Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

உலக வானொலி தினம் - பிப்ரவரி 13


கடந்த 2011 நவம்பர் 3ம் நாள் நடைபெற்ற யுனெஸ்கோவின் 36வது மாநாட்டில் ஸ்பெயின் நாட்டின் கோரிக்கையை ஏற்று உலக வானொலி தினம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 13ம் நாள் கொண்டாடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. 

இத்தாலியைச் சேர்ந்த விஞ்ஞானி மார்க்கோனி என்பவரால் 1888 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட கம்பியில்லா ரேடியோ சிக்னல் தொழில்நுட்பம், 1901 முதல் பயன்பாட்டுக்கு வந்தது.  

இந்தியாவில் அகில இந்திய வானொலி நிலையம் 1930ம் ஆண்டில் மத்திய அரசு நிறுவனம் மூலம் நிறுவப்பட்டது முதல் நம் நாட்டின் செய்தித் தொடர்பு சாதனமாக முதலிடம் வகிக்கிறது. செய்தித்தாள் மற்றும் வானொலி மூலம் மட்டுமே செய்திகள் மக்களைச் சென்றடைந்தன. 

1959ம் ஆண்டு மத்திய அரசு தொலைக்காட்சி சேவையை துவங்கியது. அது முதல் தூதர்ஷன் என அறியப்பட்ட தொலைக்காட்சி சேவை செய்தித்துறையில் முக்கிய பங்கு வகித்தது. 

1997 ம் ஆண்டில் இயற்றப்பட்ட பிரசார் பாரதி சட்டம் இயற்றப்பட்டு அதுமுதல் அரசு வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் பிரசார் பாரதி அமைப்பின்கீழ் கொண்டுவரப்பட்டன. 

உலக மயமாக்கலின் காரணமாக 1993 ம் ஆண்டில் செயற்கைக் கோள் தொலைக்காட்சிகளுக்கு அனுமதியளிக்கப்பட்டதன் பின் இன்றைய தேதியில் மொத்தம் 857 தொலைக்காட்சி சேனல்களும் அவற்றில் 190க்கும் அதிகமான அரசு சேனல்களும் உள்ளன. 

தொலைக்காட்சிகள் பரவலாக ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நாம் வானொலிகளை மறந்து விட்ட சூழ்நிலையில் தனியார் பண்பலை வரிசையில் வானொலி ஒளிபரப்புக்கு அனுமதி கொடுக்கப்பட்ட பின் வானொலிக்கு மீண்டும் ரசிகர்கள் உருவானார்கள். 

கொழும்பு சர்வதேச வானொலி எனப்படும் (தற்போது சிலோன் ரேடியோ) வானொலி ஆசியாவின் முதல் வானொலியாக 1925ம் ஆண்டு உருவாக்கப்பட்டது. சிறுவயதில் கொழும்பு வானொலியில் பி.எச். அப்துல் ஹமீது  அவர்களின் சிம்மக்குரலையும், கே.எஸ். ராஜா அவர்களின் தொகுப்பிலும் ஒளிபரப்பப்படும் திரையிசைப் பாடல்களையும் கேட்டு வளர்ந்தவன் நான். தூய தமிழைக் கேட்க விரும்புபவர்களுக்கு கொழும்பு சர்வதேச வானொலியின் தமிழ் ஒளிபரப்பு ஒரு வரப்பிரசாதமாக இருந்தது. 

இசைமுரசு நாகூர் அனிபா அவர்கள் பாடிய உலகப்புகழ் பெற்ற “இறைவனிடம் கையேந்துங்கள்” என்ற பாடலையும், அன்னை வேளாங்கண்ணி (1971) என்ற படத்தில் இடம்பெற்ற கிருஷ்ணராஜ் என்பவரால் பாடப்பட்ட “கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்” என்ற  பாடல்கள் தினமும் காலையில் கேட்டு வந்தது இன்றும் என் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.  மேற்கண்ட பாடல்கள் முறையே இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதப் பாடல்களாக இருந்தாலும் மத பேதமின்றி அனைவராலும் ரசிக்கப்பட்டவை என்பதை யாராலும் மறுக்க முடியாது. 

வீட்டை விட்டு பெண்களை வெளியே அனுமதிக்காத கட்டுப்பாடு மிகுந்த சூழலில் வீட்டிலிருக்கும் பெண்களுக்கான சிறந்த பொழுதுபோக்கு வானொலியில் திரையிசைப் பாடல்களைக் கேட்பதுதான்.

அதிலும் 80களில் திரையிசைப் பாடல்களில் இளையராஜா இசையமைத்த பாடல்கள் வானொலி நிகழ்வுகளை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டன. அவற்றில் சீர்காழி கோவிந்தராஜன், டி.எம். சவுந்தர்ராஜன், எம்.எஸ். விஸ்வநாதன், கே.ஜே. ஏசுதாஸ், ஜென்சி ஆண்டனி, பி. சுசீலா, எஸ். ஜானகி, எஸ்.பி. பாலசுப்பிரமணியன், மலேசியா வாசுதேவன்,  கங்கை அமரன், ஜெயச்சந்திரன், எல்.ஆர். ஈஸ்வரி, சித்ரா, சுவர்ணலதா போன்ற பாடகர்களின் குரலுக்கு தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு இருந்து வந்தது. 
ஆகாஸ்வாணி செய்திகள் வாசிப்பது என்ற கம்பீரக் குரலிலுக்குச் சொந்தக்காரரான திருமதி. சரோஜ் நாராயண் சுவாமி அவர்கள் வாசிக்கும் செய்திகளுக்காக தமிழக மக்கள் காத்திருந்த காலம் உண்டு. 

