Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 25 நவம்பர், 2019

அறிவுச் சுடரால் நல்ல வெளிச்சம் பிறக்கும்!


நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

நீங்கள் அச்சப்படும்போது தெளிவாக, சிந்திக்கும் திறனை இழக்கிறீர்கள். தெளிவாகச் சிந்திக்காதபோது தவறான முடிவுகளை எடுக்கிறீர்கள். தவறான முடிவுகளால் பிரச்னை பெரிதாகி, நஷ்டத்துக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுவிடுகிறது. இதற்கு ‘அச்சமாக்குவதும் அழிவைத் தேடிக்கொள்வதும்’ என்று பெயர். இது ஒரு பனிப்பந்து, பனிக்கட்டி மலையிலிருந்து உருண்டு வரும்போது மேலும் மேலும் பனியைச் சேர்த்துக்கொண்டு பெரிதாவதற்கு ஒப்பானதாகும். அழகிய கம்பளிச் சட்டையிலிருந்து நீட்டிக்கொண்டிருக்கும் ஒரு சிறிய நூலைப் பிடித்து இழுப்பதனால், முழுச்சட்டையும் பிரிந்து போய்விடுவதைப் போன்றது.

ஆகவே, அமைதியாகச் சிந்தியுங்கள், அமைதியாகப் பேசுங்கள், அமைதியாகச் செயல்படுங்கள். இன்று நிலைமை எவ்வளவு மோசமாக இருந்தாலும் நாளை நல்லது நடக்கும் என்று உணருங்கள். கடந்தகால மோசமான நாட்களைக் கடந்து, அமைதியாக இருந்து தெளிவாகச் சிந்தித்து மிகச்சிறந்த நாளை எதிர்பார்த்து அதை அடைந்தவர்தான் வாரிஸ் டைரி என்ற சாதனைப் பெண். வாரிஸ் டைரி சோமாலியாவிலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். வறுமை தாண்டவ மாடும் அந்த நாட்டில் மாடு மேய்ப்பது, தண்ணீர் கொண்டு வருவது, வீட்டு வேலைகளைச் செய்வதுதான் பெண்குழந்தைகளின் பணி.

மற்ற ஆப்பிரிக்கப் பெண் குழந்தைகளைப் போலவே ஐந்து வயதில் வாரிஸுக்கு பெண் உறுப்பு சிதைப்பு என்னும் கொடூரத்தைச் சந்திக்க நேர்ந்தது. அம்மாவிடம் எவ்வளவோ மன்றாடிப் பார்த்தார். ‘கடவுளின் விருப்பம் இதுதான்’ என்றார் அம்மா. ‘கடவுளுக்கு என்னைப் பிடிக்க வேண்டாம். இப்படிப்பட்ட கடவுளை எனக்கும் பிடிக்கவில்லை’ என்ற வாரிஸின் பேச்சு அவருடைய அம்மாவுக்கு கலக்கத்தை உருவாக்கியது. அதன் பிறகு வாரிஸை 13 வயதில் 60 வயதை தாண்டியவருக்கு திருமணம் செய்துவைக்க விரும்பினார் வாரிஸின் அப்பா. வாரிஸால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

ஒரு நாள் அதிகாலை வெற்றுக்கால்களுடன் வீட்டை விட்டு ஓட ஆரம்பித்தார். இரவு, பகலாகப் பாலைவனத்தில் ஓடிக்கொண்டேயிருந்தார். பல துன்பங்களுக்கு ஆட்பட்டு 300 மைல்களைக் கடந்து தன் சகோதரி வீட்டுக்கு வந்துசேர்ந்தார். அங்கும் மிக மோசமாக நடத்தப்பட்டார். அதன்பிறகு லண்டனிலுள்ள உறவினர் ஒருவருக்கு வீட்டுவேலை செய்வதற்காக ஆட்கள் தேடிக்கொண்டிருந்தபோது தானே வருவதாகச் சொல்லி பணியில் சேர்ந்தார். அங்கு சோஃபியா என்ற குழந்தையைப் பள்ளிக்கு அழைத்துச் செல்வது மற்றும் வீட்டு வேலைகளைப் பார்ப்பது என நாள் முழுக்க வேலை பார்த்தார்.

அவ்வப்போது கனவு காண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அதாவது, நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும். கௌரவமாக ஊருக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்ற கனவாக மனதில் பதியவைத்துக்கொண்டார். அதற்கு மாடலிங் துறையில் நுழையவேண்டும் என விரும்பினார். ஏனெனில் அவருக்குத் தெரிந்த சிலர், ‘நீ அழகாக இருக்கிறாய், பெரிய மாடலாக வருவாய்’ என்று பாராட்டியிருந்தார்கள். இத்தனைக்கும் மாடலிங் என்றால் என்ன என்று கூட வாரிஸுக்கு சரியாக தெரியாது. அதற்காக என்னென்ன கற்றுக்கொள்ள வேண்டும். அத்துறையில் நுழைய என்ன முயற்சிகளை எடுக்க வேண்டும்.

யாரிடம் பேசவேண்டும் என்று எதுவும் அவருக்குத் தெரியவில்லை. ஆனால், ஆசை மட்டும் இருந்துவந்தது. வாரிஸ் ஒரு முறை குழந்தை சோஃபியாவைப் பள்ளிக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். எதிரில் ஒருவர் வந்தார். வாரிஸைப் பார்த்ததும் சட்டென்று நின்றுவிட்டு கூர்ந்து கவனித்தார். அவருடைய பார்வை வாரிஸுக்கு கூச்சத்தைத் தந்தது. ‘இந்த ஆள் எதுக்கு என்னை இப்படிப் பார்க்கிறார்?’ என்று யோசித்த வாரிஸ் சட்டென்று சோஃபியைப் பள்ளியில் விட்டுவிட்டுத் திரும்பி வேகமாக நடந்தார். அதே நேரம் அந்த மனிதரும் வாரிஸை நோக்கி வந்தார். ஏதோ பேச ஆரம்பித்தார்.

