Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதன், 18 ஏப்ரல், 2018

வியர்வை வெப்பம் வெறுப்பு - வெயிலின் மறுபக்கம்!


vikatan.com



ரக்கமற்ற இடி. மிரட்டும் மின்னல். மேகம் கறுத்த அடுத்த நொடி, வீட்டிற்குள் ஒளிந்து கதவைத் தாழிட்டுக் கொள்பவர்கள்தாம் இங்கே அதிகம். ஆயினும், அரைகுறை ஆர்வத்துடன் ஜன்னல் அருகே நின்றுகொண்டு மழையின் அழகை அவர்கள் ஒரு நொடியேனும் ரசிப்பார்கள். “நல்ல மழை. வெயில் குறையும்” என்று மழைக்கு உள்ளிருந்து ஆதரவு கொடுப்பார்கள். இப்படி மழையில் நனையாமலே அதைப் பற்றிச் சிலாகிப்பவர்கள், வெயிலில் நடந்து கொண்டே அதைத் தூற்றுவார்கள். மழை, கவிதை எழுத வைக்கும். வெயில் புலம்ப வைக்கும்! 

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, அடுத்த நூற்றாண்டில் மனித இனத்திற்கு மிகப்பெரிய எதிரியாக இருக்கப்போவது இந்த வெயில்தான். ஜுரம் வந்த பூமிக்கு உரிமையாளர்களான நாம் இதுவரை எந்த வைத்தியமும் செய்யாததால் வருடா வருடம் அதன் வெப்ப நிலை வெப்பமானியின் மெர்குரியை அதன் அதிகபட்ச நிலையிலேயே வைத்து அலறச் செய்து கொண்டிருக்கிறது. உலகின் வெப்பமான வருடங்கள் பட்டியலில் பத்தில் ஒன்பது வருடங்கள், கடந்த 2000ம் ஆண்டிற்குப் பிறகே வந்திருக்கின்றன. செயற்கைக்கோள் புகைப்படங்கள் கூறும் தரவுகளின்படி, பூமி தனது பனிப்போர்வையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்து கொண்டிருக்கிறது. கடலில் அதைக் கரைத்துக் கொண்டிருக்கிறது. கடந்த நூறு வருடங்களில், இதனால் கடல் நீர் மட்டம் ஏழு அங்குலங்கள் (178 மிமீ) உயர்ந்துள்ளது. எப்போதும் இல்லாத அளவுக்கு கார்பன் டை ஆக்ஸைடின் அளவும் காற்றில் அதிகரித்துள்ளது.

வெப்பநிலையும் உயிரினங்களும்

பூமியின் ஒவ்வோர் இடத்திற்கும் ஒவ்வொரு வெப்பநிலை உண்டு. அந்தந்த இடத்தின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப, அங்கிருக்கும் உயிரினங்கள் (மனிதர்கள் உட்பட), தாவரங்கள் தங்கள் உடல் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளும். சிலவகை தாவரங்கள், பூமியின் குறிப்பிட்ட சில இடங்களைத் தவிர வேறு எங்கும் இருக்காது. இதற்குக் காரணம், அந்தத் தாவரம், அந்த வெப்பநிலையில் மட்டுமே உயிர் வாழும் திறன் கொண்டது. இது சில வகை மிருகங்களுக்கும் பொருந்தும். 

மனிதர்களைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட எல்லைவரை, வெளியிலிருக்கும் வெப்பநிலைக்கு ஏற்ப உடல் செயல்பாட்டை மாற்றிக் கொள்ளலாம். நம் உடல்களின் உயிரியல் கடிகாரங்கள் மாற்றங்களை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக் கொள்ளாது. உதாரணத்திற்கு உங்கள் உடல் தினமும் மாலை ஆறு மணிக்கு அலுவலக ஏ.சி அறையிலிருந்து வெளியேறி இரவு ஏழு மணிக்கு உங்கள் வீட்டின் சீதோஷ்ண நிலைக்குத் தள்ளப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம். இதை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, உங்கள் உடல் அதற்கு ஏற்றவாறு அதைத் தகவமைத்து கொள்ளும். நாளடைவில் இரவு ஏழு மணி ஆனதும் உங்கள் உடல், உங்கள் வீட்டு வெப்பத்திற்கு ஏங்க ஆரம்பிக்கும். நீங்கள் திடீரென அன்று ஓவர்டைம் பார்த்தால், மனச்சோர்வு ஏற்படக்கூடும். மலைப்பிரதேசங் களில் வாழ்பவர்களின் உடல்கள் அங்கிருக்கும் குளிருக்கு ஏற்றவாறு தன்னைத் தயார்படுத்தி வைத்திருக்கும். இதனால்தான், அவர்கள் சென்னை போன்ற வெப்ப நகரங்களுக்கு வேலை கிடைத்து வரும்போது அங்கிருக்கும் சூட்டைத் தாங்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சரும நோய் போன்ற பிரச்னைகளைத் தருவித்துக் கொள்கின்றனர்.

வெயிலை நாம் ஏன் வெறுக்கிறோம்? 

வெயிலில் செல்ல நாம் ஏன் இவ்வளவு தயங்குகிறோம்? இதற்கு உளவியல் ரீதியாக அளிக்கப்படும் முதல் பதில் வியர்வை மற்றும் அதனால் உருவாகும் துர்நாற்றம், அரிப்பு மற்றும் சருமக் கேடுகள். நம்மில் பெரும்பாலானோர் சுத்தமாக இருப்பதையே விரும்புகிறோம். வியர்வை, துர்நாற்றம் போன்றவை சுற்றி இருப்பவர்களுக்குச் செய்தி அனுப்பாமல் இருக்க, வாசனைத் திரவியங்களை உபயோகிக்கிறோம். சங்கிலி போல உருவாகும் இந்தச் சங்கதிகள்தான் வெயில் நமக்குத் தரும் எரிச்சலூட்டும் தண்டனைகள். ஆனால், இதோடு வெயிலின் உளவியல் ரீதியான கோரத்தாண்டவம் நிற்பதில்லை. வெப்பத்தினால் அதீத மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகளும் உண்டு. 

“வெயிலினால் உடல் ரீதியாக ஏற்படும் டீஹைட்ரேஷன் (உடல் வறட்சி) போன்ற பிரச்னைகளைத் தாண்டி மன ரீதியாகவும் ஒரு சில பிரச்னைகள் ஏற்படும்’’ என்கிற தகவலுடன் ஆரம்பிக்கிறார் மனநல மருத்துவர் குறிஞ்சி. வெயிலுக்கும் மனநிலைக்குமான தொடர்பு பற்றி அவர் பகிரும் தகவல்கள் கவனிக்கப்பட வேண்டியவை.

‘‘மேலை நாடுகளில், பருவ காலங்களுக்கும் மனித மனநிலைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு குறித்து நிறைய ஆய்வுகள் உண்டு. முக்கியமாக, உஷ்ணமான சீதோஷ்ண நிலை இருக்கும்போது ஒருவித எரிச்சலுடனே நாம் எல்லாக் காரியங்களையும் அணுகுவோம். வெயிலினால் ஏற்படும் உடல் சோர்வு, மனச்சோர்விற்கும் வழி வகுக்கும். மற்ற நாள்களைப்போல நம்முடைய பணிகளை இயல்பாக முடிக்க முடியாமல் போவதால், இது நிகழ்கிறது. இதன் தொடர்ச்சியாக வெயில் மேல் நமக்கு ஏற்படும் கோபத்தை நாம் மற்றவர்களின் மீது வெளிப்படையாகக் காட்டி விடுகிறோம். இத்தகைய சிரமங்கள் ஏற்படாமல் இருக்க, நம்முடைய நாள்களைத் திட்டமிடுதல் என்பது கோடைக்காலத்தில் அவசியமான ஒன்றாகிறது. 

