Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

செவ்வாய், 27 டிசம்பர், 2022

மாற்றுத் திறனாளிகள் வாழ்வில் ஒளியேற்றும் இந்திய அரசு


மாற்றுத்
திறனாளிகளுக்கு தேவையான சாதனங்கள் வாங்குவதற்கு அல்லது பொருத்துவதற்கு மற்றும் உதவிகள் செய்வதற்கு, இந்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பாக இன்றைய நாளிதழில் ஒரு விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளது.

விளம்பரத்தில் குறிப்பிடப் பட்டுள்ள திட்டத்தின்படி மாற்றுத் திறனாளிக்கு வேலைவாய்ப்பு,  புனரமைப்பு மற்றும் தனிப்பட்ட வாழ்வாதாரம் அளிப்பதற்காக உதவிகள் மற்றும் உதவும் சாதனங்கள் வழங்கப்படுகிறது. விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம்

https://adip.disabilityaffairs.gov.in/ADIP/get_beneficiary_registration

விபத்து காரணமாக பாதிப்பு, திராவகம் வீச்சினால் பாதிக்கப்பட்டவர், ஆட்டிஸம் குறைபாடு, பார்வைக் குறைபாடு உள்ளவர், கேட்கும் திறன் குறைபாடு, மனநல பாதிப்பு, தசைச்சிதைவு நோய், பேச்சுக்குறைபாடு, தலசீமியா மற்றும் சில குறிப்பிட்ட குறைபாடுகள் உள்ளவர்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.


உரிய சான்றுகளுடன் விண்ணப்பம் செய்தால், விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு உதவிகள் செய்யப்படும்.

உதவி தேவைப்படுபவர்கள் மேலே குறிப்பிட்டு;ள்ள இணையதளத்தில் உள்ள விபரங்களின்படி விண்ணப்பம் செய்து பயன்பெற வேண்டுகிறோம்.

தகவல்: . சங்கிலிக்காளை

 

புதன், 21 டிசம்பர், 2022

எழுத்தறிவித்தவன் மட்டுமா இறைவன்? நீங்களும் ஆகலாம் இறைக்கு நிகராக.


கடந்த திங்கள் கிழமை, டிசம்பர் 19, 2022 அன்றுமாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் துவங்கப்பட்ட நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன் பற்றித்தான் கடந்த இரண்டுநாட்களாக செய்தி ஊடகங்களில் கவனம் பெற்ற செய்தி. இரண்டு நாட்களாக அதைப்பற்றி எழுத வேண்டும் என்று நினைத்ததில் இன்றுதான் அதற்கான நேரம் கிடைத்தது.

அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன்நம் மாநிலக் கல்வியை மேலும் வளர்ச்சியடையச் செய்வதற்கான ஒரு சிறந்த திட்டம் நம்ம ஸ்கூல் ஃபவுண்டேஷன். இந்த திட்டத்தை கொண்டு வந்த தமிழக அரசுக்கும் பின்னனியில் இருக்கும் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களுக்கும் பாராட்டுகள்.

இந்தத் திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் 6 முதல் 12 வகுப்பு வரை படித்த மாணவிகளுக்கு மேற்கல்விக்கான உதவித் தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் அரசு வழங்க இருக்கிறது.

பேராசிரியர் திரு. . அன்பழகன் அவர்களை கௌரவிக்கும் வகையில் அவரது பெயர் சூட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி டி.பி.. வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு அறக்கட்டளை.

விபரங்களுக்கு: https://nammaschool.tnschools.gov.in


இந்தத் திட்டத்தில் அரசின் பங்களுப்புடன்தனிநபர்கள், நிறுவனங்கள், அறக்கட்டளைகள், அரசு சாராத தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று அனைவரும் பணமாகவோ, பொருளாகவோ நன்கொடையளிக்கலாம். குறிப்பிட்ட ஒரு பள்ளிக்கு தேவையின் அடிப்படையில் நன்கொடை வழங்கலாம். மேலும் வசதி படைத்தவர்கள் விரும்பினால்ஒரு பள்ளியையோ அல்லது குறிப்பிட்ட பகுதியில் அமைந்துள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளையோ தத்தெடுத்து அந்த பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த உதவலாம்.