வாரிஸுக்குத்தான் ஆங்கிலம் தெரியாதே, அவர் நடுங்கிப்போனார். குடுகுடுவென்று வீட்டை நோக்கி ஓடிவிட்டார். இந்த விஷயம் அடுத்தடுத்த நாட்களிலும் தொடர்ந்தது. வாரிஸும் சோஃபியும் பள்ளிக்குச் செல்லும் வழியில் அந்த மனிதர் நின்று பேச முயல்வார். அவள் ஏதும் பேசாமல் வீட்டுக்குச் சென்றுவிடுவார். அப்போதும் அந்த மனிதர் விடவில்லை. ஒருநாள் வாரிஸின் பின்னால் நடந்து அவருடைய வீட்டுக்கே  வந்து அழைப்புமணியை அடித்துவிட்டார். அப்போது கதவைத் திறந்தவர் வாரிஸின் உறவினர். ‘உங்களுக்கு யார் வேணும்?’ என்றார். ‘இந்த வீட்டிலிருக்கும் பெண்ணிடம் நான் பேச வேண்டும்’ என்றார் அவர்.

‘நீங்க யாரு? எங்கிருந்து வருகிறீர்கள். திடீரென்று வந்து சின்னப் பெண்ணிடம் பேசவேண்டும் என்கிறீர்களே என்ன அர்த்தம்?’ என்றார் உறவினர். அந்த மனிதர், ‘என் பெயர் மால்கம். நான் ஒரு தொழில்முறைப் புகைப்படக் கலைஞர். இந்தப் பெண்ணைப் பள்ளிக்கூடம் போகிற வழியில் பார்த்தேன். ரொம்ப அழகான முகம், அவரைப் புகைப்படம் எடுக்க ஆசைப்பட்டேன்’ என்றார். ‘அதெல்லாம் முடியாது வெளியே போங்கள்’ என்று கதவைச் சாத்திவிட்டார் வாரிஸின் உறவினர். அதன்பிறகு அந்த மனிதர் வாரிஸைத் தொந்தரவு செய்யவில்லை. இந்த நிலையில் வாரிஸ் வாழ்க்கையில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

அவருடைய உறவினர் சொந்த நாட்டுக்கே திரும்பிவிட்டார். அதன் பிறகு வாரிஸ் ஒரு உணவகத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே ஆங்கிலம் கற்றுக்கொண்டார். அவருக்குப் புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். தன்னம்பிக்கை அதிகரித்தது. ஒரு நாள் அவர் வேலை செய்கிற உணவகத்திற்கு அந்த மனிதர் வந்திருந்தார். அவர் வாரிஸிடம் தனது முகவரி அட்டையைக் கொடுத்தார். அதில் என்ன எழுதியிருந்தது என வாரிஸுக்கு புரியவில்லை. தன்னுடைய தோழி ஒருத்தியிடம் கேட்டபோது, தோழி சொன்னார் ‘இவர் ஒரு ஃபேஷன் போட்டோகிராபர்.

புகைப்படம் எடுத்து மாடலிங் தொழிலில் ஈடுபடுபவர்’ என்று. இதைக் கேட்ட வாரிஸ் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். உடனே அந்த விசிட்டிங் கார்டில் உள்ள தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அந்த தொலைபேசி அழைப்பு, வாரிஸின் வாழ்க்கையை மாற்றியது. மாடலிங் போட்டோகிராபரான அந்த மனிதர் வாரிஸை அழகாக ஒரு புகைப்படமெடுத்தார். அந்தப் புகைப்படம் அவருக்குப் பல புதிய வாய்ப்புகளை உண்டாக்கித் தந்தது. குறைந்த சம்பளத்துக்கு நாள் முழுக்க வேலை பார்த்துச் சிரமப்பட்டுக்கொண்டிருந்த வாரிஸ் உலகின் முன்னணி மாடல்களில் ஒருவராகிப் பெயரும் புகழும், பணமும் சம்பாதித்தார்.

விரைவில் உலகின் சிறந்த மாடலாக மாறினார். புகழ்பெற்ற ஃபேஷன் பத்திரிகைகளை அலங்கரித்தார். ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்திலும் நடித்தார். கனவிலும் எதிர்பார்க்காத வசதியான லண்டன் வாழ்க்கை, உலகப் புகழ் எல்லாம் கிடைத்தாலும் வாரிஸால் பெண் உறுப்புச் சிதைப்பை மறக்க முடியவில்லை. உறுப்புச் சிதைக்கப்பட்ட பல குழந்தைகள் நோய்த் தொற்றால் மரணத்தையும் சந்தித்துவிடுகின்றனர். இதில் வாரிஸ் தன்னுடைய சகோதரியைக் கூட இழந்தார். கன்னித்தன்மையைப் பாதுகாப்பதற்காக செய்யும் இந்தச் சடங்கு ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளிலிருந்து வந்தது.

இதை தடுக்க ‘டெசர்ட் ஃபவுண்டேஷன்’ ஒன்றை ஆரம்பித்தார். இதன் மூலம் பெண் உறுப்புச் சிதைப்பைத் தடுக்கும் பணி மற்றும் விழிப்புணர்வுப் பிரசாரம் செய்தார். ஆண்-பெண் சமத்துவம், பெண்ணுரிமை, பெண்கல்வி போன்றவற்றுக்கான போராடும் வாரிஸ்டைரியைப் பாராட்டும் விதமாக 1997-ல் ஐக்கிய நாடுகள் சபையின் நல்லெண்ணத் தூதராகவும் நியமிக்கப்பட்டார். வறுமை மிகுந்த சோமாலியாவில் பிறந்து பல இன்னல்களைத் தாண்டி சாதித்து மாடல், நடிகை, எழுத்தாளர் மற்றும் சமூக ஆர்வலர் என பல முகங்களைக் கொண்ட வாரிஸ் டைரியின் வாழ்க்கை மிகச்சிறந்த தன்னம்பிக்கை ஊட்டும் பாடமாகும்.

