நன்றி குங்குமம் தோழி
கற்க கசடற
+2 ரிசல்ட் வந்து
விட்டது. அடுத்து என்ன படிப்பது என்ற தேடலும் பதற்றமும் பெரும்பாலான
வீடுகளைச் சூழ்ந்திருக்கிறது. எதிர்காலத்துக்கான பாதை என்பதால்
உயர்கல்வியைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனமும் அக்கறையும் அவசியம்.
இன்றளவும், மதிப்புக்குரிய படிப்பென்றால் அது மருத்துவமும் பொறியியலும்தான்
என்ற மனோபாவம் பெரும்பாலான பெற்றோரிடம் இருக்கிறது. உண்மையில் அவற்றை
விடவும் உச்சத்துக்கு கொண்டு செல்லும் ஏராளமான படிப்புகள் கலை அறிவியல்
கல்லூரிகளிலும், இன்னபிற கல்வி நிறுவனங்களிலும் இருக்கின்றன!
ஒரு
காலத்தில் கலை அறிவியல் படிப்பென்றால் சில அடிப்படைப் பிரிவுகள்
மட்டும்தான். அவற்றைப் படித்தாலும் பெரிதாக வாய்ப்புகள் இருக்காது.
அதிகபட்சம் ஆசிரியர்... அதற்கு மேல் எதுவும் இல்லை என்ற நிலைதான் இருந்தது.
இன்று ஏராளமான படிப்புகள் வந்து விட்டன. தொலைநோக்கு சிந்தனை கொண்ட
பெரும்பாலான மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் குவிகிறார்கள்.
நான்கைந்து ஆண்டுகள் படிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் கூட சுருக்கப்பட்ட
பாடத்திட்டங்களாக கலை அறிவியல் படிப்புகளில் வழங்கப்படுகின்றன. இன்னொரு
பக்கம், மிகுந்த வேலைவாய்ப்புகளை உள்ளடக்கிக் கொண்டு பாராமெடிக்கல்
படிப்புகளும் நிறைந்திருக்கின்றன.
செலவு குறைவு, படிக்கும் காலம்
குறைவு, படிப்பை முடித்ததும் எண்ணற்ற வாய்ப்புகள் என கலை அறிவியல்
படிப்புகளில் பல வசதிகள் உண்டு. வகுப்பறையும் இறுக்கமாக இருக்காது. நல்ல
கல்லூரிகளில் ஈடுபாட்டோடு கலை அறிவியல் படிப்புகளை முடிப்பவர்களுக்கு வேலை
வாய்ப்புகளுக்கும் குறைவில்லை. பல கலை அறிவியல் கல்லூரிகளில் பெரிய
நிறுவனங்கள் வளாகத் தேர்வுக்கு வந்து மாணவர்களைத் தேர்வு செய்வதும்
நடக்கிறது. பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்களின் கவனம் அண்மைக்காலமாக கலை
அறிவியல் கல்லூரிகள் பக்கம் திரும்பியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
அறிவியல்
அறிவியல்
புலப் படிப்புகளைப் பொறுத்தவரை பிஎஸ்சி, தாவரவியல், விலங்கியல்,
வேதியியல், கணிதவியல் படிப்புகளை அடிப்படைப் படிப்புகள் என்று சொல்லலாம்.
பொதுவாக, ‘இந்தப் படிப்புகளைப் படித்தால் ஆசிரியராக மட்டுமே ஆக முடியும்.
வேறெந்த வாய்ப்பு களும் கிடைக்காது’ என்ற மனோபாவம் பலருக்கு இருக்கிறது.
அது தவறு. வேறு எந்த துறைப் படிப்புகளைப் படித்தவர்களுக்கும் இல்லாத பெரும்
வாய்ப்புகள் அறிவியல் புலப் படிப்புகளைப் படித்தவர்களுக்கு இருக்கிறது.
