியன் மற்றும் குருபகவான் வழிபாடு வெற்றியைத்தரும்.  மார்ச் 7 முதல் மார்ச் 13 வரை சிலருக்கு சுபகாரிய நிகழ்ச்சி நடைபெற வாய்ப்புகள் உள்ளன.  திருமண வயதில் உள்ளவர்க்கு திருமணம் கைகூடும்.  ராகு திசை நடப்பவர்கள் திருநாகேஸ்வரம் சென்று வழிபடுதல் சிறப்பு தரும். குரு திசை நடப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். ஆலங்குடி ஸ்ரீ தட்சிணாமூர்த்தி ஆலயம் சென்று வழிபட உயர்பதவி கிடைக்கும். 29-02-2016 மாலை 5-10 முதல் 03-03-2016 காலை 4.21 வரை சந்திராஷ்டமம். எதிலும் நிதானம் தேவை.

ர்pஷபம்: இராசிநாதன் சுக்கிரன் 9மிடம் பாக்கியஸ்தானத்தில் மார்ச் 7ம் தேதி வரை உள்ளது சிறப்பான காலம்.  சுபநிகழ்ச்சிகள் நடைபெறும்.  இராசிக்கு 7ம் இடத்தில் விருச்சிகத்தில் சனி செவ்வாய் சேர்க்கை ஏற்படுவதால் கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.  உடல்நிலையில் சற்று கவனம் தேவை.  சனிக்கிழமை ஆஞ்சநேயர் வழிபாடும், செவ்வாய் அன்று முருகன் வழிபாடும் நலம் தரும். 4ல் ராகு மற்றும் 10ல் கேது சஞ்சரிப்பது தொழில் தடங்கலை உருவாக்கும். சித்திரகுப்தர் மற்றும் விநாயகர் வழிபாடு தொழிலில் ஏற்படும் தடைகளை நிவர்த்தி செய்யும்.  சூரியன் சாதகமான நிலையிலிருந்து குரு பார்வை பெறுவதால் அரசு தொடர்பான காரியங்கள் சித்தியாகும். சிலருக்கு உத்தியோகத்தில் முன்னேற்றமும், புதிய முயற்சியில் வெற்றியும் கிடைக்கும். சூரிய திசை நடப்பவர்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. சூரிய பகவான் வழிபாடு நன்மை தரும்.  03-03-2016 காலை 4.21 முதல் 05-03-2016 காலை 11 வரை சந்திராஷ்டமம் நிதானம் தேவை.

மிதுனம்: இராசிநாதன் புதன் 8மிடத்தில் இருந்து மார்ச் 1ம் தேதி 9மிடம் பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் சில நன்மைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. ராசிக்கு 10மிடத்து அதிபதி குரு பாக்கிய ஸ்தானத்தில் உள்ள சூரியன் மற்றும் புதனை பார்ப்பதால் மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டு. ராசிக்கு 6மிடத்தில் சனி அமர்ந்துள்ளதால் போட்டியில் வெற்றி மற்றும் ஆரோக்கியம் மேம்படும். சந்திரனின் சஞ்சாரத்தில் இம்மாதம் 17 நாட்கள் சிறப்பாக இருக்கும்.  குரு பார்வை 7மிடத்தில் இருப்பதால் திருமணப் பேச்சுவார்த்தை சிலருக்கு நடைபெறும். திருமணத்தடை நீங்க திருச்செந்தூர் முருகன் வழிபாடு செய்ய வேண்டும். 3 மற்றும் 9 ல் ராகு, கேது இருந்து கேதுவை குரு பார்ப்பதால் ஆன்மீக சிந்தனை மேலோங்கும். சனி மற்றும் புதன் திசையில் தனது புத்தி நடப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். 05-03-2016 காலை 11 முதல் 07-03-2016 மதியம் 2-48 வரை சந்திராஷ்டமம். நிதானம் தேவை, புதிய முயற்சிகள் தவிர்க்கப்பட வேண்டும்.


கடகம்: இராசிநாதன் சந்திரன். குடும்பஸ்தானத்தில் குரு, ராகு சேர்க்கை உள்ளது. குடும்பம், வாக்கு, தனம் ஸ்தானத்திற்கு அதிபதி சூரியன் 8 மிடத்தில் கேதுவுடன் சேர்க்கை ஏற்பட்டுள்ளது. குரு பார்வை 8மிடத்தை பார்பதால் கேது மற்றும் சூரிய திசை நடப்பவர்கள் உடல்நிலையில் கவனம் தேவை. பேச்சில் நிதானம் தேவை ராசிக்கு 5மிடத்தில் உள்ள சனி ராசியிலிருந்து 2ம் இடத்தை பார்ப்பதால் வருவாய் சுமாராக இருக்கும். இம்மாதம் ராகு, கேது பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பு தரும். சந்திரனின் சஞ்சாரம் 13 நாட்கள் சிறப்பாகவும் 17 நாட்கள் சுமாராகவும் இருக்கும்.  5ம் இடத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை ஏற்பட்டுள்ளதால் புத்திரர் வழியில் செலவு உண்டாகும். சிலருக்கு சுபச் செலவுகளும், சிலருக்கு மருத்துவச் செலவுகளும் ஏற்படும்.   07-03-2016 மதியம் 2-48 முதல் 09-03-2016 மதியம் 3-28 வரை சந்திராஷ்டமம். சுப காரியங்களைத் தவிர்க்கவும்.

சிம்மம்: இராசிநாதன் சூரியன் இந்த மாதம் ராசிக்கு 7ம் இடத்தில் அமர்ந்து ராசியை பார்ப்பதாலும், குரு ராசியில் அமர்ந்து சூரியனைப் பார்ப்பதும் நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.  ஒரு சிலருக்கு மருத்துவ செலவுகள் ஏற்படும். கேது, சூரியன் சேர்க்கையால் ஏற்படும் கெடுபலன்கள் குரு பார்வையால் குறையும். 4ம் இடத்து சனி, செவ்வாய் சேர்க்கை இடப்பெயற்சி, வாகன மாற்றம் ஏற்படுத்தும். சனியின் 10ம் இடத்து பார்வையால் உடல்நலனில் சிறிது பாதிப்புகள் ஏற்படலாம்.  ராகு, குரு திசை நடப்பவர்கள் திருநாகேஸ்வரத்தில் பரிகாரம் செய்வது நல்லது. ஞாயிறு மற்றும் வியாழன் அன்று நவக்கிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு நெய்தீபம் ஏற்றுவது நன்மை உண்டாக்கும். 09-03-2016 மதியம் 3-28 முதல் 11-03-2016 மதியம் 3-43 வரை சந்திராஷ்டமம். நிதானம் தேவை.