மாடலிங் துறையில் நுழையவேண்டும் என்று விரும்பிய இளம்பெண் வாரிஸை அதற்கான வாய்ப்பு தேடிவந்தது. ஆனால், அதைப் புரிந்துகொள்ளாமல் பயந்தார். அதிலிருந்து விலகி ஓடினார். காரணம், அப்போது அவளிடம் தன்னம்பிக்கை இல்லை. ஆனால், அதன் பிறகு தன்னம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டு மாடலிங் துறையைப் பற்றித் தெரிந்துகொண்டு, தனக்குக் கிடைத்த வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு முன்னேறினார். அறியாமை பயமுறுத்தும், முடக்கிப்போடும்.

ஆனால், அதற்கு ஒரே தீர்வு அறிவு மட்டும்தான். எதைப் பற்றியும் கேள்வி கேட்டு மேலும் மேலும் தெரிந்துகொள்ளும்போது அறிவின் சுடரில்தான் நல்ல வெளிச்சம் பிறக்கும்… முன்னேற்றமும் சாத்தியமாகும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். வாய்ப்புகள் நம்மைத் தேடிவரும்போது பயத்தைத் தொலைத்துவிட்டு துணிச்சலை வரவழைத்துக்கொண்டால் மட்டுமே வாய்ப்பை நம்மால் பயன்படுத்த முடியும்.





