Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 31 ஜூலை, 2017

எச்சரிக்கை – உங்கள் வீடு வரைபட அனுமதி பெற்று கட்டப்பெற்றதா?


இல்லையென்றால் திடீரென உங்கள் வீட்டின் குடிநீர், மின் இணைப்பு, கழிவுநீர் இணைப்பு துண்டிக்கப்படலாம்.

உங்களது வீடு முறையான வரைபட அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்தால், டிசம்பர் 21க்குள் வரன்முறைக்கு விண்ணப்பித்து நடவடிக்கைக்குட்படாமல் தப்பித்துக்கொள்ளுங்கள்.

Image result for house put under hammer
கடந்த 18ந் தேதி வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் அங்கீகாரமற்ற மனையினை வரன்முறை செய்வது பற்றிப் பார்த்தோம்.  அந்த வரன்முறையானது மனைக்கு மட்டுமே என்றும், கட்டிடத்திற்கு பொருந்தாது என்றும் , அக்கட்டுரை மூலம் எல்லாரும் அறிந்திருப்பீர்கள். 

உங்கள் வீட்டிற்கான மனை மற்றும் கட்டிடம் இரண்டிற்குமே முறையான அனுமதி பெறவில்லை என்றால் உங்களுக்காக எழுதப்பட்டதுதான் இக்கட்டுரை. 

அக்டோபர் 20, 2016 க்கு முன் வாங்கப்பட்டுள்ள அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை www.tnlayoutreg.in என்ற இணையதளத்தின் மூலம் 03.11.2017 க்குள் விண்ணப்பித்து வரன்முறை செய்து கொள்ள வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Image result for cmda
அதே சமயம் கடந்த 2007-ம் ஆண்டு ஜுலை மாதத்திற்கு முன் முறையான அனுமதியின்றி அல்லது விதிகளை மீறிக் கட்டப்பட்ட கட்டிடங்களை வரன்முறைப்படுத்த ஒரு வரன்முறைத் திட்டம் கடந்த ஜுன் 22 ம் தேதி தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 

டிசம்பர் 21, 2017 வரை பொதுமக்கள் www.tnbuildingreg.in என்ற இணைய தளத்தின் மூலம் தங்களது கட்டிடம் வரன்முறைக்கு ஏற்றதுதானா என்று சரிபார்த்து விண்ணப்பிக்கலாம்.

Image result for dtcp
சென்னை மாநகரத்திற்குட்பட்ட பகுதிகள், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ), இதர பகுதிகள் தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்பு இயக்குநரகம் (டி.டி.சி.பி) ஆகிய அமைப்புகளில் தங்கள் கட்டிடத்தை வரன்முறை செய்ய இணையம் மூலம் விண்ணப்பிக்க வழி செய்யப்பட்டுள்ளது. 

வரன்முறைக்கு விண்ணப்பிக்கப்படாத கட்டிடங்களுக்கான மின் இணைப்பு, குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் துண்டிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதுடன், மறுவிற்பனையும் தடைசெய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள அரசாணை நகல் இணைக்கப் பட்டுள்ளது. 



கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை, தொடர்புக்கு : 96001 06471

வெளிநாட்டு ஊட்ட மருந்துகள் விஷமா... விமோசனமா?

தி இந்து



சென்னையில் ஊட்டச்சத்து நிபுணராக இருப்பவர் திவ்யா சத்யராஜ். சமீபத்தில் அவரை நேரில் சந்தித்த, அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு தனியார் மருந்து நிறுவனத்தின் பிரதிநிதிகள், அந்த நிறுவனம் தயாரித்துச் சந்தைப்படுத்தியிருக்கும் ஊட்டச்சத்து பவுடர்கள், வைட்டமின் மாத்திரைகள், எடை குறைப்பு மாத்திரைகள், எடை கூட்டும் மாத்திரைகள் எனப் பலதரப்பட்ட மருந்துகளை நோயாளிகளுக்குப் பரிந்துரைக்கும்படி நிர்ப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
அந்த மருந்துகளை ஆய்வுசெய்த திவ்யா சத்யராஜ் அவற்றில் ஆரோக்கியத்துக்குக் கெடுதல் செய்யும் ரசாயனங்கள் அதிகம் இருப்பதால், அவற்றை நோயாளி களுக்குப் பரிந்துரை செய்ய முடியாது என மறுத்திருக்கிறார். அப்போது அந்த மருந்துப் பிரதிநிதிகள், ‘அரசியல்ரீதியாகத் தொல்லைகள் கொடுப்போம்’ என அவரை மிரட்டினார்கள் என்று திவ்யா கூறுகிறார். இந்தத் தகவலைத் தெரிவிக்கும் விதத்தில் பிரதமர் மோடிக்கு அவர் எழுதிய கடிதம் தற்போது ஊடகங்களில் வைரலாகியிருக்கிறது.

