Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஞாயிறு, 31 ஜூலை, 2016

மருத்துவம் பொறியியலைக் கடந்தும் மகத்தான படிப்புகள் உண்டு!

 
நன்றி குங்குமம் தோழி



கற்க கசடற

+2 ரிசல்ட் வந்து விட்டது. அடுத்து என்ன படிப்பது என்ற தேடலும் பதற்றமும் பெரும்பாலான வீடுகளைச் சூழ்ந்திருக்கிறது. எதிர்காலத்துக்கான பாதை என்பதால் உயர்கல்வியைத் தேர்வு செய்வதில் கூடுதல் கவனமும் அக்கறையும் அவசியம். இன்றளவும், மதிப்புக்குரிய படிப்பென்றால் அது மருத்துவமும் பொறியியலும்தான் என்ற மனோபாவம் பெரும்பாலான பெற்றோரிடம் இருக்கிறது. உண்மையில் அவற்றை விடவும் உச்சத்துக்கு கொண்டு செல்லும் ஏராளமான படிப்புகள் கலை அறிவியல் கல்லூரிகளிலும், இன்னபிற கல்வி நிறுவனங்களிலும் இருக்கின்றன!

ஒரு காலத்தில் கலை அறிவியல் படிப்பென்றால் சில அடிப்படைப் பிரிவுகள் மட்டும்தான். அவற்றைப் படித்தாலும் பெரிதாக வாய்ப்புகள் இருக்காது. அதிகபட்சம் ஆசிரியர்... அதற்கு மேல் எதுவும் இல்லை என்ற நிலைதான் இருந்தது. இன்று ஏராளமான படிப்புகள் வந்து விட்டன. தொலைநோக்கு சிந்தனை கொண்ட பெரும்பாலான மாணவர்கள் கலை அறிவியல் கல்லூரிகளில் குவிகிறார்கள். நான்கைந்து ஆண்டுகள் படிக்க வேண்டிய தொழில்நுட்பங்கள் கூட சுருக்கப்பட்ட பாடத்திட்டங்களாக கலை அறிவியல் படிப்புகளில் வழங்கப்படுகின்றன. இன்னொரு பக்கம், மிகுந்த வேலைவாய்ப்புகளை உள்ளடக்கிக் கொண்டு பாராமெடிக்கல் படிப்புகளும் நிறைந்திருக்கின்றன.
செலவு குறைவு, படிக்கும் காலம் குறைவு, படிப்பை முடித்ததும் எண்ணற்ற வாய்ப்புகள் என கலை அறிவியல் படிப்புகளில் பல வசதிகள் உண்டு. வகுப்பறையும் இறுக்கமாக இருக்காது. நல்ல கல்லூரிகளில் ஈடுபாட்டோடு கலை அறிவியல் படிப்புகளை முடிப்பவர்களுக்கு வேலை வாய்ப்புகளுக்கும் குறைவில்லை. பல கலை அறிவியல் கல்லூரிகளில் பெரிய நிறுவனங்கள் வளாகத் தேர்வுக்கு வந்து மாணவர்களைத் தேர்வு செய்வதும் நடக்கிறது. பெரும்பாலான ஐ.டி. நிறுவனங்களின் கவனம் அண்மைக்காலமாக கலை அறிவியல் கல்லூரிகள் பக்கம் திரும்பியிருப்பதும் கவனிக்கத்தக்கது.

அறிவியல் 
அறிவியல் புலப் படிப்புகளைப் பொறுத்தவரை பிஎஸ்சி, தாவரவியல், விலங்கியல், வேதியியல், கணிதவியல் படிப்புகளை அடிப்படைப் படிப்புகள் என்று சொல்லலாம். பொதுவாக, ‘இந்தப் படிப்புகளைப் படித்தால் ஆசிரியராக மட்டுமே ஆக முடியும். வேறெந்த வாய்ப்பு களும் கிடைக்காது’ என்ற மனோபாவம் பலருக்கு இருக்கிறது. அது தவறு. வேறு எந்த துறைப் படிப்புகளைப் படித்தவர்களுக்கும் இல்லாத பெரும் வாய்ப்புகள் அறிவியல் புலப் படிப்புகளைப் படித்தவர்களுக்கு இருக்கிறது. இளங்கலையில், அறிவியல் பிரிவுகளைப் படித்தவர்கள் நூற்றுக்கணக்கான சிறப்புப் பிரிவுகளில் முதுகலை படிக்கலாம். மத்திய, மாநில அரசுகள் அறிவியல் புல மாணவர்களுக்கு ஏராளமான உதவித்தொகைகளை வழங்குகின்றன. அறிவியல் புலத்துக்கென்றே நாடு முழுவதும் இருக்கிற பல்வேறு சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்கலாம். ஆராய்ச்சி செய்யலாம். வேலை வாய்ப்புகளையும் பெறலாம். விஞ்ஞானியாகலாம். நோபல் பரிசு போன்ற ஏராளமான உயரிய அங்கீகாரங்கள் அறிவியல் புல மாணவர்களுக்கே கிடைக்கின்றன. அடிப்படை அறிவியல் பிரிவுகளைப் படித்தவர்கள். வனப்பணி, இந்திய ஆட்சிப்பணித் தேர்வுகளை எழுதி நிர்வாகப் பணிகளுக்குச் செல்லலாம். வனப்பாதுகாவலர், ஆய்வக மேலாளர், ஆய்வக உதவியாளர், சயின்டிபிக் அசிஸ்டென்ட், ஹெர்பாரியம் கீப்பர், டெக்னிக்கல் அசிஸ்டென்ட், மெடிக்கல் கோடிங் அலுவலர், சுகாதார ஆய்வாளர், மியூசியம் கீப்பர், குவாலிட்டி கன்ட்ரோலர்/குவாலிட்டி செக்கர், ஸ்டோர் கீப்பர், புள்ளியியலாளர், புரோகிராமர், ஆய்வக மேலாளர், ஆற்றல் வல்லுநர், மினராலஜிஸ்ட் என ஏகப்பட்ட பணிகள் காத்திருக்கின்றன. இப்பிரிவுகளில் இளநிலைப் படிப்பை முடித்தவர்கள் தாவரவியல், மரபியல், வைல்டு லைஃப் பயாலஜி, மரைன்-
பயாலஜி, எண்விரோன்மென்டல் சயின்ஸ், ஈக்காலஜி, நுண்ணுயிரியல், க்ளினிக்கல் ரிசர்ச், மானுட மரபியல், உளவியல், குற்றவியல், தடய அறிவியல், உயிரி வேதியியல், பயோ நானோ டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, பயோ பிசிக்ஸ், மாலிக்குலர் பயாலஜி, தாவர நோயியல், பயோ டைவர்சிட்டி & கன்சர்வேசன், பயோ ஜியோகிராஃபி போன்ற பிரிவுகளில் முதுநிலை மற்றும் ஆய்வுப் படிப்புகளைப் படித்து வளமான எதிர்காலத்தைப் பெறலாம். பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ், பயோகெமிஸ்ட்ரி, பயோ மெடிக்கல், புவி அமைப்பியல், எலெக்ட்ரானிக்ஸ், உணவு தொழில் நுட்பம், மண்ணியல், ஹோம் சயின்ஸ், மைக்ரோபயாலஜி, பாலிமர் சயின்ஸ், புள்ளியியல், நியூட்ரிஷன், சுற்றுச்சூழல் அறிவியல் என வேலை வாய்ப்பு மிகுந்த பல படிப்புகள் அறிவியல் புலத்தில் உள்ளன.

பாராமெடிக்கல்
படிப்பை முடித்ததும், ஏன் படித்துக் கொண்டிருக்கும் போதே வேலையையும் பெற்றுத்தரும் பாராமெடிக்கல் பட்டப் படிப்புகளும் நிறைய இருக்கின்றன. மருத்துவத்துறையில் பணியாற்ற விரும்புவோரும், மருத்துவப் படிப்புகள் கிடைக்காதவர்களும் இப்படிப்புகளைத் தாராளமாக தேர்வு செய்யலாம். நர்சிங்சமூக அக்கறையும், மருத்துவத் துறையில் பணியாற்ற வேண்டும் என்ற இலக்கும் கொண்ட மாணவர்கள் நர்ஸிங் படிக்கலாம். பெண்களுக்கு மிகவும் உகந்த படிப்பு இது. இப்படிப்புக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் கைநிறைய சம்பளத்தோடு ஏராளமான வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. பல்வேறு கல்வி நிறுவனங்களில் பி.எஸ்சி. நர்சிங் பட்டப் படிப்பு வழங்கப்படுகிறது. டிப்ளமோ, சான்றிதழ் படிப்புகளும் இப்பிரிவில் உண்டு. +2வில் உயிரியல் (தாவரவியல், விலங்கியல்) கட்டாயப் பாடமாக எடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இப்படிப்பில் சேரலாம்.

தரமான கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இந்தியன் நர்சிங் கவுன்சில் அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதும் அவசியம். www.indiannursingcouncil.org என்ற நர்சிங் கவுன்சில் இணையதளத்தில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனப் பட்டியல் உள்ளது. பிஎஸ்சி நர்சிங் முடித்தவர்கள் எம்எஸ்சி, எம்.பில், பிஹெச்டி படிக்கவும் வாய்ப்புண்டு. அவ்விதம் முடிப்பவர்களுக்கு பல்வேறு உயர் பணிகள் காத்திருக்கின்றன. பொதுவாக அகில இந்திய அளவில் நடத்தப்படும் நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வழியாக நர்சிங் பட்டப் படிப்பிற்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் 5 அரசு நர்சிங் கல்லூரிகளும், 156 தனியார் கல்லூரிகளும், தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகத்தின் கீழே இயங்குகின்றன. இவை தவிர 6 சுயநிதி கல்லூரிகளும் உள்ளன. நர்சிங்கில் டிப்ளமோ, சர்டிபிகேட் படிப்புகளும் உண்டு. சர்டிபிகேட் ஆஃப் நர்சிங் படிப்பில் ஜெனரல் நர்சிங், மிட்வைபரி, மேல் நர்சிங் என பல பிரிவுகள் உண்டு. கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல், சென்னை அரசு ஜெனரல் ஹாஸ்பிட்டல், திருச்சி அரசு ஹாஸ்பிட்டல், ஸ்டான்லி ஹாஸ்பிட்டல், தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் ஹாஸ்பிட்டல் ஆகிய இடங்களில் ஜெனரல் நர்சிங் சான்றிதழ் படிப்பு வழங்கப்படுகிறது. ஒன்றரை ஆண்டுகால ஜெனரல் நர்சிங் அண்ட் மிட்வைபரி படிப்பில் சேர +2வில் இயற்பியில், வேதியியல், உயிரியல் பாடங்களை எடுத்து படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பிசியோதெரபி

இப்படிப்பும் மிகுந்த மரியாதைக்குரிய படிப்பு. நோய், விபத்து, அறுவை சிகிச்சை காரணமாக உடல் உறுப்புகளில் ஏற்படக்கூடிய வலி, மூட்டு இயக்கமின்மை போன்ற குறைபாடுகளை போக்கும் மருத்துவத்தின் ஒரு முக்கிய அங்கம்தான் பிசியோதெரபி. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஏராளமான வேலை வாய்ப்புகள் உண்டு. தனியாக கிளினிக், உடற்பயிற்சி நிலையங்கள் அமைக்கவும் வாய்ப்புண்டு. நான்கரை ஆண்டுகால இளநிலை பிசியோதெரபி படிப்பு தமிழகத்தில் 2 அரசு கல்லூரிகளிலும் 24 தனியார் கல்லூரிகளிலும் வழங்கப்படுகிறது. இதுதவிர நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் இந்தப் படிப்பு உள்ளது.