தொப்புள் குடலிறக்கம்




குழந்தைகள் ஊதி விளையாடும் பலூனில் காற்றை ஊதும்போது, அது நல்ல பலூனாக இருந்தால், ஒரே சீராக விரிவடையும். ஆனால், சிலவற்றில் சில இடங்களில் தனியாகப் புடைத்துப்போவதையும் பார்த்திருப்பீர்கள். பலூனில் வலுக் குறைந்த பகுதிகளில் காற்றின் அழுத்தம் அதிகமாகும்போது அம்மாதிரியான புடைப்புகள் உண்டாகின்றன. இதுபோலவே நம் உடலிலும் புடைப்புகள் உண்டாகின்றன. முக்கியமாக, வயிற்றில் பலவீனமாக உள்ள தசைத் துளைகள் வழியாகப் புடைப்புகள் ஏற்படுகின்றன. இதைத்தான் ‘குடலிறக்கம்’ (Hernia) என்கிறோம். பொதுவாக இது தொடையும் அடிவயிறும் இணையும் இடம், மேல் தொடை, தொப்புள் ஆகிய இடங்களில் ஏற்படுகிறது. இது தவிர, வயிற்றில் அறுவைத் தழும்பு உள்ள இடத்திலும் குடலிறக்கம் ஏற்படுகிறது.
தொப்புள் குடலிறக்கம் என்றால் என்ன?
தொப்புளிலிருந்தும் அதன் அருகில் உள்ள பகுதிகளிலிருந்தும் குடல் வெளியில் பிதுங்கித் தெரிவதைத் ‘தொப்புள் குடலிறக்கம்’ (Umbilical hernia) என்கிறோம். இது ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும் பிரச்சினை. என்றாலும், பெண்களையே இது அதிகம் பாதிக்கிறது. இது குழந்தைகளுக்குப் பிறவியிலேயே வரலாம்; நாற்பது வயதிலும் வரலாம்; முதுமையிலும் வரலாம்.
இது குழந்தைக்கு வர என்ன காரணம்? இதனால் பயமில்லையா?
அம்மாவின் கருப்பையில் குழந்தை வளரும்போது, முன் வயிற்றுச்சுவர் முழுவதுமாக வளர்ச்சி அடையும்வரை அதன் வயிற்றுக்குள் இருக்க வேண்டிய பல உறுப்புகள் வயிற்றுக்கு வெளியில் உள்ள ஒரு பையில்தான் இருக்கும். இந்தப் பையும் குழந்தையின் வயிறும் குழந்தையின் தொப்புள் துளை வழியாக இணைந்திருக்கும். குழந்தை வளர வளர பையில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாகக் குழந்தையின் வயிற்றுக்குள் சென்றுவிடும். இப்படிக் குழந்தை பிறப்பதற்கு முன்பே எல்லா உறுப்புகளும் உள்ளே சென்றுவிடும். அம்மாவின் கருப்பையில் நஞ்சுவோடு இணைந்த தொப்புள்கொடி மட்டும் குழந்தையின் வயிற்றுக்கு வெளியில் இருக்கும். குழந்தை பிறந்த பிறகு தொப்புள் கொடி அகற்றப்படும். தொப்புள் துளை மூடிவிடும்.
சில குழந்தைகளுக்குக் குடலின் சிறு பகுதியோ குடல் மொத்தமாகவோ உள்ளே போகாமல் இருந்துவிடும். பிறவியிலேயே குழந்தையின் முன்வயிற்றுச் சுவர் பலவீனமாக இருந்தாலோ வயிற்றுச் சுவரே இல்லாமல் இருந்தாலோ இம்மாதிரி நடக்கும். மிகக் குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகளுக்கும் குறைப்பிரசவக் குழந்தைகளுக்கும் இது ஏற்படுவதுண்டு. தொப்புளில் அடிக்கடி தொற்று ஏற்பட்டால் அங்கே குடலிறக்கம் வருவதுண்டு. இது பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்கே அதிகம் வரும்.
குழந்தையின் தொப்புளுக்குள் உள்ள துளை இரண்டு செ.மீ.க்குள் இருந்தால், குழந்தை பிறந்த மூன்று வருடங்களுக்குள் தொப்புளை ஒட்டியவாறு வயிற்றிலிருந்து வெளியில் வந்திருக்கும் பகுதிகள் மறுபடியும் வயிற்றுக்குள் சென்றுவிடும். அப்போது தொப்புள் பிதுக்கமும் மறைந்துவிடும்.
100-ல் 90 குழந்தைகளுக்கு இப்படித் தானாகவே சரியாகிவிடும். மீதிப் பேருக்குத்தான் சிகிச்சை தேவைப்படும்.
தொப்புள் பிதுங்கிய நிலையில் இருக்கும் குழந்தைகளுக்குத் ‘தொப்புளில் காற்று ஏறிவிட்டது’ என்று வீட்டில் சொல்வார்கள். உண்மையில் காற்று ஏறிக்கொள்வதில்லை. குடலின் ஒரு பகுதியே அதில் ஏறிக்கொள்கிறது. குழந்தை அழும்போதெல்லாமோ இருமும் போதெல்லாமோ வயிற்றுக்குள்ளிருந்து குடல் தொப்புளுக்கு வந்துபோவதால், தொப்புள் புடைப்பு பெரிதாகி பிறகு மறையும். இப்படிப் பெரிதானாலும் பல குழந்தைகளுக்கு அது தொந்தரவு எதுவும் செய்யாது. அவர்களுக்கு சிகிச்சையும் தேவையில்லை. பயப்படவும் தேவையில்லை. பெற்றோர்தான் பதற்றத்துடன் காணப்படுவார்கள். அவர்களைச் சமாதானப்படுத்துவதுதான் மருத்துவர்களின் வேலையாக இருக்கும். நான்கு வயதுக்குப் பிறகும் தொப்புள் வீக்கம் குறையவில்லை அல்லது இருமும்போது தொப்புளில் வலி எடுக்கிறது என்றால் அறுவைசிகிச்சை செய்து சரிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நடுத்தர வயதில் இது ஏன் வருகிறது?
நடுத்தர வயதிலும் தொப்புள் குடலிறக்கம் வருவதுண்டு. இது பெரும்பாலும் பெண்களுக்கே அதிகம். வயிற்றுக்குள் அழுத்தம் அதிகரிப்பது இதற்கு அடிப்படைக் காரணம். உடற்பருமன் உள்ளவர்கள், வயிற்றில் கட்டி உள்ளவர்கள், பலமுறை கர்ப்பமானவர்கள், ஒரே நேரத்தில் இரண்டுக்கு மேற்பட்ட கருக்களைச் சுமப்பவர்கள், நுரையீரல் பாதிப்பால் தொடர்ந்து இருமிக்கொண்டிருப்பவர்கள், அதிக கனமான பொருட்களைத் தூக்கும் சுமை கூலிகள், கல்லீரல் பாதிப்பால் வயிற்றில் நீர் கோத்திருப்பவர்கள் ஆகியோருக்கு நடுத்தர வயதில் தொப்புள் குடலிறக்கம் வருவது இப்படித்தான்.
வயிற்றில் அழுத்தம் அதிகமாகும்போது வயிற்றின் முன் தசைகள் தளர்ந்துவிடும். நாளடைவில் அவை விரிவடைய ஆரம்பிக்கும். அப்போது அந்த இடத்தில் ஓர் இடைவெளி உருவாகும். அந்த இடைவெளி வழியாக வயிற்றிலிருந்து குடலோ, கொழுப்போ வெளியில் வந்து தொப்புளின் மேல் பக்கத்தில் அல்லது கீழ்ப்பக்கத்தில் பிதுங்கித் தெரியும். இருமும்போது இந்தப் பிதுக்கம் பெரிதாகும். இன்னும் சிலருக்கு வயிற்றில் வெவ்வேறு காரணங்களுக்காக அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள். அந்த அறுவைத் தழும்பில் தசைகள் வலுவிழந்து போனாலும் அந்த இடத்தில் குடலிறக்கம் ஏற்படுவதுண்டு (Incisional hernia).
இவர்கள் இருமும்போது தொப்புளில் பிதுக்கம் பெரிதாகும். விரலால் அதை உள்ளே தள்ளிவிட்டால் பிதுக்கம் மறைந்துவிடும். ஆரம்பத்தில் அதில் வலி இருக்காது. போகப்போக வலிக்கும். சில நேரத்தில் தொப்புள் துளைக்குள் குடல் சிக்கிக்கொள்ளும். அதைச் சுற்றி ஒட்டிணைவுத் தசைகள் (Adhesions) ஒட்டிக்கொள்ளும். அப்போது அதை உள்ளே தள்ளினாலும் போகாது. அங்கு வலி அதிகமாகும். இப்படிக் குடல் வெளியில் மாட்டிக்கொள்வதாலும் முறுக்கிக்கொள்வதாலும் அந்தப் பகுதிக்கு ரத்த ஓட்டம் குறைந்து அல்லது முழுவதுமாகத் தடைப்பட்டு குடல் அழுகிவிடும். அப்போது வாந்தியும் வரும். குடலிறக்கத்தில் மிகுந்த வலியும் அதன் தொடர்ச்சியாக வாந்தியும் வந்தால் அவை ஆபத்தான அறிகுறிகள். உடனே கவனிக்க வேண்டும்.
லேப்பராஸ்கோப்பி அறுவை சிகிச்சை நல்லதா?
தொப்புள் குடலிறக்கத்துக்கு இரண்டு வகை அறுவை சிகிச்சைகள் உள்ளன. துளை சிறிய அளவில் இருந்தால் லேப்பராஸ்கோப்பி எனும் நுண்துளை அறுவை சிகிச்சையும், துளை பெரிய அளவில் இருந்தால் அல்லது குடல் சிக்கி அழுகியிருந்தால் திறப்பு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்படும். குடலிறக்கத்தைத் தொடக்கத்திலேயே கவனித்துவிட்டால், சிகிச்சை முழு வெற்றி பெறும். இல்லாவிட்டால், மறுபடியும் அந்த இடத்தில் குடலிறக்கம் ஏற்பட சாத்தியம் உண்டு. திறப்பு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் குறைந்தது ஒரு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும். நுண்துளை அறுவை சிகிச்சை செய்துகொள்பவர்களுக்கு ஒரு வார ஓய்வு போதும்.
உடற்பருமனைத் தவிர்ப்பதும் கனமான பொருட்களைத் தூக்காமல் இருப்பதும் அடிக்கடி இருமல் வராமல் பார்த்துக்கொள்வதும் குடலிறக்கத்தைத் தவிர்க்க உதவும் வழிகள்.

