Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

புதன், 29 ஜூன், 2016

சாலியர் சமுதாயத்திற்கென பிரத்யேக திருமண தகவல் இணையதளம். http://www.saliyarmatrimonials.com

நமது சமுதாயத்தில் இதுவரை தரகர்கள் அல்லது உறவினர்கள் மூலம் மட்டுமே வரன் தேடும் முறை இருந்து வருகிறது. பொதுவான திருமணத் தகவல் மையங்களிலோ, திருமணத் தகவல் இணைய தளங்களிலோ பதிவு செய்வது மிகவும் அரிதாகவே இருந்து வந்தது.  இணையதளங்களில் கொடுக்கப்படும் தகவல்கள் பாதுகாப்பு பற்றிய ஒரு அச்ச உணர்வே இதற்கு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன்.  மேலும் பெண்ணின் பெற்றோர்கள் தன் மகளின் படங்களை சம்பந்தமில்லாத நபர்கள் பார்ப்பதை தவிர்ப்பதும் மற்றோர் காரணம். இது ஒவ்வொரு பெண்ணின் பெற்றோருக்கும் இருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வு என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இருக்க முடியாது.

தற்போது நம் சமுதாயத்தினர் பரவலாக வெளிநாடுகளிலும், வெளியூர்களிலும் தொழில் நிமித்தமாக குடிபெயர்ந்த காரணத்தினால் உறவினர்கள் மூலமாகவோ, தரகர்கள் மூலமாகவோ வரன் தேடுவது என்பது சரியான பலனைத் தராத காரணத்தினாலும், முன்னேறிய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக உலகமே ஓர் குடைக்குள் வந்துவிட்ட காரணத்தினாலும் நம் சமுதாய மக்களுக்கு வரன் தேடுவதற்கென்றே ஓர் பிரத்தியேக இணையதளம் உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயமாக மாறிவிட்டது.  ஆனால் இதர இணையதளங்களை வணிக நோக்கில் நடத்துபவர்கள் அனைத்து மதத்தினருக்கும், அனைத்து சமூகத்தினருக்கும் பொதுவான தளமாக நடத்தி வணிக நோக்கில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், வணிக நோக்கின்றி நமது சமுதாய மக்கள் பயன்பெறும் வகையில் திரு. எஸ். நாராயணன் அவர்களின் சீரிய முயற்சியால் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 

 

திரு. எஸ். நாராயணன் அவர்கள் எஸ்.இராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். தம் இளம் வயதிலேயே சென்னை நகருக்கு தொழில் நிமித்தமாக குடிபெயர்ந்து எஸ்.என். பில்டர்ஸ் என்ற கட்டுமான நிறுவனத்தையும், சென்னை பிளஸ் மற்றும் அண்ணாநகர் டெய்லி என்ற பத்திரிக்கைகளையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.  நமது சாலியர் குரலின் ஓர் அங்கமாகவும் விளங்குகிறார்.



இந்த தளத்தில் பதிவு செய்ய விரும்புபவர்கள் தாமாகவே பதிவு செய்து தகவல்களை பதிவேற்றம் செய்துகொள்ளலாம். பதிவுகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே இணையதளத்தில் வெளியிடப்படும். தவறான பதிவுகள் நீக்கப்படும்.

30 நாட்கள் வரை தகவல்களை வெளியிட இலவசமாகவும், அதன் பின்னர் ஓராண்டு வரை ரூ. 1000 எனவும் பதிவுக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதர வணிக நோக்கிலான திருமணத் தகவல் இணைய தளங்கள் ரூ. 3500 முதல் 15000 வரை கட்டணம் வசூலிக்கக் கூடிய நிலையில் நம் சமுதாய மக்களின் வரன் தேடுதல் நோக்கத்திற்காக லாபநோக்கின்றி, இணையதள பராமரிப்பு மற்றும் நடைமுறைச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக மட்டுமே தேவையான குறைந்த கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
திரு. எஸ். நாராயணன் அவர்களின் சீரிய முயற்சியை பாராட்ட கடமைப் பட்டிருக்கிறோம்.


கட்டுரையாளர்: க. சங்கிலிக்காளை
தொடர்புக்கு: gsraj1979@gmail.com
 

அறிந்து கொள்ளுங்கள் - ரயில்வே இடஒதுக்கீடு மற்றும் கட்டண சலுகைகள் – ஒரு பார்வை.

சில நாட்களுக்கு முன் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது ரயில்வே டிக்கெட் முன்பதிவு பற்றி பேச்சு வந்தது. 

டிக்கெட் கிடைப்பதில் உள்ள சிரமங்களைப்பற்றி பேசிக்கொண்டிருந்த போது ரயில்வேயில் இடஒதுக்கீடு உள்ளதைப்பற்றி சொன்னேன். உடனே நண்பர் இதை ஏன் ஒரு இணைய பதிவாக வெளியிடக் கூடாது?  அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்குமே என்று சொன்னதன் விளைவே இந்த பதிவு.

நான் அறிந்தவரை பலவிதமான இடஒதுக்கீடு முறை ரயில்வே முன்பதிவில் பின்பற்றப்படுகிறது.

1.    GN - General Quota பொது ஒதுக்கீடு: இந்த முறையில் அனைத்து தரப்பினருக்கும் முன்பதிவு டிக்கெட் வழங்கப்படுகிறது. 800 படுக்கைகள் வசதியுள்ள வண்டியில் சுமார் 400 படுக்கைகள்  இந்த முறையில் முன்பதிவு செய்யப்படும். இந்த முறையி;ல் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களை எப்போது வேண்டுமானாலும் ரத்து செய்து உரிய கட்டணங்கள் கழிக்கப்பட்டு மீதி தொகை திரும்ப வழங்கப்படும்.

2.    CK -Tatkal Quota தட்கல் ஒதுக்கீடு: அவசரமாகப் பயணம் செய்ய வேண்டியவர்கள் குறுகிய காலத்தில் முன்பதிவு செய்து செல்வதற்கான ஒதுக்கீடு. 800 இருக்கைகள் உள்ள வண்டியில் சுமார் 200 இருக்கைகள் இதற்கென ஒதுக்கப்படுகிறது. இம்முறையில் பயணம் செய்வதற்கு ஒரு நாள் முன்னதாக முன்பதிவு துவங்கி வண்டி கிளம்பும் அன்று அட்டவணை தயார் செய்யும் முன்னர் வரை கூடுதல் கட்டணத்துடன் முன்பதிவு செய்யலாம். இம்முறையில் பதிவு செய்யப்படும் டிக்கெட்டை ரத்து செய்தால் பணத்தை திரும்பப் பெறமுடியாது. 

3.    LD – Ladies Quota : பெண்கள் பயணம் செய்யும்பொழுது இந்த பிரிவின்கீழ் முன்பதிவு டிக்கெட் வழங்கப்படுகிறது ஒவ்வொரு வண்டியிலும் சுமார் 10 படுக்கைகள் வரை இந்த பிரிவில் முன்பதிவு செய்யப்படுகிறது. இம்முறையில் பெண்கள் தனியாகவோ அல்லது 12 வயதுக்குட்பட்ட ஆண் குழந்தை அல்லது எந்த வயதுடைய பெண்ணுடன் பயணம் செய்யும்போது பொருந்தும்.

4.    HO – Head Quarters/High Official Quota: தலைநகர் புதுதில்லியில் மத்திய அரசின் உயரதிகாரிகள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கான ஒதுக்கீடு முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்களுக்கு வழங்கப்படுகிறது. 800 படுக்கைகள் கொண்ட வண்டியில் சுமார் 60 படுக்கைகள் இம்முறையில் வழங்கப்படுகிறது.

5.   DF – Defence Quota இராணுவ வீரர்களுக்கான ஓதுக்கீடு: ராணுவ வீரர்களுக்கு இந்த பிரிவின்கீழ் முன்பதிவு டிக்கெட் வழங்கப்படுகிறது

6.   PH –Parliament House Quota  நாடாளுமன்ற அவைக்கான ஓதுக்கீடு: நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் பயணம் செய்வதற்கு இந்த பிரிவின்கீழ் முன்பதிவு டிக்கெட் வழங்கப்படுகிறது

7.   FT –Foreign Tourist Quota வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வரும் பயணிகளுக்கு இந்த பிரிவின்கீழ் முன்பதிவு டிக்கெட் வழங்கப்படுகிறது  இம்முறையில் பயணம் செய்வதற்கு பாஸ்போர்ட் மற்றும் முறையான விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்க்கு மட்டுமே டிக்கெட் வழங்கப்படும். ஒவ்வொரு வண்டியிலும் 10 படுக்கைகள் வரை இந்தப்பிரிவில் வழங்கப்படும்.


8.   DP – Duty Pass Quota: ரயில்வே துறையில் பணியாற்றும் அல்லது பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கான ஒதுக்கீடு.

9.    PT – Premium Tatkal Quota: : கடந்த 2014 ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்ட முன்பதிவு முறை. சில முக்கிய ரயில் வண்டிகளில் மட்டும் கிடைக்கும் இந்த ஒதுக்கீடு பல்வேறு உயரும் கட்டண விகிதங்களில் தட்கல் முறையில் முன்பதிவு செய்யலாம். தட்கல் முறையில் பதிவு செய்வதற்கான இதர விதிகள் இம்முறைக்கும் பொருந்தும்.


10.    SS – Female (above 45 years)/Senior Citizen / Travelling alone.   45 வயதுக்கு மேல் வயதுடைய அல்லது மூத்த குடிமக்களான 58 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் தனியாக பயணம் செய்யும்பொழுது இந்த பிரிவின்கீழ் முன்பதிவு டிக்கெட் வழங்கப்படுகிறது

11.   HP – Physically Handicapped Quota: மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீடு. ஊரிய சான்றிதழை சமர்ப்பித்து இந்த ஒதுக்கீட்டில் சலுகைக் கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம். துணை இல்லாமல் பயணம் செய்ய முடியாத நிலையில் உள்ளவர் துணைக்கு வரும் நபருக்கும் இந்த ஒதுக்கீட்டில் சலுகைக் கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம்.

