Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

ஞாயிறு, 24 செப்டம்பர், 2017

பார்வை வழங்கும் தூதுவர் ஆவோம்: கண் தானம் செய்வது எப்படி?

தி இந்து





திரைப்படம் ஓடிக் கொண்டிருந்தது. கதாநாயகனின் அறிமுகக் காட்சி அது. ரசிகர்கள் ஆராவாரம் செய்தனர். சட்டென்று படம் நின்று, திரையரங்கில் இருள் சூழ்ந்தது. ரசிகர்கள் கூக்குரலிட்டனர். ஒன்று..இரண்டு...பத்து நொடிகள் வரை கும்மிருட்டு.
பின்னர் திரையில் தோன்றியது ஒரு வாசகம்.
''10 நொடிகள் இருளையே உங்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கண்ணில்லாதவர்களின் நிலையை எண்ணிப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கை முழுவதும் இருளே!
கண் தானம் செய்வோம்!''
அனைவரும் எழுந்து நின்று நெகிழ்வுடன் கரவொலி எழுப்பினர்.
****
இந்திய அரசின் சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை 'தேசிய கண் தான விழா'வாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 8-ம் தேதி தேசிய கண் தான நாளாக கொண்டாடப்படுகின்றது.
இந்த இரண்டு வாரங்களும் கண் வங்கிகள், கண் மருத்துவமனைகள் மூலம் பொது மக்களிடையே கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
இந்தியாவில் கருவிழி பாதிப்பால் பார்வையிழந்து தானமாக வழங்கப்படும் கண்களை எதிர்பார்த்துக் காத்திருப்பவர்களின் எண்ணிக்கை மட்டும் 10 லட்சம். கண் தானத்தில் போதிய விழிப்புணர்வு இல்லாமையே இந்நிலைக்கு காரணம்.
இதைத் தவிர்க்க என்ன செய்யலாம், கண் தானம் மேற்கொள்ள, நாம் செய்ய வேண்டியவை என்ன?
1. நமக்கு தெரிந்து யாரேனும் ஒருவர் மரணமடைந்துவிட்டால், அந்த நேரத்தில் நெருங்கிய உறவினர்கள் வேதனை மற்றும் அதிர்ச்சியில் இருப்பார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி, மரணமடைந்தவர் உடல் உறுப்புகள் அல்லது கண்களை தானம் செய்ய உறுதிமொழி ஏதேனும் எடுத்திருந்தால் உடனடியாக கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம். கண்தான உறுதிமொழி எடுத்திருக்கவில்லை என்றால் நெருங்கிய உறவினரிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி "அவரது கண்களைத் தானம் அளிப்பதால், இரண்டு பேருக்கு பார்வை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறதே.. அவரது ஆத்மா சாந்தியடையுமே" என்று ஊக்குவித்து அவர்களது சம்மதம் பெற்றுக் கண் வங்கியைத் தொடர்பு கொள்ளலாம்.
2. கண் வங்கியை தொடர்பு கொண்டு மரணமடைந்தவரின் பெயர், வயது, ஆண் / பெண், மரணத்தின் காரணம், மரணமடைந்த நேரம், தற்போது உடல் இருக்கும் இடத்தின் முகவரி மற்றும் லேண்ட்மார்க் (அருகில் உள்ள இடத்தின் அடையாளம் உதாரணத்துக்கு., கோயில், திரைஅரங்கு, கடைகள், போன்ற விவரங்கள்) ஆகியவற்றுடன், தகவல் அளிப்பவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களை அளித்தால் உரிய நேரத்திற்குள் கண் வங்கி மருத்துவர் குழு வர வசதியாக இருக்கும்.
3. இறந்தவரின் உடலில் இருந்து 6 மணி நேரத்துக்குள் கண்களை அகற்றிவிட வேண்டுமென்பதால், இறந்தவுடன் அருகில் உள்ள கண் வங்கிக்குத் தொலைபேசி மூலம் தகவல் சொல்ல வேண்டும். இறந்தவரின் கண்களை மூடி, மூடிய இமையின்மேல் ஈரப் பஞ்சை வைக்கலாம். உடல் வைக்கப்பட்டிருக்கும் அறையில் மின் விசிறியை நிறுத்திவிட வேண்டும்.
4. கண் வங்கியிலிருந்து மருத்துவர் வீட்டுக்கே வந்து கண்களை எடுத்துச் செல்வார். கண் விழிப்படலத்தை எடுக்க 10 நிமிடங்கள் போதும். எடுத்தவுடன் முகம் விகாரமாகத் தோன்றாது. ஆண், பெண், சிறுவர், பெரியவர், கண்ணாடி அணிந்தவர், கண்ணில் அறுவைசிகிச்சை செய்தவர்கள் என யார் வேண்டுமானாலும் தானம் செய்யலாம். ஒருவரிடமிருந்து தானமாகப் பெற்ற இரண்டு கண்கள், பார்வை இழந்த இரண்டு நபர்களுக்குப் பொருத்தப்படுகின்றன.
5. கண் தானம் செய்வதற்கு ஜாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், ஆண் / பெண் பாகுபாடு ஏதும் கிடையாது. மரணமடைந்த அனைவரது கண்களும் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து மதங்களும் கண் தானம் உட்பட அனைத்துவிதமான தானங்களையும் போற்றுகின்றன.
6. ஒருவரது மரணத்தின் பின்னணியில் ஏதேனும் தொற்று நோய்க்கிருமிகள், வெறிநாய்க் கடி, கல்லீரல் அழர்ச்சி, கண்களில் புற்றுநோய், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புற்றுநோய் பரவிய நிலை, எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற பிரச்சினைகள் இருந்தால் அவர்களது கண்கள் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
கண் வங்கியின் செயல்பாடுகள்
கண் வங்கி என்பது ஒரு சமுதாய அமைப்பாகச் செயல்படுகிறது. கண் தானம் மூலம் பெறப்படும் கரு விழிகளைச் சேகரித்து, முறையாகப் பரிசோதித்து அவற்றைக் கருவிழி மாற்று சிகிச்சை செய்யும் மருத்துவருக்கு அனுப்பும் பணியைக் கண் வங்கிகள் செய்து வருகின்றன.
சென்னையில் உள்ள சில முக்கியமான கண் வங்கிகள்
அரசு கண் மருத்துவமனை, எழும்பூர்,
தொலைபேசி எண்: 044 - 28555281
சி.யூ.ஷா கண் வங்கி சங்கர நேத்ராலயா, தொலைபேசி எண்: 044 - 28281919
ராஜன் கண் மருத்துவமனை, தொலைபேசி எண்: 044 - 28340300
அகர்வால் கண் மருத்துவமனை, தொலைபேசி எண் 044 - 28116233
- அ.மகாலிங்கம், கட்டுரையாளர், கண் மருத்துவ உதவியாளர், முன்னாள் கல்வி அதிகாரி மற்றும் மேம்பாட்டு மேலாளர், சங்கரா நேத்ராலயா கண் மருத்துவமனை, சென்னை.
தொடர்புக்கு: mahali@mahali.in

செவ்வாய், 19 செப்டம்பர், 2017

கல்விவள்ளல் தி. கலசலிங்கம் அவர்களின் 93-வது பிறந்தநாள் 20.09.2017



தோற்றம்: 20.09.1925                                                                        மறைவு: 13.07.2014


கலசலிங்கம் கல்வி நிறுவனங்களின் நிறுவனரும் நமது சாலியர் சமுதாயத் தலைவர் அமரர் கல்விவள்ளல் தி. கலசலிங்கம் அவர்களின் 93-வது பிறந்தநாள்.