- டாக்டர் கு. கணேசன்
கட்டுரையாளர்,
பொதுநல மருத்துவர்,
தொடர்புக்கு: gganesan95@gmail.com






மன அழுத்தத்தாலும் நீரிழிவு நோய் ஏற்படும்: என்ன செய்ய வேண்டும்?


நவ.14 - சர்வதேச நீரிழிவு விழிப்புணர்வு தினம்
ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் நீரிழிவு (Diabetes) விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக நவம்பர் 14-ம் தேதி நீரிழிவு விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த வருடத்தின் கருப்பொருள் 'உங்கள் குடும்பத்தைப் பாதுகாக்கவும்'. நீரிழிவின் தாக்கம், குடும்பத்தில் இருக்கும் அனைவரையும் பாதிக்கிறது. உலகம் முழுவதும் உள்ள 11 பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது. இதில் 50% பேருக்கு நீரிழிவு நோய் இருப்பதே இன்னும் கண்டறியப்படவில்லை. 42.5 கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்
நீரிழிவு நோய் உள்ளவர்கள் தீவிரமாக உடல் நலம் பாதிக்க கூடிய ஆபத்துக்கு ஆளாகின்றனர். எண்பதுகளில் வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளில் நீரிழிவு நோயினால் அதிக மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கை மணி விடுக்கப்பட்டது. ஆகையால் அங்கே இருக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு சென்றடைந்தது. உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுத்து நீரிழிவு நோய் வராமல் தங்களை பாதுகாத்துக் கொண்டனர்.
ஆனால் வளர்ந்து வரும் நாடான இந்தியாவில் தொழில் புரட்சி காரணமாகவும், வாழ்க்கை முறை மாற்றங்களாலும் அதிக எண்ணிக்கையிலான மக்கள் நீரிழிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீரிழிவு என்பது என்ன?
நீரிழிவு என்பது நாள்பட்ட நோய் ஆகும். நமது உடலில் உள்ள இன்சுலின் என்கிற ஹார்மோன் உணவில் இருக்கும் க்ளுக்கோஸ் என்ற ரசாயனத்தை இரத்த நாளங்களில் செலுத்தி உயிரணுக்களில் ஆற்றலை உருவாக்குகிறது. அனைத்து கார்போஹைட்ரெட் உணவுகளும் இரத்தத்தில் க்ளுக்கோஸ் ஆக உடைக்க படுகின்றன. இன்சுலின் குளுக்கோஸை உயிரணுக்களில் பெற உதவுகிறது.

கணையத்தில் இருந்து இன்சுலின் சுரக்காத பொழுது அல்லது உடலால் இன்சுலினைப் பயன்படுத்த முடியாமல் போகும் பொழுது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. எதிர்மறை எண்ணங்களால் உந்தப்பட்டு குறிப்பிட்ட உணவை அளவுக்கு அதிகமாக உண்ணும் பொழுது, அல்லது கவனமின்மையால் உணவு மற்றும் தின்பண்டங்களை உட்கொள்ளும் பொழுது நீரிழிவு நோய் வருவதற்கான சாத்தியக்கூறு இருக்கிறது.

நீரிழிவு நோயை சில வகைகளாகப் பிரிக்கலாம்.
Type 1; எந்த வயதினரையும் இந்த வகை நீரிழிவு பாதிக்கக்கூடும். ஆனால் பெரும்பான்மையாக குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். உடலில் இன்சுலின் குறைவாகவோ அல்லது முற்றிலுமாகவோ சுரக்காத பொழுது இவ்வகைப் பிரச்சினை ஏற்படுகிறது.
Type 2; இந்த வகை நீரிழிவு பெரியவர்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது.
Gestational; கர்ப்ப காலத்தில் ரத்தத்தில் க்ளுகோஸ் அதிகமாவதால், இந்த வகை நீரிழிவு நோய், கர்ப்பகாலத்தில் மட்டும் வரக்கூடியது. மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து கொண்டால் தாயும் சேயும் நலமாக இருப்பர். பொதுவாக இந்த வகை நோய், குழந்தை பிறந்தவுடன் தாய்க்கு மறைந்துவிடும். எனினும் எதிர்காலத்தில் தாய், மற்றும் குழந்தைக்கு Type 2 வகை நீரிழிவு வருவதற்கு சாத்தியக் கூறுகள் உண்டு.
அறிகுறிகள் என்ன?
அதிக தாகம் எடுப்பது,
அடிக்கடி சிறுநீர் கழிப்பது,
உடல் சோர்வாக உணர்தல் ,
மங்கலான பார்வை ,
கை கால்களில் உணர்ச்சியின்மை

மன அழுத்தமும் நீரிழிவும்
மன அழுத்தத்தினால் நீரிழிவு நோய் வர வாய்ப்புள்ளது என்று எத்தனை பேருக்குத் தெரியும்? நீரிழிவும் மன அழுத்தமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தது.

சிந்தித்து பாருங்கள். புலி உங்களை சமீபத்தில் துரத்தியதா? தினமும் காலையில் அவசர கதியில் அலுவலகம் செல்லும் உங்களைத் துரத்தும் பதற்றம்தான் அந்தப்புலி. ஆதிகால குகை மனிதனை புலி துரத்தும் பொழுது, அவனது உடலும் மனமும் பதற்றமடைகிறது, ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, அட்ரீனலின் என்கிற ஹார்மோன் சுரக்கிறது. உடல் ரத்தத்தை ஜீரண உறுப்புகளில் இருந்து பிரித்து தசைகளுக்குச் செலுத்துகிறது, இந்த சமயத்தில் ஜீரண உறுப்புகளுக்கு வேலை இருக்காது.

அப்போது புலியிடம் இருந்து தப்பிக்கும் மனிதன் குகைக்குள் ஓய்வு எடுக்கிறான். 20 நிமிடம் ஆனதும் அவனின் உடல் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது. உங்கள் உடம்புக்கு புலி துரத்துவதும் அலுவலகதிற்கு அவசரகதியில் ஓடுவதற்கும் வித்தியாசம் தெரியாது, ஆகையால் குகை மனிதனுக்கு உண்டான அதே மனப் பதற்றம் உங்களுக்கும் ஏற்படுகிறது. உங்களுக்கும் குகை மனிதனுக்கும் ஒரே வித்தியாசம்தான் இருக்கிறது. குகை மனிதன் ஓய்வு எடுக்கிறான். ஆனால் நீங்கள் ஓய்வெடுப்பது இல்லை.

