Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஞாயிறு, 26 மார்ச், 2017

+2க்குப் பிறகு... மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த உடல்நல அறிவியல் படிப்புகள்!



+2க்குப் பிறகு... மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த உடல்நல அறிவியல் படிப்புகள்!



நவீன விஞ்ஞான மருத்துவம் (Modern Scientific Medicine) மற்றும் ஆய்வறிவு மருத்துவம் (Evidence Based Medicine) என்று அழைக்கப்படும் ஆங்கில வழி மருத்துவமே (Allopathy) உலகில் அதிக பயன்பாட்டில் இருந்துவருகிறது. உலக மக்கள்தொகையில் ஆங்கில மருத்துவ முறையிலான மருத்துவர்களின் எண்ணிக்கை சராசரியாக 1.5:1000 எனும் அளவில் இருக்கிறது. இந்திய மக்கள்தொகையில் ஆங்கில மருத்துவர்களின் எண்ணிக்கை 1:1700 எனும் விகிதத்தில் இருந்துகொண்டிருக்கிறது. 

இந்த விகிதத்தை 2031 ஆம் ஆண்டுக்குள் 1:1000 எனும் அளவில் கொண்டுவந்துவிட வேண்டும் என்கிற நோக்கத்துடன் இந்திய மருத்துவக்குழு (Medical Council of India) பல்வேறு புதிய நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனடிப்படையில், பல ஆண்டுகளாகச் செயல்பட்டுவரும் மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புக்கான (எம்.பி.பி.எஸ்) இடங்களின் எண்ணிக்கை அதிகரித்தும், ஆங்கில வழி மருத்துவக் கல்லூரிகள் தொடக்கத்திற்கான கடுமையான விதிமுறைகளில் சில தளர்த்தப்பட்டுப் பல புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதியினை வழங்கியும் இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான இடங்களை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. 

இருப்பினும், இந்தியாவில் இளநிலை ஆங்கிலவழி மருத்துவப் பட்டப்படிப்புக்கான (M.B.B.S) இடங்களின் எண்ணிக்கை இன்னும் குறைவாகத்தான் இருக்கின்றன. ஆங்கிலவழி மருத்துவப் படிப்புகள்: தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்புகளுக்காகத் தொடங்கப்பட்ட, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின்கீழ் இளநிலை ஆங்கில மருத்துவப் படிப்பில் (M.B.B.S) 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2600 இடங்கள், 16 சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் 2110 இடங்கள் என்று மொத்தம் 37 கல்லூரிகளில் 4710 இடங்கள் இருக்கின்றன. 

இளநிலைப் பல் மருத்துவப் பட்டப்படிப்பில்(B.D.S) ஓர் அரசுக் கல்லூரியில் 100 இடங்கள், சுயநிதிக் கல்லூரிகளில் 1710 இடங்கள் என்று மொத்தம் 1810 இடங்கள் இருக்கின்றன. தேசிய தகுதித் தேர்வு: ஆங்கில மருத்துவப் பட்டப்படிப்பு (M.B.B.S), பல் மருத்துவப் பட்டப்படிப்பு (B.D.S) ஆகியவற்றில் ஏதாவதொன்றில் இடம்பிடிக்க +2 தேர்வில் அதிக மதிப்பெண்களைப் பெற்றிடப் போராடிக்கொண்டிருந்த மாணவர்கள், தற்போது தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வினை (National Eligibility and Entrance Test) எழுதி, அதிலும் அதிக மதிப்பெண்களைப் பெற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. 

நுழைவுத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களில் முதன்மை பெற்றவர்களுக்கு மத்திய/மாநில அரசுகளின் இட ஒதுக்கீட்டு நடைமுறையைப் பின்பற்றி  மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும். இரு படிப்புகளிலும் இடம் கிடைக்காத மருத்துவப் படிப்பில் ஆர்வமுடைய மாணவர்கள், ஆங்கில மருத்துவப் பட்டப்படிப்பு (எம்.பி.பி.எஸ்) தவிர்த்த, பிற வழிகளிலான மருத்துவப் பட்டப்படிப்புகளிலோ அல்லது மருத்துவம் சார்ந்த அறிவியல் (Allied Medical Science) பட்டப்படிப்புகளிலோ சேர்ந்து மருத்துவச் சேவையாற்ற முடியும்.

பிற மருத்துவப் பட்டப்படிப்புகள்: ஆங்கில வழி மருத்துவம் (M.B.B.S) மற்றும் பல் மருத்துவம் (B.D.S) ஆகிய இரு இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளைத் தவிர்த்து, ஆயுர்வேதம், ஓமியோபதி, இயற்கை மற்றும் யோகா அறிவியல், சித்தா, யுனானி எனும் ஐந்து வழிகளிலான மருத்துவப் பட்டப்படிப்புகளைப் படித்தும் மருத்துவராகப் பணியாற்ற முடியும். 

தமிழ்நாட்டில் ஆயுர்வேத மருத்துவப் பட்டப்படிப்பிற்கு (Bachelor of Ayurvedic Medicine and Surgery - B.A.M.S) அரசு கல்லூரி ஒன்று (60 இடங்கள்), சுயநிதிக் கல்லூரிகள் ஐந்து (230 இடங்கள்) என்று மொத்தம் ஆறு கல்லூரிகளில் 290 இடங்களும், ஓமியோபதி மருத்துவப் பட்டப்படிப்பிற்கு (Bachelor of Homoeopathic Medicine and Surgery - B.H.M.S) அரசுக் கல்லூரி ஒன்று (50 இடங்கள்), சுயநிதிக் கல்லூரிகள் ஒன்பது (560 இடங்கள்) என்று மொத்தம் பத்துக் கல்லூரிகளில் 610 இடங்களும், இயற்கை மற்றும் யோகா அறிவியல் மருத்துவப் பட்டப்படிப்பிற்கு (Bachelor of Naturopathy and Yogic Sciences - B.N.Y.S) அரசுக் கல்லூரி ஒன்று (60 இடங்கள்), சுயநிதிக் கல்லூரிகள் மூன்று (240 இடங்கள்) என்று மொத்தம் நான்கு கல்லூரிகளில் 300 இடங்களும், சித்தா மருத்துவப் பட்டப்படிப்பிற்கு (Bachelor of Siddha Medicine and Surgery- B.S.M.S) அரசுக் கல்லூரிகள் இரண்டு (160 இடங்கள்), சுயநிதிக் கல்லூரிகள் ஆறு (310 இடங்கள்) என்று மொத்தம் எட்டுக் கல்லூரிகளில் 470 இடங்களும், யுனானி வழி மருத்துவப் பட்டப்படிப்பிற்கு (Bachelor of Unani Medicine and Surgery  B.U.M.S) அரசுக் கல்லூரி ஒன்றில் 60 இடங்களும் என்று ஐந்து வகையான மருத்துவப் பட்டப்படிப்புகளில் மொத்தம் 1730 இடங்கள் வரை இருக்கின்றன. 

மருத்துவம் சார்ந்த அறிவியல் பட்டப்படிப்புகள்: இதுபோல் மருத்துவம் சார்ந்த இளநிலை அறிவியல் படிப்புகளாகச் செவிலியர் பட்டப்படிப்புகள் (B.Sc.-Nursing) 5 அரசுக் கல்லூரிகள், 158 சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 6 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், மேம்பட்ட அடிப்படைச் செவிலியர் பட்டப்படிப்புகள் (Post Basic B.Sc - Nursing) 2 அரசுக் கல்லூரிகள் மற்றும் 66 சுயநிதிக் கல்லூரிகளிலும், மருந்தாளுமைப் பட்டப்படிப்புகள் 2 அரசுக் கல்லூரிகள், 38 சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், இயன்முறை மருத்துவப் பட்டப்படிப்புகள் (Bachelor of Physiotherapy - B.P.T) 2 அரசுக் கல்லூரிகள், 29 சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 4 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும், தொழில்வழி மருத்துவப் பட்டப்படிப்புகள் (B.O.T) 2 சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 3 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் இடம் பெற்றிருக்கின்றன. இந்த மருத்துவத் தொழில் முறைப் படிப்புகளில் 10,000 இடங்கள் வரை இருக்கின்றன.  

இளநிலை அறிவியல் படிப்புகள்: பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் பல்வேறு தலைப்பு களில் இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. அவை: Accident & Emergency Care Technology, Audiology & speech Language Pathology, Cardiac Technology, Cardio Pulmonary Perfusion Care Technology, Critical Care Technology, Dialysis Technology, Neuro Electrophysiology, Medical  Laboratory Technology, Medical Sociology, Nuclear Medicine Technology, Operation Theatre & Anaesthesia Technology, Optometry, Physician Assistant, Prosthetics&Orthotics, Radiology Imaging Technology, Radiotherapy Technology, Medical Record Science, Respiratory Therapy. இந்தப் பாடப்பிரிவுகளிலும் 5,000 இடங்கள் வரை இருக்கின்றன. 

மருத்துவப் பதிவேட்டு அறிவியல் பட்டப்படிப்பு (Bachelor of Medical Record Science - B.M.R.Sc.) ஒரு கல்லூரியிலும், மருத்துவப் பரிசோதனைத் தொழில்நுட்பப் பட்டப்படிப்பு (Bachelor of Science in Medical Laboratory Technology - B.Sc.(MLT)) ஒரு கல்லூரியிலும், பார்வை அளவையியல் பட்டப்படிப்பு (Bachelor of Science in Optometry - B.Sc.(Optometry)) ஒரு கல்லூரியிலும் இடம்பெற்றிருக்கின்றன. இவற்றில் 100 இடங்கள் வரை இருக்கின்றன. இதுபோல் அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவம் தொடர்பான பட்டயப்படிப்புகளும், Dental Hygienist, Dental Mechanics, Dental Operating Room Assistant போன்ற பல் மருத்துவம் தொடர்புடைய சில படிப்புகளும்கூட இருக்கின்றன. 

ஆங்கில மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப்படிப்புகளில் இடம் கிடைக்காதவர்கள், மேற்காணும் பிற வழிமுறைகளிலான மருத்துவப் படிப்புகள், மருத்துவம் சார்ந்த உடல்நல அறிவியல் படிப்புகளில் தங்களுக்கு ஏற்ற படிப்பாக ஒன்றினைத் தேர்வு செய்து, படித்து முடித்து உடனடியாக வேலைவாய்ப்பைப் பெறமுடியும். 

