Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

வியாழன், 29 ஜூன், 2017

தினமும் கண்ணை கவனி!

Dinakaran Daily news




நீங்கள் தினமும் கம்ப்யூட்டரோடு உறவாடுகிறீர்களா? அப்படியெனில் உங்களுக்கு கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் ஏற்படலாம். இது என்ன பிரச்னை, எப்படி தவிர்க்கலாம்?சென்ற நூற்றாண்டை எலெக்ட்ரிகல் யுகம் என்று சொன்னால் இந்த நூற்றாண்டை எலக்ட்ரானிக்ஸ் யுகம் என்று சொல்லலாம். எலெக்ட்ரானிக்ஸ் துறையில் ஏற்பட்ட புரட்சி நம் நவீன வாழ்வையே அதிரடியாக மாற்றி அமைத்துள்ளது. இன்று கைகளில் செல்போன் இல்லாதவர்களே இல்லை. டி.வி., கணிப்பொறி, லேப்டாப், டேப்லெட் என விதவிதமான எலெக்ட்ரானிக்ஸ் ஒளிர்திரைகளைப் பார்த்துக்கொண்டே இருக்கிறோம். பின்னிரவு இரண்டு மூன்று மணி வரை கொட்ட கொட்ட விழித்தபடி வாட்ஸப் அரட்டையிலும் யூடியூப் வீடியோவிலும் மூழ்கியிருக்கிறோம்.

இரவு தாமதமாக தூங்கி, காலையில் தாமதமாக எழுந்து என இந்த எலெக்ட்ரானிக்ஸ் யுகத்தில் நம் வாழ்க்கைமுறையே தலைகீழாக மாறிப்போய் உள்ளது. கணிப்பொறியில் வேலைசெய்பவர்கள் சராசரியாக ஒரு நாளின் பாதிக்கு மேற்பட்ட நேரத்தை கணிப்பொறி திரையை வெறிப்பதிலேயே செலவழிக்கிறார்கள். இப்படி ஓயாது கண்களுக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருப்பது நல்லதா என்றால் நல்லது இல்லை என்கிறார்கள் கண் மருத்துவர்கள். ஒரு நாளின் பெரும்பான்மையான நேரம் எலெக்ட்ரானிக் ஒளிர்திரைகளையே நோக்கிக்கொண்டிருப்பதால் கண்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் நிறைய உள்ளன. இதை, கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் (Computer Vision Syndrome - CVS) என்கிறார்கள்.

கண்களுக்கு ஏன் பாதிப்பு?

நம் கண்கள் லட்சக்கணக்கான வருடங்களாக இயற்கையான ஒளியைப் பார்த்துப் பார்த்து பரிணாமம் அடைந்தவை. அது போன்ற ஒளிக்கும் காட்சிகளுக்கும் மட்டுமே இயல்பாக பழக்கப்பட்டவை. பொதுவாக, அதிக ஒளி உமிழும் காட்சிகளைப் பார்க்கும்போது நம் கண்கள் கூசும். மேலும், எந்த ஒரு பொருளைக் கூர்ந்து நோக்கும்போதும் நம் கண்ணின் மணிகள் விரிவடையும். கேமரா லென்ஸ் ஒன்று ஜூம் ஆவதைப் போன்றதுதான் இது. இப்படி ஜூம் ஆகும் கண்கள் மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும். டி.வி., கம்ப்யூட்டர் திரைகளைப் பார்க்கும்போது வெகுநேரம் கண்கள் ஜூம் ஆன நிலையிலேயே இருக்க நேர்கிறது. இதனால், கண்ணின் சுருங்கிவிரியும் தன்மை பாதிக்கப்படுகிறது. 

மேலும், சராசரியாக நமது இமைகள் ஒரு நிமிடத்துக்கு 15-20 முறை சிமிட்டும் இயல்பு உடையவை. கண் சிமிட்டுதல் ஒரு அனிச்சை செயல்பாடு. கண்ணில் உள்ள ஈரப்பதம் சீராக இருப்பதற்காகவும் கண்களைக் காப்பதற்காகவும் இயற்கை செய்திருக்கும் அழகான ஏற்பாடு கண் சிமிட்டல். கம்ப்யூட்டர் திரைகளை அதிக நேரம் நோக்கும்போது இமைகளைச் சிமிட்டுவது பாதிக்கப்படுகிறது. இதனாலும் கண்களுக்கு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

என்னமாதிரியான பாதிப்புகள்?

கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது என்றாலும் கண் நரம்புகள் பாதிக்கப்படுவதால் பார்வைக் குறைபாடு, கண்களில் நீர்வடிதல், அரிப்பு, எரிச்சல் உட்பட பல்வேறு பாதிப்புகள் இதனால் ஏற்படுகின்றன. மேலும், பின் இரவுகளில் எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டு மொபைல் திரை, டி.வி பார்ப்பது கண்களைப் பாதிக்கும். நள்ளிரவின் ஆழ்ந்த இருளில் நாம் உறங்கும்போது மெலட்டோனின் எனும் ஹார்மோன் சுரக்கிறது. நம் மூளையை உற்சாகமாக வைத்துக்கொள்ளவும், உடலின் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளை சீராகப் பராமரிக்கவும் மிகவும் அவசியமான ஹார்மோன் இது. வண்டியை ஓவராயில் செய்வது போல மூளையையும் அதன்மூலம் ஒட்டுமொத்த உடலையும் ஓவராயில் செய்து பசி, தூக்கம், ஜீரணம் போன்ற அடிப்படையான செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன் இது. பின்னிரவுகளில் செல்போன், டி.வி, கம்ப்யூட்டர் பார்ப்பதால் இந்த மெலட்டோனின் சுரப்பு பாதிக்கப்படுகிறது. இதனால் தேவையில்லாத உடல், மனநலப் பிரச்னைகள் உருவாகின்றன.
சரி, இவ்வளவு பிரச்னை ஏற்படும் என்பதற்காக கணிப்பொறி, டி.வி., மொபைல் என எதையும் பயன்படுத்தாமல் இருக்க முடியுமா?
நிச்சயம் முடியாது. நாம் ஒன்றும் கற்காலத்தில் வாழவில்லை. ஆனால், இந்த பொருட்களை எப்படிப் பயன்படுத்த வேண்டும். கண்களை பாதுகாப்பதற்கான எளிய ட்ரிக்ஸ் என்னென்ன என்று தெரிந்துகொண்டால் சி.வி.எஸ் பாதிப்பில் இருந்து முழுமையாகத் தப்பலாம். 

லைட் ப்ளீஸ்

கணிப்பொறியைப் பயன்படுத்தும் அறையில் போதுமான வெளிச்சம் இருக்க வேண்டியது அவசியம். இருட்டான, வெளிச்சமற்ற அறையிலோ அதிக வெளிச்சம் நிறைந்த அறையிலோ கணிப்பொறியைப் பயன்படுத்த வேண்டாம். மேலும், கம்ப்யூட்டர் திரைக்குப் பக்கவாட்டில் இருந்து வெளிச்சம் வரும்படியாக இருப்பது நல்லது. தலைக்கு நேர் மேலே இருந்து வெளிச்சம் விழும்படியாக அமர்வதை இயன்றவரை தவிர்ப்பது கண்களுக்கு நல்லது. அளவான வெளிச்சம் உள்ள ஃப்ளோரோசன்ட், எல்.இ.டி பல்புகளைப் பயன்படுத்தலாம்.

கிளார் வேண்டாம் 

கம்ப்யூட்டர் திரையில் கிளார் விழுவதைத் தவிர்க்க வேண்டியது மிகவும் முக்கியம். கம்ப்யூட்டர் திரைக்குப் பின்னால் ஜன்னல், கதவு, மின்சார விளக்கு இருந்தால், அதன் வெளிச்சம் காரணமாகத் திரையில் கிளார் அடிக்கும். இப்படி, கிளார் விழும் மானிட்டரைத் தொடர்ந்து பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்படுகின்றன. கண்ணாடி அணியும் பழக்கம் உள்ளவர்களுக்கும் கிளார் பிரச்னை ஏற்படக்கூடும். `ஆன்டிரிஃப்ளெக்டிவ்’ கண்ணாடிகள் கிளாரைத் தடுக்கும் இயல்புடையவை என்பதால் அவற்றைப் பயன்படுத்தலாம்.

எல்சிடி/எல்இடி மானிட்டருக்கு
மாறுங்கள் 

பழைய மாடலான சி.ஆர்.டி (கேத்தோட் ரே ட்யூப்) மானிட்டர்களில் ஆன்டிரிஃப்ளெக்டிவ் கோட்டிங் இருக்காது. இதனால் சிலருக்குக் கண்கள் பாதிக்கப்படலாம். எனவே, எல்.சி.டி/ எல்.இ.டி மானிட்டர்களைப் பயன்படுத்துவது நல்லது. ரெசல்யூஷன் அதிகம் உள்ள மானிட்டர்கள்கண்களுக்கு ஏற்றவை. ரெசல்யூஷன் என்பது `டாட்பிட்ச்’ எனப்படும் ஒளிப்புள்ளிகளின் எண்ணிக்கையால் தீர்மானிக்கப்படுகிறது. பொதுவாக, குறைவான ஒளிப்புள்ளிகள் துல்லியமான உருவங்களை உருவாக்குகின்றன. டிஸ்ப்ளேவில் 0.28 மில்லி மீட்டருக்குக் குறைவான ஒளிப்புள்ளிகள் இருப்பது கண்களுக்கு நல்லது.

கான்டாக்ட் லென்ஸ் கவனம்

கான்டாக்ட் லென்ஸ் உபயோகிப்பவர்களுக்கு சி.வி.எஸ் பிரச்னை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக, தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பார்க்கும்போது கண் எரிச்சல் போன்ற பிரச்னையால் பாதிக்கப்பட நான்கு மடங்கு வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். சாதாரண கான்டாக்ட் லென்ஸ்களைவிட சிலிக்கான் ஹைட்ரோஜெல் கான்டாக்ட் லென்ஸ்கள் பயன்படுத்துவது ஓரளவு நல்ல
பலனைத் தரும். கான்டாக்ட் லென்ஸை சுத்தமான சொல்யூஷனில் சுத்திகரித்துப் பயன்படுத்துவதும் அவசியம்.

டிஸ்ப்ளே செட்டிங்ஸை மாத்துங்க

டிஸ்ப்ளே செட்டிங்ஸை சீராக்குவது ஓரளவுக்கு நல்ல பலனைத் தரும். பொதுவாக, மானிட்டரின் பிரைட்னெஸ் எனப்படும் வெளிச்சம் உங்களைச் சுற்றி உள்ள சூழலின் வெளிச்சம் எவ்வளவு உள்ளதோ அதே அளவு இருப்பது நல்லது. கண்களை உறுத்தாத, கண்களைச் சுருக்கிப் பார்க்கச் செய்யாத இயல்பான வெளிச்சமே நல்லது. மானிட்டரில் தெரியும் எழுத்துகளின் ‘டெக்ஸ்ட் சைஸ்’ எப்போதும் கான்ட்ராஸ்ட்டுக்கு இயல்பாக இருக்க வேண்டும். நீளமான டாக்குமென்ட் ஃபைல்களில் வேலை செய்யும்போதும் படிக்கும்போதும் வெள்ளைப் பின்புறத்தில் கறுப்பு எழுத்துக்களாக இருப்பது நல்லது. தொடர்ச்சியாகப் படிக்கும்போது எழுத்துக்களை பெரிய அளவில் வைத்து படித்துவிட்டு, பிறகு நார்மலான அளவுக்கு மாற்றிக்கொள்ளலாம்.