கன்னி:  இராசிநாதன் புதன் 5ம் இடத்தில் மார்ச் 1ம் தேதிவரை சுக்கிரனுடன் சேர்ந்திருப்பதால் வருவாய் பெருகும். புத்திரர்க்கு முன்னேற்றம் உண்டாகும். 3ம் இடத்தில் அமர்ந்துள்ள சனி, சனி திசை சனி புத்தி நடப்பவர்க்கு காரியம் கைகூடும் மற்றும் பெரிய மனிதர்களின் நட்பு ஏற்படும்.  விரையாதிபதி சூரியன் 6ம் இடத்தில் இருந்தாலும், குரு பார்வை கிடைப்பதால் வீண் விரையம் தவிர்க்கப் படும். 3 மற்றும் 8 க்குடைய செவ்வாய் பிப்ரவரி 20 முதல் விருச்சிகத்தில் செவ்வாயுடன் சேர்க்கை பெறுவதால் சகோதரர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்படும். நிதானம் தேவை. சனி மற்றும் ராகு திசை நடப்பவர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு. துர்கா தேவி மற்றும் ஆஞ்சநேயர் வழிபாடு வெற்றி தரும். 13-02-2016 காலை 7.13 முதல் 15-02-2016 காலை 8-50 வரை மற்றும் 11-03-2016 மாலை 3-46 முதல் 13-03-2016 மாலை 4.10 வரை வரை சந்திராஷ்டமம். நிதானம் தேவை, புதிய முயற்சிகளை தவிர்க்கவும்.

துலாம்: இராசிநாதன் சுக்கிரன் ராசிக்கு 4மிடத்தில் சனி வீட்டில் மகரத்தில் அமர்ந்து சனி பார்வை பெற்று, மார்ச் 7ம் தேதி முதல் பஞ்சம ஸ்தானத்திற்கு வருவதால் நல்ல முன்னேற்றமான காலம். 2ம் இடம் தனம், குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் பிப்ரவரி 8 முதல் செவ்வாய், சனி சேர்க்கை ஏற்படுவதால் பேச்சில் கவனம் தேவை.  11ம் இடமான லாபஸ்தானத்தில் குரு, ராகு சேர்க்கை ஏற்படுவதால் வருமானம் அதிகரித்தாலும் கடன் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புண்டு. சூரியன் ராசிக்கு பஞ்சம ஸ்தானத்திலிருந்து, குரு பார்வை பெறுவதால் புத்திரர்களால் செலவு ஏற்படும். திருமணப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும். சுக்கிர ஸ்தலமான ஸ்ரீரங்கம் சென்று வழிபடுவதால் சிறப்பு ஏற்படும். 15-02-2016 காலை 8.50 முதல் 17-02-2016 மதியம் 1.40 வரை சந்திராஷ்டமம்.

விருச்சிகம்: இராசிநாதன் செவ்வாய் பிப்ரவரி 8 அன்று ராசியில் சனியுடன் சேர்க்கை ஏற்படுவதால் உடல் நலனில் கவனம் தேவை. 7;ம் இடமான களத்திர ஸ்தானத்தை சனி, செவ்வாய் பார்ப்பதால் திருமணமானவர்க்கு குடும்பத்தில் சில சச்சரவு ஏற்பட வாய்ப்புண்டு.  தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் குரு பார்வை படுவதால் சுப காரியங்கள் நடக்கும்.  7, 12 க்குடைய சுக்கிரன் மார்ச் 7ம் தேதியில் கும்பத்திற்கு பெயர்ச்சி அடைந்து குரு பார்வை பெறுவதால் சிலருக்கு திருமணப் பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் தரும். சுக்கிர திசை, தனது புத்தி நடப்பவர்க்கு நல்ல முன்னேற்றம் உண்டு. கேது திசை நடப்பவர்கள் தாயாரின் உடல் நிலையில் கவனம் தேவை. காஞ்சிபுரம் சித்திரகுப்தர் கோவில் சென்று வழிபடுவது கேது திசை நடப்பவர்க்கு நன்மை தரும். சந்திரன் சஞ்சாரம் 12 நாட்கள் நன்மை அளிக்கும். 17-02-2016 மதியம் 1.40 முதல் 19-02-2016 இரவு 8.40 வரை சந்திராஷ்டமம். நிதானம் தேவை.

தனுசு: இராசிக்கு 9ம் இடத்தின் அதிபதி சூரியன் 3ம் இடத்தில் அமர்ந்து ராசிநாதன் குருவின் பார்வை பெறுவதால் எடுத்த காரியம் விடாமுயற்சியால் வெற்றியடையும். ராசிநாதன் பாக்கியஸ்தனத்தில் அமர்ந்து, பாக்கியாதிபதி சூரியனை பார்ப்பதால் வெற்றி உண்டாகும். தடைபெற்ற திருமணம் நடைபெறும். 5, 12 க்குடைய செவ்வாய் பிப்ரவரி 20 அன்று விரைய ஸ்தானத்தில் சனியுடன் சேர்க்கை பெறுவதால் பயணத்தி;ல் கவனம் தேவை, வீண்விரையம் ஏற்படும். ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. சந்திரனின் சஞ்சாரம் 20 நாட்களுக்கு நன்மை ஏற்படுத்தும். சிலருக்கு சுபச் செலவுகள் ஏற்படும். திருத்தணி அல்லது திருப்பரங்குன்றம் சென்று முருகனை வழிபடுவதால் முன்னேற்றம் ஏற்படும். குரு திசை நடப்பவர்களுக்கு குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் ஏற்படும்.  ராகு திசை நடப்பவர்கள் சிறிது நிதானத்துடன் செயல்பட வேண்டும். 19-02-2016 இரவு 8.40 முதல் 22-02-2016 காலை 5.29 வரை சந்திராஷ்டமம். நிதானம் தேவை.


மகரம்: இராசிநாதன் சனி பகவான் லாபஸ்தானத்தில் இருப்பது சிறப்பு. ராசிக்கு 8ம் இடத்தில் ஏற்பட்டுள்ள குரு, ராகு சேர்க்கையால் ராகு திசை நடப்பவர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ராசியின் அஷ்டமாதிபதியான சூரியன் 2ம் இடமான வாக்கு, தனம் மற்றும் குடும்ப ஸ்தானத்தில் இருப்பதால் பேச்சில் நிதானம் தேவை. சூரியனின் மாசி மாத சஞ்சாரம் இந்த ராசிக்கு அவ்வளவு சிறப்பானது அல்ல.  சந்திரனின் சஞ்சாரம். 15 நாட்களுக்கு சிறப்பாக உள்ளது. கண், தோல் மற்றும் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் கவனம் தேவை. சனி – செவ்வாய் சேர்க்கை ராசிக்கு 11ம் இடத்தில் ஏற்படுவதால் சகோதரர்க்கு முன்னேற்றமுண்டு.  ராகு திசை நடப்பவர்கள் இம்மாதம் துர்கா தேவியை சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திரத்தில் வணங்கி தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்வது நன்மையளிக்கும். 22-02-016 காலை 5.29 முதல் 24-02-2016 மாலை 4.32 வரை சந்திராஷ்டமம். கவனம் தேவை.

