Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 29 பிப்ரவரி, 2016

சாலியர் வரலாறு – அத்தியாயம் 3 – ஆசிரியர் திரு. எஸ்.எம். நயினார்

மக்கள் மரபுகள்.

துமிழகத்தின் ஆதிகுடியினர் எனக் கூறப்படுவோர் - காடர், குறும்பர், மாலர், மாலாசர், மலையரசன், பறையர், பாணர்.  இவர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழாத நாடோடிகளாக இருந்தனர். இதற்குப் பின் தமிழ் மக்கள் தாங்கள் வாழ்ந்த நிலப்பகுதியினைத் தொல் பழங்காலத்தில் ஐவகையாகப் பிரித்து அவைகளை முறையே குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் மற்றும் பாலை எனக் கூறிவந்தனர்.  மலையும் அதைச் சார்ந்த இடங்களை குறிஞ்சி எனவும், காட்டையும் அதைச் சார்ந்த இடங்களை முல்லை எனவும், வயலையும் அதனைச் சார்ந்த இடங்களை மருதம் எனவும், கடலும் அதனைச் சார்ந்த இடங்களை நெய்தல் எனவும் தமிழர்கள் நான்கு பகுதிகளாக வகுத்து வழங்கி வந்தனர்.

இதில் குறிஞ்சி நிலத்திலும், முல்லை நிலத்திலும் சில பகுதிகள் சூரியனது வெப்ப மிகுதியால்  தம் இயல்பு இழந்து மணல்வெளியாக மாறுவதும் உண்டு.  அதை பாலை நிலம் என்பர். இவ்விதமான நிலங்களில் வாழ்ந்த மக்களை முறையே குறிஞ்சி நில மக்களை ஆடவர்களை பொருப்பன் - வெற்பன் - வேட்டுவன் - குறவன் எனவும் பெண்களை குறத்தி எனவும் அழைப்பர்.  முல்லை நில மக்களில் ஆடவரை குறும்பர் பொறைநாடன், இடையர், ஆயர் எனவும், பெண்களை இடைச்சி எனவும் அழைப்பர்.  மருத நில மக்களில் ஆண்களை உழவன், கடையர் எனவும், பெண்களை உழத்தி, கவச்சி எனவும் அழைப்பர்.  நெய்தல் நிலத்தில் ஆடவர்களைச் சேர்ப்பன், புலம்பல், பரதர், நுளையர் எனவும், பெண்களை நுழைச்சி எனவும் அழைப்பர். பாலை நில மக்களில் ஆடவர்களை விடலை, காளை, மீனி ஏய்னர், மறவர் எனவும், பெண்களை ஏய்த்தி, மறத்தி எனவும் அழைப்பர்.  இந்த ஐந்து நில மக்களை இன்னும் பல பெயர்களாலும் அழைப்பதுண்டு.  இவர்களிடையே நிலம் பற்றிய பிரிவே தவிர, சாதிகள் பற்றிய பிரிவுகள் இருந்ததில்லை.  இது போன்றே ஐநில மக்களுக்குக்கும் அறிவுரை வழங்கி வந்தோரான “அறிவர்” என்ற தமிழ்க் கம்மியர்களுக்கும் சாதிப் பாகுபாடுகள் இருந்ததில்லை என்று தமிழ் நூல்கள் கூறுகின்றன.

இவ்வாறு சாதிப் பாகுபாடுகள் இல்லாது வாழ்ந்து வந்த தமிழர்களிடையே கி.மு. ஆறாம் நூற்றாண்டு அளவில் தமிழ்நாட்டுக்கு வந்த ஆரியர்கள் தங்களின் சாதிக் கட்டுப்பாடுகளையும், சமயப் பழக்கவழக்கங்களையும் தமிழர்களிடையே புகுத்தினர். அவைகள் வர்ணாச்சிரம தர்மம் எனவும், பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று நான்கு வகையாக அவரவர்கள் செய்து வந்த தொழிலின் பட்டதாகவும் அமைந்தன.

ரிக் வேதத்தின்படி பிராமணர்கள் ஆண்டவரின் வாயின்றும், சத்திரியர்கள் இரண்டு கைகளிலிருந்தும், வைசியர்கள் இரு தொடைகளிலிருந்தும், சூத்திரர்கள் இரு பாதங்களிலிருந்தும் தோன்றியதாகக் கூறப்பட்டுள்ளது.

இவை தமிழர்களின் பழக்க வழக்கங்களுக்கு மாறானவையாக இருந்தாலும் தமிழர்கள் அக்கொள்கைகளைப் பின்பற்றத் துவங்கினர்.  தமிழர்களுடைய கலை, நாகரீகம், பண்பாடு எதுவென்று தெரியாதவாறு பெரிதும் ஒன்றோடொன்று கலந்து விட்டதென்றே கூறலாம்.  எனினும் ஆரியர்கள் தங்களை உயர் சாதியினர் என்று கூறிக் கொண்டதுடன் தமிழ் மக்கள் அனைவரையும் மிகவும் கீழாக இழிகுலத்தவராகவும் மதித்தனர்.

இப்படி சாதியமைப்பு முறை தமிழகத்தில் ஏற்பட்டு அதற்கு செல்வாக்கு பெரிதும் உண்டானதில் இருந்து தமிழ் மக்களிடையே சாதிக் காழ்ப்பு ஒரு பரவலான உணர்ச்சியாக வளர்ந்து விட்டது. இந்நிலமை கண்ட அக்கால பெரியோர்கள், புலவர்கள், துறவிகள் போன்றவர்கள் இந்தச் சாதிக் காழ்ப்பு உணர்ச்சிகளைத் தமிழர்களிடையே இருந்து அகற்ற பெரிதும் முயன்றனர்.

கி.மு. இரண்டாம் நூற்றாண்டளவில் பௌத்த சமண சமயத்தவர்கள் இந்தச் சாதி உயர்வு-தாழ்வுகளைத் தமிழர்களிடையே இருந்து அகற்ற முயன்று வந்தனர்.

