நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி
நீங்கள் அச்சப்படும்போது தெளிவாக, சிந்திக்கும் திறனை இழக்கிறீர்கள். தெளிவாகச் சிந்திக்காதபோது தவறான முடிவுகளை எடுக்கிறீர்கள். தவறான முடிவுகளால் பிரச்னை பெரிதாகி, நஷ்டத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு ‘அச்சமாக்குவதும் அழிவைத் தேடிக்கொள்வதும்’ என்று பெயர். இது ஒரு பனிப்பந்து, பனிக்கட்டி மலையிலிருந்து உருண்டு வரும்போது மேலும் மேலும் பனியைச் சேர்த்துக்கொண்டு பெரிதாவதற்கு ஒப்பானதாகும். அழகிய கம்பளிச் சட்டையிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய நூலைப் பிடித்து இழுப்பதனால், முழுச்சட்டையும் பிரிந்து போய்விடுவதைப் போன்றது.
ஆகவே, அமைதியாகச் சிந்தியுங்கள், அமைதியாகப் பேசுங்கள், அமைதியாகச் செயல்படுங்கள். இன்று நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும் நாளை நல்லது நடக்கும் என்று உணருங்கள். கடந்தகால மோசமான நாட்களைக் கடந்து, அமைதியாக இருந்து தெளிவாகச் சிந்தித்து மிகச்சிறந்த நாளை எதிர்பார்த்து அதை அடைந்தவர்தான் வாரிஸ் டைரி என்ற சாதனைப் பெண். வாரிஸ் டைரி சோமாலியாவிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். வறுமை தாண்டவ மாடும் அந்த நாட்டில் மாடு மேய்ப்பது, தண்ணீர் கொண்டு வருவது, வீட்டு வேலைகளைச் செய்வதுதான் பெண்குழந்தைகளின் பணி.
மற்ற ஆப்பிரிக்கப் பெண் குழந்தைகளைப் போலவே ஐந்து வயதில் வாரிஸுக்கு பெண் உறுப்பு சிதைப்பு என்னும் கொடூரத்தைச் சந்திக்க நேர்ந்தது. அம்மாவிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார். ‘கடவுளின் விருப்பம் இதுதான்’ என்றார் அம்மா. ‘கடவுளுக்கு என்னைப் பிடிக்க வேண்டாம். இப்படிப்பட்ட கடவுளை எனக்கும் பிடிக்கவில்லை’ என்ற வாரிஸின் பேச்சு அவருடைய அம்மாவுக்கு கலக்கத்தை உருவாக்கியது. அதன் பிறகு வாரிஸை 13 வயதில் 60 வயதை தாண்டியவருக்கு திருமணம் செய்துவைக்க விரும்பினார் வாரிஸின் அப்பா. வாரிஸால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஒரு நாள் அதிகாலை வெற்றுக்கால்களுடன் வீட்டை விட்டு ஓட ஆரம்பித்தார். இரவு, பகலாகப் பாலைவனத்தில் ஓடிக்கொண்டேயிருந்தார். பல துன்பங்களுக்கு ஆட்பட்டு 300 மைல்களைக் கடந்து தன் சகோதரி வீட்டுக்கு வந்துசேர்ந்தார். அங்கும் மிக மோசமாக நடத்தப்பட்டார். அதன்பிறகு லண்டனிலுள்ள உறவினர் ஒருவருக்கு வீட்டுவேலை செய்வதற்காக ஆட்கள் தேடிக்கொண்டிருந்தபோது தானே வருவதாகச் சொல்லி பணியில் சேர்ந்தார். அங்கு சோஃபியா என்ற குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது மற்றும் வீட்டு வேலைகளைப் பார்ப்பது என நாள் முழுக்க வேலை பார்த்தார்.