+2 தேர்வு எழுதி முடித்ததும் தேர்வு முடிவுக்காகக் காத்திருக்கும்போதே மேற்காணும் மருத்துவம் சார்ந்த தொழில்முறைப் படிப்புகள், இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் எந்தக் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கின்றன? மாணவர் சேர்க்கை நடைமுறைகள் என்ன? என்பன போன்ற மேலும் கூடுதல் தகவல்களை அறிந்து கொள்ளத் தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் https://www.tnmgrmu.ac.in எனும் இணையதள முகவரிக்குச் செல்லலாம் அல்லது அருகிலுள்ள அரசு அல்லது சுயநிதி மருத்துவக் கல்லூரி ஒன்றிற்கு நேரில் சென்று தகவல்களைப் பெறலாம்.                

நிகர்நிலைப் பல்கலைக்கழக மருத்துவப் படிப்புகள்

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழகம், எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் உள்ளிட்ட பத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் ஆங்கில மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான இடங்கள் இருக்கின்றன. நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் இருக்கும் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான இடங்களில் சேர்க்கை பெறுவதற்கும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் (National Eligibility and Entrance Test) தகுதிக்குரிய மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. 

இதன் மூலம், தகுதியுடையவர்கள் மட்டுமே மருத்துவப் படிப்புகளில் இடம்பெற முடியும் எனும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான கட்டணம் குறிப்பிடத்தக்க அளவு குறையும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்று கல்வியாளர்கள் கருதுகின்றனர். நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செவிலியர், மேம்பட்ட அடிப்படைச் செவிலியர், இயன்முறை மருத்துவம், தொழில்வழி மருத்துவம், மருந்தாளுமை உள்ளிட்ட இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகள் இடம்பெற்றிருக்கின்றன. இதுபோல் பல்வேறு தலைப்புகளிலான மருத்துவம் சார்ந்த இளநிலை அறிவியல் பட்டப்படிப்புகளும், பட்டயப்படிப்புகளும், பல்வேறு சான்றிதழ் படிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. இப்படிப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்து மருத்துவத்துறையில் உடனடி வேலைவாய்ப்பைப் பெறமுடியும்.

+2க்குப் பிறகு... கலை - அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட்?



+2க்குப் பிறகு... கலை - அறிவியல் படிப்புகளில் எது பெஸ்ட்?






+2க்குப் பிறகு உயர்படிப்பு என்றால் எஞ்சினியரிங்கும், மருத்துவமும்தான் என்ற நிலமை கடந்த சிலஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றம் கண்டது மறுப்பதற்கில்லை. நான்காண்டுகள் எஞ்சினியரிங் படித்துவிட்டு, படிப்புக்குத் தொடர்பில்லாத நிறுவனங்களில் எல்லாம் நேர்காணலுக்குக் கால்கடுக்க நின்றுகொண்டிருக்கும் மாணவர்களைப் பார்த்து பெரும்பாலான மாணவர்கள் கலை அறிவியல் படிப்புகள் பக்கம் திரும்பிய வரலாறும்கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்துள்ளன.

கலை அறிவியல் படிப்பைத் தேர்வு செய்யும் முன்னர் எத்தனை ஆண்டுகளில் வேலைக்குச் செல்ல வேண்டும், அடுத்து முதுகலைப் படிப்பைத் தொடர்வதா அல்லது ஆராய்ச்சிப் படிப்பா எனப் பல விஷயங்களைத் திட்டமிட்டு அதற்கான வாய்ப்புள்ள படிப்பை தேர்வுசெய்ய வேண்டும். கலை அறிவியல் படிப்புகளுக்கு உள்ள வாய்ப்புகள் குறித்து விரிவாகப் பேசுகிறார் கல்வியாளர் நஞ்சுண்டேஸ்வரன். “கலை அறிவியல் படிப்பில் பொறியியல் படிப்புக்கு இணையான சம்பளம் மற்றும் வளர்ச்சிக்கான வாய்ப்புகளைக்கொண்டிருப்பது வணிகவியல் படிப்பு. 

இந்திய அளவில் இன்னும் சில ஆண்டுகளில் 6 லட்சம் ஆடிட்டர்கள் தேவைப்படுகின்றனர். +2 முடித்தவர்கள் பி.காம்., பி.காம்-சிஏ மற்றும் பிபிஎம் பட்டம் படித்தவர்கள் ஆடிட்டிங் துறையில் படிப்பைத் தொடரலாம்.சி.ஏ. போன்ற படிப்புகளையும் படிக்கலாம்.கம்பெனி செகரெட்டரி படிப்புக்கும் தேவை அதிகம் இருக்கிறது. ரூ.40 கோடிக்கும் அதிகமாக வணிகம் செய்யும்நிறுவனங்கள் கண்டிப்பாக ஒரு ஆடிட்டரையும், கம்பெனி செகரெட்டரியையும் நிறுவனத்தில் நியமனம் செய்தே ஆக வேண்டும். 

இந்தப் படிப்புகளுக்குக் கடும் உழைப்பும், ஆர்வமும் கட்டாயத் தேவை’’ என்று கூறும் அவர் மேலும் சில பட்டப்படிப்புகள் பற்றி சொல்வதை இனி பார்ப்போம்...  ஆங்கில இலக்கியத்துக்கு உலகளாவிய வாய்ப்புகள் காத்திருக்கின்றன. நன்கு ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குச் சீனா மற்றும் ஜப்பானில் பெரும் வரவேற்பு உண்டு. மொழிப்பாடத்தில் வெளிநாட்டு வேலை என்று முடிவு செய்துவிட்டால் பட்டப்படிப்பைத் தொடரும்போதே அதற்குத் தேவையானஅத்தனை திறன்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். 

இப்பிரிவில் முதுகலைப் பட்டம் முடிப்பவர்களுக்கு ஆசிரியர் பணி வாய்ப்புகள் உள்ளன. கம்ப்யூட்டர் சயின்ஸ் துறையில் பி.எஸ்.சி.கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் எம்.சி.ஏ பட்டம் பெற்றவர்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் உண்டு. கொஞ்சம் அட்வான்ஸ்டு சான்றிதழ் படிப்புகளையும் படித்துவைத்துக்கொண்டால் வேலை நிச்சயம். சிவில் சர்வீஸ் தேர்வு மற்றும் அரசுப் பணியாளர் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கும் கலை அறிவியல் படிப்புகள் கைகொடுக்கின்றன. 

கலை அறிவியலில் தனக்குப் பிடித்த ஏதாவது ஒரு துறையைத் தேர்வு செய்து படிப்பதுடன் போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் இணைந்து அரசு வேலைக்கான தேர்வுகளுக்கும் தயாராகலாம். சுற்றுலாத்துறை மற்றும் ஹோட்டல் துறை நவீனமடைந்து வருகிறது. இதில் இன்றைய மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளும் பெருகி வருகிறது. இவர்கள் வெளிநாட்டு நிறுவனங்களிலும் பணிபுரிய முடியும். நல்ல கல்வி நிறுவனங்களாகத் தேர்வு செய்து படிக்கலாம் நுண்ணுயிரியல் மற்றும் உயிர் வேதியியல் துறைகளில் இளங்கலைப் பட்டம் முடிப்பவர்கள் அடுத்த கட்டமாக வெளிநாடுகளில் ஸ்காலர்ஷிப்புடன் ஆராய்ச்சிப் படிப்பினைத் தொடரலாம். 

ஊடகவியல் படிப்புகளுக்கும் தற்போது வேலை வாய்ப்புகள் அதிகரித்துவருகின்றன. விஸ்காம் மற்றும் ஜர்னலிச படிப்புகளையும் ஆர்வம் உள்ள மாணவர்கள் தேர்வு செய்யலாம். சூழலியல் சுற்றுலா, இயற்கை வேளாண்மை, சூழலியல் புகைப்படக் கலை எனச் சூழலியல் சார்ந்த பல படிப்புகள் புதிதாக வந்துள்ளன. அவற்றையும் தேர்வு செய்து படிக்கலாம். 

ஆர்ட்ஸ் அண்டு சயின்ஸ் படிப்புகள் கடல் போல விரிந்து கிடக்கின்றன. மதிப்பெண் மற்றும் திறமை, விருப்பம் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டப்படிப்பைத் தேர்வு செய்யலாம். எந்தக் கல்லூரியில் படித்தால் வாய்ப்புகள் கிடைக்கும் என்பதையும் தேட வேண்டும். கலை அறிவியல் படிப்புடன் துறை சார்ந்து கம்ப்யூட்டர் சான்றிதழ் படிப்புகளையும் முடித்துவைத்தால் இளங்கலைப் பட்டம் முடித்தவுடன் வேலை வாய்ப்புகளைப் பெறமுடியும். 

டெக்ஸ்டைல் துறையில் சாதிக்க நினைப்பவர்களுக்கும் புதுமையான படிப்புகள் காத்திருக்கின்றன. முன்னணி நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெற டெக்ஸ்டைல்ஸ் சார்ந்த படிப்புகளைத் தேர்வு செய்யலாம். அப்பேரல் பிராண்டிங் எனப்படும் படிப்பின்கீழ் விற்பனை, மேம்பாடு, தர உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் படிப்புகள் உள்ளன. மத்திய ஜவுளித் துறையின் கீழ் இயங்கும் ஆயத்த ஆடைகள் முன்னேற்றக் குழுமத்தின் நிதியுதவியுடன் படிக்கலாம். 

ஆங்கில மொழித்திறன் கொண்டவர்கள் பிசினஸ் புராசஸ் அவுட்சோர்சிங் (பி.பி.ஓ.) நாலட்ஜ் புராசஸ் அவுட்சோர்சிங்(கே.பி.ஓ), லீகல் புராசஸ் அவுட்சோர்சிங் (எல்.பி.ஓ.) ஆகிய படிப்புகளை முடித்து உடனடி வேலை வாய்ப்பைப் பெறலாம். மத்திய அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் குறைந்த கட்டணத்தில் இதுபோன்ற படிப்புகளை வழங்குகிறது. 