சாதிப் பாகுபாடுகள் தோன்றி நிலைபெற்றதுடன் நில்லாது ஒரு சாதியருக்குள்ளேயே சில உட்பிரிவுகளும் தோன்றலாயின. ஒன்று முதல் பன்னிரண்டு வரை உட்பிரிவுகளும் ஏற்பட்டுள்ளன.  இதற்குக் காரணம் பிற சாதிக்கலப்பு சில நிகழ்ந்து விட்டது எனவும், அதுவே சாதி உட்பிரிவுகளுக்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.

தமிழ்நாடு அரசு வெளியீடான ‘தமிழ்நாட்டு வரலாறு சங்க காலம் - வாழ்வியல் பகுதியில் சமுதாயம்’ என்ற தலைப்பில் பக்கம் 71 ல் பண்டைத் தமிழ் மக்கள் வாழ்ந்த நிலத்தாலும், செய்த தொழிலாலும் பெயர் பெற்றிருந்தனர்.

செய்தொழிலையொட்டி பண்டைத் தமிழ் மக்கள் அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் என்னும் நால்வகைத் தலைமைப் பிரிவினராகக் கருதப்பட்டனர்.  இவர்களிடையே சங்க காலத்தின் கடைசிப் பகுதி வரையில் வேற்றுமை பாராட்டுதலோ, உயர்வு-தாழ்வு மன்பான்மையோ இல்லை.  சங்க காலம் என்பது கி.மு. 5 ம் நூற்றாண்டு முதல் கி.மு. 3 ம் நூற்றாண்டு வரையாகும்.

டேவிட் ஜி. மண்டல்பௌன் என்பவர் எழுதிய சொசைட்டி இன் இந்தியா பக்கம் 7 ல் கீழ்க் கண்டவாறு எழுதுகிறார். “அதாவது – வேத காலம் கி.மு. 600 ல் முடிவடைந்ததாகவும், அதன் பின் சாதி அமைப்புகள் தோன்றியதெனவும், கி.பி. 10-11 ஆம் நூற்றாண்டுகளில் அதாவது ஆயிரம் ஆண்டுகளாக சாதி வேற்றுமைகள் பெருமளவு வளர்ந்து விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் பூர்வீகக் குடிகள், திராவிடர்கள் என்பது பற்றியோ, ஆரியர்கள் சுமார்   4000 ஆண்டுகளுக்கு முன்புதான் மத்திய ஆசியாவிலிருந்து வந்தவர்கள் என்பதிலோ, ஆரியர்கள் வருவதற்கு முன்பு இந்தியாவில் சாதி வேற்றுமைகள் எதுவும் கிடையாது என்பதிலோ நமக்கு எந்தவிதமான கருத்து வேறுபாடு எழத் தேவை இல்லை.  ஏனென்றால், சமுதாயத்திலுள்ள நான்கு வகை வருணங்கள் பற்றிய குறிப்பு மனுதர்ம சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.  மனுதர்ம சாத்திரம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்தாகத் தெரிகிறது. (G.S. Ghurge 1961 p.87-97)

முழுமுதற் கடவுளின் (ஆதிபுருஷன்) வாயிலிருந்து பிராமணர்கள் தோன்றியதாகவும், அவர்கள் மதகுருமார்களாகவும், அறிவாளிகளாகவும் திகழ்ந்ததாகவும், கைகளிலிருந்து பிறந்த சத்திரியர்கள் வீரர்களாகவும், தொடையிலிருந்து பிறந்த வைசியர்கள் வணிகர்களாகத் திகழ்ந்ததாகவும், காலடியில் தோன்றிய சூத்திரர்கள் முதலில் தோன்றிய மூவர்களுக்கும் அடிமைகளாக, உழைப்பாளர்களாக, உழவர்களாகத் தோன்றியதாக ரிக் வேதம் குறிப்பிடுகிறது.  .  (Bashan 1954. P. 240-241).  ஆனால் ஆரியர்கள் வருகைக்கு முன்பே எத்தகைய சாதி வேறுபாடுகளும் இன்றி திராவிட நாகரீகம் சிந்து நதி தீரத்தில் சீரும் சிறப்புமாக உலக நாகரிகத்தின் தொட்டிலாகத் திகழ்ந்து வந்ததுண்டு.

இந்தியாவில் இப்போது 3000 க்கு மேற்பட்ட சாதிகள் இருக்கின்றன.  நான்கு வருணங்கள் நாலாயிரம் சாதிகளாக உருவெடுத்து விட்டன.  ரிக் வேதத்தில் குறிப்பிட்ட வருணாச்சிரம தருமத்தின் அடிப்படையில் பிராமணர், சத்திரியர், வைசியர் ஆகிய மூன்று வகுப்பினரும், இரு பிறவியினர் (twice bornஅதாவது உபநயனம் செய்வித்து புணித நூல் (பூணூல்) அணிவதினால் மறுபிறவி எடுக்கும் உரிமை உடையவர்கள் என்றும், ஆனால் சூத்திரர்களுக்கு அந்த உரிமை கிடையாதென்றும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.

சாதிகள் பல தோன்றி அவற்றுள் உட்பிரிவுகளும், அவைகளுக்கு இடையில் உயர்வு-தாழ்வு மனப்பான்மைகளுடன் தொடர்ந்த சச்சரவுகளும் பிற்காலத்தில் எழுந்தன.  சாதிகளுக்கிடையே வலது கை, இடது கை பிரிவுகளென ஏற்பட்டு பிரித்தாளும் சூழ்ச்சிகளும் கி.பி. 10 ம் நூற்றாண்டளவில் ஏற்பட்டது.

அத்தியாயம் 4 – வலங்கை - இடங்கை சாதிப் பாகுபாடுகள் - தொடரும்.

