Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதன், 30 ஆகஸ்ட், 2017

கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் ஸ்ரீதரன் இல்லத் திருமண வரவேற்பு அழைப்பிதழ்

அன்பு சொந்தங்களே. வணக்கம்.

எங்கள் மூத்த புதல்வன்

திருவளர்ச்செல்வன் 

ஷஷி ஆனந்த் 

திருவளர்ச்செல்வி 
சுப ஆனந்தி  

திருமண வரவேற்பு வரும் 02.09.2017 சனிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு மேல் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், சாந்தோம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மேயர் ராமநாதன் செட்டியார் -வள்ளியம்மை அரங்கில் நடைபெற இருப்பதால் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் தவறாது கலந்துகொண்டு மணமக்களை ஆசீர்வதித்து வாழ்த்தியருள வேண்டுகிறோம்.

தங்கள் அனைவரையும் நேரில் அழைக்க இயலாத காரணத்தால், இதனையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

தங்கள் அன்புள்ள

Dr. K . ஸ்ரீதரன்

Dr. S .  அறிவழகி


தங்கள் நல்வரவை நாடும்

S . அர்ஜூன் கலசலிங்கம் (மணமகன் சகோதரர்)




ஞாயிறு, 27 ஆகஸ்ட், 2017

மத்திய அரசின் வட்டி மானியத் திட்டங்கள்!


மத்திய அரசின் வட்டி மானியத் திட்டங்கள்!


பொருளாதாரரீதியில் பின்தங்கியுள்ள குடும்பத்தைச் சோ்ந்த மாணவர்கள், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பொதுத்துறை வங்கிகளிலும் நிதி மற்றும் மேம்பாட்டு அமைப்புகளிலும் கல்விக்கடன் வாங்கிப் படிக்கிறார்கள். கல்விக்கடன் பெற்று படிக்கும் மாணவர்களின் குடும்பப் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதற்காக மத்திய அரசு  கல்விக்கடனுக்கான பல்வேறு வட்டி மானியத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றது. 

1. மத்திய அரசு வழங்கும் வட்டி மானியத்திட்டம் (Central Scheme to Provide Interest Subsidy)

பொருளாதாரரீதியாகப் பின்தங்கியுள்ள குடும்பங்களைச் சோ்ந்த மாணவர்கள் உள்நாட்டில் படிப்பதற்காக வாங்கும் கல்விக்கடனுக்கான வட்டி மானியத் திட்டம் இது. மத்திய, மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் உள்ள அனுமதி பெற்ற தொழில்நுட்பத் தொழில்முறைப் பட்டப்படிப்புகளைப் படிக்கும் மாணவர்கள் கல்விக் கடனுக்கான மத்திய அரசின் வட்டி மானியச் சலுகையைப் பெறலாம். 

ஆண்டிற்கு ரூ. 4.50 லட்சம் வரை வருமானமுள்ள  குடும்பத்தைச் சோ்ந்த மாணவா–்கள் கல்விக்கடன் பெறும்போது இச்சலுகை கிடைக்கும், ஓராண்டு வரையில் அல்லது படித்துமுடித்து வேலை கிடைத்தவுடன் ஆறுமாத காலம் இதில் எது முதலில் வருகிறதோ அதுவரையிலான காலகட்டம் வரையுள்ள வட்டியை மானியமாகப் பெறலாம். 

இந்திய வங்கிகள் சங்க உறுப்பினா் வங்கிகள் மற்றும் தேசிய பிற்படுத்தப்பட்டோா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தேசிய மாற்றுத்திறனாளிகள் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டுக்கழகம், தேசிய சிறுபான்மையினா் பொருளாதார மேம்பாட்டுக் கழகம், தேசிய தாழ்த்தப்பட்டோா் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டுக் கழகம், தேசிய துப்புரவுத் தொழிலாளா் பொருளாதாரம் மற்றும் மேம்பாட்டுக் கழகம், தேசிய பழங்குடியினா் பொருளாதார மற்றும் மேம்பாட்டுக் கழகம் போன்ற வங்கி சாரா நிதி நிறுவனங்களில் பெறப்படும் கல்விக்கடன்களுக்கும் வட்டி மானிய சலுகைத் திட்டம் பொருந்தும், இச்சலுகையைப் பெற வங்கிக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போதே மாநில அரசின் வருவாய்த் துறையிடமிருந்து பெற்ற வருமானச் சான்றிதழை இணைத்து இந்த வட்டி மானியத் திட்டத்திற்கும் விண்ணப்பம் செய்யவேண்டும்.

2. டாக்டா் அம்பேத்கா் மத்திய அரசின் வெளிநாட்டில் படிப்பதற்கான கல்விக்கடனுக்கான பிற்படுத்தப்பட்டோருக்கான வட்டி மானியத் திட்டம் (Dr. Ambedkar Central Sector Scheme of Interest Subsidy on Educational Loan for Overseas studies for other backward classes (OBCs)மற்றும் டாக்டா் அம்பேத்கா் மத்திய அரசின் வெளிநாட்டில் படிக்க விரும்பும் பொருளாதாரரீதியாகப் பிற்படுத்தப்பட்டோருக்கான கல்விக்கடனுக்கான வட்டி மானியத் திட்டம் Dr. Ambedkar Central Sector Scheme of Interest Subsidy of Educational Loan for Over Studies for Economically Backward Classes (EBCs)

வெளிநாட்டில் படிக்க விரும்பும் பிற்படுத்தப்பட்ட மாணவா–்கள் மற்றும் பொருளாதாரரீதியாகப் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பெறும் கல்விக் கடனுக்கு வட்டி மானியம் வழங்கும் மத்திய அரசின் திட்டங்களே இவையிரண்டும். வெளிநாட்டில் அங்கீகாரம் பெற்ற பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சிப் பிாிவு மாணவர்கள் இக்கல்விக்கடன் மானியத்தைப் பெறத் தகுதியானவா–்கள். 

படிக்கும் காலம் மற்றும் அதற்குப் பிறகு ஓராண்டு அல்லது படிக்கும் காலம் அதன் பிறகு வேலையில் சோ்ந்த ஆறு மாத காலம் இதில் எது முதலில் வருகின்றதோ அதுவரையில் உள்ள காலத்திற்குக் கல்விக்கடனுக்கான வட்டி மானியம் வழங்கப்படும், அதன் பிறகு கடன் மற்றும் வட்டியைக் கடன் பெற்றவர்களே குறிப்பிட்ட காலத்திற்குக் கட்ட வேண்டும், எந்ெதந்தப் பாடப்பிாிவுகளுக்கு மானியச்சலுகை வழங்கப்படும் என்ற பட்டியலிருக்கிறது. புதிதாகச் சோ்க்கவோ தவிா்க்கவோ அவ்வப்போது இதற்காக நியமிக்கப்பட்ட குழு முடிவு செய்யும்.

கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்கும்போதே இந்த வட்டி மானியத்திட்டத்திற்கான விண்ணப்பத்தையும் சோ்ந்து பதிவு செய்வது நல்லது. இதற்கான விண்ணப்பிப்பவா் வேலையற்றவராக அல்லது அவா்களது பெற்றோர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கும் குறைவாக இருக்க வேண்டும். அதற்குரிய வருமானச் சான்றிதழையும் தாலுகா அலுவலகத்தில் பெற்றுச் சமா்ப்பிக்க வேண்டும்.   

3. பதோ பிரதேஷ் (Padho Pradesh)வெளிநாட்டில் படிக்க விரும்பும் சிறுபான்மையின மாணவா–்கள் வாங்கும் கல்விக்கடனுக்கான வட்டி மானியத்திட்டம்

Scheme of Interest Subsidy on Educational Loans for Overseas Studies for the Students Belonging to the Minority Communities தகுதி வாய்ந்த சிறுபான்மையான மாணவா–்கள் பொருளாதாரரீதியாகப் பின்தங்கி யிருந்தாலும் வெளிநாட்டில் படிக்க வாங்கும் கல்விக்கடனுக்கான வட்டி மானியத் திட்டத்தை மத்திய அரசு கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்திவருகிறது, இச்சலுகையைப் பெறச் சம்பந்தப்பட்ட மாணவா் வேலையற்றவராக, குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்திற்குள் இருக்க வேண்டும் என்பது முக்கிய அம்சம் ஆகும். வெளிநாடுகளில் பட்ட மேற்படிப்பு, எம்.பில் மற்றும் ஆராய்ச்சிப் படிப்பு படிக்கும் மாணவா–்கள் இச்சலுகையைப் பெறலாம். www.minorityattairs.com என்ற இணையதளத்தில் தகவல்களைப் பெறலாம்.  

