அகில இந்திய கூறைநாடு சாலியர் மகாஜன சங்கத்தின் மூன்றாம்
ஆண்டு பொதுக்குழு மற்றும் ஆண்டு விழா 13.08.2017 ஞாயிற்றுக்கிழமை தி.நகர்
வெங்கடநாராயணா சாலையில் உள்ள செ.தெ.நாயகம் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
சென்னை முகவரி கையேடு வெளியிடல்:
காலை 12.00 மணி அளவில் விழா தொடங்கியது. முதல் நிகழ்வாக
சென்னையில் வாழும் கூறைநாடு சாலியர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும்
மின்னஞ்சல் ஆகியவை கொண்ட முகவரி கையேட்டினை வெளியிட்டு கலசலிங்கம் & ஆனந்த்
கல்விக் குழுமத்தின் தலைவர் இளைய வள்ளல் திரு.க.ஸ்ரீதரன் வாழ்த்துரை வழங்கினார்.
02.09.2017 அன்று MRC Centre-வள்ளியம்மை ஹாலில் நடைபெற உள்ள தனது மகன் திரு.ஷசிஆனந்தின்
திருமண வரவேற்பிற்கு அனைவரையும் வருகை புரிந்து மணமக்களை வாழ்த்திடுமாறு
வேண்டினார்.
2016-2017-நிதியாண்டிற்கான
பொதுக்குழு கூட்டம்:
காலை 12.30 மணிக்கு சங்கப் பொதுக்குழு கூட்டம் தலைவர் திரு.வை.வெள்ளையன்
அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் திரு.ந.முத்து அனைவரையும்
வரவேற்றார். 2016-17-க்கான ஆண்டறிக்கையினை செயலர் முனைவர் கே.ஜி.பழனி சமர்ப்பித்து
கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார். சான்றளிக்கப்பட்ட தணிக்கையாளரால் தணிக்கை
செய்யப்பட்ட 2016-17 நிதி ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையினை பொருளர் திரு.மா.சங்கரன்
சமர்ப்பித்தார். செயற்குழுவால் பரிந்துரைக்கப்படும் பொதுக்குழுத் தீர்மானங்களை
செயற்குழு உறுப்பினர் திரு.கோ.பாலசுப்பிரமணியம் வாசித்தார். விரிவான
விளக்கங்களுக்குப் பின்னர், பொதுக்குழு ஏகமனதாக அனைத்தையும் ஏற்று ஒப்புதல்
வழங்கியது. சங்கத்தின் துணைத்தலைவராக திரு.N.நடராஜன் அவர்களும், செயற்குழு
உறுப்பினர்களாக திரு.Rஅழகப்பன், திரு.K.சாய்கணேஷ் மற்றும் திரு.E.விஷ்னுவர்தன்
ஆகியோர்களும் பொறுப்பேற்றனர். ஏற்புரை ஆற்றிய திரு.N.நடராஜன், நல்ல பாதையில் சங்கம்
சென்று கொண்டு இருக்கிறது, தொடர்ந்து நாம் செயல்படும் போது நமது செயல்பாடுகளைக்
கண்டு மற்றவர்கள் தாங்களே நம்மிடம் வருவார்கள் எனத் தெரிவித்தார். செயற்குழு
உறுப்பினர் திரு.S.வெங்கடேஷ் நன்றி நவில காலை அமர்வு முடிவுற்றது.
விளையாட்டுப் போட்டிகள்.
மதிய உணவிற்குப் பின்னர் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. சிறு
குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பங்கேற்றும் வகையில் 12 போட்டிகள் வெளி மைதானத்தில்
நடைபெற்றன. அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
கலைநிகழ்ச்சிகள்:
மாலை 5.00 மணியளவில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள்
நடைபெற்றன. சிறுமி B.வைஷ்ணவி பாரதியாராகவும், சிறுமி R.காருண்யா திருவள்ளுவராகவும்,
சிறுவன் S.லலித்அர்ஜுன் நேருவாகவும் மேடையில் தோன்றி அனைவரையும் மகிழ்வித்தனர்.