வெளிநாட்டு மருந்து விற்பனை ரகசியம்

உலக அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி விற்பனையைப் பிடித்திருக்கும் வெளிநாட்டு மருந்து, ஊட்டச்சத்து, வீட்டு உபயோகம் மற்றும் அழகுச் சாதனப் பொருட்கள் போன்றவற்றின் தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியா முழுக்கக் கிளைகளை ஆரம்பித்துக் கால் நூற்றாண்டு ஆகிவிட்டது. இவர்கள் மருத்துவர்கள் மூலம் தங்கள் நிறுவனத்தின் மருந்துகளையும் ஊட்டச்சத்து உணவுகளையும் மக்களுக்கு விற்பது கொஞ்சம்தான். மாவட்ட அளவில் முகவர்களை நியமித்து, அவர்களுக்கு நிறையவே கமிஷன் கொடுத்து, மக்களிடம் நேரடியாகவே விற்பனை செய்வதுதான் அதிகம்.
மருத்துவரிடம் நேரில் சென்று ஆலோசிக்க வெட்கப்படும் நபர்களை இந்த மருந்து நிறுவனப் பிரதிநிதிகள் எளிதாகக் கவர்ந்துவிடுகின்றனர். எடுத்துக்காட்டாக, உடல்பருமன், ஒல்லி உடல், வெள்ளைப்படுதல், ஆண்மைக் குறைவு போன்ற பிரச்சினைகள் உள்ளவர்களை நேரில் சந்தித்து, அவர்கள் மயங்கும் விதமாகப் பேசி தங்கள் நிறுவனத் தயாரிப்புகளை எளிதில் விற்று விடுகின்றனர். இத்தனைக்கும் இந்த நிறுவனங்கள் விற்கும் மருந்துகளின் விலை, சந்தை மதிப்பைவிடப் பல மடங்கு அதிகம். விளம்பரத்தால் பெயர் பெற்றிருக்கும் நிறுவனங்களின்மீது மக்களுக்கு ஒரு கவர்ச்சி இருப்பதைப் போல், ‘வாங்கும் பொருளின் விலை குறைவாக இருந்தால், அது தரும் பலனும் குறைவாகவே இருக்கும்; அதிக விலை கொடுத்துப் பொருள் வாங்கினால்தான் அதிக பலன் கிடைக்கும்’ என்று நம்பும் மக்கள் இருக்கிறவரை இந்த மருந்து நிறுவனங்களின் விற்பனையைத் தடுப்பது சிரமம்தான். 
வெளிநாடுகளில் இந்த மருந்துகளின் விற்பனை நடைபெறுகிறது என்றால், அங்கு அவர்கள் அந்த விற்பனையைப் பெரிதும் முறைப்படுத்தியிருக்கின்றனர். மருந்துத் தரக் கட்டுப்பாட்டு ஆய்வுச் சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம், மருந்து விற்பனைச் சட்டம் எனப் பல சட்ட அமைப்புகள் மூலம் இம்மருந்து நிறுவனங்களின் தயாரிப்புகளை முறைப்படி ஆய்வுசெய்து, மக்களின் ஆரோக்கியப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறார்கள். அங்கு மருத்துவர் பரிந்துரை இல்லாமல் மருந்து மற்றும் ஊட்ட உணவுத் தயாரிப்புகளை வாங்கவும் விற்கவும் முடியாது.
ஆனால், நம் நாட்டில் நிலைமை அப்படியில்லை. இங்கு மருந்து விற்பனை செய்யும் வெளிநாட்டு நிறுவனங்கள் ‘சர்வதேச அங்கீகாரம் பெற்றவை’ எனும் சான்றிதழுடன் சந்தைக்கு வருகின்றன. இந்தியாவில் முறையான, தேவையான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகள் செய்யப்படாத மருந்துகள் இவை. பெரும்பாலும் முகவர்கள் மூலமும் இணையதளங்கள் மூலமும்தான் இவற்றை நுகர்வோருக்கு விற்கின்றனர். “சத்து மாத்திரைகளைச் சாப்பிட எவருக்கும் எந்தத் தடையும் இல்லை; இவற்றை யார் வேண்டுமானாலும் தாராளமாகச் சாப்பிடலாம்” எனும் மந்திரத்தை ஓதி, மக்களிடம் இவற்றை விற்றுவிடுவது இந்த நிறுவனங்களின் தந்திரம். விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி நிலையத்துக்குச் செல்கிறவர்கள் போன்றோர் இந்தச் சத்து மருந்துகளையும் புரத உணவுகளையும் அதிகம் விரும்புகின்றனர். “மூன்றே மாதங்களில் உயரத்தைக் கூட்டிவிடும்; எடையைக் குறைத்துவிடும்” என்ற வசீகர வார்த்தைகளில் மயங்கிவிடுகிறார்கள்.
நம் உடலுக்குத் தேவையான சத்துகளை நாம் உண்ணும் உணவின் மூலமே எடுத்துக்கொள்ளலாம். நுகர்வோர் இந்த உண்மையை மறந்து, செயற்கை ரசாயன மருந்துகளை நாடுகின்றனர். இவற்றில் இந்திய அரசால் தடைசெய்யப்பட்ட உள்மருந்துகள் அளவுக்கு அதிகமாக இருப்பதையும், உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலைப் பாதிக்கும் ஸ்டீராய்டு மருந்துகள் கலந்திருப்பதையும் இவர்கள் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். தேவைக்கு அதிகமாகச் சத்து மாத்திரைகளைச் சாப்பிட்டாலும் அவை விஷமாகிவிடும். இந்த ஆபத்தை நுகர்வோர் புரிந்துகொள்ள வேண்டும்.

பக்க விளைவுகள் உண்டா?

மருந்துக் கடையில் ஒரு மருந்து விற்கப்படுவதற்கும் மக்களிடத்தில் நேரடியாக விற்கப்படுவதற்கும் நிறைய வித்தியாசம் உண்டு. மருந்துக் கடைகளில் விற்கப்படும் மருந்துகளின் தரத்தை ஆய்வுசெய்யவும், விற்பனையைக் கண்காணிக்கவும் மருந்து ஆய்வாளர்கள் உள்ளனர். இவற்றில் தவறு நேரும்போது தண்டிக்க ‘மருந்து மற்றும் அழகு சாதனப்பொருட்கள் சட்டம்’ பிரிவு 64 மற்றும் 65 உள்ளது.
ஆனால், இம்மாதிரியான பாதுகாப்பு அமைப்பு எதுவும் இல்லாமல் வெளிநாட்டு மருந்துகள் சந்தைக்கு வருகின்றன. இவற்றுக்கு ரசீது இல்லை; விற்பனைக்கான எவ்வித ஆதாரமும் இல்லை. இதனால் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வரிவருவாய் குறைந்து நஷ்டம் ஏற்படுவதும் உண்மை. இவற்றில் போலி மருந்துகளும் காலாவதியான மருந்துகளும்கூட கவர்ச்சியான உறைகளில் விற்பனைக்கு வருவதுண்டு. இவற்றை உட்கொள்கிறவர்களுக்குப் பக்கவிளைவுகள் ஏற்பட்டு ஆரோக்கியப் பிரச்சினைகள் உருவாகின்றன.
முக்கியமாக. திவ்யா சத்யராஜ் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது போல், தோல், கண், சிறுநீரகம், கல்லீரல் போன்ற உறுப்புகள் செயலிழந்து உயிருக்கு ஆபத்து வரக்கூடிய வாய்ப்பும் உண்டு. 2003-ல் ஆந்திரத்திலும், இப்போதுள்ள தெலங்கானாவிலும் 2013-ல் கேரளத்திலும் இந்த மருந்துகளின் விலை மற்றும் தரம் குறித்த சந்தேகங்கள் பொதுமக்களால் எழுப்பப்பட்டு, சில காலம் அங்கு இவற்றின் விற்பனை தடை செய்யப்பட்டதை நினைவுகூரலாம்.

அரசு கவனிக்குமா?

ஊட்டச்சத்துக் குறைவால் பாதிக்கப்பட்ட குழந்தை களுக்கும் கர்ப்பிணிகளுக்கும் தீர்வு தரும் வகையில் எந்தத் திட்டமும் இல்லாமல் தவிக்கும் நம் நாட்டில்தான், வெளிநாட்டு ஊட்டச்சத்து உணவுகளும் சத்து மாத்திரைகளும் கோடிக் கணக்கில் விற்பனை ஆகின்றன. விற்கப்படுவது எந்த மருந்தானாலும், அதன் தரத்திலும் தன்மையிலும் அதை நுகரும் மக்களுக்குப் பாதுகாப்புத் தர வேண்டியது அரசுகளின் கடமை.
சர்வதேசச் சான்றிதழ் பெற்றுள்ளது என்ற போர்வையில் விற்கப்படும் இவற்றை மறு ஆய்வுசெய்வதற்கான புதிய சட்ட நெறிமுறைகளை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். அரசு காலத்தோடும் அக்கறையோடும் இதில் தலையிட்டு, மக்களுக்கு முகவர்கள் மூலம் மருந்து விற்பனை செய்வதைத் தடை செய்ய வேண்டும். மக்கள் நலம் காக்க விழையும் ஓர் அரசு செய்ய வேண்டிய இன்றியமையாத கடமைகள் இவை.
-கு. கணேசன், பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com

செவ்வாய், 18 ஜூலை, 2017

உங்கள் வீட்டுமனைக்கு அங்கீகாரம் உள்ளதா?