வணிகவியல் படிப்புகள்
சார்ட்டட் அக்கவுண்டண்ட்,காஸ்ட் மேனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட், கம்பெனி செக்கரெட்டரி, பி.காம்., பி.காம்.டேக்சேஷன்,பி.காம் டிராவல் அண்டு டூரிசம், பி.காம். பேங்க் மேனேஜ்மெண்ட், பி.காம் புரொபஷனல்,பி.பி.ஏ., பி.பி.எம்., பேச்சுலர் ஆஃப் பினான்சியல் மார்க்கெட்ஸ், பேச்சுலர் இன் மேனேஜ்மெண்ட் ஸ்டடீஸ், பேச்சுலர் இன் அக்கவுண்டிங் அண்டு பைனான்ஸ், சர்ட்டிபைடுஸ்டாக் புரோக்கர் மற்றும் இன்வெஸ்ட்மெண்ட் அனலிஸ்ட், சர்ட்டிபைடு - பினான்சியல் அனலிஸ்ட், பினான்சியல் பிளானர், சர்ட்டிபைடு இன்வெஸ்ட்மெண்ட் பேங்கர் ஆகிய படிப்புகள் உள்ளன. இவற்றை முடித்துவிட்டு வேலைக்கும் செல்லலாம். முதுகலைப் படிப்பையும் தொடரலாம். 

அறிவியல் படிப்புகள்
பி.எஸ்சி., இயற்பியல்,வேதியியல், உயிரியல், தாவரவியல், கணிதம், கணினி அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவியல், மனையியல், வேளாண் அறிவியல், தோட்டக்கலை, வனவியல், செரிகல்சர் உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் உள்ளன. 

மேலாண்மைப் படிப்புகள் 
பிசினஸ் மேனேஜ்மெண்ட்,பேங்க் மேனேஜ்மெண்ட், ஈவன்ட் மேனேஜ்மெண்ட், ஹாஸ்பிடல் மேனேஜ்மெண்ட், ஹோட்டல் மேனேஜ்மெண்ட், ஹியூமன் ரிசோர்ஸ் மேனேஜ்மெண்ட், லாஜிஸ்டிக் அண்டு மேனேஜ்மெண்ட் படிப்புகள் உள்ளன. 

ஹியுமானிட்டி படிப்புகள்
விளம்பரம், பி.ஏ. ஜெனரல்,கிரிமினாலஜி, பொருளியல், ஃபைன் ஆர்ட்ஸ், வெளிநாட்டு மொழிகள், ஹோம் சயின்ஸ்,இன்டீரியர் வடிவமைப்பு, ஊடகவியல், நூலக அறிவியல், உடற்கல்வியியல், அரசியல் அறிவியல், உளவியல், சோசியல் வொர்க், சோசியாலஜி, டிராவல் மற்றும் டூரிசம் ஆகிய படிப்புகள் உள்ளன.நல்ல படிப்பைத் தேர்வுசெய்வது எவ்வளவு முக்கியமோ, அந்த அளவுக்கு நல்ல கல்லூரியையும் தேர்வு செய்வது முக்கியம். 

உங்கள் எதிர்காலம் பிரகாசமாக வாழ்த்துகள்!                                                                                                                                        




வளையல்காரர் வராத தெரு!

Return to frontpage



ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத வணிகச் செயல்பாடுகளை ஊக்குவிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பொருளாதார நிபுணர்கள் இதுபற்றி விவாதிக்கிறார்கள். ஆனால், 50 வருடங்களுக்கு முன்னால் ரொக்கப் பரிவர்த்தனை இல்லாத வணிகம் தமிழகக் கிராமங்களில் வழக்கில் இருந்தது.

அப்போதெல்லாம் கிராமத்துத் தெருக்களில் தலைச் சுமையிலும், தள்ளுவண்டியிலும் ஈடுபட்டவர்கள், காசு பணத்தைக் கண்ணால் பார்த்ததில்லை. எல்லாம் தானியங்களாகவே பரிமாறிக்கொள்ளப்பட்டன.

வியாபாரி அல்ல கலைஞர்

மோர் விற்கிற பெண்மணி, வீட்டுக்கு வீடு மோர் அளந்து ஊற்றிவிட்டு ஒரே ஒருபிடி அரிசி வாங்கிச் செல்வார். இதைப் போலவே செவ்வாய்க் கிழமைச் செட்டியார் (துணிமணிகள் கொண்டுவந்து விற்பவர்) வாணியச் செட்டியார் (எண்ணெய் விற்பவர்) வளையல் செட்டியார் (வளையல் வியாபாரி) என்று பலரும் பொருட்களைத் தந்துவிட்டு அரிசியாகவும், கம்பு, கேழ்வரகு, தானியங்களாகவும், காய்கறிகளாகவும் வாங்கிச் செல்வது உண்டு. இவ்வாறு விற்பவர்களைச் செட்டியார் என்ற சொல்லால் விளிப்பார்கள். அது சாதியைக் குறிப்பதில்லை.

வளையல் செட்டியார் வெறும் வியாபாரி மட்டும் அல்லர். அழகியலும் ஆன்மிகமும் ஊடாடும் கலைஞர் கள் அவர்கள். அவர்களின் தோற்றமே அலாதியானது.

தொளதொள ஜிப்பா, தொங்கு மீசை, முண்டாசு, வாய்நிறைய வெற்றிலை, உடைந்த வளையலாக வளைந்த கால், தாங்கித் தாங்கி நடந்து வருவார். நெற்றியில் நாமம், ஒரு தோளில் வளையல்களின் மலாரம், (கயிற்றில் கோத்த வளையல்கள்) மறு தோளில் சதுர வடிவப் பெட்டியை வெள்ளைத் துணியில் வைத்துத் தனியாகத் தொங்கவிட்டிருப்பார்.

வளையல் வாசனை!

வளையல் பெட்டியைத் திறப்பார். புத்தம் புது வளையல்களிலிருந்து ஒருவாசம் வீசும். என்ன பொண்ணே செளக்கியமா என்பார் சிரித்தபடி. வாயிலிருந்து வாசனைப் புகையிலை கமகமக்கும்.

காகித அட்டைக் குழாய்களில் கலர் கலராக மின்னும் கண்ணாடி வளையல்கள். மோகனமான மோஸ்தர்களில் டால் அடிக்கும். வானவில்லால் செய்தது போன்ற வர்ண விசித்திரங்கள். கையில் அப்படியே ஒரு கொத்து எடுத்துக் காட்டுவதே ஒரு அழகுதான்!

கையைத் தொடும் உரிமை

பெண்களைத் தொட்டு வளையல் அணிவிக்கும் உரிமை அவருக்கு மட்டுமே உண்டு. ஆணாதிக்கமும் பெண்கள் மீதான சந்தேகமும் புரையோடிப்போன சமூகத்தில் இது எப்படி அனுமதிக்கப்பட்டது என்பது ஒரு புதிர்தான்.

பெண்களின் கையைப் பிடித்து, விரல்களை அப்படியே ஒன்றுசேர்த்து வாழைப்பூ மொக்காகப் பிடித்துக்கொள்வார். பிறகு, கணுக் கையை நீவி வலிக்காமல் வளையலைப் போட்டுவிடுவார். என்ன லாவகம்.. என்ன நளினம்!

பிடி சற்று இறுகி, வளையல் போடும்போது வலித்தால் நிறுத்திவிட்டு, ‘வலிக்காமல் போட்டுவிடுகிறேன் அம்மா’ என்று தெலுங்கில் கொஞ்சிக் கொஞ்சிப் பேசி வளையலைப் போட்டுவிடுவார்.

உடைந்த வளையலுக்குக் காசில்லை

வளையல்கள் அணிவிக்கும்போது உடைந்து விட்டால், அந்த வளையல்களுக்குக் காசு வாங்க மாட்டார். அறிமுகம் இல்லாத பெண்கள் ரொம்பவே கூச்சப்படுவார்கள்.

அப்போது சொல்வார்.. எதற்காகப் பயப்படுகிறாய் அம்மா? சிவபெருமான் திருவிளையாடல் புராணத்தில் வளையல்காரராக வந்து, பெண்களுக்கு வளையல் போட்டுவிடுவார் தெரியுமா? என்னை யார்னு நெனச்சே? சாட்சாத் அந்த சிவனேதான்! என்னை சிவனா நெனச்சுக்கோம்மா என்பார். அங்கிருக்கும் பெண்களின் கண்கள் தளும்பிவிடும்.
ஆளாளுக்குப் போட்டி போட்டுக்கொண்டு கை நீட்டுவார்கள்.

வளையல் சத்தம்

வளையல் சத்தத்துக்குக் கிறங்காத மாப்பிள்ளைகள் உண்டா? வளையல் சத்தம் என்றதுமே வண்ணதாசன் கவிதைதான் நினைவுக்கு வருகிறது.

“ஒண்டுக் குடித்தனக்கார
கூட்டுக் குடும்பஸ்தன்
கண்டுபிடித்தது
ரப்பர் வளையல்.”

வளைகாப்பின்போது முதலில் அரக்கு வளையல்தான் போடுவார்கள். அப்புறம் வேப்பமர ஈர்க்குகளில் வளையல்செய்து அணிவிப்பார்கள். பிறகுதான் கண்ணாடி வளையல்கள், பிறகு வெள்ளி, பொன் வளையல்கள் அணிவிப்பார்கள். வயிற்றிலிருக்கும் குழந்தை, தாயின் கையில் கலகலக்கும் வளையல் சத்தம் கேட்டுச் சிரிக்குமாம்!

பிறந்த குழந்தையின் கைக்கு திருஷ்டிப் பரிகாரமாக கருப்பு - வெள்ளை நிற வளையல்கள் போடுவது உண்டு. பால்பாசி வளையல், வசம்புத் துண்டுகளால் ஆன வளையல் என்று பிஞ்சுக் குழந்தையின் கைகளை அலங்கரிக்கும் வளையல் ஒவ்வொன்றுக்கும் ஒரு அபூர்வ வாசனை.. அழகு!

நாற்று நடும் பெண்கள் வளையல்களுடன் வேலை செய்யும்போது, பூச்சிப் பொட்டுகள் ஓடிப்போகும் என்பதால் கையிலிருந்து கழற்ற மாட்டார்கள். நெல் குத்தும்போது கழற்றிவைத்து விடுவார்கள்! மெட்டி ஒலியும், வளையல்களின் கிணுகிணுப்பும், கொலுசுச் சத்தமும் கேட்ட வீடுகளில் வசிக்க நேர்ந்தவர்களுக்கு வாழ்க்கை சுகானுபவமாக இருந்தது! இப்போதெல்லாம் தெருக்களில் வளையல்காரர்கள் வருவதில்லை. அவரை எதிர்நோக்கிக் காத்திருக்கும் பெண்களும் இல்லை.

வாழ்க்கை தொலைத்துவிட்டது வளையல் வம்சத்தை!