12.    RE – Railway Employee Staff on duty for the train: ரயில் வண்டியில் பணிபுரியும் டிக்கெட் பரிசோதகர் மற்றும் இதர பணியாளர்களுக்கென ஒதுக்கப்படும் இருக்கைகள் அல்லது படுக்கை வசதிகள் இந்த ஒதுக்கீட்டில் அடங்கும்.

13.    OS – Outstation Quota :  ரயில் வசதி இல்லாத கிராமங்களில் வசிப்பவர்கள் அருகில் உள்ள ரயில் நிலையங்களில் இருந்து பயணம் செய்வதற்கான இட ஒதுக்கீடு.

14.    PQ – Pooled  Quota: இம்முறையில் ஒரு ரயில் வண்டி புறப்படும் இடத்திலிருந்து சேரும் இடத்திற்கு செல்லாமல் இடையில் உள்ள ஊருக்கோ அல்லது இடையில் உள்ள ஊரிலிருந்து சேரும் இடத்திற்கோ செல்வதற்கான ஒதுக்கீடு. இம்முறையில் ஒரு காத்திருப்பு பட்டியல் பராமரிக்கப்படும்.  உதாரணமாக பொதிகை விரைவு வண்டியில் சென்னையில் இருந்து திண்டுக்கல் செல்லும் ஒரு நபர் முன்பதிவு செய்தால் அந்த படுக்கை திண்டுக்கல் ரயில்நிலையத்திலிருந்து செங்கோட்டை அல்லது வேறு இடங்களுக்கு செல்ல முன்பதிவு செய்பவர்களுக்கு ஒதுக்கப்படும்.  இடவசதி இருப்பதைப் பொறுத்து உறுதியான பயணச்சீட்டு வழங்கப்படும்.  அவ்வாறு இடவசதி இல்லாத நிலையில் காத்திருப்பு பட்டியல் பராமரிக்கப்படும்.

15.   RC (RAC) – Reservation against cancellation : இது முன்பதிவு செய்பவர்க்கு இருக்கை வசதியை உறுதி செய்து வழங்கப்படும் டிக்கெட்.  படுக்கைவசதியை முன்பதிவு செய்த நபர்கள் எவரேனும் பயணம் செய்யாத போது டிக்கெட் பரிசோதகரால் வரிசைப்படி இந்த டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு படுக்கை வசதி ஒதுக்கப்படும். பக்கவாட்டு கீழ் படுக்கை இரு இருக்கைகளாக இம்முறையில் ஒதுக்கீடு செய்யப்படும். பின்னர் காலியிடங்களைப் பொறுத்து படுக்கை வசதி ஒதுக்கப்படும்.

16.    Road Side Quota: : இம்முறையில் முக்கிய ரயில் நிலையங்களிலிருந்து விலகி இருக்கும் மற்ற ரயில் நிலையங்களிலிருந்து முக்கிய ரயில் நிலையங்களுக்கு வந்து பயணம் செய்ய வசதியாக ஒதுக்கப்படும் இடஒதுக்கீடு.  எடுத்துக்காட்டாக கன்னியாகுமரியிலிருந்து புதுடில்லி செல்லும் ரயில் வண்டிக்கு இராஜபாளையத்தில் முன்பதிவு செய்யலாம். அவ்வாறு முன்பதிவு செய்யும்போது செங்கோட்டையிலிருந்து வரும் ரயில் வண்டியில் விருதுநகர் வரை பயணம் செய்து அங்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் வண்டிக்கு மாறிக்கொள்ளலாம். ஒரே முன்பதிவில் இரு வண்டிகளில் பயணம் செய்வதற்கான வசதி செய்து தரப்படும். 

17.   Yuva Quota: இந்த ஒதுக்கீடு வேலையில்லாத 15 முதல் 45 வயது உள்ளவர்களுக்கு சலுகைக் கட்டணத்தில் வழங்கப்படும் இட ஒதுக்கீடு. தகுந்த சான்றிதழ்கள் சமர்ப்பித்து இந்த முறையில் ஒதுக்கீடு பெறலாம்.

18.    Lower Birth Quota:  இந்த ஒதுக்கீட்டில் 45 வயதுக்கு மேற்பட்ட பெண்களோ அல்லது மூத்த குடிமக்கள் (இருபாலரும் - 60 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் அல்லது 58 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்) தனியாக பயணம் செய்யும்போது முன்பதிவு செய்யலாம்.


19.    Remote Location Quota: அதிக மக்கள் பயணம் செய்யாத தொலைவிடங்களுக்கு  பயணிப்பதற்கான இடஒதுக்கீடு.

20.    Cancer Quota :  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மேலும் இதயநோய் பாதிக்கப்பட்டவர்கள் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக செல்லும்போது, சிறுநீரக அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள், காச நோய் சிகிச்சைக்கு செல்பவர்கள் தன்னுடன் பயணிப்பவர் ஒருவருக்கும் இந்த ஒதுக்கீட்டில் சலுகைக் கட்டணத்தில் முன்பதிவு செய்து பயணிக்கலாம். 

கீழ்க்கண்ட பிரிவினருக்கு கட்டண சலுகைகள் வழங்கப்படுகின்றது.

1.    உடல் ஊனமுற்றவர்கள் (துணையின்றி பயணிக்க முடியாத) – (துணை ஒருவருடன்).

2.    மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் - (துணை ஒருவருடன்).

3.    கண்பார்வையற்றவர்கள் (துணை ஒருவருடன்)

4.    காது கேளாத அல்லது வாய் பேசமுடியாதவர்கள் (துணை ஒருவருடன்)

5.    புற்று நோயாளிகள் - (துணை ஒருவருடன்)

6.    தலசீமியா நோயாளிகள் சிகிச்சைக்கான மட்டும். (துணை ஒருவருடன்)

7.    இதய அறுவை சிகிச்சைக்கு செல்பவர்கள் (துணை ஒருவருடன்)

8.    சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு செல்பவர்கள் (துணை ஒருவருடன்)

9.    ஹீமோபீலியா சிகிச்சைக்கு செல்பவர்கள் (துணை ஒருவருடன்)

10.    காசநோய் சிகிச்சைக்கு செல்பவர்கள் (துணை ஒருவருடன்)

11.    தொற்றுநோயல்லாத வகை தொழுநோய் சிகிச்சைக்கு செல்பவர்கள் (துணை ஒருவருடன்)

12.    எயிட்ஸ் நோயாளிகள் சிகிச்சைக்கு செல்லும்போது.

13.    சில வகை ரத்தசோகை நோயாளிகள் சிகிச்சைக்கு செல்லும்போது.

14.    மூத்த குடிமக்கள் - ஆண்கள் 60 வயதுக்கு மேல். பெண்கள் 58 வயதுக்கு மேல்.

15.    காவல்துறையில் சிறந்த சேவைக்காக ஜனாதிபதி விருது பெற்றவர்கள்.

16.    வீரதீர செயலுக்கான இந்திய காவல்துறை விருது பெற்றவர்கள்

17.    பாரதப் பிரதமரின் ஸ்ரம் விருது பெற்றவர்கள்

18.    ஜனாதிபதி அவர்களிடமிருந்து தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள்.

19.    வீரதீரச் செயலுக்கான தேசிய விருது பெற்ற குழந்தைகள் மற்றும் உடன் பயணிக்கும்  பெற்றோர்.

20.    போரில் உயிர் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் மனைவி.

21.    தீவிரவாத தாக்குதலில் பலியான காவல்துறை, ராணுவ, பாதுகாப்புத்துறை வீரர்களின் மனைவி.

22.    கார்கில் போரில் உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களின் மனைவி.

23.    சொந்த ஊருக்கு அல்லது கல்விச் சுற்றுலா செல்லும் மாணவர்கள்.

24.    12ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு இலவச சீஸன் டிக்கெட்.

25.    கல்லூரிப் படிப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு இலவச சீஸன் டிக்கெட்.

26.    ஊர்ப்புற பகுதிகளில் படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு வருடம் ஒரு முறை சுற்றுலா செல்ல.

27.    தேசிய அளவில் நடத்தப்படும் மருத்துவ, பொறியியல் நுழைவுத் தேர்வுக்கு செல்லும் மாணவிகளுக்கு.

28.    மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வெழுதச் செல்பவர்களுக்கு

29.    35 வயதுக்குட்பட்ட ஆராய்ச்சி மாணவர்களுக்கு அவர்களது ஆராய்ச்சி நிமித்தமாக செல்வதற்கு மட்டும்.

30.    கப்பல் பணியாளர்கள் மற்றும் பயிற்சி பெறுபவர்கள்.

31.    வேலையில்லாத இளைஞர்கள் - மத்திய, மாநில அரசு துறைகளுக்கான நேர்காணல் (அல்லது) பொதுத்துறை, மாநகராட்சி, நகராட்சி, அரசு நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றிற்கு நேர்காணலுக்காக செல்லும் போது.

32.    பாரத சாரண, சாரணியர் இயக்க உறுப்பினர்கள் முகாம்களுக்கு பயணம் செய்வதற்கு.

33.    விவசாயம் அல்லது தொழில்துறைக் கண்காட்சிக்கு செல்லும் விவசாயிகள், தொழிலாளர்கள்.

34.    பால் உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள் தேசிய பயிற்சி மையங்களுக்கு பயணம் செய்வதற்கு.

35.    நடிகர்கள், இதர சினிமாத் துறை ஊழியர்கள் படப்பிடிப்புக்கு செல்லும்போது.

36.    தேசிய அல்லது மாநில அளவிலான போட்டிகளுக்கு விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ள.

37.    இந்திய மலையேறுபவர்கள் அமைப்பு நடத்தும் மலையேறும் முகாமுக்கு செல்லும் வீரர்கள்.

38.    செய்தி மற்றும் ஊடகத்துறையினர் பணி நிமித்தமாக செல்வதற்கு (உடன் ஒருவருடன்)

39.    மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள்.

40.    குறிப்பிட்ட அகில இந்திய அமைப்புகளின் வருடாந்திர கூட்டம் அல்லது மாநாட்டுக்கு செல்லும் நபர்கள்.

41.    துவக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் கல்விச்சுற்றுலா செல்லும்போது.

42.    மாத வருமானம் 1500 ரூபாய்க்கு கீழ் உள்ள முறைசாரா தொழிலாளர்கள் 150 கி.மீ. வரை பயணம் செய்ய மாதாந்திர சீஸன் டிக்கெட் ரூ. 25 சலுகைக் கட்டணத்தில்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ரயில்வே ஒதுக்கீடு மற்றும் கட்டண சலுகைகள் மாறுதலுக்குட்பட்டது. மேற்கண்ட சலுகைகள், இட ஒதுக்கீடுகள் பெற விரும்புபவர்கள் அதற்கான ரயில்வே அலுவலகங்களில் சரிபார்த்துக் கொள்ளவும்.  பிழைகள் ஏதும் இருப்பின் சாலியர் குரல் மற்றும் இக்கட்டுரையாளர் பொறுப்பல்ல.

கட்டுரையாளர் : க. சங்கிலிக்காளை 
தொடர்புக்கு: gsraj1979@gmail.com

செவ்வாய், 28 ஜூன், 2016

அதிக மதிப்பெண் பெற்ற மாணவி: ச. ஷிவானி – 494/500 -வாழ்த்துக்கள்.

வழக்கறிஞர் திரு. எஸ். சண்முகப் பெருமாள், எஸ். இராமச்சந்திராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த 25 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணிபுரிந்து வருகிறார். இவர் சென்னை மாநகராட்சியின் வழக்கறிஞராகவும், விசாரணை அதிகாரியாகவும் பணிபுரிந்தவர். 2015-16 ஆண்டில் லயன்ஸ் கிளப் ஆப் சென்னை பிரைட் விஷன் தலைவராக இருந்த காலத்தில் 100 கண்தானங்களை லயன்ஸ் கிளப் மூலம் நடத்தியுள்ளார். தற்போது லயன்ஸ் கிளப் மாவட்டத் தலைவர் (மேரேஜ் கவுன்சிலிங்) பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி திருமதி பார்வதி டிப்ளமோ இன் எலக்ட்ரானிக்ஸ் அன்டு கம்யூனிகேசன் படித்தவர். 

சென்னை, போரூர், லட்சுமி நகரில் வசித்து வரும் திரு. எஸ். சண்முகப் பெருமாள் திருமதி எஸ். பார்வதி தம்பதியினரின் மகள் சிவானி கடந்த 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 494/500 மதிப்பெண்கள் பெற்று பள்ளியிலேயே முதல் இடம் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார். கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் 100/100 மற்றும் தமிழ், ஆங்கிலம், சமூகவியல் பாடங்களில் 98/100 மதிப்பெண்கள் பெற்று மூன்று பாடங்களில் மாநிலத்தில் முழு மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்று சாதனை புரிந்துள்ளார். 

494 மதிப்பெண்களுடன் பள்ளியிலேயே முதலிடம் பெற்ற ச. ஷிவானியை மேலும் பல சாதனைகள் புரிந்து வெற்றி பெற சாலியர் குரல் வாழ்த்துகிறது.

தங்களது வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்புவோர் திரு. எஸ். சண்முகப் பெருமாள் அவர்களை 9962585675 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மேலும் இதுபோல் அதிக மதிப்பெண் பெற்று சாதனை புரிந்த மாணவ மாணவிகள் பற்றிய தகவல்களை அளித்தால் அதனை நம் இணையதளத்தில் வெளியிட்டு பாராட்ட தயாராக இருக்கிறோம்.

இணையதள தொடர்புக்கு : க. சங்கிலிக்காளை gsraj1979@gmail.com

மாத இதழ் தொடர்புக்கு : திரு. துரைராஜ்  muralifebruary2006@yahoo.co.in

சனி, 25 ஜூன், 2016

அன்பாசிரியர்: உமா மகேஸ்வரி- அசத்தும் ஆசிரியர்களின் 'தோழர்'!

Return to frontpage



அரசுப் பள்ளியில் ஆசிரியராக தன் பணியைத் தொடங்கிய உமா மகேஸ்வரி, மாவட்ட கல்வி மற்றும் பயிற்சிக்கான ஒருங்கிணைப்பாளர், சமச்சீர் கல்வி சமூக அறிவியல் புத்தக ஆசிரியர், மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழு ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர். தன்னுடைய நீண்ட பயணம் குறித்து நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

என்னுடைய எல்லா மாணவர்களும் நன்றாகப் படிக்க வேண்டும் என்று ஆரம்பத்தில் எதிர்பார்ப்பு இருந்தது. பின்னாட்களில் தான் அது தவறு என்று உணர்ந்தேன். ஆரம்ப காலத்தில் எல்லா ஆசிரியர்களையும் போல மதிப்பெண்களில்தான் அதிக கவனம் செலுத்தினேன்.மெல்ல மெல்ல தான் மதிப்பெண்களில் மட்டும் வெற்றியில்லை என்பதைப் புரிந்துகொண்டேன்.

பெருந்துறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் மட்டும் என்பதால், வகுப்பறைகள் எங்களுக்குப் பள்ளியைத் தாண்டி விரிந்திருந்தது. கற்பித்தல் அணுகுமுறைகள் ஓரளவிற்கு பரிச்சயமானதால் வேறு எந்த வழிகளில் அவர்களை அழைத்துச் செல்லலாம் என யோசித்தேன். அவர்களின் தேவை வகுப்பறை மட்டுமல்ல என்று புரிந்தது. அங்கே அவர்கள் களைத்துப்போகிறார்கள்; அவர்கள் வயதின் துள்ளலுக்கும், அறிவின் பலத்திற்கும் வேறு வேறு அணுகுமுறைகள் தேவைப்பட்டன.
 
ஊக்குவிப்பே போதும்

அப்போது பள்ளியில் எந்தப் போட்டி அறிவிக்கப்பட்டாலும் மாணவர்கள் கலந்து கொள்வார்கள். அதிகமாக அப்போதெல்லாம் வருவது மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி தான். எதுவும் செய்யாமல், அவர்களை ஊக்குவித்தாலே போதும். பரிசுகளுடன் தான் மாணவர்கள் திரும்புவார்கள். மாணவர்களிடம் ஆற்றல் பொதிந்து, புதைந்து உள்ளதை நாம் கண்டுபிடிக்க அவர்களுக்கு உதவினாலே போதும்.

வகுப்பில் பானை செய்பவர்கள், கரும்பு வெட்டுபவர்களின் குழந்தைகள் படித்தார்கள். குழு செயல்பாடுகள், வகுப்புகளை கவனித்துக்கொள்வது, ஓவியம், பாட்டு, கட்டுரை மாதிரியான கலைகளில் சிறந்து விளங்குவது ஆகியவற்றுக்கும் மதிப்பெண்கள் கொடுத்தேன். ஒரு முறை செயல்பாட்டு வழிக் கல்விக்காக பாடத்தில் இருக்கும் பொருட்களை செய்து எடுத்துவரச் சொல்லியிருந்தேன். சிறந்த செயல்பாட்டுக்கு மதிப்பெண் என்று கூறியிருந்ததால் அவர்களுக்குள் போட்டி வந்துவிட்டது. சமூக அறிவியல் பாடத்தில் இருந்த கடலில் பாறை அமைப்பை தத்ரூபமாகச் செய்து கொண்டு வந்து என்னை வியப்பில் ஆழ்த்தினர்.
 
புத்தகமில்லா வகுப்புகள்

நான் எப்போதுமே புத்தகங்களைக் கொண்டு வகுப்பெடுப்பதில்லை. மாணவர்களையும் புத்தகங்களைப் பார்த்து வகுப்புகளைக் கவனிக்க ஊக்கப்படுத்துவதில்லை. மொழிப்பாடங்களுக்கு மட்டும் புத்தகங்களைப் பயன்படுத்துவேன். என் மாணவர்கள் அவர்களாகவே ஆர்வத்துடன் கற்பிப்பார்கள். 

 
நூலகப்பொறுப்பு

ஒருமுறை சுமார் 15 ஆயிரம் புத்தகங்களைக் கொண்ட நூலகத்தை நிர்வகிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மாணவர்களின் உதவியோடு லெட்ஜரைத் தயாரித்தோம். எல்லாப் புத்தகங்களையும் வரிசைவாரியாகப் பிரித்து அடுக்கினோம். அதன் தொடர்ச்சியாக மாணவர்கள் புத்தகக் கையேடுகளை தயாரிக்கப் பழகினர். வருடம் முழுக்க செயல்பாடுகளில் ஈடுபட்டனர். வருடக் கடைசியில் அதை கண்காட்சியாக்கினோம். அத்தோடு கலந்துரையாடல், வினாடி வினா, கதை சொல்லல், சமூகப் பிரச்சினைகள் சார்ந்த கணக்கெடுப்பு ஆகியவற்றிலும் மாணவர்கள் தீவிரமாக இயங்கினர். மாணவர்களின் திறனைக் கண்டு பள்ளி ஆசிரியர்களே வியந்தனர்.

அவற்றைத் தனியாக ஒரு கையேட்டில் பதிவு செய்து அவற்றுக்கும் தனியாக மதிப்பெண்கள் அளித்தேன். இந்த செயல்பாடுகளை சமூக அறிவியல் பாடத்துக்கு பின்பற்றினேன். அறிவியல் பாடத்துக்கு துளிர் வினாடி வினா, அறிவியல் கண்காட்சி உள்ளிட்டவை ஆர்வத்தை ஏற்படுத்தின. செடி வளர்ப்பது குறித்த பாடத்துக்காக நிஜத்திலேயே செடிகளை வளர்க்க ஆரம்பித்தோம். அப்போது ஆரம்பித்து இன்று வரை சுமார் 300 மரங்கள் வளர்க்கப்பட்டிருக்கின்றன.

கணிதப்பாடம் பல மாணவர்களுக்கு கசப்பாகவே இருந்தது. அதிலும் இயற்கணிதத்தில் முழுக்கள் பற்றிப் படிக்கவே அச்சப்பட்டார்கள். பிளஸ்களும், மைனஸ்களும் அவர்களைப் புரட்டி எடுத்தன. அவர்களுக்கு மரச்சட்டத்தைக் கொண்டு எளிமையாகக் கற்பிக்கலாம் என்று தோன்றியது. மரச்சட்டத்தை எடுத்து நடுவில் ஆணி அடித்து, இரு மெல்லிய கம்பிகளால் அதை இரண்டு பகுதிகளாகப் பிரித்தோம். ஒரு முனையில் கீ செயின்களையும், மறுமுனையில் மணிகளையும் கட்டினோம். ஒரு பக்கத்தை நேர்மறை எண்களாகவும் மறு பக்கத்தை எதிர்மறையாகவும் வைத்துக் கொண்டோம். இந்த முறையை ஒரு கருத்தரங்கில் பரிந்துரைக்க அதை பல்வேறு பள்ளிகளில் பயன்படுத்துகிறார்கள்.
 
தோழியான ஆசிரியர்

கருத்தரங்குகளுக்குப் போனால், விடுமுறை எடுத்தால் என் மாணவர்களிடம் சொல்லிவிட்டுத்தான் செல்வேன். அந்த சமயங்களில் அவர்களே சுய கட்டுப்பாட்டுடன் படிப்பார்கள். மாற்று ஆசிரியர்கள் வந்தால் மதிப்பு கொடுப்பார்கள்.

மே மாதத்தில் மாவட்டக் கல்வி நிறுவனத்திலிருந்து பயிற்சிக்கான அழைப்பு வந்தது. விடுமுறையால் யாரும் செல்லாததால் நான் போனேன். வகுப்பறைக் கல்வி செயல்பாடுகள், கற்பித்தலில் ஆசிரியர்களின் பங்கு, மேம்பட்ட கற்றல் முறை ஆகியவை குறித்த ஆய்வுக்கட்டுரைகளை சமர்ப்பித்தேன். அந்த அனுபவங்களின் மூலம் சமச்சீர் கல்விக்கு புத்தகம் எழுதும் பணிக்குத் தேர்வானேன். சமச்சீர் கல்வி பாடத்திட்டத்துக்கான ஐந்தாம் வகுப்பு சமூக அறிவியல் இரண்டாம் பருவத்துக்கான ஆசிரியர் ஆனேன்.
 
ஆசிரியர் சித்ராவுடன் இணைந்து, மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் சார்பில் (SCERT) புத்தக ஆக்கத்தில் ஈடுபட்டோம். அப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அதில் ஆர்வம் கொண்டிருந்த ஆசிரியர்களை ஒருங்கிணைத்து தன்னம்பிக்கை வகுப்புகளை நடத்தினோம்.
 
அடையாளம் பெற்ற ஆசிரியர்கள்

கற்றலில் புதுமை படைக்கும் ஆசிரியர்களின் பணிகளை ஆவணப்படுத்தும் பொருட்டு காணொலிகள் எடுக்க திட்டமிடப்பட்டது. இதில் 100 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் ஒருங்கிணைப்பாளராக பணிபுரிந்திருக்கிறார் ஆசிரியர் உமா மகேஸ்வரி.

'டிசைன் ஃபார் சேஞ்ச்' அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவில் புத்தாக்க செயல்திட்டங்களுக்கான போட்டிகள் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில், குழந்தைகளோடு ஆசிரியர்களும் கலந்துகொள்வர். இதில் முதல் 100 பேருக்கு பரிசு வழங்கப்படுகிறது. போட்டியில் கலந்துகொள்ள எஸ்.சி.ஈ.ஆர்.டி. சார்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டன. கடந்த வருடம் அகமதாபாத்தில் நடந்த போட்டியில் 33 இடங்களை தமிழக ஆசிரியர்களே பிடித்தனர். 

இந்திய கலாச்சார கல்வி மையம் சார்பில் மாணவர்களுக்கு பொம்மலாட்டம் உள்ளிட்ட கலைகள் மூலம் கற்பிக்கும் முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதில் ஆர்வம் காட்டிய ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சிகள் வழங்கப்பட்டன. தமிழ் இணையப் பல்கலைக்கழகம் மூலம் தமிழார்வம் கொண்டவர்கள் அடையாளப் படுத்தப்பட்டனர். அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான வாட்ஸப் குழுக்கள், ஹைக் குறுஞ்செய்தி இயக்கம் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன. இவை அனைத்திலும் ஒருங்கிணைப்பாளராக ஆசிரியர் உமா மகேஸ்வரி இருக்கிறார். 

மாணவர்களை ஒருங்கிணைத்து, அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்கின்றனர் நல்ல ஆசிரியர்கள். ஆசிரியர்களை செவ்வனே ஒருங்கிணைத்து, அவர்களின் திறமைகளை அடையாளப்படுத்தி, உலகம் அறியச் செய்கிறார் அன்பாசிரியர் உமா மகேஸ்வரி.
 
ஆசிரியர் உமா மகேஸ்வரியின் தொடர்பு எண்: 9976986098
 
க.சே. ரமணி பிரபா தேவி - தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

ஆணவம்

நம்மிடம் ஏதுமில்லை’ என்று நினைப்பது ஞானம்.
`நம்மைத் தவிர ஏதுமில்லை’ என நினைப்பது ஆணவம்.
ஞானம், பணிந்து பணிந்து வெற்றி மேல் வெற்றியாகப் பெறுகிறது.
ஆணவம், நிமிர்ந்து நின்று அடி வாங்குகிறது.

***

நமது புராண இதிகாசங்களில் ஆணவத்தால் அழிந்தவர்களைச் சித்தரிக்காதது மிகவும் குறைவு.

ராம காதையில் ராவணன், பாரதத்தில் துரியோதனன், இரணியன், கண்ணனால் கொல்லப்பட்ட நரகாசுரன், கந்தனால் கொல்லப்பட்ட சூரபத்மன் மற்றும் பத்மாசுரன் இவர்களெல்லாம் ஆணவத்தின் அடையாளச் சின்னங்கள்.

இவர்களுடைய முடிவு கொடுமையானதைக் காட்டி, இந்து மதம் ஆணவக்காரர்களை எச்சரிக்கிறது.

“நான்” என்னும் எண்ணம் ஒருவனுக்குத் தோன்றுகின்றது என்றால், அவன் தோல்விகளைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றான் என்று பொருள்.

அறிவு குறைவானவர்களுக்கே ஆணவம் வருகிறது.

நிறை குடங்களுக்கு அது வருவதில்லை.

வெற்றி மயக்கம் ஏற ஏற அறிவு தடுமாறி, முட்டாள்தனமான தைரியம் தோன்றி, `எல்லாம் நாமே’ என்ற எண்ணம் பிறந்து, தடுமாறிக் காரியம் செய்யத் தொடங்கியதும் ஒவ்வொரு தோல்வியாகத் தொடர்ந்து வந்து, ஆணவக்காரனைக் கூனிக் குறுகச் செய்கின்றன.

எனக்குத் தெரிந்த ஒரு நண்பர், நீண்ட கால நண்பர்.

ஆரம்பத்தில் மிகுந்த சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்.

அந்தச் சிரமத்தோடு கடன் வாங்கி ஒரு படம் எடுத்தார்.

கதை, வசனம், டைரக்ஷன் எல்லாம் அவரே.

படம், `ஓகோ’ என்று ஓடிற்று.

வெற்றி மயக்கத்தில் அவர் நிலை கொள்ளவில்லை!

உடனே ஒரே நேரத்தில், நாலைந்து படங்கள் எடுக்கப் போவதாக விளம்பரம் செய்தார்.

விநியோகஸ்தர்கள் அவரிடம் வந்து, “புதிய படங்களை நாங்கள் வாங்கிக் கொள்கிறோம்; யார் யார் நடிக்கிறார்கள்!” என்று கேட்டார்கள்.அதற்கு அவர் கோபமாக, “எல்லாம் நானே. என் பெயருக்குத் தான் படமே தவிர நடிப்பவர்களுக்காக அல்ல; இஷ்டமிருந்தால் கையெழுத்துப் போடுங்கள்” என்று மிரட்டினார்.

நான் ஒருநாள் அவரைச் சந்தித்தபோது, “என் ஒவ்வொரு படத்தையும் `பாக்ஸ் ஆபீஸ்’ பண்ணிக் காட்டுகிறேன்” என்று என்னிடமே சவால் விட்டார்.

“என்னுடைய படம் என்றால், ஓலையிலே பிரிண்ட் பண்ணினாலும் ஓடும்” என்று சொன்னார்.

பெரிய பெரிய கோவில்களுக்கெல்லாம் வேண்டிக் கொண்டும், அவரது அடுத்த படம் படுதோல்வியடைந்தது. மூன்றாவது படமும் படுதோல்வி. கடன்காரரானார்; கஷ்டப்படுகிறார்.

தன்னைத் தேடி வந்தவர்களிடம் ஆணவத்தோடு நடந்து கொண்ட அவர், தினமும் அவர்களைத் தேடி நடக்கிறார்.

இன்னொருவர்-

அவரும் கதை வசனம் எழுதி டைரக்ஷன் செய்கிறவர்.

அவர் விழித்துக் கொண்டிருக்கிற நேரத்தில், பெரும்பகுதி தன்னைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்.

நீங்கள் அவரோடு பேசப்போனால் நீங்களும் அவரைப்பற்றியே பேசினால்தான் அவர் உங்களோடு பேசுவார்.

வசனத்திலே வல்லினம், மெல்லினம் இருக்காது. ஆனால் குருட்டுத்தனமாக வந்த வெற்றி, அவரைக் குருடனாகவே ஆக்கிவிட்டது.

இதுவரை ஆணவக்காரர்கள் எப்படி அவதிப்பட்டார்களோ, அப்படிப்பட்ட அவதிக்கே அவரும் தயாராகிக் கொண்டிருக்கின்றார்.

மனிதன் உடம்பு மிகவும் பலவீனமானது.

அதில் ஒரு நரம்பைத் தட்டினால் பல நரம்புகளிலும் சங்கீதம் கேட்கிறது.

ஒரு வெற்றி கண்ணுக்குத் தெரிந்துவிட்டால், வரப்போவதெல்லாம் வெற்றியே என்ற திமிர் வருகிறது.

அந்தத் திமிர், யாரையும் அலட்சியப்படுத்தச் சொல்கிறது.

அடி பலமாக விழுந்ததும், திமிர் தானாக அடங்கிப் பணிவு எங்கிருந்தோ வந்துவிடுகிறது.

ஒரு சபைக்கு நான் போயிருந்தேன்.

பெரிய பெரிய அறிஞரெல்லாம் வந்திருந்தார்கள்.

அவர்களையெல்லாம் சாதாரணமாக நினைத்து, ஓர் அரை குறைப் படிப்பாளி, ஆணவத்தோடு பேசிக்கொண்டு இருந்தார்.

அவரது ஆணவத்தைப் பார்த்து அவர் பேசியதிலிருந்த தவறுகளைக்கூட யாரும் திருத்தவில்லை.

ஒவ்வொரு வரியையும் முடிக்கும்போது, “எப்படி நான் சொல்வது?” என்று கேட்டுக் கொண்டே இருந்தார்.

நான் ஆத்திரம் தாங்காமல், “ஒரு குழந்தை எப்படிச் சொல்லுமோ, அப்படியே சொல்கிறீர்கள்” என்றேன்.

“தெளிவில்லாதவன், விவேகமற்றவன்” என்பதை நயமாகவும், நளினமாகவும் சொன்னேன்
 சில கவியரங்கங்களிலும் இந்த அனுபவம் எனக்குக் கிடைத் திருக்கிறது.

இலக்கண மரபோ, இலக்கியச் சுவையோ தெரியாத சிலரும், அந்த அரங்கங்களில் தோன்றிவிடுவார்கள்.

என்னைத் தாக்கிவிட்டால் தாங்கள் பெரிய கவிஞர்கள் என்ற எண்ணத்தில், அசிங்கமாகத் தாக்குவார்கள்.

நான் அடக்கத்தோடும் பயத்தோடும் உட்கார்ந்திருப்பேன். திரும்ப அவர்களைத் தாக்கமாட்டேன்.

காரணம், கிருபானந்தவாரியார் சொன்ன ஒரு கதை.

கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக்கொண்டு சுத்தமாக வந்துகொண்டிருந்ததாம்.

ஓர் ஒடுக்கமான பாலத்தில் அது வரும்போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்ததாம்.

யானை ஓர் ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழிவிட்டதாம்.

அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், “பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்துவிட்டது!” என்று சொல்லிச் சிரித்ததாம்.

அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, “அப்படியா! நீ பயந்துவிட்டாயா?” என்று கேட்டதாம்.

அதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னதாம்.

“நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்துவிடக் கூடாதே என்று ஒதுங்கினேன். நான் ஏறி மிதித்தால் அது துவம்சமாகிவிடும்; ஆனால் என் கால் அல்லவா சேறாகிவிடும்.”

இந்தக் கதையின்படி சிறியவர்களின் ஆணவத்தைக் கண்டு, நான் அடக்கத்தோடு ஒதுங்கி விடுவது வழக்கம்.

முன்னேற விரும்புகிற எவனுக்கும் ஆணவம் பெருந்தடை.

ஆணவத்தின் மூலம் வெற்றியோ லாபமோ கிடைப்பதில்லை; அடிதான் பலமாக விழுகிறது.

தான் பணக்கார வீட்டுப்பெண் என்ற மமதையில் கணவனை அலட்சியப்படுத்தும் மனைவி;

தான் மந்திரியாகிவிட்ட போதையில் தொண்டர்களை அலட்சியப்படுத்தும் தலைவன்;

தான் சொன்ன ஏதோ ஒன்றை ஜனங்கள் ஏற்றுக் கொண்டார்கள் என்பதற்காகத் தினமும் எதையாவது சொல்லிக் கொண்டிருக்கும் தலைவர்கள்;

இவர்களெல்லாம், ஒரு கட்டத்தில், அவமானத்தாலும் வெட்கத்தாலும் கூனிக் குறுகிப் போய்விடுகின்றார்கள்.

`எதற்கும் தான் காரணமல்ல; ஏதோ ஒரு சக்திதான் காரணம்’ என்று எண்ணுகிறவன் ஆணவத்திற்கு அடிமையாவதில்லை.

`மற்றவர்களுக்கு என்ன தெரியும்’ என்று நினைப்பவன், சபைகளில் அவமானப்படாமல் தப்பியதில்லை.

ஆணவத்தால் அழிந்துபோன அரசியல் தலைவர்கள் உண்டு; சினிமா நடிகர்கள் உண்டு; பணக்காரர்கள் உண்டு.

அடக்கத்தின் மூலமாகவே தோல்விகளில் இருந்து மீண்டும் வெற்றிகரமாக முன்னேறியவர்கள் பல பேருண்டு.

மகாபாரதத்தில் நான் கேட்டிருந்த ஒரு சம்பவம்.

பரந்தாமன் மஞ்சத்தில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்தானாம்!

துரியோதனனும் அர்ச்சுனனும் அவனிடம் உதவி கேட்கப் போனார்களாம்.

துரியோதனன் பரந்தாமனின் தலைமாட்டருகே அமர்ந்தானாம்.

அர்ச்சுனன் காலடியில் அமர்ந்தானாம்!

காலடியில் அமர்ந்திருந்ததால், விழித்ததும் முதன் முதலில் அவனையே பார்த்த பரந்தாமன், “என் உதவி உனக்குத்தான்” என்று

கூறிவிட்டானாம்.ஆணவம் தலைமாட்டில் அமர்ந்தது; அடக்கம் காலடியில் அமர்ந்தது.

அடக்கத்துக்கு உதவி கிடைத்தது.

பாரதப் போரில் ஆணவம் தோற்றது.

ஆணவத்தோடு நிமிர்ந்து நிற்கும் தென்னை, புயற்காற்றில் விழுந்து விட்டால் மீண்டும் எழுந்து நிற்க முடிவதில்லை.

நாணலோ பணிந்து, வளைந்து, எந்தக் காற்றிலும் தப்பிவிடுகிறது.

`எல்லார்க்கும் நன்றாம் பணிதல்’ என்றான் வள்ளுவன்.

`அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்றவனும் அவனே!

நான்கு வரி ஒழுங்காக எழுதுவதற்கு முன்னால், `கம்பன் என்னிடம் பிச்சை எடுக்க வேண்டும்’ என்று பேசுகிறவர்கள் உண்டு.

ஆனால், கம்பனுக்கு அந்த ஆணவம் வந்ததில்லை.

அதனால்தான், காலங்களுக்கும் நிலைக்கக்கூடிய காவியத்தை அவனால் எழுத முடிந்தது.

இந்துக்கள் வற்புறுத்தும் பணிவும் அடக்கமும் வாழ்வில் வெற்றியை நோக்கிப் போவதற்கான படிக்கட்டுகளே!

இந்தப் பணிவை வங்காளத்து இந்துக்களிடம் அதிகம் காணலாம்.

தன்னைவிட வயதில் மூத்தவரைச் சந்தித்தால், எந்தப் பேரறிஞனும், அவர்கள் காலைத் தொட்டுக் கும்பிடுகிறான்.

வெறும் வயதுக்கே அந்த மரியாதையைத் தருகிறான்.

என்னுடைய விழா ஒன்றில், ஒரு பெருந்தலைவரின் காலைத் தொட்டு வணங்கியதுபற்றி, என்னைச் சிலர் கோபித்தார்கள்.

நான் சொன்னேன்:

“அந்தக் கால்கள் தேசத்துக்காகச் சத்தியாக் கிரகம் செய்யப் போன கால்கள்.

சிறைச்சாலையில் பல்லாண்டு உலாவிய கால்கள்.

என்னுடைய கால்களுக்கு அந்தப் பாக்கியம் இல்லாததால், கைகளாவது அந்தப் பாக்கியத்தைப் பெறட்டுமே!”

சில சபைகளில், என்னை உட்கார வைத்துக் கொண்டே என்னைப் புகழ்வார்கள். எனக்கு சர்வாங்கமும் ஒடுங்கிவிடும்.

`நாம் என்ன எழுதிவிட்டோம்? என்ன செய்துவிட்டோம்.

திருச்சிற்றம்பலம்
நன்றி ; தமிழ்களஞ்சியம் அ்ர்த்தமுள்ள இந்து மதம்

மூன்று வகை பக்தி

நீரளவே நீராம்பல் என்பது பழமொழி , இது பக்திக்கும் பொருந்தும். எல்லோரும் தான் இறைவனை வழிபடுகிறோம். எல்லோருக்கும் ஒரே மாதிரியகவா அருள்கிடைக்கிறது? ஒரே மாதிரியாகவா ஞானம் கிடைக்கிறது? இல்லை. ஏன்? அவரவர் வழிபாட்டில் இறைவன் மீது வைத்திருக்கும் திடமான நம்பிக்கை மற்றும் அன்பைப் பொறுத்தே இறைவனுக்கும் பக்தனுக்கும் ஏற்ப பிராத்தனையின் வீரியமும் நோக்கமும் வித்தியாசப்படுகிறது.

இறைவனை மனிதன் வழிபடும் வகை மூன்று நிலையில் இருக்கிறது, அவை உத்தம பக்தி, மத்யம பக்தி, மந்த பக்தி.

மந்த பக்தி என்பது இறைவனிடம் பூரண நம்பிக்கை இல்லாத ஒரு நிலை. அல்லது சந்தேகத்திற்கு உரிய நிலை, அதாவது ஏனோ தான என்ற நிலை என்பர், அதாவது ஏதோ கும்பிட்டு வைப்போம் என்ன நடக்கிறது பார்ப்போம் என்று ஒருவர் வழிபடும் வகைதான், அவர் இறைவன் மீது வைத்திருக்கும் மந்த பக்தி. அவர் இறைவர் மீது வைத்திருக்கும் பத்தி நம்பிக்கை அற்றது. இது இப்படியும் இருக்கலாம். தனக்கு எப்போது இறைவன் துணை தேவைப்படுகிறதோ, அப்போது வழிபாடு செய்தல், பிடித்த தோசங்கள், சங்கடங்கள் நீங்கவேண்டும் என்பதற்காகவோ ஏதாவது ஆசைப்பட்ட பொருள் கிடைக்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது திருமணத் தடை நீங்க, குழந்தை பாக்கியம் கிடைக்க, வேலை வாய்ப்பு கிடைக்க, உடல் ஆரோக்கியம் பெற, செல்லம் பெற, கடன் பிரச்சனைகள் தீர, என்பதற்காக வழிபாடு செய்வது "மந்த பக்தி " இது பக்தி யே இல்லை என்பர் இது சுயநலம் கொண்டது என்பர்.

" மத்யம பக்தி " என்பது மந்த பக்திக்கு சற்று முன்னேறிய நிலை, இந்நிலையில் பக்தன் தன் கஷ்டம் நீங்க வேண்டும் என்றோ பொருட்கள் வேண்டுமென்றோ வழிபடுவதில்லை, தான் முக்தி அடைய வேண்டும். ஞானம் பெற வேண்டும் பிறவி பயன் அடைய வேண்டும் தன்னுடைய பிராத்தனை எல்லாம் இறைவனை அடைவதை குறிக்கோளாக கொண்டிருக்கும். இந்த வகை பக்தியில் இவ்வுலக வாழ்க்கை பற்றி ஆசைகள் பிராத்தனையாக இருக்காது. எனவே இந்த நிலைக்கு "மத்யம பக்தி" என்று பெயர்,
 
 
மூன்றாவதாக உத்தம பக்தி என்பது உயர்ந்த பக்தி, எல்லோருக்கும் கிடைத்துவிடாத பக்தி, பெருமை பெற்றது. இந்த உத்தம பக்தி செய்பவர்கள் இறைநிலையை ஒத்த ஞானிகள், சித்தர்கள், ஆவர். இவர்கள் தான் வேறு, இறைவன் வேறு என்று இருப்பதில்லை , இறைவனும் பக்தனும் ஒன்றிவிட்ட பேரானந்த நிலை , உத்தம பக்தியின் நிலையில் இருக்கும் ஞானி வழிபாடு செய்கிறார் , ஆனால் எதையும் வேண்டுவது இல்லை. எனவே அவர் செய்கின்ற வழிபாடு இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அமைந்து விடுகிறது. இந்த வகை உத்தம பக்தி செலுத்தும் பக்தன் தானும் ஒருநிலையில் இறைவனாகி விடுகிறான். நாம் மந்தபக்தியில் இருந்து கொண்டே மத்யம பக்திக்கு முன்னேறுவோம், "அவன் அருளாளே அவன் தாள் வணங்கி" என்ற மாணிக்க வாசகர் கூற்றை ஏற்று உயர்வான உத்தம பக்தி க்கு நம்மை யும் இறைவன் அவன் அடிசேர அழைத்துக்கொள்வான்,
 
திருச்சிற்றம்பலம்
 
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
 
நன்றி: பிரட்டிலிப்

வெள்ளி, 24 ஜூன், 2016

புத்திரன் என்றால்… (ஆன்மிகம்)


இல்லறம் நடத்த வேண்டும். நற்பண்புகள் வாய்ந்த மனைவி கிடைக்க வேண்டும். சத்புத்திரன் உண்டாக வேண்டும் இதுதான் ஒருவனுக்கு கிடைக்க வேண்டிய பெரிய பாக்கியம். இப்படி கிடைத்தவன் புண்ணியவான்; கிடைக்காதவன் பாவம் செய்தவன்!



மனித வாழ்க்கை சில நற்காரியங்களுக்காக ஏற்பட்டது. அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட நியம, அனுஷ்டானங்களை சரிவர செய்ய வேண்டியது கடமை.

கணவனும், மனைவியும் குடும்பம் நடத்தி, சமைத்து, சாப்பிட்டு, ஏதோ மனம் போன படி குதூகலமாக வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தால் அது இல்லறம் அல்ல. குடும்ப வாழ்க்கையில் பல தேவ பூஜை, அதிதி பூஜை, பந்துக்களுக்கு உதவு வது, நல்ல காரியங்களுக்கு உதவி செய்வது என பல விஷயங்கள், “தர்மம்’ என்று சொல்லப்பட்டுள்ளது.

இதில், “சந்ததி விருத்தி’ என்பதும் முக்கியமானதாகச் சொல்லப்பட்டுள்ளது. கணவன்- மனைவி என்றால், அவர்களுக்குக் குழந்தை பிறக்க வேண்டும். அதிலும், ஒரு புத்திரன் உண்டாக வேண்டும். “புத்திர பாக்கியம்’ என்று உயர்வாகச் சொல்வர். அப்படிப் பிறக்கும் புத்திரனால் பித்ருக்கள், பித்ருலோகம் போவதாக நம்பிக்கை. வாழை யடி, வாழையாக வம்சம் விருத்தியாகிக் கொண்டே போனால் தான் பித்ருக்களுக்குப் புண்ணியலோகம் கிடைக்கும்.

அதனால், புத்திரனில்லாதவர்கள், புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும், பிரசித்தி பெற்ற ஆலயங்களுக்கு சென்று வருவதும், விரதங்கள் அனுஷ்டிப்பதும் வழக்கம். எவ்வளவு செல்வமிருந்தாலும், எவ்வளவு போகமிருந்தாலும் ஒரு மழ லைச் செல்வத்துக்காக ஏங்கு பவர்கள், கடவுள் அருளால் ஒரு குழந்தை பிறந்து விட்டால் மகிழ்ச்சிக் கடலில் மூழ்குவர். இதில், மற்றொரு விஷயமும் உள்ளது. அப்படி பிறக்கும் புத்திரன், “சத்புத்திர’னாக இருக்க வேண்டும். இது ரொம்பவும் முக்கியம். அதற்கும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். பஞ்ச பாண்டவர்களைப் போன்ற சத்புத்திரர்களும் உண்டு; துரியோதனாதியர்களைப் போன்ற துஷ்ட பிள்ளைகளும் உண்டு. சத்புத்திரர்களை அடைந்தால் அதுவே பெரிய பாக்கியம்.

புத்திரனை வேண்டி பரமேஸ்வரனைக் குறித்து தவம் செய்தார் மிருகண்டு முனிவர். அவர் முன் தோன்றி, “பதினாறு வயதுடைய சத்புத்திரன் வேண்டுமா, நூறு வயதுடைய துஷ்ட புத்திரன் வேண்டுமா?’ என்று கேட்டார் பரமேஸ்வரன். முனிவர், “நூறு வயதுடைய துஷ்ட புத்திரன் வேண்டாம்; பதினாறு வயதுள்ள சத்புத்திரனை அனுக்கிரகம் செய்யுங்கள்…’ என்று வேண்டினார். அதன்படி மார்க்கண்டேயன் என்ற சத்புத்திரன் உண்டானான்.
அவன், பதினாறு வயது வந்ததும், தன் பெற்றோர் கவலையுடன் இருப்பதைப் பார்த்து, கவலைக்கான காரணத்தை அறிந்து, பரமேஸ்வரனை ஆராதித்து, அவனருளால் காலனை வென்று, என்றும் பதினாறு வயதுடையவனாக விளங்கும்படி வரம் பெற்றான். பிறகு, மார்க்கண்டேய மகரிஷி என்று பிரகாசித்தான்.

புத்திரன் என்றால், சத்புத் திரனாக இருக்க வேண்டும். இப்படிப்பட்டவர்களால் தனக்கும், பெற்றோருக்கும், குடும்பத்துக்கும், கீர்த்தியும், கவுரவமும் ஏற்படும். குடிகாரப் பிள்ளையையும், திருட்டுப் பிள்ளையையும் பெற்று வாழ்நாள் முழுவதும் வேதனைப் படும் பெற்றோருக்கு அவனால் என்ன பயன்? தாயாரின் மண்டையை உடைக்கிறவனையும், தந்தை மீது வழக்கு போடுகிறவனையும் நாம் பார்க்கிறோமல்லவா!
இவர்களெல்லாம் பிள்ளையாகப் பிறந்த கடன்காரர்கள். கடனை வசூல் செய்து கொண்டு போக வந்தவர்கள் என்று தான் விவரித்துள்ளனர் பெரியோர்.
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு

வெளிச்சத்தில் தேடுங்கள் - கடவுளைக் காண ஞானம் வேண்டும்

கடவுள் எங்கும் இருக்கிறார், நம் கண்ணுக்கு தெரிவில்லை, அதற்காக கடவுள் இல்லை என்று சொல்ல முடியாது. நம் கண்ணுக்கு புலப்படவிலலை என்பதால் கடவுள் இல்லை என்ற முடிவுக்கு வரக்கூடாது.

இருட்டில் இருக்கும் பொருள் கண்ணுக்கு தெரிவதில்லை. வெளிச்சம் இருந்தால் பொருளை காணலாம். இருட்டு நம் அஞ்ஞானம் பொருள் என்பது கடவுள்.

வெளிச்சம் தான் ஞானம். அஞ்ஞானம் என்ற இருட்டை , ஞானம் என்ற வெளிச்சத்தால் அகற்றினால் கடவுள் என்ற பொருளைக் காணலாம். கடவுள் எங்கும் இருக்கிறார். எங்கு வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானலும் வருவார். அவரை புரிந்து கொள்ளவும். அறிந்து கொள்ளவும் ஞானம் வேண்டும் எதிலும் எங்கும் கடவுள் இருக்கிறார் என்ற உண்மையை புரிந்து விட்டால் கடவுளை எந்த ரூபத்திலும் காணலாம். இதனை விளக்குவதே இரணியன் - பிரகலாதன் வரலாறு. பிரகலாதன் உறுதியே கடவுளை வரவழைத்தது இரணியன் சம்காரம் ஆனது.


குருகுலத்தில் ஒரு சீடன் தன் குருவிடம் பகவானை தான் காணவேண்டும் அதற்கு ஒரு உபாயம் உண்டா? என்று வினவினான். அதற்கு குருநாதர் அந்த சீடனிடம் ஒரு தாரக மந்திரத்தை உபதேசித்து , நாளும் பொழுதும் இதை ஜெபிக்க கூறினார். இந்த தாரக மந்திரம் நிச்சயம் பகவானை காட்டினால் அதை தியானிக்க இப்போதே இதனை ஜெபிக்க ஆரம்பிக்கிறேன் என்று சொன்னான் சீடன். நிச்சியமாக பகவானை பார்க்க முடியுமா? என்று மேலும் கேட்க , அதற்கு குரு நிச்சயம் வருவார் ஆனால் இந்த தாரக மந்திரத்தை ஜெபிப்பவரிடம் பகவானை பகவான் தான் என்று கண்டு கொள்ளும் ஞானம் இருக்க வேண்டும். அதனைப் பொருத்தே கடவுள் உனக்கு புலப்படுவார் என்றார். சீடன் உடனே மந்திரத்தை துதிக்க தொடங்கினான். மாதங்கள் ஓடின, ஒரு தினத்தன்று, பகவான் இன்று வரவேண்டும் தன்னை ஆசிர்வதிக்க வேண்டும் என்று பகவானை வேண்டிக் கொண்டு தியானித்தான். பகவான் வருவார் என்ற பூர்ண நம்பிககையோடு காத்திருந்தான். வீட்டில் ஆச்சாரத்தோடு, தடபுடலாக விருந்து தயார் செய்தான். 

அவ்வேளையில் வீட்டு வாசலில் ஒரு முதியவர் குரல் கேட்டது. என்ன என்று முதியவரிடம் கேட்டான். அதற்கு வந்திருந்த முதியவர் " தம்பி பசிக்கிறது " என்றார் . அதற்கு சீடன் கொஞ்சம் பொறு, பகவான் என் வீட்டுக்கு வருகிறார். அவர் சாப்பிட்டதும் உனக்கு விருந்து தருகிறேன். என்றான். நேரம் ஓடியது. முதியவர் பொறுத்து பொறுத்து பார்த்தார் , தம்பி என்னால் பசி தாங்க முடியவில்லை, நான் வேறு வீட்டிற்கு சென்று உணவு வாங்கிக் கொள்கிறேன். என்று கூறி கிளம்பி விட்டார்.

இரவு வந்தது. பகவான் வரவே இல்லை , என்ற ஏக்கத்தில் குருநாதரிடம் சென்று நடந்த நிகழ்வுகளை கூறி புலம்பினான். அதற்கு குருநாதர் சிரித்துக் கொண்டே " பகவான்உன் வீட்டிற்கு வந்தார், சாப்பிட ஆசையாக இருந்தார். நீ தான் அதை புரிந்து கொள்ளாமல் அவரை கண்டு கொள்ளவே இல்லை. கால் கடுக்க நின்று பார்த்து விட்டு என் வீட்டிற்கு வந்தார் இங்கு சாப்பிட்டு விட்டு போய் விட்டார் என்றார். அப்படியா? என்று வியந்த சீடனிடம் பகவான் உன் வீட்டிக்கு ஒரு முதியவாராக வந்தார். நீ அவர்தான்பகவான் என்று நம்ப - உணர முடியவில்லை அதனால் நீ ஏமாந்து விட்டாய் என்றார் குரு.

பகவான் எப்படி வருவார் அதை அறிய ஞானம் வேண்டும் என்பதை அறிந்தான் சீடன்,

திருச்சிற்றம்பலம்

தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

மேலும் பல ஆன்மீகத்தகவலுக்கு

வியாழன், 23 ஜூன், 2016

பாவமன்னிப்பு என்ற லாஜிக்

யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வ மாகி ஆங்கே
மாதொரு பாக னார்தாம் வருவர்மற் றத்தெய் வங்கள்
வேதனைப் படும் இறக்கும் பிறக்கும்மேல் வினையுஞ் செய்யும்
ஆதலான் இவையி லாதான் அறிந்தருள் செய்வ னன்றே. 

இப்பாடல் சிவஞான சித்தியார் எனும் சாத்திர நூற்பா .இப்பாடலின் பொருள் நீங்கள் எந்த தெய்வத்தை வணங்கினாலும் அத்தெய்வமாக

அங்கே சிவபெருமான் தான் அருளுவார் ஏனெனில் மற்ற தெய்வங்கள் என்று நீங்கள் சொல்லும் எல்லாமே கருவில் உதித்து இவ்வுலக பிறப்பு இறப்பாகிய வினை அனுபவித்து மரணம் சம்பவித்தவை .கடவுள் அழியாதவர் .ஒரு கருவில் தோன்றி அழியும் ஒருவர் எப்படி கடவுளாகமுடியும் ? நீங்கள் எம்மத கடவுளை வணங்கினாலும் நீங்கள் செய்யும் நல்வினை தீவினைகளுக்கேற்ப 

அருளுபவர் சிவபெருமான் ஒருவரே அவர் ஒருவரே தோற்றமும் முடிவும் இல்லாதவர் .இந்த உடல் அழியும் ஆனால் உயிர் அழிவில்லாதது .எம்மதத்தை சார்ந்தவராக இருந்தாலும் பிறவிகள் தோறும் பிறந்து அந்த ஆன்மா பக்குவப்பட்டு சைவ சமயம் சார்ந்து தான் பிறப்பில்லா முக்தி அடைய முடியும் .அதனால் பாவம் செய்து விட்டு மன்னிப்பு கேட்டுவிட்டால் பாவம் போய்விடும் என்றால் டீ சாப்பிடுவது போல களவும் கொலையும் கற்பழிப்பும் இன்னபிற தவறுகளும் மலிந்துவிடும் .பாவமன்னிப்பு என்ற லாஜிக்கே தவறு செய்த பாவத்தை நாம் அனுபவித்தே தீர்க்க முடியும் வேறு புற வாசல் வழியாக தீர்ப்போம் என்றால் அது அண்டப்புளுகுதான்

திரு சி ற்றம் பலம்  

தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

இறை வழிபாடு பற்றி சிந்தனை

இறை வழிபாடு என்பது மனித சமுதாயத்தை விலங்கு உணர்விலிருந்து தேவ நிலைக்கு உயர்த்துவதாகும்

இறை வழிபாடு என்பது மக்களிடம் உள்ள பொறாமை,பேராசை, கோபம், புறங்கூறல் போன்ற தீய குணங்களை நீக்குவதாகும்

இறை வழிபாடு என்பது மக்களிடம் அன்பு, கருணை, ஈகை,பெரியோர் வணக்கம், பொறுமை, சாந்தம், முதலிய நற்குணங்களை வளர்ப்பதும், மறந்தும் பிறருக்கு தீமை செய்யாமையுமே ஆகும்

இறை வழிபாடு என்பது இறைமையை நினைந்து நினைந்து இறை மயமாகுவதாகும்,

இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களிடத்தும் இறைவர் விளங்குகின்றார் என்று உணர்த்துவதே ஆகும்

இறை வழிபாடு என்பது எல்லா உயிர்களையும் தம்முயிர் போலக் கருதுவதே ஆகும்.

இறை வழிபாடு என்பது பிற உயிர்கட்கு துன்பம் உண்டாகாதாவாறு நடத்தலே ஆகும்.

இறை வழிபாடு என்பது ஏழை களுக்கு தவறாமல் உதவுவதே ஆகும்

இறை வழிபாடு என்பது நம்மிடம் உள்ள குறைகளை கண்டு பிடித்து நம்மை நாமே சீர்படுத்திக் கொள்வதே ஆகும்.
இறை வழிபாடு என்பது நடப்பன யாவும் நம்முடைய நன்மைக்கே என்று நினைத்து வாழ்வதே ஆகும்,

இறை வழிபாடு என்பது உலகம் நிலையற்றது, கடவுன் ஒருவரே நிலையானவர் என்று நினைத்து வாழ்வது ஆகும்.

இறை வழிபாட்டின் இரண்டு கண்கள் நேர்மையும், உண்மையும் ஆகும்.

விலங்கு உணர்விலிருந்து மனித சமுதாயத்தை தேவ நிலைக்கு உயர்த்துவது இறை வழிபாடு ஆகும்.



நன்றி : தமிழ் வேதம்

தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்

சிவ ஞானியார் - அரதத்தர்

இன்றைக்கு சுமார் ஆயிரம் ஆண்டுகட்கு முன்னர் , காவிரியின் வடகரையில் அமைந்துள்ள கஞ்சனூர் என்னும் பாடல் பெற்ற இத்தலத்தில் வைணவர்கள் அதிகமாக வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கெல்லாம் தலைவராக ( ஆசாரியாராக) திகழ்ந்தவர் வாசுதேவர் எனும் அந்தணர். இவருக்கு மகனாக அவதரித்தவர் அரதத்தர்.

வைணவர்களின் விருப்படியே கஞ்சனூரில் உள்ள வரதராசப்பெருமாள் சன்னதியில் தீக்குழி உண்டாக்கி , அதில் இரும்பு முக்காலியை இட்டு பழுக்க காய்ச்சினார்கள். இந்த முக்காலியின் மீது அமர்ந்து " சிவமே முழுமுதற் தெய்வம் " ( சிவமே பரம் பொருள்) என்ற அரதத்தர் மூன்று முறை கூறினார். தீக்குழியும் இரும்பு முக்காலியும்தாமரை மலர்போல குளிர்ச்சியாயிருந்தன. அரத்தருக்கு வைணவர்கள் அனைவரும் சைவரானார்கள். இத்தகைய சிவனருட் செல்வரின் வாழ்வில் நடந்த சில அற்புதங்களை தொடர்ந்து காண்போம்.

1. சிவபூசைக்குரிய தண்ணீரை நாய்க்கு அளித்தது.

அன்றாடம் அரதத்தர் வீட்டில் சிவலிங்கம் வைத்து அபிசேகம் செய்து வழிபடுவது வழக்கம். இதனைக் கண்டு வணங்குவதற்கு பலர் வருவார்கள். ஒரு நாள் அரதத்தர் சிவபூசை செய்து கொண்டிருந்தார் அச்சமயம் ஒரு நாய்க்குட்டி அவ்விடத்தில் வந்து தண்ணீர் தாகத்திற்கு நாக்கை நீட்டியது. அரதத்தர் அபிசேக நீரை நாக்கில் விட்டார். நாய்க்குட்டியும் சென்று விட்டது. மீதமிருந்த நீரைத் சிவலிங்கத்திற்கு அபிசேகம் செய்தார். பூசை முடிந்த பிறகு அங்கு வந்திருந்தவர்களில் ஒருவர் " ஐயா நாய் அருந்திய மிகுதி நீரை அபிசேகம் செய்யலாமா? " எனக்கேட்டார். 

" இங்பே நாய் வடிவில் வந்தது சிவபெருமானார். நான் சிவபெருமானாரைக் கண்டேன், தாங்கள் நாயைக் கண்டீர் " என்றார் அரதத்தர். அந்த அன்பருக்கு சந்தேகம் தீரவில்லை.

அரதத்தர் " சிவா வருக " என அழைத்தார், முன்பு வந் நாய்க்குட்டி வந்தது. அதன் மீது அரதத்தர் சிவாயநம என்று சொல்லியவாறு தண்ணீரைத் தெளித்தார். அது சிறிய சிவலிங்கமாக மாறியது. அந்தசிவலிங்கத்தைச் சந்தேகப்பட்ட அன்பரிடம் கொடுத்து " நாள்தோறும் பூசை செய்து வருக " எனக் கூறினார்.

2. ஒரு ஏழை அந்தணரின் வறுமை நீக்கியது

கஞ்சனூரில் சதாவிவம் என்ற புரோகிதர் மிகவும் வறுமையில் வாழந்து வந்தார். ஒரு சிறந்த சிவனடியாருக்கு ஒருவேளை உணவு அளித்தால் அவருடைய வறுமை தீரும் என்று சான்றோர்கள் சொன்னது அவர் மனதில் பதிந்து ஒன்று.

அரதத்தரே சிறந்த சிவபக்தர் என்று முடிவு செய்தார். சதாசிவம் அவர்கள் ஒரு நாள் அரதத்தரைத் தம் வீட்டிற்கு அழைத்து உணவு அளித்து மகிழ்ந்தார். அரதத்தரும் நெஞ்சார அவரை வாழ்த்தி விட்டுச் சென்றார்.

அன்று இரவு சோழ மன்னன் கனவில் சிவபெருமானார் தோன்றி " அன்பனே கஞ்சனூரில் உள்ள புரோகிதர் சதாசிவத்திற்கு அரிசி, ஆடை, பணம் ஆகியவற்றை வேண்டி அளவு அனுப்பி வை " என்று அருளி மறைந்தார்.

மறுநாள் சோழ மன்னன் கஞ்சனூர் புரோகிதர் சதாசிவத்திற்கு நிறைப் பொருள் உணவுப் பொருட்களையும் புத்தாடைகளுடன் அனுப்பி வைத்தார். ( அடியாருக்கு அளித்து ஆண்டவன் அருள் கிடைத்தது)

" நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடும் பகவதற்கு அது ஆமே " திருமந்திரம்

திருச்சிற்றம்பல்
தொகுப்பு : வை. பூமாலை, சுந்தரபாண்டியம்
நன்றி : தமிழ் வேதம்

மேலும் பல ஆன்மீகத் தகவலுக்கு

புதன், 22 ஜூன், 2016

அமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள்


கொல்லைப்புற இரகசியம் 

இந்த பூமி பலவித அதிசயங்களையும் ஆச்சரியங்களை -யும் சுமந்தபடி சுற்றிக்கொண்டிருக்கிறது. 
 
அவற்றுள் நோய்களைத் தீர்க்கும் அதிசய மூலிகைகளும் மரஞ்செடி கொடிகளும் குறிப்பிடத்தக்கவை. அப்படிப்பட்ட ஒரு அற்புத கிழங்கு வகையான அமுக்கிரா கிழங்கைப் பற்றி உமையாள் பாட்டி என்ன சொல்கிறார் எனக் கேட்போம்! 
 
“பாட்டி… உங்க கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும் கேக்கணும்னு நெனச்சேன். ஆனா, அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவே இல்ல. இப்போ கேட்கவா?!” என்றேன் சிறியதொரு புன்னகையை வெளிப்படுத்தியவனாய். 
 
அமுக்கிரா கிழங்க பொடி செஞ்சு, பால்ல கலந்து குடிச்சுட்டு வந்தா, நரம்புத் தளர்ச்சி நம்ம பக்கமே எட்டிப் பார்க்காது. “நீ என்ன கேக்கப் போற…?! நீ கேட்டா கொடுக்கறதுக்கு ஏங்கிட்ட சொத்து-பத்து, தோட்டம்- தொறவு எதுவும் இல்லப்பா?! கொஞ்சம் பாத்து கேளு!” என்றார் பதில் புன்னகை சிந்தியபடி. 
 
“அதில்ல பாட்டி, இந்த வயசிலயும் எப்படி தளர்வில்லாம உறுதியா இருக்குறீங்க?! எனக்கு உங்களப் பாத்தா ஆச்சரியமா இருக்கு” என்று நான் வெகு நாட்கள் கேட்க நினைத்ததைக் கேட்டு விட்டேன். 
 
“டேய்…பாட்டிய வச்சு ஏதாவது காமெடி பண்றியா?” என்று செல்லமாக முறைத்தவர், “நான் எப்பவுமே தானியம், காய்கறி, பயறு வகை… இப்படியான உணவுகள்தான் சாப்பிடுறேன். நீங்க சாப்பிடுற மாதிரி பீட்சா, பர்கரெல்லாம் சாப்பிட மாட்டேன். அதோட தொடர்ந்து யோகா, தியானம் பண்றேன். இதெல்லாம்தான் காரணம்!” என்று பேசிக் கொண்டே நடந்தவர் ஒரு வெண்கலச் செம்பிலிருந்த பாலில் ஏதோ பொடியைக் கலந்து, எனக்கு ஒரு டம்ளர் கொடுத்து விட்டு, அவரும் ஒரு டம்ளரில் குடித்தார். “பால்ல என்ன கலந்தீங்க பாட்டி?! ஹெல்த் ட்ரிங்கா? குடித்துக் கொண்டே கேட்டேன்.” 
 
“அதான் அமுக்கிரா கிழங்குப் பொடி. என்னோட தளராத இந்த உடல் திடத்துக்கு இதுவும் ஒரு காரணம்ப்பா! இந்த அமுக்கிரா கிழங்கு மிகச் சிறந்த தாது விருத்தியா இருக்கு. நம்மோட நரம்பு மண்டலம் சரியா செயல்படுறதுக்கு தாதுப் பொருட்கள் (தாது உப்புகள்) அவசியமானது. அமுக்கிரா கிழங்கு நம் உடல்ல தாது பொருட்களை சீரா வச்சிக்கிறதுக்கு உதவுது. அமுக்கிரா கிழங்க பொடி செஞ்சு, பால்ல கலந்து குடிச்சுட்டு வந்தா, நரம்புத் தளர்ச்சி நம்ம பக்கமே எட்டிப் பார்க்காது.” “எவ்வளவோ பேரு நரம்புத் தளர்ச்சியால அவதிப் படுறாங்க தெரியுமா?! நீங்க சொன்ன இந்த மருந்து அவங்களுக்கு நிச்சயம் நல்ல தீர்வா இருக்கும் பாட்டி! எப்படி இவ்வளவு பெரிய விஷயத்த சாதாரணமா சொல்றீங்க பாட்டி?!” மெதுவாக என்னருகில் வந்தவள் “பெரிய பெரிய விஷயமெல்லாம் ரொம்ப சாதாரணமாதான் இருக்கும். நாமதான் அதுக்கு கவனம் கொடுக்கணும்!” என்று தோள்களைத் தட்டிச் சென்றார். 
 
பாட்டி கூறிய வார்த்தை மறைமுகமாக இன்றைய இளைய சமுதாயத்தை சாடுவதாகவே எனக்குத் தெரிந்தது. குறிப்புகள்: அமுக்கிரா கிழங்கை பொடி செய்து நெய்யுடன் சேர்த்து பயன்படுத்தினால் உடல் உறுதி, அழகு, நீண்ட ஆயுள் பெறலாம். அமுக்கிரா கிழங்கை பச்சையாக எடுத்து, பசுவின் பால்விட்டு அரைத்து கொதிக்க வைத்து, இடுப்பு வலி, கண்டமாலை வீக்கம் போன்றவற்றிற்கு பற்றிடலாம். 
 
அமுக்கிரா கிழங்கை சுக்குடன் சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கங்களுக்கு போட வீக்கம் கரையும். கிழங்கை பாலில் வேக வைத்து அலம்பி உலர்த்தி பின் பொடி செய்து, ஒரு வேளைக்கு 2-4 கிராம் வரை தேனில் கொடுக்க உடல் பருமன், வீக்கம், பசியின்மை நீங்கும்; நெய்யில் கொடுக்க உடலிற்கு வன்மை தரும். அமுக்கிரா கிழங்கு பொடி – 1 பங்கு, கற்கண்டு – 3 பங்கு என சேர்த்து, காலையும் மாலையும் பசுவின்பாலுடன் (½ – 1 ஆழாக்கு) 4கிராம் சேர்த்து சாப்பிட்டு வர, நரம்புத் தளர்ச்சி நீங்கும். உடல் வன்மை பெறும்

Read more at : அமுக்கிரா கிழங்கின் அற்புத பலன்கள் http://isha.sadhguru.org/blog/ta/amukkira-kizhangin-arputha-balangal/