Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதன், 13 டிசம்பர், 2017

லோன் வேண்டுமா..? உங்கள் கடன் தகுதியை உயர்த்தும் கிரெடிட் ஸ்கோர்!

vikatan.com

வீட்டுக் கடன், தங்க நகைக் கடன், கார் வாங்கக் கடன், பர்சனல் லோன்... இப்படி ஏதாவது ஒரு கடனை வாங்க நம்மில் பலர் திட்டமிட்டு வருகிறோம். ‘கடன் வேண்டும்’ என்று கேட்டுப் போனால், ‘வாங்க, வாங்க’ என்று அழைத்து, கேட்ட அளவு கடனைத் தந்தது அந்தக் காலம். வங்கிகளின் வாராக் கடன் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து, எவ்வளவு குறைவாகக் கடன் கேட்டாலும், கிடையாது என்று சொல்லப்படுவது இந்தக் காலம். கடன் பெறும் தகுதி அதாவது, ‘கிரெடிட் ஸ்கோர்’ ஒருவருக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே வங்கிகள் இப்போது கடன் தரத் தயாராகின்றன. அது என்ன ‘கிரெடிட் ஸ்கோர்’, யார் இதை உருவாக்குகிறார்கள், கிரெடிட் ஸ்கோர் தொடர்பாக நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கான கேள்விகளும், பதில்களும் இதோ...    
1. கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? 

உங்கள் கிரெடிட் ஸ்கோர் என்பது, நீங்கள் எந்த அளவுக்குக் கடன் பெறும் தகுதியைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கண்டறிவதற்கான ஒரு மதிப்பீடு ஆகும். இது பொதுவாக 300 மற்றும் 900-க்கு இடையிலான எண்ணாக மதிப்பிடப்படும். கடன் அட்டைகள் மூலம் வாங்கிய கடன்கள் மற்றும் இதற்கு முன்பு வாங்கிய கடன்களை எப்படித் திரும்பக் கட்டினீர்கள்  அல்லது திரும்பக் கட்டி  வருகிறீர்கள் என்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் நான்கு முக்கியக் கடன் தகவல் நிறுவனங்கள் உள்ளன.அவை சிபில், எக்ஸ்பீரியன், ஈக்விக்ஸ் மற்றும் ஹைமார்க் (CIBIL, Experian, Equifax and Highmark). இந்த நிறுவனங்களே இந்த ஸ்கோரை உருவாக்கித் தருகின்றன.

2. எனது கடன் ஸ்கோர் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? 

ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர், குறைந்த வட்டி விகிதத்தில் ஒரு கடன் பெறுவதற்குக் காரணமாக இருக்கிறது. மோசமான கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடனைப் பெற முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடன் அட்டைப் பயன்பாடு மற்றும் வேறு  கடன்களுக்கான இ.எம்.ஐ செலுத்துதல் எல்லாம் அவர்கள் கடன் பெற்ற நிறுவனத்தின் வழியாக மேலே குறிப்பிட்ட கடன் தகவல் நிறுவனங்களுக்கு  அனுப்பப்படுகிறது. உங்கள் கிரெடிட் கார்டு தவணை அல்லது மாதாந்திரத் தவணையைச் செலுத்துவதில் நீங்கள் அலட்சியம் காட்டியிருந்தால், அது உங்கள் வங்கிச் சேவை பரிவர்த்தனையில் பதிவாகும். அது உங்கள் கடன் வரலாறு அறிக்கையாகப் பதிவு செய்யப்படும். 

கடன் தருவதற்கு மட்டுமல்ல,   இ-காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நிறுவனங்கள் கூட இப்போது ஒருவரின் நிதி நிலை உள்ளிட்டவற்றைக் கண்டறிய கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு என்று பார்க்கின்றன. எனவே, இந்த விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.  

3. எனக்குக் கடன் தேவை. நான் என்ன செய்ய வேண்டும்?  

உங்கள் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் உங்கள்  கடனுக்கான வட்டி விகிதத்தை  நிர்ணயிக்கும் சந்தைக் களமாக நம் நாடு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருந்தால், உங்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். குறிப்பாக, கடன் பெற்று, அதைக் காலதாமதமில்லாமல் சரியாகத் திரும்பிச் செலுத்தும் வரலாற்றைக் கொண்டவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்புண்டு. அதுவே, ‘கிரெடிட் ஸ்கோர்’ மிகக் குறைவாக உள்ளவர் கடன் பெற வேண்டும் என்றால், அவர்கள் அதிக வட்டியைத்தான் செலுத்தியாக வேண்டும். 