எல்லாம் வல்ல ABC ஜூஸ் Miracle Drink - நன்றி குங்குமம் டாக்டர்

Dinakaran Daily news




ABC டிரிங்க் கேள்விப்பட்டிருக்கீங்களா? 
Apple, Beetroot, Carrot இந்த மூன்றும் சேர்ந்த கலவைதான் ஏ.பி.சி ஜுஸ். எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கொண்ட ஜூஸ் என்பதால் ‘மிராக்கிள் டிரிங்க்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. நுரையீரல் புற்றுநோய் மற்றும் பிற நோய்களுக்கான மூலிகை மருந்தாக சீன மருத்துவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஏ.பி.சி ஜூஸ், உடல் மற்றும் மூளை ஆராக்கியத்துக்குப் பயன்படும் அற்புத குணங்களைப் பெற்றிருப்பதால் இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டது. அப்படி என்ன இதில் ஸ்பெஷல் என்ற நம் சந்தேகத்துக்கு ஏபிசி ஜூஸின் பலன்களைப் பட்டியலிடுகிறார் உணவியல் நிபுணர் லஷ்மி.

சத்துக்களின் கலவை
உடல் வளர்ச்சிக்குத் தேவைப்படும் எண்ணற்ற வைட்டமின்கள் மற்றும் மினரல்களின் கலவைதான் இந்த பானம். ஆப்பிள், பீட்ரூட், காரட் ஜுஸ் வகைகளை தனித்தனியாக பருகுவதால் கிடைக்கும் ஒட்டு மொத்த பலன்களும் இந்த ஒரே பானத்தில் கிடைத்துவிடுகிறது. A, B1, B2, B6, C, E மற்றும் K வைட்டமின்களும், ஃபோலேட், சிங்க், காப்பர், இரும்பு, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசயம், நியாசின், சோடியம் மற்றும் மங்கனீஸ் போன்ற தாதுப்பொருட்கள் அனைத்தும் ஒருங்கே அடங்கியுள்ளது.

முதுமைத் தோற்றத்தை தவிர்க்கிறது
ABC டிரிங்கில் உள்ள A, B-Complex, C, E மற்றும் K வைட்டமின் சத்துக்கள் மினுமினுப்பாக தோற்றத்தைத் தருவதால் உண்மையான வயதைவிட மிகவும் இளமையாகத் தெரிவீர்கள். இதிலுள்ள தாதுப்பொருட்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் உடல் உறுப்புகளுக்கு புத்துயிர் அளித்து, அதன் இயக்கங்களை மேம்படுத்துகிறது.

சிவப்பழகைத் தரும்
முகப்பரு, கரும்புள்ளிகளுக்காக எவ்வளவோ க்ரீம்களையும், லோஷன்களையும் தடவி சலித்து போயிருப்பீர்கள். இவற்றுக்குக் காரணமான, உடலில் உள்ள தேயைற்ற ரசாயனக் கழிவுகளையும், நச்சுப்பொருட்களையும் வெளியேற்றி விடுகிறது. இந்த அற்புத பானத்தை நாள் தவறாமல் குடித்து வந்தால் முகம் பளிச்சென்று சிவப்பாக மாறிவிடும். எந்த கிரீமும், லோஷனும் தடவ வேண்டிய அவசியமே இருக்காது.

கண்ணாடி இனி தேவை இல்லை
கம்ப்யூட்டர் முன்பு மணிக்கணக்கில் வேலை செய்வதால் கண்களில் நீர்வறண்டு, கண்ணைச் சுற்றியுள்ள தசைகள் பலவீனமடைந்து விடும். அந்த கண் பார்வையை மேம்படுத்தும் ஏ வைட்டமின் அதிகம் இருப்பதால் கண் தசைகளை பலப்படுத்தும். கண்பார்வையை கூர்மையடையச் செய்யும்.

நினைவாற்றலைத் தூண்டுகிறது
பள்ளி செல்லும் உங்கள் பிள்ளைகள் அதிக மதிப்பெண் பெற, விலையுயர்ந்த பானங்களை வாங்கிக் கொடுக்கத் தேவையில்லை. நினைவாற்றல் மற்றும் கவனிக்கும் திறனை வளர்க்கும் ABC பானத்தை தினமும் ஒரு கிளாஸ் கொடுத்துப் பாருங்கள். விளையாட்டு, படிப்பு என எல்லவாற்றிலும் சுறுப்பாவதுடன் நம்பர் ஒன்னாகவும் ஜொலிப்பார்கள்.

உள்ளுறுப்புகளின் வலிமைக்கு...
கல்லீரல், இதயம், சிறுநீரகம் இந்த மூன்று உறுப்புகள்தான் உடலில் உள்ள கழிவுகளை அகற்றும் பணியைச் செய்கின்றன. இந்த மூன்றைத் தவிர மற்ற உள்ளுறுப்புகளும் அதனதன் பணியைச் செய்ய அவற்றை பாதுகாப்பது அவசியம். ABC பானத்தில் கிடைக்கும் முக்கிய மூலப்பொருட்களான ஆல்ஃபா, பீட்டா கரேட்டின் மூலப்பொருட்கள் ரத்த அழுத்தம், ரத்தக் கொழுப்பை கட்டுப்படுத்தி, செரிமானத்தை எளிதாக்குகிறது. மேலும், இதயநோய், கல்லீரல் நோய் மற்றும் சிறுநீரக நோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி
காய்ச்சல், ஆஸ்துமா, ரத்தசோகை போன்ற நோய்கள் வராமல் இருக்க உடலில் நோய் எதிர்ப்புசக்தி வலுவாக இருக்க வேண்டும். ஹிமோகுளோபீன் மற்றும் ரத்த வெள்ளையணுக்கள் எண்ணிக்கை ரத்தத்தில் அதிக அளவில் இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். ABC ஜூஸ் நோய் எதிர்ப்பு சக்தி உத்தரவாதம் தந்து நோய்களை அண்டவிடாமல் காக்கிறது.

புற்றுநோய் அழற்சி குறையும்
பீட்ரூட்டில் பீட்டாசியின் என்னும் மூலப்பொருள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சிக்கு எதிராக செயல்படுவதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். மேலும் பீட்ரூட்டில் உள்ள இரும்புசத்து சிவப்பணுக்கள் மீளுருவாக்கத்துக்கு உதவி புற்றுநோய் செல்களுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்கிறது. இதன்மூலமும் புற்றுநோய் செல்கள் அழிக்கப்படுகின்றன. 

எடையைக் குறைக்க...
கலோரிகள் குறைந்த ABC ட்ரிங் நிச்சயமாக உடல் பருமனை குறைக்க உதவும். உடற்பயிற்சி செய்து முடித்தபிறகு இந்த பானத்தை எடுத்துக் கொண்டால் புத்துணர்ச்சியும் கொடுக்கும். இப்ப சொல்லுங்க இது மிராக்கிள் டிரிங்க்தானே !

- இந்துமதி

எப்படி தயாரிப்பது?

ஆப்பிள், பீட்ரூட், கேரட் மூன்றையும் சிறுசிறு துண்டுகளாக்கி மிக்ஸியில் போட்டு விழுதாக அரைக்க வேண்டும். அதை ஒரு டம்ளரில் போட்டு, அதனுடன் எலுமிச்சைச் சாறு, தேன் கலக்கினால் மிராக்கிள் டிரிங்க் ரெடி. காலையில் வெறும் வயிற்றில் குடிப்பது நல்லது. தினமும் ஒரு டம்ளர் தவறாமல் குடித்து வந்தால் அற்புதமான பலன்கள் கண்கூடாகவே தெரிய வரும்.

புதன், 16 ஆகஸ்ட், 2017

அகில இந்திய கூறைநாடு சாலியர் மகாஜன சங்கத்தின் மூன்றாம் ஆண்டு விழா



அகில இந்திய கூறைநாடு சாலியர் மகாஜன சங்கத்தின் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு மற்றும் ஆண்டு விழா 13.08.2017 ஞாயிற்றுக்கிழமை தி.நகர் வெங்கடநாராயணா சாலையில் உள்ள செ.தெ.நாயகம் மேனிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

சென்னை முகவரி கையேடு வெளியிடல்:

காலை 12.00 மணி அளவில் விழா தொடங்கியது. முதல் நிகழ்வாக சென்னையில் வாழும் கூறைநாடு சாலியர்களின் முகவரி, தொலைபேசி எண்கள் மற்றும் மின்னஞ்சல் ஆகியவை கொண்ட முகவரி கையேட்டினை வெளியிட்டு கலசலிங்கம் & ஆனந்த் கல்விக் குழுமத்தின் தலைவர் இளைய வள்ளல் திரு.க.ஸ்ரீதரன் வாழ்த்துரை வழங்கினார். 02.09.2017 அன்று MRC Centre-வள்ளியம்மை ஹாலில் நடைபெற உள்ள தனது மகன் திரு.ஷசிஆனந்தின் திருமண வரவேற்பிற்கு அனைவரையும் வருகை புரிந்து மணமக்களை வாழ்த்திடுமாறு வேண்டினார்.



