இந்திய ரிசர்வ்
வங்கி, ஒரு மெய்நிகர் பணப்பரிமாற்ற முறையை அறிமுகம் செய்துள்ளது. கடந்த சில
நாட்களாக மொத்த வணிகத்தில் சோதனை செய்யப்பட்ட மெய்நிகர் பணப்பரிமாற்றம், வெற்றி
அடைந்ததனால் சில்லரை மற்றும் நுகர்வோர் வணிகத்தில்
டிசம்பர் 01 முதல் சில வங்கிகள் மூலம் சோதனை செய்யப்படுகிறது.
அது என்ன
மெய்நிகர் பணம்? நீங்க கேட்கிறது எனக்குப் புரிகிறது.
பழங்காலங்களில் ஒரு பொருள் நமக்குத் தேவைப்படுகிறது என்றால், நாம் ஒருவரிடம்
சென்று, நம்மிடம் உள்ள ஒன்றைக் கொடுத்து, பதிலுக்கு நமக்குத் தேவையான
பொருளைப் பெரும் பண்டமாற்று முறை புழக்கத்தில் இருந்தது. நெல் வைத்திருப்பவர்
அதைக் கொடுத்து பருத்தி வாங்குவது, காய்கறி வாங்குவது என்று பண்டமாற்று
முறையில் பொருட்கள் பரிமாறப்பட்டது. நாளடைவில் மதிப்புள்ள உலோகங்களால் நாணயம்
உருவானது. தங்கம், வெள்ளி, தாமிரம் என்று அந்த உலோகத்தின் மதிப்புக்கு நாணயங்கள்
தயாரிக்கப்பட்டன. பண்டமாற்று முறையின் நாகரீக வடிவமாக அனைவராலும் ஏற்றக்
கொள்ளப்பட்ட உலோக நாணயங்கள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில்,
வங்கிகள் உருவான பின்னர் பயன்படுத்துவதற்கு
எளிதான முறை தேவையான நிலையில் ஒவ்வொரு நாடும் காகித நாணயம் அச்சிடத் தொடங்கிவிட்டன.
காகிதத்தால்
தயாரிக்கப்பட்ட பணத்தில், அந்த நாட்டின் அரசு ஒரு உறுதியளித்திருக்கும். ப்ராமிசரி நோட்டு
என்று நாம் முன்னர் யாரிடமாவது கடன் வாங்கும்போது கையெழுத்திட்டு கொடுப்போமே. அது
போல் ஒரு வாசகம் காகிதப்பணத்தில் கையெழுத்துடன் இடம் பெற்றிருக்கும்.
அது என்னவெனில், இதை கொண்டு வரும் நபருக்கு இதில் குறிப்பிட்டுள்ள தொகையை கொடுக்க
உறுதியளிக்கிறேன். நமது ரிசர்வ் வங்கி வெளியிடும் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி
ஆளுநர் கையெழுத்துடன் உறுதிமொழி இடம்பெற்றிருக்கும்.
இன்றைய விஞ்ஞான
முன்னேற்றம் கண்ட உலகில், ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் செய்யக் கூடிய பரிவர்த்தனைகளுக்கு
அமெரிக்க டாலர், யூரோ போன்ற பணங்களாக பரிமாற்றம்
செய்கின்றனர்.
வங்கிகளும் இணைய
சேவை, செல்போன் செயலி, டிஜிட்டல் வாலட் போன்றவற்றின் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் முறைகளை
அறிமுகப்படுத்தி விட்டனர்.
பிட்காயின்,
எரித்தரம் போன்ற தனியார் நிறுவனங்களின்
மெய்நிகர் நாணயம் உருவாக்கப் பட்டு அதன் மதிப்பானது பங்குச்சந்தை போல் ஏற்ற
இறக்கங்களைச் சந்திக்கின்றன.
அனைத்து
வணிகங்களுக்கும் பொதுவான ஒரு விசயம் தட்டுப்பாடு மற்றும் வழங்கல், அதாங்க ஒங்களுக்குப் புரியற மாதிரி சொன்னா டிமாண்ட்
மற்றும் சப்ளை. ஒரு பொருளுக்கு தேவை அதிகமிருக்கும் நிலையில் குறைந்த அளவே பொருள்
கிடைத்தால், அதன் விலை ஏறும். அதே நேரத்தில் ஒரு
பொருள் அதிகமாக கிடைக்கிறது, ஆனால் வாங்குவதற்கு அதிகம்பேர் முன்வரவில்லை என்றால் விலை குறையும்.
