துமிழகத்தின் ஆதிகுடியினர் எனக் கூறப்படுவோர் - காடர், குறும்பர், மாலர், மாலாசர், மலையரசன், பறையர், பாணர். இவர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழாத நாடோடிகளாக இருந்தனர். இதற்குப் பின் தமிழ் மக்கள் தாங்கள் வாழ்ந்த நிலப்பகுதியினைத் தொல் பழங்காலத்தில் ஐவகையாகப் பிரித்து அவைகளை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை எனக் கூறிவந்தனர். மலையும் அதைச் சார்ந்த இடங்களை குறிஞ்சி எனவும், காட்டையும் அதைச் சார்ந்த இடங்களை முல்லை எனவும், வயலையும் அதனைச் சார்ந்த இடங்களை மருதம் எனவும், கடலும் அதனைச் சார்ந்த இடங்களை நெய்தல் எனவும் தமிழர்கள் நான்கு பகுதிகளாக வகுத்து வழங்கி வந்தனர்.
இதில் குறிஞ்சி நிலத்திலும், முல்லை நிலத்திலும் சில பகுதிகள் சூரியனது வெப்ப மிகுதியால் தம் இயல்பு இழந்து மணல்வெளியாக மாறுவதும் உண்டு. அதை பாலை நிலம் என்பர். இவ்விதமான நிலங்களில் வாழ்ந்த மக்களை முறையே குறிஞ்சி நில மக்களை ஆடவர்களை பொருப்பன் - வெற்பன் - வேட்டுவன் - குறவன் எனவும் பெண்களை குறத்தி எனவும் அழைப்பர். முல்லை நில மக்களில் ஆடவரை குறும்பர் பொறைநாடன், இடையர், ஆயர் எனவும், பெண்களை இடைச்சி எனவும் அழைப்பர். மருத நில மக்களில் ஆண்களை உழவன், கடையர் எனவும், பெண்களை உழத்தி, கவச்சி எனவும் அழைப்பர். நெய்தல் நிலத்தில் ஆடவர்களைச் சேர்ப்பன், புலம்பல், பரதர், நுளையர் எனவும், பெண்களை நுழைச்சி எனவும் அழைப்பர். பாலை நில மக்களில் ஆடவர்களை விடலை, காளை, மீனி ஏய்னர், மறவர் எனவும், பெண்களை ஏய்த்தி, மறத்தி எனவும் அழைப்பர். இந்த ஐந்து நில மக்களை இன்னும் பல பெயர்களாலும் அழைப்பதுண்டு. இவர்களிடையே நிலம் பற்றிய பிரிவே தவிர, சாதிகள் பற்றிய பிரிவுகள் இருந்ததில்லை. இது போன்றே ஐநில மக்களுக்குக்கும் அறிவுரை வழங்கி வந்தோரான “அறிவர்” என்ற தமிழ்க் கம்மியர்களுக்கும் சாதிப் பாகுபாடுகள் இருந்ததில்லை என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.
இவ்வாறு சாதிப் பாகுபாடுகள் இல்லாது வாழ்ந்து வந்த தமிழர்களிடையே கி.மு. ஆறாம் நூற்றாண்டு அளவில் தமிழ்நாட்டுக்கு வந்த ஆரியர்கள் தங்களின் சாதிக் கட்டுப்பாடுகளையும், சமயப் பழக்கவழக்கங்களையும் தமிழர்களிடையே புகுத்தினர். அவைகள் வர்ணாச்சிரம தர்மம் எனவும், பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வகையாக அவரவர்கள் செய்து வந்த தொழிலின் பட்டதாகவும் அமைந்தன.
ரிக் வேதத்தின்படி பிராமணர்கள் ஆண்டவரின் வாயின்றும், சத்திரியர்கள் இரண்டு கைகளிலிருந்தும், வைசியர்கள் இரு தொடைகளிலிருந்தும், சூத்திரர்கள் இரு பாதங்களிலிருந்தும் தோன்றியதாகக் கூறப்பட்டுள்ளது.
இவை தமிழர்களின் பழக்க வழக்கங்களுக்கு மாறானவையாக இருந்தாலும் தமிழர்கள் அக்கொள்கைகளைப் பின்பற்றத் துவங்கினர். தமிழர்களுடைய கலை, நாகரீகம், பண்பாடு எதுவென்று தெரியாதவாறு பெரிதும் ஒன்றோடொன்று கலந்து விட்டதென்றே கூறலாம். எனினும் ஆரியர்கள் தங்களை உயர் சாதியினர் என்று கூறிக் கொண்டதுடன் தமிழ் மக்கள் அனைவரையும் மிகவும் கீழாக இழிகுலத்தவராகவும் மதித்தனர்.
இப்படி சாதியமைப்பு முறை தமிழகத்தில் ஏற்பட்டு அதற்கு செல்வாக்கு பெரிதும் உண்டானதில் இருந்து தமிழ் மக்களிடையே சாதிக் காழ்ப்பு ஒரு பரவலான உணர்ச்சியாக வளர்ந்து விட்டது. இந்நிலமை கண்ட அக்கால பெரியோர்கள், புலவர்கள், துறவிகள் போன்றவர்கள் இந்தச் சாதிக் காழ்ப்பு உணர்ச்சிகளைத் தமிழர்களிடையே இருந்து அகற்ற பெரிதும் முயன்றனர்.
கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் பௌத்த சமண சமயத்தவர்கள் இந்தச் சாதி உயர்வு-தாழ்வுகளைத் தமிழர்களிடையே இருந்து அகற்ற முயன்று வந்தனர்.
சாதிப் பாகுபாடுகள் தோன்றி நிலைபெற்றதுடன் நில்லாது ஒரு சாதியருக்குள்ளேயே சில உட்பிரிவுகளும் தோன்றலாயின. ஒன்று முதல் பன்னிரண்டு வரை உட்பிரிவுகளும் ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் பிற சாதிக்கலப்பு சில நிகழ்ந்து விட்டது எனவும், அதுவே சாதி உட்பிரிவுகளுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
தமிழ்நாடு அரசு வெளியீடான ‘தமிழ்நாட்டு வரலாறு சங்க காலம் - வாழ்வியல் பகுதியில் சமுதாயம்’ என்ற தலைப்பில் பக்கம் 71 ல் பண்டைத் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலத்தாலும், செய்த தொழிலாலும் பெயர் பெற்றிருந்தனர்.
செய்தொழிலையொட்டி பண்டைத் தமிழ் மக்கள் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் நால்வகைத் தலைமைப் பிரிவினராகக் கருதப்பட்டனர். இவர்களிடையே சங்க காலத்தின் கடைசிப் பகுதி வரையில் வேற்றுமை பாராட்டுதலோ, உயர்வு-தாழ்வு மன்பான்மையோ இல்லை. சங்க காலம் என்பது கி.மு. 5 ம் நூற்றாண்டு முதல் கி.மு. 3 ம் நூற்றாண்டு வரையாகும்.
டேவிட் ஜி. மண்டல்பௌன் என்பவர் எழுதிய சொசைட்டி இன் இந்தியா பக்கம் 7 ல் கீழ்க் கண்டவாறு எழுதுகிறார். “அதாவது – வேத காலம் கி.மு. 600 ல் முடிவடைந்ததாகவும், அதன் பின் சாதி அமைப்புகள் தோன்றியதெனவும், கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டுகளில் அதாவது ஆயிரம் ஆண்டுகளாக சாதி வேற்றுமைகள் பெருமளவு வளர்ந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் பூர்வீகக் குடிகள், திராவிடர்கள் என்பது பற்றியோ, ஆரியர்கள் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்புதான் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பதிலோ, ஆரியர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவில் சாதி வேற்றுமைகள் எதுவும் கிடையாது என்பதிலோ நமக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடு எழத் தேவை இல்லை. ஏனென்றால், சமுதாயத்திலுள்ள நான்கு வகை வருணங்கள் பற்றிய குறிப்பு மனுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. மனுதர்ம சாத்திரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்தாகத் தெரிகிறது. (G.S. Ghurge 1961 p.87-97)
முழுமுதற் கடவுளின் (ஆதிபுருஷன்) வாயிலிருந்து பிராமணர்கள் தோன்றியதாகவும், அவர்கள் மதகுருமார்களாகவும், அறிவாளிகளாகவும் திகழ்ந்ததாகவும், கைகளிலிருந்து பிறந்த சத்திரியர்கள் வீரர்களாகவும், தொடையிலிருந்து பிறந்த வைசியர்கள் வணிகர்களாகத் திகழ்ந்ததாகவும், காலடியில் தோன்றிய சூத்திரர்கள் முதலில் தோன்றிய மூவர்களுக்கும் அடிமைகளாக, உழைப்பாளர்களாக, உழவர்களாகத் தோன்றியதாக ரிக் வேதம் குறிப்பிடுகிறது. . (Bashan
1954. P. 240-241). ஆனால் ஆரியர்கள் வருகைக்கு முன்பே எத்தகைய சாதி வேறுபாடுகளும் இன்றி திராவிட நாகரீகம் சிந்து நதி தீரத்தில் சீரும் சிறப்புமாக உலக நாகரிகத்தின் தொட்டிலாகத் திகழ்ந்து வந்ததுண்டு.
இந்தியாவில் இப்போது 3000 க்கு மேற்பட்ட சாதிகள் இருக்கின்றன. நான்கு வருணங்கள் நாலாயிரம் சாதிகளாக உருவெடுத்து விட்டன. ரிக் வேதத்தில் குறிப்பிட்ட வருணாச்சிரம தருமத்தின் அடிப்படையில் பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வகுப்பினரும், இரு பிறவியினர் (twice born) அதாவது உபநயனம் செய்வித்து புணித நூல் (பூணூல்) அணிவதினால் மறுபிறவி எடுக்கும் உரிமை உடையவர்கள் என்றும், ஆனால் சூத்திரர்களுக்கு அந்த உரிமை கிடையாதென்றும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
சாதிகள் பல தோன்றி அவற்றுள் உட்பிரிவுகளும், அவைகளுக்கு இடையில் உயர்வு-தாழ்வு மனப்பான்மைகளுடன் தொடர்ந்த சச்சரவுகளும் பிற்காலத்தில் எழுந்தன. சாதிகளுக்கிடையே வலது கை, இடது கை பிரிவுகளென ஏற்பட்டு பிரித்தாளும் சூழ்ச்சிகளும் கி.பி. 10 ம் நூற்றாண்டளவில் ஏற்பட்டது.
அத்தியாயம் 4 – வலங்கை - இடங்கை சாதிப் பாகுபாடுகள் - தொடரும்.
தொகுப்பு: க. சங்கிலிக்காளை