வெயில் தொடங்கும் முன்னரே அலுவலகத்திற்குப் பயணம் செய்வது; வெயில், வாகனப்புகை, காற்று மாசு போன்றவை உச்சத்தில் இருக்கும் நேரங்களில் பயணங்களைத் தவிர்ப்பது போன்றவை பலன் தரும். முன்னர் நாம் ஒரே மூச்சில் செய்து வந்த ஒரு வேலையை வெயில் காலத்தின்போது அவ்வாறு செய்ய முடியாமல் போகலாம். அதற்காக எரிச்சலோ, கோபமோ படாமல் அவ்வப்போது இடைவெளி எடுத்துக்கொள்வது நலம். டீ, காபி போன்றவற்றுக்குப் பதிலாகப் பழச்சாறுகள் குடிப்பது நமக்குப் புத்துணர்ச்சியை ஏற்படுத்தும். டயட் விஷயத்திலும் கவனம் செலுத்தி நீர்ச்சத்துமிக்க உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். உடல்நலமும் மன நலமும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்”.

இன்ஃபோகிராஃபிக்ஸ்: எம்.மகேஷ்
வீட்டைவிட்டு வெளியே வராமல் இருப்பது என்பது இயலாத காரியம்தான். ஆனால், வரப்போகும் வெயிலுக்கு ஏற்றவாறு நம் உடலைத் தகவமைத்துக் கொள்வது என்பது எல்லோரும் செய்ய வேண்டிய ஒன்று, செய்யக் கூடிய ஒன்று. முக்கியமாகச் சரும நோய்கள் அதிகம் ஏற்படும் காலம் இதுதான். அது போல, வேலை செய்யும் இடத்தில் 20 முதல் 27 டிகிரி செல்சியஸ் வரை வெப்பமும், 35 முதல் 60 சதவிகிதம் வரை ஈரப்பதமும் இருந்தால் மட்டுமே நாம் சிரமமின்றி வேலை செய்ய முடியும். உங்கள் உடலால் ஓரளவிற்குத்தான் மாற்றங்களை ஏற்றுக் கொள்ள முடியும். அதற்கு ஏற்றவாறு தன் தேவைகளை மாற்றிக் கொள்ள முடியும். அதைத் தாண்டினால் சருமப் பிரச்னைகளில் ஆரம்பித்துப் பல்வேறு தீங்குகளை எதிர்கொள்ள வேண்டி வரும்.
இந்தப் பிரச்னைகளை எப்படித் தவிர்க்கலாம்? சரும நோய் மருத்துவர் பிரபாவதி விளக்குகிறார்.

“வெயில் காலத்தின்போது இரண்டு வகைப் பிரச்னைகளை நாம் எதிர்கொள்ள வேண்டிவரும். ஒன்று எல்லோருக்கும் ஏற்படும் வியர்க்குரு, படர்தாமரை, தேமல் போன்ற பொதுவான சருமப் பிரச்னைகள்.  வெயில் காலம் அதன் உச்சத்தில் இருக்கும்போது இவை சர்வ சாதாரணமாக ஏற்படும். அதிக நேரம் வெயிலில் செலவழித்தால் வெங்குரு எனப்படும் சரும வெடிப்புகள் ஏற்படும். இதற்குக் காரணம் சூரியனில் இருந்து அதிக அளவில் வெளியேறும் புற ஊதாக் கதிர்கள்தான். அடிக்கும் வெயில் ஒன்றுதான் என்றாலும், ஒவ்வொருவரின் உடல் தன்மையைப் பொறுத்தே பாதிப்பின் வீரியம் இருக்கும். இதிலிருந்து காத்துக்கொள்ள சன்ஸ்க்ரீன் பயன்படுத்தலாம். இதன் முக்கியப் பணியே, நம் சருமத்திற்கும் சூரிய ஒளிக்கும் இடையே ஒரு தடையாக இருப்பதுதான். அதிலும் ரிஃப்ளெக்டார் (Reflector) வகை க்ரீம்கள் விசேஷமானவை. அவற்றில் இருக்கும் ரசாயனங்கள் சூரிய ஒளி நம் சருமத்தை பாதிக்காதபடி திருப்பி அனுப்பி விடுகின்றன. முக்கியமாக, துத்தநாகம் (Zinc) கலந்த க்ரீம்களைத் தேர்ந்தெடுப்பது நல்ல பலன்களைத் தரும். இதனால் பின் விளைவுகள், பக்க விளைவுகள் எதுவும் ஏற்படாது. நீங்கள் எந்த வகை க்ரீம்களை உபயோகித்தாலும் அதன் ஆயுள் இரண்டிலிருந்து மூன்று மணி நேரம்தான். அதன் பிறகு, மீண்டும் அதை உபயோகப்படுத்த வேண்டும். 

வெயிலில் அலைந்தால் சருமம் கறுத்துப்போவது இயற்கைதான். அப்படி நிகழ்ந்தால்தான் உங்கள் எதிர்ப்பு சக்தி நன்றாகச் செயல்படுகிறது என்று அர்த்தம். இந்தக் கருமைதான் அதீத வெப்பத்தில் இருந்து பாதுகாக்கிறது. வெயில் காலம் முடிந்தவுடன் சருமம் அதன் இயல்பு நிலைக்குத் திரும்பி விடும். இதுதவிர ஒரு சாராருக்கு மட்டும் ஏற்படும் பாதிப்புகளும் உண்டு. அவர்களின் உடல் வெயிலுக்கு ஏற்றவாறு தன்னைத் தகவமைத்துக் கொள்ளாது. அப்படிச் செய்து கொண்டாலும் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப நீண்ட காலம் எடுத்துக் கொள்ளும், அல்லது திரும்பவே திரும்பாது. ஒரு சில வினோத சரும நோய்கள் உள்ளவர்களுக்கு இப்படித்தான் வெயிலுக்குப் பிறகு சருமம் இயல்பு நிலைக்குத் திரும்பாது. சருமப் புற்றுநோய் போன்றவை இதன் தொடர்ச்சிதான். முறையான மருத்துவச் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நிலைமை மோசமாவதைத் தவிர்க்கலாம்” என்கிறார் பிரபாவதி.

இருப்பிடத்தைக் குளுமையாக வைத்துக்கொள்ளும் வழிகள்

ஏ.சியை நீங்கள் எந்த அளவிற்குக் குளிராக வைத்திருக்கிறீர்களோ அந்த அளவு அது அறையின் ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். அறையிலுள்ள உங்களின் உடலை மட்டும் அது சும்மா விட்டு விடுமா என்ன? உங்கள் உடலில் தேவையான அளவு இருக்கும் ஈரப்பதத்தையும் அது உறிஞ்சி விடும். இது உங்களுக்கு உடல் சோர்வை ஏற்படுத்தும். முறையாக ஏ.சியைப் பராமரிக்கவில்லை என்றால்கூட அதனால் சுவாசப் பிரச்னைகள் ஏற்படும். ஏ.சி ஃபில்டரை முறையாகச் சுத்தம் செய்து அழுக்கு, தூசி போன்றவற்றை அவ்வப்போது அகற்ற வேண்டும்.

காலை முதல் மாலை வரை ஏ.சி குளிரில் செலவு செய்வதால் உடல் சுறுசுறுப்பை இழக்க நேரிடும். குளிரிலேயே இருந்து பழகிவிட்டால் பின்னர் குறைவான வெயிலைக்கூட நம் உடல் ஏற்றுக்கொள்ள முடியாமல் திணறும். திடீரென வெப்பநிலை மாற்றம் ஏற்படும் போது அதை உடல் ஏற்றுக் கொள்ளாமல் ஒவ்வாமை, சுவாசம் சீரின்மை போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புண்டு. நாள்பட்ட நோய்கள், வாதப் பிரச்னைகள் உள்ளவர்கள் குளிரூட்டப்பட்ட அறையில் அதிகநேரம் செலவழிக்க வேண்டாம். காரணம், அது உடலின் ரத்த அழுத்தத்தைக் குறைவாகவே வைத்திருக்கும். அதற்காக ஏ.சி பயன்படுத்தவே கூடாது என்றில்லை. அதிகக் குளிர் இல்லாமல் மிதமான வெப்பத்தில் பயன்படுத்துதல் நலம்.