கும்பம்: இராசிநாதன் சனீஸ்வரன் ராசிக்கு 10ம் இடத்தில் செவ்வாயுடன் சேர்க்கை பெறுவதும், ராசிக்கு 7ம் இடத்து சூரியன் ராசியில் கேதுவுடன் சேர்க்கை பெறுவதும் சில பிரச்சினைகளை ஏற்படுத்தும்.  கூட்டு தொழில் செய்பவர்கள் நிதானத்துடன் செயல்பட வேண்டும். திருமணப் பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற கேது மற்றும் சூரிய வழிபாடு செய்ய வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்க்கு முன்னேற்றம் உண்டு. சுயதொழில் செய்பவர்களுக்கு நிதானம் தேவை. சிம்மத்தில் ஏற்படும் குரு, ராகு சேர்க்கை மற்றும் ராசியில் ஏற்படும் சூரியன், கேது சேர்க்கை காரணமாக எடுத்த காரியத்தில் நிதானம் தேவை. குரு மற்றும் ராகு திசை நடப்பவர்கள் பரிகாரம் செய்யவேண்டும். சுப்பிரமணியர் மற்றும் துர்காதேவி வழிபாடு நன்மை பயக்கும். 24-02-2016 மாலை 4.32 முதல் 27-02-2016 காலை 4.24வரை சந்திராஷ்டமம். பேச்சில் கவனம் தேவை.

மீனம்: இராசி நாதனான குருபகவான் ராசிக்கு 2ம் இடத்தை பார்ப்பதால் வருமானம் சிறப்பாக இருக்கும், சுபச் செலவுகள் ஏற்படும். இந்த ராசி உடையவர்கள் நேர்மை மற்றும் முன்யோசனை மிக்கவர். ராசிக்கு 6ம் இடதத்து சூரியன் 12ல் மறைந்துள்ளதால் சத்ரு பயம் நீங்கும்.  9ம் இடமான பாக்கியஸ்தானத்தில் சனி, செவ்வாய் சேர்க்கை ஏற்படுவதால் நிலம், வீடு வாங்கும் யோகம் சிலருக்கு ஏற்படும்.  6ம் இடத்து குரு, ராகு சேர்க்கை மற்றும் 12 ம் இடத்து சூரியன், கேது சேர்க்கை உடல்நிலையில் சற்று கவனம் தேவை என உணர்த்துகிறது. இம்மாதத்தின் சந்திரன் சஞ்சாரம் மிகவும் சிறப்பாக உள்ளது. சுக்கிர திசை நடப்பவர்கள் கும்பகோனம் அருகில் உள்ள கஞ்சனூர் சென்று வழிபடுவது நன்மை தரும். கலைத்தொழில் புரிபவர்க்கு சிறப்பான மாதம். சூரிய திசை, தனது புத்தி நடப்பவர்கள் வேலையில் சற்று கவனமாக இருக்க வேண்டும். 27-02-2016 காலை 4.24 முதல் 29-02-2016 மாலை 5.10 வரை சந்திராஷ்டமம். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. பேச்சில் நிதானம் தேவை.  

கணித்து வழங்கியவர்:
பி. சங்கர நாராயணன், ஜோதிடர்,
எண். 4ஃ4 லோகையா தெரு,
சாலிக்கிராமம், சென்னை -93
மொபைல் : 93826 79611

பொன்மொழிகள்

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்.
    ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்            
                                                                                                                              - அப்துல் கலாம்.

கடுமையான உழைப்பே மக்களை வறுமையிலிருந்து மீட்கும்.
சமதர்ம சமுதாயம் மலர வன்முறை தேவையில்லை.
கல்வியும், உழைப்பும் போதுமானது.                        
                                                                                                                                 - காமராஜர்.

சிறிய தவறுகளைத் திருத்திக் கொள்ளாவிட்டால்
பெறிய தவறுகளைத் தவிர்க்க முடியாது                   
                                                                                                                                 - கன்ஃபூசியஸ்.

செய்ய முடிந்தவன் சாதிக்கிறான்
செய்ய முடியாதவன் போதிக்கிறான்                       
                                                                                                                                 - பெர்னாட்ஷா

கண்பார்வை இல்லாதவன் குருடன் அல்ல.
தன் தவறுகளை உணராதவனே குருடன்                       
                                                                                                                                   - காந்திஜி

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில்
ஒரு பக்கம் ஒதுக்கப் பட்டுள்ளது.
ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது
உங்கள் கைகளில்தான் உள்ளது.                       
                                                                                                                                - அப்துல் கலாம்.

தோல்வியிலிருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால்
அதுதான் உண்மையான தோல்வி                       
                                                                                                                           - ஏ. ஆர். ரஹ்மான்.

உணவே மருந்து, மருந்தே உணவு

ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் நிகழும் மாற்றங்கள் என்னவென்று தெரியுமா...!!!

இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும். அதேபோல் தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றியும் பலரும் அறிந்திருப்பீர்கள். இப்போது நாம் பார்க்கப் போவது இளநீர் பற்றி அல்ல, தேங்காய் தண்ணீரின் நன்மைகளைப் பற்றி தான். அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் தண்ணீரின் நன்மைகளைத் தான் இங்கு கொடுத்துள்ளோம்.

தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அவற்றை 7 நாட்கள் தொடர்ந்து குடித்து வந்தால், உடலில் நல்ல மாற்றங்களைக் காணலாம். மேலும் தேங்காய் தண்ணீர் மிகவும் சிறப்பான உடலை சுத்தப்படுத்தும் பானங்களுள் ஒன்று.

சரி, இப்போது தேங்காய் தண்ணீரைக் குடிப்பதால் உடலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்று பார்ப்போம்.

* நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும் : தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்ப்பு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.

* தைராய்டு ஹார்மோன்கள் : தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்.

* சிறுநீரக பிரச்சனைகள் : சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.

* செரிமான பிரச்சனை : செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம். ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.

* எடையைக் குறைக்கும் : தேங்காய் தண்ணீரை எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது. மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும். இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.

* உயர் இரத்த அழுத்தம் : உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்தால், அவை உடலின் எலெக்ரோலைட்டுக்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.

* தலைவலி : இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய் தண்ணீர் குடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, ஹேங்ஓவர் பிரச்சனை நீங்கும்.

* நீர்ச்சத்து அதிகமாகும் : தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.

* கர்ப்பிணிகளுக்கு நல்லது : கர்ப்பிணிகள் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.




படித்ததில் பிடித்தது

வீடு வீடாக பொருட்களை விநியோகம் செய்யும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது.  எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணம் இல்லை.  அருகில் இருந்த வீட்டில் ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான்.
அந்த வீட்டின் கதவைத் தட்டினான்.  ஒரு பெண் கதவைத் திறந்தாள்.  சாப்பிட ஏதாவது வேண்டும் எனக் கேட்க கூச்சப்பட்டு “கொஞ்சம் குடிக்கத் தண்ணி கிடைக்குமா?” என்று தயக்கத்துடன் கேட்கிறான். அந்தப் பெண் சிறுவனின் கண்களிலிருந்த பசியைக் கவனித்தவள் உள்ளே சென்று ஒரு கப் பாலைக் கொடுக்கிறாள்.