இளங்கலையில், அறிவியல் பிரிவுகளைப் படித்தவர்கள் நூற்றுக்கணக்கான சிறப்புப்
பிரிவுகளில் முதுகலை படிக்கலாம். மத்திய, மாநில அரசுகள் அறிவியல் புல
மாணவர்களுக்கு ஏராளமான உதவித்தொகைகளை வழங்குகின்றன. அறிவியல்
புலத்துக்கென்றே நாடு முழுவதும் இருக்கிற பல்வேறு சிறந்த கல்வி
நிறுவனங்களில் படிக்கலாம். ஆராய்ச்சி செய்யலாம். வேலை வாய்ப்புகளையும்
பெறலாம். விஞ்ஞானியாகலாம். நோபல் பரிசு போன்ற ஏராளமான உயரிய அங்கீகாரங்கள்
அறிவியல் புல மாணவர்களுக்கே கிடைக்கின்றன. அடிப்படை அறிவியல் பிரிவுகளைப்
படித்தவர்கள். வனப்பணி, இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகளை எழுதி நிர்வாகப்
பணிகளுக்குச் செல்லலாம். வனப்பாதுகாவலர், ஆய்வக மேலாளர், ஆய்வக
உதவியாளர், சயின்டிபிக் அசிஸ்டென்ட், ஹெர்பாரியம் கீப்பர், டெக்னிக்கல்
அசிஸ்டென்ட், மெடிக்கல் கோடிங் அலுவலர், சுகாதார ஆய்வாளர், மியூசியம்
கீப்பர், குவாலிட்டி கன்ட்ரோலர்/குவாலிட்டி செக்கர், ஸ்டோர் கீப்பர்,
புள்ளியியலாளர், புரோகிராமர், ஆய்வக மேலாளர், ஆற்றல் வல்லுநர்,
மினராலஜிஸ்ட் என ஏகப்பட்ட பணிகள் காத்திருக்கின்றன. இப்பிரிவுகளில்
இளநிலைப் படிப்பை முடித்தவர்கள் தாவரவியல், மரபியல், வைல்டு லைஃப் பயாலஜி,
மரைன்-
பயாலஜி, எண்விரோன்மென்டல் சயின்ஸ், ஈக்காலஜி, நுண்ணுயிரியல்,
க்ளினிக்கல் ரிசர்ச், மானுட மரபியல், உளவியல், குற்றவியல், தடய அறிவியல்,
உயிரி வேதியியல், பயோ நானோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ பிசிக்ஸ்,
மாலிக்குலர் பயாலஜி, தாவர நோயியல், பயோ டைவர்சிட்டி & கன்சர்வேசன், பயோ
ஜியோகிராஃபி போன்ற பிரிவுகளில் முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகளைப்
படித்து வளமான எதிர்காலத்தைப் பெறலாம். பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ்,
பயோகெமிஸ்ட்ரி, பயோ மெடிக்கல், புவி அமைப்பியல், எலெக்ட்ரானிக்ஸ், உணவு
தொழில் நுட்பம், மண்ணியல், ஹோம் சயின்ஸ், மைக்ரோபயாலஜி, பாலிமர் சயின்ஸ்,
புள்ளியியல், நியூட்ரிஷன், சுற்றுச்சூழல் அறிவியல் என வேலை வாய்ப்பு
மிகுந்த பல படிப்புகள் அறிவியல் புலத்தில் உள்ளன.
பாராமெடிக்கல்
படிப்பை
முடித்ததும், ஏன் படித்துக் கொண்டிருக்கும் போதே வேலையையும் பெற்றுத்தரும்
பாராமெடிக்கல் பட்டப் படிப்புகளும் நிறைய இருக்கின்றன. மருத்துவத்துறையில்
பணியாற்ற விரும்புவோரும், மருத்துவப் படிப்புகள் கிடைக்காதவர்களும்
இப்படிப்புகளைத் தாராளமாக தேர்வு செய்யலாம். நர்சிங்சமூக அக்கறையும்,
மருத்துவத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற இலக்கும் கொண்ட மாணவர்கள்
நர்ஸிங் படிக்கலாம். பெண்களுக்கு மிகவும் உகந்த படிப்பு இது.
