Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 30 மே, 2016

மதிப்பெண் மட்டுமே மகிழ்ச்சியைத் தந்திடுமா?

Dinamani



வழக்கமாக 10, 12-ம் வகுப்பு அரசுப்பொதுத் தேர்வு முடிவுகள் பரபரப்பாக பேசப்படும். இம்முறை தேர்தல் முடிவுகள் பெரிய கோடாகிவிட்டதால் தேர்வு முடிவுகள் சிறிய கோடாகி விட்டது. ஆயினும் எப்போதும் போலவே முதல் மதிப்பெண் எடுத்த பிள்ளைகள் கொண்டாடப்படுவதும், தோல்வியைத் தழுவிய சில பிள்ளைகள் தற்கொலை செய்து கொள்வதும் இந்த ஆண்டும் தப்பாது அரங்கேறியுள்ளன.இன்னும் கொடுமை என்னவென்றால் மதிப்பெண்கள் குறைந்துவிடுமோ என்ற பயத்திலும் மன அழுத்தத்திலுமே சில பிள்ளைகள் தற்கொலை செய்து கொண்டது தாங்க முடியாத வருத்தத்தைத் தருகின்றது. அவ்வாறு முடிவு வெளியாகும் முன்பே தன் முடிவைத் தேடிக்கொண்ட ஒரு குழந்தை நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெற்றுள்ளதை எங்கே சொல்லி அழுவது? இவ்வாறு எல்லையற்ற பயத்தையும் விரக்தி மனப்பான்மையையும் ஏற்படுத்தும் நம் தேர்வு முறைகள் வாழ்வு பற்றிய என்ன நல்ல மதிப்பீடுகளை நம் பிள்ளைகளுக்குத் தரமுடியும்? மாறாக மனநோயாளிகளின் எண்ணிக்கையைத் தான் அதிகரித்துக் கொண்டுள்ளது.

தோல்வியடையும் எல்லோருமா தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற கேள்வி எழுந்தாலும், இறப்பது சிலராயினும் இழப்பு பெரிது தானே! தோல்வியைத் தொடரப் போகும் வெற்றியின் தொடக்கப் புள்ளியாகக் கருதும் மனப்பக்குவத்தை இச்சமூகம் அப்பிள்ளைகளுக்குக் கொடுத்திருந்தால் ஒருவேளை அவர்கள் எடிசன், ஐன்ஸ்டீன் போல விஞ்ஞானிகளாகவோ, வால்ட் டிஸ்னி, டாவின்சி போல் கலைத்துறை மேதைகளாகவோ, டெண்டுல்கர், முகமது அலி போல விளையாட்டு வீரர்களாகவோ வென்றிருக்க முடியுமே என்பதுதான் எமது ஆதங்கம்.

படிப்பதற்கே லாயக்கற்றவராகப் பள்ளியை விட்டுத் துரத்தப்பட்ட ஐன்ஸ்டீனுக்கு இருபத்தியாறு வயதில் ஐம்பத்தியாறு பல்கலைக் கழகங்கள் டாக்டர் பட்டம் தந்தது எப்படி? பத்தாம் வகுப்பு கூடத்தாண்டாத கண்ணதாசன் கவியரசானதும் சிவாஜி கணேசன் நடிகர் திலகம் ஆனதும், ஏ.ஆர்.ரகுமான் இரட்டை ஆஸ்கார் வென்றுதும் எப்படி? இவர்களெல்லாம் தோல்வி கண்டு துவண்டு போய் பதின் வயதுகளிலேயே பரலோகம் போயிருந்தால் இத்தனை மேதைகளை இந்த உலகம் இழந்திருக்கும். நீ தெரு கூட்டுபவனாக ஆனாலும் உன்னைப் போல் சுத்தமாகக் கூட்டுபவன் இந்த உலகத்தில் வேறு யாரும் இல்லை என்று சொல்லப்பட வேண்டும் என்று கற்றுக் கொடுத்த தாய்க்கு மகனாக விளங்கியதால் தான் பள்ளியில் மந்தமான மாணவனாக விளங்கிய மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியால் மகாத்மா காந்தியாக முடிந்தது. இப்படிக்குடும்பம், பள்ளி போன்ற சமூகக் கட்டமைப்புகள் ஏதாவதொன்றின் மூலமாகவாவது தட்டிக் கொடுக்கப்படுபவர்கள் தடம் மாறுவதில்லை.

கர்ட் லீவின் (Kurt Levin) என்ற உளவியலாளர் ஒரு மனிதனின் ஒட்டுமொத்த ஆளுமையை நாற்பது சதவீதம் மரபணுக்களும் அறுபது சதவீதம் சுற்றியுள்ள சமூகமுமே வடிவமைக்கிறது என்று கூறுகின்றார். [P = ʃ(H + E)] அப்படியானால் மரபணுக்கள் பலவீனமாக இருந்தாலும் பலமான சுற்றுச்சுழலால் ஒரு மனிதனை வெற்றியாளனாக்கவும் முடியும். பலமான பாரம்பாரிய பண்புகள் வாய்த்தாலும் பலவீனமான சூழல் அமையப் பெற்றவனுக்குள் தோல்வி மனப்பான்மையைத் திணித்து விரக்தியின் எல்லைக்குத் தள்ளிவிடவும் முடியும். இந்த இரண்டுமே சாரியாக அமையாவிட்டாலும் தன்னம்பிக்கையாலும், விடாமுயற்சியாலும் கற்றல் குறைபாடு என்னும் தடைக்கல்லை உடைத்து வெற்றிச் சிகரத்தில் தன் கொடி நாட்டிவரும் நந்தகுமார் ஐ.ஆர்.எஸ் போன்ற விதிவிலக்குகளும் நம்மிடையே உள்ளனர்.
தற்கொலை செய்து கொள்பவர்களை இரு பிரிவாகப் பிரிக்கலாம். நான் தவறு செய்துவிட்டேன். மரணம் தான் என் தவறுக்குப் பிராயச்சித்தம் என எண்ணுபவர்கள் ஒரு ரகம். பிறரைக் கொன்றுவிட்டுத் தானும் தற்சொலை செய்து கொள்பவர்கள் இத்தகையவர்கள்.

’உன் கூடப் பிறந்தவர்களைப் பார் எப்படிப்படிக்கிறார்கள், நீயும்இருக்கியே வேஸ்ட், உன்னால எங்களுக்கு அவமானம்.தண்டச்சோறு. நீயெல்லாம் எதுக்கு உயிரோட இருக்க, செத்து தொலையேன். என்ன பாவம் பண்ணேனோ உன்னைப் பிள்ளையா பெத்துருக்கேன்’ என்று பெற்றவர்களிடமிருந்தும், ’உன் தலைல என்ன களிமண்ணா இருக்கு? உனக்கெல்லாம் சொல்லிக் குடுக்கணும்னு என் தலையெழுத்து, நல்லா மேக்கப் பண்ணிக்கிட்டு வரத் தெரியுது, படிக்க மட்டும் முடியாதா? நீ ஃபெயிலானா எனக்கு தான் கெட்டப் பேர்’ என்று ஆசிரியர்களிடமிருந்தும் எதிர்மறையான வார்த்தைகளைத் தொடர்ந்து கேட்கும் பிள்ளைகளுக்குத் தன்னைப் பற்றிய சுயமதிப்பீடு குறைந்து போகும். இதனால் பிறர் தன்னைப் பற்றிக் கூறுவதை நிஜம் என்று நம்பி, ’இந்த உலகத்தில் என்னை யாருமே புரிந்து கொள்ளவில்லை. என்னை யாருக்குமே பிடிக்கவில்லை, என்னால் யாருக்குமே பயனில்லை, நான் பிறந்திருக்கவே கூடாது. என்னால் எல்லோருக்கும் கஷ்டம், நான் வாழ்வதே தவறு’ என்று தற்கொலைக்குத் துணிந்து விடுபவர்கள் இரண்டாம் ரகம். இது அவர்கள் சுயமாக எடுத்த முடிவல்ல. அவர்கள் மீது திணிக்கப்பட்ட முடிவு.

நம் உடலும் மனமும் நெருங்கியத் தொடர்புடையது.மனித மூளையில் சுரக்கும் ஆக்ஸிடோஸின் என்ற ஹார்மோனும், சிரட்டோனின் என்ற நியூரோடிரான்ஸ்மிட்டரும் எப்போதெல்லாம் ஒருவர் அதிகமாகப் பாராட்டப்படுகிறாரோ அப்போது அதிகமாக சுரந்து அவரை கலகலப்பாக, உற்சாகமாக செயல்பட வைக்கும்.எப்போதெல்லாம் குறை கூறப்பட்டு, திட்டப்படுகிறாரோ அப்போது குறைவாக சுரந்து அவரை உற்சாகமிழக்கச் செய்து மன அழுத்தத்திற்கு உள்ளாக்கும். அதேபோல் மூளையின் அடியில் பாதாம் பருப்பு போல் உள்ள அமிக்தலாவும் அறிவுப்பூர்வமாக சிந்திக்கவிடாமல் உணர்வு பூர்வமாக முடிவெடுக்கச் செய்துவிடும்.

’பாஸ் பண்ணலைனா என் முகத்திலேயே முழிக்காதே’ என்றோ ’தொன்னூறு சதவீதத்துக்கு மேல் எடுத்தால் தான் நீ என் பிள்ளை’ என்றோ பெற்றோர் நிபந்தனைகள் விதிக்கும் போது எங்கே அதை நிறைவேற்ற முடியாமல் போய்விடுமோ என்ற பயத்தில் பிள்ளைகள் தவறான முடிவுக்குத் தள்ளப்பட்டு விடுகிறார்கள். என் பிள்ளை இவ்வளவு மதிப்பெண் எடுத்தான், இந்தக் கல்லூரியில் படிக்கிறான் என்று பிறரிடம் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்வதற்காக பிள்ளையின் தகுதிக்கும் மீறி அதிகமாக எதிர்பார்ப்பது ஏமாற்றத்தையும் மனக்கசப்பையும் தருவதோடு பிள்ளைகளுக்கு எமனாகவும் முடிந்து விடுகிறது. பதினைந்தாண்டுகளுக்கு முன்னால் மாநிலத்தில் முதல் மதிப்பெண் எடுத்தவர் இன்று வாழ்க்கையில் வெற்றியாளராக, மகிழ்ச்சியாக இருக்கிறாரா? இன்று வெற்றியாளராக, மகிழ்ச்சியாக இருப்பவர் பள்ளி நாட்களில் தொண்ணூறு சதவீதத்திற்கு மேல் எடுத்தவரா? என்று ஆராய்ந்து பார்த்தால் பெரும்பாலும் இல்லை என்ற பதிலே கிடைக்கும்.மதிப்பெண் மட்டுமே மகிழ்ச்சியான வாழ்வைத் தந்து விடுவதில்லை எனபதை நாமும் புரிந்து கொண்டு, நம் பிள்ளைகளுக்கும் புரிய வைப்போம்.

நல்ல மதிப்பெண் எடுத்த பிள்ளைகளைக் கொண்டாடுவோம். அதே சமயம் தோல்வி கண்டு துவண்டு போயிருக்கும் பிள்ளைகளை வார்த்தைகளால் காயப்படுத்தாமல், தனிமையில் விட்டுவிடாமல், உடனிருந்து ஆற்றுப்படுத்துவோம். ’நீ எப்படி இருந்தாலும் என் பிள்ளை யார் உன்னை என்ன சொன்னாலும் உனக்காக நான் இருக்கிறேன்’ என்ற நிபந்தனைகளற்ற அன்பினால் அரவணைக்கும் போது தோல்விகளைத் தவிடு பொடியாக்கி வெற்றி வானில் வலம் வரத் தேவையான மனோபலத்தைப் பெற்றுக் கொள்வார்கள். அவர்களுக்கிருக்கும் தனித்திறமைகளை ஊக்குவிப்போம். தம் பலம் உணரச் செய்வோம்.

வீட்டில் வளரும் நாய்க்குட்டியைக் கூட நாய்க்குட்டியாகவே வளர விடும் நாம், நம் குழந்தைகளை மட்டும் ஒப்பிடுதல்களால், கருத்துத் திணிப்புகளால் சுயம் இழக்கச் செய்கிறோம். எல்லோருமே மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும் ஆகிவிட்டால் விவசாயத்தையோ, பிற வேலைகளையோ யார் செய்வது? எல்லோரும் உச்சாணிக் கொம்பாகவே இருக்க நினைத்தால் பூவாக, காயாக, கனியாக, ஆணிவேராக யார்தான் இருப்பது?சுயம்இழக்காத போதுதான் சந்தோஷம் பிறக்கும்.இந்த உலகம் அதி மேதாவிகளுக்கு மட்டுமானதல்ல. எல்லோருக்கும் சொந்தமானது. இம்மண்ணில் பிறந்த ஒவ்வொரு உயிருக்கும் மகிழ்ச்சியாக வாழ உரிமை உண்டு.மதிப்பெண்ணைக் காரணம் காட்டி அம்மகிழ்ச்சியைக் குலைக்கும் யாவரும் குற்றவாளிகளே!