- தஞ்சாவூர்க் கவிராயர் தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

ஏழைகளை ஒழிக்கிறதா இந்தியா! - ஆனந்த விகடன்

vikatan.com

வர்கள் முதலில் கல்வியில் கைவைத்தார்கள். நாம் தடுக்கவில்லை; அதன் பிறகு தனியார் பள்ளிகளே தரமானவை என நம்பத் தொடங்கினோம். அவர்கள் வேலைவாய்ப்புகளைக் கைப்பற்றினார்கள்; நிரந்தரம் இல்லை என்றாலும், நிறைய சம்பளம் கிடைக்கிறதே என நிம்மதி அடைந்தோம். அவர்கள் மருத்துவத் துறைக்குள் நுழைந்தனர்; சுகாதாரம் சுகமான அனுபவமாக மாறிவிட்டதாகச் சிலாகித்தோம்.
அவர்கள் நமது நிலங்களைக் கைப்பற்றினார்கள்; வளங்களைச் சூறையாடினார்கள்; அதுதானே வளர்ச்சி என வேடிக்கை பார்த்தோம். கூடங்குளம், நியூட்ரினோ போன்ற ஆபத்தான திட்டங்களை நம் தலையில் கட்டினார்கள்; அதுதானே முன்னேற்றம் என வாதிட்டோம். அவர்கள் நெடுஞ்சாலை நெடுக நின்றுகொண்டு பணம் வசூலித்தனர்;  `என் நாட்டில் நான் பயணிக்க எதற்குக் காசு கொடுக்க வேண்டும்?’ என நாம் கேட்கவே இல்லை. அவர்கள் பெட்ரோல், டீசல் விலையை எத்தனை முறை உயர்த்தினாலும் அது லாரி டிரைவர்களின் பிரச்னை என்பதாக நினைத்துக்கொண்டோம். அவர்கள் சிலிண்டருக்கான விலையை உயர்த்திவிட்டு, அந்தப் பணத்தை `உங்கள் அக்கவுன்ட்டில் போடுவோம்’ என்றார்கள். பலருக்கு அப்படி ஒரு சம்பவமே நடந்திருக்காது; சிலருக்கு எப்போதாவது சாத்தியப்பட்டிருக்கும். 

ஆதார் எண் என்ற ஒன்று, நமது ஒட்டுமொத்த இயக்கத்தையும் முடக்கவும் தீர்மானிக்கவும் போகிறது என மனித உரிமை ஆர்வலர்கள் ஆரம்பத்திலேயே கதறினார்கள். இவர்களுக்கு வேறு வேலையே இல்லை எனத் திரும்பிக் கொண்டோம்; அவர்கள் கறுப்புப் பணத்தை ஒழிக்கப்போகிறோம் எனச் சொல்லி வங்கிகளுக்கும் ஏ.டி.எம்-களுக்குமாக அலைக்கழித்தபோதும், நம் பணத்தை நாம் எடுக்க முடியாமல் அல்லாடிய போதும், கறுப்புப் பணம் ஒழியவே இல்லை என்ற உண்மை தெரிந்துவிட்டபோதும், வங்கியில் பணத்தை வைப்பதற்கும், ஏ.டி.எம்-மில் பணத்தை எடுப்பதற்கும், புதிதுபுதிதாகக் கட்டுப்பாடுகள் வந்துகொண்டே இருக்கிறபோதும், அந்த உச்சகட்டத் துன்புறுத்தல்களைச் சகித்துக் கொண்டே இருக்கிறோம். 

கடைசியாக, அவர்கள் கடந்த சில ஆண்டுகளாக நகர்ந்து நமது உணவுத் தட்டைப் பறிக்க வந்திருக்கிறார்கள். நமது அடுப்பங்கரைக்குள் அடாவடியாக நுழைந்திருக்கிறார்கள். இதுவரை நடந்த எந்த அநீதியையுமே தடுக்க முடியாத நம்மால், இழப்பதற்கு எதுவும் இல்லாத நம்முடைய கடைசிச் சொட்டு உதிரத்தையும் உறிஞ்சும் இந்த அநீதியை மட்டும் தடுத்துவிட முடியுமா என்ன?

இங்கே `அவர்கள்’ என்பது மக்கள் நலனுக்கு எதிராகவே சிந்திக்கும் அரசையும் அவர்களை இயக்கும் பன்னாட்டு நிறுவனங்களையும் குறிக்கிறது. இங்கே `நாம்’ என்பது நேரடியாகப் பொதுமக்களாகிய நம்மைத்தான் குறிக்கிறது. 

`யார் செத்தால் எனக்கு என்ன?’ என்று இருப்பதெல்லாம் மக்களாகிய நம்முடைய பழைய ஸ்டைல். புதியது எதுவெனில், `நான் செத்தால் உனக்கு என்ன?’ என்று இருப்பது. `உன்னை நோக்கித்தான் அந்த ஆபத்து வந்துகொண்டிருக் கிறது’ என்று கத்துபவர்களையும், `உன் தலையில்தான் அந்த இடி இறங்கப்போகிறது’ என எச்சரிப்பவர்களையும் தேசவிரோதியாகப் பார்க்கப் பழகிவிட்டோம்.

அதனால் என்ன என்று அலட்சியமாகவும், அப்படி எல்லாம் இருக்காது என்ற சமாளிப்பு களாலும், எல்லாம் நன்மைக்கே என அறிவின்மை யாலும், பிரச்னைகளைப் புறந்தள்ளிவிடுவதில் இந்திய மக்களாகிய நம்மை மிஞ்ச ஆளே இல்லை என அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் துணிந்து எல்லா அநீதிகளையும் நிகழ்த்துகின்றனர். எவ்வளவு அடித்தாலும் தாங்கும் மிக நல்லவர்களாக நம்மை நாம் அமைதி காத்துக்கொண்டே இருக்கிற வரை, எந்த அடிகளுக்கும் முடிவே இருக்கப் போவதில்லை.   

நம்புங்கள்... இந்தியா அடிப்படையில் ஏழைகளின் நாடு. `மக்கள்தொகையில் சுமார் 30 சதவிகிதம் பேர் மாதம் 1,000 ரூபாய்க்கும் குறைவாகச் சம்பாதிக் கிறவர்கள். 30 கோடி பேருக்கும் அதிகமானோர் நாள் ஒன்றுக்கு 25 ரூபாய்கூட சம்பாதிப்பதில்லை’ என அரசின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. பலரின் கைகளிலும் செல்போன் இருப்பதைவைத்து இந்தியாவைப் பணக்காரர்களின் நாடு என நாம் புரிந்துகொள்ளக் கூடாது. அரசு எதை மலிவாகக் கொடுக்கிறதோ, எதைப் பரவலாகக் கிடைக்கச் செய்கிறதோ அதை வாங்கி வைத்துக்கொள்வது மக்களின் வழக்கம்... அது மதுவாக இருந்தாலும் செல்போனாக இருந்தாலும். இங்கே மலிவு விலையில் செல்போனும் இலவசமாக இணைய வசதியும் கிடைக்கிறது. அதனால் ஏறக்குறைய அது எல்லோர் கைகளிலும் காணக் கிடைக்கிறது.  இதைவைத்து மக்கள்  நிறைய சம்பாதிக்கிறார்கள் என்றோ, மூன்று வேளைகளும் நல்ல உணவு உண்கிறார்கள் என முடிவுசெய்தால், அதைவிட முட்டாள்தனம் வேறு எதுவும் இல்லை. 

வளரும் நாடு, வல்லரசுக் கனவு என்ற மாயைகளை எல்லாம் ஓரம் வைத்துவிட்டு நாம் உண்மையைப் பேச வேண்டும். பட்டினிச் சாவுகளும் பசித்திருக்கும் வயிறுகளும் நிறைந்திருக்கும்போது, இந்தியா ஒருபோதும் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க முடியாது. 

1965-ம் ஆண்டில் தேசிய உணவுக்கொள்கையில் ஒரு கூறாக, அனைவருக்குமான பொது விநியோக முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி வறுமையில் வாடும் மக்களுக்கு உணவுக்கான உத்தரவாதம் கிடைத்தது. `நாடு முழுவதிலும் இருந்து உணவு தானியங்களை விவசாயிகளிடம் கொள்முதல் செய்து, அவற்றை மாநிலங்களுக்குப் பிரித்துத் தருவதிலும் `தகுதி வாய்ந்த’ ஏழைகளுக்கு அதைக் கொண்டுசேர்ப்பதிலும் சிக்கல்கள் இருக்கின்றன’ என்று அப்போதைய மத்திய அரசு கருதியது.

இந்தக் கருத்து வளர்ந்து அதன் அடிப்படையில் 90-களின் இறுதியில்  ஏழைகள் அனைவருக்குமானதாக இருந்த பொது விநியோக முறையை (யுனிவர்சல் பப்ளிக் டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம்) ‘நல்ல’ ஏழைகளுக்கானதாக மடைமாற்றும் வகையில் `டார்கெட்டட் பப்ளிக் டிஸ்ட்ரிப்யூஷன் சிஸ்டம்’ உருவாக்கப்பட்டது. அதன்படி ஏழைகள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் என்றும் மேல் என்றும் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஏழைகளை ஒழிக்கும் நோக்கத்தோடு 90-களில் ஊன்றப்பட்ட அந்த விஷ விதை, கால்நூற்றாண்டு காலத்தில் ஆட்சியில் அமர்ந்த கூட்டணி மற்றும் பெரும்பான்மை அரசுகளால் கிடுகிடுவென வளர்க்கப்பட்டு, இன்று உணவு மானியத்தையே முற்றிலுமாக அழித்தொழிக்கும் அவலத்தை எட்டியிருக்கிறது. ரேஷன் கடைகளில் பொருளற்று மக்கள் அல்லாடுவதை, அரசு மக்கள் மீது தொடுக்கும் உணவுப் பறிப்புப் போரின் இறுதிக்கட்டமாகக் கருதலாம். 

வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே மானிய விலையில் அரிசியும் கோதுமையும் கிடைக்கச் செய்தது. மற்றவர்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட பொருள்களை மானியத்துக்கு அதிகமான / சந்தைக்குச் சற்று குறைவான விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது. இதன் பிறகு, பட்டினிச்சாவுகளும் சத்துக்குறைபாடும் அதிகரித்தன. மாதம்தோறும் ஆயிரக்கணக்கானக் குழந்தைகள் உயிரிழக்கும் கொடுமை நடந்தது. பல லட்சம் குழந்தைகள் அரைப்பட்டினியில் கிடந்து நோஞ்சானாகின. இதற்குப் பிறகு, சர்வதேச அளவில் பட்டினி நிறைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னேறியது. மக்கள் நலனில் அக்கறைகொண்ட அரசாக இருந்திருந்தால், தான் எடுத்த முடிவு தவறானது என அப்போதே திருத்திக் கொண்டிருக்கும்.  ஆனால், நாம்தான் அந்த நல்வாய்ப்பைப் பெற்றவர்கள் இல்லையே!   

கண்களைச் சுருக்கிக்கொள்வதால் பார்க்கும் பொருளின் அளவு சிறியதாகிவிடாது அல்லவா!  ஏழைகளைக் குறுகிய பார்வையோடு அணுகி, எண்ணிக்கையைக் குறைத்துவிட முற்பட்டது மத்திய அரசு. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வறுமைக்கோட்டுக்கான அளவுகோல் 20 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டு அது கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டது. உச்ச நீதிமன்றம் இந்த அளவீட்டை ஏற்க மறுத்தவுடன், அது 25 ரூபாயாகி, பின்னர் 27 ரூபாயாக உயர்த்தப்பட்டது. தற்போதைய பா.ஜ.க அரசு கிராமப் பகுதியில் ஒரு நாளைக்கு 32 ரூபாய்க்கும் மேல், நகர்ப்புறத்தில் 47 ரூபாய்க்கும்மேல் சம்பாதிப்பவர்களை வறுமைக் கோட்டைக் கடந்தவர்களாக நிர்ணயித்துள்ளது. 27 ரூபாயாக இருந்தாலும், 47 ரூபாயாக ஆக்கப் பட்டாலும், இரண்டு அரசுகளின் நோக்கமும் ஏழைகளை அழித்தொழிக்கும் ஒற்றை லட்சியம்தான் என்பதை, நடக்கும் கொடூரங்கள் உணர்த்துகின்றன. 

காங்கிரஸ் அரசால் கொண்டுவரப்பட்ட தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், நாடு முழுவதும் சுமார் 11 கோடி பேராக இருந்த குடும்ப அட்டை தாரர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்கும் சதியைக்கொண்டிருந்தது. ஏழைகளை கிராமம் - நகரம், வறுமைக்கோட்டுக்குக் கீழ் / மேல் எனப் பிரித்ததும் போதாமல், முன்னுரிமை அளிக்கத்தக்கவர்கள், பொதுவானவர்கள் என ஏகப்பட்ட பிரிவினைகளைக் கொண்டு வதைத்தது. இந்தச் சட்டத்தை நாடு முழுவதும் எல்லா மாநிலங்களும் ஏற்றுக்கொண்டு செயல்படுத்திய நிலையில், நலத்திட்டங் களுக்கு பெயர்போன தமிழ்நாடும் கேரளாவும் மட்டும் பொது விநியோக முறையைப் பழைய வழக்கப்படியே தொடர்ந்தன. 

வெளிச்சந்தையில் உணவுப் பொருள்களின் விலைகளைக் கட்டுப்படுத்தும் நோக்குடன்,  கடந்த 2007-ம் ஆண்டிலிருந்து சிறப்புப் பொது விநியோகத் திட்டமும் தமிழகத்தில் அமலில் உள்ளது. இந்தத் திட்டத்தின்படி துவரம்பருப்பு, உளுந்தம்பருப்பு ஆகியவை கிலோ 30 ரூபாய், பாமாயில் 25 ரூபாய் என்ற விலைகளில் விற்பனையாகின்றன.  விலைவாசி உயர்வது அன்றாட அவலமாகிவிட்ட இந்த நாள்களில், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்துவரும் இந்தத் திட்டத்தை அழித்தொழிக்கும் முனைப்போடு மத்திய பா.ஜ.க அரசு செயல்படுகிறது. உச்ச நீதிமன்றத்தால் பாராட்டப்பட்ட தமிழ்நாட்டின் பொது விநியோக முறையைச் சீர்குலைத்துவிட இன்றைய / முந்தைய மத்திய அரசுகள் எவ்வளவோ முயன்றபோதும், கருணாநிதியும் ஜெயலலிதாவும் அதற்கு வழிவிடவில்லை. முழு முற்றிலும் மக்கள் விரோதமான அந்தச் சதிக்குத் துணை போவதில் அவர்களுக்கு நிறைய தயக்கங்கள் இருந்தன. உணவுப் பாதுகாப்புச் சட்டம் அமலுக்கு வந்த பிறகு தி.மு.க-வால் இரண்டு ரூபாய்க்கும், பின்னர் ஒரு ரூபாய்க்கும் கொடுக்கப்பட்ட அரிசியை ஜெயலலிதா விலையற்றதாக வழங்கினார். மாத வருமானம் 5,000-க்கும் மேல் இருப்பவர்கள் ரேஷன் அட்டையில் ஹெச் முத்திரையைப் பதித்துக்கொண்டு கெளரவ அட்டைதாரராகி விலகி நிற்க வேண்டும் என கெடுபிடி செய்த நிலையில்,  2004-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியைத் தழுவ, அதை வாபஸ் வாங்கினார் ஜெயலலிதா. இப்படியான சஞ்சலங்களும் மத்திய அரசின் நெருக்கடிகளும் இருந்தாலும், பொது விநியோக முறையில் அதிரடியாகவோ நேரடியாகவோ கைவைக்க இருவருமே துணியவில்லை.

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் தமிழ்நாட்டின் பொது விநியோக முறைக்கு எதிராக இருப்பதைச் சுட்டிக்காட்டி ஜெயலலிதா அதை நடைமுறைப்படுத்த, தான் உயிரோடு இருந்தவரை மறுத்துவந்தார்.  இந்தச் சட்டத்தால், தமிழகத்துக்குக் கிடைக்கவேண்டிய அரிசியின் அளவிலிருந்து ஒரு லட்சம் டன் குறைக்கப்பட்டுவிடும் என்றும், அதன்படி கூடுதலாக 3,000 கோடி ரூபாய் சுமையைச் சுமக்கவேண்டிவரும் போன்ற உண்மைகளைச் சுட்டிக்காட்டி அவர் எதிர்த்தார். ஜெயலலிதாவின் இந்த எதிர்ப்பை கருணாநிதி வரவேற்று அறிக்கைவிட்டதும் நடந்தது. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நவம்பர் மாதம், அவரது பெயரிடப்படாமல் தமிழக அரசின் பெயரில் இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒப்புதல் தெரிவிக்கும் அறிக்கை வெளியானது. அதன்படி தமிழ்நாட்டுக்கு மாதம்தோறும் ஒதுக்கீடு செய்யப்படும் மொத்த அரிசியில் 1.26 லட்சம் டன் அரிசியை ஒரு கிலோ ரூ.8.30-க்குப் பதிலாக, சந்தை விலையில் ரூ.22.53-க்கு மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கப்போகிறது. இதன் மூலமாக கடுமையான நிதிச் சுமையை தமிழகம் எதிர்கொள்ளப்போகிறது.  

சரி, மத்திய அரசு ஏன் இவ்வளவு மூர்க்கத்தோடு மக்களை வதைக்க வேண்டும் என்ற கேள்விக்கான அடிஆழத்தில் புதைந்துக் கிடக்கிறது அப்பட்டமான ஒரு கயமைத்தனம். உலக வர்த்தக நிறுவனத்தில் 2016-ம் ஆண்டு மே மாதம், ரேஷன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தில் மோடி அரசு கையெழுத்திட்டதன் விளைவே, நாம் இன்று அனுபவிக்கும் துயரங்களுக்கான அடிப்படை. இந்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்த அறிக்கை ஒன்றில் உலக வங்கி, `பொது விநியோகத் திட்டத்தில் ஊழல் மலிந்துகிடப்பதாக இந்திய அரசும் பொருளாதார நிபுணர்களும் கருதுகின்றனர். இதைக் களையெடுக்கக் குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதற்குப் பதிலாகப் பணத்தைக் கொடுத்து, வெளிச்சந்தையில் பொருள்களை வாங்கிக்கொள்ளும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். அதற்காக, உணவுக் கொள்முதலில்  தனியாரை அனுமதிக்க வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தது. அதைத் தொடர்ந்துதான் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் பொருள்களுக்குப் பதிலாகப் பணப் பரிமாற்றம் என்ற பிரிவு சேர்க்கப்பட்டது. அதன் விளைவாகவே ரேஷன் கடைகளை மூடும் ஒப்பந்தத்தில் கையெழுத்து. இதோ ரேஷன் கடைகளில் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் அல்லாடுவது என்பது இத்தனை பெரிய கயமைத்தனத்தின் தொடர்ச்சிதான். 

மக்கள் விரோத மனப்பான்மையையும் தமிழக எதிர்ப்புக் கருத்தியலையும் கூர்தீட்டிக் கொண்டு பொது விநியோகத் திட்டத்தைக் கூறுபோடும் செயல்களில் ஈடுபட்டுவருகிறது பா.ஜ.க அரசு. ஆதார் அட்டை இல்லாமல் இங்கே அணுவும் அசையாது என்ற நிலையை உருவாக்கியதன் காரணம், மக்கள் பலன்பெறும் மானியங்கள் அனைத்தையும் வெட்டுவதற்குத் தான். சமையல் எரிவாயு விஷயத்தில் நாம் நன்றாகவே அனுபவப்பட்டோம். ஆதார் எண் கேட்டார்கள், வங்கிக்கணக்கு கேட்டார்கள், `அதில் மானியத்தொகையைப் போடுவோம்’ என்றார்கள். ஆனால், கீழ்நடுத்தர வர்க்கம் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பரவலாக உயர்த்தப்பட்ட விலையிலேயே சிலிண்டர்களை வாங்குகிறார்கள். அவர்கள் வங்கிக்கணக்குக்கு மானியத்தொகை வந்தபாடில்லை. இதே சதியைத்தான் மண்ணெண்ணெய்க்கும் செய்தார்கள். முதல் கட்டமாக ஒன்பது மாநிலங்களில் அமல்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தின்படி, மண்ணெண்ணெய் ரேஷனில் கிடைக்காது. வெளிச்சந்தையில் வாங்கினால், அதற்கான பணம் வங்கியில் செலுத்தப்படும். மின்சாரத்துக்கும் எரிவாயுக்கும் மண்ணெண்ணெயை மட்டுமே நம்பியிருக்கும் கோடிக்கணக்கான இந்தியக் குடும்பங்கள் இருளிலும் பசியிலும் தள்ளப்பட்டுள்ளன. மண்ணெண்ணெய்யில் எரிந்த அடுப்புகள் மீண்டும் விறகுக்குத் திரும்பியிருக்கின்றன. இதுதான் மேக் இன் இந்தியா வளர்ச்சியா?  