இப்படிப்புக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கைநிறைய சம்பளத்தோடு
ஏராளமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. பல்வேறு கல்வி நிறுவனங்களில்
பி.எஸ்சி. நர்சிங் பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. டிப்ளமோ, சான்றிதழ்
படிப்புகளும் இப்பிரிவில் உண்டு. +2வில் உயிரியல் (தாவரவியல், விலங்கியல்)
கட்டாயப் பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம்.
தரமான கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தியன் நர்சிங் கவுன்சில் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதும் அவசியம். www.indiannursingcouncil.org என்ற நர்சிங் கவுன்சில் இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனப் பட்டியல் உள்ளது. பிஎஸ்சி நர்சிங் முடித்தவர்கள் எம்எஸ்சி, எம்.பில், பிஹெச்டி படிக்கவும் வாய்ப்புண்டு. அவ்விதம் முடிப்பவர்களுக்கு பல்வேறு உயர் பணிகள் காத்திருக்கின்றன. பொதுவாக அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வழியாக நர்சிங் பட்டப் படிப்பிற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் 5 அரசு நர்சிங் கல்லூரிகளும், 156 தனியார் கல்லூரிகளும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கீழே இயங்குகின்றன. இவை தவிர 6 சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. நர்சிங்கில் டிப்ளமோ, சர்டிபிகேட் படிப்புகளும் உண்டு. சர்டிபிகேட் ஆஃப் நர்சிங் படிப்பில் ஜெனரல் நர்சிங், மிட்வைபரி, மேல் நர்சிங் என பல பிரிவுகள் உண்டு. கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல், சென்னை அரசு ஜெனரல் ஹாஸ்பிட்டல், திருச்சி அரசு ஹாஸ்பிட்டல், ஸ்டான்லி ஹாஸ்பிட்டல், தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் ஆகிய இடங்களில் ஜெனரல் நர்சிங் சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. ஒன்றரை ஆண்டுகால ஜெனரல் நர்சிங் அண்ட் மிட்வைபரி படிப்பில் சேர +2வில் இயற்பியில், வேதியியல், உயிரியல் பாடங்களை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பிசியோதெரபி
இப்படிப்பும் மிகுந்த மரியாதைக்குரிய படிப்பு. நோய், விபத்து, அறுவை சிகிச்சை காரணமாக உடல் உறுப்புகளில் ஏற்படக்கூடிய வலி, மூட்டு இயக்கமின்மை போன்ற குறைபாடுகளை போக்கும் மருத்துவத்தின் ஒரு முக்கிய அங்கம்தான் பிசியோதெரபி. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உண்டு. தனியாக கிளினிக், உடற்பயிற்சி நிலையங்கள் அமைக்கவும் வாய்ப்புண்டு. நான்கரை ஆண்டுகால இளநிலை பிசியோதெரபி படிப்பு தமிழகத்தில் 2 அரசு கல்லூரிகளிலும் 24 தனியார் கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது. இதுதவிர நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் இந்தப் படிப்பு உள்ளது.
பார்மசி
மருந்து உற்பத்தி மற்றும் விற்பனைத் துறைகளில் ஆர்வம் கொண்டவர்கள் பி.பார்ம், டி.பார்ம் படிப்புகளைத் தேர்வு செய்யலாம். இப்படிப்பை முடித்தவர்களுக்கு மருத்துவமனைகள், மருந்தகங்கள், கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள், மருந்து தயார் செய்யும் தொழிற்சாலை கள், மருந்து கட்டுப்பாடு பணிஇடங்கள், முப்படைகள், ஆய்வு நிலையங்களில் வேலைவாய்ப்புகள் மிகுந்திருக்கின்றன. அரசுப்பணிகளிலும் சேரலாம். +2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிர் வேதியியல் எடுத்து படித்தவர்கள் பார்மசி சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
ஆக்குபேஷனல் தெரபி
அண்மைக்காலமாக மாணவர்களை பெரிதும் ஈர்த்துவரும் படிப்பு ஆக்குபேஷனல் தெரபி. கனிவும் கருணையும் கொண்ட மாணவர்கள் இப்படிப்பை தேர்வு செய்யலாம். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மற்றும் உள்ள அளவில் அந்த நோயிலிருந்து மீண்டுவர அளிக்கப்படும் சிகிச்சையே ஆக்குபேஷனல் தெரபி. இந்தப் பிரிவில் இளநிலைப் படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பை முடித்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. சொந்தமாக கிளினிக்கும் வைக்கலாம். +2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.