தற்போதைய விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் வட்டம் எஸ். இராமச்சந்திராபுரம் கிராமத்தில் தெய்வத் திருவாளர்கள் திருவேங்கடம் குருவம்மாள் தம்பதியினரின் நான்காவது மகனாக 20.09.1925ல் பிறந்த ஐயா கலசலிங்கம் அவர்கள் தன் கடின உழைப்பால் படிப்படியாக முன்னேறி கட்டிட நிறுவன அதிபராகவும் அதன்பின் நம் சமுதாய மக்களை கல்வியில் மேம்படுத்தும் நோக்கத்துடன் கலசலிங்கம் கல்வி நிறுவனங்களைத் துவக்கினார்.

சிறிய அளவில் துவக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் இன்று வளர்ந்து ஆலமரமாய், கலசலிங்கம் பல்கலைக்கழகமாகவும், ஆனந்த் பொறியியல் கல்லூரியாகவும் கல்விச் சேவையை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

நமது சாலியர் சமுதாய ஒற்றுமைக்காகவும், முன்னேற்றத்துக்காகவும்  சிந்தித்து சாலியர் மகாஜன சங்கத்தின் உருவாக்கத்தில் பெரும்பங்காற்றியவர் ஐயா கலசலிங்கம் அவர்கள் கடந்த 13.07.2014 அன்று நம்மை வி;ட்டு சென்றுவிட்டாலும் நம் மக்கள் மனதில் என்றும் இடம்பெற்றிருக்கும் கல்விவள்ளல் ஐயா கலசலிங்கம் அவர்களின் பிறந்தநாளில் அவரது ஆசி வேண்டி வணங்குவோம்.


நமது சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு ஐயாவின் வழியில் தொண்டு செய்ய முன்வருவோம்.

ஞாயிறு, 17 செப்டம்பர், 2017

ரியல் எஸ்டேட்: வளம்பெறும் ஒரகடம்

தி இந்து


சுமார் பத்து வருடங்களுக்கு முன்பு வரை, ‘ஒரகடம்’ என்ற பகுதியை, அப்பகுதியைச் சேர்ந்தவர்களைத் தவிர தமிழ்நாட்டில் வேறு யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று ஆசியாவின் ஆட்டோமொபைல் தயாரிப்பு மையமாகவும் தமிழகத்தின் பிரபலமான நகரங்களுள் ஒன்றாகவும் மாறியிருக்கிறது, சென்னைக்கு அருகில் 50 கிலோ மீட்டரில் அமைந்திருக்கிறது இந்நகரம்.
இந்திய அளவில் பெருநகரங்களுக்கு அருகே அமைந்துள்ள துணை நகரங்கள் பொருளாதார மண்டலங்களாக அறிமுகப்படுத்தப்பட்டு அவை மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன. டெல்லி அருகே உருவான குர்கான், மும்பை அருகே உருவான பொவாய் போன்றவை இதற்குச் சரியான முன்னுதாரணங்கள் ஆகும். அந்த வகையில் தமிழகத்தில் மிக வேகமாக வளர்ந்துவரும் பொருளாதார மண்டலம் ஒரகடமாகும்.
மாநிலத்தின் முதலீடுகளைப் பெருக்கும் பொருட்டுத் தமிழக அரசு இங்கே தொழிற்சாலைகளை அமைக்க நிறுவனங்களுக்கு மானியம் வழங்கி ஊக்குவிப்பதாலும், உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதாலும் ஆண்டுதோறும் தொழிற்சாலைகள் எண்ணிக்கையும் அங்கு பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. டெய்ம்லர், ரினால்ட்-நிஸான், ஃபோர்டு, டி.வி.எஸ்., அப்போல்லோ, மெர்ஸிடிஸ், சுந்தரம் ஆட்டோ, ராயல் என்ஃப்பீல்டு உள்ளிட்ட உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளை இங்கு அமைத்துள்ளன.
உலகின் முன்னணி நிறுவனங்கள் எல்லாம் தங்கள் தொழிற்சாலையை இங்கே போட்டிபோட்டுக்கொண்டு நிறுவும் அதேவேளையில் தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனங்களும் இங்கே தங்கள் புராஜெட்டுகளை ஆர்வத்துடன் அறிமுகப்படுத்திவருகின்றன. தொழிற்சாலைகள் தொடங்குவதற்கும் மக்கள் வசிப்பதற்கும் ஏற்ற உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொருளாதார வளர்ச்சிகள் ஒருங்கே அமைந்துள்ளதே இதற்கு மிக முக்கியக் காரணமாகும்.
விஸ்தாரமான ஆறு வழிச் சாலை, சென்னை, பெங்களூர் மற்றும் பிற முக்கிய நகரங்களுடனான இணைப்புச் சாலைகள், மேம்பாலங்கள், புகழ்பெற்ற ஆலயங்கள், மக்களின் வாழ்வாதாரங்களுக்கான சூப்பர் மார்க்கெட்டுகள், போக்குவரத்து வசதிகள், அலுவலகங்கள் என ஒரு பெருநகரத்திற்குண்டான அத்தனை அம்சங்களும் அமைந்துள்ளதால் ஒரகடத்தின் ரியல் எஸ்டேட் வர்த்தகமும் மதிப்பும் நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.
இந்தியாவின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று, ஒரகடத்தின் சிறப்புகளை ஆராய்ந்து தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக 400 ஏக்கரில் விண்ணை முட்டும் அடுக்குமாடிக் குடியிருப்பு மற்றும் வீட்டுமனைப் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு குட்டி நகரத்தையே இங்கு உருவாக்கியிருப்பது ஒரகடத்தின் ரியல் எஸ்டேட் வளர்ச்சிக்கு ஒரு சிறந்த உதாரணமாகும்.
மேலும், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வீட்டுமனைப் பிரிவுகள் கணிசமாகக் குறைந்துவருவதால், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு முதலீடுசெய்ய விரும்புபவர்களுக்கு ஒரகடம் ஒரு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. ஏனெனில், வருங்காலத்தில் வரவிருக்கும் இன்னும் பல்வேறு சிறப்பம்சங்கள் ஒரகடத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்லும் எனப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
அவற்றில் சில:
# ஒரகடத்தையும் ஸ்ரீபெரும்புதூரையும் இணைத்துத் தொழில்துறை மண்டலத்தை விரிவாக்கிச் சென்னையின் பொருளாதார நகரமாக உருவாக்கத் தமிழக அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது.
# இதன் மூலம் 30,000க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள் உருவாகும்.
# NH4 தேசிய நெடுஞ்சாலை, தாம்பரம், முடிச்சூர் மற்றும் ஸ்ரீபெரும்புதூரை இணைப்பதால் சுற்றுவட்டாரத்தில் ஒரகடம் ஒரு மிக முக்கிய நகரமாக மாறி வருகிறது.
# ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் மட்டுமல்லாது சாம்சங், DELL போன்ற எலக்ட்ரானிக் பொருள்கள் உற்பத்தித் தொழிற்சாலைகளும் தகவல் தொழில்நுட்ப (IT) நிறுவனங்களும் தங்கள் கிளைகளைத் தொடங்கவிருக்கின்றன.
# சுமார் 300 ஏக்கரில் Aerospace பூங்கா ஒன்று அமையவிருக்கிறது. இதில் 30-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்கள் யூனிட்டுகளைக் கூடிய விரைவில் தொடங்கவிருக்கின்றன.
# சுமார் 25,000 ஏக்கர் பரப்பில் அரசு இந்தச் சிறப்பு பொருளாதார மண்டலத்தை உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் இங்கே வரக் காத்திருக்கின்றன.
# சில வருடங்களுக்கு முன்பு வரை சென்னை நகருக்குச் சென்றுவர வெறும் 25 அடி சாலையை மட்டுமே கொண்டிருந்த ஒரகடம் இன்று 200 அடி சாலையுடன் அசுர வளர்ச்சி அடைந்திருப்பதே இது எதிர்காலத்தில் அடையவிருக்கும் வளர்ச்சிக்கு ஆதாரமாகும்.

