Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 26 டிசம்பர், 2016

ஆண்பால் பெண்பால் அன்பால்

vikatan.com




யுகபாரதி


வாழ்வின் ஆதாரமான ‘ஆண்-பெண் உறவுகளுக்குள் மட்டும் ஏன் இத்தனை வேறுபாடுகள்? தொழில்நுட்பங்கள் வளர வளர, விரிசல்களும் வித்தியாசங்களும் ஏன் இவ்வளவு அதிகரிக்கின்றன? சரிசெய்யவேண்டியது எங்கே? நம் குழந்தைகளுக்கு, ஆண்-பெண் மனங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை எப்போது கற்றுக்கொடுக்கப்போகிறோம்? காதல், நட்பு, உறவு, பிரிவு... என ஆண்-பெண் இடையே இருக்கும் இந்த இணைப்பைப் பலப்படுத்தும் அந்த ஒன்று எது?' விடைகளுக்கான விகடனின் தேடலே இந்தத் தொடர். வாரம் ஒரு பிரபலம் தங்களுடைய வாழ்வின் வழியே, கற்றலின் வழியே வெளிச்சம் பாய்ச்சுகின்றனர். 


`நீங்கள் கேட்டவை’யில் அடுத்து வர இருக்கும் பாடல் இடம்பெற்ற திரைப்படம், `உல்லாசப்பறவைகள்'. பாடலைப் பாடியிருப்பவர் ஜென்சி' எனச் சொன்னதும், எனக்கும் என் அக்காவுக்கும் டிரான்சிஸ்டரைக் கைப்பற்றும் போட்டி தொடங்கிவிடும். 



ஸ்வாமி மாடத்துக்கு அருகில் வைக்கப் பட்டிருந்த அந்த டிரான்சிஸ்டரை, கிணற்றடிக்கோ அல்லது கீழாநெல்லிச்செடி படர்ந்து இருந்த பின்வாசல் முற்றத்துக்கோ எடுத்துப்போக அக்கா விரும்புவாள். பல நேரங்களில், அதற்கான காரணத்தை என்னால் விளங்கிக்கொள்ள முடியாது. `பாடலைக் கேட்பது என்றால் இங்கேயே கேட்க வேண்டியது தானே... டிரான்சிஸ்டரை எடுத்துக்கொண்டு ஏன் தனியே போகவேண்டும்?' என எண்ணி யிருக்கிறேன். அக்காவுக்கு அப்போது 17 வயது.



என் வீட்டில் மட்டும் அல்ல, அக்கா-தம்பி உள்ள, அண்ணன்-தங்கை உள்ள அநேக வீடுகளில் இப்படியான சண்டைகள் மூளக் காரணமாக இருந்தவர் ஜென்சி என்கிற பாடகி. 80-களில், ஜென்சியின் குரல் மத்தியத்தரக் குடும்பப் பெண்களின் அபிலாஷைகளை ஆட்கொண்டது என்றால் மிகை அல்ல. மெல்லிய சோகத்தையும் ததும்பி வழியும் காதலையும் கொண்டிருந்த அந்தக் குரலில், நம்முடைய அக்காக்கள் தங்களுடைய அந்தரங்க எழுச்சிகளின் வடிகாலைக் கண்டிருந்தார்கள். குடும்பக் கட்டுமானமும் சாதியக் கட்டுமானமும் ஓரளவு தளரத் தொடங்கியிருந்த அந்தக் காலகட்டத்தில், விநோதமான விடுதலை மனநிலையை ஜென்சியின் குரல் அவர்களுக்கு வழங்கிக்கொண்டிருந்தது.



`அடி பெண்ணே...' என ஆரம்பிக்கும் `முள்ளும் மலரும்' பாடலும், `தெய்வீக ராகம்...' எனத் தொடங்கும் `உல்லாசப்பறவைகள்' பாடலும் ஏதோ ஒருவித மலர்ச்சியை அவர்களுக்கு உண்டு பண்ணின. சொல்லக் கூடாத அல்லது சொல்ல விரும்பாத ரகசியங்களை, இதயத்துக்கு நெருக்கமான மொழியில் அந்தக் குரல் பிரதிபலித்தது. 



ஜென்சியின் பாடல்கள், இப்போதுகூட தனித்துக் கேட்க விரும்பும் பாடல்களாகவே இருந்துவருகின்றன. இளையராஜா, தன் உச்சபட்ச சோதனை முயற்சிகளை எல்லாம் அந்தக் குரலின் வழியேதான் நிகழ்த்திப் பார்த்திருக்கிறார். இதயத்தைச் சட்டெனக் கவ்விக்கொண்டோடும் அந்தக் குரல், ஒரு சூழ்நிலையில் ஏனோ பாடுவதையே நிறுத்திக்கொண்டது.



அந்தக் குரல் பாடாமல்போனதற்கான பின்னணித் தகவல்கள் எதுவாக இருந்தாலும், `ஜென்சி, பெண்ணாக இருந்ததே பிரதான காரணம்' என உணர்ந்துகொள்ள முடிகிறது. ஒரு பெண், தன் போக்கில் தன் வாழ்வை அமைத்துக்கொள்ளவோ, தொடரவோ இந்தச் சமூகம் அனுமதிப்பது இல்லை. அளப்பரிய திறனைக்கொண்டிருந்தாலும் அவர்களும் சராசரிப் பெண்களாகவே நடத்தப் படுகிறார்கள். இன்றும்கூட, ஜென்சி பாடிய பாடல்களே அதிக அளவில் பதிவிறக்கம் செய்யப்படுவதாக இசை நிறுவனங்கள் சொல்கின்றன.
`என் வானிலே...' என்ற `ஜானி' திரைப்படப் பாடலைக் கேட்கும்போது எல்லாம் ஜென்சியின் குரலுக்கு உள்ளே இருந்து ஒளிரும் தீபங்களை நம்மால் பார்க்க முடியும். 



`ஆயிரம் மலர்களே மலருங்கள்...' என்ற `நிறம் மாறாத பூக்கள்' திரைப்படப் பாடலில் பரவிக்கிடக்கும் வாசங்களை இப்போதைய வளரிளம் பருவத்தினர்களும் நுகர்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அந்தப் பாடலில் `எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ?' என்றோர் வரி வரும். அதை உச்சரிக்கையில் ஜென்சியின் குரல் உடைந்து மேலெழும். அணைகட்டி நிற்கும் கண்ணீரைச் சிந்திவிடாத ஜாக்கிரதையோடு அந்த வரிகளை அவர் உச்சரிப்பார். 



ஜென்சி பாடும் முறையில் உள்ள நுட்பங்களைச் சொல்லும் அளவுக்கு நான் இசையறிவு உள்ளவன் அல்ல. என்றாலும், அவர் குரலில் ஏதோ ஒரு மந்திரசக்தி உள்ளதாகவே படுகிறது. என் அக்கா, டிரான்சிஸ்டரை எடுத்துக்கொண்டு தனித்துப்போக விரும்பியதுகூட அந்த மந்திர சக்தியின் மகிமையாக இருக்கிறது என்பதை நம்புகிறேன்.



ஜென்சி பாடிய `தெய்வீக ராகம்...' என்னும் பாடல் இடம்பெற்ற காட்சி. பச்சைப்பசேல் வயல்வெளியில் ஓர் ஓரத்தில் கமல்ஹாசன் நின்றிருப்பார். அவருடைய பார்வை தூரத்தில் வரும் தீபாவை நோக்கியே இருக்கும். வயல்வெளியைக் கடந்த ஓர் ஓடையை வந்து சேருவார் தீபா. அப்போதும் கமல்ஹாசன் தீபாவை ரசித்தபடி இருப்பார். அவர் எதை ரசிக்கிறார் என்பதை விளக்கிக்காட்டிட, தீபா முழங்கால் வரை சேலையைத் தூக்கிக்கொண்டு குத்துக்காலிட்டு உட்காருவது காண்பிக்கப்படும். ஓடை நீரில் சேலை நனையாதிருக்க அவ்வாறு உட்காரும் தீபா, தம்முடைய தாகத்தைத் தணித்துக்கொள்ள கைகளால் நீரை அள்ளிப் பருகத் தொடங்குவார். தீபா அள்ளிப்பருகிய நீர்க்காட்சியில் கமல்ஹாசனின் விரகதாபமும் தணிவதாகக் காட்சியை நகர்த்துவார்கள். பாடலில் இடம்பெற்றிருக்கும் வரிகளுக்கும் அந்தக் காட்சிக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. என்றாலும், தீபாவின் முழங்கால் வாளிப்பைக் காட்டுவதற்காகவே அந்தக் காட்சியை அமைத்திருப்பார்கள்.

அதுகூட பரவாயில்லை. நீரை அருந்திய தீபா, அடுத்து வாயைத்துடைக்க முந்தானையையும் அகற்றுவார், இடுப்பு சேலையை சரிசெய்ய வயிற்றுப்பகுதியை காட்டுவார்.  `ஒரு பெண்ணின் கால் மற்றும் தோள் வாளிப்பைக் காட்டியது போதாது என, மொத்த வாளிப்பையும் ஏன் காட்டுகிறார்கள்?' என யோசிப்பதற்குள் பாடல் முடிந்துவிடும். பாடல் வரிகளில் சொல்லப்பட்டிருப்பது அன்பின் வெளிப்பாடு. ஆனால், காட்சியோ காமாந்தகப் பதிவு. 


கலை என்ற சட்டகத்துக்குள்ளும் பெண் என்பவள் சதைக்கோலமாகவே பார்க்கப் படுகிறாள். குறிப்பிட்ட பாடலைப் பாடிய ஜென்சி, அதன் பிறகு யார் கண்ணிலும் தென்படாமல்போனதற்கும், திரும்பத் திரும்ப தொலைக்காட்சியில் அந்தப் பாடலில் நடித்த தீபா தென்படுவதற்கும் தொடர்பு இருப்பதாகவே படுகிறது.



ன்னுடைய இளவயது முழுக்க அக்காவும் அம்மாவுமே நிரம்பியிருந்தார்கள். அவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதும் திட்டிக்கொள்வதும் பெண் குறித்த பார்வைகளை எனக்குள் வடிவமைத்தன. அவர்களுடைய உரையாடல்கள், பெரும்பாலும் திருமணம் ஆன பெண்ணுக்கும் திருமணம் ஆகாத பெண்ணுக்கும் இடையில் நிகழும் சம்பாஷனைகளாகவே இருந்தன. 



