ஆடை (தொடர்ச்சி)
சிந்துவெளி நாகரீகம்
இந்தியாவில் ஆதிவாசிகள் திராவிடர்கள் என்பதும் ;அவர்களுக்கேற்ப இப்பரந்த நாட்டில் வாழ்ந்த ‘நாகர்’ என்ற பூர்வகுடியினரும் கைத்தறி நெசவில் தேர்ந்து விளங்கினர் என்பதும், சிந்து சமவெளி நாகரீகத்தில் காணக் கிடைக்கும் பருத்தி இழைகளே, இந்தியாவின் ஆடை பற்றிய உணர்வினை நல்கும் முதல் சான்றாகும்.
கி.மு. 2303 அளவில் சிந்துவெளி வணிகர்களின் வெளிநாட்டு வணிகப் பொருட்களில் பருத்தி ஆடையும் ஒன்று என்று சுமேரியன் கையெழுத்துப் படிகள் கூறுகின்றன. மொகஞ்சதாரோவில் கண்டெடுக்கப்பட்ட எண்ணற்ற நூற்கதிர் திருகுகள் இம்மக்கள் ஏழை – பணக்காரர் வேறுபாடின்றி நூற்கும் தொழிலில் ஈடுபட்டிருந்ததை தெரிவிக்கின்றன.
பிற நாட்டு அறிஞர் எண்ணங்களும், எழுத்தும், தொல்பொரும் ஆய்வுகளும் பருத்தி இந்தியாவிற்குறியது என்பதை உறுதிபடுத்துகின்றன. உலகில் மற்ற நாடுகள் நாகரீகம் அடையும் முன்னரே இந்தியர் பருத்தியை விளைவித்து நூல் நூற்று ஆடை நெய்யக் கற்றுக் கொண்டனர் என்பதை ‘பெரிப்புனுஸ்’ என்பவரின் கடல்வழிப் பயணங்கள் குறிப்பிடுகின்றன. பருத்தியின் பயனை சீனர்கள் நீண்டகாலம் உணராமல் வெறும் அழகுச் செடிகளாகவே பயன்படுத்தி வந்தனராம்.
சுமார் 2150 ஆண்டுகளுக்கு முன்பு சோழநாட்டின் வணிகம் அளவில் விரிந்தும் வருமானத்தில் மிகுந்தும் காணப்பட்டது. உரோமப் பேரரசின் செல்வமெல்லாம் ஆண்டொன்றிற்கு 650 மில்லியன் செஸ்டர்ஸ் காசுகளாக (நூறு மில்லியன் காசுகள்) இந்தியாவிற்குச் செல்கிறது என்று உரோமாபுரியின் எழுத்தாளர் பிளினி XII எழுதுகிறார். பிளினியின் காலம் கி.பி. 77. பாண்டிச்சேரிக்கு அண்மையிலுள்ள அரிக்கமேட்டில் 1945 ல் கண்டுபிடிக்கப்பட்ட யவனர் குடியிருப்பு மலேசியா போன்ற நாடுகளுக்குரிய நுழைவுத் துறைமுகமாக உரோமர்களுக்கு அந்நாளில் பயன்பட்டு வந்ததாம். உரோமர்கள் சோழர்களின் உறையூர் ஆடை போன்ற பண்டங்களை வாங்கி, கிழக்கத்திய நாடுகளின் சந்தைகளுக்கும் உரோம நகரத்தின் சொந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தியதாகவும் அரிக்மேட்டில் உரோமானிய ஆலை ஒன்று இருந்ததாகவும், அந்த ஆலையில் உரோமானியர்களுக்குப் பிடித்தமான முறையில் ஆடைகள் பதப்படுத்தப்பட்டு, உரோமாபுரியின் உற்பத்தி செயல்முறையின் துணை பெற்ற பின்புதான் உறையூர்த் துணி ஏற்றுமதி செய்யப்பட்டது. அரிக்கமேடு, உறையூர் அகல்வாராய்ச்சிகள் மூலம் நெசவுத் தொழிலைச் சார்ந்த வண்ணமூட்டலுக்கு சாயம் போடுவதற்குப் பயன்படுத்தப்பட்ட சாயத் தொட்டிகள் காணப்பட்டதாம். உறையூர்ச் சேலைகள் மிகவும் மெல்லிய நூலால் நெய்யப் பட்டிருக்கும். ஒரு புடவையை ஒரு தேங்காய் மூடியில் வைத்து அடக்கிவிடலாமாம்.