- பிரியசகி

ஞாயிறு, 29 மே, 2016

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பு படிப்பது சவால் அல்ல

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் மருத்துவ படிப்பு படிப்பது சவால் அல்ல


மருத்துவம் படிக்கும் நிலையில் வசதி இல்லாத நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என ஆர்வமும், ஆசையும் இருக்கலாம். ஆனால் தற்போதைய காலகட்டத்தில் அதிக மதிப்பெண், போட்டி தேர்வுகளில் முதலிடம், கட்ஆப் மதிப்பெண் என அதில் இருக்கும் சவால்கள் ஏராளம். அனைத்திலும் வெற்றி பெற்று, குறிப்பிட்ட சிலரால் மட்டுமே மருத்துவ படிப்பை எட்டிப்பிடிக்க முடியும். ஆனால் வாய்ப்பு கிடைக்காதவர்கள் கவலைப்படதேவையில்லை.

மருத்துவ துறையில் எண்ணற்ற பிரிவுகளும், ஏராளமான வாய்ப்புகளும் குவிந்து கிடக்கின்றன. அவற்றை தேர்வு செய்து படிப்பதன் மூலம் நமது, ஆர்வத்தையும், ஆசையையும் நாமே பூர்த்தி செய்து கொள்ளலாம். மேலும் தகுந்த துறைகளில் கவனம் செலுத்தி படிப்பதன் மூலம் வருமானம், மற்றும் வெளிநாட்டு வாய்ப்புகளையும் பெற்று எதிர்காலத்தை பிரகாசமானதாக மாற்றிக்கொள்ளலாம்.

ப்ளஸ் டூவில் அறிவியல் பிரிவை (ஃபர்ஸ்ட் குரூப்) எடுத்துப் படித்தவர்களுக்கு மருத்துவப் படிப்புடன் தொடர்புடைய படிப்புகள் பல உள்ளன.

நர்ஸிங்: எல்லோரும் அறிந்தது நர்சிங் படிப்பு. எப்போதும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வேலை வாய்ப்பு உள்ள நல்ல கல்வி. ஜெனரல் நர்ஸிங் (3 ஆண்டு), பிஎஸ்சி (4 ஆண்டு). படித்துவிட்டு சிலகால அனுபவத்துக்குப் பிறகு கார்டியோ தெரசிக் நர்ஸிங், சைக்யார்டிஸ்டிக் நர்ஸிங், பிசிசியன் அசிஸ்டன் போன்ற முதுநிலை பட்டப்படிப்பை படிக்கலாம். மாநில நர்ஸிங் கவுன்சிலில் பதிந்து வைத்தால் அரசுப்பணியும் பெறலாம். முதுநிலை நர்ஸிங் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பும் வருமானமும் உண்டு.

ஃபிசியோதெரபி: உடற்பயிற்சி முறையில் நோய் தீர்க்கும் மருத்துவமான ஃபிசியோ தெரபி. மூன்று ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பான இதனைப் படித்தால் அனைத்து மருத்துவமனைகளிலும் கண்டிப்பாக வேலைவாய்ப்பு உண்டு. ஃபிசியோதெரபி படித்தால், தனக்கென பெயர்ப்பலகை போட்டு சொந்தமாக பிசியோதெரபி சென்டர் அமைத்துக்கொள்ளலாம். நல்ல வருமானம் கிடைக்கும்.

ஆடியாலஜி: பேச்சுப் பயிற்சி கொடுக்கும் ஆடியாலஜி பட்டப் படிப்பு. பேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவப் படிப்பு. இது 3 ஆண்டு பட்டப்படிப்பு. பேச்சை மேம்படுத்தி முறைப்படுத்தும் “ஸ்பீச் தெரபி’ கொடுப்பதற்கான படிப்பு என்று இதனைச் சொல்லலாம். இப்படிப்பு படித்தவர்களைத் தேடி வரும் வாய்ப்புகள் ஏராளம். வீட்டில் இருந்தபடியே இந்த பயிற்சி கொடுத்து வருவாய் ஈட்டலாம்.

எமர்ஜென்சி அண்ட் ட்ராமா கேர்: மற்றொரு வேலைவாய்ப்பு அதிகம் உள்ள டிகிரி ஆகும். எமர்ஜென்சி அண்ட் ட்ராமா கேர் என்று சொல்லப்படும் பட்டப் படிப்பு. விபத்து ஏற்பட்ட இடத்திலிருந்து விபத்துக்குள்ளானவர்களை எப்படி மருத்துவமனை கொண்டு செல்வது. முதலுதவி எப்படி செய்வது. அறுவை சிகிச்சைக்கு எப்படி விரைவாக உதவுவது முதலியவற்றைக் கற்றுக் கொடுக்கும் படிப்பு. வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகம் உள்ள கல்வி இதுவாகும்.

பார்மஸி: மருந்து, மருந்தின் தன்மை, அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள், வேதிப்பொருட்களின் தனித்தன்மை, அவற்றை என்ன அளவில் சேர்க்கலாம். அவை போக்கும் நோய்கள், அவற்றால் ஏற்படும் பக்க விளைவு பற்றி படிப்பது இளங்கலை பார்மஸி.  4 ஆண்டு பட்டப்படிப்பான இதனை முடிப்பதன் மூலம் சுயமாக மெடிக்கல் ஸ்டோர் வைக்கலாம். மருத்துவமனைகளில் உள்ள மருந்தகப்பிரிவிலும் பணிபுரியலாம்.

லேப் டெக்னீஷியன்: ஓராண்டு பட்டயப் படிப்பு மற்றும் வேலை வாய்ப்பு அதிகம் உள்ள படிப்பு. மருந்துகள் தொடர்பான ஆய்வுக்கூடங்களிலும், இரத்தப் பரிசோதனைக் கூடங்களிலும் பணிவாய்ப்புகள் அதிகம்.

ரேடியோ கிராஃபி: இரண்டு ஆண்டு பட்டயப்படிப்பு. இதே போலவே ரேடியோலாஜிகல் அசிஸ்டெண்ட் எனப்படும் ஓராண்டு பட்டயப்படிப்பும் உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சிடிஸ்கேன், அல்ட்ராசவுண்ட்ஸ், ஆன்ஜியோகிராம் போன்றவற்றை அறிவது இது. ஸ்கேன், எக்ஸ்ரே பிரிவில் பணிபுரிய வாய்ப்புக்கான படிப்புகள் இவை.

ஆக்குபேஷனல் தெரபி: மனநிலை சார்ந்த உடலியல் கோளாறுகளை சரி செய்வது ஆக்குபேஷனல் தெரபி ஆகும். இது ஓராண்டு பட்டயப்படிப்பு. சற்றேறக் குறைய பிசியோதெரபி போன்றது. ஆனால் இது மூளையையும் இயக்கும் படிப்பு. இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் இன்றைய மனித சமுதாயத்துக்கு ஆக்குபேஷனல் தெரபி படித்தவர்களின் சேவை நிறையவே தேவைப்படுகிறது.

ஆப்டோமெட்ரி: கண் குறைபாடுகளை அறிவதும், களைவதும் பற்றிய படிப்பு ஆப்டோமெட்ரி. இதில் 4 ஆண்டு இளநிலைப் படிப்பு மற்றும் 2 ஆண்டு டிப்ளமோ படிப்பும் உள்ளன. பணி வாய்ப்புகளும் தாராளம்.

காற்றை ஜீரணம் செய்வது எப்படி? - ஹீலர் பாஸ்கர்

உணவே மருந்து, மருந்தே உணவு என்று பொதுவாகக் கூறுவார்கள். உணவு மட்டும் மருந்து கிடையாது. ஒரு நாளில் சுமார் மூன்று முறை உணவு சாப்பிடுகிறோம். ஆனால் 24 மணிநேரமும் நாம் சுவாசிக்கிறோம். ஒரு நிமிடத்திற்கு 8 லிட்டர் வீதம் ஒரு நாளில் சுமார் 12 ஆயிரம் லிட்டர்கள் காற்றை நாம் சுவாசிக்கிறோம். சோற்றைப் பற்றி கவலைப்படும் நாம் காற்றைப் பற்றி என்றுமே கவலைப்படுவது கிடையாது. உணவை எப்படி நல்ல முறையில் ஜீரணம் செய்வது என்பதை நாம் பார்த்தோம். இப்பொழுது காற்றை எப்படி நாம் நல்ல முறையில் ஜீரணம் செய்து இரத்தத்தில் கலக்குவது என்பதைப் பார்க்கப் போகிறோம்.

நம்மில் பலர் இரவு நேரங்களில் தூங்கும் பொழுது படுக்கை அறையில் கொசுக்கள் கடிக்கும் என்பதற்காக கொசுவிற்குப் பயந்து அல்லது திருடன் வந்து விடுவான் என்று பயந்து மேலும் குடும்பம் நடத்தும் வீட்டில் மற்றவர்கள் வேடிக்கைப் பார்க்கக் கூடாது என்பதற்காக இந்த மூன்று காரணத்திற்காக நாம் படுக்கை அறையை காற்று வசதி இல்லாமல் ஜன்னல், கதவு ஆகியவற்றை அடைத்துப்படுக்கிறோம். இப்படி படுக்கை அறையில் இருக்கும் காற்று வெளியே செல்வதற்கும், உள்ளே வருவதற்கும் எந்த ஒரு வசதியும் இல்லாமல் ஜன்னலை அடைத்து வைத்து படுப்பவர்களுக்கு கண்டிப்பாக பல நோய்கள் வரும். ஒரு மனிதன் ஒரு நிமிடத்தில் 8 லிட்டர் காற்றை மூக்கின் வழியாக சுவாசித்து நுரையீரலுக்குக் கொடுக்கிறான். நுரையீரல் அந்த காற்றிலுள்ள ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன் மற்றும் காற்றிலுள்ள பிராண சக்தி உட்பட பலப் பொருட்களை இரத்தத்தில் கலக்கிறது. இரத்தம் மூலமாக உடல் முழுவதும் பரவும் நல்லப் பொருட்கள் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளிலுள்ள செல்களுக்கும் பரிமாறப்படுகிறது. ஒவ்வொரு செல்லும் நல்ல சக்தியை எடுத்துக் கொண்டு அதைப் பயன்படுத்திய உடன் கெட்டப் பொருளாக மாறி அந்த கெட்டப் பொருள் மீண்டும் இரத்தத்திற்கு வருகிறது.

இரத்தத்திற்கு வந்த கெட்டப் பொருள்கள் நுரையீரலுக்கு வரும்பொழுது நுரையீரலில் இருந்து மூக்கு வழியாகக் காற்று வெளியேறு கிறது. எனவே, ஒவ்வொரு முறை நாம் சுவாசிக்கும் பொழுதும் நல்ல காற்றை சுவாசித்துக் கெட்டக் காற்றை வெளியே விடுகிறோம். இப்படி ஒரு அறையில் நான்கு மனிதர்கள் படுத்திருந்தால் இந்த நான்கு பேரும் ஒரு நிமிடத்தில் 8 லிட்டர் விதமாக அரை மணிநேரத்தில் அந்த அறையிலுள்ள அனைத்துக் காற்றையும் கெட்டக் காற்றாக மாற்றிவிடுகிறார்கள். சுமாராக நாம் இரவு ஒரு 8 மணிநேரம் தூங்குகிறோம். முதல் அரை மணிநேரம் மட்டுமே நமது உடலுக்கு நல்ல காற்று செல்லும். மீதமுள்ள 7 ½ மணிநேரமும் நம்மால் கெடுக்கப்பட்ட கெட்டக் காற்று மட்டுமே நம் உடலுக்குள் செல்லும்பொழுது நம் உடலுக்குத் தேவையான பிராணசக்தி மற்றும் காற்றிலுள்ள அனைத்துப் பொருள்களும் கிடைக்காமல் நம் உடலிலுள்ள அனைத்து உறுப்புகளுக்கும் நோய் ஏற்படுகிறது. இப்படி 7 ½ மணிநேரம் கெட்டக் காற்றில் நாம் படுத்து அதை சுவாசித்தால் நமக்கு 7 ½ நாட்டுச் சனி பிடிக்குமா? பிடிக்காதா? இதைப் பற்றி யாருமே யோசிப்பதே கிடையாது. காற்றுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால் காற்றாடி பயன்படுத்து கிறோம் என்று பலரும் கூறுகிறார்கள். காற்றாடி என்ற கருவி அறையில் இருக்கும் காற்றைச் சுற்றி விடுமே தவிர கெட்ட காற்றை நல்ல காற்றாக மாற்றாது. எனவே, தயவு செய்து படுக்கை அறை மட்டுமல்ல, அலுவலகம், வீடு, கல்யாண மண்டபம் ஆகிய எந்த ஒரு அறையிலும் புதுக்காற்று உள்ளே வந்து பழைய கெட்டக் காற்று வெளியேச் செல்வதற்கு வசதி கண்டிப்பாக இருக்க வேண்டும்.