திருமணத்துக்குத் தயாராகவேண்டிய நிர்பந்தத்தை, அக்காவுக்குச் சொல்லிக்கொண்டே இருந்தாள் அம்மா. `போற எடத்துல...' என்ற வார்த்தையைத் தவிர்த்து, அம்மாவால் அக்காவுக்கு எதையும் சொல்ல முடியாமல் இருந்தது. இத்தனைக்கும் இடதுசாரிப் பின்புலம் உள்ள வீடு என்னுடையது. என்றாலும்கூட, அக்காவும் அம்மாவும் அதற்கு அப்பாற்பட்ட மனத்தையே கொண்டிருந்தார்கள். 



`நான் வாக்கப்பட்டு வந்த காலத்துல, உங்க அப்பா வீட்டுல...' என ஆரம்பிக்கும் அம்மாவின் ஒவ்வொரு சொல்லாடலுக்குப் பின்னும் ஏதோ ஒரு கொடூரத் தகவல் பொதிந்திருக்கும். `எத்தனையோ பட்டும் கெட்டும்தான் உங்களை வளர்த்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் இல்லையென்றால், என்றைக்கோ போயிருப்பேன்' என ஆகாயத்தை நோக்கிக் கைகாட்டும் வழக்கத்தை அம்மா கொண்டிருந்தாள். கல்யாணம் ஆன புதிதில், அப்பா வாங்கிவந்த புது டிரான்சிஸ்டரில் பாடல் கேட்டதற்காக அவர் மாமியார் பேசிய இழிசொல்லை, அழாமல் அம்மாவால் சொல்ல முடிந்தது இல்லை. பாடலைக் கேட்கக்கூட உரிமை மறுக்கப்பட்ட ஓர் அம்மா, தன் மகனைப் பாடலாசிரியனாக ஆக்கிப்பார்த்திருக்கிறாள் என்பது அம்மாவுக்கான பெருமைகளில் ஒன்று.



என் வீடு, எனக்கு உரிய எல்லா சாத்தியங்களையும் ஏற்படுத்திக் கொடுத்தது. சண்டைகளும் சச்சரவுகளும் இல்லாமல் இல்லை. அப்பா என்ற ஆணும், அம்மா என்ற பெண்ணும் தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சமூகப் பாத்திரங்களைச் சமரசத்தோடு ஏற்றுக்கொண்டி ருந்தார்கள். கார்ல் மார்க்ஸை அப்பாவும், கருமாரி அம்மனை அம்மாவும் வழிபடுகிறவர்களாக இருந்தார்கள்.



பொழுதாபொழுதுக்கும் பொதுவேலை எனப் போய்க்கொண்டிருந்த அப்பாவுக்கு, அம்மாவின் உள்ளக்கிடக்கையை உணர்ந்துகொள்ளும் சந்தர்ப்பங்கள் வாய்க்கவே இல்லை. உலகத் தொழிலாளர்களை ஒன்றுபடுத்துவதிலும் உள்ளூர் பிரச்னைகளுக்குக் கொடி பிடிப்பதிலும் அவர் கொண்டிருந்த ஆவேசத்தில், அம்மாவின் துயரங்களும் துக்கங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப் படவில்லை. ஒருவகையில் அவருடைய ஆவேசமும் சமூக அக்கறையும் என்னை வளர்த்துக்கொள்ளப் பயன்பட்டனவே தவிர, அம்மாவுக்கும் அக்காவுக்கும் அயர்ச்சியையே ஏற்படுத்தின. 



பஞ்சாலைத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக அப்பா போராடிக் கொண்டிருக்கையில், சம்பளமே வாங்கிவராத அப்பாவிடம் அம்மா போராடத் தொடங்குவாள். இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர அப்பாவுக்குத் தெரிந்திருந்த ஒரே வழி, அம்மாவையும் அந்தப் போராட்டக் களங்களுக்குக் கூட்டிப்போவதாக அமைந்தது. பிறர் பிரச்னைகளைக் காட்டினாலாவது தன் பிரச்னைகள் பெரிது அல்ல என அம்மா நினைப்பாள் என்று அப்பா நம்பினார்.



அதன் விளைவாக அப்போதைய தஞ்சாவூர் மாவட்ட மாதர் சங்கச் செயல்பாடுகளில் அம்மாவும் ஈடுபட்டு, கோஷமிட்டிருக்கிறாள். அப்பாவுக்கு தானும் தன் மனைவியும் கிருஷ்ணம்மாள் - ஜெகநாதனைப்போல ஆதர்சத் தம்பதியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அது எல்லாம் யதார்த்த நிலையில் எடுபடாமல்போனது. வறுமைசூழ்ந்த வீடுகளில் லட்சியவெறி என்பது, கேள்விக்கு உரியதாகவும் கேலிக்கு உரியதாகவுமே மாறிப்போகிறது.



ஒருமுறை வட மாநிலத்தில் நடந்த மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள அப்பா, அம்மாவை அழைத்தார். பிள்ளைகளை விட்டுவிட்டு, தான் வர விரும்பவில்லை என்று எவ்வளவோ சொல்லியும் அப்பா விடவில்லை. வேறு வழி இல்லாமல் அரை மனதோடு அம்மாவும் கிளம்ப, நானும் அக்காவும் தம்பியும் அப்பாயி வீட்டுக்கு அனுப்பப்பட்டோம்.



இரண்டே இரண்டு தினங்கள்தான். ஆனாலும், அந்த இரண்டு தினங்களும் அம்மாவை வைதுகொண்டே இருந்தது அப்பாயி. `வந்தவ நிறுத்தி ஆம்பளையக் கேள்விகேப்பாளா... அத விட்டுட்டு இவளும் சேந்து கூத்தடிக்கிறா!' என்றது. 



நானும் அக்காவும், `அப்பாதான் அம்மாவைக் கட்டாயப்படுத்தினார்' எனச் சொல்லியும், அப்பாயி திறந்த வாயை மூடவில்லை. அம்மாவை வசைபாடுகிறபோது எல்லாம் அடங்காமை என்ற பதத்தைச் சொல்லிவந்த அப்பாயி, அப்பாவைக் கம்பீரமான ஆணாகவே பார்த்தது. 



இரண்டு தினங்கள் கழித்து அப்பாவும் அம்மாவும் எங்களை அழைத்துப்போக கிராமத்துக்கு வந்தார்கள். அன்று நடந்த களேபரத்தையோ பரிமாறப்பட்ட வார்த்தைகளையோ நான் எழுதப்போவது இல்லை. அம்மா, அந்தச் சம்பவத்துக்குப் பிறகு எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை. ஒரு முடிவை ஆணே எடுத்தாலும், அது பாதகமாகப் பார்க்கப்படுகையில் பெண்ணே விமர்சிக்கப்படுகிறாள். அதை அனுபவத்தில் இருந்து புரிந்துகொண்ட அப்பா, அதன் பிறகு எங்கும் தனித்தே கிளம்பினார். அப்போதுதான் ஆணைப்போலவே சிந்திக்கக்கூடிய ஒரு பெண்ணுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படும் அவலச்சூழல் எனக்கு விளங்கத் தொடங்கியது.


மாதக்கணக்கில் அப்பா வீடு திரும்பாமல் இருந்திருக்கிறார். சில நாட்களில், நள்ளிரவில் காவலர்கள் வந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பாவைக் கைதுசெய்து அழைத்துப்போவார்கள்.
நான்கைந்து முறை, திருச்சி சென்ட்ரல் ஜெயிலுக்குப் போய் நானும் அம்மாவும் அப்பாவைப் பார்த்துவிட்டு வந்திருக்கிறோம்; தெருவோரக் கடைகளில் விற்கும் சாத்துக்குடிகளையோ, பேரிக்காய்களையோ ஜெயில் கம்பிகளுக்கு வெளியே இருந்து கொடுத்திருக்கிறோம். 


மாக்சிம் கார்க்கியின் `தாய்’ நாவலை எடுத்துக் கொடுத்து, `இதைப் படி' என அப்பா சொன்னதன் பொருள், சாத்துக்குடியிலும் பேரிக்காயிலும் அடங்கியிருக்கிறது. அப்பா பற்றியிருந்த கொள்கை மீதோ, சார்ந்து இருந்த கட்சி மீதோ அம்மாவுக்கு கருத்தோ... கசப்போ இருந்தது இல்லை. என்றாலும், குடும்பத் தேவைகள் மீது அவர் கொள்ளாதிருந்த அக்கறையைப் பற்றிய வருத்தம் இருந்தது.



`உலக மீட்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஒருவர் உப்பு, புளி சமாச்சாரங்களைப் பற்றி எல்லாம் யோசிப்பாரா?' என நினைக்கலாம். நினைக்கவேண்டியதும் நிறைவேற்றவேண்டியதும் ஓர் ஆணுக்கு உரிய பொறுப்பு என்றே நான் கருதுகிறேன். 



`தாய்’ நாவலைப் படிக்கக் கொடுத்த அப்பாவை எந்தப் பெருமிதத்தோடு பதிவுசெய்கிறேனோ, அதேவிதமான பெருமிதங்களை இன்னபிற லெளகீக விஷயங்களில் அவரால் தர முடியாமல் போயின. என்றைக்கோ வரப்போகிற புரட்சிக்காக, இன்றையும் இன்றைய வாழ்வையும் இழக்கத் துணிவதுதான் லட்சிய வாழ்க்கையின் பரிசு என்றால், அந்தப் பரிசே வேண்டாம் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. இதனால் லட்சிய வாழ்வுக்கு எதிரானவனாக என்னைக் கருதவேண்டியது இல்லை. மாற்றம் என்பது, வீட்டில் இருந்து தொடங்க வேண்டும். சகஜீவியின் சங்கடங்களைப் பொருட்படுத்தாத ஒருவர், லட்சியவாதத்தைப் பின்பற்றுபவராக இருப்பது சாத்தியம் இல்லை. 



க்காவையும் அம்மாவையும் தவிர, வேறு எவருடனும் பழகாது இருந்த என் பள்ளிப் பருவத்தில் எனக்குக் கிடைத்த ஆசிரியைகள் குறிப்பிடத்தக்கவர்கள். மிக ஆரம்பத்திலேயே என்னையும் என் ஆர்வத்தையும் அவர்களால் யூகிக்க முடிந்தது. கலைச்செல்வி, ராஜேஸ்வரி, செல்வநாயகி, வர்ஷா, காயத்திரி, ஆரோக்கியமேரி என வெவ்வேறு பெயர்களால் அவர்கள் அழைக்கப்பட்டாலும், அத்தனை பேரும் எனக்கு ஒருவர்தான். அன்பின் ஊற்றால் அவர்கள் என்னை எப்போதும் ஈரப்பதத்தோடே வைத்திருந்தார்கள். அப்போது புகழ்பெற்றிருந்த கவிஞர்களையும் கவிதைத் தொகுப்புகளையும் அறிமுகப்படுத்தினார்கள். இங்கிதம் தெரியாமல் நான் எல்லை மீறிய சமயங்களில்கூட என் பிழைகளையும் போக்கிரித்தனங்களையும் பொறுத்துக்கொண்டார்கள்.