ரேஷன் கடைகளில் ஆதார் எண்ணை இணைக்கச் சொல்லி விரட்டோ விரட்டென விரட்ட, மக்கள் வரிசையில் காத்துக்கிடந்து அதைச் செய்கின்றனர். ஆனால், ஆதார் எண்ணை இணைத்தால் ரேஷன் பொருள்கள் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில், வெயிலில் பல மணி நேரம் உழன்று கொண்டிருப்போரில் பலருக்கும் தெரியாது, அவர்கள் பொருள்களுக்குப் பதிலாக நேரடிப் பணப்பட்டு வாடாவுக்கு ஒப்புதல் அளிக்கின்றனர் என்பது. மத்திய அரசின் இந்தச் சூழ்ச்சியை மே-17 இயக்கம் மாதிரியான அமைப்புகள் அம்பலப்படுத்தியபோதும், மக்களிடம் அது பரவலாகக் கொண்டுசேர்க்கப்படவில்லை. ரேஷன் கடைகளில் வழங்கப்படும் படிவங்கள் வாயிலாக, டைரக்ட் பெனிஃபிட் டிரான்ஸ்ஃபர் எனப்படும் நேரடிப் பணப்பட்டுவாடாவுக்கு மக்கள் ஒப்புதல் அளிக்கின்றனர். அப்படி ஒப்புக்கொண்டவர்கள் ரேஷன் கடைகளில் பொருள்களை வாங்க முடியாது. மாறாக, ரேஷன் கடைகளில் வாங்கக்கூடிய பொருள் களுக்கான மானியத்தொகையை வங்கிக்கணக்கில் அரசு செலுத்திவிடும்(!). நாம் வெளிச்சந்தையில் அசல் விலைக்குப் பொருள்களை வாங்கிக்கொள்ள வேண்டும். இந்தச்் சூழ்ச்சியை நடைமுறைப்படுத்தத்தான் இத்தனை பாடுகளும். ரேஷன் பொருள்களுக்கு டெண்டர் விடவில்லை, ரேஷன் கடைகளில் பொருள்கள் இல்லை, ரேஷன் ஊழியர்களுக்குச் சம்பளம் தரப்படவில்லை, ரேஷன் கடைகளுக்கான மானியத்தொகையையும் தரவில்லை என எல்லா குளறுபடிகளுக்கும் ஒரே நோக்கம்தான். அது ரேஷன் கடைகளை இழுத்துமூடுவது, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாசல் திறப்பது. கேஷ்லெஸ் டிரான்ஸாக்‌ஷன் எல்லாம் அதற்காகத்தான்.

மேல் வர்க்கம்/முன்னேறிய சாதியினர் பற்றி கவலை இல்லை. சர்வைவல் ஆப் த ஃபிட்டஸ்ட்டான நடுத்தரவர்க்கம்/இடைநிலைச் சாதியினர் எவ்வாறேனும் தட்டுத்தடுமாறி இதற்குப் பழகிவிடுவர். ஆனால், ஏழைகள்/ஒடுக்கப்பட்டோர், அதற்கும் கீழானவர்கள்? அவர்களுக்கு எல்லாம் இந்த நாட்டில் இடமே இல்லையா? ரேஷன் கடைகள் பெருமளவில் இந்தியாவின் ஒடுக்கப்பட்ட மக்களான தலித்கள், சிறுபான்மையினர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோரைப் பட்டினியில் சாகாமல் காத்துவந்திருக்கிறது. அந்தச் சமூக நீதியைத் துடைத்து அழிப்பதுதான் வளர்ச்சியா? ஏற்கெனவே அடித்தட்டு மக்களின் குரல் முற்றிலுமாக நசுக்கப்பட்டிருக்கிறது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையில்கூட அவர்கள் பட்டபாடுகள் வெளியுலகத்துக்குச் சொல்லப்படவில்லை. எந்த ஊடகமும் அடித்தட்டு மக்கள் வாழ்வில் அரசு உருவாக்கிய அந்தப் பேரிடர் குறித்துப் பேசவில்லை.  அவ்வாறே ரேஷன் கடைகள் மூடப்படுதலும் நடந்துமுடியும். சமூகப் பொருளாதாரரீதியாகப் பின்தங்கிய நிலையில் உழல்பவர்களின் பட்டினிச்சாவு குறித்தோ, சத்துக்குறைபாடு குறித்தோ எங்கேயும் பதிவுகள் வராது. இந்தப் பரபரப்பு, ஊடகங்கள் தமது கேமராக்களை எடுத்துக்கொண்டு மக்களிடம் போகாமல், ஸ்டூடியோவுக்குள் விவாதப் புரட்சி நடத்துவதோடு எல்லாம் முடிவுக்கு வந்துவிடும்.    

ஏழைகள் நிறைந்த நாட்டை, பசியற்றதாக வைக்க ஓர் அரசு எதையும் செய்ய வேண்டும். உணவுப் பாதுகாப்பு என்ற பெயரில் அதன் பிறகு உருவாக்கப்பட்ட கொள்கைகளும், இயற்றப்பட்ட சட்டங்களும் ஏழ்மையை ஒழிக்காமல், ஏழைகளை ஒழிக்கத் துடிக்கின்றன. ஓர் அரசு தன் சொந்தக் குடிமக்களுக்கு எதிராக இவ்வளவு மோசமாகச் செயல்படும் பேரவலம் உலகில் வேறு எங்கேனும் நடக்குமா? பிழைப்புத் தேடி வந்தவர்களும், அகதிகளாகத் தஞ்சம் புகுந்தோரும் அனுபவிக்கக்கூடிய நெருக்கடியை இந்திய அடித்தட்டு மக்கள் தம் சொந்த நாட்டில் எதிர்கொள்கிறார்கள். 

மக்களிடமிருந்து அவர்களின் நல்வாழ்க்கைக்கான எல்லாமே பறிக்கப்படுகின்றன. ஒரு நாட்டின் குடிமக்களாக இருந்து அனுபவிக்க வேண்டிய எல்லா நலன்களுமே நசுக்கப்படுகின்றன. அப்படி எனில், தனிநபர்களின் வாழ்க்கையில் அரசுக்கு என்னதான் பங்கு? தனிநபர் எல்லா சுமைகளையும் தானே சுமந்துகொள்ள வேண்டும் எனில், இது ஒரு சமூகமாகவோ, தேசமாகவோ எவ்வாறு ஆக முடியும்? 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரையில் `இந்திய மக்களாகிய நாங்கள்' (we the people of India) என்று அம்பேத்கர் எழுதியபோது, அதன் மீது விவாதம் எழுந்தது. `இந்தியக் குடிமக்களாகிய நாங்கள்' (we the citizen of India) என அதை மாற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. அதற்குப் பதில் உரைத்த அம்பேத்கர், `இந்தியா இன்னும் ஒரு தேசமாகவில்லை. அது தேசமாக வேண்டிய நாடு. அதனால் குடிமக்கள் என குறிப்பிட முடியாது’ என்றார். 

70 ஆண்டுகால சுதந்திர இந்தியா, இன்னும் ஒரு தேசமாகவில்லை. தேசபக்தி என எவ்வளவு பிதற்றினாலும் தனது மக்களைக் குடிமக்களாக அங்கீகரித்து அவர்களைக் காப்பாற்றியாகவேண்டிய பொறுப்பை அது கையில் எடுக்கவில்லை. அடித்தட்டு மக்களை அழித்தொழிக்கும் இத்தகைய அட்டூழியங்கள் அனைத்தும் அதை ஆணித்தரமாக நிருபிக்கின்றன.



திங்கள், 20 மார்ச், 2017

சிட்டுக் குருவிகள் அழிவுக்கு செல்லிடப்பேசி கோபுரங்கள் மட்டுமே காரணமல்ல!