`கலர் டெம்ப்பரேச்சர்’ என்று ஓர் ஆப்ஷன் உள்ளது. இது, கணிப்பொறித் திரையில் இருந்து வெளிப்படும்  ஒளிக்கற்றைகளின் அளவைக் குறிக்கும். நீல வண்ண வெளிச்சம் என்பது குறைந்த அலை நீளம் உடையது. எனவே, கண்களை அதிகம் சிரமப்படுத்தும். சிவப்பு, ஆரஞ்சு போன்றவற்றின் அலை நீளம் அதிகம் என்பதால், அவை ஓரளவு குறைவாகவே கண்களைப் பாதிக்கும். கலர் டெம்ப்பரேச்சரைக் குறைப்பதன் மூலம், நீள அலைக்கற்றைகளைக் குறைத்து, கண்களைப் பாதுகாப்பதும் ஒரு நல்ல வழிமுறை.

கண்களுக்கான பயிற்சிகள்

தினமும் காலையில் எழுந்ததும் உடற்பயிற்சி செய்வதைப் போலவே கண்களுக்கும் பயிற்சி தர வேண்டும். ஒரு விரிப்பில் மண்டியிட்டு அமர்ந்துகொண்டோ, நின்றபடியோ இதைச் செய்யலாம். இரண்டு கைகளையும் கோத்துக்கொண்டு கட்டைவிரல்களை மட்டும் தம்ஸ் அப் செய்வது போல நிமிர்த்த வேண்டும். பிறகு, கைகளை மார்பில் இருந்து ஒரு அடி தூரத்துக்கு முன்புறம் நீட்டி கையை கிளாக்வைஸாக வட்டமாகச் சுற்ற வேண்டும். சுற்றும்போது தலையை அசைக்காமல் கண்களைச் சுழற்றி கட்டைவிரல் நகங்களைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். இப்படி ஐந்து முறை சுற்றிவிட்டு, ஆண்ட்டி கிளாக்வைஸாக மீண்டும் ஐந்து முறை சுற்ற வேண்டும். பிறகு, மேலும், கீழுமாகவும் பக்கவாட்டிலும் அரைவட்ட வடிவில் கைகளைச் சுற்றி, கண்களைச் சுழற்றிப் பார்க்க வேண்டும். பிறகு பத்து விநாடிகள் கண்களை மூடி ஓய்வெடுக்க வேண்டும். இதை கண் யோகா என்பார்கள்.
தொடர்ந்து உலர்வான கண்களோடு கணிப்பொறியை வெறிப்பது, கண்களுக்கும் நரம்புகளுக்கும் சோர்வைத் தரும். இதைப் போக்க 20:20:20 என்று ஓர் எளிய பயிற்சி உள்ளது. அதாவது, கணிப்பொறியில் வேலை செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தொலைவில் உள்ள ஒரு பொருளை (அது பச்சை வண்ணத்தில் இருப்பது நல்லது) 20 விநாடிகள் இமைக்காமல் பார்க்க வேண்டும். இப்படிச் செய்வதால் தூரப்பார்வை, கிட்டப்பார்வை தொந்தரவுகள் ஏற்படாது. கம்ப்யூட்டர் அருகில், இண்டோர் செடிகளை வளர்ப்பதன் மூலம், செடியின் பச்சை நிறம் கண்களுக்கு சற்று ஓய்வைத் தரும். 

கண் சிமிட்டும் நேரம்

கண்களைச் சிமிட்டுவது கண்களை உலர்வின்றி ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. தொடர்ந்து வெகுநேரம் கணிப்பொறியைப் பயன்படுத்தும்போது கண் சிமிட்டுவது பாதிக்கப்படுகிறது. சில சிமிட்டல்கள் முழுமையற்றதாக அரைச் சிமிட்டல்களாகிவிடுகின்றன. இதனால், கண்களில் உள்ள நீர் வேகமாக ஆவியாகிவிடுகிறது. ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை சில விநாடிகள் கண்களைத் தொடர்ந்து சிமிட்டிக்கொண்டே இருக்க வேண்டும். பிறகு சில விநாடிகள் கண்களை மூடி அமர்ந்துவிட்டு மீண்டும் பணியைத் தொடரலாம். இந்தப் பயிற்சி மூலம் இமைகளின் செயல்பாடு முடங்காமல் இருக்கும். இதனால், கண்களில் போதுமான ஈரப்பதம் தக்கவைக்கப்படும். கண் நரம்புகள் காக்கப்படும்.

ரெஸ்ட்டு மஸ்ட்டு 

எந்த வேலைக்கும் ஓய்வு மிகவும் அவசியம். கம்ப்யூட்டர் விஷன் சிண்ட்ரோம், கழுத்துவலி, தோள்பட்டை வலி போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் தவிர்க்க, தொடர்ந்து கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவதற்கு இடையே போதுமான ஓய்வு கொடுங்கள். நாள் முழுதும் அமர்ந்து வேலை செய்துகொண்டிராமல், குறைந்தது இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை எழுந்து ஒரு நடைவிடுங்கள். கை, கால், கழுத்தை ஸ்ட்ரெச் செய்யுங்கள், கண்களுக்கான பயிற்சிகளைச் செய்யுங்கள். பின்னிரவில் மொபைல் போன், டி.வி, கணிப்பொறியைப் பார்க்காதீர்கள். குறைந்தபட்சம் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பு எலெக்ட்ரானிக்ஸ் ஒளிர்திரைகளைப் பார்க்காமல் இருப்பது நல்லது. இதனால், உறக்கத்தில் மெலட்டோனின் சுரப்பு மேம்படும்
.
கண்களுக்கு ஏற்ற வேலைச் சூழல்

காகிதத்தைப் பார்த்து டைப் செய்யும்போது, கணிப்பொறித் திரையையும் காகிதத்தையும் மாறிப் மாறி பார்ப்பதால் கண்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதைத் தவிர்க்க புத்தகத்தையோ தாளையோ மானிட்டரின் அருகில் ஒரு ஸ்டாண்டு வைத்து அதில் பொருத்திக்கொள்ளலாம். ஆனால் அந்தத் தாளின் மீது போதுமான வெளிச்சம் இருப்பதும் முக்கியம். கணிப்பொறித் திரை கண் மட்டத்திலிருந்து 40 டிகிரி சாய் கோணத்தில் இருப்பது நல்லது. மேலும், கண்களுக்கும் கணிப்பொறி திரைக்கும் இடையே அரை மீட்டர் இடைவெளியாவது இருப்பது நன்று. எர்கோனாமிக் நாற்காலியில் அமர்ந்து பணிபுரிவது உடலின் போஸ்ச்சரைப் பாதுகாக்கும். கழுத்துவலி, கைவலி, முதுகுவலி, இடுப்புவலி என உடல்வலிகளில் இருந்து காக்கும்.

கண் பரிசோதனை அவசியம்

நமக்கு முன்பு வாழ்ந்த எந்தத் தலைமுறையைவிடவும் கண்களை அதிகம் பயன்படுத்துபவர்களாக நாம் இருக்கிறோம். (அதாவது சினிமா திரை, எலெக்ட்ரானிக் திரை போன்ற செயற்கை வெளிச்சங்களை பார்ப்பது) எனவே, கண்ணாடி அணிபவர்கள் மட்டும் அல்லாமல் எல்லோருமே வருடத்துக்கு ஒருமுறை கண் மருத்துவரைச் சந்தித்து கண்களைப் பரிசோதிப்பது நல்லது. அப்போது, கம்ப்யூட்டரை நீங்கள் பயன்படுத்தும் விதம், எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள் போன்ற தகவல்களை அவரிடம் தெரிவித்து வேண்டிய ஆலோசனைகள் பெறலாம்.

















செவ்வாய், 27 ஜூன், 2017

டாக்டரைப் பார்க்கப் போகிறீர்களா? - குடும்ப மருத்துவரா, சிறப்பு மருத்துவரா?

Return to frontpage


டாக்டர் ராதா


முன்னொரு காலத்தில் ‘குடும்ப மருத்துவர்’ என்று ஒருவர் இருந்தது பலருக்கு நினைவிருக்கலாம். இன்றைய நாளில் சாதாரண தலைவலிக்குக்கூட சிறப்பு நரம்பு நரம்பியல் நிபுணரைப் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. இப்போது இதய நோய் நிபுணர், சிறுநீரக மருத்துவர், மூட்டு மருத்துவர், நீரிழிவு நோய் நிபுணர், இரைப்பை சிறுகுடல் நிபுணர், முதுமை நோய் மருத்துவர் இன்னபிற சிறப்பு மருத்துவர்கள் எனப் பெருகிவிட்ட நிலையில் குடும்ப மருத்துவர்கள் அருகிவரும் உயிரினங்களாக மாறிவருகிறார்கள். சரி, இப்படிப் பல நிபுணர்கள் இருக்கும் நிலையில், நாம் சிகிச்சை பெறுவதற்கு யாரைத் தேர்ந்தெடுப்பது?

குடும்ப மருத்துவருக்கும் சிறப்பு மருத்துவருக்கும் அப்படி என்ன வித்தியாசம்?

# குடும்ப மருத்துவர்கள் (family doctors/family physicians) அல்லது பொதுநல மருத்துவர்கள் (general practitioners) என்று அழைக்கப்படுபவர்கள் எம்.பி.பி.எஸ். பட்டம் பெற்றவர்கள். சிலர் கூடுதலாக சில பட்டயங்கள், சான்றிதழ்களையும் பெற்றிருக்கலாம்.

# இவர்கள் பெரும்பாலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், சிலர் தனியார் மருத்துவ மையங்களிலும் பணிபுரிவார்கள்.

# இவர்கள் ஏறக்குறைய எல்லா நோய்களைப் பற்றியும் பொதுவான பயிற்சி பெற்றவர்கள். எனவே, பெரும்பான்மையான நோய்களைப் பற்றி அறிந்தவர்கள். ஆனால், எந்த ஒரு குறிப்பிட்ட துணை மருத்துவத் துறையிலும் கூடுதல் பயிற்சி பெற்றவர்கள் அல்ல.

# எல்லா நோய்களுக்கும் சிறப்பு மருத்துவம் தேவை இல்லை. சாதாரண நோய்களை அடையாளம் கண்டு குணப்படுத்துவதும் பெரிய நோய்களை அடையாளம் கண்டு சிறப்பு மருத்துவர்களிடம் அனுப்பி வைப்பதுமே இவர்களுடைய முக்கியப் பணி.