ஜன்னல் கதவை அடைத்து காற்று வசதி இல்லாமல் இருக்கும் பொழுது உடலில் நோய்கள் வரும் என்பதை நாம் இப்பொழுது புரிந்து கொண்டோம் ஜன்னல் கதவை அடைத்து வைத்து படுத்தாலே நோய் வரும் என்றால் ஜன்னலையும் அடைத்து வைத்து அதனுள்ளே கொசுவர்த்தி போன்ற பொருள்களைப் பயன்படுத்தினால் கண்டிப்பாக மிகப்பெரிய நோய் வரும். கொசு சிறியதாக இருப்பதால் அன்றே அந்த கொசுவர்த்தியிலுள்ள விஷத்திற்கு இறந்து விடுகிறது. மனிதன் என்ற நாம் ஒரு வகையில் ஒரு பெரிய கொசுதான். நமது உயிர் போவதற்குச் சில வருடங்கள் மட்டுமே ஆகும். கொசுவர்த்தி என்பது மனித ஆரோக்கியத்தைக் கெடுக்கும் ஒரு விஷம். இதைப் பயன்படுத்தவே கூடாது. தினமும் நாம் நம் செலவிலேயே கொசுவர்த்தி வாங்கி வந்து நமக்கு நாமே விஷம் சாப்பிடுகிறோம். இதைப் பற்றி எந்த மருத்துவரும் பேசுவது கிடையாது.

நெஞ்சு சளி, ஆஸ்துமா, டி.பி, வீசிங், மூக்கு அடைத்தல், சளி பிடித்தல், தும்மல், இருமல் போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் அடிப்படைக் காரணம் கொசுவர்த்திகள் பயன்படுத்துவதும் காற்று இல்லாத அறையில் வசிப்பதுமே. உண்மையில் கொசுவர்த்தியின் புகையில் மிகப்பெரிய விஷம் உள்ளது. அதைச் சுவாசிக்கும் கொசுக்கள் உயிர் இழக்கிறது. அதேபோல் அந்த கிருமிகள் விஷங்கள் நம் உடலினுள் சென்று நம் உடலுக்கு மிகப்பெரிய ஒரு பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சிலர் கூறுவார்கள் கொசுவர்த்திப் பயன்படுத்தினால் மட்டுமே நான் நன்றாக தூங்குகிறேன் என்று. உண்மையில் கொசுவர்த்தியிலிருந்து வரும் புகை மனித உடலுக்குள் போகும்பொழுது நம்மை மயக்கமடைய செய்கிறது. கொசுவர்த்தி புகையில் உறங்கும் எவரும் உண்மையில் ஆரோக்கியமான தூக்கம் தூங்குவதே கிடையாது. அது ஒரு வகையான மயக்கம். சில சமயங்களில் கொசுவர்த்தியின் மயக்கத்திற்கு நாம் உணர்ச்சியற்று தூங்கிக் கொண்டிருப்போம். இப்பொழுது வரும் கொசுவர்த்திகளுக்கு கொசுக்கள் மயக்கம் அடைவது கிடையாது. அது நம்மை நன்றாக கடிக்கிறது. இரத்தத்தை முழுவதும் உறிஞ்சி எடுக்கிறது. நாம் கொசுவர்த்தியின் புகையில் மயக்கமாகிக் கிடப்பதால் நமக்கு அதுத் தெரிவது கூட கிடையாது. உண்மையில் கொசுவர்த்தி என்பது கொசுவுக்கு நல்லது என்றுதான் தோன்றுகிறது. மனிதனுக்குக் கண்டிப்பாக அது ஒரு கெட்ட விஷயம்.

பல மருத்துவர்கள் குழந்தைக்குச் சாம்பிராணி புகை போடக்கூடாது என்பதை வலியுறுத்திக் கூறுகிறார்கள். அரசாங்கம் கூட டி.வி, பேப்பர் போன்ற ஊடகங்களில் சாம்பிராணி புகை பயன்படுத்தாதீர்கள் என்று விளம்பரம் செய்து வருகிறார்கள். சாம்பிராணி புகை உடலுக்கு நல்லது மட்டுமே செய்யும். ஆனால் சாம்பிராணி பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும் மருத்துவர்களும், அரசாங்கமும் ஏன் கொசுவர்த்தியைப் பயன்படுத்தாதீர்கள், அதனால் உடலுக்கு மிகப்பெரிய நோய் வரும் என்று ஏன் பிரச்சாரம் செய்யாமல் இருக்கிறார்கள். ஆஸ்துமா, வீசிங், நெஞ்சு சளி போன்ற நுரையீரல் சம்பந்தப்பட்ட எந்த நோயாளியும் பத்து வருடங்களாக மருந்து மாத்திரை சாப்பிட்டு வருகிறீர்களே உங்கள் வீட்டில் காற்று ஒழுங்காக இருக்கிறதா என்று எந்த மருத்துவராவது உங்களிடம் கேட்டார்களா அந்த காற்றை சரி செய்யாத வரை உலகில் யாருக்கும் நுரையீரல் மூக்கு சம்பந்தப்பட்ட எந்த நோயும் குணமாகாது. காற்றை சரி செய்தால் மட்டுமே தோல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் குணமாகும். எனவே, தயவு செய்து நல்லக் காற்று உள்ளே வருவதற்கும், கெட்ட காற்று வெளியேச் செல்வதற்கும் வீடு, அலுவலகம், கம்பெனி ஆகிய அனைத்து இடங்களிலும் வசதிகள் இருக்க வேண்டும்.

ஜன்னலைத் திறந்து வைத்தால் நல்ல காற்று உள்ளே வந்து கெட்ட காற்று வெளியே செல்லும். ஆனால் கொசுக் கடிக்கிறது என்ன செய்ய வேண்டும்? திருடன் வந்து விடுவான் என்ன செய்ய வேண்டும்? குடும்பம் நடத்தும் நமது வீட்டில் மற்றவர்கள் வேடிக்கைப் பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது!. இப்படி இந்த மூன்று விசயத்திற்காக நாம் ஜன்னலைத் திறந்து வைக்கப் பயப்படுகிறோம். இல்லையா? 

இதற்கு ஒரு அருமையானத் தீர்வு என்ன வென்றால் நீங்கள் ஜன்னல் கதவு அனைத்தையும் அடைத்து வைத்துப் படுத்துக் கொள்ளுங்கள். ஆனால் உங்கள் அறையில் ஒரு பக்கச் சுவற்றின் மேல் பகுதியில் கூரையிலிருந்து அறை அடி அல்லது ஒரு அடி கீழே சுவற்றில் ஒரு வட்டவடிவமான ஓட்டையை ஏற்படுத்துங்கள். அதில் காற்றை வெளியேத் தள்ளும் காற்றாடியைப் பொறுத்துங்கள். அந்த காற்றாடிக்கு நேர் எதிரே உள்ளச் சுவற்றின் மேல் பகுதியில் கூரைக்குச் சற்று கீழே இதேபோல் ஒரு ஓட்டையை ஏற்படுத்தி ஒரு கொசு வலையை அடைத்து விடுங்கள். இப்பொழுது இந்த ஃபேன் வழியாக எவ்வளவு கெட்டக் காற்று வெளியே செல்கிறதோ அதே அளவு நல்ல காற்று எதிரில் உள்ள ஓட்டை வழியாக நமது அறைக்குள் வரும். நல்லக்காற்று எப்பொழுதும் அறையின் கீழ் பகுதியிலும் கெட்டக்காற்று எப்பொழுதும் அறையின்மேல் பகுதியிலும் இருக்கும். கெட்டக்காற்றுக்கு அடர்த்தி குறைவு. எனவே, அதுமேல் நோக்கி பயணம் செய்யும். எனவே, எப்பொழுதும் ஒரு அறையில் தரைக்கு அருகே படுப்பதால் நல்ல காற்றை சுவாசிக்க முடியும். ஒரு அறையில் எவ்வளவு உயரமாக நாம் படுக்கிறோமோ அந்த அளவுக்கு காற்று மாசுபட்டு இருக்கும். இப்படி ஃபேன் பொருத்துவதால் ஜன்னல் மற்றும் கதவை நாம் திறக்க வேண்டிய அவசியம் இல்லை. கொசு உள்ளே வராது, திருடன் வருவதற்கு வாய்ப்பு இல்லை. நம்மை வேறு யாரும் வேடிக்கைப் பார்க்கவே மாட்டார்கள். இப்படி இந்த வசதி செய்வதற்கு குறைந்த பணம் மட்டுமே செலவாகும். ஆ°துமா, வீசிங், நெஞ்சு சளி போன்ற நோய்களுக்கு பத்து வருடமாக மாத்திரைக்குச் செலவு செய்த தொகையைவிட இது கண்டிப்பாக குறைவாகத்தான் இருக்கும்.

பரவாயில்லை. ஜன்னலைத் திறந்து வைத்துப் படுக்க எங்களால் முடியும் என்று கூறுபவர்களுக்கு கொசுக்கடியில் இருந்து மட்டுமே தப்பிப்பதற்கு ஒரு சிறந்த யோசனை. கொசு வலையை கட்டி அதற்குள் படுப்பதால் கொசுக்கள் நம் அறைக்குள் வரும். ஆனால் கடிக்காது. கொசு வலையின் கீழ் பகுதியை நமது படுக்கைக்கு கீழே அல்லது பாயிற்கு கீழே லேசாக சுருட்டி அழுத்தி வைப்பதால் காலை வரை எந்த கொசுவும் கடிக்காது. காற்றைப் பொருத்தவரை மொத்தம் இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டும் ஞாபகம் வைத்து கொண்டால் போதும். (1) கொசுவர்த்திகள், லிக்யூட் கொசுவர்த்திகள், கொசுவர்த்திச் சுருள், மேட் போன்ற எந்த ரூபத்திலும் எந்தக் கொசுவர்த்தியும் பயன்படுத்தக்கூடாது. (2) 24 மணி நேரமும் வீடு, அலுவலகம், தொழிற்சாலை ஆகிய அனைத்து இடங்களிலும் நல்லக் காற்று உள்ளே வருவதற்கும், கெட்டக் காற்று வெளியேச் செல்வதற்கும் அமைப்பு உள்ளதா என்பதைக் கவனிக்க வேண்டும்.
 
இப்படி நமது உடலை காப்பாற்றுவதற்காக பழங்கால வீடுகளில் வெண்டிலேசன்கேப் என்ற ஒரு ஓட்டை இருக்கும் இதை நான்கு சுவர்களிலும் கூரைக்குக் கீழே சுவற்றின் மேல் 2 அடிக்கு 1/4 அடி சுமாராக ஒரு ஓட்டை கொடுத்திருப்பார்கள். இந்த ஓட்டை இருக்கும் எந்த வீடுகளிலும் காற்றுச் சம்பந்தப்பட்ட எந்த நோய்களும் வராது. ஏனென்றால் கெட்ட காற்று எப்பொழுதும் மேல் நோக்கிச் சென்று ஏதாவது ஒரு வழியில் ஆகாயத்தில் கலந்து மேல் நோக்கி செல்வதற்கு மட்டுமே முயற்சி செய்யும். நம் முன்னோர்கள் வா°து என்ற பெயரில் இதைத்தான் பார்த்து கொண்டிருந் தார்கள். எனவே வா°து என்பது ஒரு வீட்டிற்குள் பஞ்ச பூதங்கள் சரியாக உள்ளதா என்பதைப் பார்த்து அதை சரி செய்வது தான் வா°து. அதை பலர் தவறாகப் பயன்படுத்தியதால் வா°து என்பது ஒரு மூட நம்பிக்கை என்று நாம் இப்பொழுது குப்பையில் எரித்து விட்டோம். ஆனால் நோய்களோடு மருத்துவமனைக்குப் படையெடுத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் வா°து சம்பந்தப்பட்ட ஒரு புத்தகத்தை நாம் எழுத உள்ளோம். அதில் வாஸ்துவைப் பற்றி மிக தெளிவாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் இருக்கும். எனவே, யோகா, பயிற்சிகள் செய்பவர்கள் முதலில் காற்றை சரி செய்து விட்டு பிறகு மூச்சு பயிற்சியினைக் செய்வதால் மிகுந்த பலன் கிடைக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

எனவே, இனிமேல் கொசுவர்த்தியை நாம் பற்ற வைத்துப் படுப்பதும் அதைச் சாப்பிட்டு படுப்பதும் இரண்டும் ஒன்றுதான். லிக்யூட் கொசுவர்த்திகள் கரண்டின் மூலமாக சொருகி பயன்படுத்துவதை விட இனிமேல் தயவு செய்து குடித்துவிட்டுப் படுத்து விடுங்கள் இரண்டும் ஒன்றுதான். கொசுவர்த்தியில் இருக்கும் கெட்ட விசயங்கள் எரிந்து இரவு முழுவதும் காற்றோடுக் கலந்து நம் மூக்கின் வழியாக நுரையீரலுக்கு சென்று இரத்தத்தில் கலக்கிறது. எனவே, தயவு செய்து கொசுவர்த்தியை எந்த ரூபத்திலும் பயன்படுத்தக் கூடாது.