பார்மசி

மருந்து உற்பத்தி மற்றும் விற்பனைத் துறைகளில் ஆர்வம் கொண்டவர்கள் பி.பார்ம், டி.பார்ம் படிப்புகளைத் தேர்வு செய்யலாம். இப்படிப்பை முடித்தவர்களுக்கு மருத்துவமனைகள், மருந்தகங்கள், கிளினிக்குகள், நர்சிங் ஹோம்கள், மருந்து தயார் செய்யும் தொழிற்சாலை கள், மருந்து கட்டுப்பாடு பணிஇடங்கள், முப்படைகள், ஆய்வு நிலையங்களில் வேலைவாய்ப்புகள் மிகுந்திருக்கின்றன. அரசுப்பணிகளிலும் சேரலாம். +2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிர் வேதியியல் எடுத்து படித்தவர்கள் பார்மசி சார்ந்த படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

ஆக்குபேஷனல் தெரபி

அண்மைக்காலமாக மாணவர்களை பெரிதும் ஈர்த்துவரும் படிப்பு ஆக்குபேஷனல் தெரபி. கனிவும் கருணையும் கொண்ட மாணவர்கள் இப்படிப்பை தேர்வு செய்யலாம். நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உடல் மற்றும் உள்ள அளவில் அந்த நோயிலிருந்து மீண்டுவர அளிக்கப்படும் சிகிச்சையே ஆக்குபேஷனல் தெரபி. இந்தப் பிரிவில் இளநிலைப் படிப்பு வழங்கப்படுகிறது. இப்படிப்பை முடித்தவர்களுக்கு அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ளன. சொந்தமாக கிளினிக்கும் வைக்கலாம். +2வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் பாடங்களைப் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் இப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

பல்வேறு தனியார் கல்லூரிகளில் இப்படிப்பு வழங்கப்படுகிறது. தேசிய அளவிலும் பல கல்வி நிறுவனங்களில் இப்படிப்பு உண்டு. மேலும் சில துணை மருத்துவப் பிரிவுகள் பி.எஸ்சி. மெடிக்கல் லேப் டெக்னீஷியன், ஸ்பீச் தெரபி, ரேடியாலஜி, அனஸ்தீசியாலஜி, ரீஹாப்ளிடேஷன் ஸ்பெஷலிஸ்ட், ஹேமட்டாலஜி, சோசியாலஜி, மெடிக்கல் சர்ஜிக்கல் நர்சிங், பார்மக்காலஜி, மெடிக்கல் எக்ஸ்-ரே டெக்னாலஜி, மெடிக்கல் ரெக்கார்டு டெக்னாலஜி, ஆபரேஷன் தியேட்டர் டெக்னாலஜி, டயாலிசிஸ் டெக்னாலஜி, ஆப்தால்மிக் டெக்னாலஜி, டென்டல் டெக்னாலஜி, டென்டல் ஹைசீன், பெர்ஃபியூஸன் டெக்னாலஜி, கார்டியாக் கேர் டெக்னாலஜி, அனஸ்தீசியா டெக்னாலஜி, மெடிக்கல் இமேஜிங் டெக்னாலஜி, ரீனல் டயாலிசிஸ், ஆப்தமேட்ரி போன்ற துணை மருத்துவப் பிரிவுகளில் பி.எஸ்சி. படிப்புகள் வழங்கப்படுகின்றன. கல்வி நிறுவனத்தின் தன்மை அறிந்து இப்படிப்புகளைத் தேர்வு செய்து படிக்கலாம்.

தமிழ்

கலைப்படிப்புகளைப் பொறுத்தவரை, தமிழை முதன்மைப் பாடமாகப் படிப்பவர்கள் தமிழோடு சேர்த்து, பிற மொழிகள், கணினி போன்ற புதிய தொழில்நுட்பங்களைக் கற்றுக் கொண்டால், உலகெங்கும் பெரும் வரவேற்பு இருக்கிறது. தமிழ்நாட்டிலிருக்கும் அரசுப் பள்ளிகளில் மட்டுமல்ல... மத்திய அரசின் நவோதயா பள்ளிகள், ரயில்வே, ராணுவம் போன்ற பல பொதுத்துறை நிறுவனங்களால் தமிழ்நாட்டில் நடத்தப்படும் பள்ளி களில் ஆசிரியர் ஆகலாம். சிங்கப்பூரில் 5 ஆண்டுகால ஒப்பந்தத்தில் மாதம் ரூ.3 லட்சம் சம்பளத்தில் ஆண்டுக்கு 50 தமிழாசிரியர்கள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர். இதேபோல மலேசியாவிலுள்ள ஐநூற்றுக்கும் அதிகமான பள்ளிகளில் தமிழாசிரியர் பணியிடங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் தமிழகத்தில் இருந்து ஒப்பந்த அடிப்படையில் தான் அப்பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த ஆசிரியப் பணியிடங்களில் சேர்வதற்கும் தமிழ் படித்த ஆசிரியர்கள் விண்ணப்பிப்பதே இல்லை. பி.ஏ.தமிழ் படித்தவர்கள், பி.ஜி.டி.சி.ஏ. முடித்து, எம்.சி.ஏ. போன்ற கணினிப் பாடங்களைக் கூடுதலாக படித்துக் கொண்டால், அவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல், வெளிநாடுகளிலும் கணினி மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலைகள் காத்திருக்கின்றன. +2வில் கணிதப் பாடத்தை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்று இளநிலை தமிழ் பட்டப்படிப்பை முடித்தவர்கள் நேரடியாகவே எம்.சி.ஏ. படிக்க முடியும்.

தமிழ் மொழி பேசும் மக்களை வாடிக்கையாளர்களாகக் கொண்டிருக்கும் பல வணிக நிறுவனங்கள், தமிழ் மென்பொருள் தயாரிப்புக்கு நன்றாகத் தமிழறிந்த, கணினி மென்பொருள் உற்பத்தி செய்யும் திறனுடையவர்களை எதிர்பார்க்கின்றன. இத்துறைகளில் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்று மென்பொருள் தயாரிப்புகளில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கும் தமிழ் படித்தவர்களின் தேவை அதிகமாக இருக்கிறது.தமிழ் பி.ஏ., பி.லிட். மற்றும் எம்.ஏ. படித்தவர்கள் தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசுத் துறைகளில் இருக்கும் பல்வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க முடியும். தமிழ் மொழியில் எம்.ஏ. படித்தவர்கள் தமிழ் படித்தவர்களுக்கேயான, இந்திய அரசின் மானுடவியல் துறை மற்றும் தொல்லியல் துறையில் அகழ்வுப்பணி ஆய்வாளர், கல்வெட்டு ஆய்வாளர், ஓலைச்சுவடி ஆய்வாளர் போன்ற பணியிடங்கள், அருங்காட்சியகங்களில் காப்பாட்சியர்கள், இந்திய மொழிகளுக்கான மத்திய மொழிகளுக்கான நிறுவனம், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், ஆசியவியல் நிறுவனம், நேஷனல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா போன்ற நிறுவனங்களில் தமிழ் மொழிக்காக நிறுவப்பட்ட பணிகளில் சேர முடியும்.

பொருளாதாரம்

தரமான ஒரு கல்லூரியில் பி.ஏ. பொருளாதாரம் படித்துவிட்டு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஹைதராபாத் பல்கலைக்கழகம் போன்ற ஒரு மத்திய பல்கலைக்கழகத்தில் முதுகலை முடிப்பவர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன. இப்போது திருவாரூரிலும் ஒரு மத்திய பல்கலைக்கழகம் செயல்படுகிறது. சென்னையில், மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் எக்னாமிக்ஸ் நிறுவனம் எம்.எஸ்.சியில் பொருளாதார படிப்பை தரமாக தருகிறது. இதில், 5 வகை படிப்புகள் இருக்கின்றன. +2 முடித்தவர்கள், இங்கு, 5 வருட இன்டகிரேடட் படிப்பில் சேரமுடியும். திருவாரூரில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தோடு டை-அப் செய்திருப்பதால் அங்கே மூன்று வருடமும் இங்கே இரண்டு வருடமும் கற்றுத் தருகிறார்கள். பொருளாதாரம் படிப்பவர்கள் இந்தியப் பொருளாதாரப் பணியான ஐஇஎஸ் தேர்வெழுதி, சிவில் சர்வீஸ் ரேங்குக்கு அதிகாரியாகவும் ஆகலாம். இப்போது, எக்னாமிஸ்ட்களுக்கு நிறைய டிமாண்ட் இருக்கிறது. ரிசர்வ் வங்கி, திட்டக்குழு, பொதுநிதி மற்றும் கொள்கை துறை உள்ளிட்ட பல்வேறு துறை வாய்ப்புகள் இருக்கின்றன.

வரலாறு

பி.ஏ. வரலாறு முடித்து, கற்கால வரலாறு, இடைக்கால வரலாறு, நவீன வரலாறு போன்ற ஏதேனும் ஒரு பிரிவில் முதுகலை படிப்பவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உண்டு. கல்வெட்டியல், தொல்லியல், மியூசியம் பற்றிய டிப்ளமோ படிப்புகளையும் படித்துக்கொள்வது நல்லது. தரமான கல்லூரியில் பி.ஏ. பொலிட்டிக்கல் சயின்ஸ் படிப்பவர்களுக்கு அரசியல், பொது நிர்வாகம், சட்டம் போன்ற துறைகளில் நல்ல வாய்ப்புகள் உண்டு. ஆய்வுகள் சம்பந்தப்பட்ட வேலைகளும், பப்ளிக் பாலிசி மேனேஜ்மென்ட், பாலிசி லெவல் பணிகளும் காத்திருக்கின்றன. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கும் செல்லலாம்.