இதற்கு மாற்றாக, உங்கள் வீட்டைச் சுற்றி நிறைய செடிகள், மரங்கள் இருப்பது போலப் பார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் வீடு இருக்கும் சுற்றுப்புறத்தில் கொசுக்களைக் கட்டுப்படுத்தி விட்டாலே, நீங்கள் இரவின் இயற்கைக் காற்றில் ஜன்னலைத் திறந்து வைத்து உறங்கலாம். ஏ.சியின் தேவையே இருக்காது. எப்போதும் உடலைக் குளிர்ச்சியாக வைத்துக் கொண்டால், வெயில் காலத்தைச் சுலபமாகக் கடந்து விடலாம்.

- ர.சீனிவாசன்


வியர்வை எதனால் ஏற்படுகிறது?

நாம் இருக்கும் இடத்தின் வெப்பநிலை உயரும் போது, நம் உடலின் வெப்பநிலையும் உயருகிறது. உடனே அந்த அதீத வெப்பநிலையைச் சீர்ப்படுத்த, நம் உடல் ஒரு தெர்மோஸ்டாட் போலச் செயல்பட தொடங்கும். நம் இதயம் அதிக அளவில் ரத்தத்தைப் பம்ப் செய்யத் தொடங்கும். இதனால் நம் சருமத்தில் வியர்வை உற்பத்தியாகிறது. சுற்றி இருக்கும் சீதோஷ்ண நிலைக்கு நம் உடல் ஈடுகொடுக்க முடியாதபோது அது வெப்பம் தொடர்பான பிரச்னைகளுக்குக் காரணமாகிறது.


வெப்பத்தால் நம் உடலுக்கு என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகின்றன?

* நம் உடல் ஏற்றுக்கொள்ள முடியாத அளவு வெப்பநிலை உருவாகும்போது பிரச்னைகள் தலைதூக்குகின்றன. இது உடல் ஆரோக்கியத்தைச் சீர்குலைப்பதோடு நம் அன்றாடச் செயல்களையும் செய்ய விடாமல் தடுக்கின்றது. 

* வெப்பநிலை உயரும் போது உடலிலும், மனதிலும் எரிச்சல் அதிகமாகும். இது பின்னர் கோபமாக வெளிப்படும்.

* கவனக்குறைவு ஏற்படும். யோசித்துச் செயல்பட உடல் மறுக்கும்.

* அதிகத்திறனை எதிர்பார்க்கும் வேலைகள், கடினமான வேலைகளைச் செய்ய முடியாமல் போகும்.


வெப்பப் பக்கவாதம் (Heat Stroke) என்றால் என்ன?

அதிக வெப்பத்தால் ஏற்படும் பிரச்னைகளில் மிகவும் ஆபத்தானது ‘ஹீட் ஸ்ட்ரோக்’ எனப்படும் வெப்பப் பக்கவாதம். இது நிகழும்போது ஒருவரின் உடல் வெப்பநிலை 41 டிகிரி செல்சியஸைத் தாண்டியிருக்கும். முழுவதுமாக அல்லது அரைகுறையாகச் சுயநினைவை இழந்திருப்பார்கள். பல நேரங்களில் இந்த வெப்பப் பக்கவாதம் நிகழும் போது வியர்வை பெரிய அளவில் சுரக்காது. முக்கியமாகக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு இந்த நிலை ஏற்படும். உடனே இதற்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். இல்லையென்றால் உயிரை இழக்கும் நிலைகூட ஏற்படலாம்.

அறிகுறிகள்

* எரிச்சல், சருமம் வறட்சி.

* தலைச்சுற்றல், மயக்க நிலை, தள்ளாடும் நிலை.

* தலைவலி, குழப்பம்.

* சோர்வு.

* தண்ணீர் குடித்தும் அடங்காத தாகம். 

* அதிக உடல் வெப்பநிலை.

* வலிப்பு.

என்னென்ன முதலுதவிகள் செய்ய வேண்டும்?

* உடனே மருத்துவ உதவியை நாட வேண்டும். உதவி வரும் வரை கட்டாயம் ஒருவர் அருகில் இருக்க வேண்டும்.

* மிகவும் குளிர்ந்த, நிழலான பகுதிக்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

* ஷூ, சாக்ஸ், மேலாடை போன்ற தேவையற்ற உடைகளை அகற்றி விடவும். 

* குளிர்ந்த நீரில் நனைத்த துணி அல்லது ஐஸ்கட்டிகள் கொண்டு தலை, முகம் மற்றும் கழுத்திற்கு அழுத்தம் கொடுக்கவும். குளிர்ந்த நீரை முகத்தில் தெளித்து விடவும்.

* தண்ணீர், பழச்சாறு போன்றவற்றைக் குடிக்கச் சொல்லி வற்புறுத்த வேண்டாம்.

மாத்திரைகள் - அறியாதவை ஆயிரம்

vikatan.com


‘காய்ச்சலோ, தலைவலியோ, அரசு மருத்துவமனைக்குப் போனால் நீண்ட வரிசை  நிற்கும். தனியார் மருத்துவமனையில், ‘அந்த டெஸ்ட் எடு’, ‘இந்த டெஸ்ட் எடு’ என்று பெரிதாக இழுத்து விடுவார்கள்... இருக்கவே இருக்கிறது மெடிக்கல் ஷாப்... ரெண்டு மாத்திரையை வாங்கிப்போட்டால் முடிந்தது...’- இப்படித்தான் இருக்கிறது, நம்மில் பெரும்பாலானோரின் எண்ணம். கை, கால் வலியா, காய்ச்சலா, தலைவலியா, வாய்வுக்கோளாறா... எதுவாக இருந்தாலும் தட்டையாக இருக்கும் அந்த வெள்ளை மாத்திரை இடம் பெற்றுவிடுகிறது. சிலர், உடம்பில் எந்தப் பிரச்னை என்றாலும், ‘அந்த வெள்ளை மாத்திரையைக் கொடுங்கள்’ என்று கேட்டு வாங்கிச் சாப்பிடுகிறார்கள். 

சிலர் பல வருடங்களுக்கு முன்னால் காய்ச்சல் என்று மருத்துவரிடம் சென்றிருப்பார்கள். அப்போது அவர் எழுதித்தந்த மருந்துச் சீட்டைப்  பத்திரமாக வைத்துக்கொண்டு, எப்போது காய்ச்சல் வந்தாலும் அதையே கொண்டுபோய் நீட்டி மாத்திரை வாங்கிச் சாப்பிடுவார்கள். பிறருக்குக் காய்ச்சல் வந்தால்கூட அந்த மருந்தைச் சீட்டைக் கொடுத்துக் கருணை காட்டுவார்கள். 

இப்படி, மருத்துவரின் குறிப்பில்லாமல், ஆலோசனை இல்லாமல் நேரடியாக மருந்துக் கடைகளில்  மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடலாமா? 

*  பழைய மருந்துச் சீட்டைப் பயன்படுத்தி மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடலாமா? 

*  சாப்பாட்டுக்கு முன், சாப்பாட்டுக்குப் பின் என்று மருத்துவர்கள் தெளிவாக எழுதிக் கொடுத்தாலும்கூட, ‘அதெல்லாம் ஒண்ணும் பண்ணாது’, ‘மறந்துட்டேன் தப்பில்லை’ என்று மாத்திரைகளை மாற்றி மாற்றிச் சாப்பிடலாமா?

*  ‘எனக்கு டீயோடு மாத்திரை போட்டாதான் உடனே கேக்கும்’, ‘என் மகனெல்லாம் வெறும் வாயிலயே மாத்திரையை மிட்டாய் மாதிரி கடிச்சுத் தின்பான்...’ - இது போன்று நம் இஷ்டத்துக்குக் குளிர்ந்த நீர், டீ, காபி போன்றவற்றுடன் மாத்திரைகளைச் சாப்பிடலாமா?

*  மாத்திரைகளைப் போட்டுக்கொண்டால் போதும், வழிமுறைகள் எல்லாம் அவசியம் இல்லையென்று அலட்சியமாக இருக்கலாமா?

இப்படி மாத்திரைகள் எடுத்துக்கொள்வதில் நமக்குள்ள அத்தனை சந்தேகங்களுக்கும் விளக்கங்கள் தருகிறார் பொது மருத்துவர் தேவராஜன்.