கட்டுமான நிறைவுச் சான்றிதழின் முக்கியத்துவம்

தி இந்து




நீ
ங்கள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குகிறீர்கள். அதைக் கட்டி முடித்தவுடன் கட்டுநர் உங்களிடம் ஒப்படைக்க வேண்டிய ஆவணங்களில் முக்கியமானது ‘கட்டுமான நிறைவுச் சான்றிதழ்’ (Completion Certificate).
ஒரு வீடு அல்லது அடுக்ககத்துக்குத் தண்ணீர், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகள் தேவைப்படும். கட்டிடம் அந்தப் பகுதிக்கான விதிகளின்படி கட்டப்பட்டிருந்தால்தான் அந்தந்த அமைப்புகள் (மின்சார வாரியம், குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் போன்றவை) இவற்றுக்கு அனுமதி வழங்கும். அதற்கான அடிப்படைதான் கட்டுமான நிறைவுச் சான்றிதழ்.
கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டவுடன் அந்தப் பகுதியின் அரசு அதிகாரி அதைப் பார்வையிடுவார். கட்டிடத் திட்ட வரைவின்படி அது கட்டப்பட்டிருக்கிறதா என்பதைச் சரிபார்ப்பார். அப்படிக் கட்டப்பட்டிருந்தால் ‘கட்டுமான நிறைவுச் சான்றிதழ்’ வழங்கப்படும்.
கட்டுநர்கள் சிலர் இந்த ‘கட்டுமான நிறைவுச் சான்றிதழைப்’ பெற வேண்டியது ஃப்ளாட்களின் உரிமையாளர்கள்தான் என்பதைப் போல நடந்து கொள்கிறார்கள் (முக்கியமாக முதலில் சமர்ப்பித்த வீட்டுத் திட்ட வரைவிலிருந்து மாறுபட்டுக் கட்டியவர்கள்). இது தவறு. பல மாநிலங்களில் (தமிழ்நாடு உட்பட) கட்டுநர்கள்தான் இந்தக் கட்டுமான நிறைவுச் சான்றிதழைப் பெற்றுத்தர வேண்டும். தனி வீடாக இருந்தால் அந்தச் சான்றிதழைப் பெறுவது அதன் உரிமையாளர்களின் பொறுப்பு.
ஒரு ஃப்ளாட்டை வாங்கும்போது அதைப் பதிவுசெய்வீர்கள். ஆனால், அந்தப் பதிவின்போது ‘கட்டுமான நிறைவுச் சான்றிதழ்’ பற்றி எதுவும் குறிப்பிடப்படுவதில்லை. இதைப் பயன்படுத்தி சில கட்டுநர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்கள்.
இந்தக் கட்டுமான நிறைவுச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டுதான் தண்ணீர், மின்சார இணைப்பு போன்ற அரசுத் துறைகளிடமிருந்து பெற வேண்டிய அடிப்படை வசதிகளைக் கட்டிடத்துக்குப் பெற்றுத் தர வேண்டியிருக்கும்.
சில சமயம் தாற்காலிகச் சான்றிதழுக்கு விண்ணப்பித்துப் பெறலாம். ஆனால், இது சில மாதங்களுக்கு மட்டுமே (பெரும்பாலும் ஆறு மாதங்கள்) செல்லுபடியாகும்.
கட்டுமான நிறைவுச் சான்றிதழ் பெறவில்லை என்றால் என்ன ஆகும்? ஃப்ளாட்டை உங்கள் வசம் ஒப்படைப்பது தாமதமாகும். கட்டுமான நிறைவுச் சான்றிதழ் இன்னமும் கிடைக்கவில்லை என்பதைக் காரணம் காட்டி கட்டுநர் குறிப்பிட்ட காலத்தில் உங்களிடம் வீட்டை ஒப்படைக்கவில்லை என்றால் என்ன செய்யலாம்? அப்போது நீங்களே இதற்கான அதிகாரியை அணுகலாம். இப்படித் தனியாகவும் அணுகலாம், அந்தக் கட்டிடத்தின் பிற அடுக்கக உரிமையாளர்களுடன் இணைந்தும் அணுகலாம்.
கணிசமான கட்டுநர்கள் கட்டுமான நிறைவுச் சான்றிதழைப் பெறுவதில்லை. தங்களுக்குத் தெரிந்தவர்களைக் கொண்டோ லஞ்சம் அளித்தோ வீட்டுக்குத் தேவையான வசதிகளைப் பெற்றுவிடுகிறார்கள். ஆனால், இதில் பின்னால் சிக்கல் எழும். கட்டுநர் கட்டுமான நிறைவுச் சான்றிதழை உரிமையாளர்களிடம் ஒப்படைத்த பிறகுதான் உரிமையாளர் அங்கே குடியேற முடியும் என்பதைப் பல மாநிலங்கள் சட்டபூர்வமாகவே ஆக்கியுள்ளன.
கட்டுமான நிறைவுச் சான்றிதழ் இல்லாமல் உங்கள் ஃப்ளாட் உங்கள் வசமானால் பிற்காலத்தில் அதை விற்பதிலோ அதை அடமானமாக வைத்துக் கடன் வாங்குவதிலோ பிரச்சினைகள் எழலாம். வருங்காலத்தில் புதிய விதிகள் அறிமுகமாகி உங்கள் வீட்டுக்கான மின்சார இணைப்பு, நீர் இணைப்பு போன்றவை துண்டிக்கப்படலாம். எனவே, இதில் கவனம் செலுத்துங்கள்.
ஒரு கட்டுமான நிறைவுச் சான்றிதழில் கீழ்க்கண்ட விவரங்களும் இருக்கும் - நிலம் அமைந்துள்ள இடத்தின் தகவல்கள், அருகிலுள்ள கட்டிடங்களிலிருந்து எவ்வளவு தொலைவில் இந்தக் கட்டிடம் அமைந்துள்ளது, கட்டிடத்தின் அனுமதிக்கப்பட்ட உயரம், கட்டிடத் திட்ட வரைவின் விவரங்கள்.
கட்டுமான நிறைவுச் சான்றிதழ் என்பது உங்கள் கட்டிடம் நீங்கள் அளித்த திட்டப்படியும் (எனவே சட்டப்படியும்) கட்டப்பட்டிருக்கிறது என்பதற்கான மறைமுகமான சான்றிதழும்கூட. எனவே, இதன் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

கூகுள் தெரியும், டக்டக்கோ தெரியுமா?