நீங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கு வருமானவரிச் சட்டம் பிரிவு 80-ஜி ன்படி வரிவிலக்கு பெறும் வகையில் உங்களுக்கு ரசீது கொடுக்கப்படும். நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகளுக்கும் உரிய சான்று கொடுக்கப்படும். சி.எஸ்.ஆர். எனப்படும் (Corporate Social Responsibility) நிறுவன நன்கொடைகளுக்கும் உரிய சான்று வழங்கப்படும்.

நீங்கள் இந்த இணையதளத்தில் பதிவு செய்துநன்கொடை அளித்தவுடன் உங்களது இமெயில் முகவரிக்கு ரசீது அனுப்பி வைக்கப்படும்.      

பணம் நன்கொடை அளிக்க முடியாத நிலையில்தன்னார்வலராக பணியாற்ற விருப்பம் இருந்தால் அதனையும் இந்த இணையதளத்தின் மூலம் தெரிவிக்கலாம்.

இந்தத் திட்டத்தின் மூலம் நீங்கள் அளிக்கும் நன்கொடைகள் மூலமாக பள்ளியில் அதிநவீன வகுப்பறைகள், சுத்தமான கழிவறைகள், அறிவியல் கணித ஆய்வகங்கள், கணினி தொழில்நுட்ப ஆய்வகங்கள், விளையாட்டு வசதிகள், உபகரணங்கள், சமச்சீரான ஊட்டச்சத்துடன் உணவு போன்றவற்றின் மூலம் அரசு பள்ளிகளையே நம்பியிருக்கும் அடித்தட்டு மக்களில் கல்வியை மேம்படுத்தி அவர்களது வாழ்வாதாரம் உயர உதவி செய்த பெருமை உங்களைச் சேரும்

யார் சொன்னதுஎழுத்தறிவித்தவன் மட்டுமே இறைவன் என்று. கல்விக்கு தம்மாலான உதவிகள் செய்யும் அனைவருமே கடவுளுக்கு நிகரானவர்கள்தான்.

                            வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையுந்

                            தெய்வத்துள் வைக்கப் படும்.  குறள் : 50

உலகில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன் வானுலகத்தில் உள்ள தெய்வத்துக்கு நிகராக மதிக்கப்படுவான்.

அறம் என்பது தன்னால் இயன்ற வரையில் உழைத்துச் சேர்க்கும் பணத்தில் ஒரு பகுதியை இயலாதோருக்கு கொடுத்து உதவுவதும்தான்.

எனவே உங்களால் இயன்ற ஒரு சிறு தொகையை இந்தத் திட்டத்திற்கான நன்கொடையாக அளித்து நமது மாணவச் செல்வங்கள் சிறந்த கல்வி பெற்று பயன்பெற உதவுங்கள்.

கட்டுரையாளர்: . சங்கிலிக்காளை, ஆலோசகர்.

தொடர்புக்கு: 9600106471  gsraj1979@gmail.com

வியாழன், 8 டிசம்பர், 2022

டிஜிட்டல் உலகின் மற்றுமோர் மைல்கல் - இ-இன்ஸ்யூரன்ஸ் அக்கவுண்ட் நம்பர்.



அதென்னங்க இ இன்ஸ்யூரன்ஸ் அக்கவுண்ட் நம்பர் புதுசா சொல்றீங்க? உங்கள் கேள்வி புரிகிறது. ஆங்கில பெயரை அப்படியே தமிழ்படுத்தும்போது எளிதில் புரிய வைக்க முடிவதில்லை. இதில் வரும் எனப்படுவது யாதெனின் எலக்ட்ரானிக் என்பதன் சுருக்கம்.