பங்குச் சந்தை,
கமாடிட்டி சந்தை எனும் பொருட்களுக்கான ஊக
வணிகம் மற்றும் மெய்நிகர் வணிக முறையில் ஊகங்களின் அடிப்படையில் செயற்கையாக
மதிப்பு ஏறி இறங்கும் நிலையற்ற தன்மையின் காரணமாக பலர் பணத்தை இழக்க வாய்ப்பு
அதிகம்.
இதையெல்லாம்
கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி வெளியிட்டுள்ளது.
இந்த முறையில் உங்கள் வங்கி உங்களுக்கு ஒரு வாலட் உருவாக்கிக் கொடுக்கும். அதாவது
உங்கள் மணிபர்ஸ், ஆனால் காகிதப்பணம் இல்லாத ஒரு டிஜிட்டல் மணிபர்ஸ். நீங்கள் அந்த
வாலட்டில் பணம் வைத்துக் கொண்டு தேவைப்படும்போது உங்கள் வாலட்டிலிருந்து
யாருக்கும் பணம் கொடுக்கவோ அல்லது மற்றவரிடமிருந்து உங்கள் வாலட்டுக்கு பணத்தை
பெறவோ முடியும்.
அதுசரி, நாங்கதான்
முன்னாடியே கூகுள்பே, போன்பே, பேடிஎம் மற்றும் எங்களது வங்கிகள் வழங்கும் பேமென்ட் செயலிகள் வழியாக
பணம் கொடுக்கல் வாங்கல் செய்யறோமே. நீங்க என்ன புதுசா சொல்றீங்க என்று கேட்பது
எனக்கு புரிகிறது.
நீங்கள் சொன்ன
பேமெண்ட் செயலிகள், உங்கள் வங்கிக் கணக்கில் நீங்கள் வைத்துள்ள பணத்தை கொடுப்பதற்கோ, அல்லது உங்களுக்கு வரவேண்டிய பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தவோ
உருவாக்கப்பட்ட ஒரு செயலிதான். இந்த முறையில் உங்கள் பணம் உங்கள் வங்கிக் கணக்கில்
மட்டுமே இருக்கும். சேமிப்புக் கணக்கு என்றால் வருடத்திற்கு சுமார் 3 அல்லது 4 சதவீதம் வட்டியும் கிடைக்கும்.
ஆனால், இந்த மெய்நிகர்
முறையில், உங்கள் டிஜிட்டல் வாலட் என்பது உங்கள் மணிபர்ஸ் போல செயல்படும்.
உதாரணத்துக்கு, உங்கள் மணிபர்ஸ் உள்ளே 500 ரூபாய்
நோட்டுக்கள் ஒரு நோட்டும். 200 ரூபாய் நோட்டுக்கள் மூன்றும்,
100 ரூபாய் நோட்டுகள் ஏழும், 20 ரூபாய், 10 ரூபாய் என சில நோட்டுக்களும்
இருக்குமே. அதுபோல நீங்கள் ஒருவருக்கு 250 ரூபாய் பர்ஸ்
திறந்து எடுத்துக் கொடுத்து மீதி சில்லறை வாங்குகிறீர்கள் அல்லவா. அதையே காகிதப்
பணமாக இல்லாமல் இந்த முறையில் நீங்கள் பணமாக கொடுக்கல் வாங்கல் செய்ய முடியும்.
இந்த முறையில் உங்கள் பணம் உங்கள் கையிலேயே இருக்கும். வங்கிக் கணக்கில்
சேர்க்கப்படாது. மேலும் சேமிப்புக் கணக்கு போல வட்டி வருமானம் கிடைக்காது.