தி இந்து





மா
ற்றுத் தேடியந்திரங்களில் முன்னணியில் இருக்கும் ‘டக்டக்கோ’ பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? கூகுளுக்கு சவால் விடக்கூடிய அளவுக்கு பெரிய தேடியந்திரம் இல்லை என்றாலும், கடந்த 7 ஆண்டுகளில் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து தனக்கென தனியிடத்தை பிடித்திருக்கிறது ‘டக்டக்கோ’. இதற்கு முக்கிய காரணம், டக்டக்கோ இணையவாசிகளின் தனியுரிமையை மதிக்கும் வகையில் செயல்படுவதுதான். இணையவாசிகளின் தேடலைக் கண்காணிக்காமல் இருப்பதும், அவர்களைப் பற்றி தகவல்களை திரட்டி விளம்பர வலை விரிக்காமல் இருப்பதுமே டக்டக்கோவின் தனிச்சிறப்பு. இந்த அனாமதேய தன்மையை பிரைவசி ஆர்வலர்கள் கொண்டாடியும் வருகின்றனர்.
எனவே, உங்கள் இணைய தேடல் அனாமதேயமாக இருக்க வேண்டும் என விரும்பினால் நீங்களும் டக்டக்கோவை பயன்படுத்திப் பார்க்கலாம். பிரைவசி பாதுகாப்பு முதன்மை அம்சம் என்றாலும், டக்டக்கோவுக்கு மாற்றிக்கொள்ள மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. ஒரு தேடியந்திரமாக டக்டக்கோ பல தனித்தன்மையான சேவைகளை வழங்கி வருகிறது. இவற்றில் பல பிரத்யேகமானவை.

ஸ்டாப் வாட்ச்

நீங்கள் விரும்பினால் டக்டக்கோவை ஸ்டாப் வாட்சாக பயன்படுத்தலாம். இதன் கட்டத்தில் ஸ்டாப் வாட்ச் என டைப் செய்தால் போதும், அதற்கான கடிகாரம் தோன்றும். அதில் உங்களுக்குத் தேவையான நேரத்தை அமைத்துக்கொள்ளலாம். அது மட்டுமல்ல, அடுத்தடுத்து வேலைகள் இருந்தால், லேப் வசதி மூலம் தொடச்சியாகப் பயன்படுத்தலாம். இதே முறையில் டைமர் சேவையையும் பயன்படுத்தலாம். டைமரில் நேரம் முடிந்ததும் அலாரமும் ஒலிக்கும்.
ஆங்கில வாசகங்களில் தேவையான இடங்களில் கேபிட்டல் எழுத்துகளை அமைக்க விரும்பினால், அதற்கான வசதியையும் இந்தத் தேடியந்திரம் வழங்குகிறது. வாசகத்தை டைப் செய்து அதற்கு முன் ‘டைட்டில் கேஸ்’ என குறிப்பிட்டு இடைவெளி விடுவதன் மூலம் இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம். எழுத்துகளை லோயர் கேஸ் அல்லது அப்பர் கேஸாக மாற்றவும் பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு இந்த வசதி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

செய்திகளைத் தேட

கூகுளில் தகவல்களைத் தேடும்போது, தொடர்புடைய செய்திகளும் இடம்பெற்றிருக்கும். ஆனால், டக்டக்கோ தேடல் முடிவுகளை மட்டுமே அளிக்கிறது. இருப்பினும் செய்திகளும் இடம்பெற விரும்பினால், தேடலுக்கான கீவேர்டு முன் அல்லது முடிவில் நியூஸ் என சேர்த்துக்கொண்டால் போதும், தொடர்புடைய செய்திகளையும் காணலாம். 100-க்கும் மேற்பட்ட தளங்களிலிருந்து செய்திகள் பட்டியலிடப்படுகின்றன.
டக்டக்கோவில் எச்.டி.எம்.எல். கோப்புகளையும் எளிதாகத் தேடலாம். எச்.டி.எம்.எல். என குறிப்பிட்டால் பொருத்தமான முடிவுகளைக் காணலாம். புரோகிராமிங் சிறப்பு குறியீடுகளையும் தேடலாம். இதேபோல பிடிஎப் கோப்புகள் அல்லது மின் புத்தகங்களை எதிர்பார்க்கும்போது, கீவேர்டுடன் பிடிஎப் எனும் வார்த்தையைச் சேர்த்துக்கொண்டால் போதும், கோப்புகளை மட்டும் தேடலாம்.

உடனடி பதில்கள்

சில நேரம் ஒட்டுமொத்த இணைய கடலிலும் தேட விரும்பாமல் குறிப்பிட்ட இணையதளத்தில் மட்டும் தேட விரும்பலாம். இதற்கும் டக்டக்கோவில் வழி உண்டு. இந்த வசதி ‘ஐபேங்க்’ என சொல்லப்படுகிறது. தேடல் பதத்துக்கு முன் ஆச்சரியக்குறியைச் சேர்த்து, குறிப்பிட்ட தளத்துக்கான முதல் எழுத்தை குறிப்பிட்டால் போதும், அந்த ஒரு தளத்தில் மட்டும் தேடலாம். உதாரணத்துக்கு !a என்றால் அமேசான் தளத்தில் தேடலாம். இப்படி நூற்றுக்கணக்கான தளங்களில் நேரடியாக தேடும் வசதியை அளிக்கிறது. இதற்கான நீண்ட பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வுப் பிரிவிலும் தளங்கள் பட்டியலிடப்பட்டுள்ளதால் மாணவர்கள் மற்றும் ஆய்வாளர்களுக்கு இந்தச் சேவை மிகவும் பயனளிக்கும். இவ்வளவு ஏன், இந்த வசதியை பயன்படுத்தி கூகுளிலும் தேடலாம்.
‘இன்ஸ்டண்ட் ஆன்சர்ஸ்’ எனும் பெயரில் உடனடி பதில்களையும் டக்டக்கோ வழங்கி வருகிறது. குறிப்பிட்ட பல கேள்விகள் அல்லது பதங்களுக்கு தேடல் வார்த்தையை டைப் செய்ததுமே பொருத்தமான பதிலை காணலாம். கிளிக் செய்யாமலே தேடும் வசதி எனும் வர்ணனையோடு டக்டக்கோ இதை அறிமுகம் செய்தது. ‘கூகுள் நாலெட்ச் கிராஃப்’ எனும் பெயரில் இதுபோன்ற வசதியை வழங்கினாலும், முதலில் டக்டக்கோதான் இதை அறிமுகம் செய்தது.

வீடியோ தேடல்

வீடியோ கோப்புகள் மட்டும்தான் தேவை என்றால், தேடல் பதத்துக்கு முன் வீடியோ என சேர்த்துக்கொண்டால் 28 வீடியோக்கள் வந்து நிற்கின்றன. மேலும் வீடியோக்கள் தேவையெனில் அதற்கான வசதியை கிளிக் செய்யலாம். சமையல் குறிப்பு வீடியோக்கள் என்று குறிப்பிட்டும் தேடலாம். இந்த முடிவுகள் யூடியூப்பை மட்டுமே சார்ந்திருப்பதுதான் ஒரே குறை.
இணையசேவைகளுக்கான கீபோர்டு சார்ந்த குறுக்கு வழிகள் தேவை எனில், சீட்ஷீட் வசதியைப் பயன்படுத்தலாம். உதாரணத்துக்கு போட்டோஷாப் சீட்ஷீட் என தேடினால் போட்டோஷாப் தொடர்பான குறுக்கு வழிகளைப் பெறலாம். புரோகிராமிங் தொடர்பான தகவல்களையும் எளிதாக தேடலாம்.
டக்டக்கோவில் இன்னும்கூடப் பல அம்சங்கள் இருக்கின்றன. எல்லாம் சரி, கூகுள்போல வருமா எனக் கேட்பவர்களுக்காக கூகுள் தொடர்புடைய சுவாரஸ்யமான தகவல் ஒன்று. கூகுளில் ஏதேனும் பிரச்சினையா எனும் பொருள்பட, ‘ஈஸ் கூகுள் டவுன்’ என கூகுளில் கேட்டால், இல்லை (நோ) என பதில் பளிச் எனத் தோன்றுகிறது.