நாள் முழுவதும் அடுத்தடுத்து பம்பரம் போல சுழல்கிறீர்கள். ஆரோக்கியமற்ற உணவு வகைகளை நாடுகிறீர்கள், இதனால் உங்கள் உடம்பில் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது. இதனால் நாள்பட்ட வியாதிகளான நீரிழிவு போன்ற நோய்களுக்குத் தள்ளப்படுகிறீர்கள்.
சிறுநீரகத்தின் மேல் இருக்கும் அட்ரீனல் சுரப்பி அனைத்து வகையான ஹார்மோன்களையும் உடலுக்கு விநியோகிக்கிறது. மன பதற்றம் அட்ரீனல் சுரப்பியைச் சோர்வடைய வைக்கிறது. ஆகையால் மன சோர்வு அனைத்து வகை நோய்களுக்கும் காரணமாக இருக்கிறது. குறிப்பாக மன அழுத்தம் உள்ளவர்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கு நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளன.
நீரிழிவு நோயால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்கள் என்று அறிந்தவுடன் உங்கள் சிந்தனை இப்படி இருக்கக் கூடும். இதை நாங்கள் DABDA என்று கூறுவோம் ,
Denial (நமக்கு நோய் வந்திருக்கிறதா என்று சந்தேகம் எழும். அதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது)
Anger (ஏன் எனக்கு மட்டும் இந்த நோய் வருகிறது என்று கோபம் ஏற்படும்)
Bargain (எவ்வளவு செலவானாலும் என்னைக் காப்பாற்றி விடுங்கள் என்று மருத்துவரிடமோ, உறவினர்களிடமோ, கடவுளிடமோ கெஞ்சுவோம்)
Depression (நீரிழிவு நோய், உடலின் அனைத்து பாகங்களையும் பாதித்து விடுமே, நான் நீண்ட நாட்கள் உயிரோடு இருக்க மாட்டேன் என்று மன அழுத்தம் கொள்வது)
Acceptance (சரி, இதை எப்படிச் சரிசெய்யலாம் என்று ஏற்றுக்கொள்வது)
நோய் வந்ததை ஏற்றுக்கொண்டு முறையான சிகிச்சைக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். மருந்து, மாத்திரைகள் தவிர்த்து அன்றாட வாழ்க்கையில், சிலவற்றை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

என்ன செய்ய வேண்டும்?
உங்களை நீங்களே அமைதிப்படுத்த ஒரு குகையை உங்களைச் சுற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
உணவை மெதுவாக, நிதானமாக ரசித்து, உணர்ந்து சாப்பிடுங்கள்.
அலுவலகம் செல்லும் பொழுது பாடல்களைக் கேட்டுக்கொண்டே போகலாம்.
அனாவசியமாக தொலைபேசி, செல்போன்கள் உபயோகிப்பதைத் தவிர்ப்பது நல்லது.
நேரத்திற்கு சத்தான உணவு உண்பது அவசியம்.
இரவு நீண்ட நேரம் விழிக்காமல் குறித்த நேரத்தில் தினமும் தூங்க செல்லுங்கள்.
நேரத்தை கையாளும் முறையை கற்றுக்கொள்ளுங்கள்.
மன அழுத்தத்தாலும் ஹார்மோன்கள் மாற்றம் ஏற்படும் என்பதை உணர வேண்டும்.
நேர்மறை எண்ணங்களுடன் இருப்பவர்களுக்கு, சீக்கிரமே குணமாகும்.
நேற்றைய தினத்தை நம்மால் திரும்பப் பெற முடியாது. ஆனால் நாளைய தினத்தை வெற்றியா, தோல்வியா என்பதை நாம் நிர்ணயிக்கலாம்.
- வந்தனா, மனநல ஆலோசகர்

ஞாயிறு, 10 நவம்பர், 2019

காப்ரேகர் ... நமக்குத் தெரியாதது

*'காப்ரேகர்' ( KAPREKAR ) என்னும்
பெயரைக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா ?. இவர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவரோ, வேறு தேசத்தைச் சேர்ந்தவரோ கிடையாது !!!. இவர் ஒரு இந்தியர் !!!. மும்பாயில் ஒரு கிராமத்தில் பிறந்தவர் !!!. 'ராமச்சந்திர காப்ரேகர்' என்பது இவரின் முழுமையான பெயர் !!!. இவர் ஒரு கணித மேதை !!!. மேற்குலகம் வியப்புடன் பார்க்கும் ஒரு ஆச்சரியமான கணிதவியலாளர் !!!. டிஜிட்டல் இந்தியா என்றதும் பரவசப் படும் இளைஞர்களில் பலருக்கு, மேற்குலகமே வியந்து பாராட்டிக் கொண்டிருக்கும் இந்திய அறிவியலாளர்கள் பற்றி அதிகம் தெரிந்திருப்பதில்லையென்பதே மறுக்க முடியாத உண்மை !!!. அந்த அறிவியலாளர்களுக்கு அரசியலில் எந்தவொரு ஆளுமையும் இல்லாமல், அறிவியலில் மட்டும் ஆளுமை இருந்ததால், தன் சொந்த நாட்டில், சொந்த இடத்தில் மறக்கப் பட்டவர்களாகி விடுகின்றனர் !!!.*

*காப்ரேகர் கண்டுபிடித்த ‘காப்ரேகர் எண்கள்’ ( KAPREKAR NUMBERS ) என்பது கணிதத்தில் பிரபலமானது. உதாரணமாக, 703 என்பது ஒரு காப்ரேகர் எண்ணாகும் !!!. இதன் விசேசத் தன்மை என்னவென்றால், இந்த எண்ணின் வர்க்கம், அதாவது இந்த எண்ணை இதே எண்ணால் பெருக்கிவரும் பெரிய எண்ணை, இரண்டு பகுதிகளாகப் பிரித்து, அவற்றை ஒன்றுடன் ஒன்று கூட்டினால், ஆரம்ப எண் வரும் !!!. சரி இதைப் பாருங்கள் !!!.*