நீங்கள் குடியிருக்கும் வீடு அல்லது நீங்கள் வாங்கியிருக்கும் மனை அங்கீகாரம் பெற்றதாஉடனே உங்கள் மனையை அரசு அறிவித்துள்ள வரன்முறைத் திட்டத்தின்கீழ் அபராதம் செலுத்தி வரன்முறை செய்துகொள்ளுங்கள்.

தற்போது கிடைத்துள்ள வாய்ப்பு மீண்டும் ஒருமுறை கிடைக்காமல் போகலாம். உங்கள் மனையில் வீடுகட்டும்பொழுது வங்கிக்கடன் கிடைக்காமல் போகலாம். அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச அபராதத்தை கட்டி வரன்முறை செய்துகொள்ளுங்கள்.  இந்த வாய்ப்பு மனைகளுக்கு மட்டுமே. மனையில் கட்டப்பட்ட வீட்டுக்கு அல்ல.

04.05.2017 நாளது அரசாணை எண். 78 ன் படி தமிழ்நாடு நகரமைப்புச் சட்ட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு இந்த பொன்னான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட நெடிய சட்டப்போராட்டங்களுக்குப் பின்னர் கிடைத்த வாய்ப்பை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

முதலில் நீங்கள் வாங்கியிருக்கும் மனை தடைசெய்யப்பட்ட பகுதிகளில் உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

நீர்நிலைகளான கால்வாய், ஏரி, குளம், நதி போன்ற பகுதிகளிலோ, அரசு புறம்போக்கு நிலத்திலோ, திறந்தவெளி ஒதுக்கீட்டுப் பகுதியிலோ, பூங்கா மற்றும் விளையாட்டு மைதானங்களில் அமைக்கப்பட்ட மனையா?

சாலை அல்லது ரயில் பாதைகளுக்காக நிலஎடுப்பு நடவடிக்கைக்கு உட்பட்ட நிலத்தில் உள்ளதா?

நகர்ப்புற நில உச்சவரம்புச் சட்டத்தின்கீழ் கைப்பற்றப்பட்ட நிலமா?

பொதுப்பாதைகளை ஆக்கிரமிக்கப்பட்டு உள்ள மனையா?

உயரழுத்த மின்தடங்களின் கீழ் அமைந்துள்ள மனையா?

அக்டோபர் 20, 2016 க்குப் பின் வாங்கப்பட்ட மனையா?

இவற்றில் ஏதாவது ஒரு வகையில் உங்கள் மனை இருந்தால் உங்களால் அந்த மனையை வரன்முறை செய்ய முடியாது.

உங்கள் மனை கிராமப் பஞ்சாயத்து எல்லைக்குட்பட்டது எனில் ஒன்றிய அலுவலக வட்டார வளர்ச்சி அலுவலரிடமும், டவுன் பஞ்சாயத்து எனப்படும் பேரூராட்சி எனில் செயல் அலுவலரிடமும், நகராட்சி மற்றும் மாநகராட்சி எனில் ஆணையரிடமும் விண்ணப்பிக்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக மனைப்பிரிவில் உள்ள அனைத்து மனைகளையும் வரன்முறை செய்ய வேண்டுமெனில் சென்னை மாநகரத்தில் உள்ள மனைப்பிரிவை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் எனும் சி.எம்.டி.ஏ. அலுவலகத்திலும், மற்ற பகுதிகளுக்கு அந்த பகுதிகளுக்குட்பட்ட நகரமைப்பு அலுவலகத்திலும் விண்ணப்பிக்க வேண்டும்.

www.tnlayoutreg.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

03.11.2017 வரை மட்டுமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

உங்களது வசதிக்காக அரசாணை நகல் இணைக்கப்பட்டுள்ளது.

கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை

தொடர்புக்கு: gsraj1979@gmail.com



சனி, 8 ஜூலை, 2017

அச்சுறுத்தும் அனீமியா - அலெர்ட் ஆலோசனைகள்

vikatan.com


ஹெச். ஸ்மிருதி, ரத்தவியல் நிபுணர்
ல்ல உடல்வாகும் வசதியான பொருளாதாரப் பின்னணியும் கொண்ட அவள், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தாள். தன் தோழிகளுடன் ஒருமுறை ரத்த தான முகாமில் கலந்துகொண்டாள். அவளுடன் வந்திருந்த அனைவரும் ரத்த தானம் செய்தார்கள். ஆனால், அவளை மட்டும் ரத்த தானம் செய்ய டாக்டர்கள் அனுமதிக்கவில்லை. காரணம், அவளுக்கு ரத்தத்தில் போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லை. இதை அவளால் மட்டுமல்ல, அவளுடன் வந்திருந்த மற்ற பெண்களாலும்கூட நம்ப முடியவில்லை. பார்ப்பதற்குப் பூசினாற்போல் இருந்ததால், அவள் சத்தான உணவைச் சாப்பிட்டு   ஆரோக்கியமாக இருப்பாள் என்று நினைத்திருந்தார்கள். ஆனால், அதற்கு நேர்மாறாக அவளுக்கு ரத்தச்சோகை ஏற்பட்டுள்ளது. இது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.
ரத்தச்சோகை என்றதும், உடல் மெலிந்த, வறுமையான குடும்பப் பின்னணி கொண்டவர்களுக்குத்தான் வரும் என்று நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், `எவ்வளவு சத்துள்ள உணவுகளைச் சாப்பிட்டாலும், அதில் இரும்புச்சத்து இல்லை என்றால் ரத்தச்சோகை ஏற்படும்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். பெண்களுக்கு மாதவிலக்கு நாள்களில் அதிகமான ரத்தப்போக்கு இருந்தாலும் அதைக் கூச்சம் காரணமாக வெளியே சொல்வதில்லை. தொடர்ச்சியாக ரத்தச் சிவப்பணுக்களின் அளவு குறையும்போது அது 
கடுமையான பாதிப்புக்குள்ளாக்கும் என்று தெரியாததால், இதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்கிறார்கள். இதனால், பெண்களை அதிகம் பாதிக்கிற பிரச்னைகளில் முதன்மையானதாக ‘அனீமியா’ என்கிற ரத்தச்சோகை உருவெடுத்து நிற்கிறது.