சமூகவியல்

பி.ஏ. சமூகவியல் படிப்புக்கும் நல்ல வாய்ப்புகள் காத்திருக்கின்றன. டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சயின்ஸ் இந்தியாவில் சிறந்த நிறுவனமாகும். பி.ஏ., எம்.ஏ. உள்பட பல கோர்ஸ்கள் இங்கே இருக்கின்றன. மத்திய அரசு, மாநில அரசுத் துறைகளிலேயே இப்படிப்பை முடித்தவர்களுக்கு நிறைய வேலைகள் காத்திருக்கின்றன. சமூகம் சார்ந்த திட்டங்களில் சமூக நலத்துறையுடன் இணைந்து பணியாற்றலாம். நகர்ப்புற, கிராமப்புற திட்டங்கள், சுகாதாரத் துறை, கவுன்சலிங் சென்டர்கள், சமூக வளர்ச்சி நிறுவனங்கள் என பல துறைகளிலும் வேலைகள் உள்ளன.

ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள்

பி.ஏ. ஆங்கிலம் மற்றும் வெளிநாட்டு மொழிகள் படிப்புக்கும் நிறைய தேவை இருக்கிறது. காப்பி ரைட்டிங், ஆவணங்கள் மொழி பெயர்ப்பு, ஆசிரியர் பணி, ஐடி நிறுவனங்கள், பதிப்பகங்கள் என பல இடங்களில் வேலைவாய்ப்புகள் இருக்கின்றன. இதில், முதுகலை படித்தால் எதிர்காலம் பிரகாசமாகும்.

உளவியல்

பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் உளவியல் படித்த ஒருவரை வேலைக்கு பணியமர்த்துகின்றன. இவர்களே, நாளடைவில் அந்நிறுவனத்தின் ஹெச்.ஆர். ஆக மாறுகின்றனர். அதனால் பி.ஏ. சைக்காலஜி படிப்பையும் மாணவர்கள் தைரியமாக தேர்வு செய்யலாம். இதிலும் முதுகலை முடிக்க வேண்டியது அவசியம்.

வணிகம்

வணிகப்படிப்புகளைப் பொறுத்தவரை பி.காம். எவர்கிரீன். பி.காம். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன், கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், பேங்கிங் அண்ட் இன்சூரன்ஸ், அக்கவுடன்ஸ் அண்ட் ஃபைனான்ஸ், இ -காமர்ஸ், ஃபைனாசியல் சிஸ்டம்ஸ் போன்ற பிரிவுகளைத் தேர்வு செய்யலாம். இவற்றைப் படித்துக்கொண்டே சி.ஏ. கம்பெனி செகரட்டரிஷிப் படிப்புகளையும் சேர்த்து படிப்பவர்கள் உச்சத்துக்குப் போகலாம். பிபிஎம், பிசிஏ படிப்புகளுக்கும் வாய்ப்புகள் குறைவில்லை. நம்பிக்கையோடு படிக்கலாம். நல்ல கல்லூரியில் படிக்க வேண்டும்.

வேளாண்மை

மருத்துவப் படிப்புகளுக்கு நிகராக மாணவர்களை ஈர்க்கும் துறையாக வேளாண்மைத் துறை வளர்ந்து வருகிறது. உலகெங்கும் 700 கோடி மக்கள் வசிக்கிறார்கள். அனைவருக்கும் 3 வேளை உணவு வேண்டும். என்றைக்கும் இந்த தேவை தீரப்போவதில்லை. அதிகரிக்கவே செய்யும். அதனால் வேளாண் படிப்புகளைப் போல எதிர்காலம் உள்ள படிப்பு வேறெதுவும் இல்லை. கோவை மருதமலையில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 அரசு கல்லூரிகளும், 18 தனியார் கல்லூரிகளும் செயல்படுகின்றன. அரசு கல்லூரிகளில் பி.எஸ்சி. வேளாண்மை, பி.எஸ்சி.  தோட்டக்கலை, பி.டெக். தோட்டக்கலை, பி.டெக். வேளாண் பொறியியல், பி.எஸ்.சி. உணவு பதப்படுத்துதல் மற்றும் பொறியியல், பி.டெக்., சுற்றுச்சூழல் இன்ஜினியரிங், பி.எஸ்.சி.வனவியல், பி.எஸ்.சி. உணவு அறிவியல் மற்றும் நியூட்ரிஷியன், பி.எஸ்.சி. பட்டுப்புழுவியல், பி.டெக். பயோ டெக்னாலஜி, பி.டெக். பயோ இன்ஃபர்மேட்டிக்ஸ், பி.டெக். வேளாண் தகவல் தொழில்நுட்பம், பி.எஸ்சி., விவசாய மேலாண்மை ஆகிய படிப்புகள் வழங்கப்படுகின்றன. அனைத்து இளநிலை பட்டப் படிப்புகளும் 4 ஆண்டு கால படிப்புகள். +2வில் உயிரியல் பிரிவை எடுத்துப் படித்த மாணவர்கள் பி.எஸ்சி. படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். பி.டெக் எனில் கணிதமும், கம்ப்யூட்டரும் எடுத்துப் படித்திருக்க வேண்டும். வேளாண் படிப்புகளை முடித்தவர்களுக்கு அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் ஏராளமான வேலைகள் காத்திருக்கின்றன. இப்படிப்பை தேர்வு செய்ய விரும்புபவர்கள் www.tnau.ac.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் ரூ.600, எஸ்.சி.,எஸ்.டி. பிரிவினர் ரூ.300 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள்: ஜூன் 11.

மீன் வளம்

இந்தியா மூன்று புறங்களிலும் கடல்சூழ்ந்த நாடு. மீன்வளம் இந்தியாவின் முக்கிய பொருளாதார புலமாக விளங்குகிறது. சீனாவுக்கு அடுத்து உலகுக்கு அதிக கடல் உணவு ஏற்றுமதி செய்யும் நாடு இந்தியாதான். இத்துறை சார்ந்த நிபுணர்கள் ஏராளமாக தேவைப்படுகிறார்கள். அதனால் மாணவர்கள் மீன்வளப் படிப்புகளைத் தேர்வு செய்து படிக்கலாம். இப்படிப்புகளுக்கு போட்டி அதிகம்.நாகப்பட்டினத்தில் செயல்படும் மீன்வள பல்கலைக்கழகத்தின் கீழ் தூத்துக்குடி, பொன்னேரி ஆகிய பகுதிகளில் மீன்வளக் கல்லூரிகள் செயல்படுகின்றன. நாகப்பட்டினத்தில் மீன்வளப் பொறியியல் கல்லூரி உள்ளது. பி.எப்.எஸ்.சி. எனப்படும் மீன்வளப் படிப்பில் இரண்டு கல்லூரிகளிலும் சேர்த்து 110 இடங்களும், பொறியியல் கல்லூரியில் பி.இ. ஃபிஷரீஸ் இன்ஜினியரிங் படிப்பில் 20 இடங்களும் உள்ளன. இப்படிப்பை முடித்தவர்களுக்கு பிரகாசமான எதிர்காலம் உறுதி. +2வில் உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்துப் படித்து, 60% மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். மிகவும் பிற்படுத்தப்பட்டவர், சீர்மரபினர் 55% மதிப்பெண் பெற்றால் போதும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மேற்கண்ட பிரிவுகளைப் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பி.இ படிக்க கணிதப்பாடம் அவசியம். இப்படிப்புகளுக்கு மீன்வளப் பல்கலைக்கழகம் கவுன்சலிங் மூலம் மாணவர்களைச் சேர்க்கிறது. www.tnfu.ac.in  இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். கடைசிநாள்: ஜூன் 20.

இதுதவிர மத்திய அரசால் நடத்தப்படும் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஃபிஷரீஸ் நாட்டிக்கல் இன்ஜினியரிங் டிரையினிங்(CIFNET) நிறுவனம் நான்காண்டு கால பி.எப்.எஸ்.சி. நாட்டிக்கல் சயின்ஸ் படிப்பை வழங்குகிறது. +2வில், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களை எடுத்துப் படித்து குறைந்தது 50% மதிப்பெண் பெற்றவர்கள் இதைப்படிக்க விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் +2வில் மேற்குறிப்பிட்ட பாடங்களை எடுத்துப் படித்து தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். மொத்தம் 22 இடங்களே. நுழைவுத்தேர்வு மூலமாகவே மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

புதிய படிப்புகள்

இந்தாண்டு முதல் பல கலை அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் பல்வேறு துறைகளில் B.Voc எனப்படும் வொகேஷனல் பட்டப்படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஃபேஷன் டெக்னாலஜி, சாஃப்ட்வேர் டெவலப்மென்ட். ஹாஸ்பிட்டல் இன்ஸ்ட்ருமென்டேஷன்  & மேனேஜ்மென்ட், பிசினஸ் பிராசஸ் & டேட்டா அனலெடிக்ஸ்,  மல்டிமீடியா அண்ட் அனிமேஷன், ரீடையில் மேனேஜ்மென்ட் & ஐ.டி,,  ஹாஸ்பிட்டாலிட்டி  அண்ட் டூரிசம், ஃபுட் பிராசசிங் டெக்னாலஜி, டெவலப்மென்ட் அண்ட் சிஸ்டம்  அட்மினிஸ்டிரேசன் உள்பட 30க்கும் அதிக புதிய படிப்புகள் அறிமுகமாகி உள்ளன. இவற்றையும் மாணவர்கள் தேர்வு செய்யலாம். வாழ்த்துகள்!

ஆடிப்பூரம் - திருவில்லிப்புத்தூர் தேரோட்டம் - 05-08-2016

பெரியாழ்வார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருவில்லிப்புத்தூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும்.

இங்கு வடபத்ர சயனர் திருக்கோவிலும் ஆண்டாள் சன்னதியும் இருபகுதிகளாக கோவில் அமைந்துள்ளது. எட்டாம் நூற்றாண்டில் ஆழ்வார்கள் இங்கு வாழ்ந்து வந்ததாக அறியப்படுகிறது.