சிறுமி K.தார்த்தி திரைப்பாட பாடலுக்கு நடனமாடினாள், சிறுவன் V.சாய் சபரிஸ் வேத
மந்திரங்களைப் பாடினார், செல்வி.S.தேவிஸ்ரீ தற்காப்புக் கலை காராத்தே செய்து காட்டினார், அனைத்திற்கும்
முத்தாய்ப்பாக திரு.A.வெங்கடாசலம் (BSNL) – திருமதி.V.கவிதா
தம்பதியரின் புதல்வி செல்வி.V.ஷோபனா “அசைந்தாடும் மயில் ஒன்று கண்டார்” என்ற
பாடலுக்கு அபிநயத்துடன் ஆடிய பரத நாட்டியம் அனைவரையும் கவர்ந்தது. கூறைநாடு சாலிய
சமுகத்தில் ஒரு நாட்டியத் தாரகை வளர்ந்து வருவதை அனைவரும் வாழ்த்தினர்.
படத்திறப்பு:
சங்கத்தின் துணைத்தலைவராக இருந்த, தனது இறுதி கட்டத்திலும் சங்க
வளர்ச்சியைப் பற்றி பேசிக் கொண்டிருந்த தெய்வத்திரு.S.நமசிவாயம் அவர்களின்
திருவுருவப் படத்தினை ஏழூர் சாலிய சமுதாயத்தைச் சேர்ந்த, சென்னை ராணுவ பொறியியல்
சேவையில் பணியாற்றும் கவிஞர் செ.வ. இராமாநுசன் அவர்கள் திறந்து வைத்து
நமசிவாயத்துடனான தனது நட்பு மற்றும் அவரது பண்புகளை விரிவாக எடுத்துரைத்து புகழஞ்சலி
செலுத்தினார்.
வினாடிவினா:
அரங்கத்தில் இருந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும்
பதிலளிக்கும் வகையிலான முழுதும் தமிழ்க் கலாச்சாரம் தொடர்பான வினாக்களை கவிஞர்
செ.வ. இராமாநுசன் அவர்கள் கேட்டு, விடை அளித்தவர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள்
வழங்கப்பட்டன. ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தாமல் தமிழில் இறுதிவரை பேசியது
அனைவரையும் ஆச்சரியப் படுத்தியதுடன், தாங்களும் முடிந்த வரை தமிழிலேயே பேச
வேண்டும் என்ற தாக்கத்தை அனைவரிடமும் தூண்டியது.
புனுகீஸ்வரர் கோயில் திருப்பணி &
குடமுழுக்கு:
மயிலாடுதுறை வட்டம், கூறைநாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு
முன்னர் கட்டப்பட்ட கூறைநாடு சாலியர்களுக்குச் சொந்தமான அருள்மிகு சாந்தநாயகி சமேத
புனுகீஸ்வரர் கோயில் திருப்பணி சுமார் ஒரு கோடியே இருபது லட்ச ரூபாயில்
செய்யப்பட்டு, திருக்குடமுழுக்கு கடந்த 16.07.2017 அன்று ஊரார் வியந்து பாராட்டும்
வகையில் நடைபெற்றது. இதனை அகிலம் முழுவதும் வாழும் கூறைநாடு சாலியர்கள் மற்றும்
ஆன்மீகவாதிகள் கண்டு களிக்கும் வகையில் இணையதள தொடர்பு (link) மூலம்
நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. இவை அனைத்திற்கும் காரணமாக இருந்த திருப்பணிக்
கமிட்டியினரைப் பாராட்டி கௌரவிக்கும் விழா தொடர்ந்து நடைபெற்றது. கூறைநாடு சாலியர்
சமுதாயத்தினரான கோயில் தக்கார் தரணி திரு.K.வெங்கு அவர்கள், திருப்பணி &
கும்பாபிஷேக கமிட்டித் தலைவர் உமாபேன்ஸி திரு.B.ரெங்கராஜ் மற்றும் பாலாயணம் செய்த
நாள் தொடங்கி அனைத்து திருப்பணிகளையும் திட்டமிட்டு, சிறப்பாக செய்து முடித்த
திருப்பணி பொறுப்பாளர், முன்னாள் சங்கச்செயலர் திரு.V.கோவிந்தராஜ் ஆகியோர்கள்
சால்வை, சந்தனமாலை அணிவிக்கப்பட்டு மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்
பட்டனர்.