பல்வேறு தனியார் கல்லூரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. தேசிய அளவிலும் பல கல்வி நிறுவனங்களில் இப்படிப்பு உண்டு. மேலும் சில துணை மருத்துவப் பிரிவுகள் பி.எஸ்சி. மெடிக்கல் லேப் டெக்னீஷியன், ஸ்பீச் தெரபி, ரேடியாலஜி, அனஸ்தீசியாலஜி, ரீஹாப்ளிடேஷன் ஸ்பெஷலிஸ்ட், ஹேமட்டாலஜி, சோசியாலஜி, மெடிக்கல் சர்ஜிக்கல் நர்சிங், பார்மக்காலஜி, மெடிக்கல் எக்ஸ்-ரே டெக்னாலஜி, மெடிக்கல் ரெக்கார்டு டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ஆப்தால்மிக் டெக்னாலஜி, டென்டல் டெக்னாலஜி, டென்டல் ஹைசீன், பெர்ஃபியூஸன் டெக்னாலஜி, கார்டியாக் கேர் டெக்னாலஜி, அனஸ்தீசியா டெக்னாலஜி, மெடிக்கல் இமேஜிங் டெக்னாலஜி, ரீனல் டயாலிசிஸ், ஆப்தமேட்ரி போன்ற துணை மருத்துவப் பிரிவுகளில் பி.எஸ்சி. படிப்புகள் வழங்கப்படுகின்றன. கல்வி நிறுவனத்தின் தன்மை அறிந்து இப்படிப்புகளைத் தேர்வு செய்து படிக்கலாம்.
தமிழ்
கலைப்படிப்புகளைப் பொறுத்தவரை, தமிழை முதன்மைப் பாடமாகப் படிப்பவர்கள் தமிழோடு சேர்த்து, பிற மொழிகள், கணினி போன்ற புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டால், உலகெங்கும் பெரும் வரவேற்பு இருக்கிறது. தமிழ்நாட்டிலிருக்கும் அரசுப் பள்ளிகளில் மட்டுமல்ல... மத்திய அரசின் நவோதயா பள்ளிகள், ரயில்வே, ராணுவம் போன்ற பல பொதுத்துறை நிறுவனங்களால் தமிழ்நாட்டில் நடத்தப்படும் பள்ளி களில் ஆசிரியர் ஆகலாம். சிங்கப்பூரில் 5 ஆண்டுகால ஒப்பந்தத்தில் மாதம் ரூ.3 லட்சம் சம்பளத்தில் ஆண்டுக்கு 50 தமிழாசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதேபோல மலேசியாவிலுள்ள ஐநூற்றுக்கும் அதிகமான பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் தமிழகத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தான் அப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த ஆசிரியப் பணியிடங்களில் சேர்வதற்கும் தமிழ் படித்த ஆசிரியர்கள் விண்ணப்பிப்பதே இல்லை. பி.ஏ.தமிழ் படித்தவர்கள், பி.ஜி.டி.சி.ஏ. முடித்து, எம்.சி.ஏ. போன்ற கணினிப் பாடங்களைக் கூடுதலாக படித்துக் கொண்டால், அவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், வெளிநாடுகளிலும் கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலைகள் காத்திருக்கின்றன. +2வில் கணிதப் பாடத்தை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்று இளநிலை தமிழ் பட்டப்படிப்பை முடித்தவர்கள் நேரடியாகவே எம்.சி.ஏ. படிக்க முடியும்.