இதுபோன்று, ரத்த தானம் செய்யவோ, வேறு ஏதாவது நோய்க்கான சிகிச்சைக்காகவோ ரத்தப் பரிசோதனை செய்யும்போது, ரத்தச்சோகை பிரச்னை இருப்பதைக் கண்டறிந்தவர்களே அதிகம் என்கிறார்கள் மருத்துவர்கள். ரத்தச்சோகை பற்றிய விழிப்புஉணர்வு இன்னமும் படித்த பெண்கள் மத்தியிலும் முழுமையாக ஏற்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. ரத்தச்சோகை ஏற்படுவதற்கான காரணங்கள், அறிகுறிகள், அதைத் தவிர்க்கும் முறைகள் மற்றும் உணவுப் பழக்கங்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

ரத்தச்சோகை

ரத்தச்சோகையை ஆங்கிலத்தில் ‘அனீமியா’ (Anaemia) என்பார்கள். உடலில் சிவப்பணுக்களில் ஹீமோகுளோபின் அளவு குறையும் நிலையைத்தான் ரத்தச்சோகை என்கிறார்கள். அதாவது, ஹீமோகுளோபின் என்பது ரத்தச் சிவப்பணுக்களில் உள்ள இரும்புச்சத்து நிறைந்த புரதம். உடல் முழுவதும் ஆக்சிஜனைக் கடத்துவதே இதன் முக்கியப் பணி. இதன் அளவு குறையும்போதே ரத்தச்சோகை ஏற்படுகிறது. இது ஒரு நோயல்ல; மற்ற நோய்களால் வரும் ஒரு வகை பாதிப்பு.

காரணங்கள்

இரும்புச்சத்துக் குறைபாடு 

   முக்கியமாக, இரும்புச்சத்துக் குறைபாடு காரணமாகவே பெரும்பாலானவர்களுக்கு ரத்தச்சோகை ஏற்படுகிறது. இதற்கு அன்றாடம் சாப்பிடும் உணவில் போதிய அளவு இரும்புச்சத்து இல்லாததும் உணவிலுள்ள இரும்புச்சத்தை உடல் கிரகிக்க முடியாமல் போவதும்தான் காரணமாகின்றன.

வைட்டமின் குறைபாடு 

   வைட்டமின் சி, வைட்டமின் பி 12 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை இரும்புச்சத்து ரத்தத்தில் சேர்வதற்கு உதவிபுரிகின்றன. இவற்றின் அளவு குறைவாக இருப்பதன் காரணமாக ரத்தச் சிவப்பணுக்கள் உற்பத்தி குறைந்து, ரத்தச்சோகை ஏற்படுகிறது.

சிறுநீரகப் பாதிப்புள்ளவர்கள்

சிறுநீரகப் பாதிப்புள்ளவர்களுக்கும் ரத்தச்சோகை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். ஏனெனில், சிறுநீரகத்தில் சுரக்கும் ‘எரித்ரோபைட்டீன்’ (Erythropoietin-EPO) என்ற ஹார்மோன், எலும்பு மஜ்ஜையில் ரத்தச் சிவப்பணுக்கள் உருவாவதைத் தூண்டுகிறது. இதன் பணி பாதிக்கும்போது, ஹீமோகுளோபின் அளவு இயல்பாகவே குறைந்து ரத்தச்சோகை ஏற்படுகிறது.

கொக்கிப்புழு தொற்று

பெருங்குடலில் கொக்கிப்புழு தொற்றிருந்தால், அது குடலிலுள்ள இரும்புச்சத்தை உறிஞ்சிக்கொள்ளும்போது ரத்தச்சோகை ஏற்படும்.

குடல் புற்றுநோய், அல்சர்...

குடல் புற்றுநோய், அல்சர் போன்றவற்றால் ஏற்படும் ரத்த இழப்பாலும் ரத்தச்சோகை ஏற்படலாம். இதுதவிர, எலும்பு மஜ்ஜை பாதிப்பு, வலி நிவாரணி மாத்திரைகள் அதிகம் உட்கொள்ளுதல் மற்றும் உணவுக்குழலில் ஏற்படும் பிற நோய்களாலும்கூட ரத்தச்சோகை ஏற்படலாம்.

பெண்கள், குழந்தைகளுக்கு...

பருவம் அடைதல், மாதவிலக்கு, பிரசவம் போன்றவற்றால் பெண்கள் அதிகப்படியான ரத்த இழப்பைச் சந்திக்கிறார்கள். தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்குத் தேவைக்கேற்ற இரும்புச்சத்து கிடைக்காதபோதும் ரத்தச்சோகை ஏற்படுகிறது. தாய்க்கு ரத்தச்சோகை இருந்தால் குறைப் பிரசவத்திலும் குறைவான எடையுடனும் குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தைக்கும் ரத்தச்சோகை ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அறிகுறிகள்

உடல் சோர்வு, உடல் பலவீனம், தலைவலி, உணவின் சுவை அறிய முடியாமை, லேசான மூச்சுத் திணறல், தலைமுடியின் நிறம் மாறுதல், தலைமுடி உதிர்வு மற்றும் பசியின்மை போன்றவை இதன் ஆரம்ப அறிகுறிகள். இந்த நிலையைக் கண்டுகொள்ளாதபோது வெளிறிய சருமம், தலைமுடி உதிர்தல் அதிகமாதல், நகங்களில் ஏற்படும் மாற்றங்கள் (உடையக்கூடிய நிலை அல்லது நகங்களில் குழிவிழுவது), கைகால்களில் வீக்கம் என நிலைமை தீவிரமடையும்.

பரிசோதனை

ரத்த அணுக்களின் எண்ணிக்கையைக் கண்டறியும் சி.பி.சி (Complete Blood Count - CBC) என்னும் பரிசோதனை செய்யப்படும். இது, அடிப்படையான ரத்தப் பரிசோதனைகளுள் ஒன்று. இதன்மூலம், ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள், வெள்ளையணுக்கள், தட்டணுக்கள், ஹீமோகுளோபின் போன்ற ரத்தப் பொருள்களின் அளவுகளைக் கண்டறிய முடியும்.

இதில், நோயாளிகள் ஆண்களா, பெண்களா அவர்களின் வயது மற்றும் பெண்கள் என்றால், மாதவிடாய்க் காலத்தில் உள்ளவரா அல்லது கர்ப்பமுற்றவரா என்பதற்கேற்ப அதன் அளவீடுகள் மாறுபடும். உதாரணமாக, ஆரோக்கியமான ஒருவருக்கு ஒரு டெசிலிட்டர் ரத்தத்தில் 11 - 15 கிராம் ஹீமோகுளோபின் இருக்க வேண்டும். இதில் 5 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 11 கிராமும் 5 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு 11.5 கிராமும், 11 முதல் 15 வயது வரையிலானவர்களுக்கு 13 கிராமும் என இது வயதுக்கேற்ப வேறுபடும். கர்ப்பமுற்ற பெண்களுக்கு 11 கிராம் இருக்க வேண்டும். வயிற்று அல்சர் மற்றும் செரிமானப் பாதையில் ஏற்பட்டுள்ள நோய்களால் ரத்தப்போக்கு உள்ளதா என்பதைக் கண்டறிய மலப் பரிசோதனை (stool tests) செய்யப்படும்.