1956ல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது சென்னை மாகாண முதவராக இருந்த காமராஜர் தலைமையிலான அரசு திருவில்லிப்புத்தூர் கோவிலின் கோபுரத்தை தமிழ்நாடு அரசின் சின்னமாக தேர்வு செய்தது. 

பகவான் மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரம் எடுத்து இங்கு அமர்ந்ததால் இத்தலம் வராக ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. வேடுவ இனத்தைச் சேர்ந்த வில்லி, கண்டன் எனும் இரு சகோதரர்கள் இப்பகுதியை ஆண்டு வந்தனர்.

ஒரு முறை இருவரும் வேட்டைக்குச் சென்றிருந்தனர். இளைய சகோதரனான கண்டன் ஒரு புலியால் கொல்லப்பட்டான். தம்பி இறந்தது தெரியாத அண்ணன் பல இடங்களிலும் தேடி அலைந்தான்.  ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. கலைத்துப்போன வில்லி, தன்னை மறந்து ஓரிடத்தில் உறங்கிவிட்டான். பகவான் வில்லியின் கனவில் தோன்றி கண்டன் புலியால் கொல்லப்பட்டதை கூறினார்.  மேலும் காலநேமி எனும் அசுரனை அழிக்கத் தான் அவதாரம் எடுப்பது பற்றியும் கூறினார். இவ்வாறு கூறிய பகவான் அங்கிருந்த ஆலமரத்தடியில், வடபத்ர விமானத்தில் பள்ளிகொண்டார்.

இறைவனின் அருளால் வில்லி அமைத்த நகரமான இத்தலம் வில்லிபுத்தூர் என்றழைக்கப்பட்டது.

ஸ்ரீ ஆண்டாள் அவதரித்த தலமாதலால் ஸ்ரீவில்லிப்புத்தூர் என்று அழைக்கப்பட்டது. 

ஸ்ரீ ஆண்டாள் திருக்கோவிலில் காலை 6.30 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்யலாம். வடபத்ர சயனர் கோவிலில் காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் தரிசனம் செய்யலாம். ஆழ்வார் சன்னதியில் காலை 8 மணி முதல் மதியம் 12.30 வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 வரையிலும் தரிசனம் செய்யலாம்.  ஸ்ரீநிவாச பெருமான் கோவிலில் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தரிசனம் செய்யலாம்.

திருவிழாக்கள்:

சித்திரை மாதம்: 9 நாட்களுக்கு சித்ரோத்ஸவம் நடைபெறுகிறது. சித்ரா பௌர்ணமி அன்று ஆண்டாள் ரெங்கமன்னாரின் பவனி நடைபெறுகிறது.

வைகாசி மாதம்: வசந்த உத்ஸவம் - நம்மாழ்வார் உத்ஸவம் 10 நாட்களுக்கு நடைபெறுகிறது.

ஆனி மாதம்: 10 நாட்களுக்கு பெரியாழ்வார் உத்ஸவம் நடைபெறுகிறது. பௌர்ணமி தினங்களில் ஆண்டாளுக்கு முப்பழம் நைவேத்தியம் நடைபெறும்.

ஆடி மாதம்: ஆடிப்பூர பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. இவ்விழாவின் 9ம் நாளான ஆடிப்பூரம் நாளன்று தேர்த்திருவிழா நடைபெறுகிறது. இந்த வருடம் வரும் ஆகஸ்ட் 5 ம் நாள் ஆடிப்பூர விழா மற்றும் தேரோட்டம் நடைபெறுகிறது. ஆடிப்பூரம் அன்று ஆண்டாள் அவதரித்த நாளாக அறியப்படுகிறது. ஆண்டாள் ஜெயந்தி நாளான ஆடிப்பூரம் நாளில் விழா நடைபெறுகிறது.

ஆடிப்பூரம் மற்றும் வெள்ளிக் கிழமை ஒரே நாளாக அமைந்தால் மிகவும் சிறப்பான நாளாக கொண்டாடப் படுகிறது. இந்த வருடம் 05.08.2016 அன்று ஆடிப்பூரம் வெள்ளிக் கிழமையில் வருவதால் இந்த வருட திருவிழாவில் கலந்து கொள்வது மிகவும் சிறப்பானது.

ஆவணி மாதம்: பெரியாழ்வார் திருபவித்ர உத்ஸவம் 7 நாட்களுக்கு நடைபெறுகிறது.

புரட்டாசி மாதம்: பெரிய பெருமாள் பிரம்மோத்ஸவம் 11 நாட்களுக்கு நடைபெறுகிறது.

ஐப்பசி மாதம் : தீபாவளிப் பண்டிகை ஆண்டாள் ரெங்கமன்னாரின் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. பெரிய பெருமாளுக்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது.

கார்த்திகை மாதம்: கார்த்திகை தினத்தன்று சொக்கப்பனை வைக்கப்படும். திருமங்கையாழ்வார் உத்ஸவம் நடைபெறுகிறது.  கொசிக ஏகாதசியன்று 108 வஸ்திர சேவை நடைபெறுகிறது.

மார்கழி மாதம்: திரு அடியாயன உத்ஸவம்.  வைகுண்ட ஏகாதசி, பரமபத வாசல் திறப்பு.

தை மாதம்: மணவாள முனிகளுக்கு மங்கலா சாசனம்.
மாசி மாதம்:  மாசி மகத்திலிருந்து மூன்று நாட்களுக்கு தெப்போத்ஸவம் நடைபெறுகிறது.

பங்குனி மாதம்: ஆண்டாள் ரெங்கமன்னார் பிரம்மோத்ஸவம் 10 நாட்கள் நடைபெறுகிறது. 9ம் நாள் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

தமிழகத் திருக்கோவில்களின் தேர்களில் திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவில் தேர் முதலிடத்திலும், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேர் இரண்டாவது இடத்திலும், திருநேல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்மன் கோவில் தேர் மூன்றாது இடத்திலும் உள்ளன.

தமிழ்நாடு அரசின் அன்னதானத்திட்டம் இங்கு செயல்படுத்தப்படுகிறது. தினந்தோறும் 100 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. அன்னதானம் வழங்க விரும்பும் பக்தர்கள் ரூ. 2000 செலுத்தி ஒருநாள் அன்னதானம் வழங்கலாம். பிறந்த தினம், திருமண நாள் அன்று அன்னதானம் வழங்க விரும்புபவர்கள் ஒரு முறை ரூ. 20,000 செலுத்தி ரசீது பெற்றுக் கொண்டால் வருடாவருடம் அவர்களின் பெயரில் அன்னதானம் நடைபெறும்.  இவ்வகையில் கொடுக்கப்படும் நன்கொடைக்கு 80ஜி பிரிவில் வருமான வரி விலக்கு பெறலாம்.

கடந்த 20.01.2016 நாளன்று இத்திருக்கோவிலின் கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது. நம் நாட்டிலேயே தங்கத்தினால் வேயப்பட்ட கோவில் விமானங்களில் மிகப்பெரிய விமானம் திருவில்லிப்புத்தூர் கோவில் விமானம்.

வரும் 05.08.2016 அன்று நடைபெறவிருக்கும் ஆடிப்பூரம் மற்றும் தேரோட்டத்தில் கலந்து கொள்ள தயாராகிவிட்டீர்களா?

சென்னையிலிருந்து சாலை வழியாக 539 கி.மீ. தொலைவிலும், ரயில் வழியாக 556 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து பொதிகை எக்ஸ்பிரஸ் மூலமாகவோ, தனியார் மற்றும் அரசுப்பேருந்துகளிலோ சுமார் 10 மணி நேர பயனத்தில் இத்தலத்தை அடையலாம்.
அருகிலிலுள்ள பேருந்து நிறுத்தம் : தேரடி.  அருகிலுள்ள ரயில் நிலையம்: ஸ்ரீவில்லிப்புத்தூர், விமான நிலையம்: மதுரை.

அல்லது வேறு ஊர்களிலிருந்து மதுரை நகரை அடைந்து அங்கிருந்து கீழ்க்கண்ட நேரங்களில் ரயில் மூலமாகவோ அல்லது மதுரையிலிருந்து ராஜபாளையம், தென்காசி, சங்கரன்கோவில், செங்கோட்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் மூலமாக ஸ்ரீவில்லிப்புத்தூரை அடையலாம்.

பொதிகை எக்ஸ்பிரஸ் காலை 5.30 மணிக்கு.
செங்கோட்டை பாஸஞ்சர்; காலை 7.15 மற்றும் 11.25 மற்றும் மாலை 5.15 மணிக்கு.

சுற்றுலா செல்ல விரும்புவர்கள் குற்றாலம், தென்காசி, சங்கரன்கோவில், சதுரகிரி, சாஸ்தா கோவில் அருவி, இராஜபாளையம் அய்யனார் கோவில் அருவி, இருக்கன்குடி, கோட்டூர், பழனி போன்ற இதர தலங்களுக்கும் இங்கிருந்து செல்லலாம். 

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஸ்ரீவில்லிப்புத்தூர் நகரில் தயாரிக்கப்படும் பால்கோவா இந்த ஊருக்கு உலக அளவில் பெயர் பெற்றுத் தந்துள்ளது. ஆண்டாள் கோவில் நுழைவாயிலில் அமைந்துள்ள வெங்கடேஸ்வரா ஸ்வீட் ஸ்டால் மற்றும் பேருந்து நிலையத்தின் உள்ளேயே கூட்டுறவு விற்பனையகத்திலும், பேருந்து நிலையத்தின்  அருகில் அமைந்துள்ள புளியமரத்துக்கடை ஆகிய கடைகளிலும்; பால்கோவா கிடைக்கும். இராஜபாளையத்தில் காந்தி சிலை சந்திப்பில் குமரன் ஸ்வீட்ஸ் மற்றும் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள கூட்டுறவு கடைகளிலும் பால்கோவா கிடைக்கும்.


கோவிலின் நிர்வாக அலுவலக தொடர்பு முகவரி:
நிர்வாக அதிகாரி,
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோவில்,
ஸ்ரீவில்லிப்புத்தூர் - 626 125.
விருதுநகர் மாவட்டம். தமிழ்நாடு.
தொலைபேசி: 04563 260254

கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை
தொடர்புக்கு:  gsraj1979@gmail.com

சனி, 30 ஜூலை, 2016

ஆடிப்பெருக்கு - 02-08-2016

https://ta.wikipedia.org/s/enc

 கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் தமிழக ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதைக் குறிக்கும்.