நிற்க, கடந்த 2020 ஆண்டில், கொரோனா வைரஸ் பரவிய காலத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சிறப்பு அனுமதி பெற்று, நானும் எனது நண்பர்களும் ஊருக்குப் போனா சோத்துக்காவது கஷ்டப்பட வேண்டியிருக்காது என்ற எண்ணத்தில், எனது காரில் ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில், இராஜபாளையத்தில் எனது காரில் ஒரு இரு சக்கர வாகன ஓட்டி வந்து இடித்துவிட, அப்போதுதான் ஞாபகம் வந்தது. அடடா! நமது வண்டியின் ஒரிஜினல் ஆர்.சி. புத்தகமும், இன்ஸ்யூரன்ஸ்-ம் சென்னையில் இருக்கிறதே என்று. ஆனால் வண்டியில் அடி எதுவும் படவில்லை.அப்போதுதான் எனக்கு எனது மொபைல் போனில் டிஜிலாக்கர் ஆப் இருப்பதும், அதில் பதிவிறக்கம் செய்துள்ள டிஜிட்டல் வடிவிலான காரின் ஒரிஜினல் ஆர்.சி. புத்தகம் மற்றும் இன்ஸ்யூரன்ஸ் பாலிசி ஆகியவற்றையே தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 ன்படி ஒரிஜினல் ஆவணத்திற்கு மாற்றாக காட்டலாம் என ஞாபகம் வந்தது. தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள். வெளியூர் செல்லும்போது உங்கள் அடையாள அட்டையை மறந்து விட்டு, அட ட்ரெயினில் டீ.டீ.ஆர். ஐ.டி. ஃப்ரூப் கேட்டால் என்ன செய்வது என்று தவிப்பவர்களுக்கும் ஒரு நற்செய்தி. டிஜி லாக்கர் ஆப் உங்கள் போனில் இருந்தால் உங்கள் ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை போன்ற புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை டிஜிட்டல் வடிவில் நீங்கள் உங்கள் போனிலேயே திறந்து காட்டலாம். அது ஒரிஜினல் அடையாள அட்டையைக் காட்டுவதற்குச் சமம் என்று தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 ல் அரசு அனுமதியளிக்கிறது.


நிற்க, நான் பேச வந்த விசயத்தை விட்டு வேறு எங்கோ திசைமாறிச் செல்கிறேன். இ-இன்ஸ்யூரன்ஸ் அக்கவுண்ட் நம்பர் என்றால் என்ன? அதுபத்தி கொஞ்சம் விளக்கமா பார்க்கலாம். வாங்க.


முன்னெல்லாம் பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். பங்குகளில் முதலீடு செய்தவர்களுக்கு நிறுவனங்கள் ஷேர் சர்ட்டிபிகேட் என்ற பங்குப் பத்திரம் வழங்கும். அதனை விற்கும்போது, அந்தப் பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்து, வாங்குபவரின் பெயருக்கு பங்குகள் மாற்றித் தரப்படும். நாளடைவில், பங்குச்சந்தை வணிகம் இணையவழியில் மாற்றப்பட்ட பின், டீமேட் கணக்கு என்ற ஒரு கணக்கு முறையைக் கொண்டுவந்து, பங்குப்பத்திரங்கள் டிஜிட்டல் வடிவில் மாற்றப்பட்டு விட்டன. அதன்பின், காகிதவடிவில் பங்குப்பத்திரங்களின் உபயோகம் என்பது கிட்டத்தட்ட முற்றிலும் ஒழிந்து விட்டது.