# ஒரு குடும்பத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியோர் உள்ளிட்டோர் நீண்ட காலமாக ஒரே பொதுநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுவருவதால், நாளடைவில் இரு தரப்பினரிடைய வலுவான ஓர் உறவு ஏற்படுகிறது; மருத்துவர் மேல் நம்பிக்கையும் உண்டாகிறது. இந்த பரஸ்பர உறவு மருத்துவ சிகிச்சையில் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது.

# பொதுநல மருத்துவர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்பது நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதுபோல, தானாக நடைபெறும் ஒரு நிகழ்வு. ஒரு பொதுநல மருத்துவரை சில முறை பார்த்து பரிச்சயம் செய்துகொண்ட பின்னரே, அவர் தனக்கு ஏற்புடையவர் தானா என்பது தெரியவரும்.

# சிறப்பு மருத்துவர்கள் தாம் சாந்த துறையில் மட்டும் நிபுணத்துவம் பெற்றவர்கள். எனவே, பொதுநல மருத்துவர் ஒருவரின் ஆலோனையின் பேரிலேயே இவர்களை நாடுவது நல்லது. வளர்ச்சி அடைந்த நாடுகளில் சிறப்பு மருத்துவர்களிடம் செல்ல பொதுநல மருத்துவரின் பரிந்துரைக் கடிதம் அவசியம்.

# தனியார் சிறப்பு மருத்துவர்கள் வாங்கும் கட்டணம், தனியார் பொதுநல மருத்துவர்களைவிட பல மடங்கு கூடுதலாக இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

# சிறப்பு மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனைகள், எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்ற பரிசோதனைகளை அதிகமாக செய்யச் சொல்லுவது உண்டு; சில நேரம் ‘ஒரு ஸ்கேன் செய்துப் பார்க்கலாமா?’ என்று தானாக அவரைக் கேட்கும் நோயாளிகளும் உண்டு!

# நோயின் அறிகுறிகள் தோன்றும்போது முதலில் பொதுநல மருத்துவர் ஒருவரைப் பார்ப்பதுவே சிறந்தது. அவரது ஆலோசனையைப் பெற்று, சிறப்பு மருத்துவர் ஒருவரை நாடலாம். காலமும் செலவும் மிஞ்சும்.

# மருத்துவ உலகில், பொதுநல மருத்துவர்கள் வழங்குவது முதல் நிலை மருத்துவப் பராமரிப்பு என்றும், சிறப்பு மருத்துவர்கள் வழங்குவது இரண்டாம் நிலை மருத்துவ பராமரிப்பு என்றும் அழைக்கப்படுகிறது.

# பாகுபாடின்றி அனைவருக்கும் மருத்துவ சேவை வழங்குவற்கு முதல் நிலை மருத்துவ பராமரிப்பு சேவைகளை வலுப்படுத்துவதுதான் சிறந்தது என்பதே எல்லா நாடுகளும் கடைப்பிடிக்கும் கொள்கையாக இருந்துவருகிறது. மத்திய அரசின் தேசிய நலவாழ்வுக் கொள்கை (2017) இதையே வலியுறுத்துகிறது.

திங்கள், 26 ஜூன், 2017

பணமாகும் பிரைவசி... நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள்



vikatan.com

மீபத்தில் இந்தியாவையே அதிரவைத்த, திரும்பிப் பார்க்கவைத்த ஒரு வார்த்தை ஜியோ. அந்நிறுவனத்தைத் துவங்கும்போது ``டேட்டாதான் இனி ஆயில்” என்றார் அம்பானி. அவர் சொன்னது போல நேற்றுவரை எண்ணெய்யின் பின்னால் ஓடிய உலகம், இன்று டேட்டா பின்னால் ஓடுகிறது. 

கூகுளில் சர்ச் செய்யும் பழக்கம் நம் அனைவருக்கும் இருக்கும். அதில், நம்மைப்பற்றி நாமே எப்போதாவது தேடிப் பார்த்திருக்கிறோமா? உங்கள் பெயரைப் போட்டுத் தேடிப் பாருங்கள். உங்களுக்கே தெரியாத பல தகவல்களை கூகுள் சொல்லும்.


“போன வருஷம் ‘கபாலி’ படம் பார்த்தேன். ஆனா, எந்த தியேட்டர்னு மறந்துடுச்சு. அதான் கூகுள் பண்றேன்” என்று கூகுளில் தேடிய நண்பர் ஒருவருக்கு சில நொடிகளில் விடை தந்தது கூகுள். “சத்யம்ல டிக்கெட் கிடைக்கலை. ஐநாக்ஸ்ல பாத்திருக்கேன். இதோ ட்வீட் போட்டிருக்கேனே” எனக் காட்டினார்.

கேட்டதும் அதிர்ச்சியையோ, சிரிப்பையோ ஏற்படுத்தும் நிகழ்வுதான். யோசித்தால், ஆச்சர்யமாக இருக்கிறது. நம்மைப்பற்றி நமக்கே தெரியாத விஷயத்தைக்கூட இணைய நிறுவனங்கள் நமக்குத் தருகின்றன. இதைத் தேவையான சமயத்தில் நமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டால் சரி.  தவறாகப் பயன்படுத்தினால்... மேலே சொன்ன சம்பவத்தில் நண்பர் ஐநாக்ஸில் படம் பார்த்த தகவலை அவரே சொல்லியிருக்கிறார். அதனால், பிரச்னையில்லை. ஆனால், நமக்குத் தெரியாமல் நம்மிடம் இருந்து தகவல்களைப் பெற்றால்... அது எப்படிப் பெற முடியும் என யோசிக்க வேண்டாம். நம்மிடமிருந்து எடுக்கப்படும் தகவல்களை வைத்து உலகம் முழுவதும் 203 பில்லியன் டாலர் மதிப்பிலான வியாபாரம் நடக்கிறது. இந்திய மதிப்பில் சொன்னால் 13 லட்சம் கோடி ரூபாய் பிசினஸ்! 

1999-ல் அமெரிக்காவில் யாட்லி(Yodlee) என்றொரு ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கப்பட்டது. அதன் வேலை, பயனர்களின் செலவுகளைத் தொகுத்துப் பிரித்து, விரும்பிய வடிவில் ரிப்போர்ட் தருவதுதான். ஒரு ஃபைனான்ஸ் எக்ஸ்பர்ட் செய்யக்கூடிய வேலை, அதுவும் இலவச சேவை என்பதால், நிறுவனம் அதிரடியாக வளர்ந்தது. இலவசம் என்றால் அவர்களுக்கு ஏது லாபம்? யாட்லி எப்படிப் பணம் சேர்க்கும் என அப்போது யாரும் யோசிக்கவில்லை.

யாட்லி செய்தது இதுதான். மக்களின் செலவுகளை வைத்து தரமான புள்ளி விவரங்களைச் சேகரித்தது. எந்தத் துறையில் மக்கள் அதிகம் செலவழிக்கிறார்கள், எந்த வகை சேமிப்பில் ஆர்வம் காட்டுகிறார்கள், எந்த நிறுவனத்தின் பொருள்களை அதிகம் வாங்குகிறார்கள் எனத் துல்லியமான தகவல்கள் யாட்லியால் திரட்டப்பட்டன. எவ்வளவு செலவு செய்து சர்வே நடத்தியிருந்தாலும், இந்தத் தகவல்களை யாராலும் திரட்ட முடிந்திருக்காது. இந்த டேட்டாவை யாட்லி தனது பொருளாதார நிறுவனப் பங்குதாரர்களுடன் பகிர்ந்து கொண்டது. வங்கிகள் தங்களின் வாடிக்கையாளர்கள் யார் யார் என்பதை மிகச் சரியாகக் கண்டறிய யாட்லி உதவியது. இதனால் விளம்பரச் செலவுகள் தொடங்கி, அனைத்தும் குறைந்தன. பயனர்களின் பெர்சனல் தகவல்களை வைத்து யாட்லி கோடிக்கணக்கான டாலர் சம்பாதிக்க ஆரம்பித்தது.

இன்று உலகின் டாப் 100 நிறுவனங்களில் டெக் நிறுவனங்கள்தான் அதிகம். அவற்றில் பெரும்பாலானவை செயல்படுவதே தனி நபரின் பெர்சனல் தகவல்களை மூலதனமாகக் கொண்டுதான். கூகுள், ஃபேஸ்புக் என அத்தனை ஜாம்பவான்களும் அடுத்தவன் ஆட்டோவுக்குத் தான் ஆயுதபூஜை போட்டுக் கொண்டி ருக்கிறார்கள். டெக் நிறுவனங்கள் நிற்காமல் ஓட உதவும்  இந்தக் கச்சா எண்ணெய்யை `பிக் டேட்டா’ என்கிறார்கள்.

‘‘பல பேரிடமிருந்து தகவல்களைத் தொகுத்து, தொகுக்கப்பட்ட தகவல்களை அலசி, அதிலிருந்து ஒரு ட்ரெண்ட் பிடித்து, இது நடந்தா அடுத்து என்ன நடக்கும் எனக் கணிக்கும் முறைதான் பிக் டேட்டா.  டேட்டா விஷயத்தில் நாம் மூன்று தலைமுறைகளைத் தாண்டி வந்திருக்கிறோம். முதல் தலைமுறை என்பது டேட்டாவை வெறுமனே தொகுத்து வைத்தது. நம் வீட்டுப் பரண் மேல் பொருட்களைப் போட்டு மூடி வைப்போமே, அப்படி. அடுத்த தலைமுறையில் அதைப் பிரித்து வைத்தார்கள். துணியைத் தனி ஷெல்ஃபிலும், புத்தகங்களைத் தனியாகவும் அடுக்கி வைப்பதுபோல்.  மூன்றாம் தலைமுறையில், தொகுக்கப்பட்ட தகவல்களை வைத்து ஒரு ட்ரெண்டைக் கண்டறிந்தார்கள். இதன் அடுத்த கட்டம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ். இதுவரைக்கும் பிக் டேட்டாவைப் பயன்படுத்தி என்ன செய்ய வேண்டுமென்பதை மனிதர்கள் தலையிட்டுச் சொல்ல வேண்டியிருக்கிறது. நான்காம் தலைமுறையில் அதுவும் மெஷினின் வேலை ஆகிவிடும். ஆனால், அதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த ஒரு தனியார் டெக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கோகுல்.

வாட்ஸ்அப் வராத காலத்திலே ஒரு ஃபார்வர்ட் மெசேஜ் உண்டு. சச்சின் சதமடித்தால், அன்று இந்தியா முழுவதும் அதிக வியாபாரம் நடக்குமாம். இந்தியர்கள் ஒவ்வொருவரும் எப்போது, எங்கு சாப்பிடுவார்கள், ஷாப்பிங் செய்வார்கள் என்ற தகவல் நம்மிடம் இருக்கிறது என வைத்துக்கொள்வோம். அதில், யாரெல்லாம் சச்சின் சதமடிக்கும் நாளில் வெளியே சாப்பிடுகிறார்கள், ஷாப்பிங் செய்கிறார்கள் என்ற தகவலை கம்ப்யூட்டர் கண நேரத்தில் சொல்லிவிடும். அடுத்தமுறை சச்சின் சதமடித்தால், அவர்கள் மொபைலுக்கு ‘சாப்பிட வாங்க பாஸ்... சச்சின் சதமடிச்சதால் 10 சதவிகிதம் தள்ளுபடி. உங்களுக்கு மட்டும்!” என ஒரு குறுஞ்செய்தி போகும். 10 சதவிகிதத் தள்ளுபடி, கூடவே சச்சின் டச் என்றதும் அவர்களும் அந்த ஹோட்டலுக்குத் தான் விசிட் அடிப்பார்கள்.