தீர்வு என்ன?

மருத்துவரின் ஆலோசனையின்பேரில் இரும்புச்சத்து மாத்திரைகளைச் சாப்பிடலாம்.

பிற நோய்களால் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும்.

ஹீமோகுளோபின் அளவு 6 கிராமுக்குக்கீழ் இருந்தால், மாற்று ரத்தம் ஏற்றவேண்டிய நிலை ஏற்படும்.

கர்ப்பிணிகள் மூன்று மாதங்கள் ஃபோலிக் ஆசிட் மற்றும் அதன் பிறகு கொடுக்கப்படும் இரும்புச்சத்து சப்ளிமென்ட்ரி மாத்திரைகளைத் தவறாமல் சாப்பிட வேண்டும்.

மாத்திரை சாப்பிடும்போது கவனத்தில்கொள்ள வேண்டியவை...

இரும்புச்சத்து மாத்திரைகளை உடல் உட்கிரகித்துக்கொள்ள வயிற்றில் அமிலம் இருக்க வேண்டும். எனவே, வெறும் வயிற்றில்தான் மாத்திரை சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிட்டு இரண்டு மணி நேரத்துக்குப் பிறகே உட்கொள்ள வேண்டும். 

உணவுப் பழக்கம்

இரும்புச்சத்துள்ள உணவுகளை அதிகம் உண்ண வேண்டும். மீன், இறால், கோழி, மாட்டிறைச்சி, ஈரல் போன்ற அசைவ உணவுகள், பழுப்பு அரிசி, கோதுமை, பாசிப்பயறு, பேரீச்சம்பழம், பனை வெல்லம், ஆப்பிள், கீரை, கொத்தமல்லி, புதினா, துளசி போன்ற இரும்புச்சத்துள்ள உணவுகளைச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மேலும், எலுமிச்சை, ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி போன்ற வைட்டமின் சி அதிகமுள்ள உணவுகளை உண்ண வேண்டும்.

ரத்தச்சோகை தவிர்க்க...

மாதவிடாய் மற்றும் கர்ப்பக் காலங்களில் மருத்துவரின் ஆலோசனையின்படி இரும்புச்சத்து மாத்திரையைச் சாப்பிட வேண்டும்.

சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும்.

சாப்பிடுவதற்கு முன் கைகளைச் சோப்பு போட்டுக் கழுவுதல், சுகாதாரமான கழிவறையைப் பயன்படுத்துதல், காலில் செருப்பு அணிவது போன்றவற்றைக் கடைபிடிக்க வேண்டும். 

மகத்துவம் நிறைந்த மண்பானை நீர்


Dinakaran Daily news



‘‘வெயில் காலம் வந்துவிட்டாலே மண் பானை விற்பனையை பல இடங்களிலும் பார்க்க முடிகிறது. குளிர்ச்சியான தண்ணீர் வேண்டும் என்று நினைக்கிற எளிய மக்களின் இனிய தேர்வாகவும் மண்பானை இருக்கிறது. இந்த மண்பானை நீர் உடலுக்குக் குளிர்ச்சி மட்டும் தருவதில்லை. பல நன்மைகளையும் மருத்துவரீதியாக தருகிறது’’ என்கிறார் ஆயுர்வேத மருத்துவர் அசோக்குமார். 
மண்பானை நீரின் மருத்துவ குணம் பற்றி தொடர்ந்து பேசுகிறார்...

‘‘காலம்காலமாகவே நம்முடைய முன்னோர்கள் சமையலுக்கும், தங்களுடைய மற்ற தேவைகளுக்கும் மண்பானையை உபயோகப்படுத்தி வந்திருக்கின்றனர். முக்கியமாக கஷாயம் போன்ற மருந்துப் பொருட்களைத் தயாரிக்க மண்பானைதான் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதிலிருந்தே மண்பானையின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளலாம். ஃப்ரிட்ஜ் தண்ணீர் ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல. அது தாகத்தையும் தணிப்பதில்லை. அதனால்தான் இப்போது குளிர்ச்சியான தண்ணீர் வேண்டும் என்று மண்பானையைப் பலரும் உபயோகிக்கிறார்கள். மண்பானை நீர் தாகம் தணிப்பதோடு மட்டுமில்லாமல், உடலில் ஏற்படுகிற பல பாதிப்புகளை குணப்படுத்தும் தன்மையும் கொண்டது. ஆரோக்கியத்துக்கும் உகந்தது. மண் பானை நீர் இயற்கையான முறையில் உடலை குளிர்ச்சியாக்குகிறது. கோடையில் ஏற்படுகிற நா வறட்சி, உடல் நீர் இழப்பு போன்றவற்றைத் தடுக்கிறது. உடலுக்கு நோயை ஏற்படுத்துகிற வாதம், பித்தம், கபம் என்ற மூன்று தோஷங்களையும் சமநிலையில் வைத்திருக்கிறது’’ என்பவர் மண்பானையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது பற்றிக் கூறுகிறார்.

‘‘கோடை காலத்தில் மண்பானை தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டவர்கள் சுவை மற்றும் நறுமணத்துக்காக தண்ணீரில் வெட்டிவேர், எலுமிச்சைப்பழம் போட்டு வைப்பார்கள். இவற்றோடு கைப்பிடி அளவு தேற்றான் கொட்டையை சுத்தமான வெள்ளைத்துணியில் கட்டிப் போடுவது அவசியம். இவ்வகை கொட்டை கண்ணுக்குத் தெரியாத நுண்கிருமிகளை அழித்து நீரை சுத்தப்படுத்தும். வாரம் ஒருமுறை அல்லது தண்ணீரை மாற்றும்போது, புதிதாக தேற்றான் கொட்டை போட வேண்டும். இந்த தேற்றான் கொட்டை எல்லா கடைகளிலும் கிடைக்கும். 
குளிர்ச்சியான நீர் வேண்டும் என்பதற்காக மண்பானையை உபயோகப்படுத்துகிறவர்கள் நாகரிகம் என்ற பெயரில் பெயின்ட் அடித்து உபயோகிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்கள். ஒரு சிலர், பானையின் உட்புறத்திலும் பெயின்ட் அடிக்கின்றனர். இவ்வாறு செய்வது பார்ப்பதற்கு வேண்டுமானாலும் அழகாகத் தெரியலாம். ஆனால், இதனால் மண்பானையின் பயன் எதுவும் கிடைக்காது. மேலும், பானையின் வெளிப்புறத்தில் உள்ள கண்ணுக்குத் தெரியாத சிறுசிறு துவாரங்கள் வழியே நீர்த் திவலைகள் வெளிப்படுவதும் தடைபடும்.