மேலும் உங்கள்
வங்கிக் கணக்கு விபரங்களைக் கொடுத்து பரிமாற்றம் செய்யும்போது நடக்கும் மோசடிகள்,
செக் மோசடி, செயலியை தவறாகப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி, ஓ.டி.பி. மோசடி போன்றவை இந்த முறையில் தவிர்க்கப் படும். உங்கள்
வாலட் எனும் மணிபர்ஸ் ஒரு தனி வங்கிக் கணக்கு போன்றே பணம் வைத்துக் கொள்ள
பயன்படுத்தப்படும். மெய்நிகர் பரிமாற்ற முறையில் ப்ளாக் செயின் டெக்னாலஜி எனும்
அதிகபட்ச பாதுகாப்பு முறையில் பணமானது டிஜிட்டல் டோக்கன்களாக மாற்றப்பட்டு
உபயோகப்படுத்தப் படுவதால் டிஜிட்டல் பணம் யாரிடமிருந்து, யாருக்கு அல்லது எங்கு செல்கிறது என்பதைக் கண்காணிக்க முடியும்.
மேலும் இந்த
புதிய முறையில் நம்மை ஏமாற்றி நமக்குத் தெரியாமல் மோசடியாக பணம் எடுக்கும்
வாய்ப்பே கிடையாது. அவ்வாறு நடந்தாலும் நமது வாலட்டில் சேமித்த தொகை மட்டுமே
பறிபோகும். ஆனால் விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து, திருடப்பட்ட பணத்தை மீட்பதற்கு எளிதாக இருக்கும் ஏனென்றால் டிஜிட்டல்
டோக்கன் வடிவிலான கரன்சி யாரிடமிருந்து, யாருக்கு
செல்கிறது என்பதை அதன் வரிசை எண் பயன்படுத்தி அது செல்லும் அனைத்து இடங்களையும்
கண்காணிக்க முடியும். ஆனால் நமது வங்கிக் கணக்கில் உள்ள பணம் ஏதோ ஒரு வகையில்
திருடுபோனால் அதை மீட்பதற்கு பெரும் சிரமத்தைச் சந்திக்க வேண்டும். அந்நிய
நாட்டைச் சேர்ந்த ஹேக்கர்களால் திருடப்பட்டால் அதை மீட்பதே சிரமம்.
அதுபோல் நமது
பாக்கெட்டில் உள்ள மணிபர்ஸ் திருடப்பட்டாலும் அதில் நாம் வைத்திருக்கும்
ரொக்கப்பணம் எங்கு, யாருக்கு செல்கிறது என்பதைக்
கண்காணிப்பதும் நடைமுறை சாத்தியம் இல்லாத செயல்.
முன்னரே நமது
நாட்டில் மொபிக்விக் போன்ற சில டிஜிட்டல் வாலட்களும், நமது வாகனத்தில் பயன்படுத்தப்படும் ஃபாஸ்ட் டேக் எனப்படும்
சுங்கக்கட்டண முறைக்கும் டிஜிட்டல் வாலட்கள் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன.
வங்கித்
துறையில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் இந்த முறை நாட்டின் பொருளாதாரத்தில்
மாற்றம் கொண்டுவரும். இந்த புதிய முறை ஏற்படுவதற்கு காரணமான பிட்காயின் போன்ற
தனியார் மெய்நிகர் கரன்சிகளும் அதில் ஏற்பட்ட மோசடிகளுமே காரணம் என்பது ஒரு பக்கம்
என்றால் அந்த வகையிலான மோசடிகளைத் தவிர்க்க புதிய முறையினை அறிமுகப் படுத்திய நமது
ரிசர்வ் வங்கி மற்றொரு காரணம்.
சோதனை
அடிப்படையில், எஸ்.பி.ஐ., எஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்ஸிஸ் வங்கி போன்ற சில வங்கிகளில்
இந்த முறை ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப் பட்டு சில நகரங்களில் டிசம்பர் 1 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
இதெல்லாம்
இருக்கட்டும், இந்த காகித, உலோக நாணயங்களுக்கு மாற்று வேண்டும்
என்ற ஒரு விசயம் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. அதில்
பெரும் முயற்சி எடுத்தவர்கள் யாரென்றால் ஒரே பதில் ”அர்த்தகிராந்தி”.
மஹாராஷ்டிர
மாநிலம்,
அவுரங்காபாத் நகரைத் தலைமையிடமாகக்
கொண்டு செயல்பட்டு வரும் அர்த்தகிராந்தி பிரதிஷ்டான் எனும் அமைப்பு கடந்த பல
ஆண்டுகளாக, பொருளாதாரம் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து பல்வேறு
முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அர்த்தமுள்ள புரட்சி இயக்கம் என்ற பொருள்வரும்
பெயரிலான இந்த அமைப்பு பல ஆண்டுகளாக நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது.
