வழக்கமாக 10, 12-ம் வகுப்பு அரசுப்பொதுத் தேர்வு
முடிவுகள் பரபரப்பாக பேசப்படும். இம்முறை தேர்தல் முடிவுகள் பெரிய
கோடாகிவிட்டதால் தேர்வு முடிவுகள் சிறிய கோடாகி விட்டது. ஆயினும் எப்போதும்
போலவே முதல் மதிப்பெண் எடுத்த பிள்ளைகள் கொண்டாடப்படுவதும், தோல்வியைத்
தழுவிய சில பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்வதும் இந்த ஆண்டும் தப்பாது
அரங்கேறியுள்ளன.இன்னும் கொடுமை என்னவென்றால் மதிப்பெண்கள் குறைந்துவிடுமோ
என்ற பயத்திலும் மன அழுத்தத்திலுமே சில பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டது
தாங்க முடியாத வருத்தத்தைத் தருகின்றது. அவ்வாறு முடிவு வெளியாகும் முன்பே
தன் முடிவைத் தேடிக்கொண்ட ஒரு குழந்தை நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி
பெற்றுள்ளதை எங்கே சொல்லி அழுவது? இவ்வாறு எல்லையற்ற பயத்தையும் விரக்தி
மனப்பான்மையையும் ஏற்படுத்தும் நம் தேர்வு முறைகள் வாழ்வு பற்றிய என்ன நல்ல
மதிப்பீடுகளை நம் பிள்ளைகளுக்குத் தரமுடியும்? மாறாக மனநோயாளிகளின்
எண்ணிக்கையைத் தான் அதிகரித்துக் கொண்டுள்ளது.
தோல்வியடையும் எல்லோருமா தற்கொலை செய்து கொள்கிறார்கள்
என்ற கேள்வி எழுந்தாலும், இறப்பது சிலராயினும் இழப்பு பெரிது தானே!
தோல்வியைத் தொடரப் போகும் வெற்றியின் தொடக்கப் புள்ளியாகக் கருதும்
மனப்பக்குவத்தை இச்சமூகம் அப்பிள்ளைகளுக்குக் கொடுத்திருந்தால் ஒருவேளை
அவர்கள் எடிசன், ஐன்ஸ்டீன் போல விஞ்ஞானிகளாகவோ, வால்ட் டிஸ்னி, டாவின்சி
போல் கலைத்துறை மேதைகளாகவோ, டெண்டுல்கர், முகமது அலி போல விளையாட்டு
வீரர்களாகவோ வென்றிருக்க முடியுமே என்பதுதான் எமது ஆதங்கம்.
படிப்பதற்கே லாயக்கற்றவராகப் பள்ளியை விட்டுத்
துரத்தப்பட்ட ஐன்ஸ்டீனுக்கு இருபத்தியாறு வயதில் ஐம்பத்தியாறு பல்கலைக்
கழகங்கள் டாக்டர் பட்டம் தந்தது எப்படி? பத்தாம் வகுப்பு கூடத்தாண்டாத
கண்ணதாசன் கவியரசானதும் சிவாஜி கணேசன் நடிகர் திலகம் ஆனதும், ஏ.ஆர்.ரகுமான்
இரட்டை ஆஸ்கார் வென்றுதும் எப்படி? இவர்களெல்லாம் தோல்வி கண்டு துவண்டு
போய் பதின் வயதுகளிலேயே பரலோகம் போயிருந்தால் இத்தனை மேதைகளை இந்த உலகம்
இழந்திருக்கும். நீ தெரு கூட்டுபவனாக ஆனாலும் உன்னைப் போல் சுத்தமாகக்
கூட்டுபவன் இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை என்று சொல்லப்பட வேண்டும்
என்று கற்றுக் கொடுத்த தாய்க்கு மகனாக விளங்கியதால் தான் பள்ளியில் மந்தமான
மாணவனாக விளங்கிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியால் மகாத்மா காந்தியாக
முடிந்தது. இப்படிக்குடும்பம், பள்ளி போன்ற சமூகக் கட்டமைப்புகள்
ஏதாவதொன்றின் மூலமாகவாவது தட்டிக் கொடுக்கப்படுபவர்கள் தடம் மாறுவதில்லை.