பாலைக்குடித்து பசியாறிய சிறுவன் “நான் எவ்வளவு கடன் பட்டிருக்கிறேன்?” என்று கேட்டான். அதற்கு அந்த பெண் “கடனா? அப்படி ஒன்றும் இல்லை. அன்பு செலுத்துவதற்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்” என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.

“ரொம்ப நன்றி” என்று சிறுவன் புன்னகையுடன் சென்றான்.

ஆண்டுகள் பல கழிந்தன.  அந்த சிறுவன் கஷ்டப்பட்டு தன் படிப்பை முடித்து பின்னாளில் அந்த நகரிலேயே சிறந்த மருத்துவர் ஆனார்.  அந்த பெண்ணோ நோய்வாய்ப்பட்டு அவன் பணியாற்றிய மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தாள்.  மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் மருத்துவருக்கு மலரும் நினைவுகள்.  அந்த பெண்ணை வார்டில் சென்று பார்த்த போது அவள்; தன் பசியாற்றிய தாயுள்ளம் கொண்ட அதே பெண்தான் என அடையாளம் கண்டு கொண்டார்.

அன்று முதல் தன்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து அந்தப் பெண்ணிற்கு தீவிர சிகிச்சையை செய்தார். அவள் குணமடைந்தாள். அந்த மருத்துவமனை பல லட்சங்களுக்கு ஒரு நீண்ட பில் அனுப்பியது. அந்த பணத்தை எப்படி கட்டப்போகிறோம் என்ற பதட்டத்துடன் வாங்கியவள் திகைத்தாள்.

காரணம் அந்த பில்லில் கடைசியாக மருத்துவரால் எழுதப்பட்டிருந்த வாசகம்.

“இந்த பில்லுக்கான கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுவதும் செலுத்தப்பட்டு விட்டது. இது நன்றி சொல்லும் நேரம்”

அதைப் படித்த அந்த பெண்ணின் கண்கள் கசிந்தன. 

இது அமெரிக்காவின் பிரபல மருத்துவரான ஹோவர்ட் கெல்லி (1858-1943) அவர்களின் வாழ்வில் நடந்த உண்மைச் சம்பவம்.

மகா சிவராத்திரி

சிவனை வணங்கி இந்துக்களால் கொண்டாடப்படும் விரதம் மகா சிவராத்திரி.

ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவு முழுவதும் கொண்டாடப்படுகிறது. “மகா சிவராத்திரி கற்பம்” எனும் நூல் மூலம் சிவராத்திரி நோன்பு முறைகளை விரிவாக அறியலாம். 

விரதத்தின் வகைகள்: நித்திய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி மற்றும் மகா சிவராத்திரி என ஐந்து வகையாக இவ்விரதம் கடைபிடிக்கப் படுகிறது.

ஓவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தசி இரவு மாத சிவராத்திரி ஆகும். சிவராத்திரியின் முதல் நாள் ஒருபொழுது உணவருந்தி நாள் முழுவதும் விரதமிருந்து சிவசிந்தனையுடன் இரவு விழித்திருந்து நான்கு யாம வழிபாடுகளையும் முடித்து காலையில் நீராடிய பின் சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

இவ்விரதம் பற்றிய ஐதீகங்கள்:  ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின்போது உயிர்கள் எல்லாம் சிவனிடத்தே ஒடுங்கின. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள்.  அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களை படைத்தருளினார்.  அப்போது உமையவள் ‘சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்து போற்றிய காலம்’ “சிவராத்திரி” என பெயர் பெற வேண்டும். என்றும் அதனை சிவராத்திரி விரதம்  என்று அனைவரும் கடைபிடிக்க வேண்டும், அதைக் கடைபிடிக்கும் அனைவரும் எல்லா நலன்களும் பெற்று முக்தி அடைய வேண்டும்  என்றும் பிரார்த்தித்ததன்பேரில் இறைவனும் அவ்வாறே அருள் புரிந்தார்.  அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமாள், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப் பெற்றனர்.

மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தசியன்று அமாவாசைக்கு முதல் நாள்  சிவராத்திரி விரதம் கொண்டாடப் படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டால் கவலைகள் அனைத்தும் நீங்கும். காரிய வெற்றியும் ஏற்படும்.  ‘சிவாய நம’ என்று சிந்தித்திருந்தால் அபாயம் நமக்கு ஏற்படாது. உபாயம் நமக்கு ஏற்படும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.  அந்த புனிதமான நாளில் விரதம் இருந்தால் புண்ணியமும் கூடும். பொருளாதார நிலையும் உயரும்.  ஒரு நாள் முழுவதும் ஆறுகால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சன்னதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்து வந்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான பலனும் நமக்கு கிடைக்கும் அதனால்தான் “சிவராத்திரி விரதம்” சிறந்த பலனைக் கொடுக்கிறது.

இந்த வருடம் மார்ச் 07-ம் நாள் மகாசிவராத்திரி நாளில் நாம் சிவ பெருமானை வழிபட்டு சிவராத்திரி விரதமிருந்து சிவன் அருள் பெறுவதற்கு வாழ்த்துகிறோம்.

அத்திப்பழம்

சீமை அத்திப்பழம், நாட்டு அத்திப்பழம் என இரு வகைகளாகக் கிடைக்கும் இப்பழம் பல்வேறு மருத்துவப் பண்புகளை கொண்டது. சீசனில் மட்டுமே கிடைக்கும் இப்பழம் எலும்புகளை பலப்படுத்துகிறது. உடலை சுறுசுறுப்பாக்குகிறது. இரத்த விருத்தியை ஏற்படுத்துகிறது. ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.

புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி 12, சி போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. 

நார்ச்சத்து நிறைந்துள்ளதால் உணவு எளிதில் ஜீரணமாகி தேவையற்ற கொழுப்பு சேர்வதைத் தடுக்கிறது. உடல் எடையைக் குறைப்பதற்கு உதவுகிறது. பொட்டாசியம் நிறைந்துள்ளதால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. பித்தத்தை வியர்வை மூலம் வெளியேற்றி ஈரல், நுரையீரலில் உள்ள அசுத்தத்தை நீக்குவதில் பெரும்பங்கு வகிக்கிறது. வெட்டை நோயை குணப்படுத்தும்.

இப்பழத்தில் உள்ள கால்சியம் எலும்புகளை பலப்படுத்துகிறது. நீரிழிவு நோயாளிகள் அதிக அளவில் சிறுநீர் கழிப்பதால் ஏற்படும் கால்சியம் இழப்பை ஈடு செய்வதில் அத்திப்பழம் மிகச்சிறந்த மருந்தாகும். வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. புpத்தத்தை தணித்துச் சமப்படுத்துகிறது. செரிமானக் கோளாறுகளை சரிசெய்கிறது. 

கல்லீரல் வீக்கம் மற்றும் மலச்சிக்கலை நீக்க அத்திப்பழம் உதவுகிறது. இருமல், ஆஸ்த்மாவை கட்டுப்படுத்துவதுடன் தொண்டை எரிச்சலையும் போக்கும்.