அவ்வப்போது கனவு காண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதாவது, நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். கௌரவமாக ஊருக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற கனவாக மனதில் பதியவைத்துக்கொண்டார். அதற்கு மாடலிங் துறையில் நுழையவேண்டும் என விரும்பினார். ஏனெனில் அவருக்குத் தெரிந்த சிலர், ‘நீ அழகாக இருக்கிறாய், பெரிய மாடலாக வருவாய்’ என்று பாராட்டியிருந்தார்கள். இத்தனைக்கும் மாடலிங் என்றால் என்ன என்று கூட வாரிஸுக்கு சரியாக தெரியாது. அதற்காக என்னென்ன கற்றுக்கொள்ள வேண்டும். அத்துறையில் நுழைய என்ன முயற்சிகளை எடுக்க வேண்டும்.
யாரிடம் பேசவேண்டும் என்று எதுவும் அவருக்குத் தெரியவில்லை. ஆனால், ஆசை மட்டும் இருந்துவந்தது. வாரிஸ் ஒரு முறை குழந்தை சோஃபியாவைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். எதிரில் ஒருவர் வந்தார். வாரிஸைப் பார்த்ததும் சட்டென்று நின்றுவிட்டு கூர்ந்து கவனித்தார். அவருடைய பார்வை வாரிஸுக்கு கூச்சத்தைத் தந்தது. ‘இந்த ஆள் எதுக்கு என்னை இப்படிப் பார்க்கிறார்?’ என்று யோசித்த வாரிஸ் சட்டென்று சோஃபியைப் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பி வேகமாக நடந்தார். அதே நேரம் அந்த மனிதரும் வாரிஸை நோக்கி வந்தார். ஏதோ பேச ஆரம்பித்தார்.
வாரிஸுக்குத்தான் ஆங்கிலம் தெரியாதே, அவர் நடுங்கிப்போனார். குடுகுடுவென்று வீட்டை நோக்கி ஓடிவிட்டார். இந்த விஷயம் அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தது. வாரிஸும் சோஃபியும் பள்ளிக்குச் செல்லும் வழியில் அந்த மனிதர் நின்று பேச முயல்வார். அவள் ஏதும் பேசாமல் வீட்டுக்குச் சென்றுவிடுவார். அப்போதும் அந்த மனிதர் விடவில்லை. ஒருநாள் வாரிஸின் பின்னால் நடந்து அவருடைய வீட்டுக்கே வந்து அழைப்புமணியை அடித்துவிட்டார். அப்போது கதவைத் திறந்தவர் வாரிஸின் உறவினர். ‘உங்களுக்கு யார் வேணும்?’ என்றார். ‘இந்த வீட்டிலிருக்கும் பெண்ணிடம் நான் பேச வேண்டும்’ என்றார் அவர்.
‘நீங்க யாரு? எங்கிருந்து வருகிறீர்கள். திடீரென்று வந்து சின்னப் பெண்ணிடம் பேசவேண்டும் என்கிறீர்களே என்ன அர்த்தம்?’ என்றார் உறவினர். அந்த மனிதர், ‘என் பெயர் மால்கம். நான் ஒரு தொழில்முறைப் புகைப்படக் கலைஞர். இந்தப் பெண்ணைப் பள்ளிக்கூடம் போகிற வழியில் பார்த்தேன். ரொம்ப அழகான முகம், அவரைப் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டேன்’ என்றார். ‘அதெல்லாம் முடியாது வெளியே போங்கள்’ என்று கதவைச் சாத்திவிட்டார் வாரிஸின் உறவினர். அதன்பிறகு அந்த மனிதர் வாரிஸைத் தொந்தரவு செய்யவில்லை. இந்த நிலையில் வாரிஸ் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.
அவருடைய உறவினர் சொந்த நாட்டுக்கே திரும்பிவிட்டார். அதன் பிறகு வாரிஸ் ஒரு உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே ஆங்கிலம் கற்றுக்கொண்டார். அவருக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். தன்னம்பிக்கை அதிகரித்தது. ஒரு நாள் அவர் வேலை செய்கிற உணவகத்திற்கு அந்த மனிதர் வந்திருந்தார். அவர் வாரிஸிடம் தனது முகவரி அட்டையைக் கொடுத்தார். அதில் என்ன எழுதியிருந்தது என வாரிஸுக்கு புரியவில்லை. தன்னுடைய தோழி ஒருத்தியிடம் கேட்டபோது, தோழி சொன்னார் ‘இவர் ஒரு ஃபேஷன் போட்டோகிராபர்.