தற்கொலையை வெல்வோம்!

தி இந்து


ணையம் எனும் ஜன்னல் வழியாகப் பலர் உலகைப் பார்த்து வரும் வேளையில், சிலருக்கு அது இறப்புக்கான வழியைத் திறந்துவிடுகிறது. ‘புளூவேல்’ விளையாட்டு அப்படியான ஒன்று. அந்த விளையாட்டை விளையாடியதால், பல மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல் வருகிறது. 2, 4, 8, 10 என்று அந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து, மனநல ஆலோசகர்கள் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் பேசிக்கொண்டிருந்த வேளையில், அடுத்த அடியாக வந்தது, அனிதாவின் தற்கொலை! ‘நீட்’ தேர்வுக்கு எதிராகப் போராடிய அனிதாவின் தற்கொலைக்கு ‘மனநல மருத்துவர்களிடம் ஏன் கருத்துக் கேட்கிறீர்கள்’ என்று சிலர் கூறி வரும் வேளையில், தற்கொலைகளின் பின்னணி குறித்து நாம் புரிந்துகொள்வது அவசியமாகிறது.

தற்கொலைதான் தீர்வா?

கடந்த சில ஆண்டுகளில், தற்கொலைகள் ஒரு பெரிய பொதுப் பிரச்சினையாகியுள்ளது. இதனால் இந்தியாவில் ஏராளமான மரணங்கள், சமூகப் பொருளாதார இழப்புகள் ஏற்படுகின்றன. இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் தற்கொலைகள், தற்கொலை முயற்சிகள், தற்கொலை எண்ணங்கள் போன்றவை பொதுவாகக் காணப்படுகின்றன.
நாகரிகம் எவ்வளவுதான் வளர்ந்தாலும் மனிதன் இன்னும் மாறியதாகத் தெரியவில்லை. அன்று முதல் இன்றுவரை பல்வேறு பிரச்சினைகளுக்கு, தற்கொலைதான் தீர்வாக கருதப்படுகிறது. தற்கொலை செய்துகொள்வோர் வீதம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள்கூட தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு நிலைமை மோசமாகியிருக்கிறது.

ஒருவர் தற்கொலை மூலம் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார் என்றால், அதைப் பார்த்துப் பலரும் தற்கொலைக்கு முயற்சி செய்கிறார்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் அதைப்பற்றி யோசிக்கிறார்கள் என்கின்றன ஆய்வுகள்.

சமூகத்துக்கும் பொறுப்பு உண்டு

பிரச்சினைகளை எதிர்த்துப் போராடும் குணம் குறைந்து, தற்கொலைதான் தீர்வு என்ற முடிவுக்கு சிலர் வருகின்றனர். சமூகத்தில் பெரும்பான்மையானோர் இத்தகைய சிந்தனைகளை, நடவடிக்கைகளைப் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை. ஆகவே, இந்த எண்ணங்கள் பெரும்பாலும் கவனிக்கப்படாமலே போய்விடுகின்றன.
ஒருவருக்குத் தற்கொலை எண்ணம் இருப்பதை யாரும் கண்டறிவதில்லை. எனவே அவர் தற்கொலைக்கு முயற்சி செய்யக்கூடும். தற்கொலைகளைத் தடுக்கும் பொறுப்பு மருத்துவர்களுக்கும் அரசாங்கத்துக்கும் மட்டுமல்ல, சமூகத்துக்கும் உண்டு. இந்தப் பொறுப்பை நாம் நிறைவேற்றவேண்டுமென்றால், நம்மைச் சுற்றித் தற்கொலை எண்ணத்துடன் இருப்பவர்களை அடையாளம் காண்பதற்கு நாம் கற்றுக்கொள்ளவேண்டும்.
பள்ளி மாணவர்கள் முதல் அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள்வரை தற்கொலை செய்துகொள்ளும் நபர்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சமீபத்தில் பிஹார் மாநிலத்தின் புக்சார் மாவட்ட நீதிபதி முகேஷ் பாண்டே மன அழுத்தம் காரணமாகத் தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி, முக்கிய பதவி வகிப்பவருக்கும் தற்கொலை எண்ணம் வரக்கூடும் என்பதைப் புரிய வைத்தது.
நவீன காலப் பள்ளிச் சிறுவர்கள், இளைஞர்களுக்கு மைதானம் சென்று வியர்வை சிந்தி விளையாடுதல் என்பது அரிதான விஷயமாக இருந்துவருகிறது. பெரும்பாலும் வீட்டில் ஆண்ட்ராய்ட் மொபைல் மூலம் ஆன்லைனில் பல்வேறு விதமான விளையாட்டுகளை விளையாடிப் பொழுதைக் கழிக்கின்றனர். சில சமயம் உயிரையே கொடுக்கின்றனர். சமீபத்திய உதாரணம் ‘புளூவேல்’.
சில நாட்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிப்பரப்பப்படும் நிகழ்ச்சியில் பிரபலமான நடிகை ஒருவர், காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்யும் காட்சி ஒளிப்பரப்பப்பட்டது. குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை பார்க்கப்பட்ட அந்த நிகழ்ச்சி, தற்கொலை என்ற விதையை அனைவருக்கும் குறிப்பாகக் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் மனதில் தூவுவதாக இருந்தது. மனநலம் குறித்த சரியான புரிதலுடன் ஊடகங்கள் செய்திகளையும் நிகழ்ச்சிகளையும் வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிற தருணத்தில், டி.ஆர்.பி.க்காக சில ஊடகங்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்கின்றன.

எப்படித் தடுப்பது?

தற்கொலை எண்ணங்களைக் கையாள்வதற்கு மன தைரியம் தேவை. என்னதான் நேர்மறையான தேர்வுகள் இருந்தாலும்கூட வலிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத தருணம் ஒருவருக்கு வரக்கூடும். ஒருவர் தன் மனக் கட்டுப்பாட்டின் வரம்பை மீறும்போது தற்கொலை எண்ணங்கள் தோன்றும். அதை அவர் கையாள வேண்டும்.
தனிமையில் இருப்பது தற்கொலை எண்ணத்தை தூண்டுவதாக அமையும். எனவே குடும்பத்தாருடன் நேரத்தைக் கழிக்க வேண்டும். நண்பர்களுடன் வியர்வை சிந்தும் அளவுக்கு நன்றாக ஓடியாடி விளையாடவும் வேண்டும். மேலும் எதிர்மறையான எண்ணங்களைப் போக்க சந்தோஷமான எண்ணங்களை மனதில் அதிகமாக அசைபோட வேண்டும். இதனை மேம்படுத்த நேர்மறையான மக்களுடன் பழகி எதிர்மறையாகச் சிந்திப்பதைத் தவிர்க்க வேண்டும்.
கட்டுரையாளர், ஆசிரியர் மற்றும் தற்கொலைக்கு எதிராக விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொண்டு வருபவர்
தொடர்புக்கு: anandt.tanand@gmail.com

புதன், 13 செப்டம்பர், 2017

சமுசிகாபுரம் ஊர்ப்புற நூலகத்தின் இன்றைய நிலை...




கடந்த 1997-98 - ம் ஆண்டு அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் சமுசிகாபுரம் கிராமத்தில் ஒரு ஊர்ப்புறநூலகம்  கட்டப்பட்டது. அதுவரை சத்திரப்பட்டியில் மட்டுமே நூலகம் இருந்து வந்த நிலையில் சமுசிகாபுரம் கிராமத்தி;ல் நூலகம்  அமைக்கப்பட்டது அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.