வேறு பெயர்கள்

ஆடிப்பெருக்கினை பதினெட்டாம் பெருக்கு என்றும், ஆடிப்பதினெட்டு என்றும் அழைக்கின்றனர். பொதுவாக இந்து சமய விழாக்கள் நாட்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு செய்யப்படுவதில்லை. நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டும், கிழமைகளையும் கொண்டே நடத்தப்படுகிறது. ஆடி மாதத்தில் 18வது நாள் என்று நாளின் எண்ணிக்கையை கணக்கில் கொண்டு நடத்தப்படும் ஒரே விழா இதுவாகும்.

 விழாக் காரணம்

தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். இப்பொழுது நெல், கரும்பு முதலியவற்றை விதைத்தால் தான் அவர்கள் தை மாதத்தில் அருவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள். இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதை என்ற பழமொழியும் விளைந்தது. 

விழா நிகழ்வுகள்

 மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபடவும் செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொள்கின்றனர். அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைக்கின்றனர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுகின்றனர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து குதூகலமாக உணவை சாப்பிடுவார்கள்.

காவிரிக்கரை


காவிரியாற்றின் கரையில் உள்ள ஊர்களில் இவ்விழா மிகவும் புகழ்பெற்றது.
தமிழகத்தின் ஒகனேக்கல் நீர்வீழ்ச்சி முதலாக காவிரி சங்கமிக்கும் பூம்புகார் நகரம் வரை இவ்விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
  • மேட்டூர் அணை,
  • பவானி கூடுதுறை,
  • ஈரோடு,
  • பரமத்தி-வேலூர்,
  • குளித்தலை,
  • திருச்சி,
  • புகார்
சீரங்கத்தில் புகழ்பெற்ற அம்மா மண்டபம் படித்துறையில் காவிரிக்கு சீர்கொடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடக்கும். ஆடிப்பெருக்கு நாளன்று சீரங்கம் கோயிலில் இருந்து உற்சவர் நம்பெருமாள் புறப்பாடாகி, அம்மா மண்டபம் படித்துறைக்கு எழுந்தருள்வார். அங்கு சுவாமிக்கு திருமஞ்சனம் நடக்கும். மாலை வரை பெருமாள் அங்கு வீற்றிருப்பார். பெருமாளின் சீதனமாக தாலிப்பொட்டு, பட்டு மற்றும் மங்களப் பொருட்கள் ஆற்றில் விடப்படும்.

நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டத்தில் அடிப்பெருக்கு நாளில் கொல்லிமலை சென்று அங்குள்ள ஆகாயகங்கை நீர்வீழ்ச்சியில் நீராடி அரப்பளிசுவரரை தொழுவது வழக்கம. ஆடிப்பெருக்கு நாளில் தமிழக அரசு போக்குவரத்து கழகத்தினர் நாமக்கல், சேலம் மற்றும் ராசிபுரத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்குவது வழக்கம்

பழங்காலம் போல் தற்போது எல்லா ஆறுகளிலும் பெருக்கெடுத்து ஓடுவது இல்லை என்றாலும், இந்நாளில் காவிரி போன்ற சில ஆறுகளில் மட்டுமாவது அணைகளைத் திறந்து விட்டு நீர் பெருக்கெடுத்து ஓடச் செய்கின்றனர்.


வருகிறது ஆடி அமாவாசை - 02-08-2016





பித்துருக்களுக்கு தர்பணம் செய்ய வேண்டிய தருணம்
ஏற்ற இடங்கள்
இராமேஸ்வரம், பாபநாசம்,காவேரி ஆற்றங்கரை கோவில்கள், கடல்கரை சிவன்கோவில்கள், 

தர்பணம் செய்யும் முன் ஏற்படும் சந்தேசங்களுக்கு விடை இதோ !

கேள்வியும் பதிலும் --25 (தர்ப்பணம் )

1.ஒரு பெற்றோருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்பிள்ளைகள் இருந்தால் அவர்களின் மரணத்திற்கு பின் யார் திதி கொடுக்க வேண்டும் ?
2.பெண் பிள்ளைகள் மட்டும் பெற்ற பெற்றோருக்கு யார் திதி கொடுக்க வேண்டும் ?
3.முதல் தாய் சுமங்கலியாக இறந்தால் யார் திதி கொடுக்க வேண்டும் ?
4.பெற்றோர்கள் இறந்த பின் தந்தைக்கு தாயிக்கு தனி தனியாக திதி கொடுக்க வேண்டுமா ?

ஒரு அன்பரின் கேள்விகள் இது .....

நம்முடைய சமய நூலில் குறிப்பாக கருட புராணம் என்னும் நூலில் இதை பற்றி தெளிவாக சொல்லபட்டு இருக்கிறது.

விண்ணில் உள்ள சூரியன் பூமியில் உள்ள குளத்து நீரில் தெரியும் ,
இதை போல 3 குவளையில் நீர் ஊற்றி வெளியில் வைத்தால் எல்லா
குவளையிலும் சூரிய ஒளி தென்படும் ,
இது போல 
ஒரு ஆண்மகனின் ஆன்மாவில் உண்டான ஒன்று மேற்பட்ட ஆன்மாகளும் தான் வந்த ஆன்மாவுக்கு திதி என்னும் எள்ளு நீரை கட்டை விரலின் முலமாக தர வேண்டும் என்று நூல்கள் சொல்கிறது .

இறந்த முதல் வருடம் மட்டும் தலைச்சன் பிள்ளை வீடு அல்லது அவர் இறந்த வீட்டில் அவர் இறந்த திதி அன்று எல்லோரும் சேர்ந்து திதி தரவேண்டும்,
அடுத்த வருடம் அவரவர் தனியாக அவர்கள் வீட்டில் தேய் பிறையில் வரும் திதியில் 
தரவேண்டும் ......(இறந்த திதி வளர்பிறையாக இருந்தாலும் தேய்பிறையில் தரவேண்டும் )

பெண்களை மட்டும் பெற்றவர்கள் இறந்தால் மகளிடம் பிறந்த ஆண்பிள்ளை கொல்லி வைக்க வேண்டும் என்றும் முதல் வருடம் மட்டும் 
பெண்கள் திதி தரவேண்டும் ,பிறகு வருடம் ஒரு முறை படையல் போட்டு பூசை செய்யலாம் என்று நூல்கள் சொல்கிறது .

தம்பதியர்களில் மனைவி முதலில் இறந்தால் கணவன் உயிரோடு இருக்கும் வரை அவளுக்கு திதி தரவேண்டும் ,
அவர் தவிர பிள்ளைகள் தர கூடாது என்றும் ,
தந்தை இறந்த பிறகு இருவருக்கும் தந்தையின் இறந்த திதி அன்று ஒன்றாக இருவருக்கும் சேர்த்து பிள்ளைகள் தரவேண்டும் என்று நூல்கள் சொல்கிறது .

தாய்க்கு தந்தைக்கு என்று தனித்தனியாக திதி கொடுக்க கூடாது ,
தாய் இறந்த முதல் வருடம் மட்டும் தனியாக கொடுத்து விட்டு ,மறுமுறை 
தந்தையுடன் சேர்த்து ஒன்றாக தான் தரவேண்டும் ,தனியாக படையல் பூசை போடலாம் என்று நூல்கள் சொல்கிறது .....

திதி வேறு படையல் பூசை வேறு குழப்ப வேண்டாம் ....

திதிகள் கொடுப்பது நம் வம்சத்தினருக்கு ஆரோக்கியம் ,நல்ல வாழ்க்கை ,மேலும் 
பல பிரச்சனைகளில் நமக்கு விலக்கு அளித்து விடும் என்று புரிந்து கொள்ளல் வேண்டும்..

நன்றி ....

அகத்தியர் 
புஜெந்தர் ஆசிகளுடன் ..

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

புண்ணியத்தை சேர்க்கும் ஆடி அமாவாசை 02-08-2016




விரதம் மேற்கொள்வதன் மூலம் நாம் விரும்பிய பலன்களை விரும்பியவாறே பெற்றுக்கொள்ள முடியும். விரதத்தில் வழிபாடு செய்வது முக்கியமானது. 

‘அன்னையும் பிதாவும் முன்னெறி தெய்வம், ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்பது ஆன்றோர் வாக்கு. மாதா, பிதா, குரு, தெய்வம் என்போர் வணக்கத்துக்கு உரியவர்கள். விரதங்களில் பலவகை உண்டு. இறைவன், இறைவி குறித்து கடைப்பிடிக்கப்படும் விரதங்கள், தெய்வங்களாகி விட்ட தாய், தந்தை ஆகியோரை எண்ணி மேற்கொள்ளப்படும் விரதங்கள் என்று அவை பலவகைப்படும். 

அமாவாசை, பவுர்ணமி திதிகளில் கடைப்பிடிக்கப்படும் இரண்டு விரதங்களும், முறையே காலமான தாய், தந்தை ஆகியோரை குறித்து அவர்கள் நற்கதியடைய அவர்களின் பிள்ளை களால் அனுஷ்டிக்கப்படும் விரதங்கள் ஆகும். 

சூரியனை பிதுர்க்காரகன் என்றும், சந்திரனை மாதூர்க்காரகன் என்றும் அழைக்கிறார்கள். இவர்களை சிவசக்தி சொரூபமாக சாஸ்திரங்கள் கூறுகின்றன. சூரியனும், சந்திரனும் சேரும் புனிதமான ஆடி அமாவாசையன்று முன்னோர்களையும், இறந்த தாய், தந்தையரையும் நினைத்து திதி கொடுப்பது நல்லது. புண்ணிய நதிகள், கடல் போன்ற இடங்களில் புனித நீராடி இஷ்ட தெய்வங்களை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம், வஸ்திர தானம் செய்தால் பாவங்கள் விலகும். தீ வினைகள், கர்ம வினைகள் அனைத்தையும் போக்கி வாழ்வில் புண்ணியத்தை சேர்க்கும். 

ஆடி மாதத்தில் வருகின்ற அமாவாசை திதி, பிதுர் வழிபாட்டிற்கு புண்ணியமான தினம் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. 


‘அமா’ என்றால் ஓரிடத்தில் பொருந்தியது அல்லது சேர்ந்தது என்று பொருள். ‘வாசி’ என்றால் சாதகமான அல்லது வாய்ப்பான என்னும் கருத்தில் வருகிறது. ஒரே ராசியில் சூரியனும், சந்திரனும் ஒன்று சேரும் புனிதமான நாள் அமாவாசையாகும். அத்துடன் தேவர்களும் அமாவாசையின் அதிபர் களாக உள்ளனர். பூமியில் உள்ளவர்களை பொருத்த மட்டில் ஒவ்வொரு அமாவாசையும் முக்கியமானது. பிதுர் கருமத்திற்கு உகந்த நாள். 