அத்திப்பழத்தை தொடர்ந்து 40 நாட்கள் உட்கொண்டு வந்தால் உங்களின் உடல் பலமேறுவதுடன், மேலே குறிப்பிட்டுள்ள உடல் உபாதைகள் நீங்கும்.

சமத்துவ பொங்கல் விழா - ஸ்ரீவில்லிபுத்தூர்.







ஜனவரி 15ம் நாள் காலை 9 மணியளவில் ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவில் (மேற்கு) தெரு, சாலியர் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் 6ம் ஆண்டு பொங்கல் விழா ஊர் பெரியவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் ஏராளமான பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மறுநாள், ஜனவரி 16 அன்று 26ம் ஆண்டு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா நடைபெற்றது.

விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதி திரு. எஸ். சந்திரன், பொறியாளர் எஸ். முருகேசன், அகில இந்திய சாலியர் மகாஜன சங்கத்தின் துணைச் செயலாளர் திரு. ஆ. பழனிச்சாமி, திரு. பாண்டி மற்றும் இதர நிர்வாகிகள் கலந்து கொண்டு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

நீதிபதி (ஓய்வு) திரு. எஸ். சந்திரன் அவர்கள் கடந்த ஆண்டு பொதுத் தேர்வில் 10 மற்றும் 12 வது வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற செல்வி. ஆ. பிரதீபா (495ஃ500) மற்றும் செல்வி நா. கற்பகம் (1137ஃ1200) ஆகிய இருவருக்கும் பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.  பொறியாளர் திரு. எஸ். முருகேசன் அவர்களும், ஊர் பெரியவர்களும் விழாவில் சிறப்புரையாற்றினர். அடுத்து பேசிய திரு. ஆ. பழனிச்சாமி அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து படிப்பு மற்றும் வேலை நிமித்தமாக சென்னையில் இருப்பவர்களின் முகவரி மற்றும் தொடர்பு விபரங்களை சென்னையில் இயங்கிவரும் ஸ்ரீவில்லிப்புத்தூர் சாலியர் சமூக நலச்சங்கத்திற்கு தெரிவிக்கவும், இளைஞர்கள் சமுதாயப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொள்ளவும் கேட்டுக் கொண்டார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் அனைவருக்கும் முன்னாள் குடியரசுத் தலைவர் அமரர். டாக்டர். ஆ.ப.ஜெ. அப்துல் கலாம் அவர்களின் கவிதைத் தொகுப்பு புத்தகம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

கூட்டத்திற்கான ஏற்பாடுகளை சாலியர் மக்கள் நல இயக்கம் மற்றும் ஊர் பெரியவர்கள் சிறப்பாக செய்திருந்தனர். பெருந்திரளாக கலந்துகொண்ட பொதுமக்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் விழாக்குழுவினரின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவடைந்தது.

இராஜபாளையம் இளைஞர்களின் தன்னலமற்ற பொதுசேவை















இராஜபாளையத்தில் தோப்புப்பட்டித் தெருவில் அமைந்துள்ள ஊருணியில்தான், சில தலைமுறைகளுக்கு முன் அப்பகுதியைச் சேர்ந்த அனைவரும் நீச்சல் கற்றுக்கொண்டனர். ஆனால் அந்த ஊருணி பல வருடங்களாக தூர்வாரப்படாததால் அதிகப்படியான புதர், மண், குப்பை மற்றும் சகதியின் காரணமாக நீரூற்றுகள் அடைபட்டு யாருக்கும் பயன்படாமல் இருந்தது. ஒரு ஊரின் நிலத்தடி நீரை அதிகரிப்பதில் ஊருணிகள், குளங்கள், ஏரிகள் மற்றும் இதர நீர்நிலைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நீர்நிலைகள் சரியாகப் பராமரிக்கப்படாமல் இருந்தால் எவ்வளவு அதிக மழைப்பொழிவு இருந்தாலும், மழைநீர் வீணாகும் நிலை ஏற்படும். மாறாக நீர்நிலைகளை முறையாக தூர் வாருவதன் மூலம் முறையான நீர் மேலாண்மை செய்து தட்டுப்பாட்டைத் தவிர்க்கலாம். ஊர்ப்பெரியவர்கள் சிலரின் ஆலோசனைப்படி இந்த ஊருணியைத் தூர்வார முடிவு செய்யப்பட்டது. இப்பகுதியின் இளைஞர்கள் ஊருணியை சுத்தம் செய்ய தாமாக முன்வந்தனர். இப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள் துப்புரவுப்பணிக்கு தேவையான உபகரணங்கள், உடைகள், கையுறைகள், சிற்றுண்டி, உணவு மற்றும் இதர உதவிகள் செய்துதர முன்வந்தனர்.

இளைஞர் அணியைச் சேர்ந்த திருவாளர்கள். சரவணன், சிவசக்தி, அய்யா (எ) இராமசுப்பிரமணியன், டீக்கடை குமார், மாடசாமி, போட்டோ குமார், கேசவன், திருஞான சம்பந்தம், ஹரிஹரன், முத்துக்கனி, மகேஷ், தினேஷ், செந்தில் பாலசுப்பிரமணியம், வைத்திலிங்கம், ஆறுமுகக்கனி, குருசாமி, பாலமுருகன், தனுஷ் மற்றும் பல சிறுவர்கள் இணைந்து துப்புரவுப்பணியை வெற்றிகரமாக முடித்து விட்டனர். தற்போது ஊருணியில் நீர் ஊறத் துவங்கியது கண்டு பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஜனவரி 10 அன்று இராசபாளையத்தில் நடைபெற்ற அகில இந்திய சாலியர் மகாசன சங்கத்தின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் தலைவர் இளைய வள்ளல் திரு. க. ஸ்ரீதரன் அவர்கள் இளைஞர்களைப் பாராட்டி கௌரவப்படுத்தினார்கள். அப்போது ஏற்புரை வழங்கிய இளைஞரணி  ஒருங்கிணைப்பாளர் திரு. மாடசாமி, ‘படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தர’ தலைவர் இளைய வள்ளல் அவர்களை கேட்டுக்கொண்டார்.   

மற்ற ஊர்களில் உள்ள நம் சமுதாயத்தின் இளைஞர்களுக்கு இவர்களது சமூகத்தொண்டு வழிகாட்டியாக அமைந்துள்ளது என்பதில் சிறிதும் ஐயமில்லை. 

இளைஞர் அணியின் ஒருங்கிணைப்பாளர் திரு. மாடசாமி அவர்களை 8489154078 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு நாம் தெரிவிக்கும் வாழ்த்து அவர்களை உற்சாகப்படுத்துவதுடன் அவர்களின் பணி மென்மேலும் சிறக்க உதவும்.     

உணவே மருந்து - மருந்தே உணவு - ரசம்

சித்த மருத்துவ முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களான பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினா, கறிவேப்பிலை, கொத்துமல்லி, கடுகு, இஞ்சி போன்றவற்றை சேர்க்க வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நாம் உணவில் சேர்த்துக் கொண்டாலும், ஒட்டுமொத்தமாக சேர்வது ரசத்தில் மட்டுமே.