ப்ரிஸ்க்ரிப்ஷன் அவசியம்

மருத்துவரின் பரிந்துரையில்லாமல் நேரடியாக மருந்துக்கடைகளில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவது மிகவும் ஆபத்து. சாதாரணப் பிரச்னைதானே என்று நினைத்துத் தம் விருப்பத்துக்கு மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடுவதால் தேவையில்லாத பல பக்கவிளைவுகள் உண்டாகும். இதுவே வழக்கமாகும் பட்சத்தில் கிட்னி பாதிப்பு, குடல் பாதிப்பு ஏற்பட்டு மரணம் நிகழவும் வாய்ப்புள்ளது.

சாப்பாட்டுக்கு முன்... சாப்பாட்டுக்குப் பின்...?

குறிப்பட்ட ஒரு மாத்திரையை எந்த வேளை, எந்த அளவு சாப்பிட வேண்டும் என்பது முக்கியம். இதை நோயின் தன்மை கருதி மருத்துவர் தீர்மானிப்பார். சாப்பாட்டுக்கு முன்னதாகச் சாப்பிடவேண்டிய மாத்திரைகள், சாப்பாட்டுக்குப் பின்னர் சாப்பிட வேண்டிய மாத்திரைகள் இருக்கின்றன. உடலியல் செயல்பாடுகளைக் கருத்தில் கொண்டு எந்த வேளையில் சாப்பிட வேண்டும் என்று தீர்மானிக்கப்படும். 

உதாரணமாக, ஸ்டீராய்டு மாத்திரைகள், வலி நிவாரணி மாத்திரைகள் எல்லாம் மிகவும் வீரியம் மிக்கவை. இவற்றை ஏதேனும் உணவு சாப்பிட்ட பின்னர்தான் விழுங்கவேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. அதுபோல, வாந்தி, வயிற்றெரிச்சல் போன்ற பிரச்னைகளுக்காகக் கொடுக்கப்படும் மாத்திரை, மருந்துகளை வெறும் வயிற்றில்தான் சாப்பிடவேண்டும். வீக்கங்களைக் குறைப்பதற்கான மாத்திரைகளைச் சாப்பாட்டுக்கு முன்பாக எடுத்துக்கொண்டால்தான் வேலை செய்யும்.

சாப்பாட்டுக்குப் பின்னர் எடுத்துக் கொண்டால் அவை என்சைமாக மாறிவிடும். சில நேரங்களில் மாத்திரைகளைச் சாப்பிட்ட பின் நெஞ்செரிச்சல், வயிற்றெரிச்சல் போன்ற பிரச்னைகள் ஏற்படும். அதைத் தடுப்பதற்காக மருத்துவர்களே சில துணை மாத்திரைகளை வழங்குவார்கள். உதாரணமாக, ஆன்டிபயாக்டிக் மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது ‘ஆன்டாசிடு’ (Antacid) போன்ற மாத்திரைகளைச் சேர்த்து வழங்குவார்கள். மருத்துவர் வழங்காத பட்சத்தில் நாமே மருத்துவரிடம் பிரச்னையைச் சொல்லிப் பரிந்துரைக்கச் சொல்லலாம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் இதுபோன்ற மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவது, பிரச்னைக்காக எடுத்துக் கொள்ளும் மாத்திரைகளின் வீரியத்தைக் கெடுத்துவிடும்.

பாலிபார்மசி

பல உடல்நலக் கோளாறுகள் இருக்கும்பட்சத்தில் மாத்திரைகளை மொத்தமாக எடுத்துக் கொள்ளும்போது மிகவும் கவனமாக இருக்கவேண்டும். இதை ‘பாலிபார்மசி’ (Polypharmacy) என்பார்கள். இப்படிப் பல நோய்களுக் கான மாத்திரைகளை ஒரே நேரத்தில் சேர்த்துச் சாப்பிடுவது சில சமயம் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தி விடும். காம்பினேஷன்கள் ஏற்றுக் கொள்ளாமல் போய், மாத்திரையின் வீரியம் அதிகமாகிவிடும். அல்லது குறைத்துவிடும்.



காலாவதியில் கவனம்!

மாத்திரைகளைச் சாப்பிடுவதற்கு முன், அதன் எக்ஸ்பைரி தேதியைக் கவனிக்க வேண்டும். எப்போதோ வாங்கிய மாத்திரைகளையெல்லாம் வீணாகிவிடுமே என்று சிலர் பயன்படுத்துவார்கள். இது மிகப்பெரும் விபரீதம். சில நேரங்களில் மாத்திரை அட்டையில் தேதி தெரியாது. அப்படி, தயாரித்த தேதி தெரியாத மாத்திரைகளைக் கண்டிப்பாகச் சாப்பிடக்கூடாது. காலாவதி ஆன மாத்திரைகளைச் சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிப்படையும். மாத்திரை அட்டைகளைப் பிரிக்கும்போதே தேதி அச்சிடப்பட்டுள்ள பாகத்தை விட்டு மற்ற பகுதிகளை முதலில் பயன்படுத்த வேண்டும். அல்லது காலாவதித் தேதியை டைரிகளில் குறித்து வைத்துக்கொள்ளலாம். 

ஆன்டிபயாடிக் அலர்ட்!

ஆன்டிபயாக்டிக் மாத்திரைகள் மூன்று நாள்களுக்குக் கொடுக்கப் பட்டால் மூன்று நாள்களுக்கான மாத்திரைகளையும் சாப்பிடவேண்டும். உடல்நிலை சரியாகிவிட்டது என்று மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்தி விடக்கூடாது. அப்படிப் பாதியிலேயே நிறுத்தினால், அடுத்தமுறை அதே ஆன்டிபயாக்டிக் மாத்திரைகள் பயன்தராது. வீரியமுள்ள வேறு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். இப்படி அடிக்கடி ஆன்டிபயாக்டிக் மருந்துகளை மாற்றி எடுத்துக்கொள்வது நல்லதல்ல. அப்படி மாற்றினால், இரண்டு, மூன்று ஆன்டிபயாக்டிக் சேர்த்து எடுத்துக் கொள்ளவேண்டிய சூழல் வரும். உதாரணத்துக்கு, காசநோய் பாதிப்புள்ளவர் ஒன்பது மாதங்களுக்கு மூன்று மாத்திரைகளைச் சேர்த்துச் சாப்பிட வேண்டும். பாதியில் நிறுத்தினால் பாதிப்பு அதிகமாகிவிடும். 

நினைவில் கொள்ள வேண்டியவை

ஒரு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துவிட்டு, வேறொரு மருத்துவரிடம் சிகிச்சைக்குச் செல்வதாக இருந்தால், பழைய ரிப்போர்ட்டுகள், மாத்திரைச் சீட்டுக்களை அவசியம் எடுத்துச் செல்லவேண்டும். ஒருவருக்குப் பரிந்துரைக்கப்பட்ட மாத்திரைகளை மற்றவர்கள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதுமட்டுமல்ல, எப்போதோ மருத்துவரிடம் பெறப்பட்ட குறிப்புகளை வைத்தும் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடக்கூடாது. குழந்தைகள் விளையாடும் இடங்களில் மருந்து மாத்திரைகளை வைக்கக்கூடாது. அலமாரிகள், பீரோக்களில் பூட்டி வைக்கவேண்டும். 

சிலருக்கு சில மருந்து, மாத்திரைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும். அந்த மாதிரியான மாத்திரை, மருந்துகளைத் தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும். மற்றொரு முறை அந்த மாத்திரைகளை மருத்துவர் பரிந்துரை செய்தால் மருத்துவரிடம் முன்னெச்சரிக்கையாகச் சொல்லிவிடவேண்டும். குளிர்ந்த நீர், டீ, காபி, சுடுநீரோடுச் சேர்த்து மாத்திரைகளைச் சாப்பிடக்கூடாது. சாதாரணத் தண்ணீரில் மட்டுமே எடுத்துக் கொள்ளவேண்டும். மாற்று மருந்து எடுத்துக் கொள்பவர்கள் அதனுடன் அலோபதி மருந்துகள் எடுத்துக்கொள்ள லாம், எந்தப் பாதிப்பும் இல்லை.