சூரிய மண்டலத்திற்கு அப்பால் தென்மண்டலத்தில் பிதுர்க்கள் உறையும் ‘பிதுர் லோகம்’ உள்ளது. 

ஆடி அமாவாசையன்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் நீராடினால் தீவினைகள் அகலும். அமாவாசையில் விரதம் இருந்து எள்ளும், தண்ணீரும் இறைத்து, பிண்டம் போடுதல் போன்றவற்றை செய்ய வேண்டும். தாய், தந்தை இறந்த தேதியை மறந்தவர்கள் ஆடி அமாவாசையன்று திதி கொடுக்கலாம். 

நோயின்றி சுகமாக வாழவும், சகல செல்வங்களையும் பெற்று இனிதாக வாழவும் பிதுர்க்களை திருப்தி செய்ய வேண்டும். ஆடி அமாவாசையன்று மூதாதையர்களின் படத்துக்கு மாலை போட்டு, அவர் களுக்கு பிடித்தமான உணவு வகைகளை படைத்து அவர்களை வணங்க வேண்டும். முதலில் காகத்திற்கு உணவிட்டு பின்பு விரதம் முடிக்க, கர்ம வினைகள் நீங்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

விரதம் இருப்பது எப்படி? 
ஆடி அமாவாசை விரதம் இருப்பவர்கள், காலையில் எழுந்து அருகில் இருக்கும் கடல், ஆறு போன்ற நீர்நிலைகளுக்கு சென்று குளித்துவிட்டு இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும். அதன்பிறகு முதியவர்களுக்கு அன்ன தானம் வழங்க வேண்டும். அமாவாசையன்று பெண்கள் வீட்டில் காலை உணவு உண்ணாமல் இறந்த மூதாதையர்களுக்கு பிடித்தமான உணவுகளையும், பதார்த்தங்களையும் செய்ய வேண்டும். 

அன்றைய சமையலில் எல்லாவிதமான காய்கறிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். விரதம் இருப்பவர்கள் எதுவும் சாப்பிடாமல் எத்தனை நபர்களை வணங்க வேண்டுமோ அத்தனை இலைகள் போட்டு சமைத்த உணவு, பதார்த்தங்கள், துணிகள் வைத்து அகல் விளக்கேற்றி, தூப தீபம் காட்டி முன்னோர்களை மனதில் நினைத்து வழிபட வேண்டும். பிறகு படைத்த உணவுகளை வீட்டிற்கு வெளியில் உயரமான இடத்தில் வைத்து காகத்துக்கு படைக்க வேண்டும். காகங்கள் உண்ட பிறகு வீட்டிற்குள் முறைப்படி பரிமாறப்பட்ட இலைகளில் உறவினர்களுடன் அமர்ந்து சாப்பிட வேண்டும். இறந்தவர்களுக்கு படைத்த துணிகளை அவர்களுக்கு பிடித்த மாணவர்கள் அணிந்து கொள்ளலாம். அமாவாசை விரதம் இருப்பவர்கள் காலையில் சாப்பிடக்கூடாது, பகலில் சாப்பிடலாம். முறைப்படி விரதமிருந்து முன்னோர்களை வழிபடுவர்களுக்கு அவர்களின் ஆசி கிடைக்கும். முன்னோர் செய்த பாவவினைகள் நீங்கி அவர்களுக்கு முக்திபேறு கிட்டும். 

ராமேசுவரம், வேதாரண்யம், கோடியக்கரை, திருவையாறு ஆகிய இடங்களில் புனித நீராடுவது விசேஷம். ஆடி அமாவாசையன்று விரதம் மேற்கொண்டால் ஆயுள் பலம் கூடும் என்று பக்தர்களின் நம்பிக்கை.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு; வை.பூமாலை,சுந்தரபாண்டியம்

புதன், 27 ஜூலை, 2016

ஆடிக் கார்த்திகை 28-07-2016


தமிழ்க் கடவுள் முருகனுக்கு உகந்த திருநாள் ஆடிக் கார்த்திகை. இந்த வருடம் ஜூலை 28ம் நாள் இத்திருநாள் வருகிறது. சிவபெருமான் பார்வதி தேவியரின் மகன் தமிழ்க்கடவுள் முருகன். ஸ்கந்த புராணத்தில் கடவுள் முருகனின் பிறப்பும், பெருமைகளும் விபரமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
 

இந்நாளில் அனைத்து முருகன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகளும், யாகங்களும் நடத்தப்படுகின்றன. அறுபடை வீடுகளிலும் இத்திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பக்தர்கள் காவடி எடுத்து வந்து முருகனை வழிபடுகின்ற திருநாள் ஆடிக் கிருத்திகை.
 

திருச்செந்தூர் பாலசுப்பிரமணியர், பழனி தண்டாயுதபாணி, திருத்தணி சுப்பிரமணிய சுவாமி, சுவாமிமலை சுவாமிநாத சுவாமி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, பழமுதிர்ச்சோலை சுப்பிரமணிய சுவாமி ஆகிய அறுபடை வீடுகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படும் திருநாள். 

வைகாசி விசாகம் அன்று முருகனின் அவதாரம் நிகழ்ந்தாக ஆன்மீக வரலாறு கூறுகிறது.
 
தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்த சஷ்டி விரதம், திருக்கார்த்திகை அன்றும் முருகக் கடவுளுக்கு சிறப்பான திருநாளாகும். 

 

இது தவிர சென்னை வடபழனியில் அமைந்துள்ள வடபழனியாண்டவர் திருக்கோவிலில் நடைபெறும் ஆடிக்கார்த்திகை திருநாள் மிகவும் பிரசித்தி வாய்ந்தது.

க. சங்கிலிக்காளை

இன்று கலாம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாள்

அவருக்கு நம் செய்ய வேண்டிய கடமை நிறையவே இருக்கிறது

அவரின் படத்தை அனுப்புவதும் படத்தை profile pic வைப்பதால் நம் கடமை முடியவில்லை அதனால் எந்த லாபமும் நாட்டு இல்லை

"நாட்டுக்காக எதையாது செய்" இது தான் அவருக்கே நீ நான் செய்யும் மரியாதை

படங்களை பகிர்வதால் மட்டும் நம் கடமை முடியாது புரிந்து செயல்படுங்கள்

படங்களை அனுப்புவதை விட நாட்டிற்க்காக ஒரு மரத்தை வை உன் அடுத்த தலைமுறை வாழும்

 
வை.பூமாலை, சுந்தரபாண்டியம்

நான் யார்?- ஆதி சங்கரர் அருளிய ஸ்லோகங்கள்!



உலகத்தில் மக்களிடையே பேதங்கள் நிலவிய சூழ்நிலையில், காலடி க்ஷேத்திரத்தில் சிவபெருமானின் அம்சமாக அவதரித்தவர் மகான் ஆதிசங்கரர். தாயின் அனுமதியுடன் சந்நியாசம் பெற்ற ஆதிசங்கரர், அனைத்து ஜீவன்களிலும் இருக்கும் பிரம்மம் ஒன்றே என்னும் அத்வைத சித்தாந்தத்தை போதித்தவர்.


அவர் போதித்த அத்வைத சித்தாந்தத்துக்கு அவர் பொருத்தமானவரா என்பதை சோதிக்க விரும்புவதுபோல், ஒரு சம்பவம் காசி க்ஷேத்திரத்தில் நடைபெற்றது. ஒருமுறை ஆதிசங்கரர் கங்கையில் நீராடிவிட்டு சீடர்களுடன் திரும்பும்போது, எதிரில் தாழ்த்தப்பட்டவராகக் கருதப்படும் ஒருவர், நான்கு நாய்களுடன் வந்தார். அப்போதுதான் கங்கையில் நீராடிவிட்டு வந்த ஆதிசங்கரர், அவரை வழியைவிட்டு விலகிப் போகச்சொல்கிறார்.

எதிரில் வந்தவர், 'நீர் விலகிப் போகச் சொல்வது யாரை? இந்த உடலையா அல்லது இந்த உடலுக்குள் இருக்கும் ஆத்மாவையா? எதை விலகிப் போகச் சொல்கிறீகள்? மண் பாத்திரத்தில் இருந்தாலும், தங்கக் குடத்தில் இருந்தாலும் தண்ணீர் தண்ணீர்தானே? அது தன் இயல்பில் இருந்து மாறுவது இல்லையே. அதுபோலவே மனிதர்களோ, விலங்குகளோ, தாவரங்களோ அனைத்திலும் இருப்பது ஒன்றேயான அந்தப் பிரம்மம்தானே? அப்படி இருக்கும்போது, என்னுடைய உடலில் இருக்கும் அதே பிரம்மம்தானே தங்களுடைய உடலிலும் இருக்கிறது. நமக்குள் எந்த வேறுபாடும் இல்லையே. என்னை ஏன் விலகிப் போகச் சொல்கிறீர்கள்?'' எனக் கேட்டார்.

ஆதிசங்கரருக்கு அப்போதுதான் புரிந்தது, தன்னுடைய மனப்பக்குவத்தை சோதிப்பதற்காக இறைவன் நிகழ்த்திய லீலை அது என்பது. உடனே, அவரை நமஸ்கரித்து அருமையான ஸ்தோத்திரம் ஒன்றைப் பாடினார். ஐந்து ஸ்லோகங்கள்கொண்ட அதுதான் மனீஷா பஞ்சகம். அந்தப் பஞ்சகத்தில் இருந்து சில பகுதிகள் இங்கே...

விழிப்பிலும், கனவிலும், உறக்கத்திலும் எந்தத் தூய உணர்வு தெளிவாக வெளிப்படுகிறதோ, எது பிரம்மா முதல் எறும்பு வரை அனைத்து உடல்களிலும் பிரபஞ்சத்தின் சாட்சியாக ஊடுருவியுள்ளதோ அதுதான் நான். நான் காணப்படும் பொருள் அல்ல என்று எவருக்கு உறுதியான ஞானம் இருக்கிறதோ, அவர் சமுதாயத்தால் தாழ்த்தப்பட்டவரோ அல்லது உயர்த்தப்பட்டவரோ யாராக இருந்தாலும் அவரே என் குரு என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்.