  |  
sparrow

பறவைகள் என்றாலே அழகுதான், அதுவும் சிட்டுக் குருவிகள் மனிதனின் இருப்பிடத்திலேயே கூடு கட்டி வாழ்வதால் அவை மனதுக்கு இன்னும் நெருக்கமானவை. அப்படியான சிட்டுக் குருவிகள் நம்மிடையே இருந்து விலகி வெகு தூரம் சென்றுவிட்டன.
இந்தியாவிலுள்ள 1314 வகை பறவை இனங்களில், 34 பறவை இனங்கள் மட்டுமே, உலகம் முழுவதும் உள்ளன. இவற்றில், சிட்டுக்குருவியும் அடங்கும். அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தைப் பாதுகாக்க, ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 20-ஆம் தேதி உலகச் சிட்டுக் குருவிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
எப்படியெல்லாம் வாழ்ந்தன: பறவை இனங்களில், சிட்டுக்குருவி மட்டுமே தனிக்கூடு கட்டாமல், வீடுகளில் உள்ள துவாரங்களில், இடுக்குகளில் சருகுகளைக் கொண்டு தனக்கென ஓர் இடம் அமைத்துக்கொள்ளும்.
அப்போதிருந்த வீடுகளில் மாநகரில் கூட சிட்டுக் குருவிகளுக்கான இடம் இருந்தது. சென்னை மாநகரில் மக்கள் தொகை பெருக்கம் அதிகரித்தபோது கூட சிட்டுக் குருவிகள் வாழ்ந்து வந்தன. ஆனால், எப்போது மக்கள் நவீனமயமாக்கலுக்கு முற்றிலுமாக மாறினார்களோ அப்போதே சிட்டுக் குருவிகள் நகரங்களை விட்டுப் பறந்துவிட்டன.
செல்லிடப்பேசி கோபுரங்கள் காரணமா?: செல்லிடப்பேசி வருகைக்குப் பின் குருவிகளின் அழிவு அதிகரித்துவிட்டதாக சொல்லப்படுகிறது. செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு குருவியின் கருவை சிதைப்பதாகவும், முட்டையிட்டாலும், கரு வளர்ச்சி அடையாமல் வீணாவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து பறவைகள் ஆராய்ச்சியாளர் ஜெகன்நாதன் கூறியது: சிட்டுக்குருவிகள் குறைவதற்கான காரணங்களாக நகரமயமாதல், செல்லிடப்பேசி கோபுரங்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஆனால் இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. கள ஆய்வில்தான் இதை அறிய முடியும்.
நகரங்களில் இருந்த தோட்டங்கள், புதர்ச்செடிகள் வெகுவாகக் குறைந்துபோனது, அவை கூடமைக்க ஏதுவான இடங்கள் இல்லாமல் போனது, முட்டை பொரிக்கும் காலங்களில் புழு, பூச்சிகளின் தட்டுப்பாட்டினால் குஞ்சுகளுக்கு சரியான இரையில்லாமல் போவது போன்றவையே காரணமாக இருக்கலாம் எனச் சொல்லப்பட்டது என்றார்
ஜெகன்நாதன்.
முக்கியக் காரணங்கள்
வெளிக்காற்று வீட்டிற்குள் வர முடியாதபடி அடுக்குமாடிக் குடியிருப்புகள். குளிரூட்டப்பட்ட வீடுகளில், குருவிகள் கூடு கட்டி குடியிருக்க இயலாமல் போனது. எரிவாயுக்களில் இருந்து வெளியேறும் மீதைல் நைட்ரேட் எனும் வேதியியல் கழிவுப் புகையால், காற்று மாசடைந்து குருவிகளை வாழ வைக்கும் பூச்சி இனங்கள் அழிகின்றன. இதனால் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையால், நகருக்குள் வாழும் குருவிகள் பட்டினி கிடந்தே அழிகின்றன.
பலசரக்குக் கடைகளுக்குப் பதிலாக, பல்பொருள் அங்காடிகள் அதிகளவு வளர்ந்து வருகின்றன. இங்கு பாலிதீன் பைகளில் தானியங்கள் அடைத்து விற்கப்படுவதால், வீதிகளில் தானியங்கள் சிதற வாய்ப்பில்லை.
வீட்டுத் தோட்டங்கள், வயல்களில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி தெளித்து, பூச்சிகள் கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக, உணவு இல்லாமல் குருவிகள் மெல்ல நகரங்களைக் காலி செய்யத் தொடங்கின.
வீட்டுக்கு அழையுங்கள் சிட்டுக் குருவிகளை!
உங்கள் வீட்டின் அருகில் சிட்டுக்குருவிகள் வருகின்றனவா என கவனியுங்கள். வந்தால் கொஞ்ச நேரம் அவற்றை பார்த்து ரசித்துக் கொண்டிருங்கள். தினமும் அவற்றை உங்கள் வீட்டருகில் வரவழைக்க விரும்பினால் தானியங்கள் வைக்கலாம். கூடவே ஒரு சிறிய பாத்திரத்தில் அவற்றின் தாகம் தீர்க்கத் தண்ணீரையும் வைக்கலாம்.
ஒரு சிறிய அட்டைப்பெட்டி இருந்தால் அது பிரியாமலிருக்க இருபுறமும் பசையிட்டு ஒட்டி, சிட்டுக்குருவி நுழையும் அளவிற்கு ஓட்டை போட்டு வீட்டின் ஓரமாக உயரே தொங்கவிட்டால் சிட்டுக்குருவியின் குடும்பத்தையே உங்கள் வீட்டிற்கே கொண்டுவரலாம்.








மார்ச் 20 - உலக சிட்டுக்குருவி தினம் இன்று


சிட்டுக்குருவி


2010-ம் ஆண்டு முதல் மார்ச் 20-ம் தேதி உலக சிட்டுக்குருவிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இன்று சிட்டுக்குருவி இனம் மெல்ல, மெல்ல அழிந்து வருகிறது. நகரங்களில் சிட்டுக்குருவிகளே இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. அதுபற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தும் வகையில் இன்று உலக சிட்டுக்குருவி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
செல்போன் அலைவரிசை கோபுரங்கள் காரணமாக சிட்டுக் குருவிகளுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிட்டுக்குருவிகளை காப்பாற்றி முன்பு போல உலாவ விட பல முயற்சிகள் நடந்து வருகிறது. என்றாலும் சிட்டுக்குருவியின் எண்ணிக்கை விவசாய நாடான இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே குறைந்து வருகிறது.
சிட்டுக்குருவிகள் பொதுவாக மக்கள் வசிக்கும் பகுதிகளிலேயே கூடுகட்டி வாழ விரும்புகின்றன.வீட்டு மாடம், பரண், ஓடுகளின் இடைவெளி போன்ற இடங்களில் கூடுகட்டி வசித்து வந்த இந்த சின்னஞ்சிறு பறவை கான்கிரீட் மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகள் அதிகரிப்பால் இன்று நகரங்களில் இருந்து விடைபெறத் தொடங்கிவிட்டன.
சிட்டுக்குருவிகள் விரும்பி உண்ணும் கம்பு, கேழ்வரகு, சோளம், திணை, சாமை போன்ற சிறுதானியங்களின் பயன்பாடு குறைந்துவிட்டதும், நெல் பயிரிடுதலில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் ஆதிக்கம் அதிகரித்துவிட்டதும் சில முக்கியக் காரணங்களாக கூறப்படுகிறது.

சனி, 18 மார்ச், 2017

சரக்கு மற்றும் சேவை வரி (GST) - www.gst.gov.in

வரும் ஜுலை முதல் தேதியிலிருந்து சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைக்கு வர உள்ளதால், விற்பனை வரி அல்லது மதிப்புக் கூட்டு வரி, சேவை வரி, கலால் வரி, நுழைவு வரி, சொகுசு வரி மற்றும் கேளிக்கை வரி விதிப்புக்கு உட்டபட்டு தொழில் செய்து வரும் அனைவரும் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள். கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் பதிவு செய்யும் வசதி இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 


சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான சந்தேகங்களைத் தீர்க்கும் நோக்கில் இந்த தொகுப்பை பதிவேற்றம் செய்துள்ளேன். 

தொகுப்பு: க. சங்கிலிக் காளை தொடர்புக்கு : 96001 06471, 73589 86041

























திங்கள், 13 மார்ச், 2017

வேலையைப் புரிஞ்சுக்கிட்டு செஞ்சா வெற்றி நிச்சயம்!


vikatan.com

“எல்லோருமே உழைப்பு, உழைப்பு என்று வேகமாக ஓடுகிறோம். சிலர் 10  மணி நேரம், 12 மணி நேரம்கூட உழைக்கிறார்கள். இதனால் வேலையில் வெறுப்பு வந்துவிடுகிறது. இந்த நிலை வரக்கூடாது என்பதற்காகவே, குறிப்பிட்ட நேரத்தில் உழைக்கவேண்டும், மற்ற நேரத்தில் குடும்பத்துடன் நேரத்தைச் செலவு செய்யவேண்டும் என்று நினைத்து, பணியாளர் நலச் சட்டத்தை வகுத்திருக்கிறார்கள். நல்ல மனநலனும், உடல்நலனும் இருந்தால்தான் வேலையின் மீது வெறுப்பு இல்லாமல் ஆர்வத்துடன் பணியாற்ற முடியும்” என்கிறார் டி அண்ட் ஏ (D & A consulting Services) தொழிலாளர் நலச் சட்ட ஆலோசனை நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஆனந்த். ஒரு நிறுவனத்தில் பணிக்குச் சேரும்போது என்னென்ன விஷயங்கள் தெரிந்திருக்கவேண்டும் என்பதைப் பற்றி விரிவாகப் பேசினார் ஆனந்த். 

நிறுவனம் தரும் கடிதத்தைக் கவனமாகப் படியுங்கள்


ஒரு  நிறுவனத்தில் பணியாளராகச் சேர்கிறீர்கள். அந்த நிறுவனத்தில் நிறைய பேர் இருக்கலாம். அப்படிச் சேரும்போது உங்களிடமிருந்து  நிறுவனம் என்ன எதிர்பார்க்கிறது என்று நீங்கள் தெரிந்து வைத்திருப்பது அவசியம். நீங்கள் நிறுவனத்தில் சேரும்போது வழங்கப்படும் அப்பாயின்ட்மென்ட் கடிதத்தில் உள்ள ஷரத்துகளைப் நன்றாகப் படித்துப் பார்க்க வேண்டும். உங்களுடைய சம்பளத்தை எப்படிப், பிரித்துத் தருகிறார்கள் என்று பார்க்க வேண்டும். 



ஒரு சில நிறுவனங்கள், ‘முன்அறிவிப்பு இல்லாமல் வேலையில் இருந்து விலகினால், மூன்று மாத சம்பளத்தைத் திரும்பத் தரவேண்டும்’ என்று போட்டிருப்பார்கள். ஆனால், நிறுவனத்தில் சேர்பவர்கள் இந்த விதிமுறையை நன்றாகப் படித்து இருக்கமாட்டார்கள். கடைசியில் மன வருத்தத்தோடுதான் பணத்தைச் செலுத்த வேண்டி இருக்கும். 



எந்த நிறுவனமாக இருந்தாலும்  பணியாளர்களின் சான்றிதழ்களின் நகல்களை மட்டுமே வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும். அசல் சான்றிதழ்களை வாங்கி வைத்துக் கொள்ளக் கூடாது. எனவே, உங்களின் அசல் சான்றிதழ்களை கேட்டால் கொடுக்காதீர்கள். ஒப்பந்தப் படிவத்தில் கையெழுத்து போட்டுவிட்டால், அதனை ஏற்றுத்தான் ஆகவேண்டும். எனவே, வேலைக்குச் சேரும் முன்பு ஒப்பந்தப் படிவத்தை நன்றாகப் படித்து பார்ப்பது அவசியம்.  



எதிர்பாராதவிதமாக வரும் மருத்துவ செலவுகள் 



பத்து பேருக்கு மேல் பணியாற்றும் நிறுவனத்தில் ஒருவரின் நிகர சம்பளம் 21,000 ரூபாய்க்குக் குறைவாக இருந்தால், அவர் பெயர் தொழிலாளர் நலக் காப்பீட்டு நிறுவனத்தில் (இஎஸ்ஐ) பதிவு செய்யப்பட வேண்டும். பணியாற்றுபவரோ அல்லது அவரது குடும்பத்தில் உள்ளவர்களோ நோய்வாய்ப்பட்டால்  அவசர சிகிச்சை மேற்கொள்ள தொழிலாளர் நலக் காப்பீடு உதவும். 