அகில இந்திய வானொலியின் துணை இயக்குநர் தென்கச்சி கோ. சுவாமிநாதன் அவர்கள் இன்று நம்மிடையே இல்லையென்றாலும் அவரது “இன்று ஒரு தகவல்” என்ற நிகழ்ச்சியில் அவர் கூறிய தகவல்கள் புதுமையாகவும், எளிமையாகவும் படிக்காத பாரமரர்களுக்கும் சென்றடைந்தது. 


நான் மடிப்பாக்கம் பகுதியில் குடியிருந்த போது சைதாப்பேட்டையிலிருந்து மடிப்பாக்கம் செல்லும் பேருந்தில் பல முறை தென்கச்சி சுவாமிநாதன் அவர்களுடன் பயணம் செய்திருக்கிறேன். பழகுவதற்கு எளியவர், பண்பாளர், நகைச்சுவை உணர்வு மிக்கவர்.

இந்தியா சுதந்திரம் பெற்றதை அகில இந்திய வானொலியில் அறிவிக்கும் வாய்ப்பு பெற்ற பூர்ணம் விஸ்வநாதன் அவர்கள் அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றிய பின்
30 தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தற்போது இணையதள வானொலி நிலையங்கள் உலகின் எந்த மூலையிலிருந்து நிகழ்ச்சிகள் கேட்கும் வகையில் இயங்குகின்றன.

தற்போது சுமார் 20 நாடுகளில் தமிழ் வானொலி நிலையங்கள் இயங்குகின்றன. ஆங்கிலத்திற்கு அடுத்ததாக அதிக மொழிகளில் இயக்கப்படும் வானொலி நிலையங்கள் தமிழ் வானொலி நிலையங்கள் என்று நினைக்கிறேன்.  உலகில் அதிகம் மக்களால் பேசப்படும் பழமையான மொழிகளில் தமிழ் மொழி முதலிடம் வகிப்பதாக தெரிகிறது. 

டி.வி. பார்ப்பதை விட ரேடியோ கேட்பது எளிது. எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும், வாகனத்தில் பயணிக்கும்போதும் இடையூறு இல்லாமல் ரேடியோ கேட்கலாம். தற்போது செல்போன்களிலேயே பண்பலை வானொலி ஒளிபரப்புகளை கேட்கலாம்.  

கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை   தொடர்புக்கு: gsraj1979@gmail.com

ஞாயிறு, 5 பிப்ரவரி, 2017

அஜீரணத்தில் ஒளிந்திருக்கும் ஆபத்துகள்! - டாக்டர் கு.கணேசன்

Dinakaran Daily news



மனித உடல் இயக்கத்தில் அனுதினமும் ஆயிரக்கணக்கான உணர்வுகள் உருவாவதும் மறைவதும் இடைவிடாமல் நடக்கின்றன. அவற்றில் ஒன்று, பசி உணர்வு. உலகில் வாழும் எல்லா ஜீவராசிகளுக்கும் இதுதான் ஆதார சக்தி! ‘உடல் வளர்த்தேன்… உயிர் வளர்த்தேனே!’ என்று திருமூலர் சொன்னதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். பசிப்பதால்தான் சாப்பிடுகிறோம். சாப்பிடுவதால்தான் உயிர் வாழ்கிறோம். நமக்குப் பசி இல்லையென்றால் அல்லது அகோரமாகப் பசித்தால் ஆரோக்கியத்தில் சிக்கல் என்று அர்த்தம். சரியான நேரத்தில் சரியான அளவில் பசி எடுத்துச் சாப்பிடுகிறோம் என்றால்,  நம் செரிமான மண்டலம் நூற்றுக்கு நூறு சரியாக இயங்குகிறது.பசி பற்றிய சரியான புரிதல் அநேகரிடம் இல்லை. அதனால்தான், ‘கையில் எடுத்து வாயில் போட்டால், சாப்பாடு ஆகிவிட்டது’ என்று அர்த்தப்படுத்திக்கொண்டு, கண்ட நேரத்தில் கண்டதைச் சாப்பிடுவதும், கைக்குக் கிடைத்ததை அவசரமாக அள்ளிப் போட்டுக்கொள்வதும் வழக்கமாகி விட்டது. அப்போது பசி அவர்களுக்கு எதிரியாகி விலகிப்போகிறது.