மாத்திரைகள் வாங்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனிக்க வேண்டும்? 

தமிழ்நாடு மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலர் மருத்துவர் சிவபாலன்

“மருந்துகளைப் பொறுத்தவரை, ‘பாதுகாப்பானது’ என்று எதுவும் கிடையாது. ஒவ்வொரு மருந்துக்குமே ரிஸ்க், பெனிஃபிட் என்ற இரண்டு நிலைகள் உள்ளன. பயன்படுத்தும் விதத்தையும், அளவையும் பொறுத்துதான் ரிஸ்க்கா, பெனிஃபிட்டா என்பது தெரியும். மாத்திரை, மருந்துகளில் ‘பிரிஸ்கிரிப்ஷன் டிரக்ஸ்’ (Prescription drugs) ‘நான் பிரிஸ்கிரிப்ஷன் டிரக்ஸ்’ (Non Prescription drugs) என்று இருவகைகள் உள்ளன. ‘நான் பிரிஸ்கிரிப்ஷன் டிரக்ஸ்’ மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இல்லாமலே மருந்துக்கடைகளில் பெறமுடியும். ஆனால், அவற்றையும்கூட மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வழங்கவேண்டாம் என்று மருந்துக்கடைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

மக்கள், மாத்திரை, மருந்துகள் வாங்கும்போது கண்டிப்பாக அதற்கான ரசீது பெறவேண்டும். தவறான ஒரு மாத்திரை விற்கப்பட்டால் ரசீது இருந்தால்தான் அதை ஆதாரப்பூர்வமாகக் கண்டறிய முடியும். எக்ஸ்பைரி டேட்டை பார்த்துதான் மாத்திரைகள் வாங்கவேண்டும். அதுபோல மருந்துக்கடைகளில் சில மாத்திரைகளை ஒட்டுமொத்த ஸ்டிரிப்பாகத்தான் வழங்குவார்கள். அது முழுக்க மக்களின் மீதுள்ள அக்கறையினால் மட்டுமே. 

இரண்டு, மூன்று மாத்திரைகளை மட்டும் தனியே பிரித்துக் கொடுக்கும்போது மாத்திரைகளின் பெயர், காலாவதித் தேதி ஆகியவை அதில் இல்லாமல் போக வாய்ப்புள்ளது. மேலும், இரண்டு, மூன்று மாத்திரைகளை மட்டும் தனியாக வெட்டியெடுக்கும்போது மற்ற மாத்திரைகளில் விரிசல் ஏற்பட்டு அதனுள் காற்று உட்புகுந்துவிடும். மாத்திரைகளின் வீரியம் குறைந்துவிடும். எனினும், மொத்தமாக விலை கொடுத்து வாங்குவது மக்களுக்குச் சிரமமாக இருக்கிறது. அதனால், இதற்கான மாற்றுவழியை தற்போது யோசித்துவருகிறோம்” என்கிறார்.

- இரா.செந்தில் குமார்


குழந்தைகளுக்கு மாத்திரைகள் கொடுக்கும்போது கவனிக்க வேண்டியவை

விளக்குகிறார் குழந்தை நல மருத்துவர் செல்வம்

“குழந்தைகளுக்குக் காய்ச்சல் வந்துவிட்டால் பெற்றோர் பதறிப் போவார்கள். காய்ச்சல் உடனே சரியாக வேண்டும் என்பதற்காக மாத்திரை, மருந்துகளைக் கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். அது தவறு. நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறைதான் மருந்துகளைக் கொடுக்க வேண்டும். அதிகபட்சம் ஒரு நாளைக்கு ஐந்துமுறை கொடுக்கலாம். அடிக்கடி மருந்துகள் கொடுத்தால் குழந்தையின் சிறுநீரகம் பாதிப்படைய வாய்ப்புள்ளது. பெரியவர்களுக்காக வாங்கிய மாத்திரைகளைக் குழந்தைகளுக்கு, பாதியாக்கிச் சிலர் கொடுப்பார்கள். அதுவும் ஆபத்து. மருத்துவர் பரிந்துரைத்த வீரிய அளவில் மாத்திரை இருக்கிறதா என்பதைக் கவனித்துக் கொடுக்கவேண்டும்.’’

மாத்திரைகள் சாப்பிடும்போது பெண்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்

விளக்குகிறார் மகளிர் நல மருத்துவர் ஸ்ரீகலா

“மருந்துக் கடைகளையே மருத்துவமனையாகப் பயன்படுத்தும் வழக்கம் அதிகளவில் இருக்கிறது. டெங்கு காய்ச்சல் பரவியபோது, பலர் மருத்துவமனைக்குச் செல்லாமல் தங்கள் விருப்பத்துக்கு மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டார்கள். அதனால் உயிரிழப்புகள் அதிகமாயின.  உதாரணமாக, நெஞ்செரிச்சல் ஏற்பட்டால் வாயுக்கோளாறு என்று மருந்துக்கடையில் மாத்திரை வாங்கிச் சாப்பிடுவார்கள். சிலர் குளிர்பானங்கள் வாங்கிக் குடிப்பார்கள். அது வேறு பிரச்னைகளுக்கான அறிகுறியாகக் கூட இருக்கலாம். வலி வித்தியாசமாக இருந்தால், காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுக வேண்டும். விருப்பத்துக்கு மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடக்கூடாது.
தலைவலியோ, வயிற்றுவலியோ... எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அடிக்கடி தலைவலி வந்தால் மருத்துவரிடம் செல்ல வேண்டும். அதேபோல வயிற்று வலி தொடர்ந்தால் அது குடல்வால் பிரச்னையாக இருக்கலாம். காய்ச்சல் என்பது கூட ஏதோ ஒரு பிரச்னைக்கான அறிகுறிதான். எனவே அதற்கு மருந்தகத்தில் மாத்திரைகள் எடுத்துக்கொண்டு சாதாரணமாகக் கடந்துவிடக்கூடாது.

பெண்களைப் பொறுத்தவரைக் காய்ச்சல், தலைவலி, முதுகுவலி, உடல்வலி ஆகிய பிரச்னைகளுக்கு நேரடியாக மருந்துக் கடைகளில் மாத்திரைகள் வாங்கிச் சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. சிலர் அதைச் தினசரி வாடிக்கையாகவே வைத்திருக்கிறார்கள். அடிக்கடி மாத்திரை சாப்பிடுவதால் சிறுநீரகம் பாதிக்கப்படலாம். பெண்கள் மாதவிடாய்க் காலங்களில் வலியைக் கட்டுப்படுத்த மாத்திரைகள் சாப்பிடுவார்கள். அதையும் மருத்துவரின் பரிந்துரையின்றி அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. குழந்தை பெற்ற தாய்மார்கள் இந்த விஷயத்தில் கவனமாக இருக்கவேண்டும். மாதவிடாய் தள்ளிப்போனால் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது ஆபத்து என்பதை உணர வேண்டும்.

ஜிம்முக்குப் போகலாமா?! நன்றி குங்குமம் டாக்டர்

Dinakaran Daily news



வழிகாட்டி

ஜிம் என்பது பணக்காரர்களும், மாடல்களும், நடிகர்களும் மட்டுமே செல்ல வேண்டிய இடம் என்ற நம்பிக்கை இப்போது மாறிவிட்டது. ஃபிட்னஸ் பற்றிய அக்கறை மக்களிடம் அதிகரித்து வரும் சூழலால் எல்லா தரப்பினரும், எல்லா வயதினரும் ஜிம்முக்குச் செல்வதை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. ஜிம்முக்குப் போவது அவசியமா? என்னென்ன பயிற்சிகள் அங்கு கற்றுக் கொடுப்பார்கள்? என்ன மாதிரியான ஜிம்மைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? சென்னையின் பிரபல ஜிம் ஒன்றின் கிளை மேலாளரான ராணியிடம் பேசினோம்.