2016-2017-நிதியாண்டிற்கான பொதுக்குழு கூட்டம்:
காலை 12.30 மணிக்கு சங்கப் பொதுக்குழு கூட்டம் தலைவர் திரு.வை.வெள்ளையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. செயற்குழு உறுப்பினர் திரு.ந.முத்து அனைவரையும் வரவேற்றார். 2016-17-க்கான ஆண்டறிக்கையினை செயலர் முனைவர் கே.ஜி.பழனி சமர்ப்பித்து கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகளை விரிவாக எடுத்துரைத்தார்.  சான்றளிக்கப்பட்ட தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்பட்ட 2016-17 நிதி ஆண்டிற்கான வரவு செலவு அறிக்கையினை பொருளர் திரு.மா.சங்கரன் சமர்ப்பித்தார். செயற்குழுவால் பரிந்துரைக்கப்படும் பொதுக்குழுத் தீர்மானங்களை செயற்குழு உறுப்பினர் திரு.கோ.பாலசுப்பிரமணியம் வாசித்தார். விரிவான விளக்கங்களுக்குப் பின்னர், பொதுக்குழு ஏகமனதாக அனைத்தையும் ஏற்று ஒப்புதல் வழங்கியது. சங்கத்தின் துணைத்தலைவராக திரு.N.நடராஜன் அவர்களும், செயற்குழு உறுப்பினர்களாக திரு.Rஅழகப்பன், திரு.K.சாய்கணேஷ் மற்றும் திரு.E.விஷ்னுவர்தன் ஆகியோர்களும் பொறுப்பேற்றனர். ஏற்புரை ஆற்றிய திரு.N.நடராஜன், நல்ல பாதையில் சங்கம் சென்று கொண்டு இருக்கிறது, தொடர்ந்து நாம் செயல்படும் போது நமது செயல்பாடுகளைக் கண்டு மற்றவர்கள் தாங்களே நம்மிடம் வருவார்கள் எனத் தெரிவித்தார். செயற்குழு உறுப்பினர் திரு.S.வெங்கடேஷ் நன்றி நவில காலை அமர்வு முடிவுற்றது.


விளையாட்டுப் போட்டிகள்.
மதிய உணவிற்குப் பின்னர் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின. சிறு குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் பங்கேற்றும் வகையில் 12 போட்டிகள் வெளி மைதானத்தில் நடைபெற்றன. அனைவரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.


கலைநிகழ்ச்சிகள்:

மாலை 5.00 மணியளவில் குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிறுமி B.வைஷ்ணவி பாரதியாராகவும், சிறுமி R.காருண்யா திருவள்ளுவராகவும், சிறுவன் S.லலித்அர்ஜுன் நேருவாகவும் மேடையில் தோன்றி அனைவரையும் மகிழ்வித்தனர். சிறுமி K.தார்த்தி திரைப்பாட பாடலுக்கு நடனமாடினாள், சிறுவன் V.சாய் சபரிஸ் வேத மந்திரங்களைப் பாடினார், செல்வி.S.தேவிஸ்ரீ தற்காப்புக் கலை காராத்தே  செய்து காட்டினார், அனைத்திற்கும் முத்தாய்ப்பாக திரு.A.வெங்கடாசலம் (BSNL) – திருமதி.V.கவிதா தம்பதியரின் புதல்வி செல்வி.V.ஷோபனா “அசைந்தாடும் மயில் ஒன்று கண்டார்” என்ற பாடலுக்கு அபிநயத்துடன் ஆடிய பரத நாட்டியம் அனைவரையும் கவர்ந்தது. கூறைநாடு சாலிய சமுகத்தில் ஒரு நாட்டியத் தாரகை வளர்ந்து வருவதை அனைவரும் வாழ்த்தினர்.

படத்திறப்பு:
சங்கத்தின் துணைத்தலைவராக இருந்த, தனது இறுதி கட்டத்திலும் சங்க வளர்ச்சியைப் பற்றி பேசிக் கொண்டிருந்த தெய்வத்திரு.S.நமசிவாயம் அவர்களின் திருவுருவப் படத்தினை ஏழூர் சாலிய சமுதாயத்தைச் சேர்ந்த, சென்னை ராணுவ பொறியியல் சேவையில் பணியாற்றும் கவிஞர் செ.வ. இராமாநுசன் அவர்கள் திறந்து வைத்து நமசிவாயத்துடனான தனது நட்பு மற்றும் அவரது பண்புகளை விரிவாக எடுத்துரைத்து புகழஞ்சலி செலுத்தினார்.


வினாடிவினா:
அரங்கத்தில் இருந்த பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பதிலளிக்கும் வகையிலான முழுதும் தமிழ்க் கலாச்சாரம் தொடர்பான வினாக்களை கவிஞர் செ.வ. இராமாநுசன் அவர்கள் கேட்டு, விடை அளித்தவர்களுக்கு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆங்கில வார்த்தைகள் பயன்படுத்தாமல் தமிழில் இறுதிவரை பேசியது அனைவரையும் ஆச்சரியப் படுத்தியதுடன், தாங்களும் முடிந்த வரை தமிழிலேயே பேச வேண்டும் என்ற தாக்கத்தை அனைவரிடமும் தூண்டியது.

புனுகீஸ்வரர் கோயில் திருப்பணி & குடமுழுக்கு:

மயிலாடுதுறை வட்டம், கூறைநாட்டில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கூறைநாடு சாலியர்களுக்குச் சொந்தமான அருள்மிகு சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோயில் திருப்பணி சுமார் ஒரு கோடியே இருபது லட்ச ரூபாயில் செய்யப்பட்டு, திருக்குடமுழுக்கு கடந்த 16.07.2017 அன்று ஊரார் வியந்து பாராட்டும் வகையில் நடைபெற்றது. இதனை அகிலம் முழுவதும் வாழும் கூறைநாடு சாலியர்கள் மற்றும் ஆன்மீகவாதிகள் கண்டு களிக்கும் வகையில் இணையதள தொடர்பு (link) மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. இவை அனைத்திற்கும் காரணமாக இருந்த திருப்பணிக் கமிட்டியினரைப் பாராட்டி கௌரவிக்கும் விழா தொடர்ந்து நடைபெற்றது. கூறைநாடு சாலியர் சமுதாயத்தினரான கோயில் தக்கார் தரணி திரு.K.வெங்கு அவர்கள், திருப்பணி & கும்பாபிஷேக கமிட்டித் தலைவர் உமாபேன்ஸி திரு.B.ரெங்கராஜ் மற்றும் பாலாயணம் செய்த நாள் தொடங்கி அனைத்து திருப்பணிகளையும் திட்டமிட்டு, சிறப்பாக செய்து முடித்த திருப்பணி பொறுப்பாளர், முன்னாள் சங்கச்செயலர் திரு.V.கோவிந்தராஜ் ஆகியோர்கள் சால்வை, சந்தனமாலை அணிவிக்கப்பட்டு மற்றும் நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப் பட்டனர்.


கோயில் தக்கார் தரணி திரு.K.வெங்கு, தான் சங்கத் தலைவராக இருந்த காலத்தில் சாலியர் கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு இன்று நல்ல வருமானத்தை தருவதைக் குறிப்பிட்டு, அதுபோல சமுதாய, கோயில் சொத்துக்களை மீட்டெடுக்கும் பணியில் அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபட வேண்டிதியதின் அவசியத்தை வலியுறுத்தினார்.