முதல் தடவையாக, மண்பானை நீரை குடிப்பவர்களுக்கு தொண்டை கட்டுதல், சளி மற்றும் மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றால் அவதிப்பட வாய்ப்புகள் இருக்கின்றன. இந்தப் பிரச்னைகளை எல்லாம் நினைத்து மண்பானை தண்ணீரை தவிர்த்துவிடக் கூடாது. மண்பானைத் தண்ணீரால் ஏற்படுகிற சிறுபிரச்னைகளை சரிசெய்ய தாளிசாதி சூரணம், திரிகடுக சூரணம், கதிராதி கூலிகா ஆகிய மருந்துகள் இருக்கின்றன. திரிகடுக சூரணம் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவை சேர்ந்தது. ‘கை மருந்து’ என்று அழைக்கப்படும் இதை வீட்டிலேயே எளிதாக செய்யலாம்’’ என்கிறார்

மிடில் கிளாஸ் குறைபாடு!

Dinakaran Daily news




உடல் சோர்வாக உணர்கிறீர்களா? அடிக்கடி கை கால்களில் வலியா? சின்னச்சின்ன வேலையில் கூட கவனம் செலுத்த முடியவில்லையா? உடல் பலவீனமாக இருப்பதுபோல தோன்றுகிறதா? இவையெல்லாம் வைட்டமின் பி12 பற்றாக்குறை காரணமாக இருக்கலாம். காரணம், உடல் சோர்வையும் மன அழுத்தத்தையும் உருவாக்கும் முக்கியக் காரணியாக பி 12 இருக்கிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக, 10 இந்தியர்களில் 8 பேர் வைட்டமின் பி 12 குறைபாடு உள்ளவர்கள் என்று 
தெரிவித்திருக்கிறது சமீபத்திய ஆய்வு ஒன்று. இந்தியாவில் 60 முதல் 70% மக்களுக்கு வைட்டமின் பி12 குறைவாக இருப்பதாகக் கருதப்படுகிறது. அதிலும் இக்குறைபாடு உள்ளவர்களில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தினர் நடுத்தர வர்க்கத்தை சார்ந்தவர்களே என்கிறார்கள் மருத்துவர்கள். 

சரி...வைட்டமின் பி12 
என்பது என்ன? எப்படி இந்த குறைபாட்டை சரி செய்வது? 
வைட்டமின் பி 12 என்பது ஓர் அத்தியாவசிய நுண்ணுயிரி, ரத்த சிவப்பணுக்களின் உருவாக்கம் மற்றும் நரம்பு திசுக்களின் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மத்திய நரம்பு மண்டலம் சிறப்பாக செயல்பட இந்த வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. நரம்பின் ஊட்டத்துக்கு பி12 முக்கியமானது. நம்முடைய தசைகள் ஆரோக்கியமாக, வலுவாக இருப்பதற்கும் வைட்டமின் பி12 தேவைப்படுகிறது. குறைவான வைட்டமின் பி12 இருதய நோய்களுக்கும் வழி வகுக்கிறதுஆரோக்கியமான மனநிலைக்கு போதுமான வைட்டமின் பி12 மிக அவசியமானது என்கின்றனர் நரம்பியல் நிபுணர்கள். ஏனென்றால் மனநிலையை கட்டுப்படுத்த உதவுகிற Monoamines போன்ற நரம்பியல் கடத்திகளை உற்பத்தி செய்ய உதவுகிறது. மேலும் மனச்சோர்வு மற்றும் பதற்றம் ஆகியவற்றையும் குறைக்க உதவுகிறது.

வைட்டமின் பி12 குறைபாட்டுக்கான காரணிகள்நீரிழிவு நோய்:  நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. பொதுவாக நீரிழிவு நோய்க்கு பரிந்துரைக்கப்படும் Metformin மருந்து, வைட்டமின் பி12 செரிமானத்தைக் குறைக்கலாம் என்று கருதப்படுகிறது.வைட்டமின் டி3 பற்றாக்குறை: பெரும்பாலும் வைட்டமின் டி3-யின் குறைபாடும் வைட்டமின் பி12 அளவைக் குறைக்கும். வைட்டமின் டி3 குறைபாடு கால்சியம் உறிஞ்சுவதை(Calcium absorption) தடுக்கிறது. வைட்டமின் பி12 வயிற்றுக்குள் செல்வதற்கு கால்சியம் அவசியம். உங்கள் உணவில் வைட்டமின் பி12 போதுமான அளவு இருந்தாலும், வைட்டமின் டி3 குறைபாடு இருப்பின், நீங்கள் வைட்டமின் பி12 குறைபாட்டையும் சேர்த்து அனுபவிக்க வேண்டியிருக்கும்.சைவ உணவு பழக்கம்: சைவ உணவு முறையைப் பின்பற்றுபவர்கள் வைட்டமின் பி12 பற்றாக்குறைக்கு ஆளாகும் வாய்ப்பு உள்ளது. அதனால், சமச்சீரான சைவ உணவை உட்கொள்வது அவசியம்.

ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள் : பல்வேறு நோய்களைக் குணப்படுத்த கொடுக்கும் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகள், வைட்டமின் பி12 உடலில் சேர்வதை தடுத்து வைட்டமின் பி12 குறைபாட்டை ஏற்படுத்தலாம்.
மரபியல் : FUTZ- என்கிற ஒரு வகையான மரபணு வைட்டமின் பி12 அளவுகளை நிர்ணயிக்கிறது. இந்த மரபணு கொண்டவர்களுக்கு குறைந்த அளவு வைட்டமின் பி12 காணப்படும். மரபியல் பரிசோதனையில் நீங்கள் எந்த வகை FUTZ Gene உள்ளவர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம். சரி, உங்களுக்கு வைட்டமின் பி12 குறைபாடு இருக்கிறதா? எப்படி கண்டறிவது?
இதோ சில அறிகுறிகள்...

* உடல் பலவீனம், சோர்வு
* மூச்சுத்திணறல்
* வெளிறிய தோல்
* மென்மையான நாக்கு
* மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு, 
பசியின்மை
* நரம்பு பிரச்சினைகள் - தசை 
பலவீனம், கூச்ச உணர்வு ஊசி குத்துவது போன்ற உணர்வு
* பார்வை இழப்பு
* மன அழுத்தம், நினைவாற்றல் இழப்பு மற்றும் மன பிரச்னைகள்.
இந்த அறிகுறிகளுடன் இன்னும் சில அறிகுறிகளும் தோன்றலாம். வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால், உங்களுக்கு ரத்தசோகை ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மிக லேசான குறைபாடு இருந்தால், இந்த அறிகுறிகள் இல்லாமலும் போகலாம். மேற்கொண்ட அறிகுறிகள் இருப்பின் ரத்தப் பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அது மட்டுமின்றி ஒரு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.இந்த அறிகுறிகள் இருப்பின், உங்கள் வைட்டமின் பி12 அளவை ரத்த பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ளலாம். இது மட்டுமல்லாமல் அதிகமான ஹோமோசிஸ்டின்(Homocysteine) அளவுகூட வைட்டமின் பி12 குறைபாட்டைக் குறிக்கலாம். அதேபோல Methylmalonic அமில அளவுகள் உயர்வதும் வைட்டமின் பி12 குறைப்பாட்டை உறுதி செய்யும்.