‘உடலுக்கு உணவு தேவை’ என்று செரிமான மண்டலம் நமக்கு உணர்த்தும் அறிகுறிதான், பசி. நம் ரத்தத்தில் குளுக்கோஸ் எனும் சத்து இருக்கிறது. இதுதான் உடலுக்குத் தேவையான சக்தியைத் தருகிறது. இது சாதாரணமாக 100 மி.லி. ரத்தத்தில் 80 முதல் 120 மி.கி. வரை இருக்க வேண்டும். இது 80க்குக் கீழ் குறைந்தால், இந்தத் தகவல் மூளைக்குப் போகும். அங்கு ஹைப்போதலாமஸ் எனும் காவல் நிலையம் இருக்கிறது.இங்கு ‘பசி மையம்’ (Appetite Centre) என்று ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இருக்கிறார். உணவுத் தகவல் இவருக்கு வந்து சேர்ந்ததும், ‘வேகஸ் நரம்பு’ என்ற காவல்காரரிடம், ‘திருடனைப் பிடித்து வா!’ என்று கட்டளையிடுவது மாதிரி, ‘இரைப்பையில் பசியைத் தூண்டு’ என்று பணிப்பார். உடனே இது இரைப்பைத் தசை இயக்கங்களைத் தூண்டும். இதனால் நமக்கு வயிறு பிசைகிற மாதிரி இருக்கும். இரைப்பையில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரந்ததும், வயிற்றைக் கிள்ளுகிற மாதிரி இருக்கும். இந்த இரண்டு உணர்வுகளும் ஒன்று சேர்வதையே ‘பசி’ என்கிறோம்.

பசித்ததும் உணவு சாப்பிடுகிறோம். உணவிலிருந்து உடலுக்கு குளுக்கோஸ் கிடைத்ததும், ‘திருடனைப் பிடித்துவிட்டோம்’ என்று சொல்வதைப்போல, ‘போதுமான உணவு கிடைத்துவிட்டது’ என்ற தகவல் ‘காவல்நிலைய’த்தில் உள்ள ‘திருப்தி மையம்’ (Satiety Centre) என்ற இன்ஸ்பெக்டருக்குச் சென்றுவிடும். அவர் காவல்காரரிடம், ‘ஸ்டேஷனுக்குத் திரும்பி வா!’ என்று சொல்வதைப்போல, ‘பசியை நிறுத்து’ என்பார். இந்தத் தகவல் இரைப்பைக்கு வந்ததும், தசை இயக்கங்களைக் குறைத்துக்கொள்ளும்.உடனே, பசி அடங்கிவிடும். இப்போது நாம் சாப்பிடுவதை நிறுத்தி விடுகிறோம். “நல்ல சாப்பாடு... திருப்தியாக இருந்தது” என்று நம்மை சொல்ல வைக்கும் அறிவியல் ரகசியம் இதுதான்! “எனக்குப் பசியே இல்லை. அதனால், சாப்பிட முடியவில்லை” என்று பலரும் புலம்புவார்கள். பசி எடுக்கவில்லை என்பதற்கு முக்கியக் காரணம், அஜீரணம். இந்த அஜீரணத்தைக் குலவை போட்டு வரவேற்க ஆயிரம் காரணிகள் வரிசைகட்டி நிற்கின்றன.

அதிக காரம், புளிப்பு, மசாலா உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் இரைப்பையில் மியூக்கஸ் சவ்வு சிதைந்து, செரிமான நீர்கள் சுரப்பது குறைந்துவிடும். இது அஜீரணத்துக்கு வழிவகுக்கும். விருந்து மற்றும் விழாக்கால நேரங்களில் அளவுக்கு அதிகமாக உணவு சாப்பிடுவதால் அஜீரணம் ஏற்படும். எண்ணெயில் வறுத்த, பொரித்த இறைச்சி மற்றும் மீன், இனிப்புப் பலகாரங்கள், நெய், வெண்ணெய், வனஸ்பதி போன்றவற்றை  அடிக்கடி சாப்பிடும்போது இரைப்பையில் எண்ணெய் மட்டும் தனியாகப் பிரிந்து மிதக்கும்.

இதனால் செரிமான நீர்கள் உணவுடன் கலப்பது தடைபட்டு, அஜீரணம் தலை காட்டும். அதிக அளவு காபி/தேநீர்/ மென்பானம் குடிப்பது, புகைபிடிப்பது, மது அருந்துவது, வெற்றிலை/ பான்மசாலா போடுவது போன்றவையும் அஜீரணம் ஏற்படக் காரணமாகலாம். துரித உணவு, கலப்பட உணவு, நச்சுணவு ஆகியவை இதற்கு விதிவிலக்கல்ல! தொடர்ந்து நேரந்தவறி சாப்பிடும்போது குடலியக்கம் மாறுபடுகிறது. இதனால் அஜீரணம் ஏற்படுகிறது. உணவை அவசர அவசரமாக சாப்பிட்டால், உமிழ்நீருடன் உணவு சரியாக கலக்காத காரணத்தால் அஜீரணம் தோன்றுவதுண்டு.