புளி ரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப்பழ ரசம், வாழைப்பூ ரசம், கொத்துமல்லி ரசம் என பலவிதமாக ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் இடம்பெற்றுவிடும். நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (யுவெனைழவந)தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும், தாது உப்புக் குறைபாடுகளையும் சரிசெய்வதில் ரசம் முதலிடம் வகிக்கிறது.  அயல்நாட்டினர் உணவில் சூப்புக்கு (ளுழரி) முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.  அது ரசத்தின் மறுவடிவமே.  ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன பறந்து போய்விடும்.

சித்த மருத்துவ முறைப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது 100 சதவீதம் ரசம் உட்கொள்வதில் மட்டுமே பொருந்தும். ரசத்தில் இடம்பெறும் சீரகம் உப்புசம், சளி, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்தும் சக்தி கொண்டது.  பெருங்காயம் வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சினைகளையும் சரிசெய்கிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. கொத்துமல்லிக் கீரை காய்ச்சலைத் தவிர்ப்பதிலும், சிறுநீரை நன்கு வெளியேற்றுவதிலும் பெரும்பங்கு வகிக்கிறது. உடல் சூடு, நாக்கு வரட்சி முதலியன அகலுகின்றன.  பார்வைத்திறன் அதிகரிக்கிறது. வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு மற்றும் சிறுநீரகக் கோளாறுகளை குணப்படுத்துவதிலும் ரசத்தில் போடப்படும் கறிவேப்பிலை உதவுகிறது.

கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறிவேப்பிலை சேர்க்கப் பட்ட ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது. ரசத்தில் சேரும் பூண்டு ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகளை கட்டுப்படுத்துகிறது.ஜலதோசம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்; தன்மை முதலியவற்றை ரசத்தில் சேர்க்கப்படும் மிளகு குணப்படுத்துகிறது. தசை வலியும், மூட்டுவலியும் குணமாகின்றன.  வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது. 

ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலைசுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது.  வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.  ரசத்தில் புளியின் அளவை மற்றும் மிகக் குறைவாகச் சேர்க்க வேண்டும்.

மழைக்காலத்தில் ரசத்தின் உதவியால் முன்கூட்டியே ஜலதோசம், காய்ச்சல் வருவதைத் தடுக்கலாம்.

வெயில் காலத்தில் நாவரட்சி, அதிகமாக காபி மற்றும் டீ முதலியவற்றை அருந்துவதால் ஏற்படும் பித்தம் போன்றவற்றை ரசம் மருந்தாகக் குணப்படுத்தும்.

எனவே ரசத்தை தினமும் உணவில் சேர்ப்பதன் மூலம் உங்கள் உணவே உங்களின் மருந்தாகும்.

வங்கிக்கடன் பெறுவதில் முக்கியப் பங்காற்றும் சிபில் (CIBIL) & செர்சாய் (CERSAI) - ஒரு பார்வை




Credit Information Bureau (India) Limited        www.cibil.com


மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு கடந்த 2000ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்நிறுவனம், வங்கிகளிலும் நிதிநிறுவனங்களிலும், கடன் மற்றும் கடன் அட்டை வாங்கியவர்கள் பற்றிய தகவல்களை  பராமரிக்கிறது. உலகில் சுமார் 1000 நிறுவனங்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ள
ISO 27001: 2005 சான்று பெற்ற நிறுவனமாகும்.

இந்நிறுவனத்தில் கீழ்க்கண்ட நிறுவனங்கள் பங்குவகிக்கின்றன.

ட்ரான்ஸ்யூனியன் இண்டர்நேஷனல்(55%)இ ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி(10 %), பாரத ஸ்டேட் வங்கி (7% ), இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி (5 %), ஹெ.எஸ்.பி.சி. வங்கி (5 %), யூனியன் பாங்க்; ஆப் இந்தியா (5 %), பாங்க் ஆப் இந்தியா (5 %),    பாங்க் ஆப் பரோடா (5 %) மற்றும் அலகாபாத் பாங்க் (3 %).

வங்கிகளும், நிதிநிறுவனங்களும், இந்நிறுவனத்தில் உறுப்பினர்களாக இணைந்துள்ளன. வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அளிக்கும் தகவல்களை   இந்நிறுவனம் பதிவு செய்து பராமரிக்கிறது.

ஒவ்வொரு கடன்தாரரும் வாங்கிய கடன் பற்றியும், திருப்பிச் செலுத்தும் காலம் மற்றும் தாமதமாகச் செலுத்தப்படும் தவணை பற்றிய விபரங்களின் படி மதிப்பெண்கள் வழங்கப் படுகிறது. மொத்தம் 900 மதிப்பெண்களுக்கு அவர்கள் பெறும் மதிப்பெண்கள் 750க்கு மேல் இருந்தால் கடனை குறித்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் நபர் என தெரிந்து கொள்ளலாம். 600 க்கு கீழ் மதிப்பெண் பெற்றவர்கள் தமது கடனை திருப்பிச் செலுத்துவதில் தவறியவர்கள் என அறியலாம். எனவே உங்களுக்கு தேவைப்படும்போது வங்கிகள், நிதி நிறுவனங்களிலிருந்து கடன்பெற வேண்டுமானால் நீங்கள் ஏற்கனவே பெற்றுள்ள வீட்டுக்கடன், வாகனக்கடன், அடமானக்கடன், கடன் அட்டையில் பெற்றுள்ள கடன், தனிநபர் கடன் போன்றவற்றை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்தி, உங்களது மதிப்பெண்களை 750க்கு குறையாமல் பராமரிப்பது அவசியம். 

அதேசமயம், நீங்கள் விண்ணப்பம் செய்திருக்கும் கடன்தொகை மற்றும் ஏற்கனவே பெற்று நிலுவையிலுள்ள கடன்களின் திருப்பிச் செலுத்தும் மாதாந்திரத் தவணை, உங்களின் சராசரி மாத நிகர வருமானத்தில் பாதிக்கு மிகாமல் இருந்தால் மட்டுமே உங்களுக்கு நீங்கள் விண்ணப்பித்துள்ள  தொகையை வங்கிக்கடன் பெற தகுதியுண்டு. தனிநபர் ஒருவரின் கடன் தொகையானது அவரது மூன்று ஆண்டுகளின் வருமானத்திற்கு மிகாமல் இருத்தல் அவசியம். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து அல்லது குடும்ப உறுப்பினர்கள் இருவர் சேர்ந்து கடன் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரர்கள் இருவரின் மாத வருமானமும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.   