இச்சைகளின் துய்ப்பாக மட்டுமே பெண்ணைப் புரிந்திருந்த அந்த வயதில், ஒரு பெண்ணின் உடல் உபாதைகளையும் வளர்சிதை மாற்றங்களையும் என்னிடம் பகிர்ந்துகொள்ள அவர்கள் தயங்கியது இல்லை. மர்மங்களுக்குள் சிக்குண்டு நான் என் ஆற்றலை  இழந்துவிடுவேனோ என்று பயந்த அவர்கள், அந்தக் கேடுகளில் இருந்து எல்லாம் என்னைக் காப்பாற்றினார்கள். 



ஒருமுறை செல்வநாயகி மிஸ்ஸிடம், `உங்கள் கண்ணைப் பார்க்க எனக்குக் கூச்சமாக இருக்கிறது' என்றதும், `என்ன கூச்சம்? அதெல்லாம் ஒன்றும் இல்லை' என என் தலையை வருடிக்கொடுத்து நடுநெற்றியில் முத்தமிட்டார். அந்த ஒற்றை முத்தம் என் மொத்த விகல்பத்தையும் துடைத்தெறிந்தது. ஆறுதலோடும் ஆத்மார்த்தத்தோடும் அன்று அவர் என்னிடம் அப்படி நடந்துகொண்ட காரணத்தாலோ என்னவோ, அந்தச் சமயத்தில் என்னோடு படித்த ஓரிரு பெண்கள் மீது எனக்கு ஏற்பட்ட மன எழுச்சியைக்கூட வெளிப்படுத்த முடியாமல்போனது.



பெண்களை நான் தயையுடைவர்களாக உணர்வதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்கள் வாய்த்தன. இன்று வரை எந்தப் பெண்ணாலும் நான் ஏமாற்றப்படவில்லை. துரோகச் செயல்களில் ஈடுபடவோ, குரோதச் சொற்களைப் பயன்படுத்தவோ, அவர்களால் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை. சென்னை என்ற மாய உலகத்திலும் ஒலித்தகட்டில் ஜென்சியின் பாடலைக் கேட்கும் அக்காக்கள் கிடைத்தார்கள். என் கவிதைகளை வாசித்துவிட்டு கருத்துச் சொல்லும் சிநேகிதிகள் நிறைந்தார்கள். ஆனாலும், நான் என் எல்லைகளுக்குள்ளேயே நின்றுகொண்டேன். 



எந்த இடத்திலும் சிநேகங்களைக் காதலாக நீட்டிக்கவோ,   சிரமங்களில்   மாட்டிக்கொள்ளவோ நான் விரும்பவில்லை. எந்தப் பெண்ணாக இருந்தாலும் அவர்கள் கண்களைப் பார்த்தே பேசினேன். கண்களைப் பார்த்துப் பேசப் பழக்கிய செல்வநாயகி மிஸ்ஸை அவ்வப்போது நினைத்துக்கொண்டேன்.



ஒரு பெண்ணோடு ஓர் ஆண் ஏற்படுத்திக் கொள்ளும் சிநேகத்தைவிட, அவளுக்கு அவன் ஏற்படுத்தித்தரும் மரியாதையும் கெளரவமுமே மகத்தானவை. எழுத்தாளர் ரங்கராஜனாக அறியப்பட்டிருக்கவேண்டிய ஒருவர், சுஜாதாவாக அறியப்படும் நிலையை அத்தகைய மகத்துவங்களில் ஒன்றாகக் கருதலாம். 



`எத்தனையோ ஆண்கள் பெண் பெயரில் கதைகளை, நாவல்களை, கவிதைகளை எழுதுகையில், ஏன் ஒரு பெண்கூட ஆண் பெயரில் எழுதத் துணியவில்லை?' என்னும் கேள்வி, என்னுள் எப்போதும் இருக்கிறது. `ஆணாக இருக்கும் தகுதியை அறவே விரும்பாதவளா பெண்?!' என்றும் யோசித்திருக்கிறேன்.



பெண்களை நான் என்னவிதமாக கிரகித்துக்கொண்டேன் என்பதோ, பெண்கள் என்னை என்னவிதமாகச் சகித்துக்கொண்டார்கள் என்பதோ முக்கியம் அல்ல. அவர்களுக்காக நான் எழுதக்கூடிய பாடல்களில் அவர்களைக் கீழ்மைப்படுத்தவோ, கேவலப்படுத்தவோ துணிகிறேனா என்பதுதான் முக்கியம். ஒருசில பாடல்களில் என்னையும் அறியாமல் அப்படியான பிரயோகங்கள் வந்திருக்கலாம். பொது மனிதனாக, பொறுப்புள்ளவனாகக் காட்டிக்கொள்ள முனையும் என்னிடத்திலும் இந்தச் சமூகம் ஒட்டிவைத்த அழுக்குகள் இல்லாமல் இல்லை. போகிறபோக்கில் புழுதி வாரித் தூற்றியிருக்கிறேன். காதல் தோல்வி என்னும் கருமத்தைச் சொல்வதற்காக, அழுகுணிச் சித்தரைப்போல பெண்களைச் சபித்திருக்கிறேன். என்ன செய்ய? `பெண்ணுக்கு ஞானத்தை வைத்தான், புவி பேணி வளர்த்திடும் ஈசன்' என்ற அதே பாரதிதானே `பெட்டைப் புலம்பல் பிறருக்குத் துணையாமோ?' என்றும் எழுதினான்.



ஏதோ ஒரு தாக்கத்தில் `குக்கூ' திரைப்படத்தில் `பொட்டப்புள்ள தொட்டதுமே கொட்டமடிங்கிடுச்சி...' என்று நான் எழுதப்போக,  ` `பொட்டை' என்பது பெண்ணை இழிவுபடுத்தும் சொல் இல்லையா?' என்று என் மனைவி கேட்டாள். அவள் கேட்ட கேள்விக்கான சரியான பதிலை இன்று வரை என்னால் சொல்ல முடியவில்லை. கண் தெரியாதவர்களைப் `பொட்டை' எனச் சொல்லும் ஊர் வழக்கை எழுதியதாக மழுப்பியபோதும், அது உரிய பதில் இல்லை என்பதை உணர்ந்தே இருக்கிறேன். எல்லா ஆணுக்குள்ளும் சமூகம் திணித்துவைத் திருக்கும் இப்படியான முடைநாற்றச் சிந்தனைகள் எனக்குள்ளும் இருப்பதை எண்ணி வெட்கப்படுகிறேன்.



ஆணிடத்தில் பெண்ணும் பெண்ணிடத்தில் ஆணும் கொண்டிருக்கும் அன்புக்கு ஈடாக இந்த உலகத்தில் எதுவுமே இல்லை. அன்பினால் ஒரு பெண் எதைச் செய்யவும் துணிந்துவிடுகிறாள். அன்பு இல்லாமல் போகையிலும் அப்படித்தான். `நீயா... நானா..?' என்ற முஸ்தீபுகளை எல்லாம் களைந்துவிட்டுப் பார்த்தால், அன்பு என்ற ஒற்றைச் சாளரத்தின் வழியேதான் உயிர் பயணித்துக்கொண்டிருக்கிறது. 



ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு பெண் தன் மகனுக்காகப் போராடிக்கொண்டிருக்கும் ஓர் உதாரணம் போதாதா... ஆணைவிடப் பெண் பெரிதெனப் பேச? அடங்கிக்கிடக்கும் பெண்ணாகவே அற்புதம் அம்மாள் இருந்திருந்தால், தூக்குக் கயிற்றில் இருந்த பேரறிவாளனுக்குத் தண்டனைக் குறைப்பு கிடைத்திருக்குமா? ஒரு பெண் ஒரு காரியத்தை முன்நின்று நடத்துவதும், அதே காரியத்துக்காக செங்கொடி என்கிற ஓர் இளம்பெண் தீக்குளித்து மரித்துப்போவதும் சாத்தியம் என்றால், பெண்களால் சாத்தியப் படாதது எது? அன்பின் தராசு ஆணையும் பெண்ணையும் ஒன்றாகவே எடைபோடுகிறது.



திருமணம் முடிந்த ஆறாவது மாதத்தில் ஒருநாள், என் மனைவி அன்புச்செல்வியோடு சொந்த ஊருக்கு காரில் போய்க்கொண்டிருந்தேன். அப்போது பண்பலையில் ஜென்சி பாடிய, `இரு பறவைகள் மலை முழுவதும் இங்கே பறந்தன' என்ற பாடல் வந்தது. சட்டென அவளையும் அறியாமல் `அய்யோ! இந்தப் பாட்டுன்னா எனக்கு அப்படிப் புடிக்கும்' எனச் சொல்லி, வானொலி சத்தத்தைக் கூட்டினாள். எதிர்பார்க்காத அந்தச் சிறு நொடியில், முந்தைய தலைமுறையைச் சேர்ந்த என் அக்காவைப் போலவே என் மனைவியும் நடந்துகொண்டது ஆச்சர்யமாக இருந்தது. `கண்ணை மூடிக்கொண்டு இந்தப் பாடலைக் கேட்டால் அப்படியிருக்கும்' என்றாள். `இவங்க பாடின மத்த பாட்டைக் கேட்டிருக்கியா?' என்றேன். `அவங்க பாடின எல்லா பாட்டையும் ஃபாத்திமா அக்கா மனப்பாடமாப் பாடும்' என்றாள். 



எல்லா அக்காக்களுமே ஜென்சியின் குரலில் பித்துண்டவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் உலகத்துக்குள்ளும் ரகசியத்துக்குள்ளும் சஞ்சரிக்கக்கூடிய ஆண்கள் பாக்கியவான்கள்.

நீங்கள் ஆப்பிளா? பேரிக்காயா? - டாக்டர் கு.கணேசன்

Dinakaran Daily News





அபர்ணா இரண்டு வயதுக் குழந்தை. ஒல்லியாக இருந்தாள். வயதுக்கு ஏற்ற எடை இல்லை. ஆனால், சுட்டியாக இருந்தாள். என் அறைக்குள் நுழைந்ததும் மழலையில் எனக்கு “குட் ஈவினிங்” சொன்னாள். என் மேஜை மீது இருந்த பேனாவை எடுப்பதும், பிரிஸ்கிரிப்ஷன் பேடைப் புரட்டுவதுமாக இருந்தாள்.