அஜீரணப் பிரச்னையை ஆளுக்கு ஆள் வெவ்வேறுவிதமாகச் சொல்வார்கள். சிலர் பசிக்கவில்லை என்பார்கள். வேறு சிலர் புளி ஏப்பம் வருகிறது, எதுக்களிக்கிறது, குமட்டுகிறது, வயிற்றில் இரைச்சல் ஏற்படுகிறது, வாந்தி வருகிறது, பித்த மயக்கம், வாயுத் தொந்தரவு என்பார்கள். இன்னும் சிலரோ ‘வயிறு உப்புசம்’ என்பார்கள். கடைசியாகச் சொன்னது வயதானவர்களை ரொம்பவே படுத்திவிடும். காரணம் என்ன? வயதானவர்களுக்கு சாதாரணமாகவே செரிமான நீர்கள் சுரப்பது குறைந்துவிடும். இதனால், குடலில் உள்ள பாக்டீரியாக்கள், உணவில் உள்ள மாவுச்சத்தை நிறையவே புளிக்கச் செய்துவிடும். அப்போது அதில் நிறைய காற்று உள்வாங்கி வயிறு உப்பிவிடும். முதல் நாள் இரவு முக்கால் பாத்திரத்துக்குக் கரைத்த இட்லி மாவு புளித்து, மறுநாள் காலையில் பாத்திரம் நிரம்பி, குப்பென்று உப்பி இருப்பதைப் பார்த்திருப்பீர்களே. அதுமாதிரிதான் இதுவும்.

அஜீரணத்தை ஏற்படுத்துபவை என்று ஒரு பட்டியல் போட்டால், 100 நோய்களுக்கு மேல் தாண்டும். அதில் சாதாரண இரைப்பை அழற்சியில் ஆரம்பித்து, அல்சர், காய்ச்சல், குடல் புழு, ரத்தசோகை, உடற்பருமன், நோய்த்தொற்று என்று நீண்டு... புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, கணைய பாதிப்பு, பித்தப்பைக் கோளாறு, சிறுநீரக நோய் போன்ற ஆபத்தான நோய்கள் வரை அடங்கும்.

அதேநேரம், அஜீரணத்துக்கு மனம் சம்பந்தப்பட்ட காரணங்களும் இருக்கின்றன. மகிழ்ச்சியாக இருக்கும்போது அதிகமாகப் பசி எடுத்துச் சாப்பிடுவதும், சோகமாக இருக்கும்போது பசி குறைந்து விடுவதும் இதனால்தான். மனதுக்குள் ஏகப்பட்ட போராட்டங்களும் குழப்பங்களும் வைத்துக் கொண்டு, கன்னியாகுமரியிலிருந்து சென்னை வரை அலையாய் அலைந்து அஜீரணத்துக்காக சிகிச்சை எடுத்தால், எந்தத் தீர்வும் கிடைக்காது.அஜீரணம் ஏற்பட்டால், அது செரிமானப் பிரச்னையாலா, மனப் பிரச்னையாலா என்பதைக் குடும்ப மருத்துவரிடம் தெரிந்துகொள்வது நல்லது. பெரும்பாலும் உணவுமுறையில் மாற்றம் செய்துகொண்டாலே இது சரியாகிவிடும். அஜீரணத்துக்குக் காரணமாகும் நோய்களுக்கு மருத்துவ சிகிச்சை கைகொடுக்கும். ஆயிரத்தில் ஒருவருக்குப் புற்றுநோய், கணைய அழற்சி, குடலடைப்பு போன்ற ஆபத்துகள் அணிவகுக்கும்.

ஒருவருக்கு மாதக்கணக்கில் அஜீரணம் நீடிக்கிறது என்றால் அதை அலட்சியப்படுத்தக்கூடாது. மாஸ்டர் ஹெல்த் செக்கப், எண்டோஸ்கோப்பி, கொலனோஸ்கோப்பி ஆகிய பரிசோதனைகள் தேவைப்படும். “அஜீரணத்துக்கெல்லாமா ‘செக்கப்’ செய்வது?” என்று யோசிக்க வேண்டாம். என்னிடம் சிகிச்சைக்கு வந்த பள்ளி ஆசிரியரின் அனுபவம் இது. அவருக்கு அடிக்கடி ஏற்பட்ட வயிற்றுப்பொருமலுக்கு அவராகவே மருந்துக் கடையில் மருந்து வாங்கிச் சாப்பிட்டுக்கொள்வார். “டாக்டரிடம் காண்பியுங்கள்” என்று மனைவி சொன்னாலும் கேட்க மாட்டார்.“வயிற்றில் வலி ஒன்றும் இல்லை. எதற்குத் தேவை இல்லாமல் டாக்டரிடம் போக வேண்டும்?” என்பது அவரது வாதம். ஒருநாள் ஓர் அசைவ விருந்துக்குப் போனார்; சாப்பிட்ட அரை மணி நேரத்தில் வாந்தி எடுத்தார். வாந்தியில் ரத்தம் வந்தது. பயந்துபோய் என்னிடம் வந்தார். எண்டோஸ்கோப்பி பரிசோதனையில் அவருக்கு இரைப்பைப் புற்றுநோய் இருப்பது உறுதியானது. அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, கீமோதெரபி என்று இரண்டு வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறார். இந்தப் பரிசோதனையை ஆரம்பத்திலேயே செய்திருந்தால், இந்த அளவுக்கு நோய் மோசமாகி இருக்காதுதானே!

அஜீரணத்தை ஓரங்கட்ட...

* சுத்தமாகத் தயாரிக்கப்பட்ட சமச்சீரான உணவை நேரத்தோடு, நிதானத்தோடு, அனுபவித்துச் சாப்பிடுங்கள்.

* காரம், புளிப்பு, மசாலா மிகுந்த உணவுகள் வேண்டாம்.

* மோர், இளநீர், பழச்சாறு, காய்கறி சூப் அடிக்கடி  குடிக்கலாம்.