தொகுப்பு: க. சங்கிலிக்காளை


ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில் - திருவள்ளுர் மாவட்டம், தமிழ்நாடு

அருள்மிகு பாலசுப்பிரமணியர் திருக்கோவில்
சிறுவாபுரி, சின்னம்பேடு – 601 206, திருவள்ளுர் மாவட்டம், தமிழ்நாடு 
தொலைபேசி எண்: 0 44 2471 2173, 94442 80595, 94441 71529, 97909 57599 

சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையிலிருந்து சுமார் 40 கி.மீ. தொலைவிலும், நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள அருணகிரி நாதரால் பாடப்பெற்ற பாலசுப்பிரமணியர் கோவில்.  சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கும்மிடிப்பூண்டி அல்வது கவரப்பேட்டை செல்லும் பேருந்துகள் மூலம் சிறுவாபுரி புது ரோடு பேருந்து நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள சிறுவாபுரியை ஷேர் ஆட்டோ மூலமாகவோ நடந்தோ சென்றடையலாம்.   


தைப்பூசம், பங்குனி உத்திரம், நவராத்திரி, திருக்கார்த்திகை நாட்களில் திருவிழாக்கள் நடைபெற்றாலும், பூச நட்சத்திரத்திலும், செவ்வாய்க்கிழமைதோறும் இத்திருக்கோவிலுக்குச் சென்று வழிபடுவது சிறப்பு. 
முருகக் கடவுளைத் தவிர அனைத்து தெய்வங்களும் மரகதத்தால் ஆனது இங்கு சிறப்பு. மரகத மயிலையும் தரிசிக்கலாம்.
காலை 7 மணி முதல் 12 மணி வரையும் மாலை 5 மணி முதல் 7 மணி வரை திறந்திருக்கும்.
மூலவர் பாலசுப்பிரமணியர் நாலரை அடி உயரத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவர் எதிரே அருணகிரிநாதர் சன்னதி உள்ளது. முருகனுக்கு வலது பக்கம் அண்ணாமலை – உண்ணாமுலை அம்மன் சன்னதி உள்ளது. இவர்களுக்கு நடுவில் வள்ளியும், முருகப்பெருமானும் கைகோர்த்து திருமணக் கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பாகும். இத்தகைய திருக்கோலத்தினை காண்பது மிகவும் அரிதான ஒன்று. 

வள்ளி திருமணம் பூச நட்சத்திரத்திலேயே நடைபெற்றதாகவும், இத்திருக்கோவிலில் பூச நட்சத்திரத்தில் வழிபாடு செய்பவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறுவதாகவும் நம்பப்படுகிறது. திருத்தணியில் மாசி மாதம் பூச நட்சத்திரத்தில் வள்ளி திருமணம்
நடைபெறுகிறது.

இத்தலத்திற்கு வந்து வழிபடுபவர்களுக்கு வீடு, வாகன யோகமும், வழக்குகளில் வெற்றியும், திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பது நம்பிக்கை. 

ராமபிரான் தன் பட்டாபிஷேகத்திற்குப் பின், ஊராரின் பழிச்சொல் கேட்டு தன் கர்ப்பினி மனைவியான சீதையை காட்டிற்கு அனுப்பி விட்டார். அங்கு லவன், குசனுடன் வசித்த சமயத்தில் அஸ்வமேத யாகம் செய்தார். அவர் அனுப்பிய யாகக் குதிரையை லவனும், குசனும் கட்டிப் போட்டு விட்டனர். 

குதிரையைக் கண்டுபிடித்து வர லட்சுமணனை அனுப்பி, முயற்சி தோல்வியடைந்ததால் இராமரே நேரில் சென்று குதிரையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். அப்போது தன் தந்தைதான் வந்திருக்கிறார் என்றறியாத லவன், குசன் இருவரும் இராமனுடன் போரில் ஈடுபட்டனர். அவ்வாறு இராமனுடன் வில், அம்புடன் போரில் ஈடுபட்ட இடமே சிறுவாபுரி என்ற சின்னம்பேடு என இத்தல வரலாறு கூறுகிறது. சிறுவர் அம்பு எடு என்பது
சின்னம்பேடு என ஆனது. சிறுவர் போர் புரி என்று பெயர்க்காரணம் பெற்று இத்தலம் காலப்போக்கில் சிறுவாபுரி எனவும் அழைக்கப் படுகிறது.

இத்தலத்திற்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டு அருள்பெறுமாறு வேண்டுகிறோம். 




ஆக்கம்: க. சங்கிலிக்காளை

சனி, 27 பிப்ரவரி, 2016

வாழைப்பூவின் மருத்துவ குணங்கள்



மங்கலகரமான வாழையின் ஒவ்வொரு பாகமும் பயன்படுகின்றது(வாழையிலை, வாழைக்காய், வாழைத்தண்டு, வாழைப்பழம்). வாழைப்பூவின் மருத்துவ குணங்கள் தெரிந்தால் அதைச் செய்வது கடினமாகினும் அடிக்கடி செய்வோம்.

1. இரத்தத்தைச் சுத்தப்படுத்த
வாழைப்பூவை வாரம் இருமுறை சமைத்து உண்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளைக் கரைத்து வெளியேற்றும். இதனால் இரத்தத்தின் பசைத்தன்மை குறைந்து, இரத்தம் வேகமாகச் செல்லும். மேலும் இரத்த நாளங்களில் ஒட்டியுள்ள கொழுப்புகளைக் கரைத்து இரத்தத்தை சுத்தப்படுத்தும். இதனால் இரத்தமானது அதிகமான ஆக்ஸிஜனை உட் இரப்பதுடன், தேவையான இரும்பு சத்தையும் உட்கிரகிப்பதுடன். இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்ற நோய்கள் ஏற்படாமல் தடுக்கும்.

2. சர்க்கரை நோயாளிகளுக்கு
இரத்தத்தில் கலந்துள்ள அதிகளவு சர்க்கரைப் பொருளைக் கரைத்து வெளியேற்ற வாழைப்பூவின் துவர்ப்புத்தன்மை அதிகம் உதவுகிறது. இதனால் இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு குறைகிறது.