தமிழ் மொழி பேசும் மக்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கும் பல வணிக நிறுவனங்கள், தமிழ் மென்பொருள் தயாரிப்புக்கு நன்றாகத் தமிழறிந்த, கணினி மென்பொருள் உற்பத்தி செய்யும் திறனுடையவர்களை எதிர்பார்க்கின்றன. இத்துறைகளில் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்று மென்பொருள் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கும் தமிழ் படித்தவர்களின் தேவை அதிகமாக இருக்கிறது.தமிழ் பி.ஏ., பி.லிட். மற்றும் எம்.ஏ. படித்தவர்கள் தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசுத் துறைகளில் இருக்கும் பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியும். தமிழ் மொழியில் எம்.ஏ. படித்தவர்கள் தமிழ் படித்தவர்களுக்கேயான, இந்திய அரசின் மானுடவியல் துறை மற்றும் தொல்லியல் துறையில் அகழ்வுப்பணி ஆய்வாளர், கல்வெட்டு ஆய்வாளர், ஓலைச்சுவடி ஆய்வாளர் போன்ற பணியிடங்கள், அருங்காட்சியகங்களில் காப்பாட்சியர்கள், இந்திய மொழிகளுக்கான மத்திய மொழிகளுக்கான நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ஆசியவியல் நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா போன்ற நிறுவனங்களில் தமிழ் மொழிக்காக நிறுவப்பட்ட பணிகளில் சேர முடியும்.
பொருளாதாரம்
தரமான ஒரு கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் போன்ற ஒரு மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை முடிப்பவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இப்போது திருவாரூரிலும் ஒரு மத்திய பல்கலைக்கழகம் செயல்படுகிறது. சென்னையில், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் நிறுவனம் எம்.எஸ்.சியில் பொருளாதார படிப்பை தரமாக தருகிறது. இதில், 5 வகை படிப்புகள் இருக்கின்றன. +2 முடித்தவர்கள், இங்கு, 5 வருட இன்டகிரேடட் படிப்பில் சேரமுடியும். திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தோடு டை-அப் செய்திருப்பதால் அங்கே மூன்று வருடமும் இங்கே இரண்டு வருடமும் கற்றுத் தருகிறார்கள். பொருளாதாரம் படிப்பவர்கள் இந்தியப் பொருளாதாரப் பணியான ஐஇஎஸ் தேர்வெழுதி, சிவில் சர்வீஸ் ரேங்குக்கு அதிகாரியாகவும் ஆகலாம். இப்போது, எக்னாமிஸ்ட்களுக்கு நிறைய டிமாண்ட் இருக்கிறது. ரிசர்வ் வங்கி, திட்டக்குழு, பொதுநிதி மற்றும் கொள்கை துறை உள்ளிட்ட பல்வேறு துறை வாய்ப்புகள் இருக்கின்றன.
வரலாறு
பி.ஏ. வரலாறு முடித்து, கற்கால வரலாறு, இடைக்கால வரலாறு, நவீன வரலாறு போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. கல்வெட்டியல், தொல்லியல், மியூசியம் பற்றிய டிப்ளமோ படிப்புகளையும் படித்துக்கொள்வது நல்லது. தரமான கல்லூரியில் பி.ஏ. பொலிட்டிக்கல் சயின்ஸ் படிப்பவர்களுக்கு அரசியல், பொது நிர்வாகம், சட்டம் போன்ற துறைகளில் நல்ல வாய்ப்புகள் உண்டு. ஆய்வுகள் சம்பந்தப்பட்ட வேலைகளும், பப்ளிக் பாலிசி மேனேஜ்மென்ட், பாலிசி லெவல் பணிகளும் காத்திருக்கின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் செல்லலாம்.