‘‘உடற்பயிற்சி என்பது உடலை மட்டுமல்லாமல் மனதையும் உற்சாகப்படுத்தக்கூடியது. உடலின் ஃபிட்னஸ் அழகான வடிவத்தையும், ஆரோக்கியமான உடலையும் தரும். இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகளின் செயல்பாட்டை சீராக்கும். இவையெல்லாம் அறிவியல்ரீதியான உண்மைகள். ஏனெனில் உடலின் ஃபிட்னஸ் வாழ்க்கையின் ஒவ்வொரு தேவைக்கும் உதவுகிறது.

பலரும் ஃபிட்னஸ் என்றால் வெறும் எடை குறைப்பு என்று நினைத்துக் கொள்கிறார்கள். உடலின் வளைவுத் தன்மையான ஃபிளெக்ஸிபிலிட்டி, ஸ்டாமினா, தசைகளின் வலிமை, நோய் எதிர்ப்பு சக்தி, உடலின் தாங்குதிறன் போன்றவற்றை அதிகரிப்பதுதான் ஃபிட்னஸ்.
உடலின் எடையை குறைப்பதை காட்டிலும் உடலின் கொழுப்பைக் குறைப்பது மிகவும் அவசியம். உடலின் எடையைக் குறைத்து தசையின் எடையைக் கூட்ட வேண்டும். உடற்பயிற்சி செய்ய முடியாதபட்சத்தில் வாக்கிங் செல்லலாம். ஆனால், வாக்கிங் மட்டுமே முழுமையான ஃபிட்னஸுக்கு உதவாது. ஏனெனில், வாக்கிங்கில் கலோரி மட்டும்தான் குறையும்.

அதுவே ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்யும்போது கலோரியைக் குறைக்க உதவுவது மட்டுமின்றி, வயிற்றுத்தசை, கைகளின் தசை, கால்களின் தசை என ஒவ்வொரு தசைக்குமான உடற்பயிற்சி கிடைக்கும். அதற்கேற்ற கருவிகளும் ஜிம்மில் தனித்தனியே இருக்கும்.

இத்துடன் வாரத்தில் ஒருநாள் ஜிம்மிலேயே யோகா கற்றுக் கொள்ளலாம். அதனால் மனமும் ரிலாக்ஸ் ஆகும். மசாஜ் வசதிகளும் உள்ள ஜிம்மாக இருந்தால் உடல்வலியின் போது பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஸ்டீம் வசதி கொண்ட ஜிம்மாக இருந்தால் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், உடல் அழகைக் கூட்டிக் கொள்ளவும், உடலின் கெட்ட நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கவும் உதவும். முக்கியமாக, இறந்த செல்களை நீக்க ஸ்டீம் வசதி பயன்படும். இதையும் மாதம் ஒருமுறை செய்து கொள்ளலாம்.

ஜும்பா டான்ஸ் போன்றவற்றை வாரம் ஒருமுறை பயிற்சி செய்யும்போது, கலோரி குறைவதுடன்,  சந்தோஷமாக ஆட்டம் பாட்டத்துடன் அதனை செய்யும்போது ரிலாக்ஸாகவும் உணர முடியும். உடல் வலிமைக்கான பயிற்சிகளுக்கான கருவிகளால் தசைகளை டோன் செய்துகொள்ள முடியும். ஆரம்ப கட்டத்தில் உள்ளவர்கள் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, நீச்சல் மற்றும் சைக்கிளிங் போன்ற கார்டியோ பயிற்சிகளை செய்யலாம்.

என்னதான் நாம் பயிற்சி செய்தாலும் ஜிம் போன்ற இடங்களில் நம் உடலுக்குத் தேவையான முறையான உடற்பயிற்சிகள் அளிக்கப்படும். அங்கே உள்ள ஃபிட்னஸ் பயிற்சியாளர்கள், பிஸியோதெரபிஸ்ட், டயட்டீஷியன் என பல்வேறு நிபுணர்கள் கவனமான முறையில் நம் உடல் எடையை குறைக்க உதவுவதோடு நம்மை ஃபிட்டாக வைத்திருக்கவும் உதவுவார்கள்.

ஜிம்முக்குப் போவது காஸ்ட்லியானது என்றும் நினைக்கிறார்கள். அப்படி இல்லை. மாதம் ஒரு சிறிய தொகையை இதற்காக செலுத்தி யார் வேண்டுமானாலும் தன் உடலை பத்திரமாக பார்த்துக்கொள்ள முடியும்’’ என்று வழிகாட்டுகிறார்.உணவியல் நிபுணர் கலைவாணியிடம் ஜிம்முக்கு வருகிறவர்களின் எதிர்பார்ப்புகள் பற்றிக் கேட்டோம்...

‘‘பொதுவாக ஜிம்முக்கு வருகிறவர்கள் எடைக் குறைப்புக்காகவே வருகிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் எடை குறைப்புக்கு உடற்பயிற்சியோடு டயட்டையும் பின்பற்ற வேண்டியது அவசியம். எனவே, அவரவர் உடல்நிலைக்கு தகுந்தவாறு டயட் சார்ட் பின்பற்ற வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் சுரைக்காய் ஜூஸ், பூசணிக்காய் ஜூஸ், கற்றாழை ஜூஸ் என பல விதமான டயட் சார்ட்கள் உண்டு.

ஜிம்மில் உடற்பயிற்சி செய்வதோடு இந்த டயட் சார்ட்டையும் பின்பற்றும்போது உடனடியாக நல்ல பலன் கிடைக்கும். எண்ணெய் பொருட்களை தவிர்த்து பழங்கள் காய்கறிகளை சாப்பிடுவதனால் வயிறு தொடர்பான பிரச்னைகளும் சரியாகும்’’ என்கிற கலைவாணி, பெண்கள் உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் பற்றி சில விஷயங்களை அழுத்தமாகக் கூறுகிறார்.

‘‘பெண்களுக்கு இளவயதில் உடல் மேல் இருக்கும் அக்கறை பெரும்பாலும் திருமணத்துக்குப் பின்னர் இருப்பதில்லை. குழந்தைகள், கணவர் என குடும்பத்தின் மேல் காட்டும் அக்கறையில் சிறுபகுதியையும் தன் உடலின் மேல் காண்பிப்பதில்லை. பெண்கள் வேலைக்குச் செல்வதும் இன்றைய தேதியில் அத்தியாவசியமாகிவிட்டது. வீடு, அலுவலகம் என எந்நேரமும் பிஸியாக இருப்பதால் உடலின் மீதான கவனம் குறைந்துவிடுகிறது.

தற்போது பெரும்பாலும் அலுவலக வேலைகளும் கணினி முன் உட்கார்ந்து செய்வதாகவே இருக்கிறது. மிக்ஸி, கிரைண்டர், வாஷிங் மெஷின் போன்ற நவீன சாதனங்கள் வந்த பிறகு உடலுக்கான பயிற்சி பெண்களுக்குக் குறைந்துவிட்டது. வாகன வசதியும் பெண்களின் நடையைப் பெருமளவு குறைத்துவிட்டது. நிலைமை இப்படி இருப்பதால் பெண்களின் உடல் எடை கூடுவதில் அதிசயம் இல்லை. அதனால்தான் இன்றைய பெண்கள் உடல்ரீதியான பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள்.

முந்தைய காலத்தில் Communicable disease எனப்படும் தொற்றுநோய்களால் இறந்தவர்கள்தான் அதிகம். ஆனால், தற்போது மன அழுத்தம் போன்ற காரணங்களால் ஏற்படும் Non communicable disease காரணமாக இறப்பவர்களே அதிகம் என்று பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது.
குடும்பத்தையே பார்த்துக்கொள்ளும் பெண்கள் தங்கள் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்வது அவசியம்.

அதற்காக குறைந்தபட்சம் தினமும் ஒரு மணி நேரமாவது செலவிடுதல் நல்லது. கார்டியோ உடற்பயிற்சிகள் கலோரியைக் குறைக்க உதவும். பெண்கள் நன்றாக இருந்தால்தான் உங்கள் குடும்ப உறுப்பினர்களையும் நன்றாக வைத்திருக்க முடியும். தற்போது இந்த விழிப்புணர்வு பெண்களிடம் ஓரளவு ஏற்பட்டிருக்கிறது என்பதற்கு ஜிம்முக்கு வருகை தரும் பெண்களின் எண்ணிக்கையே ஓர் உதாரணம்’’ என்கிறார்.