சரி... வைட்டமின் பி 12 குறைபாட்டுக்கு என்ன தீர்வு?
நம்முடைய உடலில் டி.என்.ஏ மற்றும் சிவப்பு ரத்த அணுக்கள் உருவாவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது வைட்டமின் பி12. ஆனால், இந்த வைட்டமின் பி12-ஐ நம் உடல் தானாக உற்பத்தி செய்யும் ஆற்றல் நம் உடலுக்கு இல்லாததால், அதை நாம் உணவு மூலமாகவோ, சப்ளிமென்ட்ஸ் மூலமாகவோ சேர்த்துக் கொள்வது அவசியமாகும்.பெரும்பாலான மக்கள் வைட்டமின் பி12 பற்றாக்குறையை இறைச்சி, கோழி, கடல் உணவுகள், பால் பொருட்கள் 
மற்றும் முட்டைகளை சாப்பிடுவதன் மூலம் சரிசெய்து கொள்ளலாம். சைவ உணவு முறையைப் பின்பற்றுவர்கள் காளான், சீஸ், பால், தயிர், மோர், ஈஸ்ட் போன்ற உணவுகளில் இருந்து பி12 வைட்டமினைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இது மட்டுமில்லாமல் மிளகு, கிரேன்பெர்ரி பழம்(Cranberry), புரொக்கோலி, ராகி, சோயா, மீன் போன்ற உணவுகள் வைட்டமின் பி12 Absorption-ஐ மேம்படுத்த உதவுகிறது. கால்சியம் நிறைந்த உணவு வகைகள்(பால், தயிர், மோர், வெண்ணெய்) உங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டாலும் பயனடையலாம்.

சரி, நமக்கு எவ்வளவு தேவை?
உங்கள் வயது, உங்கள் உணவு பழக்கம் மற்றும் மருத்துவ நிலைமைகள், மருந்துகள் ஆகியவற்றைப் பொறுத்து உங்களின் பி12 தேவை வேறுபடுகிறது.பரிந்துரைக்கப்பட்ட அளவு மற்றும் வயது
6 மாதம் வரை உள்ள குழந்தைகளுக்கு    0.4 mcg
7-12 மாத வயது குழந்தைகளுக்கு    0.5 mcg
1-3 வயது குழந்தைகளுக்கு    0.9 mcg
4-8 வயது குழந்தைகளுக்கு    1.2 mcg
9-13 வயது குழந்தைகளுக்கு    1.8 mcg
14-18 வயது குழந்தைகளுக்கு    2.4 mcg
பெரியவர்களுக்கு    2.4 mcg
கர்ப்பிணி பெண்களுக்கு    2.6 mcg
தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு    2.8 mcg

கர்ப்பிணிகளுக்கும், தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கும் அதிக அளவு வைட்டமின் பி12 தேவைப்படுவதை மேற்கண்ட அட்டவணையில் உணர்ந்திருக்க முடியும். எனவே, சமச்சீரான மற்றும் வைட்டமின் பி12 உள்ள உணவுகளை சேர்த்துக் கொள்வது மிக அவசியமாகும். வைட்டமின் பி12 குறைபாடு பிறக்கும் குழந்தைக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் கவனம் அவசியம்.இப்பொழுது உங்களுக்கு வைட்டமின் பி12 பற்றி நன்றாக புரிந்திருக்கும். சத்துள்ள சரியான உணவு வகைகளை தேர்ந்தெடுப்பது, அறிகுறிகள் இருக்கிறதா என்று பார்த்து சரியான நேரத்தில் பரிசோதனை செய்து கொள்வது மற்றும் மருத்துவரை அணுகி சரியான சிகிச்சை ெபறுவதன் மூலம் நீங்கள் ஆரோக்கியமாகவும், குறைபாடு இல்லாமலும் ஆனந்தமாக வாழலாம்.















வெள்ளி, 7 ஜூலை, 2017

ஜி.எஸ்.டி... ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன மாற்றங்கள்?

vikatan.com


ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்துள்ள நிலையில், இதனால் ரியல் எஸ்டேட் துறையில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும் என்பது குறித்து ஹிராநந்தானி குழுமத்தின் தலைமை நிர்வாக இயக்குநரும், தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சில் (NAREDCO) அமைப்பின் மேற்கு மண்டலத் தலைவருமான நிரஞ்சன் ஹிராநந்தானியிடம் கேட்டோம். நம் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள்... 

“ரியல் எஸ்டேட்டில் நிலவும் முக்கிய பிரச்னைகள் என்னென்ன?”

``ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான வேகத்தில் பிளான் அனுமதி வழங்கப்படுகிறது. மேலும், அனுமதி வழங்கத் தேவைப்படும் தகுதிகளும் வழிமுறைகளும் வேறுபடுகின்றன. அனுமதி வழங்கப்படுவதில் ஒரே சீரும், தகுந்த கால அளவும், எல்லா அனுமதிகளையும் ஒரே வழிமுறையில் வழங்கவும் நீண்ட நாள்களாகக் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு நிபந்தனைகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி வருகின்றன. மேலும், ரியல் எஸ்டேட்டுக்கு வசூலிக்கப்படும் வரியும் வேறுபடுகிறது.

ஜி.எஸ்.டி முதன்முதலில் பரிந்துரைக்கப்பட்ட போது, தேசம் முழுவதும் ஒரே சீராக வரி வசூலிக்கப்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தது. இப்போது ஒரே அளவிலான வரி நாடு முழுவதும் வசூலிக்கப்படாது என்று உறுதியாகிவிட்டதால், நாங்கள் `ரெரா’ சட்டமாவது குறிப்பிட்ட கால நேரத்துக்குள் அனுமதிகளை வழங்கிட உதவும் என எதிர்பார்க்கிறோம். 

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, வழிகாட்டி மதிப்பீடு குறைப்பு மற்றும் அதனால் ரியல் எஸ்டேட் துறையில் ஏற்படப் போகும் தாக்கங்கள் ஆகியவை முக்கியப் பிரச்னைகளாக உள்ளன.’’

``ரியல் எஸ்டேட் திட்டங்களை முறைப்படுத்தும் `ரெரா’ சட்டத்தினால், இந்தத் துறைக்கும் பொதுமக்களுக்கும் என்ன லாபம்?”

``இந்திய ரியல் எஸ்டேட் துறை, பணமதிப்பு நீக்கம், பினாமி சொத்து சட்டம், ஜி.எஸ்.டி மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றால் மொத்தமாகத் தொழில் மறுதொடக்கத்தைச் சந்தித்து வருகிறது. 

‘ரெரா’வை அமல்படுத்தியுள்ளதால், ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படும் வெளிப்படைத்தன்மை, பொறுப்புடைமை ஆகியவற்றைச் சாத்தியமாக்குவதோடு, வீடு வாங்குபவர்கள் மத்தியில் நம்பிக்கையையும் உறுதியையும் மேம்படுத்துகிறது.