காற்றை நல்ல காற்றாக ஒழுங்காக ஜீரணம் செய்வதற்குப் பிராணாயாமம், பஸ்திரிகா, கபால பதி, நாடிசுத்தி போன்றப் பல பயிற்சிகள் உள்ளது. ஆனால் நம் வீட்டில் உள்ள காற்றே சுத்தமாக இல்லாத பொழுது இந்தப் பயிற்சிகளை செய்வதால் பெரிய அளவில் நன்மை கிடைக்காது. எனவே, இந்தப் பயிற்சிகள் மூலமாக நமக்கு பலன் கிடைக்க வேண்டுமென்றால் முதலில் அறையில் இருக்கும் காற்றை சுத்தப்படுத்துங்கள். ஒவ்வொரு முறை மூக்கின் வழியாக காற்றை வெளியே அனுப்பும் பொழுது நமது பிராணசக்தி உடலிலிருந்து வெளியேறுகிறது. எனவே, மூச்சு பயிற்சி செய்பவர்கள் நாடிஸ்ருதி, பிராணாயாமம், கபாலபதி போன்ற பயிற்சிகளைச் செய்யுங்கள். இவை உடலில் பிராண சக்தியை அதிகரிக்கும். பஸ்திரிகா என்ற பயிற்சியை மட்டும் குறைந்த அளவில் மட்டுமே செய்ய வேண்டும். சிலர் பஸ்திரிகா பயிற்சியை அரை மணிநேரம், ஒரு மணிநேரம் என்று தேவையில்லாமல் மூச்சு காற்றை அதிகமாக வெளியே, வேகமாக செலுத்தி உடல் ஆரோக்கியத்தை கெடுத்துக் கொள்கிறார்கள். எனவே, கூடிய விரைவில் யோகா என்ற தலைப்பில் நாம் எழுதும் புத்தகத்தைப் படிப்பதன் மூலமாக இந்த பயிற்சிகளை நாம் ஒழுங்குப்படுத்திக் கொள்ளலாம்.


எனவே, காற்றைப் பொறுத்தவரை கொசுவர்த்திகள் பயன்படுத்தக் கூடாது. 24 மணிநேரமும் நல்ல காற்று உள்ள இடத்தில் மட்டுமே இருக்க வேண்டும். இந்த இரண்டு விஷயத்தை மட்டும் நாம் ஒழுங்குப்படுத்தினால் நமது உடலிலுள்ள அறிவு அந்த காற்றிலுள்ள பிராணசக்தி மற்றும் அனைத்து நல்ல பொருள்களையும் சுத்தமாக இரத்தத்தில் கலந்து நமது நோய்களைக் குணப்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு: +91 9944221007
www.anatomictherapy.org

சனி, 28 மே, 2016

பார்க்கவேண்டிய பழந்தமிழர் கூடம்.

dinamalar logo க்கான பட முடிவு

பழந்தமிழரின் சிறப்புகளையெல்லாம் நாட்டுக்கு எடுத்துக்காட்டும் வகையில் சுடுமண் சிற்பம், சுதை சிற்பம், மற்றும் மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டும், படிமங்களாக வடிவமைத்த கலைப்பொருட்களைக் கொண்டும் பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம் ஒன்று சென்னையில் அருமையாக இயங்கிவருகிறது.

சென்னை தரமணியில் உள்ள உலகத்தமிழராய்ச்சி நிறுவனத்தின் தரைத்தளத்தில் சுமார் 11ஆயிரம் சதுரஅடியில் காட்சிக்கூடங்கள் அமையப்பெற்றுள்ளது.



பழந்தமிழரின் வாழ்வியல் சிறப்புகளையும், அறிவு நுட்பங்களையும், கலைக் கூறுகளையும், தொழில்நுட்ப திறன்களையும், இளைய தலைமுறையினருக்கும், வெளிநாட்டினருக்கும் எடுத்துக்காட்டும் விதமாக ஒவியங்கள், நிழற்படங்கள், மரச்சிற்பங்கள், உலோகச் சிற்பங்கள், கற்சிற்பங்கள், சுடுமண் சிற்பங்கள், சுதை வடிவங்கள் மற்றும் புடைப்புச் சிற்பங்கள் போன்றவை எழில்மிகு கலை நயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளன. 

நவீனத் தொழில்நுட்பங்களுடன் கூடிய திரையரங்கு ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு பழந்தமிழர் வாழ்வியல், பழந்தமிழர் மருத்துவம், தமிழர் நீர்மேலாண்மை, ஆட்சித்திறன், போரியல் போன்ற குறும்படங்கள் திரையிட்டுக் காட்டப்டுகின்றன. இந்தப் படங்களை பார்த்துவிட்டு காட்சிக்கூடங்களில் உள்ள சிற்பங்கள் ஒவியங்களை பார்க்கும் போது அதன் சிறப்பு பன் மடங்கு கூடுதலாக புரியும்.

மரச்சிற்பங்களில் முதலில் கவர்ந்து இழுப்பது அற்புதமான வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ள கதவுதான், அதனைத் தொடர்ந்து காளை, அன்னம், கலைநயமிக்க துாண், யானை குதிரை இணைந்த வடிவம், கற்சங்கலி, பசுவுடன் ஆராய்ச்சி மணி ஆகிய கல் மற்றும் மரச்சிற்பங்கள்தான்.

39 வகையான ஆபரணம் அணிந்த மணிமேகலை ஒரு பக்கமும் அவரே மறுபக்கத்தில் அனைத்தையும் துறந்த துறவியாய் காணப்படும், ஒரே மரத்தில் உருவாக்கிய சிற்பம் மிக அருமை.

பொதுவாக நமது குழந்தைகளுக்கு பழந்தமிழர் வீரவரலாறு அவர்களது மருத்துவதிறன், நீர் மேலாண்மை, நெசவுத்ததொழில் நுட்பம், ஏர்மாடுகள், விருந்தோம்பல், போர்காட்சிகள் போன்றவைகளை எத்தனை நாள் எடுத்துச்சொன்னாலும் புரியாது இங்கு ஒரு நாள் அழைத்துச்சென்றால் எளிதாக அருமையாக புரிந்து கொள்வர்.

அத்துடன் சேர, சோழ, பாண்டிய மன்னர்களையும் தமிழ் வளர்த்த அவ்வை, தொல்காப்பியர், கபிலர் போன்றவர்களையும் அற்புதமான சிற்ப வடிவில் அறிமுகப்படுத்தலாம்.

சுருக்கமாக சொல்வதனால் இந்த கோடை விடுமுறைக்கு எங்கு போகிறீர்களோ இல்லையோ இங்கு அவசியம் உங்கள் குழந்தைகளை அழைத்துச்செல்லுங்கள். இங்கே உங்களுக்கு வழிகாட்ட தனித்தமிழில் பேசும் இயக்குனர் கோ.விசயராகவன் மற்றும் பொறுப்பாளர் முனைவர் ஆ.மணவழகன் ஆகியோர் உள்ளனர்.அரசு விடுமுறை நாட்கள் தவிர அனைத்து நாட்களும் திறந்திருக்கும், அனுமதி இலவசம். கூடுதல் தகவலுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய எண்: 9789016815.

-எல்.முருகராஜ்

பார்க்க பார்க்க சலிக்காத வால்பாறை சுற்றுலா தலங்கள்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran








கோவை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களின் முக்கிய இடமாக வால்பாறை உள்ளது. வால்பாறையை மையமாக கொண்டு அதை சுற்றியுள்ள 25 இடங் களை 3 நாளில் பார்க்க முடியும். வால்பாறையில் உள்ள சுற்றுலா தலங்களுக்குச் செல்லும் வழியில் அரசு மற்றும் தனியார் தேயிலை தோட்டங்கள் உள்ளது. 

இடையிடையே குறுக்கிடும் மித, அடர்வனப்பகுதிகள் பசுமையுடன் கண்ணைக் கவரும்.கோவையில் இருந்து 100 கி.மீ.தூரத்திலும், பொள்ளாச்சியில் இருந்து 60 கி.மீ.,தூரத்திலும் உள்ளது வால்பாறை. கோவையில் இருந்து மூன்றரை மணிநேரத்தி லும், பொள்ளாச்சியில் இருந்து இரண்டரை மணிநேரத்திலும் வால்பாறைக்கு பஸ்சில்வரலாம்.முதல்நாளில் பாலாஜி கோயில் பூங்கா, அக்காமலை புல்வெளி, வெள்ளமலைடனல், சின்னக்கல்லார் அணை, சின்னக் கல்லார் நீர்வீழ்ச்சி, கீழ்நீரார் அணை, கூலாங்கல் ஆறு ஆகியவற்றை காலையில் துவங்கி மாலைக்குள் பார்க்கலாம்.

வால்பாறையில் தங்கி அடுத்த நாள் காலை கிளம்பிவில் லோனி பள்ளத்தாக்கு, மானாம் பள்ளி நீர்மின் உற்பத்தி நிலையம், மீன்பாறை ஆறு, சோலையாறு அணை, அதிரப்பள்ளி பால்ஸ், நல்லமுடி பூஞ்சோலை, ஹைபாரஸ்ட் நம்பர்பாறை காட்சிமுனை பார்க்கலாம்.இரண்டாம் நாள் இரவு அங்கு தங்கி, 3ம் நாள் அதிகாலை வால்பாறையில் இருந்து கீழிறங்கலாம். 40 கி.மீ.,மலைப்பாதையில் புதுத்தோட்டம், கவர்க்கல், வாட்டர் பால்ஸ், லோம்ஸ் காட்சிமுனை, மங்கிபால்ஸ், ஆழியார் அணைபார்க்கலாம். அங்கிருந்து பொள்ளாச்சி வழியாக டாப்சி லிப் சென்று மாலைக்குள் பார்த்து விட்டு, இரவுக்குள் பொள்ளாச்சி திரும்பலாம்.

வால்பாறை சுற்றுலா தலங்களின் சிறப்புகள் வருமாறு :

பாலாஜி கோயில் பூங்கா :

வால்பாறையிலிருந்து 8 கி.மீ.,தொலைவில் அக்காமலை செல்லும் சாலையில் கருமலை எஸ்டேட்டில் உள்ளது. கருமலை வரை வாகனத்தில் சென்று, அங்கி ருந்து நடைப்பயணமாக தேயிலை தோட்டங்களின் வழியாக அரை கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். கோயிலை சுற்றி பூத்துள்ள நூற்றுக்கணக்கான வளர்ப்பு பூக்கள் கண்ணைக் கவரும். அங்குள்ள சிறுவர் பூங்கா ரம்யமானது.பாலாஜி கோயிலை அடுத்து அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி கோயில் எழிலானது.

அக்காமலை புல்வெளி :

பாலாஜி கோயிலில் இருந்து 7 கி.மீ.,தொலைவில் உள்ளது.
சுவிட்சர்லாந்திற்கு இணையான அழகான புல்வெளி. இதைக்காண வனத்துறை அனுமதி பெற்று, வனத்துறையினர் பாதுகாப்போடு செல்லமுடியும். அனுமதி கிடைக்காதவர்கள் கருமலை ரோட்டில் இருந்து பார்த்தால் தூரத்தில் இளம்பச்சை நிறத்தில் தெரியும் அக்காமலை புல்வெளியை ரசிக்கலாம்.

வெள்ளமலை டனல் :

கருமலையில் இருந்து 5 கி.மீ.தொலைவில் சிறுகுன்றா சாலையில் உள்ளது. சின்னக்கல்லார் அணையில் இருந்து மலையைக் குடைந்து 4.2 கி.மீ.தூரம் அமைக் கப்பட்ட குகையை கால்வாய் மற்றும் அதில்வரும் நீரை காணலாம்.

சின்னக்கல்லார் அணை :

வெள்ளமலை டனலில் இருந்து 17 கி.மீ.,தொலைவில் அமைந்துள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் கேரளா சென்று வீணாக அரபிக்கடலில் கலப்பதை தடுப்பதற்காக கட்டப்பட்டது இந்தஅணை. வெள்ளமலை குகை யின் நுழைவாயில் இங்கு அமைந்துள்ளது. இந்த அணையில் இருந்து நீர் குகைக்குள் செல்வதை பார்க்கலாம்.

சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி :

சின்னக் கல்லார் அணையில் இருந்து 2 கி.மீ.,தூரத்தில் அமைந்துள்ளது சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி.தென்னிந்தியாவின் அதிகமழை பெய்யும் இடம் எனபெயர் பெற்றது. சின்னக்கல்லார் வனப்பகுதிக்குள் அமைந்த நீர்வீழ்ச்சியை அடைய மரதொங்கு பாலத்தின் வழியாக செல்ல வேண்டும். அருவிக்கு செல்லவனத்துறைக்கு கட்டணம் செலுத்த வேண்டும்.

கீழ்நீரார் அணை :

சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சியில் இருந்து 12 கி.மீ.,தூரத்தில் அமைந்துள்ளது. அடர்வனப்பகுதிக்குள் அமைந்த இந்த அணையின் நீர்த்தேக்கம் அழகானது.