* ஆவியில் வேக வைத்த உணவுகள் நல்லது. எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள் நல்லதல்ல.

* நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை தினமும் சாப்பிடுங்கள்.

* இரவில் இரண்டு பழங்களைச் சாப்பிடுங்கள்.

* சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடியுங்கள்.

* வாயுவை  வரவேற்கும் உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

* தினமும் நடைப்பயிற்சி, யோகாசனம் அல்லது உடற்பயிற்சி செய்யுங்கள்.

* டாக்டர் சொல்லாமல் ஆன்டிபயாடிக்குகள், ஸ்டீராய்டுகள், வலி நிவாரணி மாத்திரைகளைச் சாப்பிடாதீர்கள்.





வயிற்றைக் காப்பாற்றும் வாந்தி! - டாக்டர் கு.கணேசன்


Dinakaran Daily news



மழைக்காலம் தொடங்கிவிட்டது. இனி ஆஸ்பத்திரிகளில் தடுமல், காய்ச்சல், வீசிங் பிரச்னை பிளஸ் வாந்தி, பேதி கேஸ்கள் அலைமோதும். என்ன காரணம்? மழைக்காலத்தில் காற்று, தண்ணீர்,  உணவு என எல்லாமே எளிதில் அசுத்தமாகின்றன. தெரிந்தும் தெரியாமலும் இவை நம் உடலுக்குள் போகின்றன. அதற்கான எதிர்வினைதான் இந்த மழைக்காலப் பிரச்னைகள். இவற்றில் வாந்தியைப்பற்றி இந்த வாரம் பார்ப்போம்.உங்கள் வீட்டில் நாய், பூனை வளர்க்கிறீர்களா? இருந்தால், அதற்கு உணவு கொடுக்கும்போது ஒரு நிமிஷம் நின்று பாருங்கள். என்னதான் நீங்கள் பழக்கமான எஜமானர் என்றாலும், அதற்கும் கொலைப் பசியாக இருந்தாலும், நீங்கள் வைக்கும் உணவை உடனே அது சாப்பிடாது. முதலில் முகர்ந்து பார்க்கும். அந்த உணவு தனக்குச் சரிப்படும் என்று அது கருதினால் மட்டுமே சாப்பிடும். ஆனால் நாம் அப்படியா? பசி வந்துவிட்டால், தட்டில் என்ன இருக்கிறது என்றுகூட பார்க்கமாட்டோம். வயிறு நிறைய கொட்டிக்கொள்வோம்.

அதிலும் அல்வா, பிரியாணி என்று எச்சில் ஊற வைக்கும் உணவு என்றால், அப்போதுதான் வயிறு நிறைய சாப்பிட்டிருந்தாலும், கோணிப்பையைக் குலுக்கிக் குலுக்கிப் புண்ணாக்கை அடைக்கிற மாதிரி, இவற்றையும் சாப்பிட்டு வயிற்றை ‘அடைத்து’ விடுவோம். வாந்திக்கான ஆணிவேர் இங்குதான் ஆரம்பிக்கிறது. வாந்தி என்பது தனிப்பட்ட நோய் கிடையாது. நோய் வருவதற்கான முன்னறிவிப்பு. குறிப்பாக, ‘வயிறு சரியில்லை’; அல்லது ‘உடலுக்குள் ஆகாத ஒன்று நிகழ்ந்திருக்கிறது’ என்பதை நமக்குத் தெரிவிக்கும் அலாரம்.மூளையின் பின்பகுதியில் உள்ள ‘முகுள’த்தில் வாந்தி மையம் இருக்கிறது. இது தூண்டப்படும்போது வாந்தி வருகிறது. இது அனிச்சையாக நடைபெறுகிறது. இந்த மெக்கானிசத்தைக் கொஞ்சம் விரிவாகவே பார்த்துவிடலாம். உணவின் மூலம் மோசமான பாக்டீரியாவோ, ரசாயனமோ வயிற்றுக்குள் புகுந்துவிட்டது என வைத்துக்கொள்வோம். இந்த விஷயத்தை இரைப்பைச் சுவரில் இருக்கிற சென்ஸார் செல்கள் மோப்பம் பிடித்து, ‘வேகஸ்’ நரம்பு  வழியாக முகுளத்துக்குத் தகவல் அனுப்பும்.

வாந்தி எடுத்தால்தான் பிரச்னை சரியாகும் என்று முகுளம் தீர்மானித்துவிட்டால், அந்தச் செய்தியை வாந்தி மையத்துக்கு அனுப்பி வைக்கும். உடனே அது ‘வாந்தி எடு’, ‘வாந்தி எடு’ என்று வயிற்றை அவசரப்படுத்தும். இந்தக் கட்டளை பல்வேறு மத்திய நரம்புகள் வழியாக வயிற்றுக்கு வந்து சேரும்போது முதலில் குமட்டல் ஏற்படும். பேட்டரி சார்ஜ் தீர்ந்துபோன கார் நடுவழியில் நின்றுபோனால், சம்பந்தமில்லாத நான்கு பேர் உதவிக்கு வந்து அதைத் தள்ளுகிறார்கள் அல்லவா?அதுபோல... இரைப்பை சிரமப்படும்போது, இதற்குச் சம்பந்தமில்லாத வயிற்றுத் தசைகள் எல்லாம் ஒன்று சேர்ந்து குடலையும் இரைப்பையையும் அழுத்தும். அந்த அழுத்தம் தாங்காமல் உணவுக் குழாயும் இரைப்பையும் இணையும் இடத்தில் உள்ள ‘வால்வு’ திறந்துகொள்ள, இரைப்பையில் உள்ள உணவு, நச்சு, அமிலம் எதுவானாலும் ‘ஓவ்’ என்ற பெரிய சத்தத்துடன் வெளியேறும். இதுதான் வாந்தி. பெருமழைக்கு முன்னால் தூவானம் துவங்குவதுபோல, வாந்தி வருவதற்கு முன்னால் எச்சில் ஊறுவது, வயிற்றைப் புரட்டுவது, புளித்த ஏப்பம் போன்ற சின்னச் சின்ன முன்னறிவிப்புகள் ‘ஒலி’பரப்பாகும்.