புகைப்படம் எடுத்து மாடலிங் தொழிலில் ஈடுபடுபவர்’ என்று. இதைக் கேட்ட வாரிஸ் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். உடனே அந்த விசிட்டிங் கார்டில் உள்ள தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அந்த தொலைபேசி அழைப்பு, வாரிஸின் வாழ்க்கையை மாற்றியது. மாடலிங் போட்டோகிராபரான அந்த மனிதர் வாரிஸை அழகாக ஒரு புகைப்படமெடுத்தார். அந்தப் புகைப்படம் அவருக்குப் பல புதிய வாய்ப்புகளை உண்டாக்கித் தந்தது. குறைந்த சம்பளத்துக்கு நாள் முழுக்க வேலை பார்த்துச் சிரமப்பட்டுக்கொண்டிருந்த வாரிஸ் உலகின் முன்னணி மாடல்களில் ஒருவராகிப் பெயரும் புகழும், பணமும் சம்பாதித்தார்.
விரைவில் உலகின் சிறந்த மாடலாக மாறினார். புகழ்பெற்ற ஃபேஷன் பத்திரிகைகளை அலங்கரித்தார். ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்திலும் நடித்தார். கனவிலும் எதிர்பார்க்காத வசதியான லண்டன் வாழ்க்கை, உலகப் புகழ் எல்லாம் கிடைத்தாலும் வாரிஸால் பெண் உறுப்புச் சிதைப்பை மறக்க முடியவில்லை. உறுப்புச் சிதைக்கப்பட்ட பல குழந்தைகள் நோய்த் தொற்றால் மரணத்தையும் சந்தித்துவிடுகின்றனர். இதில் வாரிஸ் தன்னுடைய சகோதரியைக் கூட இழந்தார். கன்னித்தன்மையைப் பாதுகாப்பதற்காக செய்யும் இந்தச் சடங்கு ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளிலிருந்து வந்தது.
இதை தடுக்க ‘டெசர்ட் ஃபவுண்டேஷன்’ ஒன்றை ஆரம்பித்தார். இதன் மூலம் பெண் உறுப்புச் சிதைப்பைத் தடுக்கும் பணி மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரம் செய்தார். ஆண்-பெண் சமத்துவம், பெண்ணுரிமை, பெண்கல்வி போன்றவற்றுக்கான போராடும் வாரிஸ்டைரியைப் பாராட்டும் விதமாக 1997-ல் ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதராகவும் நியமிக்கப்பட்டார். வறுமை மிகுந்த சோமாலியாவில் பிறந்து பல இன்னல்களைத் தாண்டி சாதித்து மாடல், நடிகை, எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் என பல முகங்களைக் கொண்ட வாரிஸ் டைரியின் வாழ்க்கை மிகச்சிறந்த தன்னம்பிக்கை ஊட்டும் பாடமாகும்.
மாடலிங் துறையில் நுழையவேண்டும் என்று விரும்பிய இளம்பெண் வாரிஸை அதற்கான வாய்ப்பு தேடிவந்தது. ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல் பயந்தார். அதிலிருந்து விலகி ஓடினார். காரணம், அப்போது அவளிடம் தன்னம்பிக்கை இல்லை. ஆனால், அதன் பிறகு தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு மாடலிங் துறையைப் பற்றித் தெரிந்துகொண்டு, தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறினார். அறியாமை பயமுறுத்தும், முடக்கிப்போடும்.
ஆனால், அதற்கு ஒரே தீர்வு அறிவு மட்டும்தான். எதைப் பற்றியும் கேள்வி கேட்டு மேலும் மேலும் தெரிந்துகொள்ளும்போது அறிவின் சுடரில்தான் நல்ல வெளிச்சம் பிறக்கும்… முன்னேற்றமும் சாத்தியமாகும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வாய்ப்புகள் நம்மைத் தேடிவரும்போது பயத்தைத் தொலைத்துவிட்டு துணிச்சலை வரவழைத்துக்கொண்டால் மட்டுமே வாய்ப்பை நம்மால் பயன்படுத்த முடியும்.