Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதன், 13 டிசம்பர், 2017

லோன் வேண்டுமா..? உங்கள் கடன் தகுதியை உயர்த்தும் கிரெடிட் ஸ்கோர்!

vikatan.com

வீட்டுக் கடன், தங்க நகைக் கடன், கார் வாங்கக் கடன், பர்சனல் லோன்... இப்படி ஏதாவது ஒரு கடனை வாங்க நம்மில் பலர் திட்டமிட்டு வருகிறோம். ‘கடன் வேண்டும்’ என்று கேட்டுப் போனால், ‘வாங்க, வாங்க’ என்று அழைத்து, கேட்ட அளவு கடனைத் தந்தது அந்தக் காலம். வங்கிகளின் வாராக் கடன் தொகை அதிகரித்ததைத் தொடர்ந்து, எவ்வளவு குறைவாகக் கடன் கேட்டாலும், கிடையாது என்று சொல்லப்படுவது இந்தக் காலம். கடன் பெறும் தகுதி அதாவது, ‘கிரெடிட் ஸ்கோர்’ ஒருவருக்கு எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே வங்கிகள் இப்போது கடன் தரத் தயாராகின்றன. அது என்ன ‘கிரெடிட் ஸ்கோர்’, யார் இதை உருவாக்குகிறார்கள், கிரெடிட் ஸ்கோர் தொடர்பாக நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கான கேள்விகளும், பதில்களும் இதோ...    
1. கிரெடிட் ஸ்கோர் என்றால் என்ன? 

உங்கள் கிரெடிட் ஸ்கோர் என்பது, நீங்கள் எந்த அளவுக்குக் கடன் பெறும் தகுதியைக் கொண்டிருக்கிறீர்கள் என்பதைக் கண்டறிவதற்கான ஒரு மதிப்பீடு ஆகும். இது பொதுவாக 300 மற்றும் 900-க்கு இடையிலான எண்ணாக மதிப்பிடப்படும். கடன் அட்டைகள் மூலம் வாங்கிய கடன்கள் மற்றும் இதற்கு முன்பு வாங்கிய கடன்களை எப்படித் திரும்பக் கட்டினீர்கள்  அல்லது திரும்பக் கட்டி  வருகிறீர்கள் என்ற வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இது உருவாக்கப்படுகிறது. இந்தியாவில் நான்கு முக்கியக் கடன் தகவல் நிறுவனங்கள் உள்ளன.அவை சிபில், எக்ஸ்பீரியன், ஈக்விக்ஸ் மற்றும் ஹைமார்க் (CIBIL, Experian, Equifax and Highmark). இந்த நிறுவனங்களே இந்த ஸ்கோரை உருவாக்கித் தருகின்றன.

2. எனது கடன் ஸ்கோர் பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்? 

ஒரு நல்ல கிரெடிட் ஸ்கோர், குறைந்த வட்டி விகிதத்தில் ஒரு கடன் பெறுவதற்குக் காரணமாக இருக்கிறது. மோசமான கிரெடிட் ஸ்கோர் இருந்தால் கடனைப் பெற முடியாமல் போவதற்கான வாய்ப்புகள் அதிகம். கடன் அட்டைப் பயன்பாடு மற்றும் வேறு  கடன்களுக்கான இ.எம்.ஐ செலுத்துதல் எல்லாம் அவர்கள் கடன் பெற்ற நிறுவனத்தின் வழியாக மேலே குறிப்பிட்ட கடன் தகவல் நிறுவனங்களுக்கு  அனுப்பப்படுகிறது. உங்கள் கிரெடிட் கார்டு தவணை அல்லது மாதாந்திரத் தவணையைச் செலுத்துவதில் நீங்கள் அலட்சியம் காட்டியிருந்தால், அது உங்கள் வங்கிச் சேவை பரிவர்த்தனையில் பதிவாகும். அது உங்கள் கடன் வரலாறு அறிக்கையாகப் பதிவு செய்யப்படும். 

கடன் தருவதற்கு மட்டுமல்ல,   இ-காமர்ஸ் நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் நிறுவனங்கள் கூட இப்போது ஒருவரின் நிதி நிலை உள்ளிட்டவற்றைக் கண்டறிய கிரெடிட் ஸ்கோர் எவ்வளவு என்று பார்க்கின்றன. எனவே, இந்த விஷயத்தில் கூடுதல் கவனத்துடன் இருப்பது நல்லது.  

3. எனக்குக் கடன் தேவை. நான் என்ன செய்ய வேண்டும்?  

உங்கள் கிரெடிட் ஸ்கோர் அடிப்படையில் உங்கள்  கடனுக்கான வட்டி விகிதத்தை  நிர்ணயிக்கும் சந்தைக் களமாக நம் நாடு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது. உங்கள் கிரெடிட் ஸ்கோர் 750 அல்லது அதற்கு மேல் இருந்தால், உங்களுக்கு மிகக் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் கிடைக்கும். குறிப்பாக, கடன் பெற்று, அதைக் காலதாமதமில்லாமல் சரியாகத் திரும்பிச் செலுத்தும் வரலாற்றைக் கொண்டவர்களுக்குக் குறைந்த வட்டியில் கடன் கிடைக்க வாய்ப்புண்டு. அதுவே, ‘கிரெடிட் ஸ்கோர்’ மிகக் குறைவாக உள்ளவர் கடன் பெற வேண்டும் என்றால், அவர்கள் அதிக வட்டியைத்தான் செலுத்தியாக வேண்டும். 

4. நான் என் ‘கிரெடிட் ஸ்கோரை’ பெற முடியுமா? 

கடன்  வாங்குவதற்கு முன்பாகவோ, கிரெடிட் கார்டு பெற நீங்கள்  விண்ணப்பம் செய்வதற்கு முன்பாகவோ, நீங்களாக உங்கள் ‘கிரெடிட் ஸ்கோரை’ பார்க்க வேண்டிய தேவையில்லை. 2016-ம் ஆண்டு ரிசர்வ் வங்கி ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, அனைத்துக் கடன் தகவல் நிறுவனங்களும் தனிநபர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை இலவசமாகவே கிரெடிட் ரிப்போர்ட்டை அளிக்க வேண்டும். கடன் வழங்கும் நிறுவனங்கள் (வங்கிகள், வீட்டு வசதி நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதிச் சேவை நிறுவனங்கள், கிரெடிட் கார்டு  வழங்கும் நிறுவனங்கள்) விண்ணப்பிக்கும்போது எப்படிப்பட்ட அறிக்கையை  கடன் தகவல் அறிக்கை நிறுவனங்கள் அளிக்கிறதோ, அதேபோன்ற விரிவான ரிப்போர்ட்டையே தனிநபர்களுக்கும் அளிக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. 

5. எனது கிரெடிட் ஸ்கோரை எங்கு பெறுவது?  