விபரங்களுக்கு http://www.arthakranti.org/
மக்களின்
பொருளாதார நிலை மேம்பட, ஏழைகள், மத்திய வர்க்கம் மற்றும் வசதிபடைத்த உயர் வகுப்பினரிடையே உள்ள
பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்து முன்னேற்றம் அடைய, அர்த்தகிராந்தி நமது பிரதமருக்கு கடந்த 2016 ஆண்டு முதல் சில ஆலோசனைகளை அளித்துள்ளது.
அதில் முக்கியமானது
உயர்மதிப்பிலான காகித பணத்தை ஒழிப்பது. மக்கள் அனைவரையும் வங்கிச் சேவைக்குள்
அல்லது டிஜிட்டல் பரிமாற்றத்திற்குள் கொண்டு வருவது. இதன்மூலம் கருப்புப்பணம்,
கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களைத்
தடுத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், பொருளாதாரக் குற்றங்கள், திருட்டு,
கள்ளநோட்டுகள் போன்றவற்றைத் தடுக்க முடியும்.
மேலும் லஞ்சம், ஊழல் போன்றவற்றை தடுக்க முடியும். வரி
ஏய்ப்புகள் தவிர்க்கப்டும்.
மேலும், இரண்டாவது சீர்திருத்தமாக அவர்கள் முன்மொழிந்தது 2016 ஆண்டு காலகட்டத்தில் நம் நாட்டில் சுமார் 60 வகையான வரிகள் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த வரிகள் அனைத்தையும் நீக்கிவிட வேண்டும். அனைத்து பணப் பரிமாற்றங்களும் வங்கி அல்லது டிஜிட்டல் முறையில் நடக்கும் நிலையில், பணம் பெறுபவருக்கு ஒரு சிறிய சதவீதம் பரிமாற்ற வரி என்று விதிக்க
வேண்டும். ரொக்கமாக சிறிய அளவில் செய்யப்படும் பணப் பரிமாற்றத்திற்கு
வரிவிலக்கு அளிக்க வேண்டும். தனிநபருக்க வருமானவரி, விற்பனை வரி போன்ற எவ்வித வரியும் விதிக்கக் கூடாது. புரிமாற்ற வரி
என்ற பெயரில் நாடு முழுவது ட்ரான்ஸாக்ஷன் டாக்ஸ் மட்டுமே விதிக்கப்பட வேண்டும்.
நிறுவனங்களிடம் வட்டும் அவர்களது வருமாத்திற்கு வரி விதிக்கலாம். ஏற்றுமதி, இறக்குமதிக்கும் வரி விதிக்கலாம்.
இவ்வாறு
செய்யும்போது, பொருளாதார ரீதியாக பலன் தேவைப்பட்டோருக்கு அவர்களது நிதிநிலைக்கேற்ப
உதவியாக இருக்கும். மாறாக தற்போது உள்ள மறைமுக வரியான ஜி.எஸ்.டி. வரி முறையில்
வசதி படைத்தவர்களுக்கும், மத்தியதர மற்றும் ஏழைகளுக்;கும் ஒரே வரி விதிக்கப்படுகிறது. மேலும், மாதச்சம்பளம்
வாங்குபவர் தனது வருமானத்தில் உரிய வரி பிடித்தம் செய்த பின்னர் சம்பளம்
வாங்குகிறார். ஒரு முறை வரிபிடித்தம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், அவர் கைவசம்
வந்த மீதித் தொகையில், அவர் செலவு செய்யும் ஒவ்வொரு இடத்திலும் அவர் மீண்டும் மீண்டும் வரி செலுத்தும் நிலை உள்ளது.
ஒரு முறை சம்பாதித்த வருமானத்திற்கு, அவர் வருமான வரி செலுத்திய பின்னரும்,
அதே பணத்திற்கு அவர் பல்வேறு இடங்களில் ஒவ்வொரு
பொருள் அல்லது சேவை பெறும்போதும் வெவ்வேறு முறைகளில் வரி செலுத்த வேண்டியுள்ளது.