நீங்கள் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருந்தால் மட்டுமே உங்கள் கடன் அறிக்கையின் மதிப்பெண்கள் குறையும் என்று நினைத்தால் அது தவறு. நீங்கள் ஒருவருக்கு ஜாமீன் கையெழுத்து போட்டிருக்கும் சமயத்தில் கடன் வாங்கிய நபர் கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை என்றால் ஜாமீன் கொடுத்த நீங்களே அந்தக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.  அவ்வாறு நீங்கள் திருப்பிச் செலுத்தாத நிலையிலும் கடன் வாங்கியவர் மூன்று தவணைகளைத் திருப்பிச் செலுத்தாத நிலையிலும் கடன் பெற்றவர் மட்டுமல்லாது ஜாமீன் கொடுத்த நீங்களும் கடன் செலுத்தத் தவறியவர் என அறிவிக்கப் பட்டு, நடவடிக்கைக்கு உள்ளாவீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  

கடன் வேண்டி விண்ணப்பிப்பவர்களின் கடன் தகவல் அறிக்கையை (Credit Information Report) மற்றும் கடன் மதிப்பெண்களை (Credit Score) இந்நிறுவனத்தின் மூலம் தெரிந்துகொண்ட பின்னரே வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் விண்ணப்பங்களின்மீது முடிவெடுக்கின்றன.

இந்நிறுவனத்தின் தற்போதைய தலைவர். திரு. எம்.வி. நாயர் மற்றும் நிர்வாக இயக்குநர். திரு. சதீஸ் பிள்ளை.

உங்களது கடன் தகவல் அறிக்கையை நீங்கள் இந்நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பித்து அதற்கான கட்டணத்தை செலுத்தி பெற்றுக் கொள்ளலாம்.  அவ்வாறு பெறப்பட்ட அறிக்கையில் ஏதாவது தவறான தகவல் இருப்பதாக தெரிந்தால், உரிய சான்றுகளுடன் இந்நிறுவனத்திற்கு புகார் அளித்து உரிய நிவாரணம் பெறலாம்.

சிபில் நிறுவனத்தின் துணைத் தலைவரான ஹர்ஷலா சண்டோர்கர் தனது கட்டுரை மூலம் ‘திருமணம் செய்யும் முன் உங்கள் வருங்கால வாழ்க்கைத் துணைவரின் நிதி மேலாண்மைகளைப் பற்றித் தெரிந்து கொள்வது மிக அவசியம்’ என்கிறார். மொழிபெயர்க்கப்பட்ட அவரது ஆங்கிலக் கட்டுரையின் முக்கிய அம்சங்களை உங்களின் நலனுக்காக இங்கே வழங்கியுள்ளோம்.

திருமண வாழ்க்கை என்பது உங்கள் வாழ்க்கையில் நீங்கள் எடுக்கும் மிக முக்கியமான முடிவு அவ்வாறு எடுக்கப்படும் முடிவு உங்கள் எதிர்கால வாழ்க்கையை தீர்மானிக்கும்.   அவ்வாறு முடிவெடுக்கும் சமயம் உங்கள் வருங்கால வாழ்க்கைத் துணையின் நிதி நிலைபற்றி நீங்கள் தெரிந்து கொள்வதன் மூலம் எதிர்காலத்தில் உங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் அருண் மற்றும் கீதா இருவரும் திருமணம் செய்து, மகிழ்ச்சியான இல்வாழ்க்கையை நடத்தி வந்த சமயம், வீடு வாங்குவதற்காக கடன் வேண்டி வங்கியில் விண்ணப்பம் செய்தனர். வங்கியில் தங்களது விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.  சிபில் நிறுவனத்தின் கடன் தகவல் அறிக்கையில் உள்ள தகவல்களைப் பரிசீலித்தபின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.

இருவரும் ஒரு நிதி ஆலோசகரைச் சந்தித்து கடன் நிராகரிக்கப்பட்டதையும், கடன் வாங்குவதற்கான வழிமுறைகளையும் ஆலோசித்தபோது, ஆலோசகர் அவர்களுக்கு சிபில் நிறுவனத்தைப் பற்றி விளக்கி, அந்நிறுவனத்திலிருந்து இருவரது கடன் அறிக்கைகளைப் பெறுவதற்கும் வழிகாட்டினார்.


இருவரது கடன் அறிக்கைகளையும் பெற்று அதனை ஆராயும்போது கீதாவின் கடன் அறிக்கையில் எவ்வித பிரச்சினையும் இல்லை. அவரது கடன்கள் அனைத்தும் குறித்த சமயத்தில் திருப்பிச் செலுத்தப் பட்டிருந்ததால் அவரது மதிப்பெண்கள் 750க்கு மேல் இருந்தது.

ஆனால் அருணின் கடன் அறிக்கையில் அவர் பல முறை கடனைக் குறிப்பிட்ட காலத்தில் செலுத்தத் தவறியதையும், பல கடன் அட்டைகளில் வட்டி தள்ளுபடி செய்யப்பட்டு முடிக்கப்பட்டிருந்தது மட்டுமல்லாமல் அவர் தனது திருமணத்திற்கு வாங்கிய தனிநபர் கடனை செலுத்தத் தவறியதும் தெரிய வந்தது. அருண் தன் மனைவி கீதாவிடம் தன் தவறை கூறி மன்னிப்புக் கேட்டார்.

இருவரும் மீண்டும் நிதி ஆலோசகரின் ஆலோசனைகளின்படி அருணின் அனைத்து கடன் பிரச்சினைகளையும் முறையாகத் திட்டமிட்டு, திருப்பிச் செலுத்த வேண்டிய கடன்களை செலுத்தி, மதிப்பெண்களை உயர்த்திய பின்னரே வீட்டுக்கடன் பெற முடிந்தது. எனவே உங்கள் திருமணத்தின் போது நீங்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் நிதி நிலை மற்றும் கடன் நிலைகள் பற்றித் தெரிந்துகொள்வதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்.

திருமணத்திற்குப் பின்னரும் இருவரும் அவ்வப்போது கடன் தகவல் அறிக்கையை பெற்று, சரியாக திட்டமிடுவதன் மூலம் உங்களுக்கு தேவையான சமயங்களில் கடன் பெற்று, அந்தக் கடனை முறையாக திருப்பிச் செலுத்துவதாலும், சட்ட நடவடிக்கைகளைத் தவிர்ப்பது மட்டுமல்லாமல் மன உளைச்சல் ஏற்படாமல் மகிழ்வான வாழ்க்கையை நடத்தலாம்.

கடன் விண்ணப்பம் அளிக்கும் முன் நீங்கள் உங்களிடமே கேட்க வேண்டியவை:

உங்களது கடன் தகவல் அறிக்கையில் உங்களது மதிப்பெண்கள் சரியாக உள்ளதா? அல்லது கடன் தவணைகள் தவறியது அல்லது முறையற்ற நிதி மேலாண்மை உள்ளதா?

இருவரும் பெற எண்ணியுள்ள கடனைத் திருப்பிச் செலுத்த நிலையான வருமானம் உள்ளதா?

உங்களது கடன்களை முறையாக குறித்த நேரத்தில் திருப்பிச் செலுத்துகிறீர்களா? உங்கள் கடன் சுமை வருமானத்திற்குள்; செலுத்தும் அளவிற்குள் உள்ளதா?  இருவரது கடன் அட்டைகளுக்கும் செலுத்த வேண்டிய தொகைகள் முறையாக செலுத்துகின்றீர்களா?