உங்கள் இலவச அல்லது கட்டண அறிக்கையைப் பெற கடன் தகவல் நிறுவனங்களின் வலைதளங்களுக்குச் சென்று விண்ணப்பிக்கலாம். இந்த அறிக்கைகள் ஆன்லைனில் உடனடியாக, உங்களுக்கு எந்தச் செலவுமின்றிக் கிடைக்கிறது. எடுத்துக்காட்டாக, BankBazaar.com வலைதளத்தில் மூன்று நிமிடங்களில் இலவச எக்ஸ்பிரியன் கிரெடிட் அறிக்கை உங்களுக்கு அளிக்கப்படுகிறது. அதிக கடன் கேள்விகள் இல்லாமல் இந்த ரிப்போர்ட் அளிக்கப்படுகிறது.   

6. யாருக்கு ‘கிரெடிட் ஸ்கோர்’ இருக்கும்? 

கிரெடிட் கார்டு அல்லது வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு மூன்று இலக்க ‘கிரெடிட் ஸ்கோர்’ ஒதுக்கப்படும். ஆனால்,  சில நபர்களுக்குக் ‘கிரெடிட் ஸ்கோர்’ இல்லாமலேயேகூட இருக்கலாம். சிபில் விதிமுறைப் படி, கடன் பரிவர்த்தனை இல்லாத நபர்கள் (முழுமையாக அல்லது கடந்த இரண்டு ஆண்டுகளாக), ஆட் ஆன் கார்டுகள் (add-on credit cards) மட்டும் பயன்படுத்துபவர்கள் கிரெடிட் ரெக்கார்டு இல்லாத நபர்களாகவே கருதப்படுவார்கள். அவர்களுக்கு ‘கிரெடிட் ஸ்கோர்’ வழங்கப்பட மாட்டாது. 

7. ஒருவரின் ஸ்கோர் மிகவும் குறைவாக இருக்க என்ன காரணங்கள்?

நான்கு காரணிகள் ஒருவரின் ‘கிரெடிட் ஸ்கோரை’ப் பரவலாகப் பாதிக்கின்றன. ஒன்று,- கிரெடிட் கார்டு பில்கள் அல்லது கடன்   இ.எம்.ஐ-களை உரிய நேரத்தில் திருப்பிச் செலுத்தாது. இரண்டு, நீங்கள் அடிக்கடி உங்கள் கடன் அட்டை வரம்பைத் தாண்டி, உங்களுக்குக்  கிடைக்கும் கடன் வரம்பை அதிக அளவில் பயன்படுத்துவது. மூன்றாவது, பாதுகாக்கப்பட்டக் கடன்களை (வீட்டுக் கடன்கள் மற்றும் கடனுதவி கடன்கள்) விட அதிகப் பாதுகாப்பற்றக் கடன்கள் (கடன் அட்டைகள் மற்றும் தனிநபர் கடன்கள்) வாங்குவது. நான்காவது, அண்மையில் பல புதிய கடன் விண்ணப்பங்களை நீங்கள் செய்திருப்பது.  இது உங்களுக்குக் கடன் தேவை இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது. இதனால் உங்கள் ‘கிரெடிட் ஸ்கோர்’ குறைகிறது. 

8. பிழைகளை எப்படி சரிசெய்வது? 
 
கடன் தகவல் நிறுவனங்கள், ஒருவரின் கடன் வரலாற்றைத் தொகுக்க,  கடன் அட்டை அல்லது கடன் வாங்கிய கடன் வழங்கும் நிறுவனங்கள் பகிர்ந்துகொள்ளும் தரவுகளை நம்பியிருக்கின்றன. சில நேரங்களில், கடனளிப்பவர்களிடமிருந்து தரப்பட்டத் தகவலில் பிழைகள் இருக்கக்கூடும். இது உங்கள் ‘கிரெடிட் ஸ்கோரை’ மிக மோசமாகப் பாதிக்கலாம். கடன் தகவல் நிறுவனங்களிடம் பிழையைத் தெரிவிக்க மற்றும் சரிசெய்ய பல தீர்வுகள் உள்ளன. நீங்கள் இதற்கான விவரங்களை அவற்றின் வலைதளங்களில் பார்க்க முடியும். 

9. கிரெடிட்  ஸ்கோர் அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்? 

சரியான நேரத்தில் கடனை  திருப்பிச் செலுத்தியதற்கான வரலாற்றை மட்டும் சரியாக வைத்திருந்தால் போதாது. ஜாமீன் இல்லாத மற்றும் ஜாமீன் வழங்கிப் பெறப்பட்ட கடனைத் திருப்பிச் செலுத்தியதற்கான வரலாற்றையும் ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டும். இந்த இரண்டும் சரியான கலவையாக இருக்க வேண்டும். தனிநபர் கடன்கள் மற்றும் கடன் அட்டைகளின் பணத்தைச் சரியான நேரத்தில் செலுத்தும்போது, அது உங்கள் ‘கிரெடிட் ஸ்கோர்’ மீது அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும். 

10.  கடன் தகவல் நிறுவனங்கள், கிரெடிட் ரிப்போர்ட்டில் பிழைகளைச் சரிசெய்யவில்லை எனில்  என்ன செய்வது?  

கடன்  தகவல் நிறுவனங்கள் , கிரெடிட் ஸ்கோர் தொகுக்க, கடன் வழங்கிய நிறுவனங்களை நம்பியுள்ளன. கடன் கொடுத்த நிறுவனம், ஒருவரின் கடன் குறித்த தகவலைப் புதுப்பிப்பதைத் தாமதப்படுத்தியிருக்கலாம்.  உங்களின் பதிவுகளைச் சரிசெய்ய, கடன் வழங்கிய வங்கி அல்லது நிதி நிறுவனத்தைத்  தொடர்புகொள்ள வேண்டும்.  கடன் பெறும் தகுதியான ‘கிரெடிட் ஸ்கோரை’ மட்டும் நீங்கள் சரியாக வைத்திருந்தால், புதிதாகக் கடன் பெறுவதில் உங்கள் எந்தக் கஷ்டமும் இருக்காது! 



இவற்றைச் செய்யாதீர்கள்!

நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர் என்றால், நீங்கள் உங்கள் மாதாந்திரக் கட்டணத்தைக் குறிப்பிட்ட தேதியில் முழுமையாகச் செலுத்திவிடுங்கள். தாமதம், குறைந்த தொகை செலுத்துதல் மற்றும் பணம் செலுத்தாமலே இருத்தல் போன்றவையெல்லாம் உங்கள் கிரெடிட் ஸ்கோரைக் குறைக்கும். அது உங்கள் கிரெடிட் ரிப்போர்ட்டையே பாதிக்கும். 