இப்பகுதி மாணவர்கள், பெண்கள் அனைவரும் வந்து செல்லும் வகையில் அருகிலேயே அமைந்துள்ள இந்நூலகத்தினால் பயனடைபவர்களில் நானும் ஒருவன் என்ற வகையில் இந்நூலகத்தின் பயனாளியாக அதன் தற்போதைய நிலை கண்டு வருந்துபவர்களில் நானும் ஒருவன்.

இந்நூலகத்தின் மேற்கூரை தற்போது சிதிலமடைந்து, வெளிப்புறத்தில் தாழ்வாரம் விழுந்து விடும் வகையில் உள்ளது.

இதுகுறித்து இந்நூலகத்தின் நூலகர், மேலதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டபோதும் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யாததால்இந்நூலகத்தைப் புதுப்பிக்க தேவையான நிதிக்காக நம் சமுதாய தொழிலதிபர்களை நாடி உதவி கோருவதைத் தவிர வேறு வழி  தெரியவில்லை.

நம் சமுதாயத்தைச் சேர்ந்த நல்ல நிலையில் உள்ள இளைஞர்கள், தொழிலதிபர்கள், வெளியூரில் அல்லது வெளிநாட்டில் பணிபுரியும் நல் உள்ளங்கள்  மனது வைத்தால் இந்த நூலகத்தை புதுப்பித்து, அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் செயல்பட வைக்க முடியும்.

நீங்கள் செய்யும்  ஒரு சிறு உதவி சமுசிகாபுரத்தில் உள்ள நமது மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்களுக்காக பெறிதும் பயனளிக்கும் நூலகத்தைப் புதுப்பிப்பது மட்டுமல்லாமல்எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்ற முன்னோரின் வாக்குப்படி இறைவன் ஸ்தானத்தில் மதிக்கப்படுவீர்கள்.

கட்டுரையாளர்:  க. சங்கிலிக்காளை
தொடர்புக்கு: 96001 06471  gsraj1979@gmail.com










































ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

மணல் கொசு கருப்புக் காய்ச்சல்! - கவனம் தேவை

vikatan.com



சிவராம கண்ணன், பொது மருத்துவர்
லேரியா, டெங்கு, ஜிகா வரிசையில் கொசுவால் பரவும் அபாயகரமான காய்ச்சல்தான் கறுப்புக் காய்ச்சல் (Black Fever). ஆண்டுதோறும் பல லட்சம் மக்கள் இந்த நோயால் இறந்துபோகிறார்கள். இதற்கு ‘டம் டம் காய்ச்சல்’ (Dum Dum Fever), ‘காலா அஜார்’ (Kala Azar), ‘விசெரல் லீஷ்மனியாசிஸ்’ (Visceral Leishmaniasis) எனப் பல பெயர்கள் உள்ளன. இது குறித்த விழிப்பு உணர்வு மக்களிடம் குறைவாக உள்ளது.


சூடான், பிரேசில், பங்களாதேஷ், ஆப்பிரிக்கா, நேபாளம், இந்தியா உள்ளிட்ட 6 நாடுகளில் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் பீகார், உத்திரப்பிரதேசம், உத்திரகான்ட், மேற்கு வங்கம் ஆகிய  நான்கு மாநிலங்களில் இந்த நோயின் தாக்கம் உள்ளது என்று உலகச் சுகாதார நிறுவனத்தின் ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன.


ஏன் இந்தப் பெயர்? 


நோய்த் தாக்குதலால் சருமத்தின் நிறம் கறுப்பாக மாறிவிடும். அதனால், இதற்கு ‘கறுப்புக் காய்ச்சல்’ என்று பெயர். இது ‘பிலிபோட மோமஸ் அர்ஜென்டிப்ஸ்’ எனப்படும் மணல் கொசு கடிப்பதால் உண்டாகும். 



இந்த மணல் கொசு மனிதனைக் கடித்த பின்னர், தோலில் சிறிய தடிப்பு ஏற்படும். அது சருமத்தில் உணர்ச்சியற்ற தன்மையை உண்டாக்கும். ‘கியூட்டேனியல் லீஷ்மனியாசிஸ்’ (Cutaneous Leishmaniasis) என்னும் சருமப் பாதிப்பை ஏற்படுத்தும். மேலும், ‘லீஷ்மனியாடோனவனி’ (Leishmaniadonovani) எனும் நுண்ணுயிர்க் கிருமியை உடலில் செலுத்தும். இது நோய் பரவுதலை அதிகரிக்கும். 



எல்லா மணல் கொசுக்களும் கறுப்புக் காய்ச்சலைப் பரப்புவதில்லை. பிலிபோடமஸ் அர்ஜென்டிப்ஸ் என்னும் மணல் கொசு மட்டுமே கறுப்புக் காய்ச்சலைப் பரப்பும். இந்த மணல் கொசுக்கள் கறுப்புக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வரைக் கடித்துவிட்டு, ஆரோக்கியமானவரைக் கடிக்கும்போது இந்த நோய் பரவும். இருண்ட, ஈரப்பதம் நிறைந்த, பராமரிப்பற்ற இடங்களே இவற்றின் வாழிடங்கள். சிதிலம் அடைந்த சுவர்கள், கால்நடைக் கொட்டகைகள், உளுத்துப்போன மரங்கள் மற்றும் மரக்கட்டைகள், மரப்பொந்துகள் போன்ற இடங்களிலும் இவை இருக்கும். தவிர, விலங்குகளின் வலைகள் மற்றும் ஈரமான மணலிலும் வாழும்.




பரிசோதனை



இரண்டு வாரங்களுக்குமேல் ஒருவருக்குக் காய்ச்சல் இருந்தால், கறுப்புக் காய்ச்சலுக்கான பரிசோதனைகள் செய்ய வேண்டும். ஆர்.கே.39, எலீசா போன்ற ரத்தப் பரிசோதனைகள் மற்றும் எலும்பு மஜ்ஜைப் பரிசோதனைகளின்மூலம் கறுப்புக் காய்ச்சல் கண்டுபிடிக்கப்படும். 



சிகிச்சை



சோடியம் ஸ்டிபோகுளுகோனேட் (Sodium Stibogluconate), ஆம்போடெரிசின் பி (Amphotericin B) ஆகிய மருந்துகளின் மூலம் காய்ச்சலைக் குணப்படுத்தலாம். சுமார் ஒரு மாதம் வரை சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும். 



யாருக்கு வரும்?



நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் மற்றும் ஹெச்.ஐ.வி உள்ளவர்களுக்குக் கறுப்புக் காய்ச்சல் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

- ச.மோகனப்பிரியா

கறுப்புக் காய்ச்சலின் அறிகுறிகள்

* கடுமையான காய்ச்சல்

* பசியின்மை

* ஈறுகளில் ரத்தக் கசிவு

* ரத்தச்சோகை

* உடல் சோர்வு

* இரவில் வியர்த்துக்கொட்டுதல்

* முடி உதிர்தல்

*    தோல் கறுத்துப்போதல்

*    உடல்  ஒல்லியாதல் (எலும்பு அமைப்பு வெளியே தெரியும் அளவுக்கு)

*    உடல் எடை குறைவு

*    மண்ணீரல் வீங்குதல் (வயிறு பானை போல் வீங்கியிருத்தல்)

உலகம் முழுவதும் இயங்கும் ‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’ வலைப்பின்னல்! - கொடூரங்களில் இருந்து நம் குழந்தைகளை காப்பது எப்படி?