கூழாங்கல் ஆறு :

கீழ்நீராறு அணையில் இருந்து 8 கி.மீ., தூரத்தில் வால்பாறை ரோட்டில் அமைந்துள்ளது. இருபுறமும் தேயிலை தோட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த ஆறுகூலாங்கற்களால் நிறைந்தது. குளிக்கலாம். இங்கிருந்து 3 கி.மீ.தூரத்தில் வால் பாறை அடையலாம். 

கனிகள் கனியட்டும்


fruits க்கான பட முடிவு

Dinamani


பழம் ஓர் அற்புதமான இயற்கை உணவு. வெயிலில் வேக வைக்கப்படுகிறது. மழை, காற்று, பனி அனைத்தையும் பெற்றுக் கனிகிறது. கசப்பு, துவர்ப்பு, புளிப்பு ஆகிய சுவையுடைய காய்களை இனிப்புச் சுவையுடன் பழங்கள் தருகின்றன. 

தென்றல் மெல்ல வீசுகிறது. மேற்கிலிருந்து வீசும் காற்றுக்கு ஏங்குகிறோம். இலைகள் அசைகின்றன. அப்போது மாம்பழங்கள் பொல பொல என உதிர்கின்றன. வைகாசி, ஆனி மாதங்களில் இது நடக்கும். மரத்திலேயே பழுத்த அந்தப் பழங்களின் சுவையே தனி.
பருவத்தால் அன்றிப் பழா என்பார் ஒளவையார். பழங்கள் பழுக்கும் வரை காத்திருக்க வேண்டும். வைகாசி மாதத்தில் வர வேண்டிய மாங்கனிகள் இப்போது கடைகளில் அழகு அழகாய் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைக் காணலாம். 

fruits க்கான பட முடிவுஅதன் இளமஞ்சள் அழகு யாரையும் கொள்ளை கொள்ளும். அறுத்துப் பார்த்தால் வெள்ளை வெள்ளையாய் இருக்கும். பிஞ்சுக் காய்கள் - கொட்டை முற்றாத அந்தக் காய்கள்- செயற்கை உரங்களால் பெரிய உருவங்களைப் பெற்றவை சாப்பிடுபவர் உடல் நலம் கெடுக்கும். குழந்தைகள் என்றால் பாதிப்பு மிகுதி.

கார்பைட் கற்கள் கொண்டு செயற்கை வண்ணத்தைப் பெறுகின்ற இந்த மாங்காய்கள் குறித்து செய்தி இதழ்களில் தொடர்ந்து படங்கள் வெளியிடப்பட்டு எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டு வருகிறது. உணவுக் காப்பாளர் அவற்றைக் கைப்பற்றி அழித்ததாகச் செய்திகள் வருகின்றன. பழங்கள் என்ற பெயரில் விற்கப்படும் இவை உயிருக்கே ஆபத்தை விளைவிக்கின்றன.

கொடிய தண்டனை கொடுக்கப்பட்டால் அன்றிக் கடந்த இருபது ஆண்டுகளாகக் கையாளப்படும் இந்தக் குறுக்குவழி நிற்பதாக இல்லை. இப்போது காய்களை ஏற்றிவிடும் லாரிகளிலேயே கார்பைட் கற்கள் போடப்படுவதாகச் சொல்கிறார்கள்.

பழங்கள் சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. குழந்தைகள், முதல் பெரியவர்கள் வரை சாப்பிடக்கூடிய இயற்கையின் அற்புதம் பழங்கள். காயிலே புளிப்பதும், கனியிலே இனிப்பதும் அதன் அற்புதம். ஒருவருக்குக் குடல் சுத்தம் பெற்றால் நோய் இல்லை. குடல் சுத்தம், உடல் சுத்தம் என்பார்கள்.

மூல நோய் கொண்ட ஒருவர் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை. நண்பர் ஒருவர் பழங்களைச் சாப்பிடச் சொன்னார். இவரும் கிடைக்கும் பழங்களை யெல்லாம் வேறு உணவைக் குறைத்துச் சாப்பிட்டார். முப்பது நாள்களில் மூல நோய் காணாமல் போய்விட்டது.

சர்க்கரை நோய் கொண்டவர்கள் தவிர மற்றவர்கள் பழங்களை வெறுக்கக் காரணம் இல்லை. குளிர்காலத்தில் ஒவ்வாத பழங்களைத் தவிர்க்கலாம். மா, பலா, வாழை என்ற முக்கனிகள் நம் நாட்டின் தனிச்சிறப்பு.
fruits க்கான பட முடிவு

வாழைப்பழம், வேதியியல் திரவம் தெளிக்கப்பட்டுப் பழுக்க வைக்கிறார்களாம். அது அனுமதிக்கப் பட்ட திரவமா? அதன் அளவு என்ன? அத்தகைய பழங்களைச் சாப்பிட்டால் பாதிப்பு வருமா?

திராட்சைப் பழங்கள் பிஞ்சு தொடங்கிப் பழம் ஆகும் வரை பூச்சித் தாக்குதல் இல்லாமல் இருக்க நச்சுக் கொல்லிகளால் தொடர்ந்து மூழ்கடிக்கப்படுகின்றன. சப்போட்டா ஒரு சிறந்த பழம். அதைப் பிஞ்சிலேயே பழுக்க வைப்பதால் உள்ளே கருப்பு நிறமாக இருப்பதைக் காணலாம்.

வெள்ளரி பழுத்தவுடன் வெடித்துவிடும். அதன் தோல் எளிதாக உரித்து எடுத்துவிடலாம். எத்தனை நாள் ஆனாலும் வெடிக்காத வெள்ளரிப்பழம் மலைபோல் குவிக்கப்பட்டுக் கிடப்பதைப் பார்த்தீர்களா? பப்பாளி ஏன் பழுப்பதில்லை? ஆப்பிள் மேல் மெழுகு தடவப் படுகிறதாம்.

காசு நிறைய இருக்கிறது. விலை கொடுக்கத் தயாராக இருக்கிறோம். எனினும், நல்ல பொருள் கிடைக்க வேண்டுமே? எலுமிச்சை, கொய்யா, ஆரஞ்சு, நெல்லி -இவற்றைப் பழுக்க வைக்கக் குறுக்கு வழிகள் தோன்றியதாகத் தெரியவில்லை.

பப்பாளி கண்ணுக்குச் சிறந்தது. ஏ விட்டமின் நிறைந்தது. நாவல்பழம் அரிய மருந்து. இவை எல்லாம் இயற்கையாய்க் கிடைத்தால்தான். வான் உயரத்தில் ஏணி போட்டு, பூச்சிக் கொல்லி தெளிக்கப்படாதது பனை ஒன்றுதான். அதனால் நுங்கு துணிந்து சாப்பிடலாம். கலப்படம் இல்லையெனில் பதனீர் நல்லது.

செக்கச் செவேர் என வெட்டி வைக்கப்பட்டுள்ள தர்ப்பூசணியைக் கண்டு வீட்டிற்கு வாங்கிச் சென்று அதை வெட்டிப் பார்க்க அது வெள்ளை நிறத்தில் இருந்தால் அந்த ஏமாற்றம் தாங்க முடியாது. சில நாள்கள் பொறுத்தால் காய்கள் கனிந்து விடும். அதுவரை காவல், பாதுகாப்புச் செலவு யார் தருவார்கள்? 
fruits க்கான பட முடிவு
வாழை வாழவும் வைக்கும், தாழவும் வைக்கும் என்பார்கள். பழுக்கும் வரை காத்திருந்தால் ஒரு சூறைக் காற்று வந்தால் சேதம் சொல்ல முடியாது. ஒரு பெரிய லாரியைத் தோப்பில் நிறுத்தினால் அந்த லாரியை நிரப்பப் பிஞ்சுகளும் தேவை. பழுத்த பழங்களைக் கொண்டு வந்தால் சேதம் ஆகிவிடும். இவையெல்லாம் விற்பவர்கள் சொல்லக்கூடும். ஓரளவு பழுத்த நிலையில் செங்காய்களைக் கொண்டு வரலாம். அவை சந்தைக்கு வரும்போது கனிந்துவிடும்.

இந்த நாட்டில் எந்தச் சட்டம் சரியாக அமலாக்கப்பட்டுள்ளது? இவ்வாறு காய்களை வெவ்வேறு வகையில் பழம்போல் காட்டச் செய்வது கலப்படச் சட்டத்திற்குப் பொருந்தாது என்று நினைக்கிறேன். ஒவ்வொரு பழத்தையும், சோதனை செய்து நமக்கு நீதி கிடைக்க எந்த அதிகாரி இருக்கிறார்?

எனவே விற்பனையாளர்களே.. சில்லரை பாருங்கள். ஆனால், எல்லோருடைய உடல் நலத்தையும் சிதற விடாதீர்கள். சற்றே பொறுமை கொள்ளுங்கள். 

வாங்குபவர்களே.. விற்பனையாளர்களைக் கேளுங்கள். எந்த முறையில் பழங்கள் பழுக்கின்றன என்று? செயற்கை முறையில், நச்சுப் பொருள்களால் உருவாக்கப்படும் போலிப் பொருள்களைப் புறக்கணியுங்கள். மாற்றம் விரைவில் வரும்.

 மு. செகசோதி

வெள்ளி, 27 மே, 2016

வாசகர் திருவிழா 2016: அறிவுலகக் கொண்டாட்டத்துக்கு நீங்கள் தயாரா?

Return to frontpage


ஜூன் 1-ல் தொடங்குகிறது 

சென்னைப் புத்தகக் காட்சி

ஜூன் 1-ல் தொடங்கவிருக்கிறது புத்தகக் காதலர்களுக்கான கொண்டாட்டம் சென்னைப் புத்தகக் காட்சி 2016. 

சென்னை பெருமழை வெள்ளத்தின் காரணமாக இந்த ஆண்டு ஜனவரியில் நடக்கவிருந்த ‘சென்னை புத்தகக் காட்சி’ ரத்தானது. தொடர்ந்து தேர்வுகள், தேர்தல் என்று தள்ளிப்போய்க்கொண்டிருந்த இந்தப் புத்தகக் காட்சி, ஜூன் 1-ல் நடக்கிறது. இந்த ஆண்டு புத்தகக் காட்சி நடைபெறவிருக்கும் இடம் தீவுத்திடல். 

சுமார் 700 பதிப்பகங்கள், 15 லட்சம் தலைப்புகள் என்று பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் இந்தப் புத்தகக் காட்சி, இந்த முறை ரூ.15 கோடி விற்பனை இலக்கைக் கொண்டிருக்கிறது. 

சென்னை பெருவெள்ளத்தில் புத்தகக் காட்சி தள்ளிப்போனது மட்டும் இழப்பல்ல. 60-க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கு வெள்ளத்தால் ரூ.25 கோடிக்கும் மேல் கடுமையான இழப்பு ஏற்பட்டது. ‘தமிழ் மண்’, ‘லியோ புக்ஸ்’, ‘நர்மதா’, ‘இந்து’ போன்ற பதிப்பகங்கள் தலா ஒரு கோடிக்கும் மேல் இழப்பைச் சந்தித்தன. இவை தவிர, சிறு பதிப்பகங்களுக்கும் சிறு விற்பனையாளர்களுக்கும் ஏற்பட்ட பாதிப்பு மிகுந்த வேதனையளிக்கக்கூடியது. அந்தப் பதிப்பாளர்களுக்கெல்லாம் புத்தகக் காட்சிகளையும் வாசகர்களையும்விட அதிக ஆறுதலை யாரால் தர முடியும்? அதற்கான தருணம் இப்போது வந்திருக்கிறது. 

புத்தகங்கள் என்பவை ஒரு சமூகத்தின் முதன்மையான வளங்கள், ஆதாரங்கள். தொடர்ந்து தன்னை மேம்படுத்திக் கொண்டே செல்லும் சமூகத்தின் அறிவுச் செயல்பாடுகளுக்கு அடிப்படையே புத்தகங்களும் வாசிப்பும்தான். அந்த அறிவுச் செயல்பாடு தொடர்ந்து நடைபெறுவதற்கு அடிப்படை புத்தகங்களை வாங்கும் பழக்கம்தான். புத்தகங்கள் என்பவை லாபம், வியாபாரம் என்பதையெல்லாம் தாண்டிப் பார்க்கப்பட்டாலும் அவற்றை உருவாக்குவதற்கென்றே எண்ணற்ற தொழிலாளர்களைக் கொண்ட பெரும் தொழில்துறை ஒன்று இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்துவிடலாகாது. சற்றே தாமதமானாலும் தற்போது புத்தகக் காட்சி தொடங்கவிருக்கிறது என்பது புத்தகக் காதலர்களுக்கு மட்டும் அல்லாமல், அத்துறையினருக்கும் உத்வேகத்தை அளித்திருக்கிறது. 