திருப்பணி தொடங்கிய காலம் முதல் ஒவ்வொன்றையும் தெளிவாகத் திட்டமிட்டு, கமிட்டிகளை உருவாக்கி, அனைத்து தரப்பினரையும் அன்புடன் அரவணைத்து, சிறு பிரச்சனை கூட ஏற்படாத வகையில் கும்பாபிஷேகத்தை பார் புகழ நடத்தி முடித்த உமாபேன்ஸி திரு.Bரெங்கராஜ் பேசுகையில், திருப்பணி & கும்பாபிஷேகத்திற்காக வசூலான தொகை ஒரு கோடியே இருபது இலட்சத்தில் ஒரு கோடி ரூபாய் கூறைநாடு சாலியர் சமுதாயத்தினர்கள் தாங்களாகவே முன்வந்து அளித்த தொகை என்பதைத் தெரிவித்து, இதில் ரூபாய் பத்து இலட்சம் சேமிக்கப்பட்டு உள்ளதையும் குறிப்பிட்டார். இன்றைய நாளில் கோயில் பூசைகளுக்கு மயிலாடுதுறை சிவவேதகாம பள்ளியில் இருந்து குருக்கள் நியமிக்கப் பட்டுள்ளதையும், இங்கு பயிலும் மாணாக்கர்கள் தினந்தோறும் கோயிலில் வேத மந்திரங்களை ஓதுவதற்கும் ஏற்பாடு செய்துள்ளதையும் குறிப்பிட்டு, கோயில் மூன்றுகால பூசைகள், குருக்கள், பரிசாரகர் உள்ளிட்ட அனைத்து சேவைகளுக்கும் மாதத்திற்கு சுமார் ரூ.80000-க்கு மேல் தேவைப்படுவதாகவும், கோயில் சொத்துக்களில் இருந்து வருமானம் வரவில்லை என்பதையும் தெரிவித்தார். தனது குடும்பத்தினரின் பங்களிப்பாக ரூ.30000 அளிப்பதாகவும் தெரிவித்தார். மீதி தொகை ரூ.50000 நமது சமுதாயத்தினர் முன்வந்து ஏற்றுக் கொள்ள வேண்டும் என கோரிக்கையினை வைத்து, ஒவ்வொருவரும் தனது சம்பாத்தியத்தில் ஒருநாள் ஊதியம்/வருமானத்தை தாமாகவே அளித்திட வேண்டும் எனவும் வேண்டினார். திருப்பணி & கும்பாபிஷேகத்திற்கு போதுமான நிதி வசூலாகி விட்டதால் சென்னைக்கு நிதி கேட்டு அப்போது வரவில்லை எனக் குறிப்பிட்ட ரெங்கராஜ், தற்போது அன்றாட பூசைகள் நடைபெற சென்னைவாழ் சாலியர்கள் நன்கொடை அளித்து ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். சென்னை சங்கம் இதற்கான நிதி வசூலைச் செய்து தரும் என்ற உத்தரவாதத்தினை செயலர் முனைவர் கே.ஜி.பழனி தெரிவித்தார்.

திரு.V.கோவிந்தராஜு பேசுகையில், சந்தித்த பல்வேறு பிரச்சனைகளையும் எடுத்துரைத்து, இந்து அறநிலைய விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட்டாக வேண்டிய நிலையில், திருப்பணிகள் அனைத்து உபயதாரர்களே செய்து தருகின்ற வகையில் அனுமதி பெறப்பட்டு செய்ததையும், கோயில் தக்கார் மற்றும் திருப்பணி கமிட்டித் தலைவர் ஆகியோர்களின் ஒப்புதல் மற்றும் வழிகாட்டுதல் படியே தான் செயல்பட்டதாகவும் தெரிவித்தார்.




புதுமணத்தம்பதியரை கௌரவித்தல்:

இந்த ஆண்டில் திருமணமாகி சென்னையில் குடியேறி உள்ள புதுமணத் தம்பதியர்கள் 1) திரு.S.அர்ஜுன் கணேஷ் - திருமதி. V.நிவேதா, 2) திரு.R.பிரபு - திருமதி.R.J.லக்ஷ்மி, 3) திரு.S. விக்னேஷ் - திருமதி.V.விஜயலக்ஷ்மி ஆகியோர் சால்வை அணிவிக்கப்பட்டு, வெள்ளி காமாட்சி விளக்கு அளித்து கௌரவிக்கப் பட்டனர்.


பரிசு வழங்கல்:
இந்த ஆண்டில் பொறியியல் துறையில் பி.எச்.டி பட்டம் பெற்ற முனைவர் G.ராமதாஸ் சால்வை அணிவித்து, தாமிரப் பட்டயமும் வழங்கி பாராட்டப்பட்டார்.

பிளஸ் 2 தேர்வில் மாநில கல்வி முறையில் பயின்று 1200-க்கு 1136 மதிப்பெண் பெற்ற மாணவி செல்வி D.ரக்க்ஷனா முதல்பரிசு ரூ.2000, 1200-க்கு 1050 மதிப்பெண் பெற்ற செல்வி S.தீபிகா இரண்டாம் பரிசு ரூ.1500 மற்றும் 1200-க்கு 809 மதிப்பெண் பெற்ற செல்வன் K.ராம்பிரசாத் மூன்றாம் பரிசு ரூ.1000 வழங்கப்பட்டு, அனைவருக்கும் தாமிரப் பட்டயமும் அளிக்கப்பட்டது.

அரசு பாடதிட்டத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வில் 500-க்கு 475 மதிப்பெண் பெற்ற செல்வன் K.ராஜ்பிரவீன் முதல்பரிசுத் தொகை ரூ.2000 மற்றும் தாமிர பட்டயம் வழங்கி பாராட்டப்பட்டார்.

பிளஸ் 2 தேர்வில் CBSE கல்வி முறையில் பயின்று 500-க்கு 466 மதிப்பெண் பெற்ற மாணவி செல்வி M.ப்ரீத்தா முதல்பரிசு ரூ.2000 மற்றும் தாமிரப் பட்டயம் வழங்கி பாராட்டப்பட்டார்.

பத்தாம் வகுப்பு CBSE கல்வி முறையில் 10-க்கு 9.6 CGPA  மதிப்பெண் பெற்ற செல்வி K.சுவேதாவிற்கு முதல்பரிசு ரூ.2000 மற்றும் தாமிரப் பட்டயமும் வழங்கி பாராட்டப்பட்டார்.

தொடர்ந்து பல்வேறு விளையாட்டு / திறனாய்வு போட்டிகள், மாறுவேடம் / கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகளும் சான்றிதழும் அளிக்கப் பட்டன.

இரவு 8.00 மணியளவில் விழா இனிதே நிறைவுற்றது

ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

நிலக் கடன் கிடைக்குமா?

தி இந்து



நி
லம் வாங்கி நாமே வீடுகட்டிக் கொள்ள வேண்டும் என்ற ஆசை நம்மில் பலருக்கும் உண்டு. வீடுகட்ட வங்கிகள் கடனளிக்கும்போது, நிலம் வாங்க மட்டும் கடன் கொடுக்காதா என்ன? இதற்கான விடை அவ்வளவு தெளிவானதல்ல.
வங்கிகளில் வாங்கப்படும் வீட்டுக் கடனுக்கும் நிலக் கடனுக்கும் வேறுபாடு உண்டு.
இப்போது நிலம் வாங்கிப் போடுவது, ஐந்து, ஆறு வருடங்களுக்குப் பிறகு சேமிப்பு உயரும்போது வீடுகட்டிக் கொள்வது என்று நீங்கள் திட்டமிட்டால் நிலத்துக்கான கடனை அளிப்பதில் வங்கிகள் ஈடுபாடு காட்டுவதில்லை.
வீட்டின் மதிப்பில் 80 சதவிதம் வரைகூட வீட்டுக்கடன் அளிக்கப்படலாம். ஆனால், நிலக் கடனைப் பொறுத்தவரை அதிகபட்சம் (நிலத்தின் மதிப்பில்) 60 சதவிகிதம்தான் கடனாக வழங்கப்படுகிறது. (விற்பனைப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் நில மதிப்பில் 60 சதவிகிதம்).
ஏற்கெனவே கட்டப்பட்ட அல்லது கட்டிடமாக எழும்பிக்கொண்டிருக்கிற வீடுகளுக்கு வீட்டுக் கடன் அளிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் வெகு சீக்கிரமே அங்கு வீடு எழுப்பப்பட வேண்டும்.
வீட்டுக் கடனுக்கும் நிலக் கடனுக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளைப் பார்ப்போம்.
வீட்டுக் கடன் என்பது எந்தப் பகுதியில் எழுப்பப்படும் வீட்டுக்கும் அளிக்கப்படும். ஆனால், நிலக் கடனை அளிக்க வேண்டுமென்றால் உங்கள் நிலம் குடியிருப்புப் பகுதியில் இருந்தாக வேண்டும். அதாவது மாநகராட்சி அல்லது முனிசிபல் எல்லைக்குள் இருந்தாக வேண்டும். இதன்படி பார்த்தால் கிராமத்தின் ஒரு மூலையில் உள்ள நிலத்தை வாங்க நிலக்கடன் அளிக்கப்படுவதில்லை. விவசாய நிலத்தை நீங்கள் வாங்குவதற்கும் நிலக்கடன் கிடையாது. ஆனால், இவற்றைக் கைக்காசு போட்டு வாங்கிவிட்டு பிறகு அங்கு வீடுகட்டும்போது உங்களுக்கு வீட்டுக்கடன் அளிக்க வாய்ப்பு உண்டு.
வீட்டுக் கடன் வாங்கும்போது அந்தக் கடன் கணக்கில் நீங்கள் செலுத்தும் வட்டி, மாதத் தவணைக்கு வரிச்சலுகை உண்டு. ஆனால், நிலக் கடனுக்கு இதுபோன்ற எந்தச் சலுகையும் கிடையாது.
நிலக் கடனை ஆறேழு வருடங்களில் திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கும். அதிகபட்சம் 15 வருடங்கள். ஆனால், வீட்டுக் கடன் என்றால் உங்களுடைய வயது, வருமானத்தைக் கணக்கிட்டு 30 வருடங்களில்கூட நீங்கள் தவணைகளைச் செலுத்தலாம்.
நிலக் கடனாக மிக அதிகத் தொகையை வழங்க மாட்டார்கள். அதிக பட்சம் 50 லட்சம் ரூபாய் வழங்கப்படலாம். ஆனால், வீட்டுக் கடனுக்கு அப்படி உச்சத் தொகை எதுவும் நடைமுறையில் இல்லை.
பல வங்கிகள், நிலக்கடனை வழங்க, நிபந்தனைகளை விதிக்கின்றன. நிலக் கடனைப் பெற்ற சில வருடங்களுக்குள் (பெரும்பாலும் இரண்டு வருடங்கள்) அங்கு வீடு கட்டத் தொடங்க வேண்டும் என்ற நிபந்தனை முக்கியமானது.
நிலக் கடனில் நிலத்தை வாங்கிவிட்டு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகும் வீடு கட்டாமலே இருந்தால் வட்டி விதிகம் அதிகரிக்கப்படும் அல்லது முழுக் கடன் தொகையையுமே திருப்பிக் கொடுக்கச் சொல்வார்கள்.
இதற்கு ஒரு பின்னணி உண்டு. வீடு கட்டிக் கொள்வதைத் தவிர வேறு காரணத்துக்காக நிலம் வாங்குவதை வங்கிகள் ஊக்குவிப்பதில்லை. பங்குகள் (Shareகள்) போல நிலங்களை ஆங்காங்கே வாங்கிப் போட்டு அவற்றின் மதிப்பு உயர்ந்ததும் விற்றுவிடும் போக்கை அரசோ வங்கிகளோ ஆதரிப்பதில்லை.