நீங்கள் இருவரும் சேர்ந்து உங்களது எதிர்கால சொத்துக்கள் சேர்ப்பதற்கான குறிக்கோளை முறையாக பின்பற்றுகிறீர்களா?

இந்த கேள்விகளுக்கு உங்களிடம் பதில்கள் இருந்தால் அவை சரியாக இருந்தால் நீங்கள் ஒரு வெற்றிகரமான வாழ்க்கையை நடத்தத் தயாராகிவிட்டீர்கள்.

மேலும் உங்களது வங்கிக்கணக்கு, கடன், ஆயுள் காப்பீடு மற்றும் நிதி விபரங்களை உங்கள் குடும்பத்தினருக்குத் தெரியாமல் மறைக்காதீர்கள்.



சமீபத்தில் ஒருவர் ஒரு வங்கியில் வீட்டுக்கடன் பெற்றிருந்தார்.  அவர் வீட்டுக்கடன் பெறும்போது வங்கியின் திட்டப்படி, அவர் ஒரு ஆயுள் காப்பீடு செய்து கொண்டார். சுமார் 2 லட்சம் பணம் செலுத்தி அவர் செய்து கொண்ட ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தின்படி அவருக்கு மரணம் ஏற்படும் சூழ்நிலையில் அவர் செய்துள்ள ஆயுள் காப்பீட்டின் மூலம் அவரது வீட்டுக்கடன் தொகை சரிசெய்யப் படும். எதிர்பாராத வகையில் அவர் ஒரு சாலை விபத்தில் மரணமடைந்தார்.  ஆனால் அந்த வங்கி அவரது மனைவிக்கு, கணவர் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும்படி ஒரு நோட்டீஸ் அனுப்பியது.  வங்கியின் மேற்கண்ட நடவடிக்கையால் அதிர்ச்சியடைந்த மனைவி நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு பதிவு செய்து, உரிய ஆவணங்களுடன் வங்கியின் தவறை நிரூபித்து உரிய நிவாரணம் பெற்றார்.

எனவே உங்களது நிதி முதலீடுகள் பற்றி உங்கள் வாழ்க்கைத் துணைக்கோ அல்லது வாரிசுகளுக்கோ தெரியப்படுத்துவதின் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம்.



*****



CERSAI – Central Registry of Securitisation Asset Reconstruction and Security Interest of India


நீங்கள் ஒரு சொத்தினை வங்கிக்கடன் மூலமாகவோ அல்லது ரொக்கம் செலுத்தியோ வாங்கும்போது, அந்த சொத்தின் உரிமையாளர், அந்த சொத்தினை ஏதேனும் ஒரு வங்கியிலோ அல்லது நிதி நிறுவனத்திலோ அடமானம் வைத்துள்ளதை மறைத்து, உங்களுக்கு அந்த சொத்தினை விற்க முயல்கிறாரா? என அறிந்து கொள்வது அவசியம்.

கடந்த இரு ஆண்டுகளாகத்தான் வங்கிகளில் கடன்பெறும் போது கடன் ஆவணத்தை சம்பந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் நடைமுறைகளை அனைத்து வங்கிகளும் கட்டாயமாக்கி உள்ளன.  அதற்கு முன்னர் பெறப்பட்ட கடன்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படாத நிலையில் ஒரு சொத்தின் மீது கடன் இருப்பதை அறிந்து கொள்வது சிக்கலான ஒன்று. சில சமயங்களில் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுசெய்யப்பட்டிருந்த சமயத்திலும், வில்லங்கச் சான்றிதழில் ஏற்படும் தவறான தகவல்களால், சொத்தின் மீதான உண்மை நிலையை அறிய இயலாமல் போகலாம். சுரியான தகவல்களை அறிந்து கொள்ள உதவும் இணைய தளம்:


https://www.cersai.org.in

இந்நிறுவனம் 51 சதவீத மத்திய அரசின் பங்களிப்போடு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தேசிய வீட்டுவசதி வங்கியின் 49 சதவீத பங்குகளுடன் செயல்படும் ஒரு அரசு நிறுவனம்.

இந்நிறுவனம் சொத்துக்களின் மீது பெறப்பட்டுள்ள கடன்கள் மற்றும் செயல்படாத கணக்குகள் என அழைக்கப்படும் தவணை தவறியவர்களின் சொத்துக்கள், கடன்களுக்கு ஈடாக அளிக்கப்பட்டுள்ள சொத்துக்கள் அதன்பேரில் பெறப்பட்டு திருப்பிச் செலுத்தப்படாத கணக்குகளின் விபரங்களை பராமரிக்கும் மத்திய பதிவு நிறுவனமாகச் செயல்படுகிறது.

ஓவ்வொரு வங்கி அல்லது நிதி நிறுவனம் ஒருநபருக்கு அல்லது நிறுவனத்திற்கு கடன் வழங்கும்போது அதற்கு ஈடாக, அடமானம் செய்யப்படும் சொத்து பற்றி இந்நிறுவனத்தில் பதிவு செய்கிறது. அவ்வாறு வழங்கப்படும் கடன் முறையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டு கடன் கணக்கு முடிக்கப் படும்போது அந்த வங்கி அல்லது நிதி நிறுவனம் அந்த சொத்துக்களின் மீதுள்ள பிணையை நீக்கப் பட்ட தகவலையும் இந்நிறுவனத்திற்கு அளிக்கின்றன.  அவ்வாறு கடன் முடிவடைந்தும் இந்நிறுவனத்திற்கு சம்பந்தப்பட்ட வங்கி அல்லது நிதி நிறுவனத்தால் தகவல் அளிக்கப்படவில்லை எனில் அதே சொத்தினை வேறு வங்கியில் அடமானமாகவோ, ஈடாகவோ கொடுக்கும்போது கடன் நிராகரிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே நீங்கள் கடன் பெறும்போது மட்டுமல்ல கடன் முடிக்கப்படும்போதும் முறையான சோதனைகள் மூலம் உங்கள் சொத்தின்மீது வில்லங்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும். இந்நிறுவனத்தின் இணையதளத்திற்குச் சென்று குறிப்பிட்ட தொகையை செலுத்தி உங்கள் சொத்துக்களின் மீதான கடன் நிலையை அறியலாம்.  அவ்வாறு சோதிக்கும்போது தவறான தகவல்கள் இருப்பதாக தெரிய வந்தால் இந்நிறுவனத்திற்கு தகுந்த ஆதாரங்களுடன் புகார் அளித்து நிவாரணம் பெறலாம்.

இந்த இரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல் கீழ்க்கண்ட நிறுவனங்களும் கடன் தொடர்பான தகவல்களை பராமரிக்கின்றன.




EQUIFAX,  EXPERIAN,  CRIF HIGH MARK

எனவே உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வழிநடத்துவதற்கு உங்களது நிதிநிலையை திட்டமிடுதல் முக்கியப் பங்கு வகிப்பதை சுட்டிக்காட்டி,  விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான ஒரு சிறு முயற்சியே இக்கட்டுரை.