கோயில் தக்கார் தரணி திரு.K.வெங்கு, தான் சங்கத் தலைவராக
இருந்த காலத்தில் சாலியர் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இன்று நல்ல வருமானத்தை
தருவதைக் குறிப்பிட்டு, அதுபோல சமுதாய, கோயில் சொத்துக்களை மீட்டெடுக்கும் பணியில்
அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டிதியதின் அவசியத்தை வலியுறுத்தினார்.
திருப்பணி தொடங்கிய காலம் முதல் ஒவ்வொன்றையும் தெளிவாகத்
திட்டமிட்டு, கமிட்டிகளை உருவாக்கி, அனைத்து தரப்பினரையும் அன்புடன் அரவணைத்து,
சிறு பிரச்சனை கூட ஏற்படாத வகையில் கும்பாபிஷேகத்தை பார் புகழ நடத்தி முடித்த உமாபேன்ஸி
திரு.Bரெங்கராஜ் பேசுகையில், திருப்பணி & கும்பாபிஷேகத்திற்காக வசூலான தொகை
ஒரு கோடியே இருபது இலட்சத்தில் ஒரு கோடி ரூபாய் கூறைநாடு சாலியர் சமுதாயத்தினர்கள்
தாங்களாகவே முன்வந்து அளித்த தொகை என்பதைத் தெரிவித்து, இதில் ரூபாய் பத்து இலட்சம்
சேமிக்கப்பட்டு உள்ளதையும் குறிப்பிட்டார். இன்றைய நாளில் கோயில் பூசைகளுக்கு
மயிலாடுதுறை சிவவேதகாம பள்ளியில் இருந்து குருக்கள் நியமிக்கப் பட்டுள்ளதையும்,
இங்கு பயிலும் மாணாக்கர்கள் தினந்தோறும் கோயிலில் வேத மந்திரங்களை ஓதுவதற்கும்
ஏற்பாடு செய்துள்ளதையும் குறிப்பிட்டு, கோயில் மூன்றுகால பூசைகள், குருக்கள்,
பரிசாரகர் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் மாதத்திற்கு சுமார் ரூ.80000-க்கு மேல் தேவைப்படுவதாகவும்,
கோயில் சொத்துக்களில் இருந்து வருமானம் வரவில்லை என்பதையும் தெரிவித்தார். தனது குடும்பத்தினரின்
பங்களிப்பாக ரூ.30000 அளிப்பதாகவும் தெரிவித்தார். மீதி தொகை ரூ.50000 நமது
சமுதாயத்தினர் முன்வந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கையினை வைத்து,
ஒவ்வொருவரும் தனது சம்பாத்தியத்தில் ஒருநாள் ஊதியம்/வருமானத்தை தாமாகவே அளித்திட
வேண்டும் எனவும் வேண்டினார். திருப்பணி & கும்பாபிஷேகத்திற்கு போதுமான நிதி
வசூலாகி விட்டதால் சென்னைக்கு நிதி கேட்டு அப்போது வரவில்லை எனக் குறிப்பிட்ட ரெங்கராஜ்,
தற்போது அன்றாட பூசைகள் நடைபெற சென்னைவாழ் சாலியர்கள் நன்கொடை அளித்து ஒத்துழைப்பு
நல்கிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். சென்னை சங்கம் இதற்கான நிதி
வசூலைச் செய்து தரும் என்ற உத்தரவாதத்தினை செயலர் முனைவர் கே.ஜி.பழனி
தெரிவித்தார்.