 டிஜிட்டல் மார்க்கெட்டிங்

நாம் எல்லோருமே ஜிமெயில்வாசிகள்தான். காதல் கடிதங்கள் தொடங்கி ராஜினாமா கடிதம் வரை ஜிமெயில் மூலம்தான் அனுப்புகிறோம்; பெறுகிறோம். இவை அனைத்தும் கூகுள் சர்வரில்தான் சேகரிக்கப்படுகின்றன. அவற்றைப் பார்க்க, படிக்க, பயன்படுத்த கூகுளுக்கு நாம் அனுமதி தந்திருக்கிறோம். கூகுள் என்ன செய்யும்?

நாம் ஒரு வீடு வாங்கத் திட்டமிடுகிறோம் என வைத்துக் கொள்வோம். அதற்கான லோன் அனுமதிக் கடிதத்தை வங்கி நமக்கு மின்னஞ்சல் அனுப்பும். அதைப் படிக்கும் கூகுள் ‘இவன் புதுசா வீடு வாங்கப்போகிறான்’ எனப் புரிந்துகொள்ளும். புதிதாக வீடு வாங்குகிறவர்களுக்கு காலிங் பெல்லில் தொடங்கி சோபா வரை ஆயிரம் தேவைகள் இருக்கும். அந்தப் பொருள்களை விற்கும் நிறுவனங்களிடம் பணம் வாங்கிக்கொண்டு, நம் மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி முதற்கொண்டு அனைத்தையும் கூகுள் கொடுத்துவிடும். அவர்கள் நமக்கு ‘லைட் வேணுமா சார்? பெட் வேணுமா சார்’ என மெயில் அனுப்புவார்கள். குறுஞ்செய்தி அனுப்புவார்கள். இதுதான் டிஜிட்டல் மார்க்கெட்டிங்.

உலகம் முழுவதுமே விளம்பரத்துக்குத்தான் எந்த ஒரு நிறுவனமும் அதிக முக்கியத்துவமும், அதிக நிதியும் ஒதுக்கும்.  ‘என்கிட்ட இந்த விஷயம் இருக்குப்பா’ என வாடிக்கையாளரிடம் சொன்னால்தான், அதை அவர்கள் வாங்குவதற்கு வாய்ப்பு உருவாகும். முந்தைய விளம்பர உத்திகளில் ஒரு பிரச்னை இருந்தது. நூறு பேரில் ஒருவருக்குதான் ஒரு பொருள் தேவைப்படும். ஆனால், அந்த நூறு பேருக்கும் சேர்த்துதான் விளம்பரம் செய்ய வேண்டியிருக்கும். இதனால், செலவு அதிகம். ஒரு பொருள் அல்லது சேவை யாருக்குத் தேவை என்ற தகவல் இல்லாததால், வந்த பிரச்னை அது. ஆனால், டிஜிட்டல் யுகத்தில் இந்தச் சிக்கல் இல்லை. இதனால்தான் டிஜிட்டல் மார்க் கெட்டிங்கை நோக்கி நிறுவனங்கள் படையெடுக்கின்றன.

இன்ஃபார்மர்!

காவல்துறையில் இன்ஃபார்மர் என்றொரு வேலை உண்டு. குற்றங்கள் பற்றியோ, குற்றவாளியைப் பற்றியோ ரகசியமாக உளவு பார்த்து காவல்துறைக்கு வேண்டிய தகவல்களை இன்ஃபார்மர் கொடுப்பார். அதற்கான சன்மானம் அவருக்கு வழங்கப்படும். ஃபேஸ்புக்கில் தொடங்கி கூகுள் வரை அனைத்து நிறுவனங்களும் டிஜிட்டல் இன்ஃபார்மர்கள் தான்.

உலகம் முழுதும் 125 கோடி பேர் வாட்ஸ்அப் உபயோகிக்கிறார்கள். நாம் வாட்ஸ்அப்புக்குப் பணம் செலுத்துவதில்லை. அவர்கள் விளம்பரங் களையும் காட்டுவதில்லை. பின் எப்படிப் பணம் வரும்?

``பெருவாரியான உலக மக்களின் தொடர்புச் சாதனம் வாட்ஸ்அப்தான். மக்களின் மனவோட்டத்தை மிகத் துல்லியமாக வாட்ஸ்அப் டேட்டாபேஸ் இன்ஜின்களால் கணிக்க முடியும். வாட்ஸ்அப் பயன்படுத்தும் 50 கோடி இந்தியர்கள் பேசும் வார்த்தை காம்பினேஷன்கள் மூலமாக, மக்களின் மனதில் என்ன ஓடுகிறது என்பதைத் துல்லியமாக அறியமுடியும். ஒரு பன்னாட்டு நிறுவனம் இந்தியாவில் ஒரு புதுப் பொருளுக்கான சந்தை இருக்கிறதா என்பதை அறிய நினைக்கிறது. அதை ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் இவர்களிடம் கேட்டால், துல்லியமாகவே எத்தனை பயனர்களுக்கு அந்தப் பொருள் தேவைப்படும் என்பதைச் சொல்லிவிடுவார்கள். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் 2014 தேர்தல். பி.ஜே.பி. இதை முயன்று பார்த்து மக்களின் மனவோட்டத்தைத் துல்லியமாக அறிந்து டிஜிட்டல் மார்கெட்டிங் செய்தும், தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்தும் வெற்றி பெற்றார்கள்” என்கிறார் சாஃப்ட்வேர் நிறுவனத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் ஃபாஸ்டுரா.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் User profiling எனச் சொல்வார்கள். ஒருவரைப் பற்றிய தகவல்களைத் துல்லியமாக, தரமாக, விரிவாக சேகரித்து வைப்பதுதான் யூஸர் புரொஃபைலிங். இதை யார் திறம்படச் செய்கிறார்களோ, அவர்களிடம் பணம் கொடுத்து டேட்டாவை வாங்க நம் தெருமுனை அண்ணாச்சி வரை தயாராக இருக்கிறார். 

இந்தக் கட்டுரைக்காக ஒரு விர்ச்சுவல் எக்ஸ்பெரிமென்ட்டுக்குத் தயாரானேன். முதலில், கூகுளுக்குச் சென்று, சென்னையில் இருந்து டெல்லிக்கு விமானப் பயணத்துக்கான கட்டணத்தைத் தேடினேன். அடுத்த சில மணி நேரங்களில் என் மின்னஞ்சலுக்கும், மொபைல் எண்ணுக்கும் அத்தனை விமானச் சேவை வழங்கும் நிறுவனங்களும் படையெடுத்தன. அடுத்து, டெல்லியில் இருக்கும் ஹோட்டல்கள் வரிசைகட்டி வந்தன. உண்மையாகவே டெல்லிக்குச் சென்று, அங்கிருந்து ஃபேஸ்புக்கில் ‘டெல்லி வந்தாச்சு’ என ஒரு ஸ்டேட்டஸ் தட்டினேன். ஓலா நிறுவனத்திடம் இருந்து ஒரு வெல்கம்  தகவலும்,  டெல்லி ஓலா விலைப் பட்டியலும் வந்தன. அன்று மாலை, நான் அடிக்கடி உணவருந்தப்போகும் பீட்ஸா நிறுவனம் ஒன்று, நான் தங்கியிருந்த இடத்துக்கு அருகில் இருக்கும் தனது கிளையின் முகவரியை அனுப்பி வைத்தது. மீண்டும் சென்னைக்குத் திரும்பும்வரை எனக்கு என்னவெல்லாம் பிடிக்கும், எப்போது என்ன செய்வேன் என்பதை அறிந்து அந்தந்தச் சேவை வழங்கும் நிறுவனங்கள் சரியாக என்னை வந்தடைந்தன. ‘சார்ஜரை சென்னைலயே விட்டுட்டேன்’ என ஸ்டேட்டஸ் தட்டியிருந்தால், உடனே டோர் டெலிவரி ஆகியிருக்கும். அப்படி இருந்தது அந்த விர்ச்சுவல் உபசரிப்பு.

டிஜிட்டல் பயனர்களைக் குறைத்தும் மதிப்பிட முடியாது. இந்த டேட்டா நுகர்தலைப் பற்றி அவர்களுக்கும் தெரியும். மூன்று விஷயங்கள் இருந்தால், எந்த வாடிக்கையாளரும் தன்னைப் பற்றிய டேட்டாவைத் தருவார் என்கிறது ஓர் ஆய்வு. 

1) வெளிப்படைத்தன்மை (Transparency)

2) நம்பிக்கை (Trust)

3) பலன்கள் (Benefits)

இது ஒருவிதத்தில் உண்மைதான். நமக்கே தெரியாமல் நம்மைப் பற்றிய தகவல்கள் திருடப்படுகின்றன. அவை தவறான விஷயங்களுக்குப் பயன்படும் ஆபத்தும் இருக்கிறது. மற்றபடி, இந்த மூன்றையும் ஒரு நிறுவனம் தந்தால், டேட்டாவைப் பகிர நமக்கும் ஆர்வம் அதிகமாகும் என்பதில் சந்தேகம் இல்லை. 

அமெரிக்காவில் நடந்த சம்பவம் இது. மாணவர்கள் வீட்டுப்பாடம் செய்வதற்காக, லேப்டாப் ஒன்றைப் பள்ளி நிர்வாகமே தந்திருக்கிறது. அதில், மாணவன் வீட்டுப்பாடம் செய்வதைக் கண்காணிக்க அப்ளிகேஷன் ஒன்றை நிறுவியிருக்கிறார்கள். அது கேமராவை ஆன் செய்து, மாணவனின் வீட்டில் நடப்பவற்றைப் பள்ளி நிர்வாகத்துக்குக் காட்டியிருக்கிறது. ‘எனக்குத் தெரியாமல் என் வீட்டை நீங்க எப்படிப் பாக்கலாம்’ என மாணவனின் தந்தை நீதிமன்றம் சென்றிருக்கிறார். ‘நாங்க மாணவனின் நல்லதுக்குத்தானே செய்கிறோம்’ எனப் பதில் சொல்லியிருக்கிறது நிர்வாகம். ஆனால், முடிவில் மாணவனின் தந்தைக்குப் பல லட்சம் அமெரிக்க டாலர்கள் நஷ்ட ஈடு தரச் சொன்னது நீதிமன்றம்.