*703 X 703 = 494209 அல்லவா ?. இதில் வரும் 494209 என்பதை எடுத்து, அதை 494 மற்றும் 209 ஆகப் பிரியுங்கள் !!!.* *இப்போது, இவையிரண்டையும் கூட்டுங்கள் !!!.*
*494+209=703*

*மீண்டும் ஆரம்ப எண்ணான 703 மீண்டும் வருகிறதல்லவா ?. எனவே 703 ஒரு காப்ரேகர் எண்ணாகும் !!!.*

*இப்படி 9, 45, 55, 99, 297….. என்பவை வரிசையாக காப்ரேகர் எண்களாகும் !!!. நீங்களே இவற்றின் வர்க்கத்தை எடுத்துச் செய்து பாருங்கள் !!!.*

*ஆனால், நான் இங்கு சொல்ல வந்தது காப்ரேகர் எண்களைப் பற்றியல்ல !!!. காப்ரேகரின் புகழைச் சொல்வது, ‘காப்ரேகர் எண்கள்’ மட்டுமல்ல, ‘காப்ரேகர் மாறிலி’ ( KAPREKAR’S CONSTANT ) என்பதும் தான் !!!. 'காப்ரேகர் மாறிலி' என்பது மிகவும் ஆச்சரியமான ஒரு எண் !!!. இந்த எண்ணை அடிப்படையாக வைத்து, எழுத்தாளர் ‘சுதாகர் கஸ்தூரி’ (SUDHAKAR KASTURI), '6174' என்று ஒரு அருமையான நாவலையும் எழுதியிருக்கிறார் !!!.*

*அந்த எண் 6174*

*'6174' ஒரு அதிசய எண் !!!.* *இந்த அதிசய எண்ணைக் கண்டு பிடித்தவர் காப்ரேகர் !!!. 'சரி இந்த எண்ணில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது ?' என்றறிய ஆவலாக இருக்கிறதா ?*
*அதைப் பார்க்கலாம் வாருங்கள்…….*

*காப்ரேகர் சொன்னது இதுதான், "6174 என்னும் எண்ணில் உள்ள இலக்கங்களை முதலில் இறங்குவரிசையாகவும், ஏறுவரிசையாகவும் வரும் எண்களாக மாற்றி எழுதிக் கொள்ளுங்கள் !!!. பின்னர் இறங்குவரிசை எண்ணிலிருந்து ஏறுவரிசை எண்ணைக் கழியுங்கள் !!!. அப்போது மீண்டும் அதே 6174 என்னும் எண் வரும்" !!!.*

*அது என்ன இறங்குவரிசை எண், ஏறுவரிசை எண் ? பெரிய இலக்கத்திலிருந்து சின்ன இலக்கம் வரை வரிசையாக எழுதுவது இறங்கு வரிசை எண் !!!. சின்ன இலக்கத்திலிருந்து பெரிய இலக்கம் வரை வரிசையாக எழுதுவது ஏறுவரிசை எண் !!!. அவ்வளவு தான் !!!. இதன்படி, 6174 இன் இறங்குவரிசை எண் 7641, அதன் ஏறுவரிசை எண் 1467 !!!.*

*காப்ரேகர் சொன்னது போல, இறங்குவரிசை எண்ணிலிருந்து, ஏறுவரிசை எண்ணைக் கழிப்போம் !!!.*

*7641 - 1467 = 6174.*

*அதாவது 6174 என்னும் எண்ணின் இ.வ. எண்ணிலிருந்து, ஏ.வ.எண்ணைக் கழித்தால் அதே 6174 மீண்டும் வரும் !!!.*

*இத்துடன் முடிந்து விடவில்லை '6174' தரும் ஆச்சரியங்கள் !!!.*

*நான்கு இலக்கங்களைக்கொண்ட எந்த இலக்கத்தையும் நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள் !!!. சரி, உதாரணமாக 8539 என்னும் எண்ணை எடுத்துக் கொள்வோம் !!!. அதை இ.வ.எ., ஏ.வ.எ. என மாற்றிக் கழித்துக் கொள்வோம் !!!.*

*9853 - 3589 = 6264*

*இப்போது 6264 என்பதை மீண்டும் இ.வ.எ., ஏ.வ.எ. ஆக மாற்றிக் கழித்துக் கொள்வோம் !!!.*

*6642 - 2466 = 4176*

*இந்த எண்ணுக்கும் அதே போலச் செய்தால்,*

*7641 - 1467 = 6174*

*இறுதியாக நாம் பெறுவது 6174 என்னும் எண்ணாகவே இருக்கும் !!!. இப்போது 6174 ஐ நாம் வரிசைப் படுத்தினால், அது 6174 ஆகவே இருக்கும் !!!. இந்த எண் மீண்டும் மீண்டும் நம்மை அதன் சுழலில் இழுத்துக் கொண்டிருப்பதால், இதைக் 'கருந்துளை எண்' (BLACK HOLE) என்றும் சொல்வார்கள் !!!.*

*நீங்கள் 9999 க்கு கீழே உள்ள நான்கு இலக்கங்களைக் கொண்ட எந்த எண்ணை எடுத்தும் (1111, 2222, 3333.......9999 எண்களும், சில விதிவிலக்கு எண்களும் இவற்றில் அடங்காது) அதனை இ. வ. எண், ஏ. வ. எண் ஆகப் படிப்படியாக மாற்றினால் உங்களுக்கு இறுதியில் கிடைப்பது 6174 என்னும் எண்ணாகவே இருக்கும் !!!.*

*அதிகப்படியாக ஏழாவது படியில் 6174 எண் உங்களுக்கு விடையாகக் கிடைக்கும் !!!. முடிந்தவரை பல எண்களை இப்படி முயற்சி செய்து பாருங்கள் !!!. எப்போதும் 6174 என்னும் எண் வந்து உங்களை அணைத்துக் கொள்ளும் !!!. அதனால் தான் '6174' என்பதை 'காப்ரேகரின் மாறிலி' என்பார்கள் !!!.*

*மூன்று இலக்க எண்களுக்கான காப்ரேகரின் மாறிலி எண் 495 ஆகும் !!!.*

இணையத்தில் இவர் பெயரைத் தேடினால் எண்ணற்ற தகவல்கள் கிடைக்கின்றன. மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இணையத்தில் இவர் பற்றிய கட்டுரைகளை வாசிக்கலாம்.