தி இந்து



உலகம் முழுவதும் எவ்வளவோ பிரச்சினைகள் இருந்தாலும் உலகம் உயிர்ப்புடன் இருக்கின்றது என்றால் காரணம் குழந்தைகளே. ஒரு குழந்தையின் சிரிப்பில் நமது அத்தனை கவலைகளையும் மறந்துவிடுகிறோம். ஆனால், பாலியல் இச்சைக்காக டெல்லியில் ஏழு வயது குழந்தை கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டிருக்கிறது என்றால் அதை இயல்பான ஒருவனால் செய்திருக்க முடியுமா என்கிற கேள்வி எழுகிறது. என்னவிதமான பிரச்சினை இது, உளவியல் சிக்கலா, பாலியல் வறட்சியா, இதன் பின்னணி என்ன என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
டெல்லி என்றில்லை, கடந்த 2011-ம் ஆண்டு மட்டும் இந்தியாவில் 7,112 குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளனர். 33,098 குழந்தைகள் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். கடந்த ஆண்டில் சென்னை போரூரில் ஏழு வயது சிறுமி ஹாசினி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். இரண்டே வயதான ரோஹிணி சிதைக்கப்பட்டு குப்பைத் தொட்டியில் வீசப்பட்டாள். பிஞ்சுக் குழந்தையைக் கொல்லத் துணியும் அளவுக்கு செல்லும் பாலியல் வக்கிரம் கொண்ட மனநிலை குறித்து மனநல மருத்துவரான மோகன வெங்கடாஜலபதியிடம் பேசினோம்.
“இது மிகவும் வக்கிரமான உளவியல் சிக்கல். இந்தக் கோளாறை Pedophilia என்கிறது உளவியல் உலகம். 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் மீது ஏற்படும் முறையற்ற காம இச்சைதான் இந்த உளவியல் சிக்கல். இதற்கு பெண்களும் விதிவிலக்கு அல்ல. பொதுவாக இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. இவர்கள் சிறுவர்களாக இருந்தபோது பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம்.
அடிப்படையிலேயே தன்னம்பிக்கை குறைவானவர்களாகவும் மனச்சோர்வு, மனப்பதட்டம் கொண்டவர்கள் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட அதிக வாய்ப்பு உண்டு. யாருடனும் கலகலப்பாக பேசாமல் தனிமையில் இருப்பவர்களுக்கும் இதுபோன்ற பாதிப்புகள் நேரிடலாம்.

குற்ற உணர்வு இல்லாத..

சமூக விரோத மனப்பாங்கு மற்றும் ஆளுமை கோளாறு கொண்டவர்களும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட தயாராக இருப்பார்கள். இந்த வகையினர் குற்றத்தில் ஈடுபட்ட பின்னரும் எந்தவித குற்ற உணர்ச்சியும் இல்லாமல் அடுத்தக் குற்றத்துக்கு தயாராகிவிடுவார்கள். மேற்கண்ட வகையினருக்கு பொதுவான அம்சமாக தனது பாலியல் தேவைக்கு ஏற்ற பெண் கிடைக்கவில்லை என்பது காரணமாக இருக்கும்.
அதேசமயம், தனக்கு ஏற்ற பெண் துணை இருந்தும் திருப்தி அடையாமல் குழந்தைகளை தங்களது வக்கிரத்துக்கு பயன்படுத்திக்கொள்பவர்களும் இருக்கிறார்கள். இவர்களைப்போல் இல்லாமல் குறிப்பிட்ட சூழ்நிலையில் உணர்ச்சிவயப்பட்டு இதுபோன்ற குற்றங்களை செய்பவர்களும் இருக்கிறார்கள்.
இவர்கள் குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்வது உட்பட பல்வேறு வகைகளில் பயன்படுத்தி தங்கள் இச்சைகளை தீர்த்துக்கொள்வார்கள். குழந்தைகளை நிர்வாணப்படுத்தி தங்களுடன் தூங்கச் செய்வது, இரு குழந்தைகளுக்கு இடையே பாலியல் சீண்டலை உள்ளாக்கி அதை ரசிப்பது, குழந்தைகளுக்கு ரத்தக் காயம் வரவழைக்கும் வகையில் பாலியல் சித்ரவதை செய்வது உட்பட வார்த்தைகளால் விவரிக்க முடியாத வக்கிரச் செயல்களை இவர்கள் செய்கிறார்கள்.

வலைப்பின்னல்

சாதாரண விவகாரம் அல்ல இது. உலகம் முழுக்க தொழில் ரீதியான நீண்ட வலைப்பின்னல் கொண்டது. ‘சைல்டு செக்ஸ் டூரிஸம்’ என்கிற பெயரில் இயங்கும் இவர்கள், மூன்றாம் நாடுகளில் இருக்கும் அனாதை இல்லங்கள், சிறுவர் காப்பகங்கள், குடிசைப் பகுதிகளைக் குறி வைத்து செல்கிறார்கள். குழந்தைகளை தத்து எடுப்பது, ஆதரவு தருவது, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட உதவிகளை செய்வது ஆகிய காரணங்களைச் சொல்லி குழந்தைகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வருகிறார்கள். பதின்ம பருவம் வரை தொடர்ந்து பாலியல் வக்கிரங்களுக்கு உள்ளாக்கப்படும் குழந்தை, பதின்ம வயதில் தானும் இதே போன்ற காரியங்களில் ஈடுபட ஆரம்பிக்கும். இதில் பதின்ம வயது அடைந்த பெண் குழந்தைகள் பாலியல் தொழிலுக்கு விற்கப்பட்டு விடுகிறார் கள்.
சமீபகாலமாக உலகம் முழுவதும் இதுபோன்ற உளவியல் சிக்கல் கொண்ட குற்றவாளிகள் பெருகி வருகிறார்கள். அதனால்தான் ‘இண்டர்போல்’ போலீஸ் இந்தக் குற்றங்களை தடுக்கவும், குற்றவாளிகளைப் பிடிக்கவும் தனிப்பிரிவை தொடங்கி இருக்கிறது.
இந்தியா உட்பட உலகம் முழுவதும் இதுபோன்ற குற்றவாளிகள் நிறைய பேர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும் இவர்களை குணப்படுத்திவிட முடியுமா, சமூகத்தில் இயல்பான மனிதர்களாக இவர்கள் மாற முடியுமா என்று கேட்டால் அது மிகவும் சிக்கலான கேள்விதான்...” என்கிறார்.

என்னதான் தீர்வு?

நம் குழந்தைகளை நாம் பாதுகாப்பாக வைத்துக்கொள்வது மட்டுமே தீர்வு. குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகளை உறவினர்கள், அக்கம்பக்கத்தினருடன் பழகவிடும்போது பெற்றோரின் கண்காணிப்பு மிக முக்கியம். வீடுகளில் நம் குழந்தைகளை கொஞ்சுகிறோம் என்கிற பெயரில் பிறப்புறுப்பை தொட்டு கொஞ்சுவது, அங்கு முத்தமிட்டு கொஞ்சுவது போன்ற விஷயங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு தங்கள் உடலின் மறைவுப் பகுதிகளில் தொடுதல் குறித்த விழிப்புணர்வை பெற்றோர்தான் உருவாக்க வேண்டும்.
கடைசி வரை பெற்றோருக்குத் தெரியாமல் பாதிக்கப்பட்டு வரும் குழந்தைகளும் இருக்கிறார்கள். கணவன், மனைவி இருவரும் பணிக்குச் செல்லுதல், தனிக்குடித்தனம், குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட பல்வேறு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்புதல் உள்ளிட்ட காரணங்களால் பெற்றோர் - குழந்தைகள் இடையே உரையாடல் குறைந்து வருகிறது. எனவே, குழந்தைகளிடம் நிறைய நேரம் பேச வேண்டும். நண்பர்களைப் போல இயல்பாக பேச வேண்டும். அப்போதுதான் தங்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை குழந்தை தயங்காமல் பெற்றோரிடம் சொல்லும். நம் குழந்தையை பாதுகாப்பதைவிட பெரிய வேலை நமக்கு வேறொன்றும் இல்லை!

