ஆடை
இன்றைய தமிழகத்தில் தொன்றுதொட்டு நெசவுத் தொழிலைக் குலத்தொழிலாக மேற்கொண்டு வாழ்ந்து வரும் சாலியர் பட்டாரியர் இனங்களின் பூர்வீகம் பற்றிய ஆய்வுதான் நான் மேற்கொண்ட முயற்சி. இதன் அடிப்படையாக மானிட இனம் இந்த நாட்டில் சிறந்து விளங்கிய காலந்தொட்டு படிப்படியாக பல மாற்றங்களுக்கு உட்பட்டு ஆரிய இனத்தவர் வருகைக்குப் பின் வருணாச்சிரம தர்ம அடிப்படையில் பல ஆயிரம் ஆண்டுகளாக வாழ்க்கை நடத்திவந்த நிலைமைகள் பற்றி இதுவரை ஆராய்ந்தோம். சாலியர் - பட்டாரியர் என்ற இந்த இனத்தவர் தொழில் கைத்தறி நெசவு. மனிதன் ஆடை உடுத்த ஆரம்பித்த காலந்தொட்டு கைத்தறி நெசவும் இருந்திருக்க வேண்டும் என்பது உண்மை. ஆகவே ‘ஆடை’ பற்றிச் சற்று ஆராய்வோம்.
முற்காலத்தில் தேவர்கள் கூட ஆடையின்றித்தான் இருந்தார்களாம். இதனால் தேவர்கள் கைலாயம் சென்று பரமெஸ்வரனிடம் ஆடை நெய்வதற்குறிய வழியைத் தேர்ந்தெடுக்க வேண்டினார்களாம். அவர் மார்க்கண்டேயரை வரவழைத்து அவருடைய ஆசிரமத்தில் ஒரு மாபெரும் யாகம் வேள்வித்தீயுடன் நடத்த உத்தரவிட்டார். இந்த வேள்வி நடக்கும்போது சிவன் - பார்வதி, லட்சுமி - விஷ்ணு, சரஸ்வதி – பிரம்மன் மற்றும் ரிஷிகள், முனிவர்கள் அனைவரும் இருந்தார்கள். வேள்வித் தீயில் தேவலோகக் கடவுள்கள் எதிர்பார்த்தபடி ஆயுதங்கள் சகிதமாக ‘பஞ்சபுட்டி’ என்பவர் தோன்றி கைத்தறியில் தேவர்களுக்கு ஆடை நெய்து தரும் ஆள் யார் என்பதை இனங் காட்டலானார். அவர்தான் பாவநாராயணர். இடைவிடாத யாகத்திற்குப் பின் அக்னி குண்டத்தில் தோன்றிய பஞ்சபுட்டியும், பாவநாராயணரும்தான் மகாவிஷ்ணு கடவுளிடம் பாவு நூல் பெற்று சிவனின் மந்திரத்தை தொழில் நுணுக்க உத்தியாகப் பயன்படுத்தி தறி நெய்தார்கள் என்பது பழமையான வாய்மொழிக் கூற்றாகும்.
(திருமதி. அவையாம்பாள்)
பழங்காலத்தில் மனிதன் கோரைத் தழைத் தொடையும், மரப்பட்டையும், விலங்குத் தோலும் ஆடையாக உபயோகித்தான். புது கற்காலத்தில் மரவுரி போன்ற நாராடையும் போர்த்திக் கொள்ள ஆட்டு மயிர்க் கம்பளியும் முதற்கண் கைப்பின்னலாகவும் பின்னர் தறி நெசவாகவும் நெய்து கொண்டனர். படுக்க மூங்கில் பாயும், ஓலைப்பாயும் முடைந்து கொண்டான். பொற்காலத்தின்போது பருத்தி பஞ்சால் நூலிழைத்து பலவகை ஆடைகளை நெய்யத் தெரிந்து கொண்டான். நூல் நூற்றல் பெண்டிரால் செய்யப்பட்டது.
(தமிழர் வரலாறு – தேவநேயப் பாவாணர்)
ஆதி மனிதன் மறைவிடங்களை மறைக்க வேண்டும் என்ற உணர்வு தோன்றியவுடன் இலை தழைகளை முதலில் அணிய ஆரம்பித்தான். பின் படிப்படியாக மரவுரி தோல் போன்றவைகளை ஆடைகளாக பயன்படுத்தினர். அடுத்து மழை, வெயில், குளிர் போன்ற தட்ப வெப்ப நிலைகளுக்கேற்ப நாகரீக வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு மாற்றங்கள் தோன்றின.
கூடைப் பின்னல், பறவைகள் கூடு கட்டும் தன்மை, தென்னை மரத்தின் பன்னாடை, சிலந்தி வலை அல்லது ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து காட்சி தரும் பொருட்கள், நெய்யும் உணர்வினை மானிடருக்கு அளித்திருக்க வேண்டும். இவ்வுணர்வு பெற்ற மனிதன் பின்னர் இவ்வுணர்வுக்கு வடிவம் கொடுக்க முற்பட்டதே நெசவுக் கருவிகளின் கண்டுபிடிப்பாகும். இழைகளைப் பிணைக்க கதிரைக் கண்டுபிடித்தான். முதலில் சிறு நூலாக இருந்தபோது, கைவிரலையும் பின்னர் நீளமுள்ள நூலைக் கம்பியிலும் இணைத்திருக்க வேண்டும். இதுவே நூற்புக் கதிரின் தோற்றம் எனலாம்.
அடுத்த நிலையில் நெசவுத் தறி உருவாக்கப்படுகின்றது. இதிலிருந்து படிப்படியாகப் பட்டறிவு கொண்டு முன்னேறுகிறான். தன்னுடைய பணிகளை எளிதாக்க, சிறப்பாக்கப் பல நெறிமுறைகளைக் கையாளுகிறான். இன்றைய பிரம்மாண்டமான நூற்பு ஆலைகள், நெசவாலைகள் இத்தகைய உணர்வுகளின் படிப்படியான வளர்ச்சியாகும்.
“பண்டைத் தமிழர் தொழில்கள்’ என்ற நூலில் டாக்டர் வி.சி. சசிவல்லி அவர்கள் எழுதியவையாவது.
பண்டைத் தமிழகத்தில் வழக்கிலிருந்த தொழில்கள் குறித்து அறியும் முன்னர், தொழில் என்பதற்கு ஒரு வரையறை காண்போம். உழைப்பு என்பது பெயர்ச் சொல்லாக ஒரு செயல் அல்லது தொழிலைக் குறிக்கும். உழைத்தல் என்பது வினைச் சொல்லாகத் தொழில் செய்தலைக் குறிக்கும். உழைப்பவர் இனம் என்பது பொதுவாகத் தொழிலாளர்களைக் குறிக்கும்.
பொருளியல் பேரறிஞராகிய மார்சல், உழைப்பிற்குப் பின்வரும் இலக்கணம் கூறுகிறார். “உழைப்பு என்பது மூளையையோ, உடலையோ முழுவதுவதுமாகப் பகுதியாகவோ வருத்தி ஏதொ ஒன்றைப் படைப்பதற்காகச் செய்கின்ற செயலைக் குறிக்கும். ஆனால் அந்தச் செயலிலிருந்து கிடைக்கும் மகிழ்ச்சியை உழைப்பு உள்ளடக்காது. இவ்விலக்கணத்தின்படி உழைப்பு எல்லா வகையான தொழில் திறமைகளையும் உள்ளடக்கும். கல்வி அறிவில்லாத தொழிலாளர்களின் உற்பத்தி முயற்சிகளும், கைத்தொழில் கலைஞர்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள், எழுத்தாளர்கள், வேளாண்மைத் தொழிலாளர்கள், வணிகர்கள், நுண்கலைஞர்கள், இலக்கிய அறிஞர்கள், மருத்துவர்கள், அறிவியல் வல்லுநர்கள், நிர்வாகிகள் ஆகியோரின் பணிமுயற்சிகளும் மார்சலின் உழைப்பு இலக்கணத்தினுள் அடங்குகின்றன.
இவ்வாறாக உழைப்பு என்பதனுள் அடங்கும் தொழில் திறமைகள் அனைத்தையும் தற்காலத் தொழில் வல்லுநர்கள் பல்வேறு விதமாக வகைப்படுத்திக் கூறுகின்றனர். எனினும் பண்டைத் தமிழர் செய்த தொழில்களை அவர்கள் வாழ்ந்த சமுதாய நிலைக்கு ஏற்றவாறு பின்வருமாறு வகைப்படுத்திக் கூறலாம்.
அ. வாழ்வியல் தொழில் போர்த் தொழில்
வாணிகத் தொழில் கலையியல் தொழில்
ஆ. கைத்தொழில் போர்த் தொழில்
இயந்திரத் தொழில் வணிகத் தொழில்
இ. உடல் உழைப்புத் தொழில் அறிவு உழைப்புத் தொழில்
இவ்வகைப்பாடுகளுள் முதல் வகையைப் பின்பற்றி தொழில்கள் என்ன இவ்வியல் அமைந்துள்ளது. பழந்தமிழர் செய்த தொழில்கள் எவை என்பதைக் கண்டறியப் பயன்பட்டவை சங்க கால இலக்கியங்களாகிய பத்துப் பாட்டும், எட்டுத் தொகையும் ஆவன. சங்க கால மக்களின் வாழ்வியலைக் குறித்து எழுதப்பட்ட நூல்களும், அக்காலத் தமிழகத்தைப் பற்றிய பிறநாட்டு அறிஞர்களின் குறிப்புகளும், தமிழரின் தொழில்திறன் குறித்து அறியத் துணை நின்றன. இவ்வாறு கிடைத்த தொழில்கள் பற்றிய செய்திகளுள் ஒரு சில தொழில்கள் நீங்கலாகப் பெரும்பாலானவை செய்யுட்களில் உவமைகளாகக் காட்டப்படும் இடங்களிலேயே அமைந்துள்ளன. ஏன்றாலும் அக்குறிப்புகளைக் கொண்டு இன்ன வகையில் ஒவ்வொரு தொழிலையும் செய்திருத்தல் வேண்டும் எனக் கணித்துக் கூறப்பட்டுள்ளது.
அ. பிரிவு.
வாழ்வியல் தொழில் போர்த் தொழில்
வாணிகத் தொழில் கலையியல் தொழில்
வாழ்வியல் தொழில்கள்
மக்களின் வளமான வாழ்விற்கும் வசதிக்கும் பயன்படும் தொழில்கள் அனைத்தும் வாழ்வியல் தொழில்கள் என்ற பிரிவில் அடங்குவன. எனினும் அவற்றை 1. கைத்தொழில், 2. நிலஞ்சார் தொழில், 3. கைவினைத் தொழில், 4. பிற தொழில், 5. அறிவுசார் தொழில் எனப் பிரித்துக் காணின் மேலும் தெளிவு பெறும். எனவே, இம்முறையில் வாழ்வியல் தொழில்கள் பின்வருமாறு வகைப்படுத்திக் கூறப்பட்டுள்ளன.
1. கைத்தொழில்கள்
பயிர்த் தொழில், நெசவுத் தொழில், தச்சுத் தொழில் - மட்கலத் தொழில், கொல்லுத் தொழில் - உலோகத் தொழில் - அணிகலத் தொழில்- தோல் தொழில்.
2. நிழஞ்சார் தொழில்கள்
கால்நடைப் பேணல் - வேட்டையாடுதல் - ஆறலைத்தல் - மீன் வேட்டம் - உப்பு விளைவித்தல் - முத்துக் குளித்தல்.
3. கைவினைத் தொழில்கள்
ஓலைத் தொழில் - பொம்மை செய்தல் - சாயப்பாக்கு – சுண்ணம் தயாரித்தல் - கயிறு திரித்தல் - நூல் தொழில்.
4. பிற தொழில்கள்
கள் அடுதல் - சலவைத் தொழில் - அட்டிற் தொழில் - கூவலர் - வேலன் - காரோடன் - விறகுவெட்டி – யானைப்பாகன் - தேர் ஓட்டுபவன் - துடியன் - இழிசினன்.
5. அறிவுசார் தொழில்கள்
அந்தணர் - அரசர் - அமைச்சர் - ஒற்றர் - தூதுவர் - புரோகிதர் - காவலர் - அறங்கூறவையத்தார் - அறிவர் - ஆசிரியர் - ஆவண மாக்கள் - கணியன் - நாழிகைக் கணக்கர் - புலவர் - மருத்துவர்
பயிர்த் தொழில்
மனித வாழ்விற்கு அடிப்படையானது உணவு. ஓவ்வொருவரது பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் அவரவரது கருமமே கட்டளைக் கல்லாய் அமையும். ஒருவர் சிறந்த பண்பினைப் பெற அடிப்படையாய் இருக்க வேண்டியது வறுமையின்மை. உணவு இன்றேல் பண்பாடும் இல்லை. பழம்பெருமையும் இல்லை. ஆதலின் உணவுப் பொருளின் இன்றியமையாமையை உணர்ந்து அவற்றைப் பெருக்கினர். உழவுத் தொழில் தலைமைத் தொழிலாக, உயிர்த் தொழிலாக போற்றப்பட்டது.
நெசவுத் தொழில்
மக்கள் சமுதாயத்திற்கு உணவினை அடுத்து இன்றியமையாது வேண்டப்படுவது ஆடையாகும். விலங்குகளைப் போலன்றி உடலை மறைத்தற்குறிய உடையினை அணிந்து மானத்துடன் வாழும் முறை மக்கள் வாழ்க்கையின் சிறப்பியல்பாகும். நாகரீகம் வளராத மிகப் பழங்காலத்தே மக்கள் தழை, இலை ஆடைகளையும், மரப்பட்டைகளையும், மான், புலி முதலியவற்றின் தோலினையும் உடுத்து வாழ்ந்தனர். நாளடைவில் அந்நிலை மாறியதும் மக்கள் தங்கள் நுண்ணறிவின் திறத்தால் பருத்தியின் பஞ்சினை நூலாக நூற்று, ஆடையாக நெய்து அணியத் தொடங்கிய காலமே மனிதன் வரலாற்றில் ஒரு புதிய திருப்பமாகும். அப் புதிய முயற்சியின் விளைவால் தொடங்கிய தொழிலினையே நாம் நெசவுத் தொழில் என்று பெருமையுடன் கூறுகிறோம்.
இது வீட்டுத் தொழில்களில் முக்கியமானது. பண்டைத் தொழில்களுள் ஒன்று. விவசாயத்துக்கு அடுத்தது. மக்கள் நாகரீகம் அடையத் தொடங்கியதும், கையாண்ட முதல் கைத்தொழில் என்று கலைக் களஞ்சியம் குறிப்பிடுகின்றது. தொல்பொருள் வரலாற்று அறிஞர்கள் இந்நெசவுத் தொழில் புதிய கற்காலத்தில் ஆரம்பமாயிற்று என்பர். ஆடையைப் பற்றிய குறிப்புகள் தொல்காப்பியத்தில் காணப்படுவதால் இந்நெசவுத் தொழிலின் தொன்மையை நாம் நன்கு அறிய முடிகின்றது.
தொல்காப்பியப் பொருளதிகாரம் - (249-2)
“கூழை விரித்தல் காதொன்று களைதல்
ஊழணி தைவரல் உடையெர்த் துடுத்தலோ
டூழி நான்கே இரண்டென மொழிப”
எனக் குறிப்பிட்டுள்ளது.
சங்க கால இலக்கியங்கள் மிகத் தெளிவாக நெசவுத் தொழிலின் வளர்ந்த நிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. நெசவுத் தொழிலுக்கு பருத்தி மிகவும் இன்றியமையாத மூலப் பொருளாக விளங்கியது. தமிழகத்தில் பருத்தி விளைவும் மிகுதியாக இருந்திருக்கும் என்பது ‘பருத்தி வேலிச் சீறூர்’ (299.1), ‘பன்னல் வேலியிப் பணைநல்லூர்’ (345.20) என்ற புறநாநூற்று அடிகளினின்றும் அறியலாம். ‘ இப்பருத்தியே அன்றி இலவமரம், கொங்கு மரம் முதலிய மரங்களிலிருந்து வேண்டிய பஞ்சு சேகரித்து நெசவுத் தொழிலுக்குப் பயன்படுத்தினர்’. சங்க இலக்கியப் பாடல்களில் பல இடங்களில் நெய்தல் தொழில் பற்றிப் பேசப்படுகின்றன. பருத்தி, பட்டு ஆகிய பொருள்களைக் கொண்டு துணிகள் நெய்யப்பட்டன.
பருத்திப் பஞ்சை அதனுடைய கொட்டையிலிருந்து பிரித்தெடுக்க வில்லினைப் பயன்படுத்தினர் என்பதை அகநானூற்றுப் பாடலடியாலும், நற்றினைப் பாடலடியாலும் அறியலாம்.
“வில்லெறி பஞ்சின் வெண்மழை தவழும்” (அகம் 133.5)
“வழிதுளி பொழிந்த இன்குரல் எழிலி
எஃகுறு பஞ்சிற் றாகி.”
பின்னர் பருத்திக் கொட்டையை நீக்கித் தூய்மை செய்யும்போது பஞ்சின் புறத் தோலினையும் எஞ்சி நிற்கும் கொட்டையையும், தூசியையும் நீக்குவதற்காக நன்றாக புடைத்தெடுப்பர். இக்கருத்து
“சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த
பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து” (புறம் 326.4-5)
இங்கு சிறை பஞ்சின் புறத் தோலையும், செற்றை தூசியையும் குறிப்பன.
மகளிர் பருத்திப் பஞ்சினை செப்பஞ் செய்து நுண்ணிய நூலாக நூற்பதில் கைத்திறம் பெற்று விளங்கினர். இப்பெண்கள் பருத்திப் பெண்டிர் என அழைக்கப்பட்டனர். மேலும், கணவரை இழந்த மகளிர் இத்தொழிலில் பெரிதும் ஈடுபட்டிருந்தனர் என்பது
“ஆளிள் பெண்டிர் தாளில் செய்த
நுணங்கு நுண் பனுவல்” (நற். 353.1-2)
என்னும் பாடலடிகளில் தெரிகின்றது. இப்பெண்டிர் இரவு நேரத்திலும் நூல் நூற்றனர் என்பது பருத்திப் பெண்டின் சிறுதீ விளக்கத்து என்ற அடியால் புலப்படும். இவ்வாறு பெண்கள் நூற்று இழைத்துத் தந்த நூலைப் பாவாக விரித்துத் தறியில் நெய்து ஆடையாகக் கொடுக்கும் கடமை ஆடவர் தொழிலாய் அமைந்தது. நுண்மையான நூலைக் கொண்டு நெய்யப்பட்ட ஆடையினுடைய இழைகளின் வரிசைகளைக் காண்பதற்கு இயலாத வகையில் நுட்பமாக நெய்யப்பட்டிருந்தது.
“பாம்புரி யன்ன வடிவினை காம்பின்
கழைபடு சொலியி னிழையணி வாரா
நோக்கு நுழை கல்லா நுண்மைய” (புறம். 398.20)
என்ற பாடற்குறிப்புகள் மேற்கூறிய கருத்தை வலியுறுத்துவன.
மிக உயர்ந்த மெல்லிதான துணிகளும் நெய்யப்பட்டன. அவற்றிற்கு துகில் என்பது பெயர்.
(எ.டு.) புகை விரிந்தன்ன பொங்கு துகில் (புறம் 398.20)
தறி நெய்து அறுக்கப்பட்டமையால் அறுவை என்றும், நெய்த உடையினைச் சுருக்கமின்றி மடித்து மடித்து விற்று வந்தமையால் மடி என்ற பெயரும் வழங்குவதாயிற்று.
இங்ஙனம் நெய்யப்பட்ட துணிகளுக்கு நிறம் ஊட்டினதற்குச் சான்றாக, நம் தமிழகத்தில் அரிக்கமேடு என்ற இடத்தில் நடந்த அகழ்வாய்வின் மூலம் மஸ்லின் துணிகளுக்குச் சாயம் தோய்க்கப் பயன்பட்ட செங்கற்களால் ஆன இரண்டு தொட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றின் காலம் கி.பி. முதல் நூற்றாண்டு எனக் கணக்கிடப்பட்டுள்ளது. சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றில் பல்வேறு வண்ண ஆடைகளைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. காட்டாக, நீலநிறத் துணிகள் - நீலமென்சேக்கை (கலி.72-1) என்றும், செந்நிறத் துணிகள் - துவர்செய் ஆடை (நற். 33) கோபத் தன்ன தோயா பூதுகில் (திருமுருகு. 15) என்றும் வரும் இடங்களைக் கூறலாம்.
“நீல நிறத் துணிகளும், செந்நிறத் துணிகளும்” இருந்தனவென்று இலக்கியங்கள் வாயிலாக அறிகிறோம். இத்துணிகளுக்கு நிறம் எவ்வாறு ஊட்டப் பெற்றதென்று அறிய வேண்டும். பண்டைக் காலத்தில் வண்ணம் தயாரிக்க காடுகளில் முளைத்திருக்கும் செடிகளின் தழைகளும், மரப்பட்டைகளும், அவுரிச் செடிகளும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். அவுரிச் செடிகள் நம்நாட்டிலிருந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. வண்ணம் தயாரிக்கப்படுவதால்தான் இச்செடிகள் மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன எனக் கருத இடமுண்டு”.
ஹேரடோடஸ் என்னும் யவன ஆசிரியர் நம் நாட்டு பஞ்சைப் பற்றிப் பேசும்போது “மரங்களில் வளரும் பஞ்சு” என்றும், அஃது ஆட்டு ரோமங்களால் உண்டான கம்பளிகளிலும் மேலானது. ஏன்றும் கூறுகிறார்.
இவ்வாறு திறமையுடன் நெய்யப்பட்ட ஆடைகளின் சிறப்பினை சங்க இலக்கியப் பாடல்கள் பின்வருமாறு புகழ்ந்து பாடுகின்றன. சில சான்றுகள்:
1. அரும்பி மலர்ந்த பகன்றையின் புதுப் பூப்போன்ற அகல மடிக்கப்பட்ட ஆடை என்ற கருத்தமைய
போதுவிரி பகன்றைப் புதுமல ரன்ன
அகன்றுமடி கலிங்கம் (புறம் 393:17-18)
2. மூங்கிலின் உட்புறத்தே உள்ள தோல் போன்றது என்பதை
கழைபடு சொலியி னிழையணி வாரா
ஒண்பூங் கலிங்கம் (புறம் 383: 10.11)
என்றும்,
3. பாலாவியைப் போன்றது என்ற பொருளமைய,
ஆவியன்ன அவிர்நூற் கலிங்கம் (பெரும் 469)
என்றும்,
4. பாம்பு உரித்த தோல் போன்றது என்ற பொருளமைய,
பாம்புரி யன்ன வடிவின (புறம் 383.10)
என்றும் பாடப்பட்டுள்ளன.