மேலும், ஒரு பணியாளர் இரண்டு, மூன்று மாதங்கள் படுத்த படுக்கையாக இருக்க நேர்ந்தால், அவருக்கு இஎஸ்ஐ நிறுவனத்திடமிருந்து ஊதியத்துக்கு இணையான இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். பணியாளருக்குக் கால் அல்லது கையில் அடிபட்டால், அவரால் வேலை செய்ய முடியாது. உற்பத்திப் பிரிவில் வேலையின் மூலதனமே கைதான். கையை இழந்தால் அவருக்கு 100% முழு இழப்பீடு வழங்கப்படும். 



மாதத்தில் ஏதேனும் ஒரு நாள் விடுப்பு வழங்கவேண்டும். அதற்கு மேல் விடுப்பு எடுக்கும்போது சம்பள இழப்பு ஏற்படும். அந்தச் சம்பள இழப்பை இஎஸ்ஐ ஈடுசெய்யும். 



பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் ஒருவருக்கு ஒரு நாள் சம்பளம் 330 ரூபாய் என்ற அளவில் இருக்கும். நோய்வாய்ப்பட்டு படுத்தால் 91 நாட்கள் வரை 70 சதவிகிதத் தொகையை இஎஸ்ஐ, இழப்பீட்டுத் தொகையாக வழங்கும். நீண்ட காலத்தில் நோய் தாக்கம் இருந்தால், இரண்டு ஆண்டுகள் வரை 80% வரை இழப்பீட்டுத் தொகை கிடைக்கும். பெண்கள், குழந்தைப்பேறுக்காக செல்லும்போது அவர்களுக்கு 26 வாரங்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கும். குடும்பக் கட்டுப்பாடு செய்யும்போது 14 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்படும். 

வைப்புத்தொகை அவசியம்


இருபது பணியாளர்களுக்கு மேல் இருக்கும் நிறுவனமாக இருந்தால், தொழிலாளர் வைப்பு நிதியில் (EPF - Employment Provident Fund) சேர்க்க வேண்டும். இதில், நிறுவனத்தின் சார்பில் அடிப்படை சம்பளத்தில் இருந்து 12%, அதற்கு இணையாக பணியாளர் தன்னுடைய பங்களிப்பாக 12% வழங்கவேண்டும். இவ்வாறு செலுத்தப்படும் தொகைக்கு ஆண்டுக்கு 8.65% கூட்டு வட்டி வழங்கப்படுகிறது. பணியாளருக்குத் திருமணம், வீடு வாங்குதல், மருத்துவம் போன்ற செலவீனங்கள் வந்தால், பணியாளர் வைப்புத் தொகையிலிருந்து தேவையான தொகையை எடுக்கமுடியும்.  



ஒரு நிறுவனத்திலிருந்து இன்னொரு நிறுவனத்துக்கு மாறும்போது பிஎஃப் கணக்கை முடிவுக்குக்கொண்டு வந்து, பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளும் பழக்கம் பலரிடமும் இருக்கிறது. இப்படிச் செய்யக்கூடாது என்று சட்டம் சொல்கிறது. இனி, நிறுவனங்களில் வேலையே செய்யமாட்டேன் என்கிறபோதும், ஓய்வுப்பெறும்போதும் மட்டுமே பிஎஃப் கணக்கை முடிவுக்குக் கொண்டுவந்து பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  



திடீரென ஏற்படும் இழப்பினை சமாளிக்க..



ரூ.21 ஆயிரத்துக்கும் அதிகமாகச் சம்பளம் பெறுபவர்களுக்குப் பணியாளர் இழப்பீட்டுச் சட்டம் இருக்கிறது. அவர்கள் அடிபட்டாலோ அல்லது பணி செய்யும்போது இறந்துவிட்டாலோ அவர்கள் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்பதையும், எதிர்காலத்தில் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்பதையும் கணக்கிட்டு, ஒரு பெருந்தொகையை அவரது குடும்பத்துக்கு வழங்கவேண்டும். உதாரணத்துக்கு, ரூ.30,000  சம்பளம் வாங்கிவரும் 30 வயதான ஒருவர் திடீரென இறந்துவிட்டால், 58 வயது வரை அவருக்கு எவ்வளவு சம்பளம் கிடைக்குமோ, அதனைக் கணக்கிட்டு பெரும் தொகை இழப்பீடாக வழங்கப்பட வேண்டும்.



பொதுவாக, தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் எவ்வளவு தொகைக்கு பாலிசி எடுத்து இருக்கிறாமோ, அந்தத் தொகைதான் நமக்குக் கிடைக்கும். ஆனால், இந்தத் தொகை குடும்பத்தைக் காப்பாற்ற உதவாது. பணியாளர், வீட்டுக் கடன் வாங்கி இருப்பார். குழந்தைகளை நல்ல பள்ளிகளில் சேர்த்துப் படிக்க வைத்திருப்பார். இவையெல்லாம் பாதிக்காத வகையில் அவர்களுக்கு உதவவேண்டும். சம்பளம் வாங்கும் அளவு, அவருடைய வயது, திறன் போன்றவற்றையெல்லாம் கணக்கிட்டுத்தான் இழப்பீட்டுத் தொகை வழங்கவேண்டும். இந்த வகையான இன்ஷூரன்ஸ் திட்டங்களை பல பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் வழங்குகின்றன. 



போனஸும், பணிக்கொடையும் கிடைக்கும் 



ரூ.21 ஆயிரத்துக்குக் குறைவாக ஒருவரது சம்பளம் இருந்தால், அந்த நிறுவனம் லாபத்தில் செயல்பட்டால், போனஸ் வழங்கவேண்டும். அதாவது, குறைந்தபட்சம் 8.33% போனஸ் வழங்க வேண்டும். அதற்கு மேல் வழங்குவது நிறுவனத்துக்கு  நன்மதிப்பைக் கொடுக்கும். பத்து பணியாளர் களுக்கு அதிகமானோர் பணியாற்றும் நிறுவனத்தில் ஐந்து வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருந்தால், ஓய்வு பெறும்போது அல்லது பணியில் இருந்து விலகும்போது பணிக்கொடை வழங்கவேண்டும்.  எவ்வளவு ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறார்களோ, அதற்குத் தகுந்தாற்போல் பணிக்கொடை வழங்க வேண்டும். 



சில பேர் இரண்டு வருடங்கள் வேலை பார்த்திருப்பார்கள். பணியாற்றிக்கொண்டிருக்கும் போது இறந்தால், அவர் எவ்வளவு காலம் பணியாற்றிருப்பார் என்று கணக்கிட்டு அதற்குத் தகுந்தாற்போல் பணிக்கொடை வழங்க வேண்டும். உதாரணமாக, ஒருவர் 4 வருடங்கள் 6 மாதம் பணியாற்றி இருந்தால், அதை ஐந்து ஆண்டுகளாகக் கணக்கிட்டு வழங்கவேண்டும். அதேபோல, ஐந்து வருடங்கள் ஏழு மாதம் பணியாற்றி இருந்தால், அதை ஆறு ஆண்டுகளாக கணக்கில் எடுத்துக்கொண்டு வழங்கவேண்டும்.


விடுமுறையினைத் தெரிந்துகொள்வோம் 


ஒவ்வொரு நிறுவனமும் குறைந்தபட்சம், ஒன்பது நாள்கள் விடுமுறை நிச்சயம் வழங்கிட வேண்டும். இதில் நான்கு நாள்கள் (சுதந்திர தினம், குடியரசு தினம், மே தினம், காந்தி ஜெயந்தி) அரசு அறிவிக்கும் விடுமுறைகள். மீதி ஐந்து நாள்கள் நிறுவனத்தின் தேவைகளையும், பணியாளர்களின் தேவைகளையும் கணக்கிட்டு வழங்கவேண்டும். அந்த ஐந்து நாள்கள், எந்தெந்த நாள்கள் என்பதை முன்னரே நிறுவனம் அறிவிக்கவேண்டும். ஒருவர், இந்த ஒன்பது விடுமுறை நாள்களில் வேலை பார்த்தால், அடுத்துவரும் மூன்று பணிநாள்களில் விடுமுறை வழங்கவேண்டும். அவ்வாறு வழங்கப்படவில்லை எனில், அந்த வேலை நாள் களுக்கு இரண்டு மடங்கு சம்பளம் வழங்கவேண்டும். 



வேலை நேரத்தில் பணியாற்றுவோம்



ஒரு நாளைக்கு `பிரேக்கிங் ஹவர்ஸ்’ என்றழைக்கப்படும் ஓய்வு நேரத்தையும் சேர்த்து ஒன்பது மணி நேரம்தான் வேலை பார்க்க வேண்டும். முன்பு உற்பத்திப் பிரிவில் வேலை பார்த்தவர்கள் மூன்று மணி நேரத்துக்கு ஒருமுறை ஓய்வும், மதிய உணவு வேளையில் ஓய்வும் எடுத்துக்கொண்டார்கள். 



ஆனால், இன்றைக்கு ஐ.டி நிறுவனத்திலோ அல்லது இதர நிறுவனங்களிலோ பணியாற்றும் நபர்களுக்கு, எட்டு மணி நேரம் என்பதற்குப் பதிலாக 10, 12 மணி நேரம் அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது வேலையில் வெறுப்பு வந்துவிடுகிறது. 



வேலையில் வெறுப்பு உண்டாகாமல் இருக்க, குறிப்பிட்ட நேரம் மட்டும் உழைக்கவேண்டும். எதிர்காலம் குறித்து யோசிக்கவேண்டும், குடும்பத்துடன் நேரத்தைச் செலவு செய்ய வேண்டும் என்பதற்காக ஒரு நாளைக்கு 8 மணி நேரமும், ஒரு வாரத்தில் 48 மணி நேரமும், ஓவர் டைம் எனில், ஒரு வாரத்துக்கு 6 மணி நேரம் என்றும் விதிமுறை இருக்கிறது.  



இதுபோல, பல எளிமையான விதிகள் இருக்கின்றன. இவற்றையெல்லாம் முழுமையாகப் புரிந்துகொண்டு நிறுவனமும், பணியாளரும் பரஸ்பரம் ஒற்றுமையுடன் செயல்பட்டால், நிறுவனமும் பணியாளர்களும் வளர்ச்சிப் பெறுவது நிச்சயம்” என்றார் ஆனந்த்.



நிறுவனங்கள் மட்டுமல்ல, பணியாளர்களும் கவனத்தில்கொள்ள வேண்டிய விஷயங்கள் இவை!