“என்ன விஷயம்?” என்றேன். “குழந்தை ஒல்லியாக இருக்கிறாள். குண்டாக வேண்டும். டானிக் எழுதிக்கொடுங்கள்!” என்றனர் பெற்றோர். “நோய் ஏதுமின்றி குழந்தை ஓடியாடிக்கொண்டிருந்தால், அதுவே போதும். குண்டாக இருக்க வேண்டும் என்பது இல்லை!” என்றேன். கேட்கவில்லை. இப்படி பலருக்கும் குழந்தை கொழு கொழுவென குண்டாக இருந்தால்தான் அழகு, ஆரோக்கியம். பசிக்கு ஒரு டானிக், சத்துக்கு ஒரு டானிக் எழுதிக்கொடுத்தேன். இவை போதாதென்று வீட்டில் ஹார்லிக்ஸ், பூஸ்ட், புரோட்டீன் பவுடர் என்று ஏகப்பட்ட சத்துணவுகளையும் ஊட்டியதில், அடுத்த ஆறு மாதங்களில் அபர்ணா குண்டாகிவிட்டாள். பெற்றோரின் சந்தோஷத்துக்கு அளவே இல்லை. 

அதே அபர்ணா கல்லூரிப் படிப்பை முடித்து, கல்யாணத்துக்குத் தயாராகிவிட்டாள். அப்போது என்னிடம் அழைத்து வந்தனர். “அபர்ணா ரொம்பவே வெய்ட் போட்டுட்டா, டாக்டர். ஏதாவது மாத்திரை கொடுத்து உடம்பைக் குறையுங்கள்” என்றனர். அவள் குண்டாக இருப்பதால், நல்ல மாப்பிள்ளை கிடைப்பது தடைபட்டுவிடக்கூடாது என்ற கவலை அவர்கள் முகத்தில் தெரிந்தது!

குண்டாக இருப்பதால் ஏற்படக்கூடிய கல்யாணத்தடை போன்ற சமூகக் கவலைகளைவிட உடல்ரீதியாகக் கவலைப்படவும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது அநேகம் பேருக்குத் தெரிவதில்லை. இன்றைய வாழ்க்கைச் சூழலில் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, பெரியவர்களுக்கும் உடல் உழைப்பு குறைந்துவிட்டது. நம் உணவுமுறையும் மாறிவிட்டது. ஆரோக்கியமான இந்தியப் பாரம்பரிய உணவுமுறையை மறந்து, ஃபாஸ்ட் ஃபுட் கலாசாரத்துக்கு மாறிவிட்டோம். இதன் விளைவால், ‘இளம் வயதிலேயே உடல் பருமன் வந்து அவதிப்படுவோர் இந்தியாவில் மட்டும் 4 கோடிப் பேர்’ என்கிறது உலக சுகாதார நிறுவனம். 

இது 2030ல் இரண்டு மடங்காக அதிகரித்துவிடும் என்று அது எச்சரித்துள்ளது. உடல் பருமன் பிரச்னை தனித்து வந்தால் பரவாயில்லை. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், உளவியல் பிரச்னைகள், மூட்டுவலி, முதுகுவலி, குறைவான உறக்கம், குடல் இறக்கம், குடல் புற்றுநோய், குழந்தைப்பேறு இல்லாதது, மாரடைப்பு, பக்கவாதம், பித்தப்பையில் கல் என்று அடுத்தடுத்து இதர பிரச்னைகளையும் தன்னுடன் அழைத்து வரும். ‘உடல் குண்டு நம் ஆரோக்கியத்துக்கு வேட்டு வைக்கும் ஓர் அணுகுண்டு’ என்கிறது மருத்துவம். 

ஆனால், இதைப் பலரும் புரிந்துகொள்வதில்லை. ‘குண்டுக் குழந்தைகள்தான் ஆரோக்கியமானவர்கள்’ என்று தொலைக்காட்சி விளம்பரங்கள் காலம் காலமாக நம் பொது புத்தியில் புதைத்து வைத்திருப்பது ஒரு காரணம். நடு வயதில் ‘செல்லத் தொப்பை’ இருப்பதைப் பெருமையாகக் கருதுவோரும் நம்மிடம் அதிகம். 

எது உடல் பருமன்?
உங்கள் எடை சரியாக இருக்கிறதா, இல்லையா என்று சர்டிஃபிகேட் தருவது ‘பாடி மாஸ் இண்டெக்ஸ்’ (Body Mass Index - BMI).  இது ஒரு சின்ன கணக்குதான். உங்கள் எடையை கிலோவில் தெரிந்துகொள்ளுங்கள். உயரத்தை மீட்டரில் அளந்து கொள்ளுங்கள். உயரத்தின் அளவை அதே அளவால் பெருக்கிக் கொள்ளுங்கள். உடல் எடையை இந்த அளவால் வகுத்துக் கிடைக்கும் விடை உங்கள் பி.எம்.ஐ. பி.எம்.ஐ = (உடல் எடை கிலோகிராமில்)/(உயரம் × உயரம் மீட்டரில்) இது 18.5க்குக் கீழே இருந்தால், உடல் எடை குறைவு (Under weight) என்று அர்த்தம். 18.5 முதல் 22.5க்குள் இருந்தால், சரியான உடல் எடை (Normal weight).  22.5-27.4 என்று இருந்தால் அதிக உடல் எடை (Over weight). 

27.5க்கு மேல் என்றால் உடல் பருமன் (Obesity). இது 40ஐக் கடந்துவிட்டால், ஆபத்தான உடல் பருமன் (Extreme Obesity) என்று அர்த்தம். இது சமீபத்தில் சொல்லப்பட்டிருக்கும் இந்தியர்களுக்கான பி.எம்.ஐ. அளவு. குண்டாக இருப்பதில் இரண்டு வகை உண்டு. உடல் முழுவதும் குண்டாக இருப்பது முதல் வகை. இதை ‘பேரிக்காய் மாடல்’ என்கிறோம். வயிற்றுப்பகுதி மட்டும் குண்டாக இருப்பது இரண்டாவது வகை. இதை ‘ஆப்பிள் மாடல்’ என்கிறோம். இரண்டுமே மோசம்தான். பேரிக்காய் வடிவத்தினரைவிட ஆப்பிள் வடிவத்தினருக்கு மேற்சொன்ன நோய்கள் அதிகம் வருகின்றன என்கிறது ஓர் ஆராய்ச்சி முடிவு. இவர்கள்தான் அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். 

ஆங்கிலத்தில் ஒரு மருத்துவ மொழி உண்டு. ‘Increase in waist line will decrease the life line’. சராசரி வயதுள்ள ஆண்களுக்குச் சரியான இடுப்புச் சுற்றளவு 88 செ.மீ.; பெண்களுக்கு இது 80 செ.மீ. இந்த அளவுக்கு மேல் அதிகமாக இருப்பவர்கள் உடல் பருமன் எனும் ஆபத்தான எல்லைக்குள் கால் வைத்து விட்டார்கள் என்று அர்த்தம். சரி, உடல் பருமனுக்கு என்ன காரணம்?

முதல் காரணமும் முக்கியக் காரணமும் உணவுதான். ஆனால், குண்டாக இருப்பவர்களைக் கேட்டுப் பாருங்கள். “ஐயோ, நான் எதுவுமே சாப்பிடவில்லை. ஏன்தான் இப்படி குண்டாகிறேனோ!” என்று புலம்புவார்கள். இவர்களின் உணவுப் பட்டியலைக் கூர்ந்து கவனித்தால்தான் அவர்கள் செய்யும் தவறுகள் புரியும். இவர்கள் பல நேரங்களில் அதிமாகவோ அல்லது அதிக கலோரி கொண்ட உணவுகளையோ சாப்பிட்டிருப்பார்கள். முக்கியமாக, இவர்கள் சாப்பிடும் நொறுக்குத்தீனிகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ள மாட்டார்கள், அதுதான் எதிரி என்பது தெரியாமல்! 

நமக்கு சராசரியாக தினமும் 1800 கலோரி உணவுதான் தேவை. ஆனால், நாம் சாப்பிடும் தினசரி உணவில் சராசரியாக 3000 கலோரி உள்ளது. அதிக கொழுப்புள்ள, எண்ணெயில் வறுத்த, பொரித்த இறைச்சி உணவுகள், முட்டை, தயிர், நெய், வெண்ணெய், இனிப்புகள், நொறுக்குத் தின்பண்டங்கள் போன்றவற்றை அதிகமாகச் சாப்பிடுவது இதற்குக் காரணம்.

உடல் உழைப்பு குறைந்துபோனது அடுத்த காரணம். உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்க்கும் வசதிகள் அதிகமாகிவிட்டன. மாடிப்படி ஏறுவதைத் தவிர்த்து ‘லிஃப்ட்’ பயன்படுத்துகிறோம். அருகில் உள்ள கடைக்குக்கூட டூ வீலரில்தானே செல்கிறோம்! குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி விளையாட்டு நேரம் ரொம்பவே சுருங்கிவிட்டது. இப்படி உடல்ரீதியாகச் செலவழிக்கும் சக்தி குறைந்துவிட்டது. சாப்பிடும் உணவிலுள்ள சக்தி இதனால் தேங்கிவிடுவதுதான் தொப்பைக்கு வரவேற்பு வளையம் வைக்கிறது.

நீண்ட காலம் எடுத்துக்கொள்ளும் ஹார்மோன் மாத்திரைகள், மனச்சோர்வை நீக்கும் மருந்துகள், ஸ்டீராய்டு மாத்திரைகள், பரம்பரை போன்ற காரணங்களால் உடல் எடை கூடும். தைராய்டு சுரப்பு குறைவது, இதயச் செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு போன்ற நோய்கள் உடலின் திரவக் கொள்ளளவை அதிகரித்து, உடல் எடையை அதிகரிக்கும். உடல் பருமனுக்குக் காரணம் எதுவென்று சரியாகத் தெரிந்துகொண்டு அதை சரி செய்தால், உடல் எடை குறையும். ஆனால், பலரும் பட்டினி போட்டால் உடல் எடை குறைந்துவிடும் என்று நினைத்து பட்டினி கிடப்பார்கள். இது தப்பான கணக்கு. 

ஒருவேளை சாப்பிடாமல் இருந்துவிட்டு, அடுத்த வேளை சாப்பிடும்போது அவர்களையும் அறியாமல் அதிகமாகச் சாப்பிட்டுவிடுவார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இன்னொரு ‘கோஷ்டி’ இருக்கிறது. மாத்திரை சாப்பிட்டால் ஸ்லிம்மாகி விடலாம் என்று ஆசை காட்டும் மாயாஜால விளம்பரங்களுக்கு மயங்கி, இவர்கள் மாதக் கணக்கில், டன் கணக்கில் மாத்திரை சாப்பிடுவார்கள். ஆயிரக் கணக்கில் பணம் கரைந்து போனதும், கிட்னி சட்னியானதும்தான் மிச்சம். உடல் எடை குறையாது. 

நம் உடல் எடை ஒரே நாளில் கூடிவிடுவதில்லை. ஆனால் எடை குறைப்பு மட்டும் உடனே நிகழ்ந்துவிட வேண்டும் என்று பேராசைப்படுகிறோம். உடல் இளைக்க பயிற்சி இருக்கிறதா, மருந்து இருக்கிறதா, லேகியம் இருக்கிறதா என விளம்பரங்களைத் தேடி அலைகிறோம். ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உடல் எடை திடீரெனக் குறைந்தாலும் ஆரோக்கியத்துக்கு ஆபத்து! படிப்படியாகத்தான் அது குறைய வேண்டும். 

உங்கள் உடல் வாகையும் உணவுப் பழக்கத்தையும் முறையாக ஆராய்ந்து, படிப்படியாக மாற்றங்களை நிகழ்த்தினால், நிச்சயம் பலன் கிடைக்கும். மாதத்துக்கு அரை கிலோ எடை குறைந்தால், சரியான பாதையில் செல்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு நீங்களே ‘சபாஷ்’ சொல்லிக்கொள்ளலாம்!

எடையைக் குறைக்க என்ன வழி?

* டயட்டீஷியன் துணையோடு ஆரோக்கிய உணவுத் திட்டம் தயாரிக்க வேண்டும். காலையில் இட்லி, இடியாப்பம் போன்ற ஆவியில் அவித்த உணவுகளை அளவோடு சாப்பிட வேண்டும். கேசரி, வடை, பூரி, பட்டர் நாண், ருமாலி ரொட்டி போன்றவை ஆகாது. மதியம் ஒரு பங்கு சாதம், இரண்டு மடங்கு காய்கறிகள். இரவில் சாதம் வேண்டாம். எளிதில் செரிக்கும் டிபன் வகைகள் பெஸ்ட். உறங்குவதற்கு முன்பு ஒரு பழம் சாப்பிட வேண்டும்.

* கிழங்கு வகைகளைக் குறைத்துக்கொண்டு, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, கீரைகள், பாகற்காய் போன்ற கலோரி குறைந்த காய்களைச் சாப்பிட வேண்டும்.

* உணவில் எண்ணெய், வனஸ்பதி குறைப்பது முக்கியம். பாமாயில் வேண்டவே வேண்டாம். நெய், வெண்ணெய், தயிர், முந்திரி, பாதாம், ஐஸ்கிரீம் ஆகியவற்றை நினைத்துக்கூட பார்க்கக் கூடாது.

* அசைவம் விரும்புகிறவர்கள் தோல் மற்றும் கொழுப்பு நீக்கப்பட்ட கோழி இறைச்சி மற்றும் மீன் உணவைக் குழம்பு வைத்து அளவோடு சாப்பிடலாம். ‘ரோஸ்ட்’ உணவுகள் ஆகாது. முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் சாப்பிடலாம். மஞ்சள் கரு வேண்டாம். 

* மாலையில் பஜ்ஜி, வடை, சமோசா, சிப்ஸ் போன்றவற்றுக்குப் பதிலாக  சுண்டல், பயறு, பழ சாலட் சாப்பிட வேண்டும்.

* ஃபாஸ்ட் ஃபுட் ஆகவே ஆகாது.

* மதுவுக்கு ‘நோ’ சொல்லுங்கள்.

* தினமும் ஒரு மணி நேரம் விளையாட்டு, நடைப்பயிற்சி, உடற்பயிற்சி, நீச்சல் பயிற்சி என்று எது முடிகிறதோ அதைச் செய்ய வேண்டும்.

* ‘லிப்போசக்‌ஷன்’ என்ற கொழுப்பு நீக்கல் சிகிச்சை உதவலாம். உடல் பருமனைக் குறைக்க பேரியாட்ரிக் சிகிச்சை (Bariatric surgery) இருக்கிறது. இதில் ‘ஸ்லீவ் கேஸ்ட்ரெக்டமி’ (Sleeve Gastrectomy) எனும் அறுவை சிகிச்சை நல்ல பலன் தருகிறது.

கொசுவலை கோலாகலம்!

Return to frontpage




கொசுவலைகளின் உபயோகம் குறைந்துகொண்டே வருகிறது. அதற்குப் பதிலாக கொசுக் கொல்லிகள் வந்துவிட்டன. இப்போது எல்லா வீடுகளிலும் பேட்டரியில் சார்ஜ் செய்யப்படும் கொசு மட்டைகள் வந்துவிட்டன. இவற்றால் கொசுக்களைப் பொரித்துக் கொட்டவே நேரம் சரியாக இருக்கிறது. எப்போது தூங்குவது?

அந்தக் காலத்தில் கொசுவலை கட்டித்தான் தூங்கச் செல்வோம். கொசுவலை ஒரு அஹிம்சை சாதனம் என்பார் அப்பா. அப்படியும் கொசுவலைக்குள் நுழைந்துவிடும் ஒன்றிரண்டு கொசுக்களை அடிப்பதில் போட்டி போடுவோம். அப்பா எங்களைத் தடுப்பார்.

"அப்பா நம்மைக் கடிக்கிற கொசுக்களைக் கொல்வதில் என்ன தப்பு?"

"கடிச்சா கொல்லணுமா? நம்மைக் காப்பாத்த கொசுவலை இருக்கே! நம்மைத் தற்காத்துக்கொள்ளணும் குழந்தைகளா. கொசுவை மட்டுமல்ல; கொடிய பிராணி களையும் கொல்லக் கூடாது!

அப்பா ஒரு பள்ளி ஆசிரியர். இப்படியாக அப்பாவின் அடுத்த நாள் வகுப்பறை, முதல் நாள் எங்கள் வீட்டுக் கொசுவலைக்குள்ளிருந்தே ஆரம்பமாகும்.

கொசுவலைக்குள் தூங்குவது தனி சுகம். கொசுவலைக்குள் படுத்துக்கொண்டு வெளியே பார்த்திருக்கிறீர்களா? மங்கலான உருவங்கள் மஸ்லின் போர்த்தியபடி ஒரு அலாதியான அழகுடன் நடமாடும்.

கொசுவலைக்குள் ஒரு மனோகரமான வாசனை தவழும். கொசுவலை தேவைப்படாத நாட்களில் அதனைச் சுருட்டி, அதற்குள் நாப்தலின் உருண்டைகள் ஒன்றிரண்டைப் போட்டு வைப்பதால் வருகிற வாசனை அது!

படுக்கப் போகும்முன் கொசுவலை கட்டுகிற வேலை ஒவ்வொரு இரவும் கோலாகலமாகவே நடக்கும். அப்பா ஒண்டி ஆளாகச் செய்துவிடுகிற வேலையை நாங்கள் குழந்தைகள் மூன்று பேர் சேர்ந்து, கோணல்மாணலாகச் செய்வோம்.

நாலு பக்கமும் நாடாவை இழுத்து ஒழுங்காகக் கட்டினால்தான் கொசுவலை என்னும் சிறிய நூலறையைச் சிருஷ்டிக்க முடியும். எங்கள் வீட்டில் சிறியதும் பெரியதுமாக இரண்டு கொசுவலைகள் இருந்தன.

அப்பாவுக்குக் காய்ச்சல் வந்துவிட்டால் (அடிக்கடி அவருக்கு ஃபைலேரியல் காய்ச்சல் வரும்) சிறிய கொசுவலையில், சின்ன திண்ணையில் படுத்துக்கொள்வார். நாங்கள் பெரிய கொசுவலையில் தூங்குவோம்.

சிலசமயம், அப்பா - அம்மா குடும்பச் சண்டை கொசுவலைக்குள்ளும் தொடரும். குடும்பச் சச்சரவுகள் கொசுக்களைவிட மோசம். அவையும் உள்ளே நுழைய முடியாதபடி ஒரு கொசுவலை இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

அப்பாவுக்குக் கோபம் வந்துவிட்டால், கொசுவலையை விட்டு வெளியேறுவார். இதுதான் அவர் கோபத்தின் உச்சம். 'உள்ளே வாங்க… உள்ளே வாங்க' என்று அம்மா கத்துவார். அப்பா கொசுவலையைத் திரும்பிப் பார்க்காமல் தெருவில் இறங்கி நடப்பார்.

அப்புறம்?

யாருக்குத் தெரியும்? தூங்கிவிடுவோம்.

காலையில் பார்த்தால், அப்பா கொசுவலைக்குள் தூங்கிக்கொண்டு இருப்பார்.

'அவரவர் வீட்டில் என்ன உசத்தியான பொருள் இருக்கிறது?'- கேட்பவன் வாயை அடைக்கும் போட்டியில் வகுப்பில் கடைசியாக நான்தான் ஜெயிப்பேன்.

"எங்க வீட்டுல கொசுவலை இருக்கே!"

அது ஒரு குக்கிராமம். பள்ளியில் என்னோடு படித்தவர்களில் சிலர் ஏழைக் குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் கொசுவலையைப் பார்த்ததுகூடக் கிடையாது.

அப்படியே வாயடைத்துப் போவார்கள்.

"எவ்ளோ பெரிசுடா?"

"அப்படியே வானம் வரைக்கும் பெரிசா இருக்கும்டா" என்று அளப்பேன்.

"அப்ப நட்சத்திரமெல்லாம் கொசுவலைக் குள் மாட்டிக்குமா?"

"ச்சீ… எங்க அப்பா ரொம்ப நல்லவருடா… நட்சத்திரங்களை ஒண்ணும் பண்ணமாட்டார்!"

"டேய்! ஒருநாள் ஒங்க வீட்டுக்கு அழைச்சுட்டுப் போயி, கொசுவலையைக் காமிடா!"

கொசுவலையைக் காண்பிக்கக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தீப்பெட்டி லேபிள்கள்தான் கட்டணம்.

வீட்டுக்கு வந்த நண்பர்களுக்கு அம்மா வெல்லமும் முறுக்கும் கொடுத்தார். ஒவ்வொருத்தர் பெயராகக் கேட்டார். பசங்க மெல்ல என் காதைக் கடித்தார்கள்.

"டேய்! கொசுவலையைக் காட்டுடா!"

"என்ன தம்பி..! என்ன வேணும் உங்களுக்கு?"

"ஒண்ணுமில்லே…" என்று நாணிக் கோணினார்கள்.

"அம்மா அவனுங்களுக்கு நம்ம கொசு வலையைப் பார்க்கணுமாம்!"

மடித்து வைத்த கொசுவலையைக் கொண்டுவந்து காண்பித்தார் அம்மா. அதைப் பார்த்து எல்லோரும் சிரிப்பை அடக்குவது மாதிரி வாயைப் பொத்திக்கொண்டார்கள். பிறகு, வெளியே வந்து என்னிடம் கேட்டார்கள்.

"இதுதான் கொசுவலையா? நல்லாவே இல்லை!"

"நாங்க என்னமோன்னுல்ல நெனச்சோம்!"

"இதுக்குள்ள கொசு வராதாக்கும்… போடா போ!"

நம்பாமல் வீடு நோக்கி நடந்தார்கள்.

அன்றிரவு கொசுவலைக்குள் எனக்குத் தூக்கமே வரவில்லை.

நட்சத்திரங்களும் மாட்டிக்கொள்ளும் பிரம்மாண்டமான கொசுவலையை நான் பெரியவன் ஆனதும் செய்வேன் என்று நினைத்துக்கொண்டேன்.

அதை ஆமோதிப்பதுபோல் என் காதருகே ஒரு கொசு 'ஙொய்…'என்று ரீங்கரித்தது.

- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

தேசிய ஓய்வூதியத் திட்டம் - ஓர் பார்வை

அனைத்து மக்களுக்கும் முதுமைக் காலத்தில் பயன்படும் வகையில் புதிய ஓய்வூதியத் திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப் பட்டது. அது முதல் அரசு ஊழியர்கள், தனியார் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்து ஓய்வூதியப் பலன்கள் பெற வழி செய்யப்பட்டது. 


என்.எஸ்.டி.எல். (NSDLஎனும் பொது நிறுவனம் இந்தத் திட்டத்தின் கணக்குகளை பராமரித்து செயல்படுத்தும் நிறுவனமாக அங்கீகரிக்கப் பட்டது. 

18 முதல் 60 வரையிலான வயதுள்ளவர்கள் இத்திட்டத்தில் இணைந்து சேமிக்கலாம். 

பென்சன் பண்டு ரெகுலேட்டரி அன்டு டெவலப்மென்ட் அத்தாரிட்டி எனும் நிறுவனம் இந்தத் திட்டத்தின் ஆய்வு மற்றும் குறைதீர்க்கும் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது. 

ராணுவத்தினர் மட்டும் இத்திட்டத்தில் சேர்வதிலிருந்து விலக்களிக்கப் பட்டுள்ளனர். 

இத்திட்டத்தில் சேர்பவர்கள் நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண் எனப்படும் பெர்மனென்ட் ரிட்டையர்மன்ட் அக்கவுண்ட் நம்பர் (பிரான் - PRAN) எனும் எண் பெற வேண்டும். வருமான வரித்துறையின் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (பான்) போல ஒருவர் ஒரு எண் மற்றும் பெற முடியும். பான் கார்டு மாதிரியே அடையாள அட்டை அளிக்கப்படும். அந்த அட்டையின் மூலம் நமது புதிய ஓய்வூதியக் கணக்கை நிர்வகிக்கலாம். 

புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அடுக்கு 1 மற்றும் அடுக்கு 2 (Tier – I and Tier II) என இருவகையான கணக்குகள் உள்ளன. 

அடுக்கு 1 – ஓய்வூதியத்திற்கான சேமிப்பு மற்றும் முதிர்வடைந்த பின்னரே பலன் கிடைக்கும். இக்கணக்கில் சேமிக்கப்படும் தொகைக்கு வருமான வரிச்சலுகை பெறலாம். 

அடுக்கு 2 – சேமிப்புக் கணக்கு மற்றும் தேவைப்படும்போது பணத்தை பெற்றுக் கொள்ளலாம். இதில் சேமிக்கப்படும் தொகைக்கு வரிச்சலுகை எதுவும் கிடையாது. 

இந்தக் கணக்குகளை இணைய வழியிலும் துவக்கலாம்.

மேலும் தகவலுக்கு

http://www.pfrda.org.in/

ஞாயிறு, 11 டிசம்பர், 2016

திருவண்ணாமலை கிரிவலமும் அஷ்டலிங்க தரிசனமும்...

மலையே சிவமாகத் திகழும் உன்னதத் தலம் திருவண்ணாமலை திருத்தலம். இங்கே கிரிவலம் வருவது பிரசித்தி பெற்ற வழிபாடு. கிரிவலம் வருவது அக்னிமலையாக விளங்கும் சிவனாரையே வலம் வந்து வழிபடுவதாகும். அதுமட்டுமல்ல, கிரிவலப் பாதையில் நான் ஐயனின் எட்டு திருவுருவங்களையும் தரிசிக்கலாம். எட்டு திசைகளில் இருந்தும் நம்மைக் காப்பாற்றி அருள்புரிவதற்காகவே ஐயன் எட்டு லிங்கத் திருமேனிகளாக திருக்காட்சி தருகிறார்.
அஷ்டலிங்கங்களையும் வழிபடுவதால் நமக்கு கிடைக்கக்கூடிய புண்ணிய பலன்கள்...
திருவண்ணாமலை
இந்திரலிங்கம்:
கிரிவலப்பாதையில் முதலில் நாம் தரிசிப்பது இந்திரலிங்கம். கிழக்கு திசையில் அமைந்திருக்கும் இந்தக் கோயிலுக்கு அதிபதி சூரியனும் சுக்கிரனும் ஆவர். இந்திரலிங்கத்தை தரிசித்து வழிபட்டால், லக்ஷ்மி கடாட்சமும், புகழுடன் கூடிய வாழ்க்கையும் அமையும்.
அக்னி லிங்கம்:
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் தாமரைக் குளத்துக்கு அருகில் தென் கிழக்கு திசையில் அமைந்திருக்கிறது அக்னி லிங்கம். இந்த திசைக்கு அதிபதி சந்திரன். அக்னி லிங்கத்தை தரிசித்து வழிபட்டால், எதிரிகள் தொல்லை, மனச் சஞ்சலம் போன்றவைகள் நீங்குவதுடன் நோயற்ற வாழ்க்கையும் அமையும்.
யமலிங்கம்:
கிரிவலப் பாதையில் 3-வதாக நாம் தரிசிப்பது யமலிங்கம். கோயிலுக்கு அருகிலேயே சிம்ம தீர்த்தம் உள்ளது. யமலிங்கம் அமைந்திருக்கும் தென் திசைக்கு அதிபதி செவ்வாய். இங்கு ஐயனை தரிசித்து வழிபட்டால், கடன் தொல்லைகள் விலகும். பொருளாதார வளர்ச்சி உண்டாகும். சகோதரர்களால் நன்மைகள் ஏற்படும்.
நிருதி லிங்கம்:
கிரிவலப் பாதையில் 4-வதாக நாம் தரிசிப்பது நிருதி லிங்கம். நிருதிலிங்கத்துக்கு முன்பு உள்ள நந்திதேவருக்கு அருகில் இருந்து மலையைப் பார்க்கும்போது, மலையில் சுயம்புவாகத் தோன்றியதுபோல் அமைந்திருக்கும் நந்தியை தரிசிக்கலாம். நிருதிலிங்கம் அமைந்திருக்கும் திசை நிருதி திசை எனப்படும் தென் மேற்கு திசையாகும். இந்த திசைக்கு அதிபதி ராகு. நிருதிலிங்கத்தை வழிபட்டால், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
வருண லிங்கம்:
மேற்கு திசையில் அமைந்திருப்பது வருணலிங்கம். கோயிலின் அருகிலேயே அமைந்துள்ளது வருண தீர்த்தம். இந்த திசையின் அதிபதி சனி. வருணலிங்கத்தை வழிபட்டால் பொருளும் புகழும் நிறைந்த வாழ்க்கை உண்டாகும். மேலும் தீராத நோய்களில் இருந்து நிவாரணமும் கிடைக்கும்.

வாயு லிங்கம்:
வாயுமூலை எனப்படும் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதால், வாயுலிங்கம் என திருநாமம் கொண்டுள்ளார் ஐயன். இந்த திசைக்கு அதிபதி கேது. வாயுலிங்கத்தை தரிசித்து வழிபட்டால் எதிரிகள் தொல்லை, பொறாமை, கண் திருஷ்டி போன்ற தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

குபேரலிங்கம்:
குபேரனுக்கு உரிய வடக்கு திசையில் அமைந்திருப்பதால் சிவனார் குபேரலிங்கம் என்னும் திருப்பெயருடன் அருள்கிறார். இந்த திசைக்கு அதிபதி குரு. குபேரலிங்க மூர்த்தியை வழிபட்டால், செல்வம் பெருகும். மனதில் சாந்தியும் சந்தோஷமும் நிலவும்.
ஈசான்ய லிங்கம்:
வடகிழக்கு திசையில் அமைந்துள்ள சிவலிங்க மூர்த்தம் ஈசான்ய லிங்கம் ஆகும். இந்தக் கோயில் தரைமட்டத்தில் இருந்து சற்று கீழே அமைந்திருக்கும். இந்த திசையின் அதிபதி புதன். இங்கு ஐயனை வழிபட்டால், மனம் ஒருமைப்படும். கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கலாம்.
திருச்சிற்றம்பலம்

வை, பூமாலை, சுந்தரபாண்டியம்

செவ்வாய், 6 டிசம்பர், 2016

கண்ணீர் அஞ்சலி


மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள்

தோற்றம் 24.02.1948                                                                          மறைவு 05.12.2016





மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்கள் 05.12.2016 இரவு 11.30 மணி அளவில் மறைந்தார். தமிழக அரசு ஒரு வாரம் துக்கம் அனுஷ்டிக்க உத்தரவிட்டுள்ளது. 

மக்களால் நான், மக்களுக்காக நான் என்ற முழக்கத்துடன் தமிழகத்தை ஆட்சி செய்து வந்த இரும்புப் பெண்மணியை இழந்து வாடும் அனைவருக்கும் சாலியர் குரல் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 





வெள்ளி, 2 டிசம்பர், 2016

காலத்தின் வாசனை | இலை போயாச்சு!