சோர்வுறாத பதிப்பாளர்கள் 
 
கடந்த டிசம்பரில் ஏற்பட்ட பின்னடைவால் பதிப்பாளர்கள் நஷ்டமடைந்திருக்கலாம். ஆனால், அவர்கள் சோர்ந்துவிடவில்லை. கடந்த டிசம்பருக்காக விறுவிறுப்புடன் உருவாக்கப்பட்டுவந்த புத்தகங்களில் சில அடுத்தடுத்த மாதங்களில் வந்துவிட்டன. சில புத்தகங்களின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. ஜூனில் நடக்கவிருக்கும் புத்தகக் காட்சிக்குப் பெரும் எண்ணிக்கையிலான நூல்களுடன் பதிப்பகங்கள் தயாராகி வருகின்றன. புத்தகக் காட்சியை ஒட்டிப் புத்தக வெளியீட்டு விழாக்கள் இப்போதே களைகட்ட ஆரம்பித்துவிட்டன. இந்த வாரத்தில் மட்டும் ஐந்துக்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடக்கின்றன. இவற்றில் சுமார் 30 நூல்கள் வெளியிடப்படுகின்றன. சென்னைக்கு வெளியில் வசிக்கும் பல்வேறு எழுத்தாளர்களும் வாசகர்களும் தமிழகத்தின் மாபெரும் புத்தகத் திருவிழாவில் பங்கேற்பதற்காகத் தலைநகருக்கு வரவிருக்கிறார்கள். 

தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் செயலாளர் புகழேந்தியிடம் பேசியபோது, இந்த ஆண்டு புத்தகக் காட்சியின் சிறப்பம்சங்களைப் பட்டியலிட்டார். 

“முன்பைவிடப் பிரமாதமாகவும் பிரம்மாண்டமாகவும் தற்போது ஏற்பாடுகள் செய்திருக்கிறோம். இடவசதி, உணவுவசதி, பார்க்கிங், கழிப்பிட வசதி, ஏ.டி.எம், போன்ற வசதிகள் முன்பைவிட இப்போது மேம்படுத்தப்படும். தீவுத்திடல் என்பது மக்கள் அனைவரும் அறிந்த இடம் என்பதால், சிரமம் இருக்காது என்றாலும் புத்தகக் காட்சிக்கு அருகே பேருந்துகளை நிறுத்துவது குறித்து அரசிடம் கேட்டிருக்கிறோம். 

இதுவரை நடந்த புத்தகக் காட்சிகளைப் பற்றிய ஒரு விமர்சனத்தைப் பலரிடமிருந்தும், குறிப்பாக ‘தி இந்து’ தமிழ் நாளிதழிடமிருந்து நாங்கள் எதிர்கொண்டோம். மேடைப் பேச்சுக்களைத் தவிர்க்கலாமே என்பதுதான் அந்த விமர்சனம். இந்த முறை மேடைப் பேச்சுக்களைத் தவிர்த்துவிட்டு, அதற்குப் பதிலாகப் பல்வேறு புதுமையான, அறிவுபூர்வமான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறோம். 

புத்தகக் காட்சியின் ஒவ்வொரு நாளையும் ஒவ்வொரு கருப்பொருளில் பாரம்பரிய தினம், சென்னை தினம், எழுத்தாளர்கள் சந்திப்பு தினம், குழந்தைகளுக்கான தினம், ஊடக தினம், குறும்படங்கள் தினம் என்றெல்லாம் கொண்டாடவிருக்கிறோம். வாசகர்களுக்கு ரொம்பவும் புதுமையான அனுபவமாக இது இருக்கும். இதில் எழுத்தாளர்களுடனான சந்திப்பு, கலந்துரையாடல், குழந்தைகள் வாசிப்பு, குழந்தைகளின் கலந்துரையாடல், குழந்தைகள் எடுத்த குறும்படங்கள் திரையிடல், அவர்களின் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் நிகழ்வுகள் என்று பிரமாதப்படுத்த விருக்கிறோம்.

டெல்லி புத்தகக் காட்சியில் இருப்பதுபோல் ‘கெஸ்ட் ஆஃப் ஆனர்’ என்ற முறையில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டைக் கவுரவப்படுத்த விருக்கிறோம். இந்த ஆண்டு சிங்கப்பூரைத் தேர்ந்தெடுத்திருக்கிறோம். சிங்கப்பூர் தமிழ் நூல்களுக்காக இலவசமாக ஒரு அரங்கை ஒதுக்கி அங்கே எழுத்தாளர்-வாசகர் சந்திப்புகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மற்ற மொழி அரங்குகளுக்கு வழக்கமான வாடகையைவிடக் குறைந்த வாடகையில் அரங்குகள் ஒதுக்கப்படுவதால் மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, சம்ஸ்கிருதம் போன்ற மொழிகளைச் சேர்ந்த பதிப்பகங்களும் இந்த முறை இடம்பெறுகின்றன.

இந்தப் புத்தகக் காட்சியில் சலுகைக் கட்டணத்தில் பிரெய்ல் புத்தகங்களுக்கு அரங்கு ஒதுக்கப்படுகிறது. வானியல் மீதான குழந்தைகளின் ஆர்வத்துக்கு உத்வேகம் கொடுக்கும் விதத்தில் ‘ஸ்பேஸ் கிட்ஸ்’ என்ற அரங்கும் அமைக்கப்படவிருக்கிறது” என்றார் புகழேந்தி. 

அறிவுத் திருவிழா நம்மைக் கொண்டாடவைக்கக்கூடியது மட்டுமல்ல; நம் வாழ்வை மேம்படுத்தக்கூடியதுமாகும். கொண்டாட்டத்துக்கு நீங்கள் தயாரா?

ரவி சாஸ்திரி



Return to frontpage








முன்னாள் கிரிக்கெட் வீரர்

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆல்ரவுண்டருமான ரவி சாஸ்திரி (Ravi Shastri) பிறந்த தினம் இன்று (மே 27). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: 

# பம்பாயில் பிறந்தவர் (1962). தந்தை ஒரு மருத்துவர். இவரது முழுப்பெயர், ரவிஷங்கர் ஜெயத்ரிதா சாஸ்திரி. மாதுங்காவில் உள்ள டான் பாஸ்கோ உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். இளம் வயதிலேயே கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். பள்ளிகளுக்கு இடையே நடந்த பல போட்டிகளில் வென்றுள்ளார்.

# ஆர். ஏ. போடார் கல்லூரியில் வணிகம் பயின்றார். கல்லூரி இறுதியாண்டில் ரஞ்சிக் கோப்பையில் விளையாடுவதற்குத் தேர்வு செய்யப்பட்டார்.

# முதலில் பந்து வீச்சாளராக ஆடத் தொடங்கி, படிப்படியாக பேட்ஸ்மேனாகவும் திறன் வாய்ந்த பந்து வீச்சாளராகவும் ஆல்ரவுண்டராகப் பரிணமித்தார். நியுசிலாந்துக்கு எதிராக முதன் முதலாக ஆடிய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

# வலது கை ஆட்டக்காரரான இவர், இடது கை சுழல் பந்து வீச்சாளர். ஒரு பேட்ஸ்மேனாக ‘சப்பாத்தி அடி’ (பிளிக் ஆஃப் தி பேட்ஸ்) இவரது தனி அடையாளமாகத் திகழ்ந்தது.

# 1981-ல் இரானி கோப்பையில் 9-101 என்ற கணக்கில் அவர் விக்கெட்டுகளை சாய்ந்தது சுமார் 20 ஆண்டுகாலம் முறியடிக்கப்படாத சாதனையாக நீடித்தது. கராச்சியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தனது முதல் டெஸ்ட் சதத்தை அடித்தார். தொடர்ந்து மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராகவும் சதமடித்தார்.

# இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராகப் புகழ்பெற் றார். 1984-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற போட்டி களிலும் அபாரமாக ஆடினார். அதே ஆண்டு 25 வயதினருக்கு கீழ் உள்ள இந்திய அணிக்குத் தலைமை ஏற்றார். இவரது தலைமை யில் இங்கிலாந்தை இந்தியா, இன்னிங்க்ஸ் வெற்றி கண்டது.

# கட்டாக்கில் கவாஸ்கருடன் இணைந்து முதல் விக்கெட்டுக்கு 188 ரன் எடுத்து உலக சாதனை புரிந்தார். அப்போதிலிருந்து இந்த இணை, வெற்றி இணையாக பல போட்டிகளில் நீடித்தது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் கிர்மானியுடன் இணைந்து எடுத்த 235 பார்ட்னர்ஷிப் ரன்கள் இந்திய அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது. இது இன்றளவும் ஏழாவது விக்கெட்டுக்கான தேசிய சாதனையாக நீடிக்கிறது.

# மேலும் முகம்மது அசாருதீனுடன் இணைந்து ஐந்தாவது விக்கெட்டுக்கான பார்ட்னர்ஷிப்பாக 214 ரன்களும் கூட மற்றொரு சாதனையாகவே நீடிக்கிறது. 123 பந்துகளில் 113 நிமிடங்களில் அவுட்டாகாமல் இரட்டை சதமடித்தது, கிரிக்கெட் வரலாற்றில் மிக வேகமான இரட்டை சதமாகப் பெயர்பெற்றது, ஒரே ஓவர்களில் ஆறு சிக்சர்கள் அடித்தது, ‘சாம்பியன் ஆஃப் சாம்பியன்’ பட்டம் பெற் றது என இவரது சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே போகும்.

# இந்திய அணியின் துணை கேப்டனாக பொறுப்பு வகித்துள்ளார். முட்டியில் ஏற்பட்ட காயத்தால் அடிக்கடி அவதிப்பட்ட இவர் 1994-ல் ஓய்வு பெற்றார். 1995-ல் தொலைக்காட்சி வர்ணனையாளராக அறிமுகமானார். ஐ.சி.சி. மற்றும் பி.சி.சி.ஐ. ஆகியவற்றின் தற்காலிக அலுவல் பணிகளிலும், யுனெஸ்கோ நல்லெண்ணத் தூதுராகவும் பணியாற்றியுள்ளார்.
 
# கிரிக்கெட்டுக்கான அர்ஜுனா விருது, சிறந்த வர்ணனையாளருக்கான விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். இந்தியக் கிரிக்கெட் அணியின் தொழில்நுட்ப இயக்குநர் என்ற பொறுப்பும் வகித்துள்ளார். இன்று 55-வது வயதில் அடியெடுத்து வைக்கும் ரவி சாஸ்திரி, தற்போது வெற்றிகரமான தொலைக்காட்சி வர்ண னையாளராக இயங்கி வருகிறார்.

தெய்வத்தின் குரல்: தலை காக்கும் தர்மம்

Return to frontpage





அரசுக்கும் வேம்புக்கும் கல்யாணம் செய்து அதனடியே விநாயகரையும், நாகராஜனையும் பிரதிஷ்டை செய்வது தொன்றுதொட்ட வழக்கு.

பனிக் காலத்துக்குப் பின் இலை உதிரும்போது இந்த மரங்களைப் பார்த்தால் இலையே இருக்காது. பிள்ளையாரும் நாகராஜனும் மரத்தின் நிழற்குடையில்லாமல் வெளிச்சம் தங்கள்மேல் படுகிற மாதிரி இருப்பார்கள்.

இது, இம்மாதிரி ஆகாசம் பார்க்க சுக உஷ்ணமான சூர்ய வெளிச்சத்தை ஆனந்தமாக அனுபவிக்கிற பருவ காலமாகவே இருக்கிறது. மழையிலே குடை வேண்டும்.

கொளுத்துகிற வெயிலில் குடை வேண்டும். கடும்பனிக் காலத்திலும் இராவேளையில் சூரியன் இல்லாதபோது ஆகாசம் பார்க்க உட்கார்ந்திருக்க முடியாது.

இப்போது சுகோஷ்ணமாக, மித வெப்பமாக இருந்தால் இவர்களை இப்படிச் சூரிய ஒளியில் உட்கார்த்தி வைத்திருந்தாலும், வசந்த காலம் வந்தவுடன், சூரியன் கொஞ்சம் உக்ரமானவுடன், அது அவர்களை உபத்திரவப்படுத்தக் கூடாது என்கிற கரிசனம் இயற்கை அன்னைக்கு வந்துவிடுகிறது.

சூரியன் கடுமையாகும் காலத்தில் துளிர்கள் தழைத்துப் பசுங்குடை பிடிக்கிறாள். இலையுதிர்ப்பது, துளிப்பது எல்லாம் இயற்கை; லோக நியதி; அவை யுகாந்தரங்களாக மாறாமல் நடப்பவை.

பிரபஞ்சத்தில் ஒவ்வொன்றுக்கும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்று நியதி இருக்கிறது. அப்படி அவை நியதிப்படி நடப்பதால்தான் உலக வாழ்க்கை நடக்க முடிகிறது. இல்லாவிட்டால் எல்லாம் நெறிகெட்டுப் போய்விடும்.