 உங்களுக்கான செலவு வரம்பைத் தாண்டி கிரெடிட் கார்டை அடிக்கடி பயன்படுத்தாதீர்கள். உங்கள் அனைத்து கிரெடிட் கார்டிலும் உங்களுக்கு அளிக்கப்பட்ட பரிவர்த்தனை மதிப்பில் 20 முதல் 30 சதவிகிதத்துக்கு மேல் பயன்படுத்தாதீர்கள். இதற்குமேல் பயன்படுத்த வேண்டியிருந்தால், ஒரே கார்டில் அதைச் செய்ய வேண்டாம். இருக்கும் மற்ற கார்டுகளிலும் பகிர்ந்து இதைச் செய்யுங்கள். 

உங்கள் கிரெடிட் கார்டை 100%  பயன்படுத்திவிட்டீர்கள் என்றால், உங்களுக்குக் கடன் தேவை அதிகம் இருக்கிறது என்று அர்த்தம். இது உங்கள் கிரெடிட் ஸ்கோருக்கு நல்லது இல்லை. இதனால், உங்களுக்கு வேறு ஒரு கிரெடிட் கார்டு அல்லது கடன் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.  

திங்கள், 2 அக்டோபர், 2017

வள்ளலார் அவர்களின் 195வது அவதார தினம் 05-10-2017


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய, வள்ளலார் என அறியப்படும் இராமலிங்க அடிகளார் (அக்டோபர் 5, 1823 – ஜனவரி 30, 1874) சத்தியஞான சபை எனும் அமைப்பை நிறுவியவர். 

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகில் உள்ள மருதூர் கிராமத்தில், இராமையா பிள்ளை, சின்னம்மை தம்பதிகளின் மகனாக அக்டோபர் 5, 1823 ல் அவதரித்தார். சகோதரர்கள் சபாபதி, பரசுராமன் மற்றும் சகோதரிகள் உண்ணாமலை, சுந்தராம்பாள். ராமலிங்கர் பிறந்த ஆறுமாத காலத்தில் அவரது தந்தை அகால மரணமடைந்ததால் தாயார் சின்னம்மை தன் ஐந்து குழந்தைகளுடன் பொன்னேரிக்கு (தற்போதைய திருவள்ளூர் மாவட்டம்) இடம்பெயர்ந்து வசித்து வந்தார். பின்னர் ஏழுகிணறு பகுதியிலுள்ள வீராசாமிபிள்ளை தெருவில் குடியிருந்து வந்தனர். அண்ணன் சபாபதி மிகச்சிறந்த சமயச்சொற்பொழிவாளராகத் திகழ்ந்தார். 


இராமலிங்க அடிகளார் அவர்கள் இயற்றிய திருவருட்பா நமது பள்ளிப் பாடத்திட்டத்தில் உள்ளது. 


இராமலிங்க அடிகள் வடலூர் மக்களிடமிருந்து மேட்டுக்குப்பம் எனும் இடத்தில் 80 காணி நிலம் பெற்று 23-05-1867 அன்று ஒரு தர்மசாலையைத் துவக்கியது மட்டுமல்லாமல், தர்மசாலைக்கு வரும் அனைவருக்கும் மூன்று வேளையும் அன்னதானம் வழங்குவதைத் துவக்கி வைத்தார். அன்று முதல் இன்று வரை அன்னதானம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  உலகின் பல்வேறு பகுதிகளில் வள்ளலார் தர்மசாலைகள் பல பக்தர்களால் ஏற்படுத்தப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 

இராமலிங்க அடிகளின் கொள்கைகள்:
கடவுள் ஒருவரே, அவர் அருட்பெருஞ்சோதி ஆண்டவர்.
புலால் உணவு உண்ணக் கூடாது. 
ஏந்த உயிரையும் கொல்லக் கூடாது. 
சாதி, மொழி, இனம் முதலிய வேறுபாடுகள் கூடாது
இறந்தவர்களை எரிக்கக்கூடாது. சமாதியில் இருத்த வேண்டும். 
பசித்தவர்  அனைவருக்கும் உணவளித்தல் வேண்டும். 
தெய்வங்களுக்கு பலியிடுதல் கூடாது. 
உயிர்களைத் துன்புறுத்தக் கூடாது. 
மதவெறி கூடாது. 

சத்திய தருமசாலை, சன்மார்க்க சங்கம், சத்திய ஞானசபை, சித்தி வளாகம் போன்ற அமைப்புகளை நிறுவிய அருளாளர் இராமலிங்க அடிகளார் 1874 ம் ஆண்டு தைப்பூச நன்னாளில் இறைவனுடன் கலந்தார். 


ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஏழு திரைகள் விலகி ஜோதி தரிசனம் நிகழும். ஓவ்வொறு திரைக்கும் ஒவ்வொரு சக்தி என்பது நம்பிக்கை. 
கறுப்புத்திரை  - மாயா சக்தி
நீலத்;திரை  - கிரியா சக்தி
பச்சைத்திரை  - பராசக்தி
சிவப்புத்திரை  - இச்சா சக்தி
பொன்வண்ணத்திரை  - ஞானசக்தி
வெண்மைத்திரை  - ஆதிசக்தி
கலப்புத்திரை – சிற்சக்தி


தைப்பூச நன்னாளில் கிழக்கே சூரியனும், மேற்கே சந்திரனும் காணப்பெறும் நேரத்தில்தான் ஞான சபையில் அருட்பெரும் ஜோதியை காட்டியருளினார் வள்ளலார். இதனை உணர்த்தும் விதம் ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. 




அந்நாளில் காலை 6 மணி முதல் ஏழு திரைகள் விலக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெறும்போது பக்தர்கள் “அருட்பெரும்ஜோதி தனிப்பெரும் கருணை” என்ற மகாமந்திரத்தை முழங்கி ஜோதி தரிசனம் செய்கின்றனர். 

தொடர்ந்து காலை 10 மணி, நண்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி ஆகிய நேரங்களில் ஜோதி தரிசனம் நடைபெறுகிறது. 

வள்ளலார் காட்டிய அறவழியில் நம் சாலியர் சமூகம் ஒவ்வொரு தைப்பூச நன்னாளிலும் அன்னதானம் அளித்து வருகிறோம்.

 ஆனால் அவரது முக்கியக் கொள்கையான அசைவம் உண்ணாமல் இருத்தலை பின்பற்றுகிறோமா? நான் சுத்த சைவமாக இருந்து புலால் உண்ணாமல் இருக்கிறேன். நீங்கள்?


கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை, தொடர்புக்கு: gsraj1979@gmail.com



ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

பார்வை வழங்கும் தூதுவர் ஆவோம்: கண் தானம் செய்வது எப்படி?