4. நான் என் ‘கிரெடிட் ஸ்கோரை’ பெற முடியுமா? 

கடன்  வாங்குவதற்கு முன்பாகவோ, கிரெடிட் கார்டு பெற நீங்கள்  விண்ணப்பம் செய்வதற்கு முன்பாகவோ, நீங்களாக உங்கள் ‘கிரெடிட் ஸ்கோரை’ பார்க்க வேண்டிய தேவையில்லை. 2016-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்துக் கடன் தகவல் நிறுவனங்களும் தனிநபர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாகவே கிரெடிட் ரிப்போர்ட்டை அளிக்க வேண்டும். கடன் வழங்கும் நிறுவனங்கள் (வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனங்கள், கிரெடிட் கார்டு  வழங்கும் நிறுவனங்கள்) விண்ணப்பிக்கும்போது எப்படிப்பட்ட அறிக்கையை  கடன் தகவல் அறிக்கை நிறுவனங்கள் அளிக்கிறதோ, அதேபோன்ற விரிவான ரிப்போர்ட்டையே தனிநபர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 

5. எனது கிரெடிட் ஸ்கோரை எங்கு பெறுவது?  

உங்கள் இலவச அல்லது கட்டண அறிக்கையைப் பெற கடன் தகவல் நிறுவனங்களின் வலைதளங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த அறிக்கைகள் ஆன்லைனில் உடனடியாக, உங்களுக்கு எந்தச் செலவுமின்றிக் கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, BankBazaar.com வலைதளத்தில் மூன்று நிமிடங்களில் இலவச எக்ஸ்பிரியன் கிரெடிட் அறிக்கை உங்களுக்கு அளிக்கப்படுகிறது. அதிக கடன் கேள்விகள் இல்லாமல் இந்த ரிப்போர்ட் அளிக்கப்படுகிறது.   

6. யாருக்கு ‘கிரெடிட் ஸ்கோர்’ இருக்கும்? 

கிரெடிட் கார்டு அல்லது வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மூன்று இலக்க ‘கிரெடிட் ஸ்கோர்’ ஒதுக்கப்படும். ஆனால்,  சில நபர்களுக்குக் ‘கிரெடிட் ஸ்கோர்’ இல்லாமலேயேகூட இருக்கலாம். சிபில் விதிமுறைப் படி, கடன் பரிவர்த்தனை இல்லாத நபர்கள் (முழுமையாக அல்லது கடந்த இரண்டு ஆண்டுகளாக), ஆட் ஆன் கார்டுகள் (add-on credit cards) மட்டும் பயன்படுத்துபவர்கள் கிரெடிட் ரெக்கார்டு இல்லாத நபர்களாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்கு ‘கிரெடிட் ஸ்கோர்’ வழங்கப்பட மாட்டாது. 

7. ஒருவரின் ஸ்கோர் மிகவும் குறைவாக இருக்க என்ன காரணங்கள்?

நான்கு காரணிகள் ஒருவரின் ‘கிரெடிட் ஸ்கோரை’ப் பரவலாகப் பாதிக்கின்றன. ஒன்று,- கிரெடிட் கார்டு பில்கள் அல்லது கடன்   இ.எம்.ஐ-களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தாது. இரண்டு, நீங்கள் அடிக்கடி உங்கள் கடன் அட்டை வரம்பைத் தாண்டி, உங்களுக்குக்  கிடைக்கும் கடன் வரம்பை அதிக அளவில் பயன்படுத்துவது. மூன்றாவது, பாதுகாக்கப்பட்டக் கடன்களை (வீட்டுக் கடன்கள் மற்றும் கடனுதவி கடன்கள்) விட அதிகப் பாதுகாப்பற்றக் கடன்கள் (கடன் அட்டைகள் மற்றும் தனிநபர் கடன்கள்) வாங்குவது. நான்காவது, அண்மையில் பல புதிய கடன் விண்ணப்பங்களை நீங்கள் செய்திருப்பது.  இது உங்களுக்குக் கடன் தேவை இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உங்கள் ‘கிரெடிட் ஸ்கோர்’ குறைகிறது. 