ஜிம்முக்கு வருகிற பெண்கள் என்ன சொல்கிறார்கள்...

ரம்யா

இன்றைய தினசரி வாழ்வில் பெண்களும் உடற்பயிற்சி செய்ய வேண்டியது மிகவும் அவசியம். ஜிம்முக்கு வந்த பிறகு ரொம்பவும் ஆரோக்கியமாக உணர்கிறேன். உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் உற்சாகமா இருக்கிறது. இங்கே குழுவாக இணைந்து செயல்படும் வாய்ப்பு இருக்கிறது. எல்லாருடனும் செய்யும்போது மத்தவங்களை பார்த்து நம்மளும் இன்னும் நல்லா ஒர்க் அவுட் பண்ணணும் என்கிற நினைப்பு வருகிறது. மற்ற பெண்களோட நட்பா பழகறதும் மனசுக்கு மகிழ்ச்சியாக இருக்கு. வாழ்க்கை இலகுவா இருக்கிற மாதிரி உணர முடியுது.

சிந்துஜா

எனர்ஜி லெவல் மெயின்டெயின் ஆகுது. கழுத்து வலி, மூட்டுவலி குறைந்து ரொம்ப வலுவாகவும், ஃபிட்டாகவும் உணர்கிறேன். டயட்டீஷியன் மூலமாக அவரவர்க்கு தகுந்தபடி டயட் லிஸ்ட்டும் கொடுக்கிறாங்க. பேலன்ஸ்ட் டயட்டை ஃபாலோ பண்றேன். அதனால் உடலும் மனமும் ரொம்ப ஆரோக்யமாக இருக்கு.

என்னைப் பார்த்து வீட்டில் இருப்பவர்களும் காய்கறிகள், பழங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஆரோக்யமா சாப்பிட ஆரம்பிச்சிருக்காங்க. நான் வேலை செய்யும் இடத்திலும் சில பேர் ஜிம்மோட அவசியத்தை உணர ஆரம்பிச்சிருக்காங்க. ஸ்டீம், மசாஜ் போன்ற வசதிகள் இருப்பதால் அதெல்லாம் செய்துகொள்ளும்போது உடல் மற்றும் மனதுக்கு ரிலாக்ஸாக உணர முடியுது.

வனஜா

நகரத்துப் பெண்கள் கிராமத்துப் பெண்கள் போல குனிஞ்சு நிமிர்ந்து வேலை செய்றது ரொம்ப குறைவு. நகரப்பெண்களுக்கு பெரிதாக உடற்பயிற்சி கிடையாது. அதனால் உடல் எடை கூடி பல பிரச்னைகள் வருகிறது. அதனால் இப்ப ஃபிட்னஸ் கான்ஷியஸ் பெரும்பாலான பெண்களிடம் வந்திருக்கிறது. இந்த மாதிரி ஜிம்முக்கு வரும்போது ஃபிட்னஸ் கிடைக்குது. மன அழுத்தம் குறையுது. உற்சாகமாக உணர முடியுது.

பெண்களுக்கான தனி ஜிம்மாக இருப்பதால் சுதந்திரமாக இருக்க முடியுது. நேரத்தை ரொம்ப உபயோகமாக செலவழிக்கிறோம். வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டுமில்லாமல் வீட்டில் இருக்கும் பெண்களும் ஜிம்முக்கு வந்து உடற்பயிற்சி செய்ய வேண்டும். மாரத்தான் போன்றவை நடத்தப்படுவதால் வெளியிலும் போய் உடற்பயிற்சி செய்யும்போது வித்தியாசமாக உணர முடியுது. எனக்கு ஜிம்முக்கு வந்ததற்குப் பிறகு மூட்டுவலி, முதுகுவலி இதெல்லாம் குறைந்திருக்கிறது.

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

ஒரு நாள் போதும் தலைநகரில் சுற்றலாம்

Dinakaran Daily news



என்னதான் திட்டமிட்டு சுற்றுலா பயணத்தை தொடங்கினாலும் நேரத்தை சரிவர கடைபிடிக்க முடியவில்லை என்றால் எல்லா இடங்களையும் பார்ப்பது கேள்விக் குறிதான். அதை மட்டும் பார்த்திருந்தால் நன்றாக இருக்கும்’ என்றும், ‘எங்கே ஒரு இடத்திற்கு போனால் சட்டென்று கிளம்பினால்தானே’ குடும்ப உறுப்பினர்களை  ஊர் திரும்பும் போதும் திட்டிக் கொண்டிருந்தால் சென்ற சுற்றுலா இனிக்காது.

அதுமட்டுமல்ல சுற்றுலா சென்ற இடங்களில் அவற்றின் அழகில் மனதை பறிக் கொடுத்து நின்றாலும் தாமதம். அதனை தவிர்க்க உதவுவதுதான் சுற்றுலா நிறுவனங்கள் நடத்தும் சுற்றுலா பயணங்கள். அது ஒருநாள், 2 நாள், 3 நாள், ஒருவாரம், 10 நாட்கள் என விதவிதமாக இருக்கின்றன. சென்னை உள்ளிட்ட மாநில தலைநகர்களில் உள்ள சுற்றுலா தலங்களை ஒரே நாளில் பார்க்க சுற்றுலா நிறுவனங்கள் உதவுகின்றன. இதை மாநில அரசின் சுற்றுலா கழகங்கள் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் நடத்துகின்றன.

இந்த சுற்றுலா மூலம் ஒரு நாளில் தலைநகர்களில் உள்ள முக்கிய இடங்களை பார்த்து விடலாம். என்ன கடகடவென்று பார்க்க வேண்டியிருக்கும். சுற்றுலா வழிகாட்டிகள் எப்போதும் திருப்பதி கோவில் ‘ஜர்கண்டி’ ஆட்கள் மாதிரி ‘சீக்கிரம்.... சீக்கிரம்’ என்று விரட்டுவார்கள். 

ஆனால், வெறும் கட்டிடங்களை பார்த்து ஆச்சர்யப்படும் நமக்கு சுற்றுலா வழிகாட்டிகள் விவரங்களுடன் விளக்கும் போது கட்டிடம் கட்டிய காலம் முதல் எல்லாம் திரைப்படம் போல் காட்சிகளாக விரியும். இந்தப்பகுதியில் சென்னை, ஐதராபாத், பெங்களூர், அமராவதி, திருவனந்தபுரம், புதுடெல்லி தலைநகர் சுற்றுலா, அவற்றுக்கான சேவை தரும் அந்தந்த மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகங்களை எப்படி தொடர்புக் கொள்வது, கட்டணம உள்ளிட்ட விவரங்களை பார்க்கலாம்.

சென்னை

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை, அரசு அருங்காட்சியகம், வள்ளுவர் கோட்டம், பாம்பு பண்ணை, கபாலீசுவரர் கோவில், மெரீனா கடற்கரை ஆகியவற்றுக்கு அரைநாள் சுற்றுலா அழைத்துச் செல்கிறது. காலை 8 மணி முதல் ஒரு மணி வரை அல்லது பகல் 1.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை என 2 வகையான அரை நாள் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுகிறது. 

இணையதளத்தில் குறிப்பிட்டிருந்தபடி கட்டணம் ஒரு ஆளுக்கு 250 ரூபாய் கட்டணம். இது தவிர ஒருநாள் சுற்றுலாவாக மாமல்லபுரம், காஞ்சிபுரம், முட்டுக்காடு படகு இல்லம், விஜிபி தங்க கடற்கரை  அழைத்துச் செல்கின்றனர். இது தவிர மாங்காடு, திருவேற்காடு, பூந்தமல்லி, திருமுல்லைவாயில், செம்புலிவரம், பஞ்சட்டி, மேலூர், திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் உள்ள அம்மன் கோவில்களுக்கு 550 ரூபாய் கட்டணத்தில் அழைத்துச் செல்லும் ஒரு நாள் சக்தி சுற்றுலா, கோயம்பேடு, திருமழிசை, பொன்விளைந்தகளத்தூர், திருபெரும்புதூர், பழையசீவரம், திருமலை வையாவூர், மாமல்லபுரம், திருவிடந்தை ஆகிய பெருமாள் கோவில்களுக்கு 600 ரூபாய் கட்டணத்தில் ஒருநாள் திருமால் தரிசன சுற்றுலாவும் அழைத்துச் செல்கின்றனர்.