தி இந்து





திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. கதாநாயகனின் அறிமுகக் காட்சி அது. ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். சட்டென்று படம் நின்று, திரையரங்கில் இருள் சூழ்ந்தது. ரசிகர்கள் கூக்குரலிட்டனர். ஒன்று..இரண்டு...பத்து நொடிகள் வரை கும்மிருட்டு.
பின்னர் திரையில் தோன்றியது ஒரு வாசகம்.
''10 நொடிகள் இருளையே உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கண்ணில்லாதவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கை முழுவதும் இருளே!
கண் தானம் செய்வோம்!''
அனைவரும் எழுந்து நின்று நெகிழ்வுடன் கரவொலி எழுப்பினர்.
****
இந்திய அரசின் சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை 'தேசிய கண் தான விழா'வாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 8-ம் தேதி தேசிய கண் தான நாளாக கொண்டாடப்படுகின்றது.
இந்த இரண்டு வாரங்களும் கண் வங்கிகள், கண் மருத்துவமனைகள் மூலம் பொது மக்களிடையே கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்தியாவில் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்து தானமாக வழங்கப்படும் கண்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சம். கண் தானத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாமையே இந்நிலைக்கு காரணம்.
இதைத் தவிர்க்க என்ன செய்யலாம், கண் தானம் மேற்கொள்ள, நாம் செய்ய வேண்டியவை என்ன?
1. நமக்கு தெரிந்து யாரேனும் ஒருவர் மரணமடைந்துவிட்டால், அந்த நேரத்தில் நெருங்கிய உறவினர்கள் வேதனை மற்றும் அதிர்ச்சியில் இருப்பார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி, மரணமடைந்தவர் உடல் உறுப்புகள் அல்லது கண்களை தானம் செய்ய உறுதிமொழி ஏதேனும் எடுத்திருந்தால் உடனடியாக கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம். கண்தான உறுதிமொழி எடுத்திருக்கவில்லை என்றால் நெருங்கிய உறவினரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி "அவரது கண்களைத் தானம் அளிப்பதால், இரண்டு பேருக்கு பார்வை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறதே.. அவரது ஆத்மா சாந்தியடையுமே" என்று ஊக்குவித்து அவர்களது சம்மதம் பெற்றுக் கண் வங்கியைத் தொடர்பு கொள்ளலாம்.
2. கண் வங்கியை தொடர்பு கொண்டு மரணமடைந்தவரின் பெயர், வயது, ஆண் / பெண், மரணத்தின் காரணம், மரணமடைந்த நேரம், தற்போது உடல் இருக்கும் இடத்தின் முகவரி மற்றும் லேண்ட்மார்க் (அருகில் உள்ள இடத்தின் அடையாளம் உதாரணத்துக்கு., கோயில், திரைஅரங்கு, கடைகள், போன்ற விவரங்கள்) ஆகியவற்றுடன், தகவல் அளிப்பவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களை அளித்தால் உரிய நேரத்திற்குள் கண் வங்கி மருத்துவர் குழு வர வசதியாக இருக்கும்.
3. இறந்தவரின் உடலில் இருந்து 6 மணி நேரத்துக்குள் கண்களை அகற்றிவிட வேண்டுமென்பதால், இறந்தவுடன் அருகில் உள்ள கண் வங்கிக்குத் தொலைபேசி மூலம் தகவல் சொல்ல வேண்டும். இறந்தவரின் கண்களை மூடி, மூடிய இமையின்மேல் ஈரப் பஞ்சை வைக்கலாம். உடல் வைக்கப்பட்டிருக்கும் அறையில் மின் விசிறியை நிறுத்திவிட வேண்டும்.
4. கண் வங்கியிலிருந்து மருத்துவர் வீட்டுக்கே வந்து கண்களை எடுத்துச் செல்வார். கண் விழிப்படலத்தை எடுக்க 10 நிமிடங்கள் போதும். எடுத்தவுடன் முகம் விகாரமாகத் தோன்றாது. ஆண், பெண், சிறுவர், பெரியவர், கண்ணாடி அணிந்தவர், கண்ணில் அறுவைசிகிச்சை செய்தவர்கள் என யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஒருவரிடமிருந்து தானமாகப் பெற்ற இரண்டு கண்கள், பார்வை இழந்த இரண்டு நபர்களுக்குப் பொருத்தப்படுகின்றன.
5. கண் தானம் செய்வதற்கு ஜாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், ஆண் / பெண் பாகுபாடு ஏதும் கிடையாது. மரணமடைந்த அனைவரது கண்களும் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து மதங்களும் கண் தானம் உட்பட அனைத்துவிதமான தானங்களையும் போற்றுகின்றன.
6. ஒருவரது மரணத்தின் பின்னணியில் ஏதேனும் தொற்று நோய்க்கிருமிகள், வெறிநாய்க் கடி, கல்லீரல் அழர்ச்சி, கண்களில் புற்றுநோய், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புற்றுநோய் பரவிய நிலை, எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவர்களது கண்கள் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
கண் வங்கியின் செயல்பாடுகள்
கண் வங்கி என்பது ஒரு சமுதாய அமைப்பாகச் செயல்படுகிறது. கண் தானம் மூலம் பெறப்படும் கரு விழிகளைச் சேகரித்து, முறையாகப் பரிசோதித்து அவற்றைக் கருவிழி மாற்று சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு அனுப்பும் பணியைக் கண் வங்கிகள் செய்து வருகின்றன.
சென்னையில் உள்ள சில முக்கியமான கண் வங்கிகள்
அரசு கண் மருத்துவமனை, எழும்பூர்,
தொலைபேசி எண்: 044 - 28555281
சி.யூ.ஷா கண் வங்கி சங்கர நேத்ராலயா, தொலைபேசி எண்: 044 - 28281919
ராஜன் கண் மருத்துவமனை, தொலைபேசி எண்: 044 - 28340300
அகர்வால் கண் மருத்துவமனை, தொலைபேசி எண் 044 - 28116233
- அ.மகாலிங்கம், கட்டுரையாளர், கண் மருத்துவ உதவியாளர், முன்னாள் கல்வி அதிகாரி மற்றும் மேம்பாட்டு மேலாளர், சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனை, சென்னை.
தொடர்புக்கு: mahali@mahali.in

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

கல்விவள்ளல் தி. கலசலிங்கம் அவர்களின் 93-வது பிறந்தநாள் 20.09.2017



தோற்றம்: 20.09.1925                                                                        மறைவு: 13.07.2014


கலசலிங்கம் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும் நமது சாலியர் சமுதாயத் தலைவர் அமரர் கல்விவள்ளல் தி. கலசலிங்கம் அவர்களின் 93-வது பிறந்தநாள்.


தற்போதைய விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் எஸ். இராமச்சந்திராபுரம் கிராமத்தில் தெய்வத் திருவாளர்கள் திருவேங்கடம் குருவம்மாள் தம்பதியினரின் நான்காவது மகனாக 20.09.1925ல் பிறந்த ஐயா கலசலிங்கம் அவர்கள் தன் கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி கட்டிட நிறுவன அதிபராகவும் அதன்பின் நம் சமுதாய மக்களை கல்வியில் மேம்படுத்தும் நோக்கத்துடன் கலசலிங்கம் கல்வி நிறுவனங்களைத் துவக்கினார்.