Return to frontpage


சென்னை ஓட்டல் ஒன்றில் மதிய உணவு சாப்பிட உட்கார்ந்தேன். இலை போட்டார்கள். தொட்டுப் பார்த்தேன். வாழை இலை வடிவத்தில் கத்தரித்த பிளாஸ்டிக் வாழை இலை. நான் எழுந்துகொண்டேன். “சார், என்ன ஆச்சு?” என்றார் இலை போட்டவர். “ நிஜமான வாழை இலையில்தான் சாப்பிடுவது வழக்கம்” சொல்லிக்கொண்டே வெளியேறினேன். 

“சாருக்கு நிஜமான வாழை இலை வேணுமாம்” என்ற கேலியும் மற்றவர்கள் சிரிப்பதும் கேட்டது. 

நாள்தோறும் வீடுகளில் வாழை இலையில் சாப்பிட்ட காலம் ஒன்று இருந்தது. தெருவில் “வாழை இலை…வாழை இலை…” என்று கூவி விற்பார்கள். வாழை இலை சாப்பாட்டுக்குத் தனி ருசி உண்டு. சூடாகப்பரிமாறிய சாதத்தின் சுவையை வாழை இலையின் வாசனை கூட்டிவிடும். எளிய உணவைக் கூட வாழை இலையில் பரிமாறினால், மனதில் மகிழ்ச்சி உண்டாகும். 

தஞ்சாவூர் அருகில் உள்ள குக்கிராமத்தில் வசித்த நண்பரைப் பார்க்க இரண்டு மூன்று பேர் முன்னறிவிப்பு இல்லாமல் போய்விட்டோம். 

மழை பெய்துகொண்டிருந்தது. அந்த வேளையிலும் நண்பரின் அம்மா கொல்லைப்புறத்துக்கு ஓடிப்போய் வாழை இலை கொய்துவந்து சாப்பாடு பரிமாறினார். 

பச்சைப் பசேல் என்ற குருத்து நுனி இலைகள்… அதில் ஆவி பறக்கும் வெள்ளை வெளேர் சாதம். வற்றல் குழம்பு, கீரை மசியல், சுட்ட அப்பளம் அவ்வளவுதான். அந்தத் தாய் தன் அன்பை இலையாக்கிப் பரிமாறிய அனுபவம் இன்று வரை மறக்க முடியவில்லை. 

இலையைப் பார்த்த மாத்திரத்தில் இது பூவன் இலை, மொந்தன் இலை என்று பெரியப்பா சொல்லிவிடுவார். அவருக்கு வாழை இலை கிடைக்காவிட்டால், மந்தாரை இலை அதுவும் இல்லாவிட்டால், தாமரை இலை. அப்போதெல்லாம் தஞ்சாவூரில் தாமரைக் குளங்கள் நிறைய. தாமரை இலைக்குப் பஞ்சமில்லை. தென்னை ஓலைகளை ஈர்க்குச்சியால் தைத்து இலையாக்கி, அதில் சாப்பிடுவதும் உண்டு. வாழைப்பூ மடலில் சாதம் பிசைந்து சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறேன். வாழை மரத்தின் பட்டையைத் தைத்து இலையாக்கிக்கொள்வதும் உண்டு. 

பெரும்பாலும் வாழை மரப் பட்டையில் வைதவ்யக் கோலம் பூண்டோருக்குச் சாப்பாடு தருவது வழக்கம். வீட்டுக்கு வீடு சருகுக் கட்டு இருக்கும். சருகில் நீர் தெளித்தால் அது உயிர்பெற்று விரிந்துவிடும். அதன் பின் பக்கம் பொன் நிறத்தில் மினுமினுக்கும். அந்தப் பகுதியில் சாப்பிடக் கூடாது. மங்கலான பகுதியில்தான் சாப்பிட வேண்டும். 

நான் மட்டும் மகாராஜாவாக இருந்தால், ‘சருகில் பிழிந்துவைக்கப்பட்ட பழைய சாதத்துக்கும் வடுமாங்காய்க்கும் பரிசாக, ராஜ்யத்தையே கொடுத்துவிடுவேன்’ என்றார் ஒரு வாழைச் சருகு ரசிகர். வாழை இலையின் நடுவே சோற்றைப் பெரிதாகக் குவித்து, அதில் சாம்பார் குளம் கட்டிச் சாப்பிடுவதும், இலையில் ஓடும் பாயசத்தையும் ரசத்தையும் சிந்தாமல் சிதறாமல் அள்ளிப் பருகும் லாகவமும் எல்லோருக்கும் கைவராது.

என் அமெரிக்க நண்பர் “வாழை இலையில்தான் சாப்பிடுவேன்” என அடம் பிடிப்பார். ஆனால், சாப்பிட முடியாமல் அவர் படுகிற கஷ்டத்தைப் பார்த்து நாங்கள் சிரிடா.. சிரி.. என்று சிரிப்போம். 

தஞ்சை ஓட்டல்களில் ‘சாப்பிட்ட பின் இலை எடுக்கவும்’என்று ஒரு போர்டு தொங்கும். வீடுகளில் விருந்தாளிகளை இலை எடுக்க விட மாட்டார்கள். 

வாகீச கலாநிதி கி.வா.ஜ. அவர்கள் ஒருமுறை நண்பர் வீட்டு விருந்தினை ரசித்துச் சாப்பிட்டார். சாப்பிட்ட பின் இலையை எடுத்துப்போட முனைந்த வரைப் பார்த்து, அந்த வீட்டுப் பெண்மணி ‘இலையை வெச்சுடுங்க’ என்று பதறியபடி சொல்ல ‘அதையும் சாப்பிடுகிற வழக்கமில்லை’ என்றாராம் கி.வா.ஜ. கிராமத்தில் இலை பறிக்கக் கத்தியெல்லாம் பயன்படுத்த மாட்டார்கள். நகத்தை வைத்துச் சுழற்றி லாகவமாகக் கத்தரித்துவிடுவார்கள். கணவன் சாப்பிட்ட இலையில் மனைவி சாப்பிடுவது மரபு. ‘பச்சை’யான ஆணாதிக்கம்! 

தஞ்சாவூர் தாட் இலையில் சாப்பாடு போட்டார்கள் என்று பெருமையாகச் சொல்வது உண்டு. தாட் இலை பெரிது பெரிதாக இருக்கும். இப்போதெல்லாம் திருமண விருந்துகளில், எவ்வளவு பெரிய மனிதர் என்றாலும் முகம் சுளிக்காமல் பிளாஸ்டிக் தட்டேந்தி உணவைப் பெற்றுக்கொள்கிறார். 

கும்பல் கும்பலாக நின்றபடி சாப்பிடும் அவர்களின் முகத்தில் வழியும் பெருமிதத்தைப் பார்க்க வேண்டுமே! விருந்துக் கூடங்களிலும்,வீடுகளிலும் சாப்பாடு தயார் என்பதை உணர்த்த முன்பெல்லாம் ஒரு குரல் உரத்துக் கேட்கும். 

‘இலை போட்டாச்சு!’ 

இன்று இதையே வருத்தத்துடன் மாற்றிச் சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது. 

‘இலை போயாச்சு!’ 

- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

வியாழன், 1 டிசம்பர், 2016

நீங்களும் தேடப்படுகிறீர்கள்! - சைபர்சிம்மன்

Return to frontpage



தனிநபர்கள் தொடர்பான தகவல்கள், சமூக ஊடக பரப்பு தகவல்கள், இ-மெயில் முகவரிகள் தேடலுக்கு உதவும் சிறப்புத் தேடியந்திரங்கள் இருக்கின்றன.

இணையத்தில் குறிப்பிட்ட நோக்கிலான சிறப்பு தேடியந்திர வகைகளில் மக்கள் தேடியந்திரங்கள் தனித்து நிற்கின்றன. இந்தப் பிரிவிலேயே பலவகையான தேடியந்திரங்கள் இருப்பதையும் பார்க்கலாம். மேலோட்டமாக பார்க்கும்போது இந்த தேடியந்திரங்கள் சுவாரஸ்யமானவை. ஆனால், உண்மையில் இவை கொஞ்சம் அச்சமூட்டுபவையும் கூட. ஏனெனில் இவை நீங்களும் இணையத்தில் தேடப்படலாம் என்பதை உணர்த்துகின்றன. ஏன் இப்போது கூட நீங்கள் தேடப்பட்டுக்கொண்டிருக்கலாம். உங்கள் பழைய நண்பரோ அல்லது உங்களை தொழில்முறையாக நாட விரும்பும் யாரோ ஒருவர் உங்களைப் பற்றிய தகவல்களை தேடிக்கொண்டிருக்கலாம். அது போட்டியாளராக கூட இருக்கலாம். இன்னும் யார் யாராகவோ கூட இருக்கலாம். அவர்களின் நோக்கமும் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

விஷயம் என்னவென்றால், இணையத்தில் நாம் தகவல்களை மட்டும் தேடுவதில்லை; எல்லாவற்றையும் தேடிக்கொண்டிருக்கி-றோம். தனிநபர்கள் தொடர்பான தகவல்களையும் தேடிக்கொண்டி-ருக்கிறோம். அதாவது, நாம் அறிந்த நபர்கள் அல்லது அறிய விரும்பும் நபர்கள் தொடர்பான தகவல்களை இணையத்திலேயே தேட முற்படுகிறோம். இந்த வகையான தேடலுக்கு உதவுவதற்காக என்றே உருவாக்கப்பட்ட தேடியந்திரங்களும் அநேகம் இருக்கின்றன. இவை மக்கள் தேடியந்திரங்கள் என குறிப்பிடப்படுகின்றன. ஆங்கிலத்தில் பியூப்பிள் சர்ச் இஞ்சின்ஸ்!

நண்பர்களைத் தேட!

இந்த வகை தேடியந்திரங்கள் குறிப்பிட்ட பெயர்கள் தொடர்பான தகவல்களை தேடித்தருகின்றன. உங்கள் பழைய நண்பர் ஒருவரை தொடர்பு கொள்ள விரும்புகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் தொடர்பில் உள்ள வேறு பழைய நண்பர்களிடம் விசாரித்துப் பார்ப்பீர்கள். இது பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தைய உத்தி. இப்போது, உடனே இணையத்தில் அந்த நண்பரது பெயரை டைப் செய்து பார்ப்பீர்கள். கூகுளில் தேடும்போது, அதே பெயர் கொண்ட நபர்களின் இணைய பக்கம், சமூக ஊடக கணக்குகள் தொடர்பான தகவல்கள் வந்து நிற்கும். இவற்றுக்கு மத்தியில் நீங்கள் தேடும் நபர் பற்றிய தகவல்களும் இருக்கலாம். ஆனால் தொடர்பில்லாத வேறு முடிவுகளும் வந்து நிற்கும்.

இதற்கு மாறாக, நபர்கள் தொடர்பான தகவல்களை மட்டுமே தேடித்தருவதற்காக என்றே தனித்தேடியந்திரங்கள் உருவாகி இருக்கின்றன. தேடப்படும் நபரின் முகவரி, சமூக ஊடக இருப்பு உள்ளிட்ட தகவல்களை இவை பட்டியலிடுகின்றன. இவை முழுவதும் துல்லியமானவை என்று சொல்வதற்கில்லை ஆனால், பெயர்கள் சார்ந்த விவரங்களை மட்டுமே முன்வைக்கின்றன.

பொதுவெளியில் தகவல்கள்!

பொதுவாக இவை, இணையத்தில் கிடைக்கும் விவரங்கள், சமூக ஊடக கணக்குகளில் பதிவு செய்யப்பட்ட தகவல்கள், வலைப்பதிவுகளில் உள்ள விவரங்கள் என பல இடங்களில் இருந்து தகவல்களை திரட்டித் தருகின்றன. எல்லாமே பொதுவெளியில் இருப்பவைதான். இவற்றோடு பொது பயன்பாட்டிற்கான பல்வேறு தகவல் திரட்டுகளில் இருந்தும் தேடித்தருகின்றன.

சமூக ஊடக தகவல்கள் எனும்போது பரவலாக எல்லோரும் அறிந்த ஃபேஸ்புக், ட்விட்டரில் துவங்கி அதிகம் அறியப்படாத சேவைகளிலும் அதேபெயரில் கணக்கு இருக்கிறதா என தேடிப் பார்த்து தருகின்றன. யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடக சேவைகளிலும் தேடுகின்றன. எனவே, இவற்றை பயன்படுத்தும்போது நாம் தேடும் பெயர் தொடர்பான தகவல்களை பெற கூடுதல் வாய்ப்பு இருக்கிறது.

மக்கள் தேடியந்திரங்களில் அதிகம் அறியப்பட்டவை:

பிஐபிஎல் https://pipl.com
ஸ்போக் http://www.spock.com
ஸ்போகியோ http://www.spokeo.com
யாஸ்னி http://www.yasni.com

பிஐபிஎல் தளத்தில் குறிப்பிட்ட நபரின் பெயர் தவிர பயனர் பெயர், இ-மெயில் முகவரி அல்லது தொலைபேசி எண் கொண்டு தேடலாம். இருப்பிடத்தையும் குறிப்பிட்டு தேடும் வசதி இருக்கிறது.

ஸ்போகியோ தளம் 61-க்கும் அதிகமான சமூக ஊடக சேவைகளில் இருந்து தகவல்களை தேடித்தருகின்றது. மேலும் இணையதளங்களில் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், வலைப்பதிவுகள் உள்ளிட்டவற்றில் இருந்தும் தகவல்களை தேடித்தருகிறது.

ஸ்போக் தளம் அமெரிக்கா சார்ந்ததாக இருக்கிறது. யாஸ்னி தேடியந்திரமும், சமூக ஊடக தளங்கள் மற்றும் தரவுகள் பட்டியலில் இருந்து பெயர்கள் தொடர்பான தகவல்களை அளிக்கிறது. இதில் பெயரை குறிப்பிட்டு தேடுவதோடு, குறிப்பிட்ட தொழில்முறை அடையாளம் குறித்தும் தேடலாம். அதிகம் தேடப்பட்ட பெயர்களை அடையாளம் காட்டுவது உள்ளிட்ட பல கூடுதல் அம்சங்களை அளிக்கிறது.

இவை தவிர மேலும் பல மக்கள் தேடியந்திரங்கள் இருக்கின்றன. ஸ்கிபீஸ் (http://www.skipease.com/) பல மக்கள் தேடியந்திரங்களின் தேடலை ஒரே இடத்தில் பயன்படுத்திக்கொள்ளும் வசதியை அளிக்கிறது.

கட்டணச் சேவை

இந்தத் தேடியந்திரங்களில் சில கூடுதல் தகவகள் அல்லது இன்னும் துல்லியமான தேடல் தேவை எனில் கட்டண சேவை வழங்குகின்றன. மேலும், நீங்கள் தேடும் பெயர்கள் தொடர்பான தகவல்களை கண்காணித்து இ-மெயில் மூலம் எச்சரிக்கும் சேவைகளையும் வழங்குகின்றன. இவை பெரும்பாலும் வர்த்தக நோக்கில் வழங்கப்படுபவை. பிராண்ட்கள் போன்றவை தொடர்பான இணைய உரையாடலை கண்காணிக்க இவை உதவலாம். போட்டியாளர்களை பின் தொடரவும் இவை உதவலாம்.

ஆனால், இவை பெரும்பாலும் பொதுவெளியில் உள்ள தகவல்களையே திரட்டித் தருவதால், வேறு எங்கும் கிடைக்காத பிரத்யேக தகவல்களை எப்படி அளிக்கின்றன என்பது சரியாக புரியாத விஷயம்.

இவை எந்த அளவு பயனுள்ளவை என்பது ஒருபுறம் இருந்தாலும் தனிநபர்கள் தொடர்பான தகவல்களை தேடித் தருவதற்காக என்றே தேடியந்திரங்கள் இருக்கின்றன என்பதை மனதில் கொள்ள வேண்டும். அதிலும் இணையத்தை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையிலும், இணையத்தை பயன்படுத்தும் விதம் விரிவடைந்து வரும் நிலையில், தனிநபர்கள் தொடர்பான தகவல்களை இணையத்தில் தேடும் தேவையும் அதிகரித்திருக்கிறது என்பதை இவை உணர்த்துகின்றன.

நாமும் இத்தகைய சேவையை பயன்படுத்தலாம் என்பது போல, நம்மைத் தேடவும் பலர் இந்த சேவைகளை பயன்படுத்தலாம். அப்படி இணையத்தில் தேடப்படும் போது எந்த வகையான தகவல்கள் வந்து நிற்கின்றன என்பது நமக்குத் தெரியாது. ஒருவர் பெயருடன் பட்டியலிடப்படும் விவரங்கள் அவருடையது தானா என்பதும் தெரியாது. இவை எல்லாம் பெயர் தேடலை சிக்கல் மிக்கதாக ஆக்குகின்றன.

விங்க் (http://itools.com/tool/wink-people-search ), பீக்யூ (http://www.peekyou.com/ ) போன்றவையும் இந்த வரிசையில் வருகின்றன.

சமூக தேடியந்திரங்கள்

மக்கள் தேடியந்திரங்கள் தவிர சமூக தேடியந்திரங்களும் இருக்கின்றன. இவை சமூக ஊடக பரப்பிலான தகவல்களை தேட வழி செய்கின்றன.

பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடக சேவைகள் பிரபலமானபோது இந்த வகை தேடியந்திரங்களும் உருவாகத் துவங்கின. சமூக ஊடகங்களில் தகவல்களும் கருத்துக்களும் அதிகம் பகிர்ந்து கொள்ளப்படும் நிலையில் அவற்றை உடனடியாக தேடித் தரும் பிரத்யேக தேடியந்திரங்கள் தேவை எனும் அடிப்படையில் இவை செயல்பட்டன.

இந்த வகை தேடியந்திரங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர், கூகுள் பிளஸ் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களில் பகிரப்படும் தகவல்களை மட்டுமே தேடித்தருகின்றன. ஒரு கட்டத்தில் சமூக தேடியந்திரங்கள் பல தோன்றினாலும் பெரும்பாலானவை காணமால் போய்விட்டன. சோஷியல்மென்ஷன் (http://www.socialmention.com). சோஷியல்சர்ச்சர் (https://www.social-searcher.com/), ஸ்மேஷ்பியூஸ் (http://smashfuse.com/), சோஷியல் சீக்கிங் (http://socialseeking.com/) உள்ளிட்ட தேடியந்திரங்கள் இன்னமும் இந்த பரப்பில் இயங்கி கொண்டிருக்கின்றன.

மற்ற தேடியந்திரம் போலவே இவற்றிலும் குறிச்சொல்லை டைப் செய்து தேடலாம். அந்தக் குறிச்சொல் தொடர்பான சமூக ஊடக பகிர்வுகள் பட்டியலிடப்படும். தனிநபர்களும் இவற்றை பயன்படுத்தலாம். நிறுவனங்கள் மற்றும் பிராண்ட்கள் தங்களைப்பற்றிய சமூக ஊடக பரப்பில் என்ன பேசிக்கொள்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ளவும் இவற்றை பயன்படுத்தலாம். இந்த வசதி சில தேடியந்திரங்களால் கட்டண சேவையாகவும் அளிக்கப்படுகிறது.

இ-மெயில் தேடல்!

இவைத் தவிர ஒருவருடைய இ-மெயில் முகவரிகளை தேடித்தருவதற்கான தேடல் தளங்களும் பல இருக்கின்றன. ஒரு நிறுவனம் அல்லது ஒருவருடையை பெயரை சமர்பித்தால் அது தொடர்பான இமெயில் முகவரிகளை தேடித்தரும் தளங்கள் இருக்கின்றன. உதாரணம்: இ-மெயில் ஹண்டர் (https://hunter.io/). இதேபோல, ஒரு இ-மெயில் முகவரியை சமர்பித்தால் அதன் பின்னே உள்ள நபரை தெரிந்துகொள்ள உதவும் தளங்களும் இருக்கின்றன. இது தலைகீழ் மெயில் தேடல் என குறிப்பிடப்படுகிறது. நபர்கள் தொடர்பாக தகவல்களை தேட உதவும் தேடியந்திரங்களில் சில இந்த வசதிகளையும் அளிக்கின்றன. உதாரணம்: தட்ஸ்தெம் (https://thatsthem.com/reverse-email-lookup).

இ-மெயில் முகவரிகளை தேட உதவும் சேவைகள் எந்த அளவு துல்லியமானவை என்று தெரியவில்லை. ஆனால், இது மிகப்பெரிய அளவில் தேவை இருக்கும் துறையாக இருப்பதை அறிய முடிகிறது. பல தளங்கள் இந்தப் பிரிவில் செயல்பட்டு வருகின்றன. இணையத்தில் தகவல்களோடு மனிதர்களும் தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றனர் என்பதை இவை உணர்த்துகின்றன.


-சைபர்சிம்மன், தொழில்நுட்ப எழுத்தாளர், 
தொடர்புக்கு enarasimhan@gmail.com