வீட்டு வாடகைச் சட்ட வரைவு: யாருக்கு நன்மை?

தி இந்து


டந்த இருபதாண்டுகளில்தான் இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறை மிகப் பெரிய வளர்ச்சி கண்டது. தங்களின் தேவைக்கு அப்பாற்பட்டு மக்கள் மனைகளை, வீடுகளை முதலீட்டுக்காக வாங்கிக் குவித்தனர். இந்த இடத்தில்தான் வீட்டை வாடகைக்கு விடுவதும் பெரிய தொழிலானது. சிறு நகரங்களைவிட சென்னை, மும்பை, டெல்லி போன்ற மாநகரங்களில் இது இருபதாண்டுகளில் லாபகரமான தொழிலாக ஆனது. வெளியூர்களிலிருந்து வேலைக்காக வருபவர்களின் இருப்பிடப் பற்றாக்குறையை இந்த வாடகை வீடுகள் நிறைவேற்றின.
ஸ்ரீபெரும்புதூர், மறைமலைநகர் போன்ற சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் தொழிற்சாலைகளின் பெருக்கத்தாலும் ஐடி துறையின் வளர்ச்சி போன்ற பல காரணங்களாலும் வாடகை வீட்டுக்கான தேவை நாள்தோறும் அதிகரித்துவந்தது. இதனால் வீட்டு உரிமையாளர்கள் அவர்களாகவே வாடகை வீடு குறித்த புதிய விதிமுறைகளை இயற்றிக்கொண்டனர். அதாவது 10 மாத வாடகையை முன்பணமாகக் கொடுக்க வேண்டும், வெள்ளையடிக்கக் கட்டணம் தர வேண்டும், உரிமையாளர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் வீட்டைக் காலி செய்யச் சொல்லலாம், விருந்தினர்கள் தங்கக் கூடாது என விதிமுறைகளை உருவாக்கினர்.
இந்தப் புதிய விதிமுறைகள்தான் சென்னை முழுவதும் நடைமுறையில் இருக்கின்றன. அதுபோல வீட்டுக்கான தேவையை வைத்தே வாடகையும் நிர்ணயம் செய்யப்பட்டுவந்தது. உதாரணமாக நுங்கம்பாக்கம், எழும்பூர் போன்ற சென்னை மத்தியப் பகுதியில் ஒரு படுக்கையறை வீடே ரூ. 10,000 முதல் வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. கோடம்பக்காம், கே.கே.நகர், அசோக்நகர் பகுதிகளில் அடுத்த கட்டமாக ரூ. 9,000 முதல் வாடகை நிர்ணயிக்கப்படுகிறது. வாடகை குறைவாக இருந்த நங்கநல்லூர், மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதிகளிலும் இப்போது வாடகை அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இந்த வாடகை நிர்ணயத்துக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை. இதில் புதிய விதிமுறையாக முதல் மாத வாடகையை முன்கூட்டியே முன்பணத்துடன் சேர்த்துக் கொடுக்க வேண்டும் என்பதையும் வீட்டு உரிமையாளர்கள் உருவாக்கினர்.
இந்நிலையில் வாடகைதாரரின் உரிமை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுவதே இல்லை. இது மட்டுமல்லாது குறிப்பிட்ட ஜாதிக்கு மட்டும் வீடு தருபவர்கள் உண்டு. குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு வீடு தர மறுப்பவர்கள் உண்டு. இதைக் கட்டுப்படுத்த விதிமுறைகள் இல்லை.
ஆனால், வாடகைதாரர் - உரிமையாளர்கள் உரிமைகள் குறித்து வீட்டு வாடகைச் சட்டம் 1960 அடிப்படை விதிமுறைகளை வகுத்திருக்கிறது. ஆனால், அது பின்பற்றப்படுவதில்லை. வாடகை மிகப் பெரிய சந்தையாக வளர்ச்சி பெற்றிருக்கும் காலகட்டத்தில் அந்தச் சட்டம் இதுநாள்வரை திருத்தப்பட்டதும் இல்லை. இந்நிலையில் கடந்த மாதம் வீட்டு வாடகைச் சட்ட திருத்த வரைவு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. வாடகைச் சட்டத்தின் கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்ற மத்திய அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படியில் இந்தச் சட்டத் திருத்தம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தச் சட்டம் உரிமையாளர்களுக்குக் கூடுதல் உரிமைகளை வழங்குகிறது. உதாரணமாக 1960 சட்டத்தின்படி மாநில அரசுக்குத் தேவை இருக்கும்பட்சத்தில் காலியாக உள்ள ஒரு கட்டிடத்தை உரிமையாளரின் அனுமதி இல்லாமல் வாடகைக்கு எடுக்க முடியும். இந்தப் புதிய வரைவில் உரிமையாளரின் அனுமதி இல்லாமல் அதை வாடகைக்கு எடுக்கச் சட்டம் இடம் தராது.
இந்தச் சட்ட திருத்தில் வாடகைதாரர் பெரிதும் எதிர்பார்த்த வாடகையை ஒழுங்குபடுத்தும் அம்சம் இல்லை. தேவையை முன்னிட்டே வாடகை நிர்ணயிக்கப்படுவது தொடர்ந்துவருகிறது. உதாரணமாக ரூ.2,000 வாடகைக்குப் போகக் கூடிய ஒரு வீட்டை, அதிகமானோர் கோருவதால் அந்த வீட்டை உரிமையாளர் ரூ.6,000 வாடகைக்குக் கொடுக்க முடியும். இதைக் கட்டுப்படுத்த இந்தச் சட்ட வரைவில் விதிமுறைகள் இல்லை. அதே சமயம் வீட்டு வாடகையை உரிமையாளர் - வாடகைதாரர்களுக்கு இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் நிர்ணயம் செய்யலாம் எனச் சொல்கிறது இந்த வரைவு. இதனால் ஏற்கெனவே நடைமுறையில் இருப்பதுபோல வாடகையை உரிமையாளர் நிர்ணயிக்கும் நிலையே தொடரும் என எதிர்பார்க்கலாம்.
வாடகைதாரர் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய அம்சம், வாடகைக்கான முன் பணத்தை இந்தச் சட்ட வரைவு திட்டமாக வரையறுத்துள்ளது. நிர்ணயிக்கப்பட்ட வாடகைத் தொகையில் மூன்று மடங்கை முன்பணமாகத் தந்தால் போதுமானது. அதாவது மூன்று மாத வாடகைப் பணம். மேலும், ஒவ்வொரு மாத வாடகைக்கான ரசீதையும் வாடகைதாரருக்கு உரிமையாளார் வழங்க வேண்டும் என இந்தச் சட்ட வரைவு கூறுகிறது. மேலும் வெள்ளையடித்தல், குடிநீர்க் குழாய்களை மாற்றுதல் போன்ற பெரிய பணிகள் வீட்டு உரிமையாளரின் பொறுப்பு என்பதை இந்த வரைவு உறுதிப்படுத்தியுள்ளது. அதே சமயம் சிறு சிறு பணிகள் வாடகைதாரர் பொறுப்பு என்கிறது வரைவு. இதில் இருதரப்புக்கும் இடையில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது.
வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரரைக் காலிசெய்ய வைக்க நடைமுறைச் சிக்கல்கள் பல
இருந்தன. இந்தப் புதிய சட்ட வரைவு அதற்கு வழிவகை செய்கிறது. உரிமையாளர் ஒப்பந்தக் காலத்தில் சொன்ன கால வரம்புக்கு மேல் வாடகைதாரர் அந்த வீட்டில் வசிக்க முடியாது.
வீட்டு உரிமையாளர் வாடகை வீட்டைப் பார்க்க விரும்பினால் 24 மணி நேரத்துக்கு முன்பு வாடகைதாரருக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும். அதுபோல் காலை 7 மணிக்கு முன்போ இரவு 8 மணிக்குப் பிறகோ வீட்டைப் பார்க்க முடியாது. இவை வாடகைதாரருக்கு நன்மையளிக்கும் அம்சங்கள். இவை அல்லாது வாடகைப் பிரச்சினைகளை மேலாண்மை செய்வதற்காக மாவட்ட ஆட்சியரின் கீழ் வாடகை அதிகாரிகள் நியமிக்கப்படவுள்ளனர். வாடகைதாரர் - உரிமையாளர் சிக்கல்களைக் களைய வாடகைத் தீர்ப்பாயமும் ஏற்படுத்தப்படவுள்ளது. இந்தச் சட்ட வரைவில் சில பலவீன அம்சங்களும் இருக்கின்றன. இவற்றுக்கு அப்பால் வாடகைதாரர், உரிமையாளார் இரு தரப்புக்கும் நன்மையளிக்கும் பல விஷயங்களும் இந்தச் சட்ட வரைவில் இருக்கின்றன. 1960 வாடகைச் சட்டத்தில் கூறப்பட்ட விஷயங்களே இப்போது நடைமுறையில் இல்லை. இந்நிலையில் இந்தப் புதிய சட்டத்தின் சவாலே அதை நடைமுறைப்படுத்திவதில்தான் இருக்கிறது.