சிறிய அளவில் துவக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்று வளர்ந்து ஆலமரமாய், கலசலிங்கம் பல்கலைக்கழகமாகவும், ஆனந்த் பொறியியல் கல்லூரியாகவும் கல்விச் சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நமது சாலியர் சமுதாய ஒற்றுமைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும்  சிந்தித்து சாலியர் மகாஜன சங்கத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர் ஐயா கலசலிங்கம் அவர்கள் கடந்த 13.07.2014 அன்று நம்மை வி;ட்டு சென்றுவிட்டாலும் நம் மக்கள் மனதில் என்றும் இடம்பெற்றிருக்கும் கல்விவள்ளல் ஐயா கலசலிங்கம் அவர்களின் பிறந்தநாளில் அவரது ஆசி வேண்டி வணங்குவோம்.


நமது சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு ஐயாவின் வழியில் தொண்டு செய்ய முன்வருவோம்.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ரியல் எஸ்டேட்: வளம்பெறும் ஒரகடம்

தி இந்து


சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வரை, ‘ஒரகடம்’ என்ற பகுதியை, அப்பகுதியைச் சேர்ந்தவர்களைத் தவிர தமிழ்நாட்டில் வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று ஆசியாவின் ஆட்டோமொபைல் தயாரிப்பு மையமாகவும் தமிழகத்தின் பிரபலமான நகரங்களுள் ஒன்றாகவும் மாறியிருக்கிறது, சென்னைக்கு அருகில் 50 கிலோ மீட்டரில் அமைந்திருக்கிறது இந்நகரம்.
இந்திய அளவில் பெருநகரங்களுக்கு அருகே அமைந்துள்ள துணை நகரங்கள் பொருளாதார மண்டலங்களாக அறிமுகப்படுத்தப்பட்டு அவை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. டெல்லி அருகே உருவான குர்கான், மும்பை அருகே உருவான பொவாய் போன்றவை இதற்குச் சரியான முன்னுதாரணங்கள் ஆகும். அந்த வகையில் தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார மண்டலம் ஒரகடமாகும்.
மாநிலத்தின் முதலீடுகளைப் பெருக்கும் பொருட்டுத் தமிழக அரசு இங்கே தொழிற்சாலைகளை அமைக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி ஊக்குவிப்பதாலும், உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதாலும் ஆண்டுதோறும் தொழிற்சாலைகள் எண்ணிக்கையும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. டெய்ம்லர், ரினால்ட்-நிஸான், ஃபோர்டு, டி.வி.எஸ்., அப்போல்லோ, மெர்ஸிடிஸ், சுந்தரம் ஆட்டோ, ராயல் என்ஃப்பீல்டு உள்ளிட்ட உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இங்கு அமைத்துள்ளன.
உலகின் முன்னணி நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தொழிற்சாலையை இங்கே போட்டிபோட்டுக்கொண்டு நிறுவும் அதேவேளையில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இங்கே தங்கள் புராஜெட்டுகளை ஆர்வத்துடன் அறிமுகப்படுத்திவருகின்றன. தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் மக்கள் வசிப்பதற்கும் ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் ஒருங்கே அமைந்துள்ளதே இதற்கு மிக முக்கியக் காரணமாகும்.
விஸ்தாரமான ஆறு வழிச் சாலை, சென்னை, பெங்களூர் மற்றும் பிற முக்கிய நகரங்களுடனான இணைப்புச் சாலைகள், மேம்பாலங்கள், புகழ்பெற்ற ஆலயங்கள், மக்களின் வாழ்வாதாரங்களுக்கான சூப்பர் மார்க்கெட்டுகள், போக்குவரத்து வசதிகள், அலுவலகங்கள் என ஒரு பெருநகரத்திற்குண்டான அத்தனை அம்சங்களும் அமைந்துள்ளதால் ஒரகடத்தின் ரியல் எஸ்டேட் வர்த்தகமும் மதிப்பும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, ஒரகடத்தின் சிறப்புகளை ஆராய்ந்து தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக 400 ஏக்கரில் விண்ணை முட்டும் அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் வீட்டுமனைப் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு குட்டி நகரத்தையே இங்கு உருவாக்கியிருப்பது ஒரகடத்தின் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுமனைப் பிரிவுகள் கணிசமாகக் குறைந்துவருவதால், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முதலீடுசெய்ய விரும்புபவர்களுக்கு ஒரகடம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஏனெனில், வருங்காலத்தில் வரவிருக்கும் இன்னும் பல்வேறு சிறப்பம்சங்கள் ஒரகடத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
அவற்றில் சில:
# ஒரகடத்தையும் ஸ்ரீபெரும்புதூரையும் இணைத்துத் தொழில்துறை மண்டலத்தை விரிவாக்கிச் சென்னையின் பொருளாதார நகரமாக உருவாக்கத் தமிழக அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது.
# இதன் மூலம் 30,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்.
# NH4 தேசிய நெடுஞ்சாலை, தாம்பரம், முடிச்சூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூரை இணைப்பதால் சுற்றுவட்டாரத்தில் ஒரகடம் ஒரு மிக முக்கிய நகரமாக மாறி வருகிறது.
# ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் மட்டுமல்லாது சாம்சங், DELL போன்ற எலக்ட்ரானிக் பொருள்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளும் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களும் தங்கள் கிளைகளைத் தொடங்கவிருக்கின்றன.
# சுமார் 300 ஏக்கரில் Aerospace பூங்கா ஒன்று அமையவிருக்கிறது. இதில் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் யூனிட்டுகளைக் கூடிய விரைவில் தொடங்கவிருக்கின்றன.
# சுமார் 25,000 ஏக்கர் பரப்பில் அரசு இந்தச் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இங்கே வரக் காத்திருக்கின்றன.
# சில வருடங்களுக்கு முன்பு வரை சென்னை நகருக்குச் சென்றுவர வெறும் 25 அடி சாலையை மட்டுமே கொண்டிருந்த ஒரகடம் இன்று 200 அடி சாலையுடன் அசுர வளர்ச்சி அடைந்திருப்பதே இது எதிர்காலத்தில் அடையவிருக்கும் வளர்ச்சிக்கு ஆதாரமாகும்.