சமூகவியல்
பி.ஏ. சமூகவியல் படிப்புக்கும் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் இந்தியாவில் சிறந்த நிறுவனமாகும். பி.ஏ., எம்.ஏ. உள்பட பல கோர்ஸ்கள் இங்கே இருக்கின்றன. மத்திய அரசு, மாநில அரசுத் துறைகளிலேயே இப்படிப்பை முடித்தவர்களுக்கு நிறைய வேலைகள் காத்திருக்கின்றன. சமூகம் சார்ந்த திட்டங்களில் சமூக நலத்துறையுடன் இணைந்து பணியாற்றலாம். நகர்ப்புற, கிராமப்புற திட்டங்கள், சுகாதாரத் துறை, கவுன்சலிங் சென்டர்கள், சமூக வளர்ச்சி நிறுவனங்கள் என பல துறைகளிலும் வேலைகள் உள்ளன.
ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்
பி.ஏ. ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் படிப்புக்கும் நிறைய தேவை இருக்கிறது. காப்பி ரைட்டிங், ஆவணங்கள் மொழி பெயர்ப்பு, ஆசிரியர் பணி, ஐடி நிறுவனங்கள், பதிப்பகங்கள் என பல இடங்களில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இதில், முதுகலை படித்தால் எதிர்காலம் பிரகாசமாகும்.
உளவியல்
பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் உளவியல் படித்த ஒருவரை வேலைக்கு பணியமர்த்துகின்றன. இவர்களே, நாளடைவில் அந்நிறுவனத்தின் ஹெச்.ஆர். ஆக மாறுகின்றனர். அதனால் பி.ஏ. சைக்காலஜி படிப்பையும் மாணவர்கள் தைரியமாக தேர்வு செய்யலாம். இதிலும் முதுகலை முடிக்க வேண்டியது அவசியம்.
வணிகம்
வணிகப்படிப்புகளைப் பொறுத்தவரை பி.காம். எவர்கிரீன். பி.காம். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ், அக்கவுடன்ஸ் அண்ட் ஃபைனான்ஸ், இ -காமர்ஸ், ஃபைனாசியல் சிஸ்டம்ஸ் போன்ற பிரிவுகளைத் தேர்வு செய்யலாம். இவற்றைப் படித்துக்கொண்டே சி.ஏ. கம்பெனி செகரட்டரிஷிப் படிப்புகளையும் சேர்த்து படிப்பவர்கள் உச்சத்துக்குப் போகலாம். பிபிஎம், பிசிஏ படிப்புகளுக்கும் வாய்ப்புகள் குறைவில்லை. நம்பிக்கையோடு படிக்கலாம். நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும்.
வேளாண்மை
மருத்துவப் படிப்புகளுக்கு நிகராக மாணவர்களை ஈர்க்கும் துறையாக வேளாண்மைத் துறை வளர்ந்து வருகிறது. உலகெங்கும் 700 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அனைவருக்கும் 3 வேளை உணவு வேண்டும். என்றைக்கும் இந்த தேவை தீரப்போவதில்லை. அதிகரிக்கவே செய்யும். அதனால் வேளாண் படிப்புகளைப் போல எதிர்காலம் உள்ள படிப்பு வேறெதுவும் இல்லை. கோவை மருதமலையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு கல்லூரிகளும், 18 தனியார் கல்லூரிகளும் செயல்படுகின்றன. அரசு கல்லூரிகளில் பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி. தோட்டக்கலை, பி.டெக். தோட்டக்கலை, பி.டெக். வேளாண் பொறியியல், பி.எஸ்.சி. உணவு பதப்படுத்துதல் மற்றும் பொறியியல், பி.டெக்., சுற்றுச்சூழல் இன்ஜினியரிங், பி.எஸ்.சி.வனவியல், பி.எஸ்.சி. உணவு அறிவியல் மற்றும் நியூட்ரிஷியன், பி.எஸ்.சி. பட்டுப்புழுவியல், பி.டெக். பயோ டெக்னாலஜி, பி.டெக். பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், பி.டெக். வேளாண் தகவல் தொழில்நுட்பம், பி.எஸ்சி., விவசாய மேலாண்மை ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. அனைத்து இளநிலை பட்டப் படிப்புகளும் 4 ஆண்டு கால படிப்புகள். +2வில் உயிரியல் பிரிவை எடுத்துப் படித்த மாணவர்கள் பி.எஸ்சி. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். பி.டெக் எனில் கணிதமும், கம்ப்யூட்டரும் எடுத்துப் படித்திருக்க வேண்டும். வேளாண் படிப்புகளை முடித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஏராளமான வேலைகள் காத்திருக்கின்றன. இப்படிப்பை தேர்வு செய்ய விரும்புபவர்கள் www.tnau.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.600, எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் ரூ.300 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 11.