நான் பிரம்மம். இந்தப் பிரபஞ்சமும் பிரம்மம். தூய உணர்வுதான் இந்தப் பிரபஞ்சமாக விரிந்துள்ளது. சத்வம், ரஜஸ், தம

ஆகமங்கள் போற்றும் அஞ்செழுத்து

வேதங்களும் ஆகமங்களும் பரம் பொருளான சிவபெருமானை மந்திரவடிவானவ‎ன்‎ என்று ‏‏இயம்புகின்றன; சொல்லும் பொருளும் கலந்த ‏இப்பிரபஞ்சமானது சிருஷ்டித் தொடக்கத்தில் நாதவடிவாக ‏இருந்ததெனவும், அந்த நாதமே சிவபெருமானின் எல்லாவற்றிற்கும் உயர்ந்தநிலையெனவும் நாம் ஆகமங்களில் காண்கிறோம். அது பி‎ன்னர் பிரணவ ஒலியாகவும், அதிலிருந்து எழுத்துக்களும் (மாத்ருகா என வடமொழியில் வழங்கப்படுவது) அவற்றிலிருந்து சொற்களும் தோன்றினவெ‎‎ன்று ஆகமங்கள் பறைசாற்றுகி‎ன்றன.

வேதங்களும் சிவபெருமானே ஐந்தெழுத்து வடிவின‎ன் என்றும், ஐந்தெழுத்தைத் தவிர சிவபெருமானைக் குறிக்க வேறு மந்திரம் ‏இல்லை எ‎‎ன்றும் ஆகமங்கள் கூறுகி‎ன்ற‎ன. ஐந்தெழுத்து மந்திரந்தா‎ன் யாது ? அது ந‎கார‎ம், மகாரம், சிகாரம் வகாரம் யகாரம் ஆகிய எழுத்துக்கள் அடங்கியது. ‏‏இது பெரும்பாலும் மேற்குறித்த ஆகமநூல்களில் காணப்படுவது; ஆ‏யினும் அகாரம், உகாரம் மகாரம் பிந்து நாதம் ஆகியன அடங்கிய ஐந்தெழுத்து மந்திரத்தையும் நாம் ஆகமங்களில் காண்கிறோம். ‏‏இதற்கு ஸூக்ஷம பஞ்சாக்ஷரமந்திரமெ‎‎ன்று பெயர். சிவஞா‎னபோதம் 9 ம் சூத்திரத்தில் “எண்ணும் அஞ்செழுத்தே” எ‎ன்னும் சொற்றொடரால் குறிக்கப்படும் ஐந்தெழுத்து நம சிவாய எ‎ன்னும் ஸ்தூல பஞ்சாக்ஷரத்தையும் ஓம் எ‎னப்படும் பிரணவ பஞ்சாக்ஷரத்தையும் ஹௌம் எனப்படும் பிராஸாத பஞ்சாக்ஷரத்தையும் குறிக்கும் எ‎ன்று சிவாக்கிரயோகிகள் தம்முடைய வடமொழிச் சிவஞா‎னபோதத்தி‎ன் லகுடீகை எ‎‎ன்னும் சுருக்கமான உரையில் கூறுகி‎ன்றார். எனவே பஞ்சாக்ஷர மந்திரம் மூவகையெ‎‎ன்று தெளிகிறோம்.


பஞ்சாக்ஷரமந்திரத்தின் பெருமைகள்

ஓ முனிவரே ! மஹாதேவராகிய சிவபெருமானுக்கொப்பான கடவுள் மூவுலகிலும் இல்லை; பஞ்சாக்ஷரத்திற்கொப்பான மந்திரம் இல்லை, இல்லை.

பஞ்சாக்ஷரமே எல்லா மந்திரங்களுள்ளும் சிறந்தது; திருநீறே மருந்துகளுள் தலை சிறந்தது; மஹாதேவராகிய சிவபெருமானே எல்லா உறவினர்களுள்ளும் சிறந்த உறவினர்; இதுவே எல்லா சாத்திரங்களும் நிச்சயாமன முடிபு. இவை வித்தியாபுராணமென்னும் சைவ உபாகமத்தின் சுலோகங்களாம். "மந்திரமாவது நீறு" எனத் தொடங்கும் திருஞானசம்பந்தப் பெருமானின் திருநீற்றுப் பதிகமும், "மருந்து வேண்டில்" எனத் தொடங்கும் திருந்துதேவன்குடிப் பதிகமும் இக்கருத்தையே வலியுறுத்துவது இங்கு நோக்கத்தக்கது.

இம்மந்திரத்தை சீடரல்லாதவருக்கோ அல்லது தக்க குருவினிடத்தில் முறையாக உபதேசம் பெறாதவருக்கோ கூறலாகாது என்று தேவீகாலோத்தராகமம் எச்சரிக்கிறது. ஏனெனில், இதன் பெருமைகளோ கூறவும் இயலாதன; இம்மந்திரத்தை நினைத்த அளவிலேயே பிரஹ்மஹத்தி உள்ளிட்ட அனைத்துப் பாவங்களும் விலகும்:

வித்தியாபுராணம் என்னும் ஆகமம் கூறும் செய்திகள்: பஞ்சாக்ஷரமென்பது நகாரம் மகாரம் சிகாரம் வகாரம் யகாரம் என்னுன் ஐந்தெழுத்துக்களைக் கொண்ட மந்திரம்; இதனுடன் தொடக்கத்தில் ஓம் என்னும் பிரணவத்தைச் சேர்த்தால் ஓம் நம சிவாய என்னும் ஷடக்ஷரமந்திரம். இந்த ஐந்து எழுத்துக்களும் முறையே ஸத்யோஜாதம் வாமதேவம் அகோரம் தத்புருஷம் ஈசானம் என்னும் பஞ்ச பிரஹ்மங்களைக் குறிக்கும்; ஐவகைப் பூதங்களான நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகியனவும் குறிக்கப்பெறும்; மேலும், இவ்வைந்தெழுத்துக்களுக்கும் முறையே பிரஹ்மா, விஷ்ணு, ருத்திரன், ஈசுவரன், ஸதாசிவன் ஆகியோர் அதிதேவர்கள். நகாரம் தங்கநிறமுடையது,; மகாரம் கருநிறமுடையது; சிகாரம் தீயையொத்த நிறமுடையது; வகாரம் கருநீலநிறத்தையும் யகாரம் ஸ்படிகநிறத்தையுமொத்தவை. நகாரம் ருக்வேதத்தையும் மகாரம் யஜுர்வேதத்தையும் சிகாரம் ஸாமவேதத்தையும் வகாரம் அதர்வணவேதத்தையும் யகாரம் இதிஹாஸங்களையும் குறிக்கின்றன.

எவ்வளவு தடவை ஜபித்தால் மந்திரம் ஸித்தியாகுமோ அத்வரையிலும் எப்பொழுது ஸித்தியாகுமோ அதுவரையிலும் ஒருவன் இம்மந்திரத்தை ஜபம் செய்யவேண்டும் என்று இவ்வாகமம் கூறுகிறது.

ஆடல்வல்லானான நடராசப் பெருமானின் உடுக்கை (டமரு) உலகத்தின் சிருஷ்டியையும் பெருமானின் அபயஹஸ்தம் பிரபஞ்சம் நிலை பெற்றிருத்தலையும் பெருமான் தாங்கியிருக்கும் அக்னி அழிவையும் ஊன்றிய திருவடி திரோபாவத்தையும் தூக்கிய திருவடி அனுக்கிரஹத்தையும் குறிப்பன என்று மேற்கண்ட சுலோகம் கூறுகிறது. இக்கருத்தை அப்படியே நமக்கு வழங்குகிறார் மனவாசகம்கடந்தார் தம்முடைய உண்மைவிளக்கம் என்னும் நூலின் 36 ம் பாடலில். பாட்டு சைவப்பெருமக்கள் யாவருமறிந்ததே:

தோற்றம் துடியதனில் தோயும் திதி அமைப்பில்
சாற்றியிடும் அங்கியிலே சங்காரம் - ஊற்றமா
ஊன்றுமலர்ப்பதத்தில் உற்றதிரோதம் முத்தி
நான்ற மலர்ப்பதத்தே நாடு.
சிவதாண்டவமானது மக்களுக்கு எவ்வாறு முத்திப் பேறு அளிக்கிறதென்பதையும் இச்சிதம்பரரஹஸயம் கூறுகிறது:

மாயை, பாவம் புண்ணியம் முதலிய கருமவினைகள் ஞானத்தை மறைக்கும் ஆணவமலம் ஆகிய மும்மலங்களையும் அறவே நீக்கி தன்னுடைய அபயமென்னும் ஆனந்தக் கரத்தினால் எல்லையில்லா ஆனந்தக்கடலில் அமிழ்த்துவதே நடராசப் பெருமானின் ஆனந்ததாண்டவரஹஸ்யம்". என்பதூ இதன் பொருள்.

இதே கருத்தை நாம் உண்மை விளக்கத்தில் 37-ம் செய்யுளில் மீண்டும் காண்கிறோம்:

மாயை தனை உதறி வல்வினையைச் சுட்டு மலம்
சாய அமுக்கி அருள் தான் எடுத்து - நேயத்தால் 
ஆனந்தவாரிதியில் ஆன்மாவைத் தான் அழுத்தல்
தான் எந்தையார் பரதம் தான் .

28 மூலாகமங்களுள் ஒன்றான வீராகமம் பஞ்சாக்ஷரபடலமென்னும் இரண்டாம் படலத்தில் பெரும்பான்மை வித்தியாபுராணக் கருத்துக்களையே கூறுகின்றது; மேலும், சிருஷ்டி ஸ்திதி ஸம்ஹாரமென்னும் மூவகைப்பட்ட நியாஸங்களையும் அங்கநியாஸத்தையும் இம்மந்திரத்தைக் கொண்டே செய்யும் முறையைக் கூறுகிறது.

கோடிக்கணக்கான பிறவிகளில் மனம் மெய் மொழி ஆகியவற்றால் செய்த பாவங்களனைத்தும் ஒருமுறை பஞ்சாக்ஷரமந்திரத்தை உச்சரிப்பதால் விலகும்; அவன் தூயவனாகிறான்" என்பது. மேலும் இம்மந்திரம்

சண்டாளனுடைய அன்னத்தைப் புசிப்பதாலும் கள் முதலியவற்றை அருந்தியதாலும் திருட்டுவழியில் சம்பாதித்துப் புசிப்பதாலும் சிராத்தம் முதலியவற்றில் உணவு உட்கொள்ளுவதாலும் பிராஹ்மணனைக் கொன்றதால் விளையும் பிரஹ்மஹத்தி என்னும் மிகக் கொடியபாவத்தையும் முற்றும் அழிக்கவல்லது" .