 ‘ரெரா’வானது, ரியல் எஸ்டேட்மீது நேர்மறையான தாக்கத்தையே ஏற்படுத்தும். மேலும், ரியல் எஸ்டேட் துறை இனி சிறந்த ஒழுங்குமுறையோடும் தொழில் சார்ந்த முறையில் சிறப்பாகவும் இயங்கும். வீடு வாங்குபவர்களின் தரப்பிலிருந்து பார்த்தால், இடைத்தரகர்களின்மீது நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு, மிகவும் வலிமையான சட்டத் தீர்வையும் வழங்குகிறது. இதனால் வெறுமனே வீடுகள் வாங்கப்படுவதை வேடிக்கை பார்த்தவர்கள்கூட, வீடு வாங்க முடிவெடுக்கும் சூழலை இது ஏற்படுத்தும்.’’

``ஜி.எஸ்.டி-யால் ரியல் எஸ்டேட் துறையில் தாக்கம்..?” 

``ரியல் எஸ்டேட்டின் மிக முக்கிய மாற்றங்களுக்கான காரணங்களில், ஜி.எஸ்.டி-யும் ரெரா-வும் முன்னணியில் இருக்கின்றன. ஜி.எஸ்.டி-யானது ரியல் எஸ்டேட்மீது 12% அளவு மட்டுமே வரி விதித்திருக்கிறது. இதனால் ஸ்டாம்ப் டூட்டி, பதிவு செலவுகள் மற்றும் மற்ற இதர செலவுகள் ஜி.எஸ்.டி-யால் குறையும் என ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன.’’ 

``15% என்றிருந்த சேவை வரி, இப்போது ஜி.எஸ்.டி-யில் 18 சதவிகிதமென நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இதனால் வீடுகளின் விலை உயருமா..? வேறு என்னென்ன பாதிப்புகள் இருக்கும்?”

“நான் முன்பே சொன்னதுபோல், ரியல் எஸ்டேட் துறையில் 12% அளவுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியா முழுவதும் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் படியும், செய்தி அறிக்கையின் படியும், சராசரி அளவு ஒரு சதவிகித அளவுக்கு மட்டுமே ஜி.எஸ்.டி-யால் உயர்ந்துள்ளது. 
பிரச்னை என்னவென்றால், ஒவ்வொரு மாநிலத்திலும் வசூலிக்கப்படும் வரி ஒவ்வொரு விதமாக வேறுபடுகிறது. உதாரணமாக, தற்போது தமிழ்நாட்டில் ஸ்டாம்ப் டூட்டி, பதிவு செலவு மற்றும் இதர வரிகள் 11% என்கிற அளவில் உள்ளது. இது நம் நாட்டிலேயே மிக அதிகம். ஜி.எஸ்.டி-யின் சாரமே, `ஒரே நாடு, ஒரே வரி’ என்பதுதான். ஆனால், இது ரியல் எஸ்டேட் துறைக்குச் செல்லுபடியாகாது.’’ 

``ஜி.எஸ்.டி-யால் ரியல் எஸ்டேட் துறைக்கு மட்டும் இரட்டை வரி விதிப்பு வரும் எனச் சொல்லப்படுகிறது. இதனால் ஏற்படப்போகும் பாதிப்புகள் என்னென்ன?” 

``ஒவ்வொரு மாநிலத்திலும் ஜி.எஸ்.டி-யைத் தவிர்த்து ஸ்டாம்ப் டூட்டி, பதிவு மற்றும் இதர வரிகள் வேறுபடுகின்றன. வீடு வாங்குபவர்கள் உள்பட பல்வேறு ரியல் எஸ்டேட் பங்குதாரர்கள், அவர்களிடமிருந்து வழக்கமாக வசூலிக்கப்படும் மற்ற வரிகளிலிருந்து, ஜி.எஸ்.டி விலக்கு அளிக்கும் என எதிர்பார்க்கின்றனர். 

ஆனால், அது நிதர்சனம் அல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான வரி வசூலிக்கப்படும் நிலை நீடிக்கும். இத்துடன் பணவீக்கமும் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகரிக்கும் நிலையும் உள்ளது.’’

``இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி மற்றும் எதிர்காலம் எப்படி?” 

``சி.எல்.சி.ஏ இந்தியா கொடுத்துள்ள ஆய்வறிக்கையின்படி, 1.3 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான வீடு விற்பனையே நாட்டின் அடுத்தகட்ட வளர்ச்சியாக இருக்கும். வரும் 2018-க்குப் பிந்தைய ஆறு வருடங்களில் 6 கோடி புது வீடுகள் விற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இருபது லட்சம் புது வேலைவாய்ப்புகளையும் இது உருவாக்கவுள்ளது. மேலும், ஜி.டி.பி-யையும் உயர்த்தும் என நம்பிக்கையளித்துள்ளதால், ரியல் எஸ்டேட், இந்தியப் பொருளாதாரத்தில் நேர்மறையான வளர்ச்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கலாம். 

`2022-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு’ என்னும் பிரதமர் நரேந்திர மோடியின் தொடக்கத்தையும் குறிப்பிட வேண்டும். இது ஓர் அருமையான தொடக்கம் என்பதோடு, நிதி அமைச்சரின் பட்ஜெட் அறிவிப்பின்படி, கட்டுபடியாகும் விலையில் வீடு வாங்க வங்கிகளில் பெறப்படும் கடன்களுக்கு மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்படி, கிராமப் புறங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க ஒதுக்கப்பட்ட நிதி, ரூ.15,000 கோடி ரூபாயிலிருந்து ரூ.23,000 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 2017-2018-ம் ஆண்டுக்குள் ஒரு கோடி வீடுகளைக் கட்டி முடிக்க முடியும். மேலும், 2022-ம் ஆண்டுக்குள் 2.5 கோடி நகர்ப்புற வீடு கட்டும் திட்டமும், 4.5 கோடி கிராமப்புற வீடு கட்டும் திட்டமும், தனியார் துறை ரியல் எஸ்டேட் நிறுவனத்தினரின் ஒத்துழைப்பால் சாத்தியமாகும். 

பொருளாதாரத்தின் மற்ற உறுப்புகளைப்போல, ரியல் எஸ்டேட்டிலும், சுதந்திரமான எஃப்.டி.ஐ கொள்கை, ரெய்ட்ஸ், இன்விட்ஸ், கிரெடிட்டோடு இணைக்கப்பட்ட மானியம், ரூ.1 லட்சம் கோடி முதலீட்டுடன் தொடங்கப்பட்டுள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் உள்ளிட்ட கொள்கை மாற்றங்களால் எதிர்காலத்தில் பல நல்ல விளைவுகள் ஏற்படும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

இனிவரும் காலத்திலாவது அனைவருக்கும் வீடு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம்!