3. வயிற்றுப்புண் நீங்க
இன்றைய உணவுமுறை மாறுபாட்டாலும், மன உளைச்சலாலும் வயிற்றில் செரியாமை உண்டாகி அதனால் அபான வாயு சீற்றம் கொண்டு வயிற்றில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்த புண்களை ஆற்ற வாழைப் பூவை வாரம் இருமுறை உணவில் சேர்த்து வந்தால் வயிற்றுப் புண்கள் ஆறும். செரிமானத்தன்மை அதிகரிக்கும்.

4. மூலநோயாளிகளுக்கு

மூலநோயின் பாதிப்பினால் மலத்துடன் இரத்தம் வெளியேறுதல், உள்மூலம், வெளிமூலப் புண்கள் இவற்றுக்கு சிறந்த மருந்தாக வாழைப் பூவைப் பயன்படுத்தலாம். வாழைப்பூ மூலக்கடுப்பு, இரத்த மூலம் போன்றவற்றைக் குணப்படுத்தும்.

மலச்சிக்கலைப் போக்கும் . சீதபேதியையும் கட்டுப்படுத்தும். வாய்ப் புண்ணைப் போக்கி வாய் நாற்றத்தையும் நீக்கும்.

5. பெண்களுக்கு
பெண்களுக்கு உண்டாகும் கருப்பைக் கோளாறுகள். மாதவிலக்கு காலங்களில் அதிக இரத்தப்போக்கு, அல்லது இரத்த போக்கின்மை, வெள்ளைப்படுதல் போன்ற நோய்களுக்கு வாழைப்பூவை உணவில் சேர்த்துக்கொண்டு வந்தால் நோய்கள் நீங்கும் .வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும்.

6. உடல் அசதி, வயிற்று வலி குறையும். வாழைப்பூவைப் பருப்புடன் சேர்த்து உண்டால் கை,கால் எரிச்சல் குணமாகும்.வயிற்றில் இருக்கும் புழுக்களைக் கொல்லும் சக்தி வாழைப்பூவிற்கு உண்டு. ஆண்களுக்கு தாதுவை விருத்தி செய்து விந்துவை கெட்டிப்படுத்தும்.
ஒவ்வொரு காய்க்கும் ஒவ்வொரு சக்தி, வாழைப்பூ பலவிதப் பிரச்சினைகளைப் போக்கும் வல்லமை கொண்டது. அப்படிப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்த வாழைப்பூவை உசிலியாக, அடையாக, வடையாக, கூட்டாகப் பல வழிகளில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

Courtesy:

https://web.facebook.com/thenthisaidotcom/?fref=ts

இரத்த அழுத்தத்தை குறைக்கும் பச்சை பயறு – நன்றி : தினகரன்


உயர் ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்க கூடியதும், முடி உதிர்வை தடுக்க கூடியதுமான பச்சை பயறு  குறித்து நாம் இன்று பார்ப்போம்:  பல்வேறு சத்துக்களை கொண்ட பச்சை பயறு, உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது. மேல் பூச்சு  மருந்தாகவும் பயன்படக் கூடியது. பச்சை பயறில் புரதம், மினரல், வைட்டமின் அதிகம் உள்ளன. பச்சை பயறை கொண்டு உயர்  ரத்த அழுத்தம், கொழுப்பு அதிகம் உள்ளவர்களுக்கான உணவு தயாரிக்கலாம்.

ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் விட்டு, அதில் 2 பல் பூண்டு, மிளகு தட்டி போடவும்.  லவங்க பட்டை சேர்க்கவும். இதில்,  வேகவைத்து அரைத்து வைத்த பச்சை பயறை போட்டு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். சுவைக்காக உப்பு சிறிதளவு சேர்க்கலாம்.  5 நிமிடத்தில்  பச்சை பயறு சூப் தயார். இதை சாப்பிட்டுவர பிபி, கொழுப்பின் அளவு குறையும்.முளைவிட்டு இருக்கும் பச்சை  பயறில் அதிக வைட்டமின் உள்ளது. ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதால், ரத்த ஓட்டம் சீராகும். சர்க்கரை  நோயின் அளவை குறைக்கும் தன்மை கொண்டது பச்சை பயறு.

2ஸ்பூன் பச்சை பயறு மாவு, சிறிதளவு மஞ்சள், கால் ஸ்பூன் குப்பை மேனி இலைப்பொடி, பசும்பால் ஆகியவற்றை கலந்து  பெண்கள், முகத்தில் தடவி வரவேண்டும். அவ்வாறு செய்தால் முகத்தில் முடி வளர்வது தடுக்கப்படும். மேலும், முகம் பொலிவு  பெறும். சுருக்கங்கள் மறைந்து முகம் மென்மை பெறும்.பச்சை பயறை கொண்டு பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் வலியை  குறைக்கும் மேல்பூச்சு மருந்து தயாரிக்கலாம். பச்சை பயறை ஊற வைத்து அரைத்து பசை எடுத்துக் கொள்ளவும். அதில்  கொஞ்சம் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். அதை சிறிது நேரம் கிளறினால் களி போன்று வரும். இதை இளஞ்சூடு  பதத்தில் வீக்கம் இருக்கும் இடத்தில் தடவ வேண்டும்.

இது, பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு அதிகம் பால் சுரப்பால் ஏற்படும் மார்பக வீக்கத்தை சரி செய்யும். பால் சுரப்பை  சமப்படுத்தும். அக்குளில் ஏற்படும் நெறிக்கட்டியை சரி செய்யும். பச்சை பயறை கொண்டு முடி உதிர்வதை தடுக்கும் உணவு  தயாரிக்கலாம். அடுப்பில் நல்லெண்ணெய் காய்ந்தவுடன், சிறிது சிவப்பு மிளகாயை போடவும். அதில் பச்சை பயறு, தேவையான  உப்பு சேர்த்து கிளறியபின் எடுத்து சாப்பிடலாம். இது முடி உதிர்வை தடுக்கும்.