அதாவது லோகத்திலுள்ள சமஸ்த ஜீவராசிகளும் சௌக்கியமாக வாழவேண்டும் என்கிற அன்பான எண்ணத்திலேயே அவை ஒன்றோடொன்று ஒத்துப் போவதற்காக இப்படி ஒவ்வொன்றுக்கும் ஒரு தர்மம், நியதி (law) ஈச்வரனால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தன் குழந்தைகளை வெயில் படாமல், மழை படாமல் காப்பாற்ற வேண்டும்; அவர்களுக்கு இள வெயிலின் வெப்பம் தேவையாக இருக்கிறபோது அதைத் தந்து அரவணைக்க வேண்டும் என்கிற அன்பு ஈசுவரனுக்கு இருப்பதால் அதற்கு, அநுசரணையாக இயற்கையை நடத்தி வைத்து மரங்களுக்கு ஒரு நியதியை, தர்மத்தைத் தந்திருக்கிறார்.

இந்த அன்பைப் பெற நமக்கு யோக்யதாம்ஸம் வேண்டாமா? வேண்டும். மரத்துக்கும் மட்டைக்கும் இருக்கிற நியதி நமக்கும் உண்டு.

லோக க்ஷேமத்துக்காக அதை நாம் நடத்திக் காட்டுகிறபோதுதான் ஈசுவரனின் அன்பைப் பெற பாத்தியதையைக் கேட்கலாம். மனிதனுக்காக உள்ள இந்த நியதிக்கே தர்மம் என்று பெயர். இந்த நியதியை மீறவும் மனிதனுக்கு மூளையைத் தந்து சுவாமி விளையாட்டுப் பார்க்கிறார்.

அந்த மூளையை வைத்துக்கொண்டு இவனும் எதை எதையோ சௌக்கியமாக நினைத்துக்கொண்டு, அவற்றுக்காக அலைகிறான். இதில் தனக்கான தர்மத்தையும் மீறுகிறான். ஆனால் இறுதியில் சௌக்கியத்தைத் தருவது தர்மமே.

'லோகம் முழுவதையும் பகவானுடையதாகப் பார்த்து, அதற்கேற்ப எப்படி நடக்க வேண்டுமோ அப்படி நடப்பதே மனுஷ்யர்களின் தர்மம். தனக்கென்று மட்டும் இவன் செய்துகொள்கிற காரியங்கள் இவனை அதர்மத்தில்தான் தள்ளும்.

எனவே, இப்போது இவனுக்கு இருக்கிற சுயநலத்தைக் குறைக்க வேண்டும். இவனுக்கு ஈசுவரனின் நினைப்பை உண்டாக்கி, அவனுடைய உடைமையே உலகமெல்லாம் என்ற அறிவை ஏற்படுத்த வேண்டும்' என்ற அடிப்படையில்தான் சகல மதங்களும் உண்டாகியிருக்கின்றன.

‘உன் ஆசைப்படி நடந்துகொண்டு உனக்கேற்ற சொத்து சேர்த்துக் கொள்' என்று சொல்கிற மதம் எதுவுமே இல்லை.

‘எல்லோரிடமும் அன்பாக இரு; தியாகம் பண்ணு; சேவை பண்ணு' என்று இப்படி எல்லாம் இத்தனை மதங்களும் சொல்கின்றன. இப்படி இவன் வாழ்க்கை நடத்திவிட்டால் அப்புறம் உடம்பு போன பின் உயிரானது அந்தக் கடவுளிடமே போய்ச் சேர்ந்துவிடும்.

எந்த தர்மத்தை நாம் அநுஷ்டிப்பது என்ற குழப்பமே வேண்டாம். பல காலமாகப் பெரியவர்கள் பரம்பரையாக அநுஷ்டித்துவந்த தர்மத்தில் நாம் ஊறியிருக்கிறோம். அநுபவத்தில் அவர்கள் நித்திய ஸெளக்கியத்தை அடைந்திருக்கிறார்கள்.

ஸ்ரீராமனுக்கு வனவாசத்தில் ஏற்பட்ட கஷ்டம், ஆபத்து எல்லாம் பெரியவை. ஊருக்குப் போகும் குழந்தைக்குத் தாயார் கட்டுச் சாதம் கொடுப்பதுபோல், ராமன் வனவாஸம் செல்லும்போது கௌஸல்யையும் செய்தாள்.

‘பதினான்கு வருஷம் கெடாமலிருக்கும் பக்ஷணம் எது? குழந்தைக்கு எதைத் தரலாம்?' என்று நிரம்ப ஆலோசித்தாள் கௌஸல்யை. பிறகு நிரந்தர பக்ஷணமான தர்மத்தைத்தான் கட்டிக் கொடுத்தாள்.

“ராகவா! தைரியத்துடனும் நியமத்துடனும் நீ பாதுகாக்கும் தர்மமே உன்னைப் பாதுகாக்கும்” என்று சொல்லித் தர்மத்தை ராகவனுக்குத் துணை அனுப்பினாள்.

தர்மமே இறுதியில் ராமனுக்கு ஜயத்தைப் பெற்றுத் தந்தது. தர்ம மார்க்கத்தில் ஒருவன் இருந்தால் பிராணிகள்கூட அவனை ஆதரிக்கும்; அதர்மத்தில் விழுந்தால் உடன் பிறந்தவனும் எதிரியாகிவிடுவான் என்பதை ராமாயணம் நிரூபிக்கிறது. ஸ்ரீ ராமனை வானரங்களும் ஆதரித்தன. ராவணனையோ சகோதரன் விபீஷணனும் விட்டு விலகினான்.

தர்மமே தலை காக்கும். பத்துத் தலை ராவணன் விழுந்து நாசமாக, ஸ்ரீராமசந்திரமூர்த்தி விஜயராகவனாகத் தலை நிமிர்ந்து நின்றதற்குக் காரணம் தர்மம் தலை காத்ததுதான். அவரவருக்கும் முன்னோர்களால் அனுஷ்டிக்கப்பட்ட தர்மமே ஒவ்வொரு மதமாயிருக்கிறது. இந்த தர்மத்தை அவரவரும் தைரியமாக—நியாயமாக பின்பற்றிச் சாசுவத சௌக்கியத்தைப் பெறுவீர்களாக!

வியாழன், 26 மே, 2016

கல்வி உதவித்தொகை

 Dinakaran

படிப்புக்குப் பணம் தடையில்லை! உயர்கல்வி படிக்க உதவும் அமைப்புகள்!



படிப்புக்குப் பணம் தடையில்லை! உயர்கல்வி படிக்க உதவும் அமைப்புகள்!

















+2 முடிக்கும் மாணவர்களில் 40% பேர் பொருளாதாரம் மற்றும் குடும்பச் சூழலால் உயர்கல்வியைத் தொட முடியவில்லை என்கிறது ஒரு ஆய்வு. விண்ணப்பிக்கும் எல்லா மாணவர்களுக்கும் கல்விக்கடன் வழங்க வேண்டும் என்று மத்திய அரசு அறிக்கை மேல் அறிக்கை விட்டாலும், சொத்துப் பிணையும், பரிந்துரையும் கொண்டு வருபவருக்கே வங்கிகள் கடன் தருகின்றன. நல்ல மதிப்பெண்கள் பெற்றும், அடுத்தபடியில் ஏற முடியாமல் தவித்து நிற்கும் இம்மாதிரி மாணவர்களைத் தேடிப்பிடித்து, அவர்கள் விரும்பும் படிப்பில், விரும்பும் கல்லூரியில் சேர்த்து, முழுச்செலவையும் ஏற்றுக்கொள்கின்றன சில தன்னார்வ அமைப்புகள். அதுமாதிரியான சில அமைப்புகள்...  ஆனந்தம் இளைஞர் நல இயக்கம் அடித்தட்டுக் குடும்பங்களில் பிறந்து, சுயமுனைப்பால் முன்னேறி இன்று பெரும் தொழில் நிறுவனங்களின் முதலாளிகளாகவும், சர்வதேச நிறுவனங்களின் நிர்வாகி களாகவும் வளர்ந்துள்ள இளைஞர்கள் ஒருங்கிணைந்து உருவாக்கியுள்ள அமைப்பு இது.


கடலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த, அரசுப்பள்ளியில் படித்த, பொருளாதார சிக்கலால் உயர்கல்வியை எட்டிப்பிடிக்க முடியாமல் தவிக்கும், விவசாயக் குடும்பத்துப் பிள்ளைகளை தேர்வுசெய்து, அவர்கள் விரும்பிய படிப்பில் சேர்த்து, முழுச்செலவையும் ஏற்றுக்கொள்கிறது இந்த அமைப்பு. படிப்புக்கு செலவு செய்வதோடு அல்லாமல், ஒவ்வொரு மாணவருக்கும் வழிகாட்டியாக ஒருவரை நியமித்து, தாய்மை உணர்வோடு கவனித்துக் கொள்ளவும் செய்கிறார்கள். படிப்பு முடிந்ததும் பணி வாய்ப்புகள் பெறவும் உதவுகிறார்கள். இந்த ஆண்டு 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.
தொடர்பு முகவரி: ஆனந்தம் இளைஞர் நல அமைப்பு, 15-21, பசுமார்த்தி தெரு, 2வது லேன், ரங்கராஜபுரம், கோடம்பாக்கம், சென்னை-24. மொபைல்; 9551939551



அகரம் பவுண்டேஷன் நடிகர் சூர்யாவால் தொடங்கப்பட்டுள்ள அகரம் பவுண்டேஷன், ஒவ்வொரு ஆண்டும் 200க்கும் மேற்பட்ட மாணவர்களைத் தேர்வு செய்து முழுக் கல்விச்செலவையும் ஏற்றுக்கொள்கிறது. கிராமப்புறங்களைச் சேர்ந்த, அரசுப்பள்ளியில் படித்த, முதல் தலைமுறைப் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். குடும்பப் பின்னணி மற்றும் மாணவர் பற்றிய விரிவான சுய விபரக்குறிப்போடு +2 காலாண்டு, அரையாண்டு (பொதுத்தேர்வு முடிவு வரும் வரை காத்திருக்கத் தேவையில்லை) மதிப்பெண்களை இணைத்து, அகரம் பவுண்டேஷன், 29, விஜய் என்கிளேவ், கிருஷ்ணா தெரு, தி.நகர், சென்னை-17 என்ற முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும். தொடர்பு எண்;  044-43506361, 9841891000 முகவரி பவுண்டேஷன் 



ரமேஷ் என்கிற, சேலத்தைச் சேர்ந்த ஒரு தனி மனிதரால் தொடங்கப்பட்டு, இன்று பெரும் விருட்சமாக வளர்ந்து நிற்கிறது முகவரி பவுண்டேஷன். +2வில் அதிக மதிப்பெண் பெற்று, படிக்க வசதியில்லாத அல்லது பெற்றோர் இல்லாத மாணவர்களைத் தேர்வுசெய்து, அவர்களின் முழுக் கல்விச்செலவையும் ஏற்றுக்கொள்கிறது இந்த அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் 30 மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதுவரை 270 பேர் இவர்களின் அரவணைப்பில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு 30 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த அமைப்பின் தொடர்பு முகவரி; முகவரி பஃவுண்டேஷன், 66/9, கண்ணகி நகர், காமராஜபுரம், வேளச்சேரி, சென்னை-42. மொபைல் எண்; 9566150942



கோல்ட்ஹார்ட் பவுண்டேஷன் அம்மா அல்லது அப்பா இல்லாத, உயர்கல்வி படிக்கவியலாத, நன்கு படிக்கும் மாணவர்களைத் தத்தெடுத்து, மருத்துவம், பொறியியல், கலை அறிவியல், டிப்ளமோ படிப்புகளை படிக்க வைக்கிறது இந்த அமைப்பு. கடந்த ஆண்டு 183 பேர் இந்த அமைப்பின் மூலம் உயர்கல்வியில் இணைந்தார்கள். இந்த கல்வியாண்டில் 200 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். தமிழ்நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.  இந்த அமைப்பின் முகவரி; கோல்ட்ஹார்ட் பவுண்டேஷன், 13,சரவணன் தெரு,  லட்சுமி அம்மன் நகர், எருக்கஞ்சேரி, சென்னை- 118. மொபைல் எண்; 98846 29206



டீம் எவரெஸ்ட் ஐ.டி.துறையில் பணிபுரியும் இளைஞர்கள் இணைந்து நடத்தும் இந்த அமைப்பு, +2 முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்களுக்காக ‘Iam the Change’ என்ற பெயரில் ஒரு கல்வி உதவித்தொகை திட்டத்தை செயல்படுத்துகிறது. இந்தாண்டு 100 பேர் இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். ஒரு மாணவருக்கு ரூ.35,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள கல்வி நிறுவனத்தில் படிப்பவராக இருக்க வேண்டும். அம்மா அல்லது அப்பா இல்லாத மாணவர்களுக்கு முன்னுரிமை. மாநகராட்சிப் பள்ளிகள், அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும். +2வில் 70 சதவீதத்துக்கு மேல் (840க்கு மேல்) மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். இந்த உதவித்தொகைக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள், விடுமுறை நாட்களில் ‘இன்டர்ன்ஷிப்’பாக சமூகசேவை செய்ய வேண்டும். இந்த அமைப்பின் தொடர்பு எண்: 8939612365, 8939912365

5,000 மாணவர்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. உதவித்தொகை


5,000 மாணவர்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. உதவித்தொகை
நன்றி குங்குமச் சிமிழ் கல்வி வேலை வழிகாட்டி

பி.இ., டிப்ளமோ முதலாமாண்டு படிக்கும் 4000 மாணவிகள், 1000 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏ.ஐ.சி.டி.இ. (அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்) நிறுவனம் கல்வி உதவித்தொகைகளை வழங்கவிருக்கிறது. 10 மாதங்களுக்கு மாதம் ரூ.2000 மற்றும் கல்லூரி கல்விக் கட்டணம் அல்லது ரூ.30 ஆயிரம் பணம் ஆகியவை இந்த உதவித்தொகையில் அடங்கும்.