இணையவாசிகளிடம் சக்கைப்போடு போடும் 'சரஹா' ஆப்: ஓர் அறிமுகம்

தி இந்து


இணையவாசிகள் தற்போது அதிகம் தரவிறக்கம் செய்யும் குறுஞ்செய்தி செயலி 'சரஹா'. இதில் யாரும், யாருக்கும் அநாமதேயமாகவே செய்தி அனுப்ப முடியும்.
'சரஹா' மெசஞ்சர் ஆப் 2016-ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டாலும், தற்போதுதான் பிரபலமாகி வருகிறது. எகிப்து, சவுதி உள்ளிட்ட அரபு நாடுகளில் பயன்படுத்தப்பட்ட 'சரஹா', இந்தியாவுக்கு வந்ததும் ஆச்சர்யம்தான். ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் மாதிரியான சமூக ஊடகங்களின் வழியாகவே 'சரஹா' அறியப்பட்டு, தரவிறக்கம் செய்யப்படுகிறது.
 
என்ன சிறப்பம்சம்?
இந்த செயலியின் முக்கிய அம்சமே யார் வேண்டுமானாலும், யாருக்கும் செய்தியை அனுப்பவோ, பெறவோ முடியும். நீங்கள் விரும்பும் நபருக்கு, உங்களை வெளிப்படுத்தாமலே கருத்துகளைத் தெரிவிக்கமுடியும் என்பது இதன் சிறப்பம்சம்.
'சரஹா' தன்னைப் பற்றிக் கூறியிருக்கும் சுய விவரக் குறிப்பைப் பாருங்களேன்: ''ஆக்கபூர்வமான, அநாமதேய கருத்துகளின் மூலம் மக்களை சுய வளர்ச்சிக்கு ஆட்படுத்தும் செயலி சரஹா''.
எப்படி செயல்படுகிறது?
'சரஹா' செயலியைப் பயன்படுத்துவது மிகவும் சுலபம். யார் வேண்டுமானாலும் உங்களின் 'சரஹா' பக்கத்தைப் பார்க்க முடியும்; குறுஞ்செய்தியை அனுப்ப முடியும். இதற்காக அவர்கள் தங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த வேண்டியதில்லை. தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்பும் பயனர்கள், தன் பெயரை வெளிப்படுத்தவும் முடியும்.














செய்திகளைப் பெறும் பயனர்களின் இன்பாக்ஸில் மற்றவர்கள் அனுப்பிய செய்திகள் நிறைந்திருக்கும். அவற்றுக்கு நீங்கள் பதிலளிக்கலாம். முக்கியக் குறியிட்டு வைத்துக் கொள்ளலாம் அல்லது நீக்கியும் விடலாம்.
இயங்குதளம் மற்றும் மொழி
ஐஓஎஸ் மற்றும் ஆன்ட்ராய்ட் இயங்குதளம் 'சரஹா' செயலியைப் பயன்படுத்த முடியும். தற்போது ஆங்கிலம் மற்றும் அரபுஆகிய மொழிகளில் மட்டுமே 'சரஹா' செயல்படுகிறது.
விமர்சனங்கள் எப்படி?
இந்த செயலி இந்தியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருந்தாலும், ப்ளே ஸ்டோர் பகுதியில் செயலி குறித்த நேர்மறை மற்றும் எதிர்மறைப் பின்னூட்டங்கள் சரிவிகித அளவில் இருக்கின்றன.
அதில், பெயரைக் குறிப்பிடாமல் ஒருவர் குறித்த தன் சொந்தக் கருத்துகளை முன்வைப்பது எந்த வகையில் சரியாக இருக்கும் எனவும், இந்த வழிமுறை புண்படுத்தும் விதமான விமர்சனங்களுக்கு வழிவகுக்கும் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ப்ளாக் வசதி
அதே நேரத்தில் செயலியின் செட்டிங்ஸ் பகுதியில் சில தேர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளன. அதில் தேடுதலில் உங்களின் ப்ரொஃபலை நீக்க வழி உள்ளது.

இதன்மூலம் செயலியில் தங்கள் பெயர் கொண்டு நுழைந்தவர்கள் மட்டுமே பின்னூட்டம் இட முடியும். அத்துடன் நீங்கள் காண விரும்பாத நபரின் பக்கத்தை ப்ளாக் செய்யும் வசதியும் இருக்கிறது.
 

சமகாலத்தில் ட்ரெண்டாகி வரும் செயலியாக 'சரஹா' இருந்தாலும் இணையத்தில் குற்றங்கள் பெருகி வரும் நிலையில், இணையப் பயன்பாட்டாளர்கள் செயலிகளின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்துகொண்டு அவற்றைப் பயன்படுத்துவது நல்லது.

டிஜிட்டல் கொலை காலம்

தி இந்து

.


“என்னால் திங்கள்கிழமை பள்ளிக்கு வர முடியாது. நான் புளூவேல் (Blue Whale) இணைய விளையாட்டு விளையாடுகிறேன்” – இதுதான் தன் பள்ளி நண்பனிடம் மன்பிரீத் சிங் கடைசியாகக் கூறிய வார்த்தைகள். அவன் சொன்ன விளையாட்டை விளையாடிய கடந்த திங்கள்கிழமை, ஏழாவது மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலைச் செய்துகொண்டான் மன்பிரீத்.
பதினாங்கு வயதே ஆன மன்பிரீத் சிங்கின் தற்கொலைக்குக் காரணம் இணையத்தில் விளையாடப்படும் புளூவேல் எனும் பயங்கர விளையாட்டு. இதுவரை உலகம் முழுவதும் சுமார் 130 சிறுவர்கள், இளைஞர்களின் தற்கொலைக்கு காரணமான விளையாட்டு இது.