வளர்ந்த நாடுகள் தங்கள் குடிமக்களைப் பாதுகாப்பதில் கில்லி. என்ன நடந்தாலும் அவர்களின் நாட்டுமக்கள்தான் முக்கியம். ஆனால், அவர்களுக்கு இணையம் என்ற ஒன்று வந்தபோது அதன் நீள, அகலம் தெரியவில்லை. ‘நீட்டிய இடத்துல எல்லாம் கையெழுத்து போட்டேனே... இப்படி ஏமாத்திட்டானே’ எனப் புலம்பும் சராசரி மனிதனைப் போலத்தான் இப்போது கவலைப்படுகின்றன. சீனா போன்ற ‘ரஃப் அண்ட் டஃப்’ நாடுகள் கொஞ்சம் தாமதமாக விழித்துக்கொண்டு இப்போது தடை போட்டுக் கொண்டிருக்கின்றன. 

நாடுகளுக்கு இடையே எல்லைக்கோடுகள் உண்டு. ஒரு நாட்டைச் சேர்ந்த எந்த ஒரு மனிதனும், எந்த ஒரு பொருளும், எந்த ஒரு விஷயமும் இன்னொரு நாட்டின் எல்லையைத் தாண்டிப் போக முடியாது. மீறிச் சென்றால், போர்தான். ஆனால், இணையத்திடம் இது வேலைக்காகாது. ராமநாதபுரத்தில் ஒரு  ப்ரெளசிங் சென்டரில் இருந்து அமெரிக்காவின் வெள்ளை மாளிகைக்கு ஒரு மெயில் அனுப்பலாம்.  நிறைய விவரம் தெரிந்தால், வெள்ளை மாளிகை சிஸ்டத்தையே ஹேக் பண்ணலாம். இந்தக் காரணத்தால், வளர்ந்த நாடுகளிலும் இணையத்தால் சிக்கல்கள் எழுகின்றன. மக்களின் பிரைவசி கேள்விக்குள்ளாகிறது. 
உணவு, உடை, உறைவிடம் போல இன்றைய யுகத்தில் பிரைவசி என்பதும் ஒரு மனிதனுக்கு அடிப்படைத் தேவையாகிவிட்டது. 

ஒவ்வொரு மனிதனுக்கும் இருள் பக்கம் என ஒன்றிருக்கும். இந்த டேட்டா பிசினஸ் அந்த இருண்ட பக்கத்துக்கு பெரிய சோடியம் வேஃபர் விளக்கைப் போடுகிறது. 

ஒரு இன்டர்வியூவுக்குப் செல்கிறீர்கள். `வார விடுமுறையில், சொந்த ஊருக்குப் போயிடுவீங்களா?’ என்ற கேள்விக்கு ‘இல்லை’யென்று சொல்வீர்கள். ஆனால், அவங்க ‘இல்லையே. போன வருஷம் 52 வாரத்துல 32 வாரம் ஊருக்குப் போயிருக்கீங்களே’ன்னு சொல்வாங்க. காலையில் எத்தனை மணிக்கு எழுந்திருப்போம் என்பதில் தொடங்கி நமது கேர்ள் ஃப்ரெண்ட் பெயர் வரைக்கும் அவர்களுக்குத் தெரியும். இந்த உலகத்தில் எதுவுமே ரகசியம் இல்லை என்பது விரைவில் நமக்குத் தெரிய ஆரம்பிக்கும். 

எதிர்காலத்தில் உலகம் முழுவதும் சி.சி.டி.வி கேமரா போட்டு நம் அனைத்து நடவடிக்கை களையும் ஒருவர் பார்த்துக்கொண்டிருப்பதுபோல இருக்கும். இதில் இருந்து தப்பிக்க வாய்ப்பிருக்கிறதா?

இருக்கிறது. ஜிமெயிலை நீங்கள் பணம் கொடுத்து வாங்கினால், நம் தகவல்களை அவர்கள் பார்க்க மாட்டோம் என்கிறார்கள். ஆப்பிள், ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கு இடையே இருக்கும் முக்கியமான வித்தியாசம் இதுதான். ஆப்பிள் மொபைலில் உங்களால் கால் ரெக்கார்ட் செய்ய முடியாது. ஏன் என்றால், ‘பேசும் இரண்டு பேரில் ஒருவருக்குத் தெரியாமல் இன்னொருவர் பதிவு செய்வதே பிரைவசியை மீறும் செயல். அதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்கிறது ஆப்பிள். ஆனால், ஆண்ட்ராய்டு கூகுளின் சேவை. அவர்கள் நிறுவனத்தில் 90 சதவிகித சேவைகள் இயங்குவதே தனிநபர் பற்றிய தகவல்களை வைத்துதான். அதனால், ஆண்ட்ராய்டு மொபைல்களில் ஆப்பிள் அளவுக்குப் பாதுகாப்பு இருக்காது.  பிரைவசி என்பதும் ஒரு வியாபாரப் பொருளாகி விட்டது. விலையும் அதிகம். பணம் இல்லாத வர்களுக்கு பிரைவசி கிடையாது. ஒரு பொருளையோ, சேவையையோ நாம் பெற விரும்பினால், அதற்குப் பணம் கொடுக்க வேண்டும். பணம் வேண்டாம் எனச் சொல்லப்படும் சந்தையில் நாமே ஒரு பொருளாக மாற வேண்டியிருக்கிறது. 

‘மைனாரிட்டி ரிப்போர்ட்’ என்றொரு படம். அதில் டாம் க்ரூஸ் இன்னொருவனைக் கொல்லத் திட்டமிடுவார். அனைத்து ஆயத்தங்களும் முடிந்து, சம்பவம் நடக்கப்போகும் சமயத்தில் போலீஸ் அவரைக் கைது செய்யும். ‘‘அடுத்த  ஐந்து நிமிஷத்துல அவனை நீ கொல்லப் பார்த்தாய். அதனால், கைது பண்றோம்” எனச் சொல்லும் காவல்துறை. கொலை செய்யத் திட்டமிடுபவனின் அனைத்து நடவடிக்கைகளும் காவல்துறைக்கு முன்பே தெரிய வந்ததால், கொலை நடப்பதற்கு முன்பாகவே அவனைப் பிடிப்பதாக லாஜிக் சொல்வார்கள். இது நடப்பது 2054-ம் ஆண்டில். டேட்டா பிசினஸ் போகும் வேகத்தைப் பார்த்தால், இன்னும் 20 ஆண்டுகளிலேயே அது சாத்தியமாகிவிடும் என்றுதான் தோன்றுகிறது.


``நாங்கள் கடவுளை நம்புகிறோம். மற்ற அனைவரும் டேட்டா கொண்டு வரவும்”
 
- எட்வர்ட்ஸ் டெமிங், பேராசிரியர்.


``டேட்டா இல்லையென்றால், எந்த ஒரு நிறுவனமும் காட்டுக்குள் கண் தெரியாத, காது கேட்காத மானைப்போலத்தான் அலைய வேண்டியிருக்கும்” 

- ஜெஃப்ரி மூர், பேராசிரியர்


``போர் என்பதே 90 சதவிகிதத் தகவல்கள்தாம்” 

- நெப்போலியன், பிரெஞ்ச் பேரரசர்.


``உங்களிடம் டேட்டா இருந்தால், அதைப் பார்க்கலாம். ஐடியா மட்டும்தான் இருக்கிறதென்றால், நான் சொல்வதைக் கேளுங்கள்” 

- ஜிம் பார்க்ஸ்டேல், பொருளாதார நிபுணர்.


``களிமண் இல்லாமல், செங்கல் செய்ய முடியாது. டேட்டா அதுபோலத்தான்!” 

- சர் ஆர்தர் கேனன், எழுத்தாளர்.

எந்த எண்ணெய் நல்ல எண்ணெய்?

vikatan.com


ண்ணெய் இல்லாமல் சமையலா என்பது ஒருபுறமிருக்க, `எண்ணெய்’ என்றதும் எட்டடி தள்ளி நிற்கும் சிலரையும் பார்க்க முடிகிறது. வயதாகிவிட்டது என்று மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே சிலர் எண்ணெயை ஓரம்கட்டி வருகிறார்கள். இதய நோயில் தொடங்கி உடல் பருமன் வரை சமையலில் எண்ணெயைத்தான் முதலில் தவிர்க்கிறார்கள். அப்படியானால் எண்ணெய் தவிர்க்கவேண்டிய ஒன்றா, எந்த எண்ணெயை எப்படிப் பயன்படுத்துவது? சமைக்க, சமைத்த உணவில் சேர்த்துக்கொள்ள, சருமத்துக்கு... என எண்ணெய் நம் வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்ற பல கேள்விகளுக்குப் பதில் சொல்கிறார் பொது மருத்துவர் முத்தையா. மேலும், எண்ணெய்களின் வகைகள் மற்றும் பலன்கள் பற்றி விளக்குகிறார்கள் யோகா மற்றும் இயற்கை மருத்துவ நிபுணர் எஸ்.டி.வெங்கடேஷ்வரனும் இதய நோய் அறுவைசிகிச்சை நிபுணர் எம்.சொக்கலிங்கமும்.

தட்பவெப்பநிலை சார்ந்ததா?


இந்தியாவில் ஒரு மாநிலத்தில் தேங்காய் எண்ணெய் நல்லது என்பதோடு, `பல நூற்றாண்டுகளாக, இதைத்தான் பயன்படுத்துகிறோம். நாங்கள் நன்றாகத்தானே இருக்கிறோம்’ என்கிறார்கள். இன்னொரு மாநிலத்திலோ `தொன்றுதொட்டு நாங்கள் கடுகு எண்ணெயைத்தான் பயன்படுத்துகிறோம், நாங்கள் ஆரோக்கியமாகவே இருக்கிறோம்’ என்கிறார்கள். வேறொரு மாநிலவாசிகளோ, `நாங்கள் எல்லா உணவுகளிலும் நெய்யைத்தான் சேர்த்துக்கொள்கிறோம். நல்ல உடல் நலத்துடனே வாழ்கிறோம்’ என்கிறார்கள். `நாங்கள் பாமாயிலைத்தான் பயன்படுத்துகிறோம், நாங்களும் உயிர்வாழ்கிறோம்’ என்கிறார்கள். இவை அனைத்தும் அந்தந்தச் சூழ்நிலை மற்றும் தட்பவெப்பநிலைக்கு ஏற்ற மாதிரி மாறுபடும்.


என்னென்ன இருக்கிறது எண்ணெயில்? 


நமது அன்றாட உணவில் கொழுப்புக்கு முக்கியப் பங்கு உண்டு. நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் அது  அவசியத் தேவை. கொழுப்பை முற்றிலும் தவிர்ப்பது நல்லதல்ல. இதை நாம் அனைத்து உணவுப் பொருள்களின் மூலமாகவும் பெறமுடியும்; அதிகப்படியாக எண்ணெயில் இருந்து கொழுப்பைப் பெற முடியும்.



கொழுப்பானது மாவுச்சத்து, புரதச்சத்தைக் காட்டிலும் இருமடங்கு சக்தி கொண்டது. அதாவது, ஒரு கிராம் கொழுப்பு 9 கலோரி சக்தியைக் கொடுக்கும். நம் உடலுக்குத் தேவையான எரிசக்தியில் 15-20 சதவிகிதம் கொழுப்பிலிருந்து கிடைக்க வேண்டும். முக்கிய வைட்டமின்களான ஏ, டி, இ மற்றும் கே போன்றவை உடலில் சேர கொழுப்பு உதவுகிறது. மேலும், இவை கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களாகும்.


கொழுப்பு நல்லது... ஏன்?



பொதுவாகவே எண்ணெய் நல்லது. ருசி, எரிசக்தி, வைட்டமின் ஏ, டி, இ, கே போன்றவற்றை உணவிலிருந்து உடலுக்குள் கொண்டு செல்ல, நாளமில்லாச் சுரப்பிகளின் ஸ்டீராய்டு, தைராய்டு, பிட்யூட்டரி, இன்சுலின் முதலிய ஹார்மோன்களைச் சுரக்க, ஒவ்வோர் உயிர் அணுவும் செயல்படுகிறது. அப்போது பித்தப்பை சுருங்கி, பித்தத்தை வெளியேற்றி, ஜீரணசக்தியை அதிகரிக்க, உடலின் வெப்பநிலையைச் சமமாக வைத்திருக்கவேண்டியுள்ளது. அப்போது அதிகமாக வரும் எரிசக்தியைச் சேர்த்து வைத்துக் கொள்ள, சேர்த்து வைக்கப்பட்ட சக்தியைத் தேவையான அவசரகாலத்துக்கு பயன்படுத்த எனப் பல முக்கிய வேலைகளுக்கு எண்ணெய்ச் சத்து அவசியம்.


எண்ணெய் அவசியம் என்றபோதிலும் அதிக நன்மை தருவதாகவும் குறைந்த கெடுதல் விளைவிப்பதாகவும் இருந்தால் நல்லது. எண்ணெய் சேர்த்தால் கெடுதல் என்று சொல்லி சாப்பாட்டில் எண்ணெயே சேர்த்துக்கொள்ளவில்லையென்றால், அதுவும் கெடுதல்தான். எண்ணெயும் நெய்யும் கொழுப்புதான்; `போதும், சாப்பிட்டுவிட்டோம்’ என்று மூளைக்குத் திருப்தி தரும் குணத்தை உருவாக்கிக்கொள்வது நல்லது. இல்லையென்றால், ஏதாவது ஒரு நொறுக்குத்தீனியைத் தின்றுகொண்டே இருக்கத் தோன்றும். நம் உணவில், நமக்குக் கிடைக்கக்கூடிய சக்தியில் 30-40 சதவிகிதக் கொழுப்பில், 15-30 சதவிகிதம் நல்ல கொழுப்பு (நெய்), மீதம் உள்ளது 20 சதவிகிதம் கெட்ட கொழுப்பு (மற்ற எண்ணெய்கள்) போன்றவற்றிலிருந்து கிடைக்குமாறுப் பார்த்துக்கொள்ள வேண்டும்.


கொழுப்பு வகைகள் 



முழுமையாகாத கொழுப்பு இரண்டு வகைப்படும். ஒன்று, மோனோ (ஒற்றை நிரம்பாத கொழுப்பு அமிலம்). இந்தக் கொழுப்பு, கடலை எண்ணெய், ஆலிவ் எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய், நல்லெண்ணெய், கடுகு எண்ணெய் ஆகியவற்றில் அதிகம் உள்ளது. இது நல்லது செய்யும்.


இரண்டாவது பாலி வகை (பல்நிறைவுறா கொழுப்பு அமிலம்). அதாவது முழுமையாகாத கொழுப்பு. இது சூரியகாந்தி எண்ணெய், சோயா எண்ணெய், சோள எண்ணெய் போன்றவற்றில் அதிகமாக உள்ளது. ஆக, இவை இரண்டும் உள்ள எண்ணெய்களை அதிகம் சேர்த்துக்கொண்டால் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகாது; நல்ல கொலஸ்ட்ரால் ரத்தத்தில் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியமடையும். 


முழுமையாகாத நல்ல கொழுப்பை அதிகமாகக் கொதிக்கவைக்கும்போது அல்லது பலமுறைக் காய்ச்சி உணவுகளைத் தயாரிக்கும்போது அது முழுமையான கொழுப்பாக மாறி உடலில் சென்று கெடுதல் செய்கிறது.



கொழுப்பு அவசியம்!



காய்கறி மற்றும் அசைவ உணவுகளில் கொழுப்பு உள்ளது. ஆனால், கொழுப்பு என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது சமையல் எண்ணெய்களே. ஒருவர் சுத்த சைவமாக இருந்தாலும், ரத்தத்தில் கொழுப்பு காணப்படுவது இயல்பு. மாரடைப்பு போன்ற இதயநோய் வராமல் இருக்க HDL (High density Lipo Protein) கொழுப்பு மிகவும் அவசியம்.


அத்தியாவசியத் கொழுப்பு அமிலம் (Essential Fatty Acid) ஒமேகா 3, ஒமேகா 6 போன்றவை முழுமையாகாத பன்முகக் கொழுப்பு வகையைச் சேர்ந்தவை. இவை உடலுக்கு நல்லது மட்டுமே செய்யும். இவை அரிசித் தவிட்டு எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய், மீன் எண்ணெய் ஆகியவற்றில் அதிகம் உள்ளன. இவை கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைத்து, இதயத்தைப் பாதுகாக்கும்.


அதிகச் சூடும் ஆபத்தே!



அதிகமாகச் சூடு செய்யும்போதும், அதிகமாக எண்ணெயைக் கொதிக்கவைக்கும்போதும் அவற்றில் புகை உண்டாகும். அந்த நிலைக்குப் புகை நிலை (Smoke Pyramid) என்று பெயர். புகைய ஆரம்பிக்கும்போது ஒவ்வொரு எண்ணெயும் கெடுதல் விளைவிக்கக்கூடிய சூழ்நிலையை உண்டாக்குகிறது. அதனுடன், எண்ணெயானது `மாற்றுநிலை கொழுப்பு’ என்னும் மிகக் கெடுதல் செய்யும் ஒரு கொழுப்பாக மாறும் தன்மையை அடைய ஆரம்பிக்கும். மாற்று நிலைக்கொழுப்பு என்பது முழுமையடையாத கொழுப்பு. இது முழுமையடைந்ததைவிடப் பல மடங்கு கெடுதல் தரக்கூடியது. இந்த வகை எண்ணெய்களைப் பயன்படுத்திச் செய்யப்படும் உணவுகளை உண்பதால் நாளடைவில் மாரடைப்பு மற்றும் புற்றுநோய் உண்டாகலாம்.


எந்த எண்ணெய்...


எப்படி... எவ்வளவு? 



இன்றையச் சூழலில் மருத்துவ உலகமும் ஆராய்ச்சியாளர்களும், உணவு ஆலோசகர்களும் ஒருமித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். 



* கடலை எண்ணெய், கடுகு எண்ணெய், ஆலிவ் ஆயில், நல்லெண்ணெய் போன்றவை தினசரி சமையலுக்கு உகந்தவை. இவற்றில் ஏதேனும் இரண்டைப் பயன்படுத்தலாம்.



* சூரியகாந்தி எண்ணெய், அரிசித் தவிட்டு எண்ணெய், சோயா எண்ணெய் போன்றவற்றைச் சமையலில் (Deep fry) பொரிப்பதற்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம்.



* சுழற்சி முறையில் ஒன்று மாற்றி ஒன்றைப் பயன்படுத்தலாம். எந்த எண்ணெயாக இருந்தாலும்  தினசரி ஒரு நபருக்கு 4 டீஸ்பூன் போதுமானது.


* உருக்கிய நெய்யை ஒரு நபர், ஒரு நாளைக்கு 1-2 டீஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.


* ஒரு நாளைக்கு 15-25 கிராம் EFA போதுமானது. எப்போதுமே இரண்டு அல்லது மூன்றுவிதமான எண்ணெய்களைப் பயன்படுத்துவது நல்லது.



* ஒரு மாதத்துக்கு, ஏதாவது ஓர் எண்ணெயை அரை லிட்டர் முதல் முக்கால் லிட்டர் வரை ஒரு நபருக்குப் பயன்படுத்தலாம்.



* வனஸ்பதியை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.



எது பெஸ்ட்?



வனஸ்பதி என்று சொல்லக்கூடிய எண்ணெய் இயற்கையானது அல்ல. அதிக நாள் கெட்டுப்போகாமல் இருக்கக்கூடியது. மிகுந்த கெடுதல் செய்யக்கூடியது.


மொறுமொறுவென்று வறுக்கப் பயன்படுத்தும் எண்ணெய் விரைவிலேயே கெட்டுவிடும். ஒரு காலகட்டத்தில் தேங்காய் எண்ணெய் மிகவும் கெடுதல் செய்யக்கூடியது என்றும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகம் உள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்களால் உறுதிசெய்யப்பட்டது. ஆனால், அந்த ஆராய்ச்சி முழுவதும் அதிகம் கொதிக்கவைத்த மருத்துவப் பொருள்கள் சேர்த்த தேங்காய் எண்ணெயால் செய்யப்பட்டவை. இயற்கையாக, பல வருடங்களாக எடுக்கப்பட்ட, முறைப்படி தயாரித்து பெறப்பட்ட தேங்காய் எண்ணெய், மாரடைப்பு, வாத நோய்கள் போன்றவற்றைத் தடுக்கக்கூடிய தன்மை கொண்டவை என ஆய்வுகளில் தெரிந்திருக்கிறது. மேலும், அவற்றுள் சங்கிலித் தொடர் கொழுப்பு உள்ளது என்றும், நல்ல கொழுப்பு உள்ளது என்றும் ஆராய்ச்சியில் நிரூபணமானது.


அதிக எண்ணெய் ஆபத்தே!



எல்லா எண்ணெய்களிலும் முழுமையான கொழுப்பும், முழுமையடையாத கொழுப்பும் கலந்திருக்கின்றன. அவற்றின் விகிதமே அவற்றுக்கான வித்தியாசம். நல்ல எண்ணெயோ கெட்ட எண்ணெயோ, எந்த எண்ணெயை உட்கொண்டாலும் அவை ஒரு கிராமுக்கு 9 கலோரி சக்தி கொடுக்கக்கூடியது. (புரதமும் மாவும் 4 கலோரிகள் மட்டுமே கொடுக்கும்) அதிகமாக எண்ணெயை உட்கொண்டால், அதிகப்படியான சக்தி உடலுக்குக் கிடைக்கும். அவற்றில் நாம் தினமும் பயன்படுத்தியதுபோக, மீதம் இருக்கும் சக்தி கல்லீரலால் கொழுப்பாக மாற்றப்பட்டுத் தீங்கு விளைவிக்கும்.


எவற்றைப் பயன்படுத்தலாம்?


* காலையில் ஓர் எண்ணெய், மதியம் ஓர் எண்ணெய், இரவில் ஓர் எண்ணெய் என்று எண்ணெய்களை மாற்றிப் பயன்படுத்தலாம். 