ஏ.ஐ.சி.டி.இ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 2015-16ம் கல்வியாண்டில் சேர்ந்துள்ள, குடும்ப ஆண்டு வருமானம் 6 லட்சத்துக்கு உட்பட்டுள்ள மாணவர்கள் இந்த உதவித் தொகையைப் பெற விண்ணப்பிக்கலாம். www.aicteindia.org  என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.  கூடுதல் விவரங்களுக்கு மேற்கண்ட இணையதளத்தைப் பார்க்கலாம்.




ஆசிரியராக ஆசையா?

 Dinakaran



ஆசிரியராக ஆசையா?
+2 முடித்த மாணவர்கள் D.TEd படிக்கலாம்!
தமிழகம் முழுதும் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் தொடக்கக் கல்வி ஆசிரியருக்கான  பட்டயப் படிப்பில் (D.TEd) சேர விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

ஆசிரியர் பணியைக் கனவாகக் கொண்ட, +2ல் குறைந்தபட்சம் 1200க்கு 540 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் +2ல் தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது. எந்த மொழிப் பாடப் பிரிவுக்கு (தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், உருது) விண்ணப்பிக்கிறாரோ, அந்த மொழியைப் பாடப் பிரிவாகக் கொண்டு படித்திருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களிலும் (DIET), முதன்மைக் கல்வி அலுவலகங்களிலும் 10.6.2016 வரை விநியோகிக்கப்படும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.500. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250. இதை ரொக்கமாகவே செலுத்தலாம். விண்ணப்பம் வாங்கிய மையத்திலேயே 10.6.2016 மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும். 

இணையதளம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படும். அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அல்லது தெரிவு செய்யப்பட்ட மையத்தில் நடக்கும் கலந்தாய்வில் பங்கேற்று ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தை மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். 31.7.2016 அன்று அதிகபட்சம் 30 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர் பழங்குடியினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 35. 

ஆதரவற்றோர் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கணவனை இழந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40. கலப்புத் திருமணத் தம்பதியினர் என்றால் பிற்படுத்தப்பட்டோர் / மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32. ஆதிதிராவிடர் / பழங்குடியினராக இருந்தால் அதிகபட்ச வயது 37. மாற்றுத்திறனாளிகள், முன்னாள் படைவீரரின் குழந்தைகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது. இதற்கான விவரம் விண்ணப்பத்துடன் வழங்கப்படும் கையேட்டில் இருக்கும். கூடுதல் விவரங்களுக்கு: State Council of Educational Research & Training, College Road, DPI Campus, Chennai - 600 006. Phone: 044 28278742, 28268027

                                                                                                   - எம்.நாகமணி






கல்வி உதவித்தொகை பெற உதவும் இணையதளங்கள்

Dinakaran Tamil daily latest breaking news, tamil news, Tamil latest news, news in tamil- dinakaran
கல்வி உதவித்தொகை பெற உதவும் இணையதளங்கள்
கல்விச்செலவை ஈடுகட்ட பெரிதும் உதவியாக இருப்பது உதவித்தொகைகள் தான். மத்திய, மாநில அரசுகள், தனியார் அமைப்புகள், நிறுவனங்கள் மாணவர்களுக்கு ஏராளமான உதவித்தொகைகளை வழங்கி வருகின்றன. ஆனால், அது எல்லோருக்கும் கிடைப்பதில்லை. ஏன்..? அப்படியான உதவித்தொகைகள் வழங்கப்படுவதைக் கூட பல மாணவர்கள் அறிவதில்லை. அப்படியான மாணவர்களுக்காகவே இந்த இணையதளங்கள். இந்த இணையதளங்களில் பள்ளிக்கல்வி முதல், வெளிநாட்டுப் படிப்பு வரை வழங்கப்படும் உதவித்தொகைகள் பற்றி அறியலாம். 

www.scholarshipsinindia.com இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிடைக்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றி ஏராளமான தகவல்கள் இந்த இணையதளத்தில் கொட்டிக் கிடக்கின்றன. கல்வி தொடர்பான பரிசுகள், மாணவர்களுக்கான போட்டிகள், ஆய்வுப் படிப்புகள், இந்தியாவிலுள்ள பல்கலைக்கழகங்கள், தேர்வு முடிவுகளையும் இந்தத் தளத்தில் பார்க்கலாம். தினசரி தகவல்கள் புதுப்பிக்கப்படுகின்றன. கல்வி ஆய்வாளர்கள், நிபுணர்களிடம் மாணவர்கள் கேள்விகள் கேட்கலாம். உடனடியாக பதில் பெற்றுத் தருகிறது இந்தத் தளம். 

www.education.nic.in மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் இணையதளம் இது. இத்தளத்தில் பள்ளிக்கல்வி மற்றும் உயர் கல்வித் துறை தொடர்பான ஏராளமான செய்திகள் உள்ளன. இந்திய அரசாங்கத்தால் மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் உதவித்தொகை அறிவிப்புகள் மட்டுமின்றி பிற நாடுகளால் இந்திய மாணவர்களுக்கு அறிவிக்கப்படும் சலுகைகள், கல்வி உதவித்தொகைகள் பற்றிய விவரங்களும் இத்தளத்தில் வெளியிடப்படுகின்றன. 

www.scholarship-positions.com இளநிலை, முதுநிலை, முனைவர் பட்டப் படிப்பு மற்றும் அதற்குப் பிந்தைய கல்விகளுக்கான உதவித்தொகை நிலவரங்களை தெரிந்துகொள்ள இந்த வலைத்தளம் உதவுகிறது. பல்கலைக்கழக வாரியாக உதவித்தொகை விவரங்கள் மட்டுமின்றி செய்தி மடல்களைப் பெறும் வசதியும் இதில் உண்டு. மேலும் இதில் மாணவர்களுடைய சந்தேகங்களுக்கும் பதில் தரப்படுகிறது. இதைத் தவிர, வெளிநாட்டு படிப்புகள் சம்பந்தமான உதவிக் குறிப்புகள், அதற்கான உதவித்தொகைகள் பற்றிய தகவல்களும் இதில் உண்டு. 

www.studyabroadfunding.com வெளிநாட்டுப் படிப்பிற்கான உதவித்தொகை கோருபவர்களுக்கானது இந்தத் தளம். குறிப்பாக, அமெரிக்காவில் படிப்பதற்கான எல்லா விவரங்களும் இந்தத் தளத்தில் உண்டு. அமெரிக்க பல்கலைக் கழகங்கள், தனியார் நிறுவனங்கள் தரும் உதவித்தொகைகள் பற்றியும் அறியலாம். 

www.eastchance.com இந்த வலைத்தளம் இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை விவரங்களைக் கொண்டிருப்பதோடு, கல்விக்கடன்கள், கோடைகால வகுப்புகள் பற்றிய விவரங்களையும் கொண்டுள்ளது. நாடு வாரியாக விவரங்கள் தெளிவாக தொகுக்கப்பட்டுள்ளன. கையாள்வதும் எளிதாக இருக்கிறது. 

www.momascholarship.gov.in இந்திய சிறுபான்மையினர் நலத்துறை நிர்வகிக்கும் இந்த இணையதளத்தில் சிறுபான்மை சமூக மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் பல்வேறு கல்வி உதவித்தொகைகளைப் பற்றி அறியலாம். தகுதி வாய்ந்த மாணவர்கள் இந்தத் இணையதளத்திலேயே விண்ணப்பிக்கவும் முடியும். 

www.scholarships.gov.in/main.do மத்திய தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை நிர்வகிக்கும் இந்த National Scholarships Portal-லில் மத்திய அரசு வழங்கும் அத்தனை கல்வி உதவித்தொகைத் திட்டங்களும் அப்டேட் செய்யப்படுகின்றன. உதவித்தொகைகள் பெறுவதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும்,  புகார்களையும் இந்தத் தளத்தில் மாணவர்கள் பதிவு செய்யலாம். 

www.vidyalakshmi.co.in கல்விக்கடன் பெறுவதில் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களை களைவதற்காக உருவாக்கப்பட்ட இணையதளம் இது. என்.எஸ்.டி.எல். நிறுவனத்தோடு இணைந்து மத்திய அரசு நடத்தும் இந்தத் தளத்தில் கல்விக்கடன் கேட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். கடன் மறுக்கும்  வங்கிகள் மீது புகார் செய்யலாம். மத்திய அரசு வழங்கும் கல்வி உதவித்தொகைகள் பற்றியும் அறியலாம்.  


- சீ.சுப்பிரமணியன்















சனி, 21 மே, 2016

சிபில் ஸ்கோர் குறைவாக இருந்தால்?

Return to frontpage





கடன் வாங்க விண்ணப்பிக்கும்போது ‘சிபில் ஸ்கோர்’ என்று ஒன்றைச் சொல்வார்கள். இந்த சிபில் ஸ்கோர் குறைவாக உள்ளவர்களுக்கு வீட்டுக் கடன் கிடைக்காமல் போக வாய்ப்புண்டு. வீட்டுக் கடனுக்கு மட்டுமல்ல. தனிநபர்க் கடன்களுக்கும் இது பொருந்தும். வீட்டு உபயோகப் பொருள்கள் போன்ற சிறிய கடன்களுக்கு இது பொருந்தாது. 

சிபில் ஸ்கோர் என்றால் என்ன?

கடன் தகவல் நிறுவனம் (Credit Information Bureau (India) Ltd - CIBIL) 2000-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடன் வாங்குபவர்கள், கிரெடிட் கார்டு உபயோகிப்பவர்கள் ஆகியோர்கள் குறித்த தகவல்களைத் திரட்டுவதுதான் இந்த நிறுவனத்தின் முக்கியப் பணி. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்குவோர் குறித்த தகவல்களை மாதந்தோறும் இந்த நிறுவனத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.

வீடு கட்ட, வாகனம் வாங்க, கல்யாணம் முடிக்க என வாழ்க்கையின் அத்துணை தேவைகளையும் கடன் வாங்கியே எல்லோரும் நிறைவேற்றுகிறோம். இப்படிக் கடன் வாங்கிப் பயனடையும் சிலர் வங்கிக் கடனை முறையாகத் திருப்பிச் செலுத்துவது இல்லை. இம்மாதிரியான விஷயங்களை சிபில் அமைப்பு கண்காணிக்கும். வங்கியில் கடன் பெற்றவர்களின் தகவல்களைச் சம்பந்தப்பட்ட வங்கி, நிதி நிறுவனத்திடம் இருந்து பெற்று, கண்காணித்து வரும். இதை வைத்து இந்த அமைப்பு கடன் தகவல் அறிக்கையை உருவாக்கும். அதனடிப்படையில் நமக்கும் கடன் புள்ளிகள் வழங்கப்படும்.

இந்தப் புள்ளிகளின் அடிப்படையில்தான் நமக்கு மீண்டும் கடன்கள் வழங்கப்படும். இதன் மூலம் கடனைச் செலுத்த முடியாத பொருளாதாரப் பின்னணியில் இருப்பவர்களை வங்கிகள் கண்டறிந்துகொள்ள முடியும். அவர்கள் மீண்டும் கடனுக்கு விண்ணப்பித்தால் அவர்களுக்குக் கடன் கிட்டாது போகும்.

நீங்கள் கடன் முழுமையாகச் செலுத்தி முடிந்ததும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மேற்கண்ட சிபில் நிறுவனத்தில் இணைய மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இப்படி விண்ணப்பிக்கும்போதுதான் நமக்கான கடன் புள்ளிகள் குறித்து நமக்குத் தெரிய வரும். இந்தக் கடன் புள்ளிகளைப் பெற சிபில் அமைப்பு, கட்டணமும் வசூலிக்கிறது.
 
கடன் புள்ளிகள் குறைவாக இருந்தால்?

ஏற்கனவே கடன் வாங்கி முறையாகக் கட்டத் தவறியிருக்கும் பட்சத்தில் மீண்டும் கடனுக்கு விண்ணப்பிக்கும்போது நமக்குக் கடன் கிட்டாமல் போக வாய்ப்புள்ளது. இந்த மாதிரியான நேரங்களில் நீங்கள் உங்களுடன் விண்ணப்பதாரராக உங்கள் கணவனையோ மனைவியையோ சேர்த்துக்கொள்ளலாம். துணை விண்ணப்பதாரரின் கடன் புள்ளிகளையும் சேர்த்தே வங்கிகள் கணக்கிடும் என்பதால் கடன் கிடைப்பது எளிதாகும். இது ஒரு வழி முறை.