எளிதாகத் தொடங்கும்

புளூவேல் என்பது இணையத்தில் குழுவாக ஆடப்படும் ஒரு விளையாட்டு (பலரை காவு வாங்கும் இதை விளையாட்டு என்று சொல்வது முட்டாள்தனம்). முதலில் மின்னஞ்சல் மூலம் உங்களுக்கு ஓர் அழைப்பு வரும். மின்னஞ்சலில் ‘புளூவேல் சேலஞ்சை எதிர்க்கொள்ளத் தயாரா ?’ என உங்களை அழைக்கும். ‘ஆம்’ என்று நீங்கள் பதில் அனுப்பினால், விளையாட்டின் விதிமுறைகளை உங்களுக்கு அனுப்புவார்கள். முதலில் பார்ப்பதற்கு மிக எளிதான விதிமுறையாகவே தோன்றும்.
நீங்கள் 50 சாவால்களை எதிர்கொண்டு செய்து காட்ட வேண்டும். சவாலை நீங்கள் செய்து முடிப்பதை வீடியோவாகவோ அல்லது படமாகவோ எடுத்து அந்தக் குழுவுக்கு அனுப்ப வேண்டும். இறுதியான சவாலை நீங்கள் எதிர்க்கொண்டு செய்துவிட்டால் நீங்கள் வெற்றியாளார். அதிபயங்கரமான விஷயம் என்னவென்றால், அந்த இறுதி சவால் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும் என்பதுதான்.

விடுபட முடியாத வலை

ஆரம்பக் கட்டத்தில் சவால்கள் மிக எளிதாகவே இருக்கும். ஒரு நீலத் திமிங்கிலத்தை வரைய வேண்டும், தனியாக இரவு பன்னிரெண்டு மணிக்கு சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டும், இனிப்புகளை அள்ளி வாய் நிறைய சாப்பிட வேண்டும். இவற்றில் ஒவ்வொன்றையும் நீங்கள் செய்து முடிக்க முடிக்க, உங்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும். மெல்ல படிநிலைகள் ஏறஏற சவால்கள் கடினமாகிக்கொண்டே போகும்.
இரவில் தனியாகப் பேய்ப் படம் பார்ப்பது, கையில் பிளேடால் வரைவது, கண்ணை மூடிக்கொண்டு மிக வேகமாக சைக்கிளில் பயணிப்பது என்று நீளும். இறுதியாக நீங்கள் வெற்றி பெறுவதற்கான கடைசி சவாலுக்காக காத்திருக்கும்போது, இறுதி சவால் உங்களை தற்கொலை செய்துக்கொள்ளச் சொல்லும்.
நீங்கள் தற்கொலை செய்துக்கொள்ள முடியாது என மறுத்தால், ஆட்டத்தில் இருந்து விலக முடியாது என்பதுதான் இதில் இருக்கும் பேராபத்து. நீங்கள் மிக ஆபத்தான நிலையில் சிக்கி கொண்டிருக்கிறீர்கள் என்பதே, அப்போதுதான் உங்களுக்குப் புரிய ஆரம்பிக்கும். ஆரம்ப நாளில் இருந்து நடந்த மின்னஞ்சல் போக்குவரத்தில் உங்களுக்கே தெரியாமல் உங்கள் கணினியிலோ, செல்போனிலோ ‘ட்ரோஜன் வைரஸ்’ அனுப்பப்பட்டு, உங்கள் அந்தரங்கத் தகவல்கள் குழுவின் கையில் சிக்கி இருக்கும்.
இனி நீங்கள் சவாலை ஏற்கவில்லை என்றால், உங்கள் அந்தரங்கத் தகவல்கள் கசியவிடப்படும் என மிரட்டுவார்கள். பெரும்பாலான சிறுவர்கள், இளம் வயதினரை அந்தக் கும்பல் குறிவைக்கிறது. சிறுவர்கள் விபரீதம் தெரியாமல் பயந்துபோய் தற்கொலை செய்துகொள்கிறார்கள். ரஷ்யாவை மையமாகக்கொண்டு ஆரம்பித்த இந்த விளையாட்டு, இணையம் மூலம் உலகம் முழுவதுமாக சுமார் 130 சிறுவர்களை தற்கொலைக்குத் தூண்டியுள்ளது.

மீண்டும் பீதி

சில மாதங்களுக்கு முன் உலகம் முழுவதும் இந்த விளையாட்டு பெரும் சர்ச்சையானது. ரஷ்ய அரசாங்கம் நேரடியாகத் தலையிட்டு விசாரணை மேற்கொண்டது. உலகம் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு இந்த விளையாட்டை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. அதுவரை இந்தியாவில் இந்த விளையாட்டின் தாக்கம் இல்லை என்று பெற்றோர்கள் நிம்மதியாக இருந்தனர். ரஷ்யா அரசின் தீவிர விசாரணை காரணமாக இந்த விளையாட்டின் முக்கிய சூத்ரதாரியான இலியா சிட்ரோவ் (26) எனும் இளைஞர் கைது செய்யப்பட்டார்.
உலகின் பல பகுதிகளில் வசிக்கும் பெற்றோரும் ஆசிரியர்களும் நிம்மதி பெரு மூச்சுவிட்டனர். இந்த நிலையில் மும்பையைச் சேர்ந்த சிறுவன் மன்பிரீத் சிங்கின் தற்கொலை, அவன் நண்பர்களின் வாக்குமூலம் போன்றவை மூலம் புளூவேல் விளையாட்டு தொடர்பான பீதி மீண்டும் உலகம் முழுக்கவும் உருவாக்கியுள்ளது. புளூவேல் என்றால் நீல நிறத் திமிங்கலம் என்று அர்த்தம். அமெரிக்காவில் உள்ள ஒரு கடற்கரையில் திமிங்கலங்கள் திடீரென தண்ணீரை விட்டு வெளியே தாமாக வந்து இறந்தன.
அதைப் பார்க்க திமிங்கிலங்கள் தாமாகத் தற்கொலைச் செய்துகொண்டதைப் போலிருந்தது. இதை அடிப்படையாக வைத்துத் தான் இந்த விபரீத விளையாட்டுக்கு புளூவேல் சேலஞ்ச் எனப் பெயரிட்டுள்ளனர்.

பணம்தான் உயிர்

இந்தியாவில் இணையத் தொடர்பு மிக வேகமாகப் பரவி வருகிறது. நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க அளவுக்கு சிறுவர்களுக்கும் இணையத் தொடர்பு எளிதாகக் கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. குறிப்பாக நகரில் வாழும் சிறுவர்களுக்கு. இணையத்தில் தங்கச் சுரங்கம்போல அறிவுத் தகவல்கள் கொட்டி கிடந்தாலும், சிறுவர்களும் இளைஞர்களும் விட்டில் பூச்சிகளாய் இதுபோன்ற விளையாட்டுகளில் சிக்கிக்கொண்டு தங்கள் எதிர்காலத்தை கேள்விக்குறி ஆக்கிகொள்கிறார்கள்.
சில மாதங்களுக்கு முன் உலகை அதிர வைத்த ‘ரான்சம்வேர் வைரஸ்’ இதே மாதிரியை கொண்டது. ஒரு சிறுவன்தான் அதை உருவாக்கியவன். உங்களுக்குக் கவர்ச்சிகரமான மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி, அதை நீங்கள் ‘க்ளிக்’ செய்தால், உங்கள் கணினியில் மின்னஞ்சல் மறைந்து ட்ரோஜன் வைரஸ் இறங்கி கணினியை மூடிவிடும். உங்கள் கணினியை இயக்க பாஸ்வோர்டு கொடுக்க வேண்டும். பாஸ்வோர்டைக் கொடுக்க பணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் உங்கள் அந்தரங்கத் தகவல்கள் அழிக்கப்படும் அல்லது இணையத்தில் பகிரப்படும் என மிரட்டுவார்கள். அதாவது பணம்தான் இங்கே உயிர்.