* ஒவ்வொரு மாதமும் ஓர் எண்ணெய் என்று மாற்றிக்கொள்ளலாம். 



* மிதமாக  இருக்கும்  எண்ணெய்களுள்  உயர்வானது கடுகு எண்ணெய். இதில் முழுமைடையாத கொழுப்பு 70-80 சதவிகிதம் உள்ளது. 



* கடுகு எண்ணெயில் டிரைகிளிசரைட்ஸ் (Triglycerides) குறைவு. மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. கொழுப்பைக் குறைக்கிறது. புற்றுநோயைத் தடுக்கிறது. கடுகு எண்ணெய் சமையலுக்குச் சிறந்தது.


* ஆலிவ் எண்ணெயை அவ்வப்போது பயன்படுத்தலாம். சுட வைத்தால் கெட்டுவிடும். உணவின்மேல் ஊற்றிச் சேர்த்துக்கொள்ளலாம்.


எண்ணெயில் செய்யவேண்டியவை, செய்யக் கூடாதவை!



* நாம் பொரிக்க வேண்டியவற்றை எண்ணெயில் முன்னரே போட்டுவிட்டு, பின் எண்ணெயைக் கொதிக்க வைக்கக் கூடாது. பொரிப்பதற்கான நிலையில் அதாவது, எண்ணெய் கொதித்த பின்னர் பொரிக்க வேண்டியவற்றைப் போட வேண்டும்.



* அனைத்து உணவுப் பொருள்களையும் ஒன்றாகப் போட்டால், கொதிக்கும் எண்ணெயின் சூடு தணிந்துவிடும். அதிக நேரம் அடுப்பில், நெருப்பில் இருக்கவேண்டிவரும். அதிக அளவிலான எண்ணெயை உணவுப் பொருள் உறிஞ்சி, தனக்குள் வைத்துக்கொள்ளும். 



இது நல்லதல்ல.



* ஓரிரு முறை முன்னரே பயன்படுத்திய எண்ணெயுடன் புதிதாக எண்ணெய் சேர்க்கக் கூடாது.



* பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது.



* எந்த எண்ணெயாக இருந்தாலும் மிதமாகப் பயன்படுத்த வேண்டும்.



* சமையல் எண்ணெய்களை அதிக வெப்பம் மற்றும் சூரிய ஒளி படாமல் வைத்திருப்பது அவசியம்.



* கண்டிப்பாக எண்ணெய்களை அடுப்பின் மிக அருகில் வைத்திருப்பது தவறு.


எண்ணெயின் பலன்கள்


* உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.



* உடல் உள்ளுறுப்புகளைப் பாதுகாக்கும்.



* சில ஹார்மோன்களின் உருவாக்கத்துக்கு உதவும்.  



* சருமம் மினுமினுப்பாக இருக்க உதவும்.



* உடல் வளர்ச்சிக்கு உதவும். உடல் உள்ளுறுப்புகள் சீராக இயங்க உதவும்.


எண்ணெய் எப்போது விஷமாகும்?


* ஒரே எண்ணெயை மீண்டும் மீண்டும் அதிக வெப்பத்தில் சூடாக்கிப் பயன்படுத்தும்போது அது கெட்ட கொழுப்பாக (Trans fat) மாறி புற்றுநோய் மற்றும் இதய நோய்களுக்குக் காரணமாகிறது. இன்று பல உணவுப் பண்டங்களில் குறிப்பாகத் துரித உணவுகள், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் ட்ரான்ஸ் ஃபேட் (Trans fat) உள்ளதா என்று நாம் பார்த்து வாங்க வேண்டும்.



* ரெடிமேட் ஸ்நாக்ஸ் (Readymade Snacks) வாங்கும்போது உறையில், `டிரான்ஸ்ஃபேட் (Trans fat)’ உள்ளது என்று எழுதப்பட்டிருந்தால், அவற்றைத் தவிர்ப்பது நல்லது.



* தேவையான அளவு எண்ணெயைப் பயன்படுத்தி, உணவை டீப் ஃப்ரை செய்து சாப்பிடுவது நல்லது. பொரிக்கப் பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது நல்லதல்ல. எண்ணெயை மீண்டும் மீண்டும் சூடாக்கும்போது டிரான்ஸ் ஃபேட் உற்பத்தியாகி, அது விஷமாக மாறுகிறது.


நல்லெண்ணெய் ஏன் பெஸ்ட்?


* எண்ணெய்களிலேயே சிறந்தது என அனைத்து மருத்துவர்களும் கூறுவது நல்லெண்ணெயைத்தான். எள்ளில் இருந்து எடுக்கப்படும் இந்த எண்ணெயில் சத்துகள் நிறைந்துள்ளன. 



* வைட்டமின் பி 6 மற்றும் இ, ஆன்டிஆக்ஸிடண்ட், தாது உப்புகளான இரும்புச்சத்து, துத்தநாகம், மக்னீசியம், செம்பு மற்றும் கால்சியம் போன்றவை நிறைந்துள்ளன.


* லினொலிக் அமிலம் (Linoleic acid) மற்றும் மோனோ சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட் (MUFA) நல்லெண்ணெயில் அதிகமாக உள்ளதால், இது சமையலுக்கும் நமது ஆரோக்கியத்துக்கும் மிகவும் உகந்தது.
* மேலும், சமையலைத் தவிர்த்து சருமப் பராமரிப்புக்கும் மருத்துவத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது. 


* உடல் உஷ்ணத்தைக் குறைக்க, உடல் சீராகச் செயல்பட எண்ணெய்க் குளியலுக்கு முதலில் பரிந்துரைக்கப்படுவது நல்லெண்ணெய்தான்.



கடலை எண்ணெய்



கடலை எண்ணெய் சமையலுக்கு உகந்தது. இது உடலில் உள்ள தேவையற்ற கொலஸ்ட்ராலைக் குறைத்து, உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்பைத் தருகிறது. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. புற்றுநோய்க் கட்டிகள் வராமல் நம்மைக் காக்கிறது.


கடலை எண்ணெயில் சமைத்த உணவுகளை உண்பதால், கொழுப்பு அதிகரிக்கும் என்று நினைப்பவர்கள் உணவுடன் சிறிதளவு புளியை சேர்த்துக்கொள்ளலாம். புளியிலுள்ள நார்ச்சத்து, கொழுப்பைக் கரைக்கும் தன்மை கொண்டது.

தேங்காய் எண்ணெய்


கேரளாவில் அதிகம் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெய் சமையலுக்கு மட்டுமல்லாமல், தேகத்துக்கும் பயன்படுத்தப்படுகிறது.


சிறிதளவு தேங்காய் எண்ணெயைச் சமையலில் சேர்த்தால், உணவு  மணமாகவும் சுவையுடனும் இருக்கும்.


மிகவும் குளுமையானது. சருமத்தின் ஈரப்பதத்தைப் பராமரிக்கும். செயற்கை நிறம் எதுவும் சேர்க்கப்படாத வரை நிறமற்ற தன்மையுடன் இருக்கும். 



தேங்காய் எண்ணெயில் உள்ள ஃபேட்டி அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. செரிமானக் கோளாறைச் சரிசெய்வதோடு, சிறந்த மலமிளக்கியாகவும் செயல்படும்.


வயிற்றுப்புண்ணைச் சரிசெய்யும். பித்தத்தைக் குறைக்கும். கபத்தைக் கூட்டும். வாதத்தைச் சமன் செய்யும்.


ஆளிவிதை ஆயில் 



ஃப்ளாக் சீட் (Flaxseed) எண்ணெய் சாப்பிடுவது நல்லது என்பது தற்போது பிரபலமாகி வருகிறது. இதிலுள்ள ஒமேகா 3, மீனில் உள்ள ஒமேகா 3 ஆகியவை ஆலிவ் ஆயிலிலும் உள்ளது. இது கெட்ட கொழுப்பைக் குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கும். 



* இதன் மணம் மற்றும் நிறத்துக்குக் காரணம், இதில் உள்ள `செசமின்’ (Sesamin) என்னும் வேதிப்பொருளே.


* இந்த வேதிப்பொருள் சருமத்தின் முதுமையைத் தடுக்கக்கூடியது.
* இதய நோய்கள் வராமல் தடுக்கும். உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். 


* வாரம் ஒருமுறை ஆளிவிதை எண்ணெயை உடல் முழுவதும் தேய்த்துக் குளித்தால், சருமம் பளபளக்கும். 



* உடல் உஷ்ணம் குறையும். தவிர உணவிலும் பயன்படுத்தலாம். 



கடுகு எண்ணெய்



கடுகிலிருந்து தயாரிக்கப்படும் இந்த எண்ணெயைப் பெரும்பாலும் வட இந்தியர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். அங்குள்ள தட்பவெப்பநிலைக்கு இது ஏற்றது. 



காரமான ருசி உடையது. உஷ்ணத் தன்மை கொண்டது. சளி மற்றும் காய்ச்சலைக் குணப்படுத்தும். 



உடலில் உள்ள கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும். இதய நோய்களில் இருந்து நம்மைக் காக்கும். மூட்டுவலியைக் குறைக்கும்.


கடுகு எண்ணெயில் உள்ள சல்ஃபர், உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவும். 


செரிமானச் சக்தியை அதிகரிக்கும். மேலும், இதில் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், ஆன்டி-பாக்டீரியல் குணங்கள் நிறைந்துள்ளன. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும். வயிற்றுவலியைப் போக்குவதோடு கப, வாத தோஷங்களைக் குறைக்கும். பித்தத்தை அதிகரிக்கும். சருமம் மற்றும் கூந்தல் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.



ரைஸ் பிரான் ஆயில் 



தவிட்டிலிருந்து எடுக்கப்படும் இது அரிசித் தவிட்டு எண்ணெய் (ரைஸ் பிரான் ஆயில்) எனப்படுகிறது. இது உணவுக்கு உண்மையான நிறத்தையும் மணத்தையும் கொடுக்கும். சுத்திகரிக்கப்பட்ட இந்த எண்ணெய்க்கு நிறமில்லை, மணமுமில்லை. புரதச்சத்து நிறைந்தது. கொழுப்பு குறைவாக இருக்கும். இதை நீண்ட நாள்கள் வைத்துப் பயன்படுத்தலாம். இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளது. உணவுகளைப் பொரிக்கச் சிறந்த எண்ணெய், சமையலுக்கு உகந்தது என உலக சுகாதார நிறுவனம் சான்றளித்துள்ளது. இது உடலில் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயத்தைக் காக்கிறது. உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.


வைட்டமின் இ மற்றும் இயற்கை ஆன்டிஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்துவதோடு, சருமத்தைக் காக்கும். பெண்களுக்கு மாதவிடாயின்போது ஏற்படும் அழற்சியைக் குறைக்கும். 


பாமாயில்



விலை மலிவாகக் கிடைக்கும் இந்த எண்ணெய் நடுத்தரவாசிகளிடையே புழக்கத்தில் இருக்கிறது. 