பச்சை பயறில் புரதச்சத்து நிறைந்திருக்கிறது. ஆரோக்கியத்தை தரக்கூடிய இதில் நார்ச்சத்து மிகுதியாக உள்ளது. கேன்சரை  தடுக்க கூடியது. வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது. அரிசியோடு பச்சை  பயறு சேர்த்து பொங்கலாக சாப்பிட்டுவர உடல் ஆரோக்கியம் பெறும்.


http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3824&cat=500

தினை அரிசி உப்புமா



தேவையானவை: தினை அரிசி – ஒரு கப், வெங்காயம், கேரட், குடமிளகாய் (சின்னது) – தலா ஒன்று, பச்சைப் பட்டாணி – அரை கப், காய்ந்த மிளகாய் – 2, கடுகு – அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, எண்ணெய் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் தாளிக்கவும். நறுக்கிய வெங்காயம் சேர்த்து, வதங்கியதும் பச்சைப் பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட், குடமிளகாயை சேர்க்கவும். இதில், ஒரு கப் திணை அரிசிக்கு இரண்டு கப் என்ற விகிதத்தில் தண்ணீர் ஊற்றவும். கொதித்ததும் உப்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லி, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் போட்டு, திணை அரிசியை போட்டு மூடி, அடுப்பை ‘சிம்’மில் வைக்கவும். 10 நிமிடம் கழித்து கிளறி இறக்கவும்.
  
Courtesy:
 
https://web.facebook.com/thenthisaidotcom/photos/a.1489154131401121.1073741828.1487860264863841/1563858850597315/?type=3&theater

இரவு நேரத்துக்கு ஏற்ற எளிய உணவு


”காலையில் ராஜாவைப் போல் சாப்பிடு, மதியம் சேவகனைப் போல் சாப்பிடு, இரவில் பிச்சைக்காரனைப் போல் சாப்பிடு” என ஒரு பழமொழி உண்டு. காலையில் எல்லா சத்துக்களும் நிரம்பிய தானியங்கள், பழங்கள், காய்கறிகள் கலந்த உணவை சாப்பிட வேண்டும். மதியம் நிறைய காய்கறிகள் கொஞ்சம் சோறு, இரவில் எளிதில் ஜீரணமாகக்கூடிய, எளிதான உணவை மிகக் குறைவாக சாப்பிட வேண்டும் என்பதே இதன் அர்த்தம். மாறாக நாம் காலையில் சாப்பிடாமல், ஒரு நாளை ஆரம்பிக்கிறோம். இரவில் கொழுப்புச்சத்து நிரம்பிய வறுத்த, பொரித்த உணவுகளை அதிக அளவில் உண்டு விடுகிறோம். பிரியாணி, ஃப்ரைடு ரைஸ், பரோட்டா தான் இன்றைக்கு பெரும்பாலானோரின் இரவு உணவு. எடை அதிகரிப்பதற்கும், நோய்கள் உள்ளே வருவதற்கும் முக்கியக் காரணமே இந்த உணவுமுறைதான்.


ஆரோக்கியமான, எளிதான உணவை இரவில் எடுத்துக்கொள்வதன் மூலம், பல்வேறு நோய்களில் இருந்து காக்க முடியும். அப்படியான உணவு வகைகள் சிலவற்றை டயட் கவுன்சலர் கிருஷ்ணமூர்த்தி சொல்லித்தர, அவற்றை செய்து காட்டியிருக்கிறார் சமையல் கலை நிபுணர் பத்மா.
என்ன சாப்பிட வேண்டும்?
உப்புமா, சுக்கா ரொட்டி, சப்பாத்தி, இட்லி, இடியாப்பம், தோசை, சாலட் என வயிற்றுக்குப் பங்கம் விளைவிக்காத, மிதமான உணவைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிடலாம். கூடவே பருப்பு சாம்பார், கொத்தமல்லி, தேங்காய், புதினாவில் செய்த சட்னி வகைகளைச் சிறிதளவு சாப்பிடும்போது, நல்ல ஜீரண சக்தி கிடைக்கும்.

எவற்றைச் சாப்பிடக்கூடாது?
நூடுல்ஸ், பரோட்டா, அசைவ உணவுகள், வறுத்த பொரித்த உணவுகள், மசாலா உணவுகள், ஜங்க் ஃபுட், கூல் டிரிங்ஸ் இவற்றைத் தவிர்க்கவேண்டும். மசாலா உணவுகள் அசிடிட்டியை ஏற்படுத்தும். அசைவம், பரோட்டா உணவுகள் மலச்சிக்கலை ஏற்படுத்தும்.

எப்படிச் சாப்பிடுவது?
இரவு 7-8 மணிக்குள் சாப்பிட்டு விடவேண்டும். லேட் நைட்டில் சாப்பிடுவதால் காலையில், மலச்சிக்கல் பிரச்னை வரலாம். காலையில் பசி எடுக்காது. இரவு உணவை அதிகமாகவோ குறைவாகவோ எடுத்துக்கொள்ளக் கூடாது. தூங்கச் செல்கையில், அரை வயிறாகத்தான் இருக்க வேண்டும். அப்படியே பசித்தாலும், ஒரு டம்ளர் பாலுடன் ஏதேனும் ஒரு பழம் சாப்பிடலாம்.

1. சப்பாத்தி தால்
சப்பாத்திக்குத் தேவையானவை: கோதுமை மாவு 200 கிராம், வெண்ணெய் ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன் வெண்ணெய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசைந்து சிறு உருண்டைகளாக உருட்டி, சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு மிதமான வெப்பத்தில் சுட்டு எடுக்கவும். வெண்ணெய்க்குப் பதிலாக மிதமான சூட்டில் இருக்கும் பால் அல்லது தண்ணீர் சேர்த்துப் பிசையலாம். இதனால் சப்பாத்தி மிருதுவாக இருக்கும்.

தால் தேவையானவை: பாசிப்பருப்பு 100 கிராம், இஞ்சி ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய், தக்காளிப்பழம் தலா 1, எண்ணெய் ஒரு டீஸ்பூன். கடுகு ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்துமல்லி சிறிதளவு.

செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, ஒரு டீஸ்பூன் கடுகு போட்டுத் தாளித்து, துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சைமிளகாய், நறுக்கிய ஒரு தக்காளி சேர்த்து வதக்கவும். பிறகு, வேகவைத்த பருப்பு, உப்பு சேர்த்துக் கொதிக்கவிடவும். நறுக்கிய கொத்தமல்லி சேர்த்துக் கலக்கவும்.

2. 3ஜவ்வரிசி உப்புமா வெங்காயச் சட்னி

தேவையானவை: ஜவ்வரிசி 100 கிராம், பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், வறுத்த வேர்க்கடலை தலா ஒரு கப், பச்சைமிளகாய் 1, துருவிய இஞ்சி ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பொட்டுக்கடலை 2 டீஸ்பூன், கொத்தமல்லி சிறிதளவு, விருப்பப்பட்டால் நெய் 1 டீஸ்பூன், எலுமிச்சம்பழம் அரை மூடி.

செய்முறை: ஜவ்வரிசியை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, ஒரு மணி நேரம் ஊறவிடவும். கடாயில் நெய் விட்டு, கடுகு, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு வெங்காயம், பொட்டுக்கடலை, இஞ்சி, கேரட் துருவல், வேர்க்கடலை எல்லாவற்றையும் சேர்த்து, ஊறிய ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். உப்பு சேர்த்துக் கிளறி ஜவ்வரிசி வெந்ததும் நறுக்கிய கொத்துமல்லி எலுமிச்சம் பழச்சாறு கலந்து நன்றாகக் கிளறி இறக்கவும்.

வெங்காயச் சட்னி: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு 10 சின்ன வெங்காயத்தைத் தோல் உரித்துச் சேர்த்து வதக்கவும். 2 காய்ந்த மிளகாய், 2 டீஸ்பூன் கடலைப்பருப்பு சேர்த்து வறுத்து, உப்பு சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும். கடுகு தாளித்து நன்றாகக் கலக்கவும்.

3. அவல் தோசை தேங்காய் சட்னி
தேவையானவை: அவல் 200 கிராம், அரிசி 100 கிராம், உப்பு தேவையான அளவு, கடுகு, இஞ்சி துருவல் சிறிது, மிளகாய் 1.

செய்முறை: அவல், அரிசியை ஒரு மணி நேரம் தனித்தனியே ஊறவைத்து, ஒன்றாகச் சேர்த்து நைஸாக அரைக்கவும். மாவுடன் உப்பு சேர்த்து கடுகு, மிளகாய், இஞ்சி போட்டுத் தாளித்துக் கொட்டி கலக்கவும். தோசைக்கல்லில் மாவை ஊற்றி, மிதமான வெப்பத்தில் தோசைகளைச் சுட்டெடுக்கவும்.

தேங்காய் சட்னி: ஒரு கப் தேங்காய்த் துருவலுடன், 1 பச்சை மிளகாய், 4 டீஸ்பூன் பொட்டுக்கடலை, உப்பு சேர்த்துத் தண்ணீர் விட்டு அரைக்கவும். அவல் தோசைக்கு அருமையான சைடுடிஷ்.

4. இடியாப்பம் சொதி
தேவையானவை: இட்லி அரிசி கால் கிலோ, எண்ணெய் ஒரு ஸ்பூன், உப்பு தேவையான அளவு.

செய்முறை: அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்துக் களைந்து, சிறிது தண்ணீர் விட்டு, கிரைண்டரில் நைஸாக அரைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு மாவை, தோசைமாவுப் பதத்தில் கரைத்து உப்பு சேர்த்து மிதமான வெப்பத்தில் அடுப்பில் வைத்து கெட்டியாகக் கிளறவும். ஆறியதும் நீளவாக்கில் மாவை நன்றாகப் பிசைந்து உருட்டிவைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் (உருண்டைகள் மூழ்கும் அளவுக்கு) விட்டு நன்றாகக் கொதிக்கவிடவும். உருண்டைகளைப் போட்டு நன்றாக வெந்ததும், இடியாப்ப அச்சில் ஒவ்வொன்றாகப் போட்டுப் பிழிந்துகொள்ளவும்.

சொதி: 6 பீன்ஸ், 1 கேரட், 1 குடமிளகாய் மூன்றையும் நீளவாக்கில் நறுக்கி, சிறிது எண்ணெய் விட்டு வதக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். நன்றாக வெந்ததும் 100 மி.லி தேங்காய்ப்பால் சேர்க்கவும். சிறிது எண்ணெயில் கடுகு தாளித்து இறக்கவும்.

5. குழிப்பணியாரம் சட்னி
தேவையானவை: இட்லி அரிசி 200 கிராம், வெந்தயம் 2 டீஸ்பூன், உளுத்தம் பருப்பு 4 டீஸ்பூன், தேங்காய்ப்பால் 100 மி.லி, கேரட் துருவல், பொடியாக நறுக்கிய வெங்காயம் தலா ஒரு கப், பொடியாக நறுக்கிய இஞ்சி ஒரு டீஸ்பூன், பச்சைமிளகாய் 1, கடுகு ஒரு ஸ்பூன், எண்ணெய், உப்பு தேவையான அளவு.

செய்முறை: இட்லி அரிசியுடன் வெந்தயம், உளுத்தம் பருப்பு சேர்த்து, இரண்டு மணிநேரம் ஊறவைத்துக் களைந்து, சிறிது தண்ணீர் விட்டு மிக்ஸியில் நைஸாக அரைத்து, தேவையான உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து, கேரட், வெங்காயம், இஞ்சி, பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி மாவுடன் கலந்து, தேங்காய்ப் பால் விடவும். பணியாரக் கல்லில் ஒவ்வொரு குழியிலும் சிறிது எண்ணெய் விட்டு மாவை ஊற்றிப் பொன்னிறமாக இருபுறமும் திருப்பி வேகவிடவும். புதினா, தேங்காய், வெங்காயம், கொத்தமல்லி என இதற்குத் தொட்டுக்கொள்ள எல்லா வகைச் சட்னியும் அருமையாக இருக்கும்.