இங்ஙனம் மென்மையாக நேர்த்தியுடன் நெய்யப்பட்ட ஆடைகளுக்கு மேலும் அழகூட்டும் வகையில் நேரிய கரைகள் அமைத்து அதில் அழகிய பூ வேலைப்பாடுகளும் செய்தனர். இக்கருத்தினை
.... நேர்ரை
நுண்ணூல் கலிங்கம் உடீஇ (புறம் 392:14.15)
கோட்டைக் கரைய பட்டுடை (பொருந. 155
(பட்டுடையின் கரைகளில் திரள முடிந்த முடிகள் அழகு பெற அமைக்கப்பட்டிருந்ததை இவ்வடி உணர்த்தும்)
வாண்பூங் கலிங்கம் (புறம். 383:12:397:15)
நீலக் கச்சை பூவார் ஆடை (புறம்: 274)
புன்பூங் கலிங்கம் (சிறிய பூக்கள் அமைந்த ஆடை) (நற். 90)
என்ற பாடற்குறிப்புகள் உணர்நத்தவல்லன.
பண்டைத் தமிழர் பஞ்சைப் பயன்படுத்தி நெய்த ஆடைகளே அல்லாமல் பட்டு நூலைப் பயன்படுத்தி பட்டாடை நெய்தனர். மேலும் மரப்பட்டையில் உள்ள நாரினை எடுத்துப் பின்னி மலைவாழ் குறவர் ஆடையாகப் பயன்படுத்தினர் என்பதை,
மரனாருடுக்கை மலையுறை குறவர் (நற். 64.4)
என்ற பாடலடியால் அறியலாம்.
போன் இழைகளாலும் ஆடைகள் நெய்யப்பட்டுள்ளன என்பதை
பொன்புனை உடுக்கையோன்
என்ற பரிபாடல் (14.18) மூலம் அறியலாம்.
தைக்குந் தொழில்
சங்க காலத் தமிழர் நேர்த்தியான ஆடையை நெய்வதில் வல்லவர் என்பதைக் கண்டோம். ஆந்த ஆடைகளில் சிறியனவும், பெரியனவுமான பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டமைக்கான சான்றுகளும் உள்ளன. இத்தகைய சிறந்த ஆடைகள் தைப்பதற்குத் தையற்காரர்கள் இருந்திருத்தல் வேண்டும். அரசியல் அலுவலரும் உயர்குடிப் பெண்டிரும் சட்டையும் கச்சும் அணிந்திருந்தனர் என்பதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன. சான்று:
“........... படம்புக்குப்
பொருகணை தொழலச்சிய புண்தீர் மார்பின்
விரவுவரிச் கச்சின்.” (பெரும். 69.71)
நீராடுவதற்குத் தனி உடை உடுத்தனர். அது புட்டகம் எனப்பட்டது.
“புட்டகம் பொருந்துவ புனைகு வோரும்” (பரிபாடல் 12:17)
இவற்றை நோக்க அக்காலத்தில் தையல் தொழில் சிறப்புற்று இருந்தமை புலனாகும்.
உயர்குடி மக்கள் மெத்தென்ற படுக்கைகள் தயாரித்து அதில் பள்ளி கொண்டனர். நெடுநல்வாடை என்னும் சங்கப் பாடலில் அரசமாதேவிக்குரிய அணைகள் அன்னப்பேட்டின் தூவியால் ஆனவை. கட்டிலின்மீது படுக்கை விரிக்கப்பட்டிருந்தது என்னும் செய்திகள் அக்காலத்தில் மெத்தைகளும் தலையணைகளும் தயாரிக்கும் தொழில் உயர்நிலையில் இருந்ததைப் புலப்படுத்தும்.
“மெல்லிதின் விரிந்த சேக்கை மேம்படத்
துணைபுணர் அன்னத் தூநிறத் தூவி
இணையணை மேம்படப் பாயணை விட்டு.: (நெடுநல். 131-33)
*****