உறையூர் ஆடைகளை ரோம அரசர்களும் பெண்களும் விரும்பி வாங்கினர் என்று வரலாறு கூறுகிறது. ஆடைகள் சிலந்தி வலையைப் போன்று மிகவும் மெல்லியதாக இருந்ததாகவும், ‘சென்னேரா’ என்ற மேல்நாட்டறிஞர் தாம் வரைந்த வழிச்செலவு வரலாற்றில் எழுபத்தெட்டு முழ நீளமுடையவையாயிருந்தும் உள்ளங்கைகளில் அடக்கி விடும். அத்துணை மெல்லிய விலையேறிய ஆடைகள் நெய்வதற்கும், அதற்குறிய பருத்தியைச் செப்பம் செய்வதற்கும் தமிழர்கள் கையாண்ட முறையைப்பற்றிப் பரக்கக் கூறியுள்ளார். உறையூர் பருத்தி மற்றும் பட்டு நெசவுக்குப் பெயர் பெற்று விளங்கியதால்தான் நெடுங்கிள்ளியிடமிருந்து நலங்கிள்ளி உறையூரின் உரிமையைப் பறித்ததோடன்றி உறையூரப் போன்ற நெசவுக் கேந்திரமான பாண்டியரின் மதுரையையும் நலங்கிள்ளி கைப்பற்றினான் என்று சோழர் வரலாறு கூறுகிறது.
உறையூர் கைத்தறி நெசவுத் தொழில் பற்றி ‘பெரிபிளுஸ்’ என்ற நூலில் சிறப்பாகக் குறிப்பிடப் பட்டுள்ளது. ஊறையூரில் நெய்யப்பட்ட ஆடைகள் நல்ல பாம்பு உரிக்கும் மேல்சட்டை போலவும். மேக மண்டலத்தில் காணப்படும் மேகக் கூட்டங்களின் சேர்க்கை போலவும் உள்ளது எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இவ்வூரின்கண் நிகழ்த்திய அகழ்வாய்வில் சுட்ட செங்கல்களாலான தொட்டிகள் கிடைக்கப் பெற்றன. அவை சாயம் தோய்க்கும் தொட்டிகள் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இத்தொல் பொருட்கள் கி.பி. 2 முதல் 5 நூற்றாண்டுகளானது எனக் கால வரையறை செய்துள்ளனர். இன்றும் இவ்வூர் கைத்தறி நெசவுக்கு பிரபலமானது. 100 x 100 நூலில் உறையூரில் தயாராகும் புடவைகளுக்கு அங்காடிகளில் தனிச்சிறப்பு உண்டு.
(உறையூர் கே.ஆர். கிருஷ்ணமூர்த்தி)
பேராசிரியர் எஸ். வைத்தியலிங்கம் அவர்கள் எழுதிய “ Fine Arts and Crafts “ என்ற நூலில் தமிழர்கள் ஆதிகாலம் தொட்டே நெசவுக் கலையைப் படிப்படியாக வளர்த்து வந்ததாகவும், மிகவும் உயர்ரக துணிகளை நெய்யும் திறமையைச் சங்க காலத்திலேயே பெற்று இருந்ததாகவும் கவர்ச்சிகரமான வண்ணங்களில் பஞ்சுப் பட்டாடைகளை உற்பத்தி செய்து வந்ததாகவும், எரிதிரிந்தென்ன பொன் புனை உடுக்கைகள் (பொன்னாடைகள்) நெய்வது முற்காலத் தமிழர்களுக்குப் புதுமையானதல்லவென்றும் தெரிவிக்கிறார்.
(பரிபாடல் 1:10)
இசைக் கலைஞர்களும் ஆடற் கலைஞர்களும் தங்கள் திறமையையும் கலை முதிர்ச்சியையும் காட்டுவதற்காகத் தங்கள் கந்தலாடைகளைக் களைந்து விட்டு மிகவும் விலை உயர்ந்த ஆகைளை அணிந்து வந்தனர் என்று புறநானூறு கூறுகிறது.
“தன்னுழைக் குறுகல் வேண்டி யென்னரை
முதுநீர்ப் பாசியன்னவுடை களைந்து
திருமலரன்ன புதுமடிக் கொளீஇ” (புறம் 390:13.15)
‘மார்க்கோ போலோ’ என்ற வெளிநாட்டுப் பயணி தன்னுடைய நூலில் தென்னகத்தில் மிக உயர்ந்த, மிகவும் மென்மையான பருத்தி நூல் துணிகள் நெய்யப்பட்டதாகவும், அவற்றின் விலை மிகவும் அதிகமாக இருந்ததாகவும், அந்தத் துணிகள் சிலந்தி வலையைப் போலவே இருந்ததாகவும், அந்தத் துணியால் ஆன ஆடைகளை அணிந்து மகிழாத அரசனோ அரசியோ இல்லை என்று குறிப்பிட்டிருக்கிறார். மார்க்கோ போலோ இங்கு குறிப்பிட்ட பகுதிகள் குமரி முனையிருந்து நெல்லூர் வரையிலான பாண்டி நாடாகும். இதிலிருந்து பாண்டி நாடும் நெசவுத் தொழிலில் சிறந்து விளங்கியது என்பது தெளிவாகும்.
தமிழ்நாட்டு வணிகர்கள் கி.மு. 3000 ல் பாபிலோனுக்கும், கி.மு. 2400 முதல் எகிப்துக்கும், மிளகு, தேக்கு, புலித்தோல், முத்து, பவழம், வைரம், பருத்தி ஆடைகள் ஆகிய சரக்குகளைக் கிழக்கு ஆப்பிரிக்கா வழியாகத் தமிரின் நாவாய்கள் மூலமாக அனுப்பியதாக பிளினி, தாலமி, பெரிப்புளுஸ் போன்ற மேநாட்டு ஆசிரியர்களின் குறிப்புகளில் இருந்தும் சங்க நூற்சான்றுகளாலும் அறிகிறோம்.
இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இந்தியர்கள் சீனர்களுடன் வணிகத்தொடர்பு கொண்டிருந்தனர் என்பதையும், உரோமாபுரி வணிகர்கள் இந்தியப் பட்டாடைகளின் நேர்த்தியைக் கண்டு ஆச்சரியப்பட்டதாகவும் வரலாறுகள் கூறுகின்றன. சந்திரகுப்த மௌரியரின் அமைச்சர், சாணக்கியன் தான் எழுதிய அர்த்த சாஸ்திரத்தில் பாண்டி நாட்டு முத்துக்களையும் பஞ்சாடைகளையும் போற்றித் தென்னாட்டுடன் வணிகம் செய்தல் சிறந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
கி.மு. 2500 ல் ஆரியர்கள் புல்வெளிகளை நோக்கி மிகவும் செழிப்பான பூமியன சிந்துநதி தீரத்துக்குள் புகுந்தனர். ஏற்கனவே சிந்து சமவெளியில் மிகவும் உயர்ந்த நகரீகத்தினை உருவாக்கி இருந்த திராவிடர்கள் தெற்கே துரத்தப்பட்டனர். ஆரியர்கள் பிறகு சிந்து கங்கைச் சமவெளியில் ‘ஆரிய வர்த்தம்’ என்ற பெயரில் ஆட்சி செலுத்தினர். பேராசிரியர் க.ந. திருநாவுக்கரசு எம்.ஏ. தமிழ், எம்.ஏ. வரலாறு, எம்.லிட். அவர்கள் எழுதிய ‘சிந்துவெளி’ தரும் ஒளியில் ‘உடை’ என்ற தலைப்பில் மொகஞ்சதாரோவில் உள்ள வீடுகள் பலவற்றுள் நெசவுத் தொழில் நடந்து வந்தது என்பதற்குச் சான்றுகளாக நூற்கும் கதிர்கள் பல கிடைத்துள்ளன. ஆவை பளிங்காலும், சங்கினாலும் களிமண்ணாலும் செய்யப்பட்டவை.
பஞ்சும் கம்பளி மயிரும் கொண்டு நெசவுத் தொழில் நடத்தினர். பஞ்கின் துணுக்குகள் பல வெள்ளியால் செய்யப்பட்ட மலர்க் குவளைக்கு அருகில் கிடைத்துள்ளன. அவற்றை நுட்பமாக ஆராய்ந்து பார்த்த ஆட்சியாளர்கள் இன்றைய இந்தியப் பஞ்சைப் போன்றே அப்பஞ்சும் இருப்பதாகக் கருதுகின்றனர். பஞ்சு தக்காணத்திலிருந்து சிந்துவெளிக்குச் சென்றிருக்க வேண்டும். அப்பஞ்சைத்தான் பாபிலோனியர் ‘சிந்து’ என்றும், கிரேக்கர் ‘சின்டன்’ என்றும் பெயரிட்டு வழங்கினர். சிந்துவெளியில் கிடைத்துள்ள ஓவியங்கள் சிலைகள் ஆகியவற்றிலிருந்து நல்ல சித்திர வேலைப்பாடுகள் அமைந்த ஆடைகளை நெய்தனர் எனத் தெரிகிறது.
அக்காலத்தில் ஆடைகளில் நீண்ட போர்வை அல்லது சால்லை ஓர் உடையாக இருந்தது. இதனை அந்நகரங்களில் கண்டிடுக்கப்பட்ட இரண்டு சிலைகளின் உடைகளிலிருந்து அறியலாம். எளியவர் பருத்தி ஆடைகளையும், செல்வந்தர் உயர்ந்த பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்ட பேர்வைகளையும் சால்வைகளாக அணிந்திருந்தனர்.
மொகஞ்சதாரோவில் பல்வகைப் பொத்தான்கள் கிடைத்துள்ளன. இதனால் அந்நகர மக்கள் சட்டைகளையும் அணிந்திருந்தனர் என்பது புலனாகிறது. பெண்கள் பாவாடைகள் அணிந்திருந்தனர். செல்வர் வீட்டு மங்கையர் மெல்லிய மேலாடையையும் அணிந்திருந்தனர் என்பதை முத்திரைகளினால் அறிகிறோம்.
மேலைநாடுகளில் பண்டைக் காலத்தில் பருத்தி ஆடை அணிந்திருந்ததாக தெரியவில்லை. அந்நாடுகள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்புதான் இந்தியாவிலிருந்து பஞ்சை அறிந்தன. அதனால்தான் பாபிலோனியர் பஞ்சை ‘சிந்து’ என்றும், கிரேக்கர்கள் ‘சின்டன்’ என்றும் பெயரிட்டு வழங்கினர். சிந்துவெளி மக்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பஞ்சினை நூற்று, ஆடைகள் நெய்யக் கற்றிருந்தனர் என்பது வியத்தற்குறிய செய்தியாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இக்கூற்றை வரலாற்றுப் பேராசிரியர்கள் ஆர்.ஆர். திவாகரும், எஸ். இராமகிருஷ்ணன் என்பாரும் தாங்கள் எழுதிய கி.மு. 3250 முதல் 2750 வரையிலான 500 ஆண்டு காலத்திற்கான ‘Hindu Civilisation’ என்ற நூலில் உறுதிப்படுத்துகிறார்கள்.
‘ஜியோனைன் அபோயர்’ தான் எழுதிய ‘Daily Life in Ancient India’ என்ற நூலில் கி.மு. 200 முதல் கி.பி. 700 வரையிலான காலத்தில் பட்டு சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றும் (பட்டுப்பூச்சி பற்றிய ரகசியம் சீனாலில் நீண்ட காலம் வெற்றிகரமாகக் காப்பாற்றப்பட்டது) இந்தியர்கள் அந்தப் பட்டு நூலை விலை உயர்ந்த மெல்லிய ஆடைகளாக உருவாக்கி தாங்கள் அணிந்தது போக எஞ்கியதை பெருமளவிற்கு ஏற்றுமதி செய்தனர். இந்தியர்கள் பருத்தியைத் தாங்களே பயிரிட்டு வளர்த்து அந்தப் பருத்தியிலிருந்து மிகவும் மெல்லிய மஸ்லீன் ஆடைகளை நெய்து அழகிய வண்ணங்களில் சாயம் தோய்த்தனர். இந்தத் தொழிலில் அவர்கள் சிறந்து விளங்கியதோடு, இந்தியாவில் - குறிப்பாக குஜராத் கிழக்கு வங்காளம் (டாக்கா) தென்னகம் முழுவதும் குறிப்பாக, திருச்சிராப்பள்ளி, தஞ்சை மசூலிப்பட்டணம் ஆகிய பகுதிகளில் செல்வச் செழிப்பையும் உருவாக்கினர். இத்துடன் மெத்தைகள் தலையணைகளுக்குத் தேவையான பண்படுத்தப்பட்ட பஞ்சும் அந்நாளில் மிகவும் முக்கியமான ஜவுளிச் சந்தையாகத் திகழ்ந்த எகிப்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்;டது என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.
பட்டு நூலின் பூர்வீகம்:
உலகிலேயே முதன் முதலாகப் பட்டு உற்பத்தி செய்யப்பட்டது சீனாவில்தான். பட்டுத் துணிகள் என்றால் சீனப்பட்டுகளையே குறிப்பதாகவும், பதனிடப்படாத பட்டு (Raw Silk) அயல்நாடுகளு;குக் கால்நடையாகவே கொண்டு வரப்பட்டு ஏற்றுமதி செய்யப்பபட்டதாகவும் ‘பெரிப்புனாஸ்’ கூறுகிறது.
ஜப்பானியர் இரண்டு சீன மகளிரைக் கடத்திச் சென்று இக்கலையைக் கற்றதாகவும் இந்தியனை மணந்த சீனப் பெண் தன் கூந்தலில் பட்டுப் பூச்சியைக் கடத்தியதன் மூலம் இந்தியாவில் பட்டு உற்பத்திக் கலையைப் பரப்பிதாகவும் வரலாறுகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் கி.பி. 4 அல்லது 5 ஆம் நூற்றாண்டில் திருக்காம்பூரில் பட்டு நூல் கட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாம். பட்டின் தோற்றம் கி.மு. 2640 என்று கருதுகிறார்கள்.
சீனாவிலிருந்து பட்டு முதலில் அஸ்ஸாம், காஷ்மீரம், வங்காளம் போன்ற பகுதிகளுக்குப் பரவியது. பட்டுப்புழுக்கள் வடிவத்தில் கர்நாடகத்திலும் பரவியது. கர்நாடகத் தட்பவெப்பநிலை, மண் இவற்றின் தன்மை பட்டுப்பூச்சி வளர்ப்புக்கு மிக உகந்ததாக உள்ளது. இதனால் பட்டு என்றால் கர்நாடகம் நமக்கு பட்டென்று ஞாபகத்துக்கு வருகிறது.
(சாலியர் குரல் 9/88)
சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கி.பி. 985 ல் முதலாம் இராஜராஜ சோழன் அரியணை ஏறினார். ஒரு நாட்டின் நாகரீக வளர்ச்சியின் அளவுகோல் அந்நாட்டு மக்கள் பயன்படுத்திய ஆடையணிகளாகும். இராஜராஜ சோழன் காலத்தில் தமிழக மக்கள் பருத்தி நூலாலும், பட்டாலும் நெய்யப்பட்ட நேர்த்தியான ஆடைகளை அணிந்திருந்தனர். அக்காலத்தில் பாலாவி போன்ற நுண்துகில் பொங்கும் நுரையைப் போன்ற கலிங்கம், காவியூட்டிய பூந்துகில், முயல் ரத்தம் போன்ற செவ்வண்ணப் பட்டுகள், பசிய இலை வேலைப்பாடுடைய பட்டுகள், மெல்லிய ஆடைகள் ஆகியவற்றை மக்கள் அணிந்து மகிழ்ந்தனர். இன்றும் தஞ்சைப் பெருங்கோவிலில் கோபுரத்தின் உட்புறம் தீட்டப்பட்டுள்ள ஓவியங்களில் மன்னர் இராஜராஜ சோழன் தன் மனைவிமார்களுடன் சிதம்பரம் நடராஜரை வழிபடுவது போன்று ஒரு வண்ண ஓவியம் உள்ளது. ஆந்த ஓவியத்தில் மன்னனும் அவர் மனைவியரும் மெல்லிய பட்டாடை உடுத்தியிருப்பது போலவும், தற்கால நாகரீக மங்கையர் உடுத்தி வரும் கால்சட்டை, மேலாடை (பைஜாமா, சுடிதார்) போன்ற உடைகளுடனும் தோளில் தொங்கு பையுமாகக் காட்சி தருகிறார்கள். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வரையப்பட்ட இந்த ஓவியங்கள் இரசாயன முறையில் கழுவி நேர்த்தி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
கலிங்கமும், கலிங்கத்துப் பரணியும்:
ஆடையைக் குறிக்கும் பழந்தமிழ்ச் சொற்கள் பல. அவற்றுள் ‘கலிங்கம்’, ‘காழகம்’, ‘அறுவை’, ‘துகில்’, என்பவை சில. கலிங்கத்தில் நெய்யப்பட்ட ஆடை கலிங்கமாகும். கலிங்கத்தைப் பற்றிய ஒரு சுவையான செய்தி பேராசிரியர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்கள் எழுதிய ‘தமிழர் வாழ்வு’ என்ற நூலில் மதுரைப் பொற்றாமரைக் குளத்தில் இரட்டைப் புலவர்கள் நீராடிக் கொண்டிருந்தனராம். அப்போது ஒரு புலவரின் ஆடை மடியிலிருந்து நழுவி நீரில் மூழ்க, புலவர் ‘ஐயோ, கலிங்கம் போகிறதே’ என்று கூவ, மற்றவர் நகைச்சுவையாக,
“இக்கலிங்கம் போனலென் ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை”
என்று பாடினார்.
பண்டைய இந்தியாவில் 56 நாடுகள் இருந்தனவென்றும் அவற்றில் கலிங்கமும் ஒன்று என்றும் படித்திருக்கிறோம். அசோக மன்னன் கலிங்கத்தை அடிமைப்படுத்தினான். பின்னர் சோழர்களும் கலிங்கத்தை வென்றனர். கலிங்க நாடு சோழர்களுக்குத் திறை செலுத்தி வந்ததாகவும், குலோத்துங்க சோழன் காலத்தில் திறை செலுத்தாமையால் சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு குலோத்துங்க சோழனின் படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தின் மீது படையெடுத்து வென்று ஒரே நேரத்தில் 1000 யானைகளைக் கொன்று குவித்ததால், அக்கால மரபிற்கேற்ப ‘சயங்கொண்டார்’ என்ற புலவர் குலோத்துங்க சோழனைக் காவியத் தலைவனாக உருவாக்கி ‘கலிங்கத்துப் பரணி’யைப் பாடினாராம்.
ஆற்றங்கரை நாகரீகம் என்ற நூலில் திரு. மா. இராசமாணிக்கம் அவர்கள் மதுரையில் பருத்தி நூலாலும், பட்டு நூலாலும் ஒரு வகை எலி மயிராலும் கண்கவர் ஆடைகள் நெய்யபட்டு வந்தன என்று சிலப்பதிகாரம் கூறுகிறது என்பார். ‘பாண்டியர் வரலாறு’ என்ற நூலில் டி.வி. சதாசிவ பண்டாரத்தார் அவர்கள் பாண்டிய நாட்டில் முத்துக் குளித்தல் சங்கத்து வலையல் செய்தல் நூல் நூற்றல் ஆடை நெய்தல் ஆகிய தொழில்கள் நடைபெற்று வந்தன. நுண்ணிய பருத்தி நூலாலும் எலி மயிராலும் பட்டு நூலினாலும் ஆடைகள் நெய்யப்பட்டன என்பார்.
“நூலினது மயிரினும் நுழை நூற்பாட்டினும்
பால்வகை தெரியாப் பண்ணூறருக்கத்து
நறுமண்டி செறிந்த அறுவை விதியும்”
(சிலம்பு ஊர்காண்காதை – வரி 205.207)
“பஞ்சிதன் சொல்லாப் பனுவ லிழையாகச்
செஞ்சொற் புலவனே சேயிழையா – எஞ்சாத
கையேவா யாகக் கதிரே மதியாக
மையிலா நூண் முடியுமாறு”
என நன்னூல் இலக்கணம் எழுதிய பவனந்தி முனிவர் சிறந்த செய்யுள் எழுதுவதையும் நெசசுத் தொழிலையும் இணைத்துக் காட்டுகிறார். துகில் என்பது மாதர் அணியும் மெல்லிய ஆடையாகும். மகாபாரதத்தில் துச்சாதனன் திரௌபதியின் ‘துகில்’ உரிந்தான் எனக் கேள்விப்படுகிறோம். கடற்கரைக்குத் தன்னுடைய காதலனான கோவலனுடன் சென்ற மாதவி ‘நிறங்கிளர்ப் பூந்துகில் நீர்மையின் உடுத்தி இருந்தாள்’ என்று சிலம்பு கூறுகிறது. தஞ்சை மாவட்டத்தில் ‘துயிலி’ என்ற ஊர் உண்டு. அவ்வூரில் நெய்யப்படும் மெல்லிய ஆடை ‘துயில்’ என்று வழங்கப்பட்டது. நேர்த்தியான துகில் நெய்யப்பட்டதால் ‘துகிலி’ என்றழைக்கப்பட்டு ‘துகிலி – துகில்’ என்று மருவியது என்பர். தறியினின்று துண்டிக்கப்பட்டது துண்டு, அறுக்கப்பட்டது அறுவை, குறைக்கப்பட்டது கூறை என்றாயிற்று.
கோசிகம், பீதகம், பச்சிலை, அரத்தம், நுண்துகில், சுண்ணம், வடகம், பஞ்சு, இரட்டு, பாடகம், கோங்கலர், கோபம், சித்திரக்கம்பி, குருதி, கரியல் பேடகம், சில்லிகை, துரியம், பங்கம், தத்தியம், வண்ணடை, சுவற்றுமடி, நூல்யாப்பு, திருக்கு, தேவாங்கு, பொன்னெழுத்து, குச்சரி, தேவகிரி, காத்தூலம், இறஞ்சி, வெண்பொத்தி, செம்பொத்தி, பணிப்பொத்தி என்று 36 வகை ஆடைகளை அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். துகில், பூந்துகில் சீரை, சீலை, மேகலை, கூறை, சிற்றாடை, வட்டுடை, கலிங்கம், காழகம், தூசு, படம், படாம், துண்டு, தறி புடவை ஆகியனவும் துணி வகையைக் குறிப்பிடுவன என்று பா. இறையரசன் என்பார் தன் ‘தமிழர் நாகரீக வரலாறு’ என்ற நூலில் கூறுகிறார்.
கவியரசு கண்ணதாசன் தன் ‘தென்றல்’ பத்திரிகையில் கீழ்க்கண்ட வெண்பா பாடலை வெளியிட்டுள்ளார்.
“பொன்னும் புகழ்முத்தும் பூந்துகிலும் நாவாயும்
முன்னு திகழ் காதல் வீரமென
தென்னகத்தே, அன்றிழந்ததேதும், வராது, நீ மட்டும்
தென்றலே, ஏன் வந்தாய் செப்பு?”
ஆடைகளும், பெயர் காரணங்களும்:
1. வேட்டி – வெட்டப்படுவதால் ‘வேட்டி’ என்றானது. பகுதியாக வெட்டிப் பயன்படுத்துவதால் வெட்டுதலை உடையது என்னும் பொருளில் ‘வேட்டி’ எனப்பட்டது.
2. துண்டு: துண்டு செய்யப்படுவதால் ‘துண்டு’ எனப்பட்டது.
3. சேலை: சீலை என்பதே சேலை என்று வந்தது. ‘திரைச்சீலை’என்றுதான் இன்றும் வழங்கப்படுகிறது.
துண்டு, வேட்டி- இவற்றைவிட நீளமாக இருப்பதால் சீலை எனப்பட்டது. ‘சீ’ எனும் தமிழ் வேர்ச்சொல்லுக்கு நீளமானது என்று பொருளாகும்.
4. சட்டை: உடலைப் போர்த்துவதால் சட்டை எனப்பட்டது. குழிவாக ஊற்றும் திரவத்தைப் போற்றுவதால் கரண்டியைச் சட்டுவம் என்பர். இதைப் போலவே உடலைப் போர்த்தியபடி பேணியபடி அமைவதால், ‘சட்’ என்பதன் அடியாக சட்டை என்ற சொல் பிறந்தது. பாம்பின் மீது போர்த்தியதுபோல் இருப்பதால் பாம்புச் சட்டை என்று பெயர் வந்தது.
5. ஆடை: உடலில் அணியும் துணி வகைக்கு ஆடை என்று பெயர். அடுக்கியிருப்பதால் ‘ஆடை’. உடலோடு ஒட்டி அடுக்கி இருப்பதால் ஆடை என்ற பெயர் வந்தது. பால்மீது ஒட்டிப் பரவியபடி இருப்பதால் பாலேட்டைப் ‘பாலாடை’ என்கிறோம்.
6. கைலி: ‘கையொலியில்’ என்ற இஸ்லாமியச் சொல்லிலிருந்து ‘கைலி’ என்ற சொல் வந்தது. கைலி என்பது தமிழ்ச் சொல் அல்ல. டாக்டர் எச். சேளந்திரபாண்டியன் எம்.ஏ.,பி.எட், காப்பாட்சியர் அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை. (சாலியர் குரல், ஜூலை, 1994).
*****