6. கேழ்வரகு தோசை சட்னி
தேவையானவை: கேழ்வரகு மாவு 200 கிராம், கடுகு, சீரகம் தலா ஒரு டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, பெருங்காயத்தூள் சிறிதளவு, எண்ணெய் 100 மி.லி

செய்முறை: கேழ்வரகு மாவுடன் உப்பு, சீரகம், பெருங்காயத்தூள்,கடுகு சேர்த்துத் தாளித்து, தோசைமாவுப் பதத்தில் கரைத்துக்கொள்ளவும். தோசைக்கல்லைக் காயவைத்து, மிதமான வெப்பத்தில் தோசை மாவைப் பரவலாக ஊற்றி இருபுறமும் எண்ணெய்விட்டு வெந்ததும் எடுக்கவும்.

இதற்குத் தொட்டுக்கொள்ள, தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.

7. ஆலு சப்பாத்தி கொத்தமல்லி சட்னி
தேவையானவை: கோதுமை மாவு 200 கிராம், வெண்ணெய் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, சிறிய உருளைக்கிழங்கு 3, மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன்.

செய்முறை: உருளைக்கிழங்கை வேகவிட்டு தோல் உரித்து நன்றாக மசிக்கவும். இதில், கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு, வெண்ணெய், மிளகாய்த்தூள் சேர்த்துத் தண்ணீர் சேர்த்துக் கெட்டியாகப் பிசையவும். இதைச் சப்பாத்திகளாக இட்டு, தோசைக் கல்லில் போட்டு சுட்டெடுக்கவும்.

கொத்தமல்லி சட்னி: கொத்தமல்லி, பச்சைமிளகாய், உப்பு மூன்றையும் சேர்த்து அரைத்து, கடுகு தாளித்துக் கலக்கவும்.
‪#‎vikatan‬

Courtesy: 
https://web.facebook.com/thenthisaidotcom/posts/1563856920597508
 

வெள்ளி, 26 பிப்ரவரி, 2016

பன்னிரு திருமுறை இசை விழா - பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை - அனுமதி இலவசம்






அன்புடையீர்,

வணக்கம்....
"கலைமாமணி" திருமதி தேச மங்கையர்க்கரசி அவர்களின் ஆத்ம ஞான மையம் - ஸ்ரீ கிருஷ்ண கான சபா மற்றும் வேத ஆகம தெய்வத் தமிழ் இசை மன்றத்துடன் இனைந்து “பன்னிரு திருமுறை இசை விழா” என்கிற மாபெரும் விழாவினை ஏற்பாடு செய்துள்ளது. இவ்விழாவானது பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் மார்ச் 6 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தமிழ்த் திருமுறைகளை மையமாக வைத்து இயல்,இசை மற்றும் நாட்டிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. நமது பாரம்பரியமான திருமுறைகளை அனைவருக்கும் சேர்க்கும் இந்நிகழ்விற்கு தாங்கள் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களோடு கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். முடிந்த வரை இந்த அழைப்பிதழை உங்களுக்கு தெரிந்தவர்களுக்குப் பகிர்தல் (share) செய்து அவர்களையும் கலந்து கொண்டு சிறப்பிக்கச் செய்யுங்கள்.

அனுமதி முற்றிலும் இலவசம். அனைவரும் வந்து திருமுறைகளின் அருமை, பெருமைகளை இசையாலும், சொற்பொழிவுகளினாலும் மற்றும் நடனத்தின் மூலமாகவும் கண்டு, கேட்டு விழாவினை சிறப்பித்துத் தர வேண்டுகிறோம்.

நடைபெறும் இடம் - ஸ்ரீ கிருஷ்ண கான சபை, தி. நகர், சென்னை

தேதி - 28 ஆம் தேதி பிப்ரவரி முதல் 6 ஆம் தேதி மார்ச் வரை

நேரம் -
வார நாட்களில் (29-02-16 முதல் 03-03-2016 வரை) - மாலை 2.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை

வாரக் கடைசி நாட்களில் (28-02-2016 & 04,05,06-03-2016) - காலை 8.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை








முதுமையை தடுத்து இளமை தரும் கொய்யா - உணவே மருந்து – நன்றி : தினகரன்


பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி சாப்பிடக்கூடியது கொய்யாப் பழம். இதில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டது. வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகிய உயிர்ச்சத்துகளும், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் கொய்யா பழத்தில் நிறைந்துள்ளது. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும். இம்மரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்ப்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும்.

கொய்யாப்பழத்தை அரிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் படும்படி நன்றாக மென்று தின்பதே நல்லது. இதன்மூலம் பற்களும், ஈறுகளும் பலப்படும். வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் உள்ளது. எனவே, வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும். கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலுடன் சாப்பிட வேண்டும்.

முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது. மதுபோதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம். உணவு சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல.

சாப்பிட்ட பின்போ அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ சாப்பிட்டால் நல்லது. நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல், தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் நோய் அதிகமாகும். ஒரு சிலருக்கு மயக்கம் ஏற்படும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடவே கூடாது. மற்றவர்கள் கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடாமல் இருப்பது சிறந்தது. இரவில் சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=3206&cat=500
 

திங்கள், 22 பிப்ரவரி, 2016

ஆக்ரோஷம் பித்தம் தணிக்கும் பழையசோறு! - உணவே மருந்து – நன்றி : தினகரன்




அடிக்கிற வெயிலுக்கு அன்னமே வேண்டாம் ,வெறும் நீராகாரத்தைக் குடிச்சிட்டு நிம்மதியாக் கிடக்கலாம்சாமி!” -இது வெயில்காலத்தில், வேப்பமரத்தடியில் சர்வசாதாரணமாகக் கேட்கக்  கூடியவசனம். இது வெறும் வார்த்தை மட்டுமல்ல 100 சதவிகிதம் உண்மை. ‘ஏனென்றால், நீராகாரம் என்கிற பழைய சாதத்தில் தான் அத்தனைசத்துகளும் இருக்கின்றன.