அடுத்து, "சிவ" என்னும் ஈரெழுத்துக்களின் பெருமையை மற்றொரு சுலோகம் கூறக்கேட்கலாம்:

கற்கவேண்டியவற்றுள் வேதம் தலைசிறந்தது; அவற்றுள் [யஜுர்வேதத்திலமைந்துள்ள] ருத்ரைகாதசினீ என்னும் ஸ்ரீருத்திரம் மிகச் சிறப்பு வாய்ந்தது; அதனுள் நமசிவாய என்னும் ஐந்தெழுத்துக்களும் அதனுள் சிவ என்னுமிரண்டெழுத்துக்களும் மிக மிகச் சிறப்பு வாய்ந்தனவென்று இச்சுலோகம் முழங்குகிறது.

நம சிவாய என்னும் ஐந்தெழுத்துக்களை மாற்றியமைத்து யநவாசிம என்னும் மந்திரத்தால் உச்சாடனம் மாரணம் என்னும் கிரியைகளையும், மவாயநசி என்னும் மந்திரத்தால் வித்துவேஷணம் என்னும் கிரியையும், வாசிமயந என்பதால் மோஹனத்தையும், செய்யலாம் என்று சிவஞானவித்தியா என்னும் நூல் கூறுகிறது.

எவனொருவன் பஞ்சாக்ஷரமந்திரஜபத்தை இடையறாது பக்தியுடன் செய்கிறானோ அவனால் கற்கப் படவேண்டிய நூல்களனைத்தும் கற்றனவாகின்றன; எல்லா நற்செயல்களும் இயற்றப்பட்டதாகின்றன. எவனுடைய நாவில் நமசிவாய என்னும் மந்திரம் எப்போதும் விளங்குகின்றதோ அவனுடைய வாழ்வு நிறைவுற்றதாகிறது; மிகவும் இழிந்த குலத்தில் பிறந்தவனோ பொருளற்றவனோ கல்வியறிவற்ற மூர்க்கனோ எல்லாக் கல்வியையும் கற்றவனோ எவனாகிலும் பஞ்சாக்ஷரமந்திரஜபத்தை மன உறுதியுடன் செய்பவன் எல்லாப் பாவங்களினின்றும் விடுபடுகின்றான் என்பதே அதன் பொருள்.

சிவபெருமானுடைய திருவாக்கில் தோன்றிய எல்லா மந்திரங்களும் பஞ்சாக்ஷர மந்திரத்தினுடைய 16 ல் ஒரு பங்கு மஹிமைக்குக் கூடச் சமமற்றவை என்றும் சிவஞானவித்தியா என்னும் நூல் கூறக்காண்கிறோம்.

பஞ்சாக்ஷரமந்திரத்தின் மஹிமையை விளக்க வந்த இந்நூலானது கூறும் மற்றொரு செய்தி: சிவபெருமான் தேவியாருக்குக் கூறுகிறார்:

பிரளயம் ஏற்பட்ட போது எல்லாத் தாவரங்களும் உயிர்களும் தேவர்களும் அரக்கர்களும் அழிந்து பிரகிருதியில் ஒடுங்கின; அப்பிரகிருதி என்னிடத்தில் ஒடுங்கியது. என்னைத் தவிர வேறெவரும் இல்லை. நானோ பஞ்சாக்ஷர வடிவில் அவை யாவற்றையும் தாங்கியிருந்தேன். அதிலிருந்து மீண்டும் பிரபஞ்சத் தோற்றத்திற்காக என்னுடைய சக்தியே நாராயணன் என்னும் வடிவமாகவும் அதிலிருந்து பிரஹ்மாவும் தோன்றினர். உலகத்தைப் படைப்பதற்காக பிரஹ்மாவானவர் பஞ்சாக்ஷரமந்திரத்திலிருந்தே மீண்டும் யாவற்றையும் தோற்றுவித்தார். எனவே அம்மந்திரத்தின் மஹிமை பெருமைகள் கணக்கிலடங்கா. அவற்றைப் பேசவும் அரிது எனப் பெருமான் கூறுகிறார்.

சிவபெருமானுக்கிணையான வேறொரு தெய்வம் மூவுலகிலுமில்லை; பஞ்சாக்ஷர மந்திரத்திற்கிணையாக மந்திரம் கடந்தகாலத்திலும் இனி வரும் காலத்திலுமில்லை.

நடந்துகொண்டோ நின்றுகொண்டோ தனக்குத் தோன்றிய முறையில் செயல்களைச் செய்துகோண்டோ சுத்தமாகவோ அசுத்தமாகவோ இருந்துகொண்டோ ஜபம் செய்தாலும் இம்மந்திரம் பலனளிக்காமல் போகாது .

எல்லாத்தெய்வங்களையும் நீக்கி ஐந்துமுகங்கொண்ட சிவபெருமானையே வழிபடு; எல்லா மந்திரங்களையும் நீக்கி பஞ்சாக்ஷரமந்திரத்தையே ஜபம் செய் என்பதாகும் அதன் பொருள். வில்வமரத்து நிழலில்பக்தியுடன் இம்மந்திரத்தை ஜபித்து, பின்னர் பூசைக் கேற்ற இலைகளையோ அல்லது புஷ்பங்களையோ ஹோமம் செய்தால் எல்லா நற்குணங்களும் பொருந்திய மகனைப் பெறுவான் என்பது திண்ணம். இது சிவஞானவித்தியா என்னும் மேற்கூறிய நூல் கூறுவது.

எவனுடைய இதயத்தில் எப்போதும் ஓம் நமசிவாய என்னும் மஹாமந்திரம் ஒலித்துக் கொண்டிருக்கிறதோ அவனுக்கு மற்ற மந்திரங்களாலோ அல்லது மற்ற சாத்திரங்களலோ என்ன பயன் ? ஒன்றுமில்லை எனச் சிவபெருமானே அம்மந்திரத்தின் மஹிமையை விளக்குவதாகக் காண்கிறோம் . மேலும் அந்நூல் கூறுவதாவது:

ஓம் நமசிவாய என்னும் ஆறெழுத்து மந்திரம் கைவல்லியமென்னும் மோக்ஷத்தை அடைவதற்கான வழியாகும்; அவித்தியை என்னும் அஞ்ஞானக் கடலை அணைக்கும் படவா என்னும் பிரளயகால நெருப்பு; கொடிய பாவங்களாகிய காட்டை எரிக்கும் காட்டுத் தீ. இம்மந்திரம் ஒன்றே முத்திய அளிக்கவல்லது. ஆதலின் முத்தியை அடையும் பொருட்டு எல்லா முனிவர்களாலும் இம்மந்திரம் ஒன்றே எப்போதும் ஜபிக்கப்படுகின்றது.

எப்படிப்பட்ட கொடிய பாவங்களையும் அழிக்கவல்லன மந்திரங்கள்; ஆனால் சிவபெருமானுடைய திருநாமங்கள் அழிக்கக் கூடிய அளவுக்குப் பாவங்களே இல்லாமையால் மனு முதலிய ஸ்மிருதிகளில் சிவநாமத்தைப் பிராயச்சித்தமாக ஜபிக்கும்படி கூறவில்லை. அப்பாவங்களைப் போக்க மற்ற மந்திரங்களுள்ளன என்பது இதன் உட்பொருள்.

ஐந்து கொடிய பாவங்களையும் அழிக்கவல்ல பஞ்சாக்ஷரமந்திரத்தை ஜபிப்போர்க்கு அப்பாவங்களினின்றும் விடுதலை, பிறவியிலிருந்தும் விடுதலை. மேலும், அகஸ்தியர், இராமர் முதலிய புண்ணிய புருஷர்களால் இம்மந்திரம் ஓதப்படுவதாலும், வேதத்தில் சிறப்பித்துக் கூறப்படுவதாலும் வேதத்தில் காணப்படுவதாலும் பரம் பொருளான சிவபெருமானைக் குறிக்கும் மந்திரமாதலாலும் நமசிவாய என்னுமிம்மந்திரத்தை எப்போதும் உச்சரிப்பீராக என்று முனிவர்கள் வேண்டுகின்றனர்.

எப்போதும் திருநீறும் ருத்திராக்ஷம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு பஞ்சாக்ஷரமந்திரத்தையும் எப்போதும் ஜபித்துக் கொண்டு எல்லா உயிர்களுக்கும் நன்மையே செய்பவன் ஜீவன்முக்தன் எனப்படுவான்; அவனே முற்றும் உணர்ந்த ஞானி, வைராக்கியமுடையவன், அறிவிற் சிறந்தவன், மூவுலகிலும் போற்றப்படுபவன்.

அகத்தியமுனிவர் கந்தப்பெருமானை வேண்டி உலகில் மக்கள் பிறவிப் பெருங்கடலை எளிதில் கடக்கும் உபாயமொன்றைக் கூறும்படி கேட்க, அதற்குக் கந்தப்பெருமான் இந்த ஓம் நமசிவாய என்னும் ஆறெழுத்து மந்திரத்தைக் கூறினார்: இது எல்லா ஞானத்திற்கும் விதை போன்றது; ஆலங்கனியில் மிகச் சிறிய விதையானது பின்னர் பெரிய மரமாக வளர்வதுபோல் எல்லாக் கலைகளுக்கும் ஞானத்திற்கும் மந்திரங்களுக்கும் இம்மந்திரம் விதை போன்றது; மிக சூக்குமமானது; அதே சமயம் பரந்த பொருள் விரிவையுடையது.

நோய்களுக்கு எதிர்மறையாக மருந்து விளங்குவதுபோல் ஸம்ஸாரமென்னும் நோய்க்கு எதிர்மறையாக அதனை முற்றிலும் அழிக்கவல்லவர் சிவபெருமானே.

இவ்வாறு பலதிறத்தானும் பல விளக்கங்களாலும் ஆகமங்களும் புராணங்களும் சிவபெருமானைக் குறிக்கும் ஐந்தெழுத்து மந்திரத்தின் மஹிமை பெருமைகளை ஒப்புயர்வற்றநிலையில் வைத்துப் போற்றுகின்றன. அந்நூல் கடலிலிருந்து சில துளிகளை ஸமுத்திரகலசநியாயமாக என் சிற்றறிவுக்கேற்ற வகையில் இச்சைவ சபையில் சைவ ஆன்றோர்கள் முன்னர் பகிர்ந்துகொண்டேன்.

திருச்சிற்றம்பலம்
தொகுப்பு ; வை.பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி ; சைவம்.காம்