சரி, வாந்தி நல்லதா? கெட்டதா?

வயிற்றைச் சிரமப்படுத்தும் உணவையோ, நச்சுப்பொருளையோ வெளியில் தள்ள சிலமுறை வாந்தியெடுப்பது நல்லதுதான். அதற்காக ஒரே நாளில் நான்கு ஐந்து முறைக்குமேல் என்றால், உடலின் நீர்ச்சத்து குறைந்து, உடல் உலர்ந்து, ரத்த அழுத்தம் குறைந்துவிடும். இதனால் தலைசுற்றல், மயக்கம் வரும். குறிப்பாக, குழந்தைகள் சில முறை வாந்தி எடுத்தாலே களைத்து விடுவார்கள். இது ஆபத்து.

வாந்திக்கு என்ன காரணம்?

கெட்டுப்போன உணவு, அதீத  உணவு, அஜீரணமாகும் உணவு, அலர்ஜி ஆகும் உணவு... இப்படி வம்பு செய்யும் வஸ்துக்கள் வயிற்றுக்குள் போனால், வாந்தி வரும். இரைப்பை அழற்சி, அல்சர், கேன்சர், வயிற்றுப்போக்கு, காலரா, சீதபேதி, குடல்புழு, குடல்வால் அழற்சி, மஞ்சள் காமாலை, சிறுநீர்ப்பாதை அழற்சி, சிறுநீரகக் கல், தலையில் அடி, மூளையில் கட்டி, மூளைநீர் அழுத்தம், வலி மாத்திரைகள்,  டைபாய்டு போன்ற தொற்றுநோய்கள், புற்றுநோய் மருந்துகள்... இப்படி வாந்தியை ஏற்படுத்தும் காரணப் பட்டியல் பட்டாசு சரம் போல் நீண்டது.ஆனால், வாந்தி என்றாலே ‘அது பித்தம்’ என்று முடிவுக்கு வருகிறவர்கள்தான் நம்மிடம் அதிகம். குழந்தைகள் வாந்தி எடுத்தால்கூட ‘தொக்கம்’ எடுத்தால் சரியாகிவிடும் என்று நம் மக்கள் சாதாரணமாக இருப்பார்கள். வாந்தி விஷயத்தில் நாம் காட்டும் அலட்சியம் அறுவை சிகிச்சையில் கொண்டுபோய் நிறுத்திவிடும் என்பதை எங்கள் அனுபவத்தில் கண்டிருக்கிறோம்.

குடலில் எங்கு அடைப்பு இருந்தாலும் வாந்தி வரும். வயிற்றில் ஓட்டை விழுந்தாலும் இதே நிலைமைதான். கணைய அழற்சியிலும், பித்தப்பை அழற்சியிலும் வாந்திதான் முதல் அறிகுறி. வாந்தியின் அளவை வைத்து, குடலில் அடைப்புள்ள இடத்தை அறிய முடியும். அதாவது, குறைவாக வாந்தி எடுத்தால், மேற்குடலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது என்றும், அதிகமான வாந்தி என்றால், கீழ்க்குடலில் அடைப்பு என்றும் கணிக்கலாம். சாதாரண வாந்தியில் செரிக்காத உணவு, பச்சை நிறத்தில் பித்தநீர் போன்றவைவெளிவரும். ஆனால், வாந்தி மலத்துடன் கலந்த மாதிரி வெளிவந்தால், சிறுகுடலில் அடைப்பு பலமாக இருக்கிறது என்று அர்த்தம். இது ஆபத்தான அறிகுறி. இதற்கு உரிய சிகிச்சையை உடனடியாக எடுப்பது நல்லது. ‘தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டும்’ என்று சொல்கிற மாதிரி வாந்தி எடுப்பதற்கும் காதுக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா? காதில் ‘வெஸ்டிபுலர் அப்பேரடஸ்’ என்று ஓர் அமைப்பு இருக்கிறது.