மேலும் தகவல்களுக்கு..... 
www.tamilnadutourism.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

ஐதராபாத்

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஒருநாள் சுற்றுலாவாக காலை 7.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை 350 ரூபாய் கட்டணத்தில் பிர்லா மந்திர், சவ்மகாலா பேலஸ், சார்மினார், மெக்கா மசூதி, லாட் பஜார், சலார்ஜங் அருங்காட்சியகம், நிஜாம் ஜூப்ளி பெவுலியன், கோல்ெகாண்டா கோட்டை,  குதூப் ஷாகி டோம்ப், லும்பினி பார்க் ஆகியவற்றை பார்க்கலாம். முக்கிய இடங்களில் அனுமதி கட்டணம் தனி.

மேலும் தகவல்களுக்கு... 
www.telanganatourism.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

திருவனந்தபுரம்

கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் பத்மநாபசாமி கோவில், குதிரமாளிகை அரண்மனை, கோவளம் கடற்கரை, சங்குமுகம் கடற்கரை, வேளி சுற்றுலா கிராமம், விழிஞ்ஞம் கலங்கரை விளக்கம், அருங்காட்சியகம், உயிரியல் பூங்கா ஆகியவை பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள். கேரளா சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இவற்றில் பெரும்பான்மையான இடங்களை காலை 8 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும், பகல் 1.30 மணி முதல் இரவு 7 மணி வரையில் என 2 அரை நாள் சுற்றுலாக அழைத்துச் செல்கிறது. ஒரு ஆளுக்கு கட்டணம் 350 ரூபாய். தனியார் சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் 400 ரூபாய் வசூலிக்கின்றனர்.

திருவனந்தபுரத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். இது தவிர கொச்சியில் கடல் கழிமுக நீர் வழித்தடத்தில்(பேக் வாட்டர்) ஒருநாள் சுற்றுலா அழைத்துச் செல்கின்றனர். கரையோரங்களில் உள்ள ஆலப்புழை, கோட்டயம் மாவட்டங்களின் கிராமங்களை பார்த்து ரசிக்கலாம். காலை 8.15 மணி முதல் மாலை 6 மணி வரை அழைத்துச் செல்லும் இந்த சுற்றுலாவுக்கு மதியம் சைவ உணவுடன் 1250 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. அரைநாள் சுற்றுலாவும் உண்டு.

மேலும் தகவல்களுக்கு..... 
www.keralatourism.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

பெங்களூர்

கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் உள்ள இடங்களான ராஜராஜேஸ்வரி கோவில், பன்னார்கட்டா உயிரியல் பூங்கா, சித்ரகலா பரிஷத், பிளாண்டேரியம், கர்நாடகா சட்டசபையான விதன்சவுதா, உயர்நீதிமன்றம் இஸ்கான் கோவில், கவிகங்காதரஸ்வரா கோவில், காளை கோவில், திப்பு கோடைக்கால அரண்மனை, லால்பாக் பூங்கா, அருங்காட்சியகம், கப்பன் பூங்கா ஆகியவற்றை காலை 8 மணி முதல் இரவு 7.30 மணி வரை ஒருநாள் சுற்றுலாவாக  பார்வையிட 450 ரூபாய்.

மேலும் தகவல்களுக்கு..... 
www.karnatakatourism.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

அமராவதி

ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரான அமராவதி இன்னும் முழுமையான தலைநகராக மாறவில்லஆனாலும் அங்குள்ள சிவன் கோவில், பிரமாண்ட புத்தர் சிலையுடன் கூடிய விகார், அருங்காட்சியங்கள் ஆகியவை உள்ளன. இன்னும் இரண்டு ஆண்டுகள் கழித்துச் சென்றால் நகரம் நன்றாக வளர்ச்சியடைந்திருப்பதை பார்ப்பதுடன் 126 அடி உயர டாக்டர் அம்பேத்கர் சிலையையும் பார்க்கலாம். இப்போது சுற்றுலா அருகில் உள்ள விஜயவாடாவில் இருந்துதான்  ஆந்திர சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இயக்குகிறது. 

ஒரு நாள் சுற்றுலாவில் கனகதுர்கை கோவில், பல்லவர் கால உண்டவல்லி குகைக் கோவில், அமராவதி, பவானி தீவு, மங்களகிரி ஆகியவற்றை பார்க்க ஒருவருக்கு 400 ரூபாய் கட்டணம். ஆந்திராவில் இன்னொரு முக்கிய சுற்றுலாவாக இருப்பது ராஜமுந்திரி போலாவரத்தில் இருந்து பேருந்தில் தொடங்கி பட்டிசீமாவில் இருந்து பாபிகொண்டலு வரை சுற்றுலா படகில் மேற்கொள்ளும் பயணம். 
கோதாவரி ஆற்றில் மேற்கொள்ளப்படும் அந்த சுற்றுலா கரையோரத்தில் உள்ள கோவில்கள், ஆசிரமங்கள் ஆகியவற்றை பார்க்க அழைத்துச் செல்கின்றனர். காலை 6.30மணி முதல் இரவு 8 மணி வரை மேற்கொள்ளப்படும் இந்த சுற்றுலாவுக்கு காலை, மதிய உணவுடன் சேர்த்து 665 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

மேலும் தகவல்களுக்கு..... 
www.aptdc.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

டெல்லி

இந்தியாவின் தலைநகரான டெல்லி புதுடெல்லி, பழைய டெல்லி, துக்ளகாபாத் என 7 நகரங்களின் நகரம் என்று அழைக்கப்படுகிறது. டெல்லி முழுக்க முகலாய அரசர்கள் அவருக்கு முன்பு ஆண்ட கில்ஜிகள், அடிமை வம்சத்தவர்களின் அரண்மனைகள், கோட்டைகள்தான். அங்கு குறைந்த கட்டணத்தில் மெட்ரோ ரயில் இயக்கப்படுவதால் யாருடைய துணையுமின்றி தனியாக சுற்றுவது சாத்தியம். ஆனாலும் டெல்லி மாநில சுற்றுலா கழகம் நடத்தும் அரை, ஒரு நாள் சுற்றுலாவில் டெல்லியின் பெரும்பகுதியை பார்க்கலாம். 

காலை 9 மணி முதல் பகல் 1.45 மணி வரை ஒருவருக்கு 275 ரூபாய் கட்டணத்தில் பிர்லா மந்திர், குதுப்மினார், ேலாட்டஸ் கோவில், காந்தி சுட்டுக் கொள்ளப்பட்ட வீடு, காட்சியகம் ஆகியவற்றுடன் போகும் வழியில் இந்தியா கேட், நாடாளுமன்றம், வெளிநாட்டு தூதரங்கள் ஆகியவற்றையும், பகல் 2.15 மணி முதல் மாலை 6 மணி வரை 275 ரூபாய் கட்டணத்தில் செங்கோட்டை, பழையக்கோட்டை, காந்தி சமாதி, ஹூமாயூன் சமாதி ஆகியவற்றுடன் போகும் வழியில் பெரஸ்ஷா கோட்லா, இந்திரா காந்தி விளையாட்டரங்கம், இந்திரா காந்தி சமாதி, புராண கில்லா(கோட்டை)  பார்க்கலாம்.  

இரண்டு சுற்றுலாவையும் ஒருநாள் முழுக்க பார்க்க  450 ரூபாய் கட்டணம். டெல்லியை தவிர மற்ற ஊர்களில் ஏசி பஸ்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். அதேபோல் முக்கிய இடங்களை பார்க்கச் செல்லும் போது அனுமதி சீட்டும் நாம்தான் வாங்க வேண்டும். மேலும் சுற்றுலா வழிக்காட்டிகளுக்கும் சில இடங்களில் விதிகளின்படியும், சில இடங்களில் விருப்பத்தின் அடிப்படையிலும் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

மேலும் தகவல்களுக்கு..... 
www.delhitourism.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.