`பாமாயில் நல்லதல்ல’ என்ற கருத்து பரவலாக நிலவினாலும், இதில் உள்ள கரோட்டின் சத்து புற்றுநோய் வராமல் தடுக்கக்கூடியது. 



இதில் வைட்டமின் இ மற்றும் ஆன்டிஆக்ஸி்டண்ட் நிறைந்துள்ளது. உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும்.


பாமாயில், சமைக்கப்படும் உணவுக்கு நிறத்தையும் மணத்தையும் கொடுக்கிறது. 


பாமாயிலில் கெட்ட கொழுப்பு நிறைந்துள்ளது. இதனால் உடல் பருமன் ஏற்பட வழிவகுக்கும். ஆகவே குறைந்த அளவு பாமாயிலைப் பயன்படுத்துவது சிறந்தது அல்லது சூரியகாந்தி எண்ணெயுடன் சேர்த்துப் பயன்படுத்தலாம். 



எந்த எண்ணெயாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சூடுபடுத்திப் பயன்படுத்தினால், அதுவும் நஞ்சே.



ரீஃபைண்டு ஆயில்



பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் சமையலுக்குப் பயன்படுத்துவது ரீஃபைண்டு ஆயிலே. இதில் குறைந்த அளவு உயிர்ச்சத்தே உள்ளது. இதற்கு காரணம், அதன் தயாரிப்பு முறை. ரீஃபைண்டு எண்ணெயைச் சுத்திகரிக்கும்போது, அதில் உள்ள நிறம், கொழகொழப்புத் தன்மை மற்றும் ஆரோக்கியத்துக்குத் தேவையான கொழுப்புச்சத்து அனைத்தும் நீங்கிவிடும்.


ரீஃபைண்டு ஆயில்களைத் தயாரிக்கும் போது அவற்றில் உள்ள எண்ணெய் மட்டுமல்லாமல், அதனுடன் உயிர்ச்சத்துகளும் சேர்த்துப் பிரித்தெடுக்கப்படுகின்றன. சுத்திகரிக்கப்படும்போது எண்ணெய் சூடாவதால், ரசாயனத் தன்மை கொண்டதாக மாறிவிடுகிறது. ஆகவே ரீஃபைண்டு ஆயிலை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.


ரீஃபைண்டு எண்ணெய் பயன்பாடு, உடலில் நல்ல கொழுப்புச் சேர்வதைத் தடுக்கிறது. இதனால், பல்வேறுவிதமான உடல் பாதிப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக உயர் ரத்த அழுத்தம், இதய நோய், உடல் பருமன், புற்றுநோய் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 



தாவர எண்ணெய்



தாவர எண்ணெய் மனித உடலின் கல்லீரலுக்குச் சென்ற பின்னர் கொழுப்பாக மாறக்கூடியது. பொதுவாக, முழுமையான கொழுப்பு நிறைந்தவை கெடுதல் செய்யக்கூடியவை என்று கருதப்படுகிறது. எந்த எண்ணெய் குளிரான வெப்ப நிலையில் உறைந்துவிடுகிறதோ, அதில் அதிக முழுமையான கொழுப்பு இருக்கிறது என்று பொருள். நெய், வெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவை கல்லீரலில் இருந்து, அடர்த்திக் குறைந்த லிப்போ புரோட்டீன், எல்டிஎல் கொழுப்பு, கெடுதல் செய்யும் லிப்போ புரோட்டீன் ஆக மாறி, நாளடைவில் ரத்தத்தில் கலந்து, ரத்த நாளங்களில் படிந்து இதய நோய்களை உண்டாக்குகிறது.


மீன் எண்ணெய்


மீன் எண்ணெய் மட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளது. விலங்குகளிலிருந்து எண்ணெய் எடுப்பது குறித்து ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 



மீன் எண்ணெயில் ஒமேகா 3  ஃபேட்டி அமிலம் நிறைந்துள்ளது. மீன் எண்ணெயைப் பெரிய அளவில் சமையலில் பயன்படுத்த முடியாது. ஆகவே, மாத்திரை வடிவில் உட்கொள்ளலாம். இது குறைந்த ரத்த அழுத்தத்தைச் சரிசெய்யும். உடல் பருமனைக் குறைக்கும். சிலருக்கு மீன் எண்ணெய் மாத்திரை ஒவ்வாமையை ஏற்படுத்தும்.


எண்ணெயிலும் மாற்றம் வேண்டும்!


ஒரே வகையான எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்தக்கூடாது. அது உடலுக்குக் கெடுதலை உண்டாக்கும். ஒரேவிதமான எண்ணெயைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், அதில் உள்ள நல்ல கொழுப்புடன் கெட்ட கொழுப்பும் சேர்ந்து உடலில் தங்கும். ஆகவே, ஒவ்வொரு மாதத்துக்கும் ஒவ்வொரு வகையான எண்ணெயைப் பயன்படுத்தினால், எண்ணெய்களின் நன்மையை மட்டும் பெறலாம். அவற்றிலுள்ள கெட்டதைத் தவிர்க்கலாம்.




எவ்வளவு காலம் சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம்?


சமையலுக்காக வாங்கியிருந்தாலும், அதைப் பயன்படுத்தாமல் வைத்திருந்தால் குறைந்தபட்சம் மூன்று மாதங்கள் வரை வைத்திருக்கலாம். மாறாக, அந்தந்த எண்ணெய் பாக்கெட்டுகளில் உள்ள காலாவதித் தேதியை வைத்தும் பயன்படுத்தலாம். அதில் குறிப்பிட்டுள்ள நாள்கள் வரை, அந்த எண்ணெயைப் பயன்படுத்தலாம். இப்படி சேமித்து வைத்துப் பயன்படுத்தும் எண்ணெயில் செய்யப்பட்ட உணவுகளைச் சாப்பிடும்போது சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படும். அது பொதுவானதே. மேலும், எண்ணெயின் பயன்பாட்டுக் காலம் அவற்றின் தன்மையைப் பொறுத்து மாறுபடும். எண்ணெய் கெட்டித்தன்மையை அடைந்துவிட்டால், அதன் ஆயுள் காலம் முடிந்துவிட்டது என்ற கருத்து பரவலாகக் காணப்படுகிறது. பெரும்பாலும் தேங்காய் எண்ணெய் குளிர்காலத்தில் கெட்டியாகி விடும். குளிர்ச்சியானது மைனஸ் 10 டிகிரிக்கும் கீழே செல்லும்போது எண்ணெய் அதன் கெட்டித்தன்மையை அடையும்.



மாற்றுவழி...


செக்கு எண்ணெய்!



செக்கில் ஆட்டிய எண்ணெயைப் பயன்படுத்தினால், ரசாயனங்களில் இருந்து விடுபடலாம். செக்கில் ஆட்டிய எண்ணெய் பழுப்பாக (Brown) இருப்பதைப் பார்த்துப் பயப்படத் தேவையில்லை. ஆனால் ரீஃபைண்டு ஆயிலின் வெளிர் நிறத்தையும் தண்ணீர்போல் இருப்பதையும் பார்த்து அதுதான் சிறந்தது என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. உடல் எடையைக் குறைக்க என எண்ணெய் வாங்கும்போது அதிகக் கவனம் தேவை. ஆலிவ் ஆயில் நம் கலாசாரத்தின்படி எண்ணெயில் பொரிப்பதற்கு ஏற்புடையதாக இருக்காது. இதன் விலையும் மிக அதிகம். சருமப் பராமரிப்புக்குச் சிறந்தது; உடனடியாகத் தயாரிக்கும் சிற்றுண்டிகளுக்கு ஏற்றது. ஆதலால் ஆலிவ் ஆயில்தான் பெஸ்ட் என்பது இல்லை. நம் முன்னோர் பயன்படுத்திய நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெயே உணவு சமைப்பதற்குப் போதுமானது. வட இந்தியர்கள் அவர்களது சூழலுக்கேற்ற கடுகு எண்ணெய் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.



செக்கு எண்ணெயை எப்படி வாங்குவது? 


கலப்படமற்ற, சுத்தமான இயற்கைக் குணங்கள் மாறாமல், பாரம்பர்ய முறையைப் பயன்படுத்தி மரச்செக்கு எண்ணெய் தயாரிக்கப்படுகிறது. செக்கு முறையில் எடுக்கப்படும் எண்ணெயில் வெப்பம் இருக்காது. இதனால், எண்ணெயில் ஏற்படும் உயிர்ச்சத்துகளின் இழப்பு தடுக்கப்படும். செக்கு எண்ணெய் பார்ப்பதற்கு சிறிது நிறம் குறைவாக இருக்கும். தானியங்களின் மணம் நிறைந்திருக்கும். இவற்றை ஒரு வருட காலம் வரை சேமித்து வைத்துப் பயன்படுத்தலாம். செக்கு எண்ணெய் நல்ல மணத்துடனும் கெட்டித்தன்மையுடனும் இருக்கும். அதிக பிசுபிசுப்புத்தன்மை அற்றதாக இருக்கும்.



செக்கு எண்ணெயின் பலன்கள்


* செக்கு எண்ணெய் உடல் ஆரோக்கியத்தைக் காக்கக்கூடியது. நோய்த் தாக்குதல்கள் இல்லாமல் நீண்ட ஆயுளை வழங்கக்கூடியது.



* வைட்டமின்கள், இரும்புச் சத்து, துத்தநாகம், மக்னீசியம், செம்பு மற்றும் கால்சியம் சத்துகள் செக்கு எண்ணெயில் நிறைந்துள்ளன.


* இவற்றில் உள்ள தாதுப்பொருள்கள் கைகால் மூட்டு எலும்புகளுக்கு வலிமையைத் தரும். எலும்புத் தேய்மானத்தைத் தடுக்கும்.


* உடலுக்குத் தேவையான நல்ல கொழுப்புகள் இதில் நிறைந்துள்ளன. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குடலைச் சுத்தம் செய்வதோடு, முதுமையைத் தாமதப்படுத்தும். மூலம், மாதவிலக்கு பிரச்னைகளைக் குணப்படுத்தும். உடலை வலுப்படுத்தும். 



யாருக்கு எண்ணெய் கூடாது?



* அனைவரும் எண்ணெயை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். உடலுக்குத் தேவையான கொழுப்பு, எண்ணெயின் மூலமாகத்தான் அதிகமாகக் கிடைக்கிறது. எண்ணெயின் அளவைக் குறைத்துக்கொள்ளலாமே தவிர, ஒரேடியாக ஒதுக்கிவிடக் கூடாது.


* இதய நோயாளிகள் நல்லெண்ணெய், ஆலிவ் ஆயில், சூரியகாந்தி, ரீஃபைண்டு ஆயில், ரைஸ் பிரான் ஆயில் போன்றவற்றை உபயோகிக்கலாம். நெய், வனஸ்பதி, பாமாயில் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம்.


* தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். நாள் ஒன்றுக்கு நான்கு முதல் ஐந்து டீஸ்பூன் வரை பயன்படுத்துவது சிறந்தது.