கட்டுமான நிறைவுச் சான்றிதழின் முக்கியத்துவம்

தி இந்து




நீ
ங்கள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குகிறீர்கள். அதைக் கட்டி முடித்தவுடன் கட்டுநர் உங்களிடம் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்களில் முக்கியமானது ‘கட்டுமான நிறைவுச் சான்றிதழ்’ (Completion Certificate).
ஒரு வீடு அல்லது அடுக்ககத்துக்குத் தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் தேவைப்படும். கட்டிடம் அந்தப் பகுதிக்கான விதிகளின்படி கட்டப்பட்டிருந்தால்தான் அந்தந்த அமைப்புகள் (மின்சார வாரியம், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் போன்றவை) இவற்றுக்கு அனுமதி வழங்கும். அதற்கான அடிப்படைதான் கட்டுமான நிறைவுச் சான்றிதழ்.
கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் அந்தப் பகுதியின் அரசு அதிகாரி அதைப் பார்வையிடுவார். கட்டிடத் திட்ட வரைவின்படி அது கட்டப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பார். அப்படிக் கட்டப்பட்டிருந்தால் ‘கட்டுமான நிறைவுச் சான்றிதழ்’ வழங்கப்படும்.
கட்டுநர்கள் சிலர் இந்த ‘கட்டுமான நிறைவுச் சான்றிதழைப்’ பெற வேண்டியது ஃப்ளாட்களின் உரிமையாளர்கள்தான் என்பதைப் போல நடந்து கொள்கிறார்கள் (முக்கியமாக முதலில் சமர்ப்பித்த வீட்டுத் திட்ட வரைவிலிருந்து மாறுபட்டுக் கட்டியவர்கள்). இது தவறு. பல மாநிலங்களில் (தமிழ்நாடு உட்பட) கட்டுநர்கள்தான் இந்தக் கட்டுமான நிறைவுச் சான்றிதழைப் பெற்றுத்தர வேண்டும். தனி வீடாக இருந்தால் அந்தச் சான்றிதழைப் பெறுவது அதன் உரிமையாளர்களின் பொறுப்பு.
ஒரு ஃப்ளாட்டை வாங்கும்போது அதைப் பதிவுசெய்வீர்கள். ஆனால், அந்தப் பதிவின்போது ‘கட்டுமான நிறைவுச் சான்றிதழ்’ பற்றி எதுவும் குறிப்பிடப்படுவதில்லை. இதைப் பயன்படுத்தி சில கட்டுநர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள்.
இந்தக் கட்டுமான நிறைவுச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டுதான் தண்ணீர், மின்சார இணைப்பு போன்ற அரசுத் துறைகளிடமிருந்து பெற வேண்டிய அடிப்படை வசதிகளைக் கட்டிடத்துக்குப் பெற்றுத் தர வேண்டியிருக்கும்.
சில சமயம் தாற்காலிகச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துப் பெறலாம். ஆனால், இது சில மாதங்களுக்கு மட்டுமே (பெரும்பாலும் ஆறு மாதங்கள்) செல்லுபடியாகும்.
கட்டுமான நிறைவுச் சான்றிதழ் பெறவில்லை என்றால் என்ன ஆகும்? ஃப்ளாட்டை உங்கள் வசம் ஒப்படைப்பது தாமதமாகும். கட்டுமான நிறைவுச் சான்றிதழ் இன்னமும் கிடைக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி கட்டுநர் குறிப்பிட்ட காலத்தில் உங்களிடம் வீட்டை ஒப்படைக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்? அப்போது நீங்களே இதற்கான அதிகாரியை அணுகலாம். இப்படித் தனியாகவும் அணுகலாம், அந்தக் கட்டிடத்தின் பிற அடுக்கக உரிமையாளர்களுடன் இணைந்தும் அணுகலாம்.
கணிசமான கட்டுநர்கள் கட்டுமான நிறைவுச் சான்றிதழைப் பெறுவதில்லை. தங்களுக்குத் தெரிந்தவர்களைக் கொண்டோ லஞ்சம் அளித்தோ வீட்டுக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால், இதில் பின்னால் சிக்கல் எழும். கட்டுநர் கட்டுமான நிறைவுச் சான்றிதழை உரிமையாளர்களிடம் ஒப்படைத்த பிறகுதான் உரிமையாளர் அங்கே குடியேற முடியும் என்பதைப் பல மாநிலங்கள் சட்டபூர்வமாகவே ஆக்கியுள்ளன.
கட்டுமான நிறைவுச் சான்றிதழ் இல்லாமல் உங்கள் ஃப்ளாட் உங்கள் வசமானால் பிற்காலத்தில் அதை விற்பதிலோ அதை அடமானமாக வைத்துக் கடன் வாங்குவதிலோ பிரச்சினைகள் எழலாம். வருங்காலத்தில் புதிய விதிகள் அறிமுகமாகி உங்கள் வீட்டுக்கான மின்சார இணைப்பு, நீர் இணைப்பு போன்றவை துண்டிக்கப்படலாம். எனவே, இதில் கவனம் செலுத்துங்கள்.
ஒரு கட்டுமான நிறைவுச் சான்றிதழில் கீழ்க்கண்ட விவரங்களும் இருக்கும் - நிலம் அமைந்துள்ள இடத்தின் தகவல்கள், அருகிலுள்ள கட்டிடங்களிலிருந்து எவ்வளவு தொலைவில் இந்தக் கட்டிடம் அமைந்துள்ளது, கட்டிடத்தின் அனுமதிக்கப்பட்ட உயரம், கட்டிடத் திட்ட வரைவின் விவரங்கள்.
கட்டுமான நிறைவுச் சான்றிதழ் என்பது உங்கள் கட்டிடம் நீங்கள் அளித்த திட்டப்படியும் (எனவே சட்டப்படியும்) கட்டப்பட்டிருக்கிறது என்பதற்கான மறைமுகமான சான்றிதழும்கூட. எனவே, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

கூகுள் தெரியும், டக்டக்கோ தெரியுமா?


தி இந்து





மா
ற்றுத் தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ‘டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? கூகுளுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது ‘டக்டக்கோ’. இதற்கு முக்கிய காரணம், டக்டக்கோ இணையவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவதுதான். இணையவாசிகளின் தேடலைக் கண்காணிக்காமல் இருப்பதும், அவர்களைப் பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதுமே டக்டக்கோவின் தனிச்சிறப்பு. இந்த அனாமதேய தன்மையை பிரைவசி ஆர்வலர்கள் கொண்டாடியும் வருகின்றனர்.
எனவே, உங்கள் இணைய தேடல் அனாமதேயமாக இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்களும் டக்டக்கோவை பயன்படுத்திப் பார்க்கலாம். பிரைவசி பாதுகாப்பு முதன்மை அம்சம் என்றாலும், டக்டக்கோவுக்கு மாற்றிக்கொள்ள மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு தேடியந்திரமாக டக்டக்கோ பல தனித்தன்மையான சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் பல பிரத்யேகமானவை.