8. பிழைகளை எப்படி சரிசெய்வது? 
 
கடன் தகவல் நிறுவனங்கள், ஒருவரின் கடன் வரலாற்றைத் தொகுக்க,  கடன் அட்டை அல்லது கடன் வாங்கிய கடன் வழங்கும் நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ளும் தரவுகளை நம்பியிருக்கின்றன. சில நேரங்களில், கடனளிப்பவர்களிடமிருந்து தரப்பட்டத் தகவலில் பிழைகள் இருக்கக்கூடும். இது உங்கள் ‘கிரெடிட் ஸ்கோரை’ மிக மோசமாகப் பாதிக்கலாம். கடன் தகவல் நிறுவனங்களிடம் பிழையைத் தெரிவிக்க மற்றும் சரிசெய்ய பல தீர்வுகள் உள்ளன. நீங்கள் இதற்கான விவரங்களை அவற்றின் வலைதளங்களில் பார்க்க முடியும். 

9. கிரெடிட்  ஸ்கோர் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? 

சரியான நேரத்தில் கடனை  திருப்பிச் செலுத்தியதற்கான வரலாற்றை மட்டும் சரியாக வைத்திருந்தால் போதாது. ஜாமீன் இல்லாத மற்றும் ஜாமீன் வழங்கிப் பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தியதற்கான வரலாற்றையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டும் சரியான கலவையாக இருக்க வேண்டும். தனிநபர் கடன்கள் மற்றும் கடன் அட்டைகளின் பணத்தைச் சரியான நேரத்தில் செலுத்தும்போது, அது உங்கள் ‘கிரெடிட் ஸ்கோர்’ மீது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும். 

10.  கடன் தகவல் நிறுவனங்கள், கிரெடிட் ரிப்போர்ட்டில் பிழைகளைச் சரிசெய்யவில்லை எனில்  என்ன செய்வது?  

கடன்  தகவல் நிறுவனங்கள் , கிரெடிட் ஸ்கோர் தொகுக்க, கடன் வழங்கிய நிறுவனங்களை நம்பியுள்ளன. கடன் கொடுத்த நிறுவனம், ஒருவரின் கடன் குறித்த தகவலைப் புதுப்பிப்பதைத் தாமதப்படுத்தியிருக்கலாம்.  உங்களின் பதிவுகளைச் சரிசெய்ய, கடன் வழங்கிய வங்கி அல்லது நிதி நிறுவனத்தைத்  தொடர்புகொள்ள வேண்டும்.  கடன் பெறும் தகுதியான ‘கிரெடிட் ஸ்கோரை’ மட்டும் நீங்கள் சரியாக வைத்திருந்தால், புதிதாகக் கடன் பெறுவதில் உங்கள் எந்தக் கஷ்டமும் இருக்காது! 



இவற்றைச் செய்யாதீர்கள்!

நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர் என்றால், நீங்கள் உங்கள் மாதாந்திரக் கட்டணத்தைக் குறிப்பிட்ட தேதியில் முழுமையாகச் செலுத்திவிடுங்கள். தாமதம், குறைந்த தொகை செலுத்துதல் மற்றும் பணம் செலுத்தாமலே இருத்தல் போன்றவையெல்லாம் உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் குறைக்கும். அது உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டையே பாதிக்கும். 

 உங்களுக்கான செலவு வரம்பைத் தாண்டி கிரெடிட் கார்டை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள். உங்கள் அனைத்து கிரெடிட் கார்டிலும் உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிவர்த்தனை மதிப்பில் 20 முதல் 30 சதவிகிதத்துக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். இதற்குமேல் பயன்படுத்த வேண்டியிருந்தால், ஒரே கார்டில் அதைச் செய்ய வேண்டாம். இருக்கும் மற்ற கார்டுகளிலும் பகிர்ந்து இதைச் செய்யுங்கள். 

உங்கள் கிரெடிட் கார்டை 100%  பயன்படுத்திவிட்டீர்கள் என்றால், உங்களுக்குக் கடன் தேவை அதிகம் இருக்கிறது என்று அர்த்தம். இது உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு நல்லது இல்லை. இதனால், உங்களுக்கு வேறு ஒரு கிரெடிட் கார்டு அல்லது கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.