கர்ட் லீவின் (Kurt Levin) என்ற உளவியலாளர் ஒரு
மனிதனின் ஒட்டுமொத்த ஆளுமையை நாற்பது சதவீதம் மரபணுக்களும் அறுபது சதவீதம்
சுற்றியுள்ள சமூகமுமே வடிவமைக்கிறது என்று கூறுகின்றார். [P = ʃ(H + E)]
அப்படியானால் மரபணுக்கள் பலவீனமாக இருந்தாலும் பலமான சுற்றுச்சுழலால் ஒரு
மனிதனை வெற்றியாளனாக்கவும் முடியும். பலமான பாரம்பாரிய பண்புகள்
வாய்த்தாலும் பலவீனமான சூழல் அமையப் பெற்றவனுக்குள் தோல்வி மனப்பான்மையைத்
திணித்து விரக்தியின் எல்லைக்குத் தள்ளிவிடவும் முடியும். இந்த இரண்டுமே
சாரியாக அமையாவிட்டாலும் தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் கற்றல்
குறைபாடு என்னும் தடைக்கல்லை உடைத்து வெற்றிச் சிகரத்தில் தன் கொடி
நாட்டிவரும் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் போன்ற விதிவிலக்குகளும் நம்மிடையே
உள்ளனர்.
தற்கொலை செய்து கொள்பவர்களை இரு பிரிவாகப் பிரிக்கலாம்.
நான் தவறு செய்துவிட்டேன். மரணம் தான் என் தவறுக்குப் பிராயச்சித்தம் என
எண்ணுபவர்கள் ஒரு ரகம். பிறரைக் கொன்றுவிட்டுத் தானும் தற்சொலை செய்து
கொள்பவர்கள் இத்தகையவர்கள்.
’உன் கூடப் பிறந்தவர்களைப் பார்
எப்படிப்படிக்கிறார்கள், நீயும்இருக்கியே வேஸ்ட், உன்னால எங்களுக்கு
அவமானம்.தண்டச்சோறு. நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்க, செத்து தொலையேன்.
என்ன பாவம் பண்ணேனோ உன்னைப் பிள்ளையா பெத்துருக்கேன்’ என்று
பெற்றவர்களிடமிருந்தும், ’உன் தலைல என்ன களிமண்ணா இருக்கு? உனக்கெல்லாம்
சொல்லிக் குடுக்கணும்னு என் தலையெழுத்து, நல்லா மேக்கப் பண்ணிக்கிட்டு வரத்
தெரியுது, படிக்க மட்டும் முடியாதா? நீ ஃபெயிலானா எனக்கு தான் கெட்டப்
பேர்’ என்று ஆசிரியர்களிடமிருந்தும் எதிர்மறையான வார்த்தைகளைத் தொடர்ந்து
கேட்கும் பிள்ளைகளுக்குத் தன்னைப் பற்றிய சுயமதிப்பீடு குறைந்து போகும்.
இதனால் பிறர் தன்னைப் பற்றிக் கூறுவதை நிஜம் என்று நம்பி, ’இந்த உலகத்தில்
என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை. என்னை யாருக்குமே பிடிக்கவில்லை,
என்னால் யாருக்குமே பயனில்லை, நான் பிறந்திருக்கவே கூடாது. என்னால்
எல்லோருக்கும் கஷ்டம், நான் வாழ்வதே தவறு’ என்று தற்கொலைக்குத் துணிந்து
விடுபவர்கள் இரண்டாம் ரகம். இது அவர்கள் சுயமாக எடுத்த முடிவல்ல. அவர்கள்
மீது திணிக்கப்பட்ட முடிவு.
நம் உடலும் மனமும் நெருங்கியத் தொடர்புடையது.மனித
மூளையில் சுரக்கும் ஆக்ஸிடோஸின் என்ற ஹார்மோனும், சிரட்டோனின் என்ற
நியூரோடிரான்ஸ்மிட்டரும் எப்போதெல்லாம் ஒருவர் அதிகமாகப்
பாராட்டப்படுகிறாரோ அப்போது அதிகமாக சுரந்து அவரை கலகலப்பாக, உற்சாகமாக
செயல்பட வைக்கும்.எப்போதெல்லாம் குறை கூறப்பட்டு, திட்டப்படுகிறாரோ அப்போது
குறைவாக சுரந்து அவரை உற்சாகமிழக்கச் செய்து மன அழுத்தத்திற்கு
உள்ளாக்கும். அதேபோல் மூளையின் அடியில் பாதாம் பருப்பு போல் உள்ள
அமிக்தலாவும் அறிவுப்பூர்வமாக சிந்திக்கவிடாமல் உணர்வு பூர்வமாக
முடிவெடுக்கச் செய்துவிடும்.