திரு.V.கோவிந்தராஜு பேசுகையில், சந்தித்த பல்வேறு
பிரச்சனைகளையும் எடுத்துரைத்து, இந்து அறநிலைய விதிமுறைகளுக்கு உட்பட்டு
செயல்பட்டாக வேண்டிய நிலையில், திருப்பணிகள் அனைத்து உபயதாரர்களே செய்து தருகின்ற
வகையில் அனுமதி பெறப்பட்டு செய்ததையும், கோயில் தக்கார் மற்றும் திருப்பணி கமிட்டித்
தலைவர் ஆகியோர்களின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதல் படியே தான் செயல்பட்டதாகவும்
தெரிவித்தார்.
புதுமணத்தம்பதியரை கௌரவித்தல்:
இந்த ஆண்டில் திருமணமாகி சென்னையில் குடியேறி உள்ள புதுமணத்
தம்பதியர்கள் 1) திரு.S.அர்ஜுன் கணேஷ் - திருமதி. V.நிவேதா, 2) திரு.R.பிரபு -
திருமதி.R.J.லக்ஷ்மி, 3) திரு.S. விக்னேஷ் - திருமதி.V.விஜயலக்ஷ்மி ஆகியோர் சால்வை
அணிவிக்கப்பட்டு, வெள்ளி காமாட்சி விளக்கு அளித்து கௌரவிக்கப் பட்டனர்.
பரிசு வழங்கல்:
இந்த ஆண்டில் பொறியியல் துறையில் பி.எச்.டி பட்டம் பெற்ற
முனைவர் G.ராமதாஸ் சால்வை அணிவித்து, தாமிரப் பட்டயமும் வழங்கி
பாராட்டப்பட்டார்.
பிளஸ் 2 தேர்வில் மாநில கல்வி முறையில் பயின்று 1200-க்கு
1136 மதிப்பெண் பெற்ற மாணவி செல்வி D.ரக்க்ஷனா முதல்பரிசு ரூ.2000, 1200-க்கு 1050
மதிப்பெண் பெற்ற செல்வி S.தீபிகா இரண்டாம் பரிசு ரூ.1500 மற்றும் 1200-க்கு 809
மதிப்பெண் பெற்ற செல்வன் K.ராம்பிரசாத் மூன்றாம் பரிசு ரூ.1000 வழங்கப்பட்டு,
அனைவருக்கும் தாமிரப் பட்டயமும் அளிக்கப்பட்டது.
அரசு பாடதிட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 500-க்கு
475 மதிப்பெண் பெற்ற செல்வன் K.ராஜ்பிரவீன் முதல்பரிசுத் தொகை ரூ.2000 மற்றும் தாமிர
பட்டயம் வழங்கி பாராட்டப்பட்டார்.
பிளஸ் 2 தேர்வில் CBSE கல்வி
முறையில் பயின்று 500-க்கு 466 மதிப்பெண் பெற்ற மாணவி செல்வி M.ப்ரீத்தா
முதல்பரிசு ரூ.2000 மற்றும் தாமிரப் பட்டயம் வழங்கி பாராட்டப்பட்டார்.
பத்தாம் வகுப்பு CBSE கல்வி முறையில் 10-க்கு
9.6 CGPA மதிப்பெண் பெற்ற
செல்வி K.சுவேதாவிற்கு முதல்பரிசு ரூ.2000 மற்றும் தாமிரப் பட்டயமும்
வழங்கி பாராட்டப்பட்டார்.
தொடர்ந்து பல்வேறு விளையாட்டு / திறனாய்வு போட்டிகள், மாறுவேடம்
/ கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும் சான்றிதழும் அளிக்கப் பட்டன.
இரவு
8.00 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது