Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

சனி, 30 ஏப்ரல், 2016

காரல் மார்க்சு - கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


Karl Marx 001.jpg

கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5, 1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார்.

வாழ்க்கைக்குறிப்பு

கார்ல் மார்க்சு, தற்போது செருமனியின் ஒரு பகுதியாக இருக்கும் புருசியாவில் ட்ரையர் நகரில் 1818 மே 5-ஆம் நாள் பிறந்தார். எப்போது கார்ல் மார்க்சின் தந்தை யூதரான ஹைன்றிச் மார்க்சு கிறித்தவராக மதம் மாறினார் என்ற சரியான தேதி தெரியவில்லை ஆனால் அவர் மார்க்சு பிறக்கும் முன்பே மதம் மாறிவிட்டார். இவரின் தந்தை வசதி படைத்த வழக்குரைஞர், கார்ல் மார்க்சு அவருக்கு மூன்றாவது மகனாவார். கார்லின் இளவயது பற்றி அதிகம் வெளியே தெரியவில்லை. 1830 வரை தனிப்பட்ட முறையில் இவருக்கு கல்வி கற்பிக்கப்பட்டது. கார்ல் தமது பதினேழாம் வயதில் சட்டம் பயிலப் பான் பல்கலைக் கழகம் சென்றார். பெர்லின் பல்கலைக்கழகத்தில் வரலாறு, மெய்யியல் ஆகிய துறைகளில் பயின்ற கார்ல் மார்க்சு யெனா பல்கலைக்கழகத்தில் மெய்யியலுக்கான முனைவர் பட்டத்தினைப் பெற்றார்.

1841இல் பட்டம் பெற்ற மார்க்சு சில காலம் இதழியல் துறையில் இருந்தார். கொலோன் நகரில் ரைனிஷ் ஸைத்துங் எனும் இதழின் ஆசிரியராக இருந்தார். ஆனால் அவருடைய தீவிர அரசியல் கருத்துகளின் விளைவாக இடர் ஏற்படவே பாரிசு சென்றார். அங்கு 1844-ல் பிரெடரிக் ஏங்கல்சைச் சந்தித்தார். ஒருமித்த கருத்தும் மிகுந்த திறமையும் கொண்ட இருவருக்கும் இடையே நட்பு மலர்ந்தது. அவர்களிடையே தோன்றிய தனிப்பட்ட உறவும் அரசியல் நட்பும் இறுதிவரை நிலைத்திருந்தது.

பாரிசில் இருந்தபோது லுட்விக் ஃபொன் வெஸ்ற்ஃபாலென் பிரபுவின் மகளான 21 வயது நிறைந்த ஜெனியுடன் மார்க்சுக்கு காதல் மலர்ந்தது. அப்போது மார்க்சுக்கு வயது 17. பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த ஜெனியின் சகோதரர் ஒருவர் பின்னாளில் புருசியாவின் அமைச்சரவையில் பொறுப்பு வகித்தவர். கடுமையான குடும்ப எதிர்ப்பின் காரணமாக எட்டு ஆண்டுகள் தமது காதலை கமுக்கமாக வைத்திருந்த மார்க்சு, ஜெனிக்கு 29 வயதான போது அவரைத் திருமணம் செய்துகொண்டார். மார்க்சுக்கும் ஜெனிக்கும் ஏழு குழந்தைகள் பிறந்தனர். எனினும் மூவர் தவிர ஏனையோர் சிறு வயதிலேயே இறந்துவிட்டனர். மார்க்சுக்கும் ஜெனிக்கும் பிறந்த பிள்ளைகள், ஜெனி கரோலின் (1844–1883), ஜெனி லோரா (1845–1911), எட்கார் (1847–1855), ஹென்றி எட்வார்ட் கை (1849–1850), ஜெனி ஈவ்லின் பிரான்சிஸ் (1851–1852), ஜெனி ஜூலியா எலீனர் (1855–1898) என்போராவர். இவர்கள் தவிர ஒரு குழந்தை 1857 சூலையில் பெயரிடும் முன்னரே இறந்துவிட்டது.

பணியும் இடர்களும்

ஜார்ஜ் வில்லியம் பிரெடரிக் ஹெகல் என்பவரின் தருக்கமுறை மற்றும் வரலாற்று பார்வை, பொருளாதார அறிஞரான ஆடம் சிமித், டேவிட் ரிக்கார்டோ போன்றவர்களின் செவ்வியல் பொருளியல் கருத்துக்கள், பிரான்சு தத்துவவியலாளர் ஜான் ஜாக் ரூசோவின் குடியரசு பற்றிய கருத்துக்கள் ஆகியவற்றால் மார்க்சு மிகவும் கவரப்பட்டார். கார்ல் மார்க்க்சு பிரான்சிலிருந்து வெளியேற்றப்பட்டு பிரசல்ஸ் சென்றார். அங்குதான் 1847-ல் "தத்துவத்தின் வறுமை" (The Poverty of Philosophy) என்னும் தமது முதல் நூலை வெளியிட்டார். அடுத்த ஆண்டில் ஏங்கல்சுடன் சேர்ந்து "பொதுவுடமை அறிக்கை" (The Communist Manifesto) எனும் நூலையும் வெளியிட்டார். அது மிகப் பலர் வாசிக்கும் நூலாகும். இறுதியில் மார்க்சு கொலோன் நகருக்குத் திரும்பினார். ஆனால் சில மாதங்களுள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார். பிரான்சு, பெல்சியம், செருமனி ஆகிய நாடுகளின் புரட்சிகர இயக்கங்களில் பங்காற்றி ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு நாடு கடத்தப்பட்ட மார்க்ஸ், இலண்டன் சென்று அங்கேயே இறுதிவரை வாழ்ந்தார்.

நிதி உதவிகள்

மார்க்சு இதழியல் தொழிலில் சிறிது பணம் ஈட்டிய போதும் தம் வாழ்வின் பெரும் பகுதியை இலண்டனில் ஆராய்ச்சியிலும் அரசியல், பொருளியல் பற்றிய நூல்களை எழுதுவதிலும் கழித்தார். இவருக்கு பிரெட்ரிக் ஏங்கல்சு வழங்கிய கொடை அந்நாட்களில் குடும்பம் வாழ்வதற்கு உதவியாக இருந்தது.
மார்க்சின் பெற்றோர் இறந்த போது அவருக்கு மரபுரிமையாகச் சிறிது பணம் கிடைத்தது. 1845 இல் மார்க்சு தோற்றுவித்த முதலாவது பொதுவுடமை கழகத்தின் பதினான்கு உறுப்பினர்களுள் ஒருவரான வில்ஹெம் வோல்ஃப் அறுநூறு பவுண்டு அளவில் விருப்புரிமைக் கொடை அளித்தார். 1850இல் நாடு கடந்து இலண்டனில் வாழ்ந்த காலத்தில் மார்க்சு கொடும் வறுமைக்குள்ளானார். அக்காலத்தில் கடன் கொடுத்தவர்களுக்குப் பயந்துகொண்டே வாழும் நிலை ஏற்பட்டது. தன்னுடைய ஆடைகள் எல்லாம் அடமானத்தில் இருந்ததால் அவர் வீட்டைவிட்டே வெளியே செல்ல முடியாமல் போன ஒரு காலமும் இருந்தது. ஒருமுறை தனது வீட்டைவிட்டு விரட்டப்பட்டார். தன் தந்தையின் இறப்புக்கு பின் ஏங்கல்சு தனது குடும்ப வணிகத்தில் கிடைத்த வருமானத்தில் மார்க்சுக்கு 350 பவுண்டு ஓய்வூதியத்துக்கு ஏற்பாடு செய்தார். இதுவே மார்க்சின் குறிப்பிடத்தக்க வருமானமாக இருந்தது.
கார்ல் மார்க்சின் பிறந்த இடம் - டிரையர். தற்போது அருங்காட்சியகமாக உள்ளது
நியூயோர்க் டெய்லி டிரிபியூன் என்னும் முற்போக்கு இதழுக்கு ஆக்கங்கள் எழுதிய போதும் மார்க்சுக்கு உறுதியான வருமானம் என்று எதுவும் இருக்கவில்லை. அவர் அந்த இதழின் ஐரோப்பிய அரசியல் நிருபராக இருந்தார். ஒவ்வொரு கட்டுரைக்கும் ஒரு பவுண்டு பணம் வழங்கினர். ஆயினும் அவர் எழுதிய கட்டுரைகள் முழுவதும் பதிப்பாகவில்லை. 1862 வரை டிரிபியூனுக்கு எழுதி வந்தார். ஜெனியின் உறவினர் ஒருவர் இறந்தபோதும், ஜெனியின் தாய் இறந்தபோதும் ஜெனிக்கு மரபுரிமையாக ஓரளவு பணம் கிடைத்தது. இதனால் அவர்கள் இலண்டனின் புறநகர்ப் பகுதியான கெண்டிஷ் நகரில் இன்னொரு வீட்டுக்குக் குடிபெயர முடிந்தது. வருமானம் குறைவாக இருந்ததால் மார்க்சு பொதுவாக அடிப்படை வசதிகளுடனேயே வாழ்ந்து வந்தார். எனினும், தனது மனைவி, குழந்தைகளின் சமூகத் தகுதியைக் கருதி ஓரளவு நடுத்தர வகுப்பு ஆடம்பரங்களுக்கும் செலவு செய்ய வேண்டியிருந்தது.

மூலதனம் நூல்

அக்காலத்தில் இங்கிலாந்து, ஐரோப்பாவிலிருந்து வெளியேறிய அரசியல் ஏதிலிகளுக்குரிய புகலிடமாக இருந்தது. அக்காலகட்டத்தில் பெரும் முயற்சியில் கட்டிய பிரமாண்டமான பிரித்தானிய அருங்காட்சியகத்தின் கட்டுமான வேலைகள் நிறைவுற்றிருந்தது. மார்க்சு நாள் தவறாது அங்குச் சென்று ஒவ்வொரு வேலை நாளிலும் 12 மணி நேரத்தை அங்குச் செலவிட்டு வந்தார். அங்கே தான் மூலதனம் எனும் நூல் தோன்றியது. கார்ல் மார்க்சின் சிறப்பு வாய்ந்த மூலதனம் நூலின் முதல் தொகுதி 1867இல் வெளிவந்தது. 1883இல் மார்க்சு இறந்த பிறகு அவர் விட்டுச் சென்ற குறிப்புகளையும் கையெழுத்துப் படிகளையும் பிரெட்ரிக் ஏங்கல்ஸ் பதிப்பித்து வெளியிட்டார்.

மார்க்சின் சிந்தனைகள்

மானுட சமூகங்கள் தங்களை எவ்வாறு உற்பத்தியும் மறுஉற்பத்தியும் செய்து கொள்கின்றன என்பதை ஆய்வதன் மூலம் அறிவியல் பூர்வ அடிப்படையில் மானுட வரலாற்று வளர்ச்சியைப் புரிந்துகொள்ள முடியும் என்று வெளிச்சமிட்டு காட்டியதன்மூலம், வரலாற்றை அவர் ஒரு அறிவியலாக உயர்த்தினார். மார்க்சு மறைந்து ஒரு நூற்றாண்டுக்குப் பின் இன்று மார்க்சியக் கொள்கையைப் பின்பற்றுவோரின் தொகை 130 கோடியாகும்  மாந்த வரலாற்றில் ஒட்டு மொத்த எண்ணிக்கையிலும், உலக மக்கள் தொகையின் விழுக்காட்டிலும் இத்தனை பேர் வேறு எந்தக் கொள்கையையும் பின்பற்றவில்லை. மார்க்சைப் போல மார்க்சியவாதிகளாலும் எதிர்ப்பாளர்களாலும் ஒன்று போலவே பிழையாகப் புரிந்து கொள்ளப்பட்டவர்கள் தற்கால வரலாற்றில் மிகவும் குறைவு என மார்க்சு பற்றி ஆய்வு செய்தவரான அமெரிக்காவின் ஹால் டிராப்பர் ஒருமுறை குறிப்பிட்டார். மார்க்சின் சிந்தனைகளைப் பல்வேறு குழுக்கள் பல்வேறு வகையாக விளக்கியுள்ளன. இவர்களுள், மார்க்சிய-லெனினியவாதிகள், டிரொஸ்கியிசவாதிகள், மாவோயிசவாதிகள், தாராண்மை மார்க்சியவாதிகள் என்போர் அடங்குவர்.

மார்க்சு சிந்தனைகளில் செல்வாக்குச் செலுத்தியவை

மார்க்சின் சிந்தனைகளில் பல முந்திய, சமகாலச் சிந்தனைகளின் செல்வாக்கு உள்ளது. அவற்றுள் சில:
  • ஹேகலின் முறைகளும், வரலாற்று ஆய்வுப்போக்கும்.
  • ஆடம் சிமித், டேவிட் ரிக்காடோ போன்றோரின் செந்நெறி அரசியல் பொருளாதாரம்.
  • பிரெஞ்சு சோசலிச, சமூகவியல் சிந்தனைகள். குறிப்பாக ஜான் ஜாக் ரூசோ, ஹென்றி டி செயின்ட்-சிமோன், சார்லஸ் ஃபூரியர் போன்றோரின் சிந்தனைகள்.
  • முந்திய செருமானிய மெய்யியல் பொருள்முதல்வாதம், குறிப்பாக லுட்விக் ஃபியுவெர்பக்.
  • பிரடெரிக் ஏங்கெல்சின் தொழிலாளர் வர்க்கத்தினருடனான ஒருமைப்பாடு.
வரலாற்றுப் பொருள்முதல்வாதம் எனப்படும் மார்க்சின் வரலாறு பற்றிய நோக்கு ஹேகெலின் சிந்தனைகளின் தாக்கத்தைக் கொண்டது ஆகும். மனித வரலாறு துண்டு துண்டாக இருந்து முழுமையையும் உண்மையையும் நோக்கிச் செல்லும் இயல்பு கொண்டது என ஹேகல் நம்பினார். இந்த உண்மைநிலை நோக்கிச் செல்லும் வழிமுறை படிமுறையானது என்றும், சில வேளைகளில் இருக்கும் நிலைக்கு எதிராகத் தொடர்ச்சியற்ற புரட்சிகரமான பாய்ச்சலும், எழுச்சிகளும் தேவை என்றும் ஹேகல் விளக்கியிருந்தார். எடுத்துக்காட்டாக, ஹேகல் ஐக்கிய அமெரிக்காவில் நடைமுறையில் இருந்த அடிமை முறையைத் தீவிரமாக எதிர்த்து வந்ததுடன், கிறித்தவ நாடுகள் இதனை ஒழித்துவிடுவார்கள் என்றும் கணித்தார்.

மார்க்சின் மெய்யியல் கொள்கைகள்

மார்க்சின் மெய்யியல் அவரது மனித இயல்பு பற்றிய நோக்கில் தங்கியுள்ளது. அடிப்படையில், மனிதனுடைய இயல்பு இயற்கையை மாற்றுவது என்று மார்க்சு கருதினார். அவ்வாறு இயற்கையை மாற்றும் செயல்முறையை "உழைப்பு" என்றும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வல்லமையை உழைக்கும் திறன் என்றும் அவர் அழைத்தார். மார்க்சைப் பொறுத்தவரை, இது ஒரே நேரத்தில் உடல் சார்ந்ததும் மனம் சார்ந்ததுமான செயற்பாடு ஆகும்.

ஒரு சிலந்தி ஒரு நெசவாளியை ஒத்த செயல்பாடுகளில் ஈடுபடுகிறது, தனது கூட்டைக் கட்டும் தேனீ பல கட்டிடக்கலைஞர்களை வெட்கப்படும்படி செய்கிறது. ஆனால், மிகத்திறமையற்ற கட்டிடக் கலைஞனுக்கும், மிகச் சிறந்த தேனீக்கும் இடையிலுள்ள வேறுபாடு, கட்டிடக்கலைஞன் கட்டிடத்தை உண்மையாகக் கட்டுமுன்னரே கற்பனையில் கட்டிவிடுகிறான் என்பதாகும்."
 

கார்ல் மார்க்சின் கடிதம்

கார்ல் மார்க்சு - மார்ச் 5, 1852-ல் Weydemeyer க்கு எழுதிய கடிதமொன்றிலிருந்து பெறப்பட்ட பின்வரும் பகுதி அவரின் ஆய்வுகள், கண்டுபிடிப்புகளின் சாராம்சத்தைத் தருகிறது.

" நவீன சமூகத்தில் வர்க்கங்களின் இருப்பையோ அவற்றுகிடையான முரண்பாட்டினையோ கண்டறிந்ததற்கான பெருமை எனக்குரியதன்று. எனக்கு நீண்ட காலத்துக்கு முன்னரே வர்க்க முரண்பாட்டின் வரலாற்று வளர்ச்சியை பூர்ஷ்வா வரலாற்றறிஞர்களும், வர்க்கங்களின் பொருளியல் சட்டகத்தைப்பற்றி பூர்ஷ்வா பொருளியலாளர்களும் விவரித்துவிட்டார்கள். நான் புதிதாகச் செய்ததெல்லாம், பின்வருவனவற்றை நிறுவியதுதான்.
1. உற்பத்தி வளர்ச்சியின் குறிப்பிட்ட வரலாற்றுக் காலகட்டங்களில் மட்டுமே வர்க்கங்களின் இருப்பு கட்டுண்டிருக்கிறது.
2. வர்க்க முரண்பாடானது பாட்டாளி வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்கு இட்டுச்செல்லும்.
3. இந்தப் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரமானது வர்க்கங்களினதும் வர்க்க சமுதாயத்தினதும் அழிவுக்கான இடைமாறு நிலையை மட்டுமே அமைத்துக்கொடுக்கும். "

இறுதிக் காலம்

1881 ஆம் ஆண்டு திசம்பரில் மார்க்சின் மனைவி ஜெனி காலமானார். இதன்பின் மார்க்சு 15 மாதங்கள் மூக்கடைப்பு நோயினால் அவதியுற்றார். இறுதியில் இது மூச்சுக்குழாய் அழற்சி (bronchitis), நுரையீரலுறை அழற்சி (pleurisy) போன்ற நோய்களாகி அவரது உயிரைப் பறித்தது. 1883 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 14 ஆம் தேதி மார்க்சு இலண்டனில் காலமானார். இறக்கும்போது நாடற்றவராக இருந்த மார்க்சை இலண்டனிலுள்ள ஹைகேட் இடுகாட்டில் அடக்கம் செய்தனர். மார்க்சின் நெருங்கிய தோழர்கள் பலர் இவரது இறப்பின்போது கலந்துகொண்டு பேசினர். இவர்களுள் வில்ஹெல்ம் லீப்னெக்ட், பிரெட்ரிக் ஏங்கல்ஸ் முதலியோர் அடங்குவர். ஏங்கெல்சு பேசும்போது,

"மார்ச்சு 14 ஆம் தேதி மூன்று மணிக்குக் கால் மணிநேரம் இருந்த போது வாழ்ந்து கொண்டிருந்த மிகப்பெரிய சிந்தனையாளர் சிந்திப்பதை நிறுத்திவிட்டார். இவர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே தனிமையில் விடப்பட்டிருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது அவர் தனது நாற்காலியில் மீளாத்துயிலில் ஆழ்ந்துவிட்டதைக் கண்டோம்" என்றார்.

கார்ல் மார்க்சின் கல்லறை

இவரது கல்லறையில், பொதுவுடமை அறிக்கையின் இறுதி வரியான Workers of All Land Unite (உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்) என்பதும், The philosophers have only interpreted the world in various ways—the point however is to change it (மெய்யியலாளர்கள் உலகை விளக்குவதற்கு மட்டுமே பல வழிகளைக் கையாண்டுள்ளனர் - நோக்கம் அதனை மாற்றுவதே) என்ற வரிகளும் பொறிக்கப்பட்டுள்ளன. 1954 ஆம் ஆண்டில் பெரிய பிரித்தானியப் பொதுவுடமைக் கட்சி மார்க்சின் கல்லறையை அமைத்தனர். இதில் லாரன்ஸ் பிராட்ஷாவினால் உருவாக்கப்பட்ட மார்க்சின் மார்பளவுச் சிலையும் உள்ளது. மார்க்சின் முந்தைய கல்லறை மிகவும் எளிமையானதாகவே இருந்தது. 1970 ஆம் ஆண்டில் இக் கல்லறையை கையால் செய்த வெடிகுண்டு மூலம் தகர்க்க முயற்சி செய்யப்பட்டது. ஆயினும் இது வெற்றியளிக்கவில்லை.

 

மார்க்சுசின் ஆக்கங்கள்

  • சரியானது பற்றிய ஹெகலின் தத்துவத்தின் திறனாய்விற்கு அறிமுகம் (Introduction to a Critique of Hegel's philosophy of Right)-1843.
  • தத்துவத்தின் வறுமை (The Poverty of Philosophy) - 1847.
  • சுதந்திரமான நாணயமாற்றுக் கேள்வி பற்றிய சொற்பொழிவு (Discourse upon The Question of Free Exchange) -1848.
  • கம்யூனிஸ்ட் அறிக்கை (The communist Manifesto) - 1848.
  • மூலதனம் (Das kapital) - 1867
  • அரசியல் பொருளாதார திறனாய்விற்கு அறிமுகம் (Introduction to the Critique of Political Economy) -1859.

 

மார்க்சின் வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகள்

  • 1814 - மார்க்சின் மனைவி ஜெனி பிறந்தது
  • 1818 - காரல் மார்க்சு பிறந்தது
  • 1820 - பிரெட்ரிக் ஏங்கெல்சின் பிறப்பு
  • 1836 - 1841-மார்க்சு கல்லூரிப் படிப்பு
  • 1838 - மார்க்சின் தந்தை கைன்ரிக் மார்க்சு மரணம்
  • 1842 - மார்க்சை ஆசிரியராகக் கொண்டு ரைன்லாந்து கெசட் இதழ் தோற்றம்
  • 1843 - ரைன்லாந்து கெசட் இதழ் வெளிவருவது நின்றது. மார்க்சு - ஜெனி திருமணம். பாரிசில் குடியேற்றம்
  • 1844 - முதல் மகள் பிறப்பு.
  • 1845 - பாரிசிலிருந்து வெளியேற்ற உத்தரவு. பிரசல்சு வாசம். பிரசிய குடியுரிமையை மார்க்சு துறந்து விட்டார்.
  • 1847 - சர்வதேசு சங்கத்தின் முதல், இரண்டாம் மாநாடுகள் கூடின.
  • 1848 - பொதுவுடமை அறிக்கை வெளியானது. பாரிசு புரட்சி. பாரிசிலிருந்து கோலோன் நகரத்துக்கு வருகை. புதிய ரைன்லாந்து கெசட் என்ற புதிய இதழ் தொடக்கம்
  • 1849 - கோலோனிலிருந்து வெளியேற்றம்.
  • 1849 - 1883 - இங்கிலாந்தில் வாழ்ந்தார்.
  • 1850 - இங்கிலாந்தில் சில காலம் ஓர் இதழை வெளியிட்டு வந்தார்.
  • 1852 - பன்னாட்டுப் பொதுவுடமைச் சங்கம் கலைக்கப்பட்டது.
  • 1864 - முதல் இன்டர்நேசனல் தோற்றம்.
  • 1867- மூலதனம் முதல் பகுதி வெளியானது.
  • 1872- முதல் இன்டர்நேசனல் கலைக்கப்பட்டது.
  • 1873 - மார்க்சு உடல் நலம் குன்றினார்.
  • 1881 - மார்க்சின் மனைவி ஜெனியின் மறைவு.
  • 1883 - மார்க்சின் மூத்த மகள் சென்னி லொங்குவே மறைந்தார். மார்க்சும் காலமானார்.
  • 1883 - 1894 - மூலதனம் இரண்டாவது, மூன்றாவது பகுதிகள் வெளியாயின.
  • 1895 - ஏங்கெல்சின் மரணம்




 

 

 

 

 

 


 

 

 

 

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - தவறு கங்கை மேல் அல்ல

பல வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் செய்யும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. பலநாட்டு மக்களுடன் பழகவும் பேசவும் எனக்கு நிறைய சந்தர்ப்பங்கள் கிடைக்கின்றன. அப்போதெல்லாம் இந்தியாவின் ஆன்மீக வளம், இயற்கை வளம், பல்வேறுப்பட்ட கலாசாராம் இருந்தும் காக்கப்படுகிற நாட்டு ஒற்றுமை பற்றியெல்லாம் வெளிநாட்டவர்கள் வியந்து பேசுவார்கள்.

இத்தனை வளங்கள் இருந்தும் நம்நாடு ஏன் செல்வச் செழிப்பு அடையாமல் இருக்கிறது என்று கூடவே என்னை ஆச்சரியத்தோடு கேட்பார்கள். நான் அவர்களுக்குப் பதில் சொல்லாமல் மௌனமாக இருந்து விடுவேன்.

ஆனால், இதுபற்றி நான் சிந்திக்காமல் இருந்தது இல்லை. எல்லாம் எனக்குத் தெரியும் என்ற மனப்பான்மைதான் நம்நாட்டு வளர்ச்சிக்கும் தடையாக இருக்கிறது என்பது என்னுடைய கருத்து.

தெரியும் என்ற மனநிலையில் இருந்து இயங்குவதுதான் நமக்குத் தெரியாத விஷயங்கள் நம் கண்ணில் புலப்படும்போதுகூட.. அதை அக்கறை கொடுத்துப் பார்க்க நாம் தவறிவிடுகிறோம்.
இயேசுநாதர் சொன்னதைப் போல கண்ணிருந்தும் குருடர்களாக காது இருந்தும் செவிடர்களாக நம்மில் பலர் இருப்பதால்தான் எல்லா வளமும் படைத்திருந்தும் நம்நாடு செல்வச் செழிப்பு இல்லாமல் இருக்கிறது. இது பற்றி ஒரு கதைகூட இருக்கிறது.

அவன் ஒரு சிறந்த மாணவன். இந்திய நாட்டின் பல சிறந்த மகான்களிடம் கல்வி கற்றவன். கங்கை நதியைப் பற்றித் தெரிந்து கொள்ள அவனுக்கு ஆர்வம் வருகிறது. அவன் கங்கை எங்கே உற்பத்தியாகிறது... எங்கே குறுகலாய் ஓடுகிறது... எந்த இடத்தில் அகண்ட கங்கையாய் மாறுகிறது, எங்கே வெள்ளப் பெருக்கு அதிகமாக இருக்கிறது... வங்காள விரிகுடாவில் எங்கே சங்கமிக்கிறது என்று சகலவிதமான தகவல்களையும் சேகரித்து அதன் படி ஒரு வரைபடமும் தயார் செய்கிறான்.

இப்போது கங்கையைப் பற்றி சகலமும் தனக்குத் தெரயும் என்ற நினைப்பு அவனுக்குள் வந்து விடுகிறது.  அதே மனநிலையில் ஒரு படகில் ஏறி, ரிஷிகேசத்தில் கிளம்பி வங்காள விரிகுடாவை அடைய கங்கை நதியில் அவன் பயணத்தை துவங்குகிறான். தயாரித்து வைத்திருந்த வரைபடத்தில் கங்கை எந்தெந்த இடத்தில் எல்லாம் திரும்பும் என்று குறிப்பிட்டிருந்தானோ அதே மாதிரியே காங்கையும் வளைந்து திரும்பி போய்க் கொண்டிருந்தது. ஆகா... கங்கை நதியின் ஜாதகமே எனக்குத் தெரிந்து விட்டது என்ற மமதை இப்போது பலமாக அந்த மாணவனின் தலையில் ஏறுகிறது.

அந்த சமயம் கங்கை இடது புறமாகத் திரும்புகிறது. மாணவன் திடுக்கிடுகிறான். அவனது வரைபடத்தின் படி அந்த இடத்தில் கங்கை வலது புறமாகத் திரும்ப வேண்டும். ஆனால் தனது வரைபடத்தை தவறு என்பதை மட்டும் அந்த மாணவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. கங்கைதான் திடீரென தடம் மாறி ஓடுகிறது என்று சொல்லிவிட்டு அவன் நதியின் மீதே கோபப்படுகிறான். பயணத்தைப் பாதியிலேயே ரத்து செய்து விட்டு ஊர் திரும்புகிறான். தெரியும் என்ற மனோநிலையில் இருந்து செயல்பட்டதால் முழுமையான அனுபவத்தை அவன் பெறவில்லை.

நம்மில் பலரிடம் இருக்கும் இன்னொரு கெட்ட குணம் நம்முடைய தவறுகளை நாம் அவ்வளவு சுலபத்தில் திருத்திக் கொள்வதில்லை என்பது. தவறு என்று தெரிந்தாலும் நமது செயல்களை நியாயப்படுத்துவது. அப்படி நியாயப் படுத்துவதையே ஒரு பெரிய சமார்த்தியமாக நினைப்பது. குதர்க்க புத்தி என்று இதற்குப் பெயர்.

அவன் ஒரு விசிறி வியாபாரி, பனை ஓலையால் ஆன விசிறிகளை விற்றுக் கொண்டு அவன் வீதியில் நடந்து போகிறான். இந்த விசிறி நூறு வருடம்உழைக்கும், அதனால் நூறு ரூபாய் என்று கூவிக் கூவி விற்கிறான். தனது
மாளிகையின் ஜன்னலிலிருந்து இதைப் பார்த்த மன்னனுக்கு ஒரே வியப்பு. மன்னன் விசிறி வியாபாரியை மாளிகைக்கு அழைத்து, என்ன விளiயாடுகிறாயா.. அற்பமான பனை ஓலை விசிறி இது. ஒரே ஒரு ரூபாய் கூடப் பெறாது. இதற்கு நூறு ரூபாயா? என்று கேட்கிறான்.


மன்னரைத் தான் அதிக விலை சொல்லி ஏமாற்ற முயன்றதை ஒப்புக் கொள்ள விசிறி வியாபாரி தயாராக இல்லை. அதனால் அவன், மன்னா... இது அதிசய விசிறி. நூறு வருடம் உழைக்கக் கூடியது. அதனால் தான் நூறு ரூபாய் என்றான். நூறு ரூபாய் கொடுத்து இந்த விசிறியை வாங்கிக் கொள்கிறேன். ஆனால், இது நூறு வருடம் உழைக்கா விட்டால் உன் தலை துண்டாகிவிடும், ஜாக்கிரதை என்று மன்னர் எச்சரித்து அனுப்பினார்.

சந்தேகப்பட்டது போலவே பனை ஓலை விசிறி, சில நாட்களில் கிழிந்து விட்டது. காவலர்கள் போய் விசிறி வியாபாரியைத் தேடி அரண்மனைக்குக் கொண்டு வந்து விட்டார்கள். மன்னனும் விசிறி வியாபாரியின் தலையை வெட்டச்சொல்லி தீர்ப்பு வழங்கிவிட்டார்.

அந்த நேரம் விசிறி வியாபாரி சொன்னான்.

மன்னா, நான் இறப்பது பற்றிக் கவலைப்படவில்லை. ஆனால், நூறு வருடம் உழைக்கக் கூடிய இந்த விசிறி உங்களுக்கு மட்டும் எப்படி இவ்வளவு சீக்கிரம் கிழிந்து போனது என்பது எனக்கு வியப்பாக இருக்கிறது. அதனால் என் தலையைத் துண்டிப்பதற்குமுன் நீங்கள் இந்த விசிறியை எப்படி உபயோகித்தீர்கள் என்று ஒரு முறை சொல்ல முடியுமா..? என்று கேட்டான்.

சாகப் போகிறவன் என்று மன்னனும் விசிறியை எடுத்து விசிறிக் காட்டினான். விசிறி வியாபாரி பதறுவது போல் நடித்தான். அடடா, இங்கேதான் தவறு நடந்து விட்டது. மன்னா இந்த விசிறி நூறு வருடம் உழைக்கும், இது
உண்மை, ஆனால், இதுபோல விசிறக் கூடாது. விசிறியை ஒரு கையால் பிடித்துக் கொண்டு முகத்தை நாம்தான் விசிறியின் முன்னால் ஆட்ட வேண்டும் என்று சொன்னான்.

அந்த வியாபாரி, அதாவது, தொழிலில் நாணயம் காட்டுவதற்கு பதில், செய்த தவறுக்குச் சப்பைக் கட்டு கட்டினான் அவன்.

இப்போது குதர்க்கம் என்பதற்கு அர்த்தம் புரிகிறதா?



மனசே, ரிலாக்ஸ் ப்ளீஸ்...

நன்றி ; மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் - பாகம் 1 - சுவாமி சுகபோதானந்தா அவர்களின் கட்டுரையிலிருந்து

தொகுத்தது ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

வியாழன், 28 ஏப்ரல், 2016

பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை

ஐந்து கரத்தினை ஆனைமு கத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினைப்
புந்தியில் வைத் தடி போற்றுகின்றேனே /      திருமூலர்

பிள்ளையார் சுழி
நமது வழிபாடுகள் எல்லாவற்றிற்கும் முன் நிற்கும் தெய்வம் பிள்ளையார். பிள்ளையார் சுழியிலிருந்து கோலமிட்டு நடுவில் பிள்ளையார் பிடித்து வைப்பது வரை நம்மவர்களின் உயிரோடு கலந்த உறவாடும் தெய்வம் பிள்ளையார்.
‘வேழமுகத்து விநாயகனைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்’ என்பதும் ‘வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடரும் வினைகளே’ என்பதும் நமது ஊர்களில் சாதராணமாக பழகி வரும் மொழிகள்..
பிள்ளையார்
எந்த ஒரு காரியம் செய்கிற போதும் பிள்ளையார் சுழி போடுவது, பிள்ளையாருக்கு தேங்காய் அர்ப்பணிப்பது என்று நமது காரியங்கள் பிள்ளையாருடன் ஒட்டிதாகவே நடைபெற்று வருகின்றன. இப்படியெல்லாம் இருக்கிற பிள்ளையார் பற்றிய தவறான கருத்துக்களும் கூட நம்மவர்களிடத்தில் பரவியிருக்கிறதை வேதனையோட பார்க்க வெண்டியிருக்கிறது. முக்கியமாக, மதமாற்றிகளின் கேலிக்கு உள்ளாகும் கடவுள்களில் பிள்ளையாரும் முக்கியமானவர். இப்படித் தான் அண்மையில் நண்பர் ஒருவர் கிறிஸ்துவர் ஒருவர் சொன்னார் என்று பிள்ளையார் பற்றிய சில கருத்துக்களைச் சொன்னார்.
அதுவே இக்கட்டுரை எழுதுவதற்கு பிள்ளையார் சுழி போட்டிருக்கிறது.
பிள்ளையாரின் பிறப்பு
ஆதியும் அந்தமுமில்லாத பெருமானுக்கு பிறப்பேது? ஆனாலும் இறைவன் உயிர்கள் மேற் கொண்ட பெருங்கருணையால் அவதாரம் செய்கிறான். எனினும் விநாயகரை ஒரு அவதாரமாகக் கொள்ளலாமா? என்பது ஒரு கேள்வியே.. இவர் ஸ்ரீராமர் போல.. கிருஷ்ணர் போல மண்ணில் அவதரித்தவர் அன்று. எனினும், புராணங்களில் விநாயக உற்பத்தி பற்றி பல செய்திகள் கிடைக்கிறது. மத்ஸ்யபுராணத்தில் உமாதேவி தான் நீராடிய போது தன் உடல் அழுக்குகளைத் திரட்டி வைக்க அப்போது பிள்ளையார் பிறந்தார் என்கிறது. இதனைக் கூறுவது போல விநாயக சஹஸ்ரநாமத்திலும் ஒரு நாமம் உண்டு. ஆனால் இதனை இப்படியே பொருள் கொள்ளலாமா? அல்லது வேறு தத்துவ செய்தி உண்டா? அல்லது இக்கதையை விலக்க வேண்டுமா? ஆராயப்பட வேண்டியது.
விநாயகபுராணம்
மிகப்பெரிய சிக்கல் என்ன எனில் கந்தப்பெருமானுக்கு கந்தபுராணம் போல, விநாயகருக்கு விநாயக புராணம் என்று சொல்லுவார்கள். ஆனால் விநாயக புராணம் பதிணெண் புராணங்களுள் அடங்காதது. பிற்காலத்தது என்று கருதப்படுவது. அத்துடன் பல முரணான செய்திகள் இங்கு ஒருங்கே இருந்து பெரும் சிக்கலைத் தருகின்றன. இவற்றால் இப்புராணம் அறிஞர்களின் பார்வையிலிருந்து விலகியே இருக்கிறது.
விநாயக அவதாரம் பற்றி விநாயகபுராணத்தில் ‘மூவர் உபாசித்த படலத்தில்’ ஒருவாறாயும், சிந்தாமணி விநாயகர் அவதாரப்படலத்தில் ஒருவாறாயும், விக்னராசர் அவதாரப்படலத்தில் ஒருவாறாயும், மயூரேசர் அவதாரப்படலத்தில் ஒருவாறாயும், பலப்பல வகையே சொல்லப்படுகின்றன.
ஆனால் இவைகளை எல்லாம் நம்மவர்கள் ஏற்றுப் போற்றினாரில்லை. முக்கியமானதான, பிரணவத்தின் வடிவமாக பிள்ளையார் தோன்றினார் என்பதையே ஏற்றுக் கொண்டனர். உமாதேவியும் சிவபெருமானும் சித்திரமாக வரையப்பட்டிருந்த சமஷ்டிப் பிரணவத்தைப் பார்த்தபோது அதில் அகரம் களிறாக, உகரம் பிடியானதாம். அவை கூடிய போது விநாயகர் தோன்றினார்.
இதைத் திருஞானசம்பந்தர்
பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடி கணபதி வர அருளினன் மிகுகொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே
என்று பாடுகிறார். இக்கதையே காஞ்சிப்புராணம் கந்தபுராணம் ஆகியவற்றிலும் காணலாம். இச்செய்தி அற்புதமான தத்துவச் செறிவுடையதாக விளங்குகிறது. விநாயகரின் உருவமே ஓங்காரவடிவம். எனது சிறுவயதில் ஓ என்ற எழுத்தை எழுதி அதனை பின் பிள்ளையாராக வரைந்து பார்க்கிற வழக்கம் இருந்தது ஞாபகம் வருகிறது.
220 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த திருவாவடுதுறையாதீனத்தைச் சார்ந்தவரான கச்சியப்ப முனிவரர் என்கிற பெரியவர் விநாயகபுராணத்தைத் தமிழில் பாடியிருக்கிறார். ஏறத்தாழ ஆறாயிரம் பாடல்கள் கொண்ட இப்புராணம் லீலா காண்டம், உபாசனா காண்டம் என்ற இருபிரிவுகள் கொண்டதாயிருக்கிறது. இப்புராணத்தில் இருந்து தான் காரியசித்தி மாலை என்ற எட்டுப்பாடல்கள் தொகுக்கப்பட்டு பலராலும் ஓதப்பட்டு வருகின்றன.
அகரம் என அறிவாகி உலகம் எங்கும்
அமர்ந்தக உகரங்கள் தம்மால்
பகரும் ஒரு முதலாகி வேறுமாகிப்
பலவேறு திருமேனி தரித்துக் கொண்டு
புகரில் பொருள் நான்கனையும் இடர்தீர்த்தெய்தப்
போற்றுநருக்கு அறக்கருணை புரிந்தல்லார்க்கு
நிகரில் மறக்கருணை புரிந்தாண்டு கொள்ளும்
நிருமலனைக் கணபதியை நினைந்து வாழ்வாம்
என்பது முதலாயிருக்கிய கச்சியப்ப முனிவரரரின் பாடல்கள் நனிச்சுவை நிறைந்தவையாயுள்ளன. எனினும் இப்புராணமும் மக்கள் மத்தியில் பெருவழக்கு உடையதாயில்லை என்பதும் குறிப்பிட வேண்டியுள்ளது.
இலங்கையில் இன்றும் கந்தபுராணம், பெரியபுராணம், திருவிளையாடற்புராணம், ஏகாதசிப்புராணம், திருவாதவூரடிகள் புராணம், சிவராத்திரிப்புராணம், திருச்செந்தூர்ப்புராணம், மயூரகிரிப்புராணம், திருத்தணிகைப்புராணம் என்று பல்வேறு புராணங்களும் ஆலயங்களில் முறைப்படி புராண படனம் செய்யப்படுகிறது. எனினும் விநாயகபுராணத்தைப் படனம் செய்வதாக அறியமுடியவில்லை. எனினும் கச்சியப்ப முனிவராரின் தனிச்செய்யுட்கள் தனிச்சிறப்புடன் ஓதப்பட்டு வருவதைக் காணக்கிடைக்கிறது.
இது இவ்வாறிருக்க, யாழ்ப்பாணத்து சுன்னாகத்தில் வாழ்ந்த வரதராஜபண்டிதர் என்னும் வரதபண்டிதர் அவர்கள் பிள்ளையார் கதை என்று ஒரு நூல் ஆக்கியிருக்கிறார்கள். இது பிள்ளையார் வைபவத்தைச் சுருக்கமாகச் சொல்கிறது.
இருநூறு ஆண்டுகளுக்கு முன் ஆக்கப்பட்ட இப் பிள்ளையார் கதை செய்யுள் நடையில் உள்ளது. கவித்துவம் நிறைந்தது. இது இலங்கையில் மிகப்பிரபலமாயுள்ளது.
‘மந்தரகிரியில் வடபால் ஆங்கோர் இந்துதவழ் சோலை இராசமாநகரில் அந்தணன் ஒருவனும் ஆயிழை ஒருத்தியும் சுந்தரப் புதல்வரைப் பெறுதல் வேண்டி..’ இப்படி இக்கதை நீண்டு செல்கிறது. ஆனால் இக்கதையூடே விநாயகர் வரலாற்று முறைமை முழுமை பெற்றதாகச் சொல்ல இயலாதிருக்கிறது.
lords-vinayaka-shankara-parvati
எழிலார் விநாயகர் வடிவம்
சிவபெருமானின் இரு புதல்வர்களாகச் சிறப்பிக்கப்படுபவர்கள் விநாயகரும் முருகனும், இதில் முருகன் விஷ்ணு வடிவினராகக் கொண்டால், விநாயகர் பிரம்மாவின் வடிவம். விநாயகப்பெருமான் நரசிம்மப்பெருமானைப் போல, தேவ மனித பூத மிருக சகல ஜீவ இணைப்பை தனது திருவுடலில் காண்பிக்கும் அழகுடையவர். அவரது திருமுகம் யானை வடிவம். அவரது திருக்கரங்கள் தேவவடிவம். ஆவரின் மேனி மனித வடிவம். அவரது திருவடிகள் பூதவடிவம் என்பர். அவர் மயூரேசராக மயிலேறி வலம் வரும் போது பறவையினத்தையும் அவர் இணைத்துக் கொள்கிறார். ஆக, சகல உயிர்களின் இணைப்பை சித்தரிப்பது போல பிள்ளையாரின் வடிவம் அமைகிறது.
பிள்ளையார் நிறைய உணவு உண்ணும் சாமி என்பது பலரின் தவறான எண்ணம். ஆதனால் தான் அவர் பெரிய வயிறோடு இருக்கிறாராம்.  உண்மை என்ன எனில், இதுவும் பிற்காலத்தைய தவறான அபிப்ராயங்களின் விளைவே என நம்பலாம். அண்டப்பிரம்மாண்டமே தன் வயிற்றில் கொண்டதால் தான் பிள்ளையாருக்கு பருத்த வயிறு அமைந்தது என்பதும் சில தத்துவ அறிஞர்களின் கூற்று. இதுவும் சிந்தனைக்குரியதே.
பிள்ளையார் குழந்தை உருவினராகவே பழைய இலக்கியங்களில்.. மந்திரங்களில், தோத்திரங்களில் சித்தரிக்கப்படுகிறார்.
ஆதிசங்கரர் சுப்பிரம்மண்யபுஜங்கத்தில் ஸதாபாலரூபர் என்று விநாயகரைப் போற்றுவார். விநாயகர் குழந்தை உருவினர் என்பதாலேயே நம் தமிழர்கள் பிள்ளை-யார் என்றே அழைக்கிறார்கள். குழந்தைப் பிள்ளை மெல்லிதாக இருப்பதைக் காட்டிலும் சிறிது பருமனாக.. இருப்பதையே விரும்புவர். குழந்தைக் கடவுளான பிள்ளையாரும் அந்தளவில் தான் பருத்த வயிற்றராயிருக்கிறார். ஆனாலும் அவர் என்றும் சுறுசுறுப்பானவர். எப்போதும் தீமைக்கு எதிராகப் போராடுகிற கடவுள். நடனம் கூட ஆடவல்லவர். இந்தக் கடவுளை பெருந்தீனி உண்பவர் என்றும் சோம்பலானவர் என்றும் நினைப்பதே பெரிய தவறு..
விநாயகர் கஜமுகன், உதத்தன், துந்தரன், நக்கிரன், கிருத்திராசூரன், சேமன், குசேலன், குரூராசூரன், பாலாசூரன், வியோமாசூரன், துந்துபி, தர்பாசூரன், சிந்தூரன் இப்படி எராளமான அசுரர்களை அழித்ததாக விநாயக புராணமே சொல்கிறது. இவ்வாறாகில் எவ்வளவு வீரதீரக்கடவுளாக விநாயகர் அமைதல் வேண்டும். இதை விட கணேசக்கடவுள் தன் கரங்களில் அங்குசம், பாசம் முதலிய ஆயுதங்களை வைத்திருப்பதால் அவரது எழுச்சியம்.. அவர் எப்போதும் தன்னடியார்களைக் காத்தருளும் திறனும் வெளிப்படுகிறது.
விநாயகரின் கையில் பூரணத்தின் வடிவமான மோதகத்தைக் காணலாம். அவர் கையிலிருக்கும் மோதக இனிப்பின் ஊடாக பிள்ளையார் தன் அடியவர்களிற்கு இனியன தருவார் என நம்புகிறார். குணநிதியான கணபதியின் வலது திருக்கரத்தில் தந்தம் இருக்கிறது. தனது தனித்துவமான உறுப்பாகிய தந்தத்தை பிள்ளையாரே ஒடித்து தனது கரத்தில் வைத்திருக்கிறார். அது எப்படி?
ganapati_2
வியாசர் மகாபாரதம் எழுத முற்படுகையில் அதனை எழுதி அருள வேண்டும் என்று விநாயகரைப் பிரார்த்தித்தார். பெருமானும் தனது தந்தத்தையே முறித்து அதனை எழுத்தாணியாகக் கொண்டு மாபாரதம் வரைந்தார். முறித்த தந்தம் பசு ஞானத்தையும் முறிக்கப்படாத பூரணத்துவம் கொண்ட தந்தது பதிஞானத்தையும் காட்டும் என்பது சைவசித்தாந்தக் கருத்து. அந்தத் தந்தம் அவரது கரங்களில் காட்சி தருகிறது. எழுத்தின் பொருட்டு முறிக்கப்பட்ட கொம்பும்.. அக்கொம்பு
கையில் இருக்கும் காட்சியும் காண்பவர்களுக்கு கல்வி தானே வளரும் என்பது திண்ணம். இதனையை
நற்குஞ்சரக் கன்று நண்ணிற் கலைஞானம்
கற்குஞ் சரக்கன்று காண்
என்கிறது திருவருட்பயன்.
‘ஐந்து கரத்தன்’ என்று பிள்ளையாரைப் போற்றுவார்கள். அதில் ஒரு கரம் பாசம் ஏந்துகிறது. பாசக் கயிறு பிணைப்பதற்கு உதவும். அந்தப் பிணிப்பு பிறப்பை உண்டாக்கும். ஆக, அதன் ஊடாக படைத்தல் தொழில் காண்பிக்கப்படுகிறது. இன்னொரு கரம் அங்குசம் ஏந்துகிறது. அது தீமைகளை அழிக்கும். எனவே அது அழித்தல் தொழிலின் அடையாளம். மோதகம் ஏந்திய கரம் அருளலைக் குறிக்கும். அபயகரம் மறைத்தலையும் துதிக்கை காத்தலையும் குறிக்கும் என்றும் விளக்குவர்.
பிள்ளையாரை பல வடிவங்களில் உருவாக்கி வழிபடுவர். பாரம்பரியமாக 32 கணபதி உருவங்கள் சொல்லவார்கள். அவை; பாலகணபதி, தருணகணபதி, பக்திகணபதி, வீரகணபதி, சக்திகணபதி, துவிஜகணபதி, சித்திகணபதி, உச்சிஷ்டகணபதி, விக்னகணபதி, க்ஷிப்ரகணபதி, ஹேரம்பகணபதி, லக்ஷ்மிகணபதி, மஹாகணபதி, விஜயகணபதி, நிருத்தகணபதி ,ஊர்த்துவகணபதி, ஏகாக்ஷ்ரகணபதி, வரகணபதி, திரயாக்ஷ்ரகணபதி, க்ஷிப்ரப்ரசாதகணபதி, ஹரித்திராகணபதி, ஏகதந்தகணபதி, ஸ்ருஷ்டிகணபதி, உத்தண்டகணபதி, ரணமோசனகணபதி, துண்டிகணபதி, துவிமுக கணபதி,த்ரிமுககணபதி, சிங்ககணபதி, யோககணபதி, துர்க்காகணபதி, சங்கடஹரகணபதி என்பன.
ஆனால், தற்போது விநாயக சதுர்த்தி நாட்களில் விதம் விதமாக எல்லாம் பிள்ளையாரைப் பார்க்கிறோம். ஆனால், அவ்வாறெல்லாம் வளைந்து கொடுத்து காட்சி தரவல்ல கடவுள் விநாயகர் தானே? ஆனாலும் அதற்காக கடவுளுக்கே உரிய அழகை அழியாத நிலையில் வடிவங்களை உருவாக்குவது மிகத் தவறானது. அவை கண்டிக்கப்படவேண்டியனவுமாகும். பஞ்சரத்னங்கள் பல உண்டு. அவற்றில் ஆதிசங்கர பகவத் பாதர் அருளிய கணேச பஞ்சரத்னம் என்கிற ‘முதாகரார்த்த மோதகம் ஸதா விமுக்தி சாதகம்’ என்கிற ஐந்தும் இசை கூடுகிற போது அமைகிற அழகிருக்கிறதே.. இது பஞ்சரத்ன நாயகம் என்கிற பெருமை பெற்று விடுகிறது.
வேதத்தை ஏற்றுக் கொண்டவர்களான வைதீக இந்துக்கள் மட்டுமன்றி ஜைனர்களும் பௌத்தர்களும் கூட விநாயகரை வணங்கி வருகிறார்கள். விநாயகரும் எந்தப் பேதமுமில்லாமல் எல்லொருக்கும் அருள் செய்கிறார். இவர் விண்வெளிப்பயணம் செய்தவரல்லவா?
தன்னை நினையத் தருகின்றான்
சைவத்திருமுறைகள் கண்டெடுக்கப்படுவதற்கு விநாயகப்பெருமான் காரணராக விளங்கினார் என்பது ஐதீகம். திருநாரையூரில் பொல்லாப்பிள்ளையாருக்கு பூஜை செய்து அதன் மூலமே கல்வி, கலை யாவும் அப்பிள்ளையாரிடமே கற்றவர் நம்பியாண்டார் நம்பிகள்.
அந்த நம்பியடிகளும் இராஜராஜனும் இணைந்து செய்த ஒப்புயர்வற்ற திருப்பணி தான் திருமுறைகள் கண்டெடுத்தமையும் அவற்றை முறைப்படுத்தியமையுமாகும். இதற்கெல்லாம் நம்பிகளின் உள் நின்று வழிகாட்டியவர் மூத்த பிள்ளையாகிய விநாயகர். இவ்வாறெல்லாம் தனக்கு அளப்பெருங்கருணை புரிந்த விநாயகர் மீது நம்பியாண்டார் நம்பிகள் திருநாரையூர் விநாயகர் இரட்டை மணிமாலை பாடியிருக்கிறார்.
என்னை நினைந்து அடிமை கொண்டு என் இடர் கெடுத்துத்
தன்னை நினையத் தருகின்றான் -புன்னை
விரசு மகிழ் சோலை வியன் நாரையூர் முக்கண்
அரசு மகிழ் அத்தி முகத்தான்
என்பது முதலாயுள்ள இப்பாடல்கள் தமிழ்ச்சுவை மிக்கன. இங்கே இப்பாடலில் ‘தன்னை நினையத் தருகின்றான்’ என்ற வரிகள் இன்பம் பயக்க வல்லன. ‘அவன் அருளாலே அவன் தாள் வணங்கி’ என்ற மாணிக்கவாசகரின் வாக்கு இத்துடன் இணைத்துச் சிந்திக்கத்தக்கது.
திருஞானசம்பந்தர் தேரழுந்தூர் வந்த போது சிவன் கோயிலைக் காட்டியவர் பிள்ளையார் தானாம். அது போல, திருவீழிமிழலையில் திருநாவுக்கரசருக்கும் திருஞானசம்பந்தருக்கும் சிவபெருமான் படிக்காசு அளித்த போது அதனை ஒழுங்காக வழங்கியவர் பிள்ளையார் தானாம். திருமுருகன் பூண்டியில் சுந்தரமூர்த்தி சுவாமிகளை கூப்பிட்ட கூப்பிட்ட பிள்ளையாரையும், திருவாரூரில் அவருக்காக மாற்றுரைத்த கணபதியையும் பார்க்கலாம்.
பெரியபுராணம் பாடிய சேக்கிழார் பெருமான்
எடுக்கும் மாக்கதை இன்தமிழ்ச் செய்யுளாய்
நடக்கும் மேன்மை நமக்கருள் செய்திடத்
தடக்கை ஐந்துடைத் தாழ்செவி நிள்முடிக்
கடக்களிற்றினைக் கருத்துள் இருத்துவாம்
என்று விநாயகர் வணக்கம் செய்கிறார். அருணகிரியாரின் திருப்புகழில் ஐந்து பாடல்கள் பிள்ளையாருக்குரியன.
muruga-valli-pillaiyarதமிழ்க்கடவுளான முருகனின் அண்ணனாகிய பிள்ளையாரும் தமிழ்க்கடவுள் தான். ஆனால் சில மேற்றிசை அறிஞர்கள்(?) சில போலித்தனமான கருத்துக்களைப் பரப்பி வருகின்றனர். இதற்கு நம் நாட்டு அறிஞர்(?) சிலரும் ஒப்புதல் வாக்கு மூலம் கொடுக்கிறார்கள். பிள்ளையார் மராட்டியக்கடவுள் என்கிற வாதமும் இருக்கிறது. ஆனால் அவர் தமிழருக்குத் தான் அதிகம் சொந்தக்காரர். விநாயகர் ஓங்கார வடிவம் என்று சொல்கிறோம். ஓ என்ற தமிழ் எழுத்தின் வடிவமாகவே அவர் முகம் அமையக் காணலாம். இது வேற்று மொழிகளில் காண்பதரிது.
பிள்ளையாருக்குரிய  பிடித்த நெய்வேதனம் மோதகம். புழந்தமிழ் இலக்கியங்கள் இதனைக் ‘கவவு’ என்கின்றன. இம்மோதகம் செய்  முறை தமிழ்நாட்டின் சிறந்த சமையற் கலையின் வடிவமாகவே இன்று வரை துலங்குகிறது. இலங்கையில் மோதகம் இல்லாத விசேஷங்களை காண இயலாது. மோதகம் செய் முறைமையை நோக்கின் இது ஒரு சமையற் கலையின் உன்னதப்படைப்பு என்பதும் புலப்படும்.
யானையும் தமிழ்நாட்டின் சேரதேசத்தின் முதன்மை விலங்கு.. ஆக, பழந்தமிழரின் பெரும் செல்வம். நால் வகைப்படையில் கஜ,ரத,துரக,பதாதி என்கிற போது முன் நிற்பது கஜமே. ‘மலைநாடு வேழமுடைத்து’ என்பதும் தமிழ்நாட்டுச் சிறப்பல்லவா? ஆக, வேழமுகனுக்கும் தமிழ்நாடே உரித்து. வாதாபி காலத்தில் திருச்செங்கோட்டுப் பிள்ளையாரை வாதாபி கொண்டு வந்து பிரதிஷ்டை செய்திருக்கலாம்.
அனாலும் அதற்கு முன்னரே நிறைவான விநாயகர் வணக்கம் இருந்திருக்க வேண்டும். இது இப்படியிருக்க, சங்ககாலத்தில் பெருஞ்சதுக்கத்தான் பூதம் என்று ஒரு வழிபாடு நிகழ்ந்திருக்கிறது. சிலப்பதிகாரத்திலும் சேரநாட்டின் தலைநகர் வஞ்சியில் பெருஞ்சதுக்கத்தான் பூதம் இருந்ததாகவும் அது கையிற் பாசத்துடன் இருப்பதாயும், அதர்மத்தை அழித்து நன்மையை அது நிலைநாட்டுவதாயும் குறிப்புக்கள் உள. இவை விநாயகர் வழிபாட்டின் அடித்தளமாக இருக்கலாம். பிள்ளையாரையும் பூதநாதன், கணநாதன் என்று சுட்டுவது ஈண்டு சிந்திப்பதற்குரியது.
இலங்கையின் அனுராதபுரத்தில் கிறிஸ்து பிறக்க முன் 2ம் நூற்றாண்டுக்குரியதாக கருதப்படும் இருகரங்களும் யானை முகமும் கொண்ட உருவம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை எல்லாவல என்கிற ஆய்வாளர் ஆய்வு செய்து கணநாதன் வடிவம் என்றே குறிப்பிட்டிருக்கிறார்.
எளிமையின் தெய்வம்
vinayaka-t
அறுகும் எருக்கும் பிள்ளையாருக்குரியன. வயல் வெளிகளில் தேடுவாரற்று கிடக்கிற மருத்துவப் பொருளான அறுகை பிள்ளையார் தன் தலையில் சாற்றிக் கொள்வதை விரும்புகிறார். அது போல, எருக்கமிலையை எவருமே நாடுவதே இல்லை.. வெள்ளெருக்கம் வேரில் கூட பிள்ளையார் உறைகிறார் என்று வழிபடுவர். எவரும் விரும்பாத அதனை தன் மிக உவப்பான வில்வமாகக் கொண்டு பிள்ளையார் மட்டும் கருணை செய்கிறார்.
தோர்பி கர்ணம் தான் வேழமுகப்பெருமானுக்கு மிக உயர்ந்த வழிபாடு. தோர்பி என்றால் கைகளினால் என்றும் கர்ணம் என்றால் காது என்றும் பொருள் கொண்டு கைகளால் காதைப்பிடித்துக் கொள்வதை இது குறிக்கும் என்பர். இப்படியே மும்முறை முழந்தாளழவு இருந்து எழுந்து இவ்வழிபாடடைச் செய்வர். இலவச உடற்பயிற்சியாக அமையும் இப்பயிற்சியால் மனமும் உடலும் புத்துணர்ச்சி பெறும். இதன் மூலம் குண்டலினி சக்தியிலும் எழுச்சி உண்டாகும் என்றும் கூறுகிறார்கள்.
ஆற்றங்கரைகளில், அரசமரத்தடிகளில் பிள்ளையாரை வைத்து வழிபாடாற்றுவது தமிழர் மரபு. சிதறு தேங்காய் உடைத்து பிள்ளையாரை மகிழ்வித்து வழிபடுவதும் இங்கு முக்கியமானது. வயலில் உழுதுண்டு வாழும் விவசாயப் பெருங்குடியினர் தமது பயிர்களுக்குப் பாதுகாப்பாக நம்பிக்கைப் பிள்ளையாரை வேண்டிக் கொள்வர். பின் அறுவடை நிறைவு பெற்றதும் பிள்ளையாருக்குப் பூஜை செய்வர்.
ஏற்றப்பாடல் ஒன்று
பிள்ளையாரே வாரும் பிழை வராமல் காரும்
மழை வரக்கண் பாரும் மாதேவனே எமைப் பாரும்
இப்படிச் செல்கிறது. இவை எவ்வளவு தூரம் நம் சமூகத்தில் பிள்ளையார் வணக்கம் பரவியிருக்கிறது என்பதற்கு ஆதாரங்களாயுள்ளன. அவர் கரத்தில் நெற்கதிர்களைக் கொடத்து வழிபடும் வழக்கமும் உண்டு. எனவே, அவர் காக்கும் தெய்வமாயும் விவசாயிகளின் தெய்வமாகவும் இருக்கிறார். எனவே, அப்பெருமானை பெருவயிறராகக் காண்பது இவ்விடத்தும் சரியாகத் தெரியவில்லை.
பிள்ளையாரும் நகைச்சுவையும்
விநாயகர் தன் ஆடலைக் கண்டு நகைத்த சந்திரனைக் கோபித்து சாபம் கொடுத்து பின் அதே சந்திரனைத் தன் முடியில் சூடிக் கொண்டு பெருமை தந்தவர் என்பது புராணச் செய்தி. ஆக, நகைச் சுவையை என்றைக்கும் பிள்ளையார் விரும்பினார்.
இன்றைக்கு விநாயக சதுர்த்தி நாட்களில் சந்திரனுக்கும் பூஜை செய்கிற வழக்கம் உண்டு. இது விநாயகரின் அதிசய கருணையைக் காட்டும். சங்கடஹர சதுர்த்தி (தேய்பிறைச் சதுர்த்தி) களில் சந்திர தரிசனம் சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
காஞ்சியில் விகடசக்கர கணபதியாகப் பிள்ளையார் இருக்கிறார். இக்கடவுளைப் போற்றியே கந்தபுராணக் காப்புச் செய்யுள் அமைந்திருக்கிறது. இவை காரணமாக பிள்ளையாருக்கு விகடராஜர் என்றும் பெயர் உள்ளது.
பிள்ளையார் மூஷிக வானராக விளங்குவதும் அவரது எளிமையை, எல்லாருக்கும் இரங்கும் பேருண்மையைக் காட்டுகிறது. இதை காளமேகப் புலர் காஞ்சியில் கண்டார். அவர் கடவுளர்களை நிந்தாஸ்துதி பாடுவதில் வல்லவர். அதாவது மேலோட்டமாகப் பார்க்கும் போது நிந்தனை போல இருக்கும் அக்கவிகளில் உள்ளார்த்தம் போற்றுதலாயமையும். அவர் பாடுகிறார்.
மூப்பான் மழுவும் முராரி திருச்சக்கரமும்
பார்ப்பான் கதையும் பறி போச்சோ –மாப்பார்
வலி மிகுத்த மும்மதத்து வாரணத்தை ஐயோ
எலி இழுத்துப் போகிறதே பார்
இவ்வாறான சம்பவங்களுக்கும் இடங்கொடுத்துக் காக்கிற கணபதி நம் பிள்ளையார் தானே? திருவிளையாடற் புராணம் பாடிய பரஞ்சோதி முனிவர் விநாயகர் வாழ்த்தாக அமைத்திருக்கிற பாடல் அழகானது.
உள்ளமெனும் கூடத்தில் ஊக்கமெனுந் தறிநிறுவி உறுதியாகத்
தள்ளரிய அன்பெனும் தொடர்பூட்டி இடைப்படுத்தித் தறுகட் பாசக்
கள்ளவினைப் பசுபோதக் கவளமிடக் களித்துண்டு கருணை என்னும்
வெள்ளமதம் பொழி சித்தி வேழத்தை நினைந்து வல்வினைகள் தீர்ப்பாம்
நாமும் அந்தக் கணநாதன்.. விக்னேஸ்வரனைப் போற்றினால் விநாயகனின் பேரருள் கிடைக்கும் என்பது பேருண்மையாகும். 

தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்
நன்றி ; tamilhindu.com  தி.மயூரகிரி சர்மா

புதன், 27 ஏப்ரல், 2016

படித்ததில் பிடித்தது – கள்ள நோட்டா ? நல்ல நோட்டா?


துணிக்கடையில் எனக்கு தேவையான துணிகளை வாங்கினேன். பில் 1700 ரூபாய். இரண்டு 1000 ரூபாய் நோட்டை கவுண்ட்டரில் உள்ளவரிடம் கொடுத்தேன். 

அவர் உடனே ஒரு மெஷினில் கள்ள நோட்டா? ஏன சோதித்த பின்னர் கல்லாவில் போட்டு விட்டு மீதம் 300 ரூபாயை கொடுத்தார். 

இதையும் அந்த மெஷினில் வைத்து செக் பண்ணி குடுன்னு கேட்டா என்னை முறைக்கிறான். 

ஏன்டா உங்களுக்கு வந்தா ரத்தம்.

எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

படித்ததில் பிடித்தது - இணையதள பயன்பாடு

எனது உறவினர் ஒருவருடன் வங்கியில் ஒரு மணி நேரம் இருக்க நேர்ந்தது. அவர் வேறொருவருக்கு பணம் அனுப்ப வந்திருந்தார். ஆர்வம் தாங்கமுடியாமல் அவரிடம் கேட்டேன்.

மாமா, நீங்கள் ஏன் இணையதள வங்கிச் சேவை மூலம் பணம் அனுப்பக் கூடாது? வங்கிக்கு வந்து வரிசையில் காத்திருக்கும் நேரத்தை தவிர்த்து வீட்டிலிருந்தே இணையத்தில் பணத்தை அனுப்பலாமே?

நீங்கள் உங்களுக்குத் தேவையான பொருட்களையும் இணையதளத்திலேயே வாங்கிக் கொள்ளலாமே.

அதற்கு அவர் “அவ்வாறு இணையத்திலேயே எல்லாவற்றையும் செய்து விட்டால் நான் வீட்டை விட்டு வெளியே வரத்தேவையில்லை” என்றார்.

அதற்கு நான். “ஆமாம் நீங்கள் தேiவில்லாமல் நேரில் சென்று காத்திருப்பதை விட வீட்டிலிருந்தே எல்லாவற்றையும் செய்யலாம். உங்கள் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்களைக் கூட இணையத்தில் அமேசான் மூலம் வாங்கலாம். வீட்டிற்கு வந்தே பொருட்களை கொடுத்து விடுவார்கள்” என்றேன்.

அவரது பதில் என்னை வாயடைக்கச் செய்தது.

உனக்கே தெரியும் நானும் என் மனைவியும் மட்டுமே வீட்டில் இருக்கிறோம். வுயதான காலத்தில் எங்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது. இவ்வாறு வெளியில் வருவதன் மூலமே நான் வெளியுலகத் தொடர்பில் இருக்கிறேன்.

இன்று நான் வங்கிக்குள் நுழைந்ததில் இருந்து இந்த ஒரு மணி நேரத்தில் என்னுடைய நான்கு நண்பர்களைச் சந்தித்து விட்டேன். அவர்களுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இங்கு பணிபுரியும் வங்கிப் பணியாளர்களுடன் வழக்கமாக நான் இங்கு வருவதால் எனக்கு நல்ல நட்பு ஏற்பட்டு விட்டது.

இரண்டு வருடங்கள் முன்பு நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலிருந்த போது, நான் வழக்கமாக பழங்கள் வாங்கும் கடைக்காரர் நான் கடைக்கு வராததன் காரணத்தை விசாரித்து என்னைத் தேடி வீட்டிற்கு வந்து என் உடல்நலத்தை விசாரித்து வருந்தினார்.

ஒரு வாரத்திற்கு முன் என் மனைவி காலை நடைப்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்து விட்டார். அதைக்கண்ட மளிகைக் கடைக்காரர் எனது மனைவியை மயக்கம் தெளிவித்து என் வீட்டிற்கு அழைத்து வந்தார். ஏனென்றால் நான் அவரிடம் வழக்கமாக மளிகை பொருட்கள் வாங்குவதால் அவருக்கு என் வீடு தெரியும்.
இதுபோன்ற மனிதாபிமானம் கொண்ட உதவிகள் நான் இணையத்தில் பொருட்கள் வாங்கினால் எனக்கு கிடைக்குமா?

நான் எனக்கு தேவையான பொருட்களை வாங்கும் கடைக்காரர்களை வெறும் வியாபாரிகளாக பார்க்காமல் நட்பு பாராட்டுவதால் எங்களுக்குள் நல்ல நட்புறவு ஏற்படுகிறது. 

இது அனைத்தையும் எனக்கு அமேஸான் அல்லது வேறு இணையதளம் தருமா?

தொழில்நுட்பம் நமக்கு தேவையான வசதிகளைத் தரும்.  ஆனால் நட்புகளையும், சொந்தங்களையும்  தொடர்ந்து தொடர்பில் வைக்திருப்பது மட்டுமே நமக்கு தேவையான போது அவர்களை எளிதில் அணுக முடியும்.  வீட்டிலேயே இருக்காமல் கொஞ்சம் வெளியில் வாருங்கள்.   

முடிந்தவரை உங்களது நட்புக்களுக்கும், சொந்தங்களுக்கும் உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். உங்களுக்கு தேவைப்படும்போது உங்களுக்கு தானாக உதவிகள் வந்து சேரும். 

உங்கள் வீடு மட்டுமே உங்கள் உலகமல்ல.  இந்த உலகமே உங்கள் வீடாக மாறட்டும்.  

திருவாசகத்தி்ல் மாணிக்கவாசகர் காட்டும் வரலாறுகள்



மாணிக்கவாசகர் தன் திருவாசகப்பாடல்களில் இறைவனை போற்றி அவன் வீரதீரச் செயல்களை தன் பதிகப்பாடல் வாயிலாக பாடி அவன் திருவிளையாடல்கள் மற்றும் தன் பக்தர்களுக்காக காட்சி தந்தது, அருள் வழங்கியது பற்றியும், இதன் மூலம் அவரை போற்றி நைந்து ஊருகி பாடிய பாடல்கள் வாயிலாக நாம் கண்ட வரலாறுகளை இங்கு காண்போம்.

1, கிராத வேடம்
 தவம் செய்து கொண்டிருந்த அரிச்சுணனின் தவத்தைக் கலைக்க பன்றி உருவுடன் வந்த மூகாசுரனைச் சிவபிரான் வேட்டுவ உருவுடன் வந்து அம்பு எய்திக் கொன்ற வரலாறு கிராத வேடம் எனப்படும். இதன் பொருட்டு விழித்த விஜயனும் தானும் அம்பு விட இருவரின் அம்பும் அசூரனான மூகாசுரன் ேமல் பட பன்றிக்காக இருவரும் சண்டையிட விஜயன் வில்லால் அடித்தது  இதுவே  " இறைவனை வில்லால் அடித்தான் விஜயன் " என்ற கூற்று  காணப்படுவதைக் காணலாம்.

2, மெர்கணி அருளிய மேனி

சிவதரிசனம் ெசய்த பின்னரே உண்ணும் நியமத்தை வைத்திருந்த செட்டியார் ஒருவர் வெளியூர் சென்ற போது சிவ பூசை செய்ய சிவலிங்கம் எங்கே தேடியும் இல்லாத போது  அவருடைய மைத்துனர் அவருக்கு தெரியாமல் குதிரைக்கு கொள் வைக்கும்  பையை ஓர் இடத்தில் வைத்து சிவலிங்கம் போல் காட்சி தரும்படி அமைத்து அந்த செட்டியாருக்கு இதோ சிவலிங்கம் என்று காட்டி, சிவ பூசை செய்ய செய்தனன். செட்டியார் பூசை முடித்து உணவு உண்ட பின், மைத்துனன் நகைத்து இது சிவலிங்கம் மன்று, குதிரை உணவு தின்னும் உணவு கொள்ளுப் பை  என்று கூறி நகைத்து கொள்ளுப்பையை எடுக்க  முயன்றான். ஆனால் அக்து அசையாமல் உண்மையான சிவலிங்கமாகவே காணப்பட்டது. மொக்கனி என்பது குதிரையின் கொள்ளுப்பை  எனவே மொக்கனி / சிவலிங்கமாக ஆன பின் மொக்கனிஈசனார் என்னும் பெயர் பெறறது. இதுவும் ஒரு மணிவாசகர் கூறும் மொக்கனிஈசர் வரலாறு.

3. ஐயாற தனிற் சைவனானது.
திருவையாற்றில் ஐயாறப்பருக்கு  பூசை செய்யும் ஆதி சைவர்  ஒருவர் தனியாக காசிக்கு சென்றார். திரும்பி வர நெடுநாள் ஆகியும், அவர் வராமையால் அவருக்கு  உரிய காணி ( நிலம்) முற்றும் தமக்கு உரிமை ஆகும் படி அவருடன் வசித்த மற்ற 28 ஆதி சைவர்களும் உரிமை யாக்கிக் கொண்டனர். காசிக்கு சென்ற ஆதி ைசவரின் மனைவியும் மைத்துனனும் மிக வருத்தத்துடன் ஐயாறப்பரிடம் வேண்டினார்.  பெருமான் காசிக்கு சென்ற ஆதி சைவராகவே  கங்கை நீருடன் காசியிலிருந்து வருவது போலவே நேரில் வந்து, சிவலிங்கத்திற்கு பூசை செய்தார். பின் சான்றோர்கள் முன்னிலையில் ஆதிசைவருக்கு நேர்ந்த துயர நிகழ்வு ஆன காணி நிலத்தை மற்ற ஆதி சைவர்களிடமிருந்து மீட்டிக் கொடுத்தார். இது கண்டு ஆதிசைவரின் மனைவியும் குடும்பத்தாரும் மகிழ்ச்சி அடைந்து போது, காசிக்கு சென்ற ஆதிசைவரே அவர்கள்  முன் வந்து சேர , அந்த அதிர்ச்சியில் மூழ்கியிருந்த அவர்தம் மனைவி மற்றும் ஏனையோர் தங்களுக்கு காணி நில்த்தைத மீட்டிக்கொடுத்தது, ஐயாறப்பர் என்பதை கண்டனா்.  அப்போது பெருமான் அடியார் குறை தீ்ர்க்கும் ஐயாறப்பர் என்ற வரலாறு காணும் படி மணிவாசகர் தம் திருவாசகத்தில் காட்டுகின்றாா்.

4. குற்றாலத்தில் குறியாய் இருத்தல்

முன் ஒருகால் திரு முற்றம் என்னும் பெயர் கொண்ட தலத்திற்கு அகத்திய முனிவர் சென்றார். அத்தலத்தில் திருமால் கோயில் கொண்டிரு்ந்தார்.  அகத்தியரை கண்ட திருமாலின் அடியார்கள் அவருடைய திருநீற்று பட்டையினையும் கண்டிகையையும் பார்த்து நீர் இத் தலத்தில் அணுகல் ஆகாது  நீர் ஒரு சைவர், எ்னறனர். நீர் இங்கிருந்து நீங்குக. என்று அவரை வெரட்டினா். வெரட்டப்பட்ட அகத்தியர், திருமாலின் அடியார் போல் வேடம் கொண்டு, அந்த தலத்திற்கு மறுபடியும்,வந்தார். யாம் அழகர் மலையிலிருந்து வருகிறோம். வைணவர்கள்  உடனே பூசைக்கு வேண்டிய பொருட்களை கொண்டு வந்தனா். பூசைக்கு அகத்தியரிடம் கொடுத்தனா். அப்போது அகத்தியர் அவர்களை பார்த்து, " யாம் செய்யப்போகும் பூசையைப் பாருங்கள்  " என்று சொல்ல சிவபொருமானை மனதில் கொண்டு, திருமாலின் திருமுடிமேல் தனது கையை வைத்து, " குறுகு, குறு " கென அழுத்தினார். உடனே திருமாலின் உருவம்,சிவலிங்கமாக   குறுகியது. இதைக் கண்ட வைணவர்கள், இவன் முன் வந்த அகத்திய முனிவனே என்று கண்டு கொண்டனா். அவரை வளைத்துக் கொண்டனா். அப்போது முனிவரின் வெகுளித்தீ அவர்களை சுட்டெரிக்க அவர்கள் ஒடி மறைந்தனர். என்பது வரலாறு. அத்தலம் தான் இப்போது குறுகு குறுகென ஆன குற்றாலம்  என வழங்கப்படுகிறது.
   இவ்வரலாற்றினை வரிவை கந்த பூராணம் 2/28 திருக்குற்றால படலத்தில் காணலாம்.

6, புலி முலை புல்வாய்க்கு அருளியது
  ஒரு காட்டில் ஒரு பெண்மான் தன் கன்றை ஒரு புதரில் மறைத்து வைத்துவிட்டு, நீர் பருகும் போது வேடன் ஒருவன் அம்பால் கொல்லப்பட்டு மாண்டது. தாயை இழந்த மான் கன்றை ஒரு பெண்புலி பால்கொடுத்து வளர்க்கும் படி சிவபிரான் அருளினார். இவ்வரலாறு திருவிளையாடல் புராணத்திலும் காணலாம்.

7. உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்
  இராவணன் மனைவி வண்டோதரி சிவபக்தி மிக்கவள். அவர் ஐந்தெழுத்து மந்திரம் ஓதுபவள். தான் விரும்பிய போதெல்லாம் சிவபிரான் தனக்கு காட்சி தந்தருள ேவண்டு மென வரம் பெற்றவள். ஒரு நாள் தனது பள்ளி யறையில் இருந்து கொண்டே சிவதரிசனம் காண விரும்பினாள். ெபருமானும் பள்ளிக் குப்பாயத்தினராய் காட்சி கொடுத்தார். வண்டோதரி ஆனந்த பரவசம் அடைந்தவளாய் உரத்த குரலில் தோத்திரம் செய்தனள். இந்த ஆரவாரத்தை அடுத்த அறையில் இருந்த இராவணன் கேட்டு என்ன ஆரவாரம் என வினவிக் கொண்டே அங்கு வர இறைவர் குப்பாய ஆடவன் உருவை நீக்கி குழந்தை உருவெடுத்தனர்.
 அங்கு வந்த ராவணன் " இக் குழந்தையின் ஆரவாரம் தானா? என்று வினவினான். வண்டோதரி தனது சேடி ஒருத்தி மறு நாட்காலையில் வருவதாகச் சொல்லி அக் குழந்தையை தன்னிடம் அடைக்கலமாக கொடுத்துச் ெசன்றனள் எனக் கூற  இலங்ேகசன் தன் பள்ளி அறைக்கு மீண்டனன். உடனே குழந்தையும் மாயமாகி மறைந்தது.
    இதன் குறிப்பு "எவ்வுருவும் தன்னுருவாய்  இலங்ைக அழகமா வண்டோதரிக்கு பேரருள் இன்ப மளித்த பிரானை "
என குயில் பத்து பதிகத்திலும், பள்ளிக்கு பாயத்தர்  என அன்னை பத்து பதிகத்திலும் உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம் என திருவெம்பாவையிலும் பித்த வடிவு கொண்டு இவ்வுலசிற் பிள்ளையுமாய்  உத்திரகோசமங்கை வள்ளல் புத்தி புகுந்த வா  என்று திருப்பூ வல்லியிலும் காணக் கிடைக்கின்றன.

8. தாயான தத்துவன்  வரலாறு
 சுவாமி இடத்தில் அன்பு மிக்க ஒரு மாது பிரசவ காலத்தில் தன் தாய் வந்து உதவப் பெறாமல் சங்கடப்படும் ேபாது, சுவாமியே அவள் தாய் போல் வந்து மருத்துவம் பார்த்து ஆதரித்து பிரசவம் பார்த்தார். என்பது வரலாறு  அந் நிகழ்வு நடந்த இடம் திருச்சிராப்பள்ளி, இதனால் சுவாமிக்கு தாயுமானவன் எனப் பெயர் வந்தது. இதுவே தாயான தத்துவன் வரலாறு.

9. இந்திரனை தோள் நெரித்தது
  முன்பு ஒரு காலத்தில் இந்திரன் சிவபிரானை மதியாமல் திருமாலை வைத்துக் கொண்டு யாகம் ெசய்ய ஆரம்பித்தான். இதனால் சிவபிரான் கோபம் முற்று இந்திரனை மமதையை அடக்க அவனது தோளை நெெரித்தார்.  இதன் வரலாறு திருவுந்தியார்  பாடலில் காணலாம்..

10. அத்தி உரித்தது.
  பிரேதவரிடம் வரம் பெற்ற கயாசுரன் என்பவன் ேதவர்களை அழிக்க தொடங்கினான். பெருமான் யானை உருவம் கொண்ட அவனை கிழித்து யானையின் தோலை போர்வையாக ேபார்த்தி கொண்டார்.

11. பாலகனார்க்கு பாற்கடல் ஈந்தது
  உபமன்யு முனிவர் குழந்தை பருவத்தில் பால் வேண்டி அழுத போது, சிவபெருமான் திருப்பாற்கடலையே அவர் பருக  வரவழைத்து தந்தனர்.
  " பாலுக்கு பாலகன் வே்ண்டி அழுதிட  பாற்கடற் ஈந்த பிரான் "  என்ற பாடல் வாயிலாக அறியலாம்

12. பிரமன் தலை அறுபட்டது
  பிரமனுடைய தான் தான உயர்ந்தவன் என்ற அகந்தயை அடக்க பிரான் பிரமனுடைய உச்சித்தலையில் உள்ள வாய் சிவபிரானை இகழ்ந்து பேச பெருமான் வைரவர் கடவுளை ஏவி அவர் உச்சி தலையை நகத்தால் களைந்தனா்.

13.  வெள்ளம் தரும் ........  வளளல்
  சிவபுரம் என்னும் ஊருக்கு  திருப்பெருந்துறை என்ற  பெயரும் உ்ண்டு. சிவபுரத்து அந்தணர்களுக்கு பாண்டிய மன்னன் அளித்த நிலங்களை சில ஆண்டுகளுக்கு பின் அவ் வூர் அதிபன் என்ற " லுண்டாக்கன் " என்பவன் ைகப்பற்றிக் ெகாண்டான். அந்தனர்கள இந்த அநீதியை அப்போதுள்ள பாண்டிய மன்னனிடம் முறையிட்டனா். இந்த விசாரனையில்  அந்த நிலங்கள் அனைத்தும் தனக்கு உரியது என்றும், இதற்கு உறுதி சான்றாக இந் நிலங்களில் எங்கு , எவ்வளவு ஆழத்தில் வெட்டினாலும், நீர் வராது என்று வாதித்தான். அப்போது அந்தணர் பிள்ளைகளுக்கு வேத பாடம் சொல்லிக் கொடுத்த வாத்தியார் சாட்சியாக வந்து, இந்த  நிலங்களில் எங்கு வெட்டினாலும், ஒரு முழ ஆழத்திற்குள் தண்ணீர் வந்து விடும் என்று கூற, அதன்படி ஒேர  வெட்டில் நீர் பொங்கி கிளம்பி  எங்கும் வெள்ளமாய்
பரவியிற்று இதைக்கண்ட  லுண்டாக்கன் அச்சம் உற்றான். இவ்வேளையில்  சாட்சி சொன்ன வாத்தியார் யாரும் காணா வண்ணம் மறைந்தார்.. அந்த வாத்தியார் சிவபிரானே என தெளிந்த பாண்டியனும் அந்தணரும் வியப்புற்றனர். எங்கும் வெள்ளமாய் பரவிய  காரணத்தால் சிவபுரம் ெபருந்துறை ஆயிற்று. இதுவே தற்போது திருப்பெருந்துறை என வரக் காரணமாய்  ஆயிற்று.

திருச்சிற்றம்பலம்
ஒம் நமசிவய ஓம்
நன்றி.  திருவாசக ஒளி நெறிக்கட்டுரை
ேமலும் பல ஆன்மிகத்தகவலுக்கு