மீன் வளம்
இந்தியா மூன்று புறங்களிலும் கடல்சூழ்ந்த நாடு. மீன்வளம் இந்தியாவின் முக்கிய பொருளாதார புலமாக விளங்குகிறது. சீனாவுக்கு அடுத்து உலகுக்கு அதிக கடல் உணவு ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான். இத்துறை சார்ந்த நிபுணர்கள் ஏராளமாக தேவைப்படுகிறார்கள். அதனால் மாணவர்கள் மீன்வளப் படிப்புகளைத் தேர்வு செய்து படிக்கலாம். இப்படிப்புகளுக்கு போட்டி அதிகம்.நாகப்பட்டினத்தில் செயல்படும் மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் மீன்வளக் கல்லூரிகள் செயல்படுகின்றன. நாகப்பட்டினத்தில் மீன்வளப் பொறியியல் கல்லூரி உள்ளது. பி.எப்.எஸ்.சி. எனப்படும் மீன்வளப் படிப்பில் இரண்டு கல்லூரிகளிலும் சேர்த்து 110 இடங்களும், பொறியியல் கல்லூரியில் பி.இ. ஃபிஷரீஸ் இன்ஜினியரிங் படிப்பில் 20 இடங்களும் உள்ளன. இப்படிப்பை முடித்தவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உறுதி. +2வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்துப் படித்து, 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சீர்மரபினர் 55% மதிப்பெண் பெற்றால் போதும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மேற்கண்ட பிரிவுகளைப் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பி.இ படிக்க கணிதப்பாடம் அவசியம். இப்படிப்புகளுக்கு மீன்வளப் பல்கலைக்கழகம் கவுன்சலிங் மூலம் மாணவர்களைச் சேர்க்கிறது. www.tnfu.ac.in இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசிநாள்: ஜூன் 20.
இதுதவிர மத்திய அரசால் நடத்தப்படும் சென்ட்ரல்
இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரீஸ் நாட்டிக்கல் இன்ஜினியரிங் டிரையினிங்(CIFNET)
நிறுவனம் நான்காண்டு கால பி.எப்.எஸ்.சி. நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பை
வழங்குகிறது. +2வில், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை
எடுத்துப் படித்து குறைந்தது 50% மதிப்பெண் பெற்றவர்கள் இதைப்படிக்க
விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் +2வில் மேற்குறிப்பிட்ட
பாடங்களை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மொத்தம் 22
இடங்களே. நுழைவுத்தேர்வு மூலமாகவே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.
புதிய படிப்புகள்
இந்தாண்டு முதல் பல கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் B.Voc எனப்படும் வொகேஷனல் பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஃபேஷன் டெக்னாலஜி, சாஃப்ட்வேர் டெவலப்மென்ட். ஹாஸ்பிட்டல் இன்ஸ்ட்ருமென்டேஷன் & மேனேஜ்மென்ட், பிசினஸ் பிராசஸ் & டேட்டா அனலெடிக்ஸ், மல்டிமீடியா அண்ட் அனிமேஷன், ரீடையில் மேனேஜ்மென்ட் & ஐ.டி,, ஹாஸ்பிட்டாலிட்டி அண்ட் டூரிசம், ஃபுட் பிராசசிங் டெக்னாலஜி, டெவலப்மென்ட் அண்ட் சிஸ்டம் அட்மினிஸ்டிரேசன் உள்பட 30க்கும் அதிக புதிய படிப்புகள் அறிமுகமாகி உள்ளன. இவற்றையும் மாணவர்கள் தேர்வு செய்யலாம். வாழ்த்துகள்!