அதிகரிக்கும் மரணம்

இணையத்தில் ஆபத்தை விளைவிக்கக்கூடிய குழுக்கள் அதிகமாக உள்ளன. தற்கொலையைத் தூண்டும் குழுக்கள், தங்கள் உறுப்பினர்களை தற்கொலைக்குத் தூண்டி, அவர்கள் தற்கொலை செய்துகொள்வதை நேரலையில் ஒளிபரப்பி ரசிப்பார்கள். ஒரு ஆய்வின்படி உலகம் முழுவதும் தற்கொலையைத் தூண்டும் இணையதளங்களின் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதும், அதனால் சுமார் 51 சதவீதம் சிறுவர்களின் மரணம் அதிகமாகி இருப்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்காவில் சில மாதங்களுக்கு முன் ஒரு இளம் பெண் உயரமான கட்டிடத்தின் முனைக்கு ஏறிக் கீழே இறங்க முடியாமல் சிக்கிக்கொண்டாள். அவளை மீட்ட தீயணைப்புத் துறையினர் முதலில் பயந்துவிட்டனர். இதுவும் ஒரு வேளை புளூவேல் சேலஞ்சாக இருக்குமோ என்று? நல்ல வேளையாக இது புளூவேலின் வேலை இல்லை. மாறாக, மற்றொரு இணையக் குழுவின் வேலை. அதாவது ‘கூரை மேல் ஏறும் குழு’ என்று ஒரு குழு உள்ளது. இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள், உயரமான கூரைகள் மேல் நின்று செல்ஃபி எடுத்து பகிர்ந்துக்கொள்வார்கள். அப்படியாக ஒரு செல்ஃபி எடுக்கப் போய், இந்த இளம்பெண் சிக்கிகொண்டிருக்கிறாள். இதைக் கேட்ட போலீசார் வாயடைத்துப் போய்விட்டனர்.

என்ன செய்ய வேண்டும்?

இணையத்தால் இன்று நமக்குப் பல நன்மைகள் இருந்தாலும். மெய் உலகைப் பிரதிபலிக்கும் மெய்நிகர் உலகான இணையத்துக்கும் கறுப்பு பக்கங்கள் உள்ளன. துடிப்பு,வேகம், கோபம், ஆர்வம், சோகம், தனிமை, ஏக்கம், மனக் குழப்பம், ஏக்கம் நிறைந்த இளம் ரத்தங்களை விபரீதங்களை நோக்கி இணையமும் அழைத்துச் சென்றுவிடுகிறது. பெற்றோரின் கவனமும். ஆசிரியர்களின் பொறுப்பும், நண்பர்களின் அக்கறையும்தான் இளைய சமுதாயத்தை காக்கும். இந்த கறுப்புத் தளங்களை ஒழிக்க அரசு முறையான சட்டத்தை இயற்ற வேண்டும். பள்ளியில் மாணவர்களுக்கு வரும் மன அழுத்தம், மன உளைச்சலைப் போக்க மன நல ஆலோசகர்களின் உதவி கொடுக்கப்பட வேண்டும்.
இணைய விளையாட்டுகளைப் பொறுத்தவரை நடந்து முடிந்த பின் வருந்தி எந்தப் பயனும் இல்லை, வரும் முன் காப்பது மட்டுமே இதற்கு சரியான தீர்வு.

உலை வைக்கும் விளையாட்டுகள்!
சில ஆண்டுகளுக்கு ஏ.எல்.எஸ். எனும் நரம்பியல் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ பிரபலமானது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் விளையாட்டை ஆரம்பித்து, அடுத்ததாக மைக்ரோசாப்ட் அதிபர் பில்கேட்ஸை இந்த சவாலுக்கு அழைத்தார். அப்படியே இந்த ‘ஐஸ் பக்கெட் சேலஞ்ச்’ உலகம் முழுவதும் பரவியது. ஒரு பக்கெட் முழுவதும் ஐஸ் கட்டிகளைக் கொண்ட தண்ணிரை ஒரே வீச்சில் தலையில் கொட்டிக்கொள்ள வேண்டும் என்பதே இந்த சவால். உங்கள் உடல் ஒரு நொடி உறைந்துப் போகும். அடுத்தாக மூன்று பேரை இந்த சவாலுக்கு நீங்கள் அழைக்க வேண்டும்.
ஆனால், இதுபோன்ற விபரீதமான சவால்கள் இணையம் முழுவதும் விளையாட்டாக உலாவுவதுதான் ஆபத்தில் முடிகிறது. அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
சோகிங் சேலஞ்ச் (மூச்சு திணறல் சவால்): இந்த சாவலில் ஒருவர் கைகளை கொண்டு கழுத்தை நெரித்து மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனைத் தடுக்க வேண்டும். அப்படி மயக்கம் வரும்வரை தடுப்பதை வீடியோவாக எடுத்து ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்.
இதையே ஒருவர் இன்னொருவரின் கழுத்தை நெரிப்பது இன்னொரு சவால்! யாரை முதலில் மயங்கி விழ வைக்கிறாரோ, அவரே வெற்றிபெற்றவர். அமெரிக்காவில் பிரபலமான இந்த விளையாட்டு இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான சிறுவர்களை பலி வாங்கியுள்ளது.
சால்ட் ஐஸ் சேலஞ்ச் (உப்பு ஐஸ்கட்டி சவால்):
உங்கள் உடலின் மீது உப்பை கொட்டிக்கொண்டு அதன் மீது ஐஸ் கட்டியை வைக்க வேண்டும். உப்பின் மேல் இருக்கும் ஐஸ் மேலும் மைனஸ் டிகிரி வெப்பநிலையை உருவாக்கும்.
இதனால் தோலில் காயங்கள் ஏற்படும். இதையே ஒரு சவாலாகச் செய்து பதிவேற்ற வேண்டும்.
கையை கீறிக்கொள்ளும் சேலஞ்ச் 
இதுதான் மிகவும் ஆபத்தான விளையாட்டு, காரணம் சம்பந்தப்பட்டவர் கையைக் கீறிகொள்ளுவது இதில் புகழப்படும். அதனால் குறிப்பிட்ட குழுவினரின் மத்தியில் அந்தஸ்து கிடைக்கிறது. இது ஆபத்தான மேலும் பல சவால்களுக்கு சம்பந்தப்பட்டவர்களை உந்தித் தள்ளுகிறது. 
நெருப்பு சவால்
உடலில் தீ வைத்துக்கொண்டு, மேலும் (எரியும் தன்மையுள்ள) வாசனை திரவியத்தை அதன் மீது தெளித்து, அந்த நெருப்புடன் இருப்பதை வீடியோவாக எடுத்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும்.
இவை மட்டுமல்ல, இதுபோல் ஆணுறையில் நீரயை நிரப்பி தலையில் போடும் காண்டம் சேலஞ்ச், காரின் மேல் படுத்தபடி இருக்க வேகமாக காரை ஓட்டும் ‘கார் சர்பிங் சேலஞ்ச்’, நண்பர்கள் ஒருவரின் உடல் முழுவதும் அட்டை பெட்டி ஒட்டும் டேப்பால் ஒட்டிவிட, அதில் இருந்து தப்பிக்கும் ‘டேப் டக்டு சேலஞ்ச்’ - இதுபோன்ற இன்னும் பல ஆபத்தான விளையாட்டுகள் இருக்கின்றன.
இதுபோன்ற மிகவும் ஆபத்தான விளையாட்டுகளை குழந்தைகள் விளையாடுகிறார்களா என கண்காணித்துத் தடுக்க வேண்டியது பெற்றோரின் பொறுப்பு. 

 

யார் ஈடுபடுகிறார்கள்?
இணையத்தில் விளையாடப்படும் இதுபோன்ற ஆபத்தான விளையாட்டுகள் குறித்து உளவியல் மருத்துவரான டாக்டர் கீர்த்தி பாய் கூறுகையில் “தங்கள் உணர்வுகளை முறையாகக் கட்டுபடுத்த முடியாமல், தவிக்கும் சிறுவர்களுக்கு பெற்றோர்கள் உறுதுணை இல்லாமல் போகும்போது, இது போன்ற ஆபத்தான விளையாட்டுகளில் தங்கள் கவனத்தைச் செலுத்துகிறார்கள்,” என்றார்.
கீர்த்தி பாய்
நண்பர்களின் உந்துதல், மன அழுத்தம், மன உளைச்சல், தனிமை போன்றவற்றால் தவிக்கும் இளைஞர்கள், இந்த மாதிரியான சவால்களில் தங்களையே காயப்படுத்திக் கொள்கிறார்கள் என்கிறார் உளவியல் நிபுணரான வந்தனா.
தங்கள் குழந்தைகள மீதும், அவர்களின் மனநலன் மீதும் பெற்றோர் கவனம் செலுத்த வேண்டும்.
கேட்டதை வாங்கி கொடுப்பது எப்படித் தவறோ, அதுபோலவே குழந்தைகள் செய்ய நினைக்கும் செயல்களில், அது விளையாட்டாக இருந்தாலும், அதில் உள்ள பிரச்சினைகள் பற்றி பெற்றோர் எடுத்துரைக்க வேண்டியது அவசியம். 

கட்டுரையாளர்,  டிஜிட்டல் சமூக ஆய்வாளர்
தொடர்புக்கு: Write2vinod11@gmail.com