’பாஸ் பண்ணலைனா என் முகத்திலேயே முழிக்காதே’ என்றோ
’தொன்னூறு சதவீதத்துக்கு மேல் எடுத்தால் தான் நீ என் பிள்ளை’ என்றோ
பெற்றோர் நிபந்தனைகள் விதிக்கும் போது எங்கே அதை நிறைவேற்ற முடியாமல்
போய்விடுமோ என்ற பயத்தில் பிள்ளைகள் தவறான முடிவுக்குத் தள்ளப்பட்டு
விடுகிறார்கள். என் பிள்ளை இவ்வளவு மதிப்பெண் எடுத்தான், இந்தக்
கல்லூரியில் படிக்கிறான் என்று பிறரிடம் கூறிப் பெருமைப்பட்டுக்
கொள்வதற்காக பிள்ளையின் தகுதிக்கும் மீறி அதிகமாக எதிர்பார்ப்பது
ஏமாற்றத்தையும் மனக்கசப்பையும் தருவதோடு பிள்ளைகளுக்கு எமனாகவும் முடிந்து
விடுகிறது. பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் மாநிலத்தில் முதல் மதிப்பெண்
எடுத்தவர் இன்று வாழ்க்கையில் வெற்றியாளராக, மகிழ்ச்சியாக இருக்கிறாரா?
இன்று வெற்றியாளராக, மகிழ்ச்சியாக இருப்பவர் பள்ளி நாட்களில் தொண்ணூறு
சதவீதத்திற்கு மேல் எடுத்தவரா? என்று ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலும்
இல்லை என்ற பதிலே கிடைக்கும்.மதிப்பெண் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்வைத்
தந்து விடுவதில்லை எனபதை நாமும் புரிந்து கொண்டு, நம் பிள்ளைகளுக்கும்
புரிய வைப்போம்.
நல்ல மதிப்பெண் எடுத்த பிள்ளைகளைக் கொண்டாடுவோம். அதே
சமயம் தோல்வி கண்டு துவண்டு போயிருக்கும் பிள்ளைகளை வார்த்தைகளால்
காயப்படுத்தாமல், தனிமையில் விட்டுவிடாமல், உடனிருந்து ஆற்றுப்படுத்துவோம்.
’நீ எப்படி இருந்தாலும் என் பிள்ளை யார் உன்னை என்ன சொன்னாலும் உனக்காக
நான் இருக்கிறேன்’ என்ற நிபந்தனைகளற்ற அன்பினால் அரவணைக்கும் போது
தோல்விகளைத் தவிடு பொடியாக்கி வெற்றி வானில் வலம் வரத் தேவையான மனோபலத்தைப்
பெற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கிருக்கும் தனித்திறமைகளை ஊக்குவிப்போம்.
தம் பலம் உணரச் செய்வோம்.
வீட்டில் வளரும் நாய்க்குட்டியைக் கூட
நாய்க்குட்டியாகவே வளர விடும் நாம், நம் குழந்தைகளை மட்டும்
ஒப்பிடுதல்களால், கருத்துத் திணிப்புகளால் சுயம் இழக்கச் செய்கிறோம்.
எல்லோருமே மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் ஆகிவிட்டால்
விவசாயத்தையோ, பிற வேலைகளையோ யார் செய்வது? எல்லோரும் உச்சாணிக் கொம்பாகவே
இருக்க நினைத்தால் பூவாக, காயாக, கனியாக, ஆணிவேராக யார்தான்
இருப்பது?சுயம்இழக்காத போதுதான் சந்தோஷம் பிறக்கும்.இந்த உலகம் அதி
மேதாவிகளுக்கு மட்டுமானதல்ல. எல்லோருக்கும் சொந்தமானது. இம்மண்ணில் பிறந்த
ஒவ்வொரு உயிருக்கும் மகிழ்ச்சியாக வாழ உரிமை உண்டு.மதிப்பெண்ணைக் காரணம்
காட்டி அம்மகிழ்ச்சியைக் குலைக்கும் யாவரும் குற்றவாளிகளே!
- பிரியசகி