ஆரோக்கியமான சூழலில் ரியல் எஸ்டேட்

தி இந்து


மு
தலீட்டு நோக்கத்துக்காக அல்லாமல், சொந்தப் பயன்பாட்டுக்காக வீடு அல்லது மனை வாங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு வருபவர்களுக்கு, தற்போதைய சூழல் மிகவும் சாதகமாக இருக்கிறது. வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் வெகுவாகக் குறைக்கப்பட்டது, மத்திய அரசின் வீட்டு வசதித் திட்டங்கள் அமலுக்கு வந்திருப்பது, ரியல் எஸ்டேட் துறையில் நீடிக்கும் தேக்கநிலை எனப் பல்வேறு அம்சங்களை இதற்குக் காரணங்களாகக் குறிப்பிடலாம்.
ரியல் எஸ்டேட் தொடர்பாக அண்மையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில் குறிப்பிடப்பட்ட விஷயங்களின்படி, 12 முதல் 18 மாதங்களுக்கு, தனி வீடு அல்லது அடுக்குமாடி குடியிருப்புகளின் விலையில் பெரிய மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை எனச் சொல்லப்படுகிறது. ரியல் எஸ்டேட் துறையில் 2 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் சுணக்கநிலை, ஜி.எஸ்.டி. மற்றும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறைச் சட்டம் ஆகியவற்றால், ரியல் எஸ்டேட் துறை ஒரு ஆரோக்கியமான சூழலுக்குத் திரும்ப, பல மாதங்கள் பிடிக்கும் என்பதே இதற்குக் காரணம்.
கடந்த 3 ஆண்டுகளைப் பொறுத்தவரை சென்னையில் ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி 2.2% என்ற அளவிலேயே இருக்கிறது. அதாவது 2014-ம் ஆண்டில் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில், சராசரி சதுரடி விலை ரூ.4,407 ஆக இருந்த சென்னைப் பெருநகரத்தில் உள்ள ஒரு சொத்தின் மதிப்பு நடப்பாண்டில் அதே காலகட்டத்தில் ரூ.4,700 ஆக உயர்ந்திருக்கும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அந்த வகையில் பார்க்கும்போது, கடந்த 3 ஆண்டுகளில் வீடு அல்லது மனையில் செய்யப்பட்ட முதலீடு, வங்கி அல்லது பங்குச் சந்தையைவிட மிகக் குறைந்த லாபத்தையே முதலீட்டாளர்களுக்குக் கொடுத்துள்ளது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதே நேரத்தில் முதலீட்டு நோக்கத்துக்காக அல்லாமல், சொந்தப் பயன்பாட்டுக்காக வீடு வாங்கியவர்கள் ரியஸ் எஸ்டேட் துறையின் வளர்ச்சி பற்றிப் பெரிய அளவில் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால், வீட்டு வாடகைப் பணம் மிச்சம் செய்யப்படுவதுடன், 15 அல்லது 20 ஆண்டுகளில் வங்கிக் கடனை நிறைவுசெய்யும்போது, அந்த வீட்டின் மதிப்பு வெகுவாக உயர்ந்திருக்கும். முதலீட்டு நோக்கத்துக்காக அல்லாமல் சொந்த பயன்பாட்டுக்காக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு, இந்தக் காலகட்டம் பொன்னான வாய்ப்பாகவே கருதப்படுகிறது.
வங்கிகள் தரப்பில் அளிக்கப்படும் வீட்டுக் கடனுக்கான வட்டி 8 சதவீதம் என்ற அளவுக்கு அருகிலேயே இருப்பதால், மாதாந்திரத் தவணைத் தொகையும் குறைவாகக் கட்டினாலே போதும் என்ற சூழல் நிலவுகிறது. இதுமட்டுமின்றி, சென்னை போன்ற பெருநகரங்களில் ஏற்கெனவே கட்டி முடிக்கப்பட்டு விற்பனைக்குத் தயாராக இருக்கும் வீடுகள் அல்லது அடுக்குமாடிக் குடியிருப்புகளின் எண்ணிக்கை 28 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது. எனவே, பில்டர்கள் தரப்பில் மனையின் விலையை அடுத்த ஓரிரு ஆண்டுகளில் உயர்த்துவதற்குப் பெரிய அளவில் முகாந்திரம் இல்லை. மேலும், வங்கிக் கடனுதவியுடன் கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்துவிட்டு, விற்பனைக்காகக் காத்திருக்கும் சில பில்டர்கள், பெரிய அளவில் லாபத்தை எதிர்பார்க்காமல், கிடைத்த லாபத்துக்கு வீட்டை விற்கத் தயாராக இருப்பார்கள் என்பதால், அனைத்து வசதிகளுடனும் கூடிய ஒரு மனையை நடுத்தரக் குடும்பத்தினர் எளிதாகக் கண்டறியும் வாய்ப்பும் அதிகரித்துள்ளது.
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறையின் காரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் இன்னும் ஒரு ஆண்டு வரை விலை இறக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்றே முன்னணிக் கட்டுமான நிறுவனங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன. கடந்த 2 ஆண்டுகளாக ரியல் எஸ்டேட் துறையில் ஏற்பட்ட சுணக்கம் காரணமாகப் பொருளாதாரரீதியிலான நெருக்கடியில் சிக்கியிருக்கும் சிறிய மற்றும் நடுத்தர பில்டர்கள், ஜி.எஸ்.டி. வரியால் கிடைக்கும் லாபத்தை, வீட்டை வாங்குபவர்களுக்கு விட்டுத் தர முன்வர மாட்டார்கள் என்பதே இதற்கு காரணம். எனவே, குறைந்தபட்சம் 18 மாதங்கள் முடிந்த பிறகே, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பால் கிடைக்கும் பணப் பயன்கள் வீடு வாங்கும் மக்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த வகையில் இன்னும் சில மாதங்களுக்கு வீட்டின் விலை குறையவும் வாய்ப்பில்லை.
எனவே, 12 முதல் 18 மாதங்கள் என்ற காலக்கெடுவில் பார்க்கும்போது மனை விலையில் மிகப் பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இருக்காது என்பதும், வீட்டுக் கடனுக்கான வட்டி 8 சதவீதத்தைவிடக் குறைய வாய்ப்பில்லை என்பதும், சொந்தப் பயன்பாட்டுக்காக வீடு வாங்க நினைப்பவர்களுக்கு மிகப் பெரிய வாய்ப்பை உருவாகியிருக்கிறது. நீண்ட நாட்களாக வீடு வாங்க வேண்டும் என்ற திட்டமிடலுடம் இருக்கும் நடுத்தர குடும்பத்தினர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, அடுத்த ஓராண்டுக்குள் வீடு அல்லது மனை வாங்குவது சிறந்த முடிவாகவே இருக்கும்.