ஸ்டாப் வாட்ச்

நீங்கள் விரும்பினால் டக்டக்கோவை ஸ்டாப் வாட்சாக பயன்படுத்தலாம். இதன் கட்டத்தில் ஸ்டாப் வாட்ச் என டைப் செய்தால் போதும், அதற்கான கடிகாரம் தோன்றும். அதில் உங்களுக்குத் தேவையான நேரத்தை அமைத்துக்கொள்ளலாம். அது மட்டுமல்ல, அடுத்தடுத்து வேலைகள் இருந்தால், லேப் வசதி மூலம் தொடச்சியாகப் பயன்படுத்தலாம். இதே முறையில் டைமர் சேவையையும் பயன்படுத்தலாம். டைமரில் நேரம் முடிந்ததும் அலாரமும் ஒலிக்கும்.
ஆங்கில வாசகங்களில் தேவையான இடங்களில் கேபிட்டல் எழுத்துகளை அமைக்க விரும்பினால், அதற்கான வசதியையும் இந்தத் தேடியந்திரம் வழங்குகிறது. வாசகத்தை டைப் செய்து அதற்கு முன் ‘டைட்டில் கேஸ்’ என குறிப்பிட்டு இடைவெளி விடுவதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எழுத்துகளை லோயர் கேஸ் அல்லது அப்பர் கேஸாக மாற்றவும் பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செய்திகளைத் தேட

கூகுளில் தகவல்களைத் தேடும்போது, தொடர்புடைய செய்திகளும் இடம்பெற்றிருக்கும். ஆனால், டக்டக்கோ தேடல் முடிவுகளை மட்டுமே அளிக்கிறது. இருப்பினும் செய்திகளும் இடம்பெற விரும்பினால், தேடலுக்கான கீவேர்டு முன் அல்லது முடிவில் நியூஸ் என சேர்த்துக்கொண்டால் போதும், தொடர்புடைய செய்திகளையும் காணலாம். 100-க்கும் மேற்பட்ட தளங்களிலிருந்து செய்திகள் பட்டியலிடப்படுகின்றன.
டக்டக்கோவில் எச்.டி.எம்.எல். கோப்புகளையும் எளிதாகத் தேடலாம். எச்.டி.எம்.எல். என குறிப்பிட்டால் பொருத்தமான முடிவுகளைக் காணலாம். புரோகிராமிங் சிறப்பு குறியீடுகளையும் தேடலாம். இதேபோல பிடிஎப் கோப்புகள் அல்லது மின் புத்தகங்களை எதிர்பார்க்கும்போது, கீவேர்டுடன் பிடிஎப் எனும் வார்த்தையைச் சேர்த்துக்கொண்டால் போதும், கோப்புகளை மட்டும் தேடலாம்.

உடனடி பதில்கள்

சில நேரம் ஒட்டுமொத்த இணைய கடலிலும் தேட விரும்பாமல் குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட விரும்பலாம். இதற்கும் டக்டக்கோவில் வழி உண்டு. இந்த வசதி ‘ஐபேங்க்’ என சொல்லப்படுகிறது. தேடல் பதத்துக்கு முன் ஆச்சரியக்குறியைச் சேர்த்து, குறிப்பிட்ட தளத்துக்கான முதல் எழுத்தை குறிப்பிட்டால் போதும், அந்த ஒரு தளத்தில் மட்டும் தேடலாம். உதாரணத்துக்கு !a என்றால் அமேசான் தளத்தில் தேடலாம். இப்படி நூற்றுக்கணக்கான தளங்களில் நேரடியாக தேடும் வசதியை அளிக்கிறது. இதற்கான நீண்ட பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வுப் பிரிவிலும் தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்தச் சேவை மிகவும் பயனளிக்கும். இவ்வளவு ஏன், இந்த வசதியை பயன்படுத்தி கூகுளிலும் தேடலாம்.
‘இன்ஸ்டண்ட் ஆன்சர்ஸ்’ எனும் பெயரில் உடனடி பதில்களையும் டக்டக்கோ வழங்கி வருகிறது. குறிப்பிட்ட பல கேள்விகள் அல்லது பதங்களுக்கு தேடல் வார்த்தையை டைப் செய்ததுமே பொருத்தமான பதிலை காணலாம். கிளிக் செய்யாமலே தேடும் வசதி எனும் வர்ணனையோடு டக்டக்கோ இதை அறிமுகம் செய்தது. ‘கூகுள் நாலெட்ச் கிராஃப்’ எனும் பெயரில் இதுபோன்ற வசதியை வழங்கினாலும், முதலில் டக்டக்கோதான் இதை அறிமுகம் செய்தது.

வீடியோ தேடல்

வீடியோ கோப்புகள் மட்டும்தான் தேவை என்றால், தேடல் பதத்துக்கு முன் வீடியோ என சேர்த்துக்கொண்டால் 28 வீடியோக்கள் வந்து நிற்கின்றன. மேலும் வீடியோக்கள் தேவையெனில் அதற்கான வசதியை கிளிக் செய்யலாம். சமையல் குறிப்பு வீடியோக்கள் என்று குறிப்பிட்டும் தேடலாம். இந்த முடிவுகள் யூடியூப்பை மட்டுமே சார்ந்திருப்பதுதான் ஒரே குறை.
இணையசேவைகளுக்கான கீபோர்டு சார்ந்த குறுக்கு வழிகள் தேவை எனில், சீட்ஷீட் வசதியைப் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு போட்டோஷாப் சீட்ஷீட் என தேடினால் போட்டோஷாப் தொடர்பான குறுக்கு வழிகளைப் பெறலாம். புரோகிராமிங் தொடர்பான தகவல்களையும் எளிதாக தேடலாம்.
டக்டக்கோவில் இன்னும்கூடப் பல அம்சங்கள் இருக்கின்றன. எல்லாம் சரி, கூகுள்போல வருமா எனக் கேட்பவர்களுக்காக கூகுள் தொடர்புடைய சுவாரஸ்யமான தகவல் ஒன்று. கூகுளில் ஏதேனும் பிரச்சினையா எனும் பொருள்பட, ‘ஈஸ் கூகுள் டவுன்’ என கூகுளில் கேட்டால், இல்லை (நோ) என பதில் பளிச் எனத் தோன்றுகிறது.

தற்கொலையை வெல்வோம்!

தி இந்து


ணையம் எனும் ஜன்னல் வழியாகப் பலர் உலகைப் பார்த்து வரும் வேளையில், சிலருக்கு அது இறப்புக்கான வழியைத் திறந்துவிடுகிறது. ‘புளூவேல்’ விளையாட்டு அப்படியான ஒன்று. அந்த விளையாட்டை விளையாடியதால், பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வருகிறது. 2, 4, 8, 10 என்று அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, மனநல ஆலோசகர்கள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பேசிக்கொண்டிருந்த வேளையில், அடுத்த அடியாக வந்தது, அனிதாவின் தற்கொலை! ‘நீட்’ தேர்வுக்கு எதிராகப் போராடிய அனிதாவின் தற்கொலைக்கு ‘மனநல மருத்துவர்களிடம் ஏன் கருத்துக் கேட்கிறீர்கள்’ என்று சிலர் கூறி வரும் வேளையில், தற்கொலைகளின் பின்னணி குறித்து நாம் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

தற்கொலைதான் தீர்வா?