கொத்தனார் கட்டிடம் கட்டும்போது சுவர் மட்டம் சமமாக இருக்கிறதா என்பதை ரசமட்டம் வைத்துப் பார்ப்பார் அல்லவா? அதுமாதிரிதான் இதுவும்! நாம் நடக்கும்போது, திரும்பும்போது, ஓடும்போது, மலை ஏறும்போது என்று உடல் எந்தத் திசையில் அசைந்தாலும், இதற்குள் உள்ள திரவம் சமநிலையில் இருக்க வேண்டும். ஊட்டிக்கு மலைப்பாதையில் பஸ்ஸில் செல்லும்போது அல்லது கடல் பயணம்/விமானப் பயணத்தின்போது இந்தச் சமநிலை தப்பிவிடும்.இந்தத் தகவல் வாந்தி மையத்துக்குப் போகும். உடனே வாந்தி வந்து ‘உட்கார்ந்திருப்பது சரியில்லை’ என்று உங்களை உசுப்பிவிடும். காது இரைச்சல், காதில் சீழ் எனக் காதுக் கோளாறு எதுவானாலும் இம்மாதிரி வாந்தி வருவதுண்டு. சரி, கர்ப்பிணிகளும் வாந்தி எடுக்கிறார்களே, ஏன்? இவர்களுக்கு முதல் மூன்று மாதங்களில் சில ஹார்மோன்களின் அளவு எகிறுவதும் இறங்குவதுமாக இருக்கும். இதனால் மசக்கை வாந்தி வருகிறது. முதல் நாள் இரவில் நிறைய ‘குடி’த்தவர்களுக்கு மறுநாள் எழுந்திருக்கும்போது வாந்தி வருவதுண்டு.

சிலருக்கு மாரடைப்பின் ஆரம்ப கட்டத்தில் வாந்தி வருகிறது. விஷக்கடிகளின்போதும், ஊசி மருந்து/ மாத்திரை அலர்ஜி ஆனாலும் வாந்தி வருவது நிச்சயம். பார்வை, நுகர்தல், தொடுதல் புலன்களும் வாந்தியை வரவழைக்கும். பள்ளி/கல்லூரி விடுதிகளில் பல்லி விழுந்த பாலைப் பார்த்தால் மாணவர்கள் எல்லோரும் வாந்தி எடுப்பது, துர்நாற்றம் வீசும் இடங்களைக் கடக்கும்போது உண்டாகும் வாந்தி, பல் தேய்க்கும்போது பிரஷ் தொண்டையைத் தொட்டுவிட்டால் வாந்தி வருவது போன்றவை இதற்கான உதாரணங்கள்.

வாந்திக்கு மனமும் ஒரு காரணம்தான். ஸ்ட்ரெஸ், கவலை, கலக்கம் இந்த லிஸ்ட்டில் இடம் பெறும். இந்த வாந்தி பெரும்பாலும் காலை உணவு சாப்பிட்டதும் ஏற்படும். பணிச் சுமையை நினைத்து அல்லது தங்கள் ‘பாஸை’ நினைத்துப் பயப்படுபவர்களுக்கு இம்மாதிரி வாந்தி வரும். பள்ளிக்குச் செல்ல பயப்படும் குழந்தைகள் பஸ்ஸில் ஏறும்போது வாந்தி எடுப்பது இந்த ரகம்தான்.

இன்னொரு உதாரணம், இளவரசி. வயது இருபது. ஏழைக் குடும்பம். பேண்டேஜ் கம்பெனியில் வேலை. அந்த வேலைக்குப் போனதிலிருந்து அவளுக்கு வாந்தி ஆரம்பித்துவிட்டது. அரசு மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்தார்கள். எல்லாமே நார்மல். ஆனால், வாந்தி மட்டும் நிற்கவில்லை. பெற்றோருடன் என்னிடம் வந்தாள் இளவரசி. நிறைய விசாரித்தேன். “உங்கள் மகளுக்கு மருந்து ஒன்றும் வேண்டாம். வேலைக்குப் போவதை ஒரு வாரம் நிறுத்துங்கள்.வாந்தியும் நின்றுவிடும்” என்றேன். “மருந்து இல்லாமல் என்ன சிகிச்சை?” என்று என்னை நம்பாமல் பார்த்தனர். “சொல்வதைச் செய்யுங்கள்!” என்று கட்டாயப்படுத்தியதும்தான் சம்மதித்தனர். ஒரு வாரம் கழித்து மீண்டும் வந்தனர், மலர்ந்த முகத்துடன். “மகளுக்கு வாந்தி சரியாகிவிட்டது, டாக்டர்! இனி அவளை வேலைக்கு அனுப்பலாமா?” என்று கேட்டனர். “அனுப்பலாம்தான். ஆனால் வேறு வேலைக்கு!” என்றேன். “ஏன், டாக்டர்?” என்றனர் அதிர்ச்சியுடன். இளவரசியை வெளியில் அனுப்பிவிட்டு பெற்றோரிடம் தனியாகச் சொன்னேன், “அவளுக்குப் பிரச்னையே அந்த வேலைதான். அவளுக்கு அந்த வேலை பிடிக்கவில்லை. அதைப் பலமுறை உங்களிடம் சொல்லியிருக்கிறாள். உங்கள் ஏழ்மையைக் காரணம் காட்டி அதை நீங்கள் நிராகரித்துவிட்டீர்கள். இதற்கு மனரீதியான ரீயா க் ஷன்தான் வாந்தி” என்றேன். புரிந்துகொண்டு, இளவரசியை டெய்லரிங் வேலைக்கு அனுப்பினார்கள். அதற்குப் பிறகு இளவரசி என்னிடம் வாந்திக்காக வந்தது, திருமணம் ஆகி கர்ப்பம் ஆனதும்தான்!