இதே
ட்ரான்ஸாக்ஷன் டாக்ஸ் எனும் பரிமாற்ற வரி முறை கொண்டு வந்தால்
, ஒரு நபர் அவர்
சம்பாதிக்கும் வருமானத்திற்கு ஒரே பரிமாற்ற வரி செலுத்தினால் போதும். உதாரணமாக
எனது சம்பளம் அல்லது பிற தொகைகள் எனது வங்கிக் கணக்கில் சேர்ந்ததும் எனது வங்கி 2
சதவீதம் எனது கணக்கிலிருந்து நேரடியாக எடுத்து அரசுக்கு கொடுத்து
விடும். நான் ஏதாவது பொருள் வாங்கும்போது அந்த கடைக்காரரின் வங்கி அவரது கணக்கில்
இருந்து 2
சதவீதம் எடுத்து அரசுக்கு
செலுத்திவிடும். இதுபோன்ற முறை இருந்தால் இத்தனை அரசு அலுவலகங்கள் வைத்து
லட்சக்கணக்கான அலுவலர்களை வைத்து கண்காணித்து,
நடவடிக்கை எடுக்கும் தேவை ஏற்படாது. வங்கிகளே அரசுக்கு நேரடியாக வரி
வசூல் செய்து கொடுத்து அதற்கு சேவைக்கட்டணம் அரசிடமிருந்தே வசூலித்துக்
கொள்ளும்.
எனக்கென்னவோ
அர்த்தகிராந்தி அமைப்பு சொன்ன முறைகளை அரசு படிப்படியாக செயல்படுத்தத்
தொடங்கியிருப்பது கடந்த சில ஆண்டுகளாக நடக்கும் செயல்கள் மூலம் தெரிகிறது.
ஆனால், இதில்
மிகப்பெரும் சவால் என்னவென்றால், நம் நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும், எல்லா தரப்பு மக்களுக்கு எளிதில் வங்கிச் சேவை கிடைக்கவும், எளிய முறையில் பரிமாற்றங்கள் செய்யவும் தேவையான வசதிகள் நம் நாட்டில்
உள்ளதா என்றால், இல்லை என்பதே எனது பதிலாக இருக்கும்.
முதலில், நம் அரசு செய்ய
வேண்டியது, அனைவருக்கும் எளிதில் வங்கிச் சேவைகளும், படிப்பறிவு மேம்பட்டிராத கிராம மக்களுக்கும் எளிதில் வங்கிச் சேவைகள்
கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கட்டணங்கள், விதிமுறைகள் போன்ற தடைகளை நீக்க வேண்டும். தாமதமில்லாமல், வங்கியில் நாள் முழுவதும் காக்க வைக்கப்படாமல், ஒவ்வொரு
வீட்டுக்கும் நமது தமிழக அரசின் முன்னோடி திட்டங்களான “இல்லம் தேடி
கல்வி”, “இல்லம் தேடி மருத்துவம்” போன்று “இல்லம் தேடி
வங்கிச் சேவைகள்” அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்தால், அனைத்து
மக்களும் வங்கிச் சேவைக்குள் வருவதற்கு தயங்கமாட்டார்கள்.
எனவே, நமது அரசு
விரைவில் பொருளாதார மாற்றத்திற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் என நம்புகிறேன்.
கட்டுரையாளர்:
க. சங்கிலிக்காளை,
தொழில் முன்னேற்ற ஆலோசகர்.
தொடர்புக்கு: gsraj1979@gmail.com
பொறுப்புத்
துறப்பு:
இக்கட்டுரையில் இடம்பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின்
சொந்தக் கருத்துக்களே. சாலியர் குரல் மற்றும் அதன் நிறுவனர், ஆசிரியர், துணை ஆசிரியர் மற்றும் தொடர்புள்ள
அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் செய்தித்
தொடர்பாளர்கள் ஆகிய எவருக்கும் எவ்வித பொறுப்பும் கிடையாது என்பதை அறிந்து
கொள்ளவும்.
மேலும் இங்கு
உபயோகப் படுத்தப்பட்டுள்ள படங்கள், சின்னங்கள் (லோகோ) மற்றும் இணையதள
முகவரி ஆகியவை அதன் உரிமையாளர்களுக்குச் சொந்தமானவை. தகவலுக்காக மட்டுமே இங்கு அவை
பயன்படுத்தப் பட்டுள்ளன.