‘நம் முன்னோர்கள் வாழ்வோடு இரண்டறக்கலந்தது பழையசாதம். காலையில் ஒரு முட்டிகஞ்சியை, வெங்காயம், பச்சைமிளகாயோடு சேர்த்துக்குடித்துவிட்டு தான் வயலுக்குப் போவார்கள். அவர்களுக்குத் தேவையான உடல் வலிமையையும் சத்தையும் அந்தப்பழஞ்சோறு தான் கொடுத்தது.

‘சாதத்தைவடித்து, அதில் தண்ணீர் ஊற்றி வைத்தால், மறுநாள் காலையில் அது பழையசாதம். சாதத்தை அலுமினியம், மண், ஸ்டீல் எனப் பல்வேறு பாத்திரங்களில் வைத்து பின்னர் அதை ஆய்வுக் கூடத்தில் பரிசோதனை செய்ததில் மண்பானை பழையசாதத்தில் தான் நல்ல தரமும் வாசமும் இருந்தது.

சாதத்தில் தண்ணீர் ஊற்றி, இரவு முழுவதும் ஊறவிடும் போது அதில் நுண்ணுயிர்கள்(லாக்டிக்ஆசிட்பாக்டீரியா) வளர்கிறது. லேசாக அமிலத்தன்மையும் உண்டாகும். அதனால் தான் அதில் புளிப்புச் சுவை ஏற்படுகிறது. நுண்ணுயிர்கள், வைட்டமின்களை உருவாக்குவதால், ‘பி’ வைட்டமின்கள் அதிகரிக்கிறது. புரதமும் மாவுச்சத்தும்(ஸ்டார்ச்) எளிதில் செரிக்கப்படும் தன்மை பெறுகிறது. ஓர் இரவு முழுவதும் ஊறுவதால், அதன் ஊட்டச் சத்துக்கள் அதிகரிக்கப்படுவதுதான், அதன் சத்துக்குக் காரணம்.

சாதம் மீதி இருந்தால் ஃப்ரிட்ஜில் வைத்து, மறுநாள் சூடு செய்து சாப்பிடுவதை விட,தண்ணீர் ஊற்றி வைத்து சாப்பிடுவது, செரிமானத்துக்கும் நல்லது, சத்துகளும் கிடைக்கும். அந்த ஊட்டச் சத்துகள் கரைந்திருப்பதால், நீராகாரமும் ரொம்ப நல்லது. மேலும், பழைய சாதம் சாப்பிட்டால் எடை கூடும், தூக்கம் வரும் என்று சொல்வதில் உண்மை இல்லை. எந்த உணவையும் வயிறு முட்ட சாப்பிட்டால் தான் தூக்கம் வரும். அளவுக்கு அதிகமாக சாப்பிடும் போதுதான் எடை கூடும். வெறும் பழையது மட்டும் சாப்பிடாமல், கூடவே துவையல் அல்லது காய்கறிப் பொரியல் ஏதாவது சேர்த்து, ‘பேலன்ஸ்டு’ உணவாக சாப்பிட வேண்டும். பழையசாதத்தின் ஆயுள் 15 மணி நேரம் தான். முதல் நாள் இரவு 10 மணிக்கு தண்ணீர் ஊற்றி வைத்தால், அதில் இருந்து அதிகபட்சம் 15 மணி நேரத்துக்குள் சாப்பிட்டு விட வேண்டும். அதற்கு மேல் பழையசாதத்தை அறையின் வெப்ப நிலையில் வைக்கக் கூடாது.சர்க்கரை நோயாளிகள், அளவோடு சாப்பிடலாம்

பழைய சாதம் பற்றி, நம்பாரம் பரியமருத்துவம் என்னசொல்கிறது?

‘அகத்தியர் குணவாகடம்’ என்னும் மருத்துவ நூலில் பழஞ்சோற்றின் பெருமை பற்றி, ஒரு பாடலே இருக்கிறது. பொதுவாகவே, வெயில்காலத்தில் பித்தம் அதிகமாக இருக்கும். பித்தம் என்பது நெருப்பின் குணம். அதனால், பித்தம் சார்ந்த நோய்களும் அதிகமாக ஏற்படும். செரிமான நெருப்பு அதிகரிப்பதால், பெரும் பசி எடுக்கும். உடல் எரிச்சல் ஏற்படும். இவை எல்லாவற்றையும் ‘நியூட்ரலைஸ்’ செய்து, உடம்பின் தேஜஸைக் கூட்டுகிறது பழையசோறு. ‘பிரமேயம்’ எனப்படும் மனநிலைக் குறைபாடுகள், வன்முறையைத்தூண்டும் ஆக்ரோஷம் ஆகிய உணர்வுகளை இந்த உணவு கட்டுப்படுத்தும். பித்தத்தைக் கட்டுப்படுத்துவதால், அதன் எதிர்க் குணமான உடலில் கபத்தின் தன்மை அதிகரிக்கிறது. அதனால் தான், பழையது சாப்பிட்டதும் நமக்குக் குளுமையான உணர்வு ஏற்படுகிறது. 

சுருங்கச்சொன்னால், ‘ஆற்று நீர் வாதம் போக்கும், அருவிநீர் பித்தம் போக்கும், சோற்றுநீர் இரண்டையும் போக்கும்’.

Courtesy:
http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=4277&cat=500

ஓளவையாரின் ஆத்திச்சுடி தகவல்: திரு. பிரபு ராகவன்

இங்கு பதிவு செய்யப்பட்டுள்ள படங்கள் விற்பனை நோக்கத்தில் பயன்படுத்தப்படவில்லை. இது நமது உறுப்பினர்களின் சொந்த உபயோகத்திற்கு மட்டுமே. 

தொகுப்பு : க. சங்கிலிக்காளை