வாந்தியைத் தடுக்க வழி!

* ஒத்துக்கொள்ளாத உணவையும் கெட்டுப்போன உணவையும் ஓரங்கட்டுங்கள்.

* அவசர அவசரமாகவோ, அளவுக்கு அதிகமாகவோ சாப்பிடாதீர்கள்.

* கொழுப்பும் எண்ணெயும் மிகுந்த நொறுக்குத் தீனிகளைக் குறைத்துக் கொள்ளுங்கள்.

* வாந்தி எடுத்து உடல் நீர்ச்சத்து இழப்பதைத் தடுக்க, ‘ஓஆர்எஸ்’ எனப்படும் உப்பு-சர்க்கரைக் கரைசலை கொஞ்சம் கொஞ்சமாகக் குடிக்கலாம். அல்லது 5 நிமிடம் கொதிக்க வைத்து ஆற வைத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 20 கிராம் சர்க்கரையையும் 5 கிராம் உப்பையும் கலந்து ஒவ்வொரு டீஸ்பூனாகக் குடிக்கலாம்.

* ‘பயண வாந்தி’ உள்ளவர்கள் பயணம் செய்வதற்கு அரை மணி நேரம் முன்பு வாந்தியைத் தடுக்கும் மாத்திரையை டாக்டர் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.

* வாந்தி மையத்தைத் தூங்க வைக்க, குடல் தசைகளுக்கு ஓய்வு கொடுக்க என்று வாந்தியை நிறுத்தும் மாத்திரைகளில் பலவிதம் உண்டு. எனவே, வாந்திக்குக் காரணம் அறிந்து சிகிச்சை பெறுவது அவசியம்

சனி, 4 பிப்ரவரி, 2017

ஏழைகளுக்கு எட்டாக் கனியா ஏர்பேக்குகள்.

ஏர் பேக் (Air Bags) எனப்படும் காற்றுப்பைகள் தற்போது சொகுசு கார்களில் பயன்படுத்தப் படுகிறது. ஒரு வாகனம் விபத்தில் சிக்கும் சமயத்தில் அந்த வாகனத்தில் பயனிப்பவர்களின் உயிர்ப் பாதுகாப்புக்காக காற்றுப்பைகள் எனும் ஏர் பேக்குகள் விரிந்து அடிபடாமல் பாதுகாக்கும் வகையில் வாகனம் வடிவமைக்கப் பட்டிருக்கும். 

கடந்த புதன் கிழமை அதிகாலையில் மதுராந்தகம் அருகில் சென்னையிலிருந்து மதுரை நோக்கி சென்றுகொண்டிருந்த தனியார் ஆம்னி பேருந்து விபத்தில் சிக்கியது.  பேருந்தில் பயணம் செய்த பெரும்பாலானோர் படுகாயம் அடைந்தனர். விபத்தில் படுகாயம் ஏற்படக் காரணமாக அந்த பேருந்தின் இருக்கைகளில் உள்ள இரும்பு பாகங்களே காரணமாக இருந்தது தெரிய வருகிறது. மேலும் வாகன ஓட்டிகளுக்கு போதுமான ஓய்வு கொடுக்காமல் பணி செய்ய வைப்பதும் முக்கிய காரணம். 

சொகுசுக் கார்களில் பயணிப்பவர்களுக்கு கிடைக்கும் பாதுகாப்பு அரசு மற்றும் தனியார் பேருந்துகளுக்குக் கிடைப்பதில்லை. அதற்கான முக்கிய காரணம் இந்த காற்றுப்பைகளின் விலை அதிகம். ஒருமுறை ஒரு காரின் காற்றுப்பை விரிந்து விட்டால் அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவர சில லட்சங்கள் செலவாகும். 

இவ்வித காற்றுப்பைகள் பேருந்துகளில் பொருத்தப்பட்டால் பயணிகளுக்கு உயிர் பாதுகாப்பு மற்றும் கொடுங்காயங்களிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். 

சுமார் ஒரு கோடி விலை மதிப்புள்ள ஆம்னி பஸ்களில் மட்டுமல்லாது லட்சக் கணக்கான விலையுடைய அரசு பேருந்துகளில் இவ்வகை காற்றுப்பைகள் பொருத்தினால் உயிருக்கு பாதுகாப்பு கிடைக்கும்.  மேலும் பேருந்து இருக்கைகளில் இரும்பின் உபயோகத்திற்கு மாற்று கண்டுபிடிப்பதன் அவசியம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் விமானத்தில் உள்ளது போல சீட் பெல்ட்டுகள் பேருந்துகளிலும் பொருத்தப்பட்டால் பயணிகளுக்கு பாதுகாப்பாக இருக்கும் என்பது  எனது  எண்ணம். 

நம் அரசு நினைத்தால் ஒரு வல்லுனர் குழுவை அமைத்து சாலை விபத்துக்களில் சிக்குபவர்களுக்கு உயிர் பாதுகாப்பும், கொடுங்காயங்களிலிருந்து பாதுகாப்பும் செய்வதற்கு தேவையான வழிமுறைகளை கண்டறிந்து மாற்று ஏற்பாடுகளை செய்யலாம். 

கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை
தொடர்புக்கு: 9600106471