கடந்த சில ஆண்டுகளில், தற்கொலைகள் ஒரு பெரிய பொதுப் பிரச்சினையாகியுள்ளது. இதனால் இந்தியாவில் ஏராளமான மரணங்கள், சமூகப் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள், தற்கொலை எண்ணங்கள் போன்றவை பொதுவாகக் காணப்படுகின்றன.
நாகரிகம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் மனிதன் இன்னும் மாறியதாகத் தெரியவில்லை. அன்று முதல் இன்றுவரை பல்வேறு பிரச்சினைகளுக்கு, தற்கொலைதான் தீர்வாக கருதப்படுகிறது. தற்கொலை செய்துகொள்வோர் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்கூட தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது.

ஒருவர் தற்கொலை மூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார் என்றால், அதைப் பார்த்துப் பலரும் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் அதைப்பற்றி யோசிக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள்.

சமூகத்துக்கும் பொறுப்பு உண்டு

பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் குணம் குறைந்து, தற்கொலைதான் தீர்வு என்ற முடிவுக்கு சிலர் வருகின்றனர். சமூகத்தில் பெரும்பான்மையானோர் இத்தகைய சிந்தனைகளை, நடவடிக்கைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆகவே, இந்த எண்ணங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமலே போய்விடுகின்றன.
ஒருவருக்குத் தற்கொலை எண்ணம் இருப்பதை யாரும் கண்டறிவதில்லை. எனவே அவர் தற்கொலைக்கு முயற்சி செய்யக்கூடும். தற்கொலைகளைத் தடுக்கும் பொறுப்பு மருத்துவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் மட்டுமல்ல, சமூகத்துக்கும் உண்டு. இந்தப் பொறுப்பை நாம் நிறைவேற்றவேண்டுமென்றால், நம்மைச் சுற்றித் தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்களை அடையாளம் காண்பதற்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
பள்ளி மாணவர்கள் முதல் அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள்வரை தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சமீபத்தில் பிஹார் மாநிலத்தின் புக்சார் மாவட்ட நீதிபதி முகேஷ் பாண்டே மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி, முக்கிய பதவி வகிப்பவருக்கும் தற்கொலை எண்ணம் வரக்கூடும் என்பதைப் புரிய வைத்தது.
நவீன காலப் பள்ளிச் சிறுவர்கள், இளைஞர்களுக்கு மைதானம் சென்று வியர்வை சிந்தி விளையாடுதல் என்பது அரிதான விஷயமாக இருந்துவருகிறது. பெரும்பாலும் வீட்டில் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் ஆன்லைனில் பல்வேறு விதமான விளையாட்டுகளை விளையாடிப் பொழுதைக் கழிக்கின்றனர். சில சமயம் உயிரையே கொடுக்கின்றனர். சமீபத்திய உதாரணம் ‘புளூவேல்’.
சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பப்படும் நிகழ்ச்சியில் பிரபலமான நடிகை ஒருவர், காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் காட்சி ஒளிப்பரப்பப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பார்க்கப்பட்ட அந்த நிகழ்ச்சி, தற்கொலை என்ற விதையை அனைவருக்கும் குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மனதில் தூவுவதாக இருந்தது. மனநலம் குறித்த சரியான புரிதலுடன் ஊடகங்கள் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிற தருணத்தில், டி.ஆர்.பி.க்காக சில ஊடகங்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கின்றன.

எப்படித் தடுப்பது?

தற்கொலை எண்ணங்களைக் கையாள்வதற்கு மன தைரியம் தேவை. என்னதான் நேர்மறையான தேர்வுகள் இருந்தாலும்கூட வலிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத தருணம் ஒருவருக்கு வரக்கூடும். ஒருவர் தன் மனக் கட்டுப்பாட்டின் வரம்பை மீறும்போது தற்கொலை எண்ணங்கள் தோன்றும். அதை அவர் கையாள வேண்டும்.
தனிமையில் இருப்பது தற்கொலை எண்ணத்தை தூண்டுவதாக அமையும். எனவே குடும்பத்தாருடன் நேரத்தைக் கழிக்க வேண்டும். நண்பர்களுடன் வியர்வை சிந்தும் அளவுக்கு நன்றாக ஓடியாடி விளையாடவும் வேண்டும். மேலும் எதிர்மறையான எண்ணங்களைப் போக்க சந்தோஷமான எண்ணங்களை மனதில் அதிகமாக அசைபோட வேண்டும். இதனை மேம்படுத்த நேர்மறையான மக்களுடன் பழகி எதிர்மறையாகச் சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கட்டுரையாளர், ஆசிரியர் மற்றும் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருபவர்
தொடர்புக்கு: anandt.tanand@gmail.com

புதன், 13 செப்டம்பர், 2017

சமுசிகாபுரம் ஊர்ப்புற நூலகத்தின் இன்றைய நிலை...




கடந்த 1997-98 - ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுசிகாபுரம் கிராமத்தில் ஒரு ஊர்ப்புறநூலகம்  கட்டப்பட்டது. அதுவரை சத்திரப்பட்டியில் மட்டுமே நூலகம் இருந்து வந்த நிலையில் சமுசிகாபுரம் கிராமத்தி;ல் நூலகம்  அமைக்கப்பட்டது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இப்பகுதி மாணவர்கள், பெண்கள் அனைவரும் வந்து செல்லும் வகையில் அருகிலேயே அமைந்துள்ள இந்நூலகத்தினால் பயனடைபவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் இந்நூலகத்தின் பயனாளியாக அதன் தற்போதைய நிலை கண்டு வருந்துபவர்களில் நானும் ஒருவன்.

இந்நூலகத்தின் மேற்கூரை தற்போது சிதிலமடைந்து, வெளிப்புறத்தில் தாழ்வாரம் விழுந்து விடும் வகையில் உள்ளது.

இதுகுறித்து இந்நூலகத்தின் நூலகர், மேலதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டபோதும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாததால்இந்நூலகத்தைப் புதுப்பிக்க தேவையான நிதிக்காக நம் சமுதாய தொழிலதிபர்களை நாடி உதவி கோருவதைத் தவிர வேறு வழி  தெரியவில்லை.

நம் சமுதாயத்தைச் சேர்ந்த நல்ல நிலையில் உள்ள இளைஞர்கள், தொழிலதிபர்கள், வெளியூரில் அல்லது வெளிநாட்டில் பணிபுரியும் நல் உள்ளங்கள்  மனது வைத்தால் இந்த நூலகத்தை புதுப்பித்து, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் செயல்பட வைக்க முடியும்.

நீங்கள் செய்யும்  ஒரு சிறு உதவி சமுசிகாபுரத்தில் உள்ள நமது மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக பெறிதும் பயனளிக்கும் நூலகத்தைப் புதுப்பிப்பது மட்டுமல்லாமல்எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற முன்னோரின் வாக்குப்படி இறைவன் ஸ்தானத்தில் மதிக்கப்படுவீர்கள்.

கட்டுரையாளர்:  க. சங்கிலிக்காளை
தொடர்புக்கு: 96001 06471  gsraj1979@gmail.com