வெள்ளி, 11 அக்டோபர், 2019

மாணவர்களின் முன்னேற்றத்தில் கோ 4 குரு இணையத்தின் பங்கு


 Web
நமது சமுதாயத்தைச் சேர்ந்த நண்பர் ஒருவரால் நடத்தப்படும் கோ 4 குரு இணையதளம்> இணைய வழியில் டியூசன் நடத்துதல் மற்றும் அமெரிக்க விண்வெளி மையமான நாசா சுற்றுலா போன்ற பல சேவைகளை செய்து வரும் ஒரு கல்விக்கான இணையதளம்.

கடந்த மாதம் ஒரு முன்னாள் அமெரிக்க விண்வெளி வீரரை தமிழகத்தில் உள்ள பல கல்வி நிலையங்களுக்கு அழைத்து வந்து மாணவர்களுக்கு விண்வெளி ஆராய்ச்சி சம்பந்தமான விழிப்புணர்வு மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் வகையில் மிகச்சிறந்த கல்விப்பணி ஆற்றியது இந்த இணையதளத்தை நடத்தும் நிறுவனம்.

இந்திய தலைமை அலுவலகத்தை ராஜபாளையம் நகரிலும், அமெரிக்காவில் வர்ஜீனியா மாகாணத்திலும் நடத்தி, இணையதளம் வாயிலாக மாணவர்களுக்கு பாடம், மொழி, இசை போன்ற அனைத்து வித டியூசன் தேவைகளையும் இந்த நிறுவனம் ஒரே இணையதளத்தில் பூர்த்தி செய்கிறது.

இன்றைய காலகட்டத்தில் கல்வி நிலையங்களில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அவர்களது விருப்பமான நேரத்தில் இந்த இணையம் மூலம் தேவைப்படும் கூடுதல் தகுதிகளை வளர்த்துக் கொள்ள முடியும்.

தேவைப்படுபவர்கள் இந்த இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள எண்களை தொடர்பு கொண்டு விபரம் அறிந்து கொள்ளலாம்.

செவ்வாய், 8 அக்டோபர், 2019

வாழ்க்கைத்துணைநலம்


-       அருள்நிதி S ஜெயபிரகாஷ்
முதுநிலை பேராசிரியர் & கூடுதல் இயக்குனர்
உலக சமுதாய சேவா சங்கம்

Email id -  jpmalajp@gmail.com 


குடும்ப வாழ்க்கை வெற்றிகரமாக அமைய கணவனும், மனைவியும் மனம் ஒன்றியவர்களாக இருக்கவேண்டும். ஆனால் இயற்கையில் படைப்பிலே ஆணுக்கும், பெண்ணுக்கும் மனப்பான்மையிலே பலப்பல அடிப்படை வேறுபாடுகள் உள்ளன. இது தவிர சில குறைகளும் இருக்கத்தான் செய்யும். அப்படியெனில் கணவனுக்கும், மனைவிக்கும் மனம் எப்படி ஒன்றாகும்? மோதல்கள்தானே சாத்தியம் - - எப்படி இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்?

கணவனும், மனைவியும் ஒருவர் மற்றவரிடம் காணும் குறைகளில் முதலில் இடம் பெறும் பத்து குறைகள் :

1 . சுயநலம்
2 . ஊதாரித்தனமான செலவு
3 . வம்பு பேசுதல்
4 . சீண்டிக்கொண்டே இருத்தல்
5 . வீட்டில் கவனமின்மை
6 . ஆதிக்க மனப்பான்மை
7 . வெளி விவகாரங்களில் அதிக அக்கறை
8 . சுத்தக் குறைவு
9 . இன்னொரு ஆணிடமோ, பெண்ணிடமோ ஈடுபாடு &
10 . அலட்சியப் படுத்தல்

இவ்வளவு குறைகள் இருந்தாலும் மனம் ஒன்றிய தம்பதியர்கள் அவ்வப்போது சண்டை போட்டுக்கொண்டாலும் உடனே சமாதானமாகி வாழ்க்கைக்கு மேலும், மேலும் சுவை ஊட்டுவார்கள். இதை உணர்த்தத்தான் நம் முன்னோர்கள் புராணங்களிலே தெய்வீகத் தம்பதியர்களான சிவன் - பார்வதி, விஷ்ணு - லெட்சுமி, ப்ரம்ஹா - சரஸ்வதி இவர்கள் சண்டை போட்டுக்கொண்டு, சமாதானம் அடைந்து பல உண்மைகளை உலகுக்கு உணர்த்துவதாக கதைகளை அமைத்தனர்,

கணவன் - மனைவி இருவருமே தங்களிடையே வரும் சண்டைகளை ஊடலாய் நினைத்து உடனே சரி செய்ய வேண்டும். இம்மாதிரி சண்டைகளில் கோபத்தைத் தவிர்த்து மன்னிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். மனைவி தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கணவன் எதிர்ப்பார்க்கக்கூடாது. சண்டையிலே மனைவியை வெல்ல அனுமதித்து கணவன் தோற்க வேண்டும்! அப்படித் தோற்ற கணவர்கள்தான் வெற்றிகரமான குடும்பத் தலைவர்களாக திகழ்கின்றார்கள்!

ஏனெனில், " வெற்றி " பெற்ற மனைவி
கணவனிடம் தன உள்ளத்தை பறி கொடுத்து
அவன் சொல் கேட்கும்
அன்பு அடிமையாக
மாறி விடுகின்றாள்!

வாழ்க வளமுடன்!