நீங்கள் எல்.ஐ.சி. பாலிசி எனும் ஆயுள் காப்பீடு வைத்திருக்கிறீர்கள் அதற்கு ஒரு பத்திரம் இருக்கும். மருத்துவக் காப்பீடு, வாகனக் காப்பீடு, விபத்துக் காப்பீடு என வெவ்வேறு பாலிசி பத்திரங்கள் வைத்துள்ளீர்கள். அது காகித வடிவில் இருக்கும் நிலையில், அவற்றை மழை, வெயில், வெள்ளம், நெருப்பு மற்றும் இதர இயற்கை பேரிடரால் சேதம் அடையாமல் பாதுகாத்து வைத்திருந்தால் மட்டுமே, தேவை ஏற்படும்போது அந்த பாலிசிகளின் பலன்களை அடைய முடியும். ஓரிஜினல் பத்திரத்தைத் தொலைத்து விட்டால், பாலிசி தொகையைப் பெருவதில் பெரும் அலைச்சல், உறுதிமொழி ஆவணங்கள், காவல் துறையில் புகாரளித்து சான்றுகள் பெற்றபின்னரே கிடைக்கும் என பல இன்னல்கள்.


தற்போதைய சூழ்நிலையில், வெளியூர் சென்றிருக்கும் நிலையில், அந்த ஊரில் ஏதோ உடல்நலக்குறைவில் பாதிக்கப்பட்டால் மருத்துவமனையில் சிகிச்சை பெறத் தேவைப்படும் இன்ஸ்யூரன்ஸ் ஆவணத்தை வீட்டில் வைத்து  விட்டு சென்றிருப்போம். இதுபோன்ற சிக்கல்களுக்கு ஒரு விடிவு பிறந்துள்ளது. ஆம். அதுதான் இ இன்ஸ்யூரன்ஸ் அக்கவுண்ட் எனப்படும் டிஜிட்டல் வடிவிலான லாக்கர் சேவை. உங்களது அனைத்து வித இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகளையும் காகித வடிவத்திலிருந்து டிஜிட்டல் வடிவத்தில் மாற்றி, பான் இந்தியா என ஆங்கிலத்தில் சொல்லப்படும் எங்கு வேண்டுமானாலும் உபயோகப் படுத்தலாம் என்ற ஒரு வசதியை அளிக்கும் முறைதான், இங்கு நான் பேச விரும்புவது. பெரும்பாலானோருக்கு தெரியாத ஒரு செய்தி நமக்குத் தெரிந்தால் அதை மற்றவர்களுக்குத் தெரியப்படுத்தும் விழிப்புணர்வு பதிவு தேவை என்பதால் இக்கட்டுரை.
தகவலுக்கு: https://nir.ndml.in

மேலே கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் என்.எஸ்.டி.எல் என அழைக்கப்படும் நேஷனல் செக்யூரிட்டி டெபாஸிட்டரி லிமிடெட் என்ற ஒரு அரசு சார்பு நிறுவனம், டிஜிட்டல் வடிவிலான பங்குகள், மியூச்சுவல் ஃபண்டு பத்திரங்கள், புதிய ஓய்வூதியத் திட்டக் கணக்கு போன்றவற்றை டிஜிட்டல் வடிவில் நிர்வகிக்கும் நிறுவனம். இந்த இணையதளம் இன்ஸ்யூரன்ஸ் பாலிஸிகளை எளிமையாகக் கையாள்வதற்காக, அனைத்து இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகளையும் ஒரே குடையின்கீழ் கொண்டுவந்து டிஜிட்டல் வடிவில் பயன்படுத்தும் ஒரு தளம்.
உங்களது அனைத்து காகித வடிவிலான இன்ஸ்யூரன்ஸ் பாலிசிகளையும் சமர்ப்பித்து, அவற்றை டிஜிட்டல் வடிவில் மாற்றி, உங்கள் பெயரில் உருவாக்கப்பட்ட கணக்கில் சேர்த்து விட்டால், நீங்கள் காகித பாலிசிகளை உபயோகப்படுத்த வேண்டிய அவசியமில்லை. எந்த இடத்திலும் அணுகலாம்.


அதற்கு முதலில் நீங்கள் ஒரு டிஜிட்டல் கணக்கைத் தொடங்கவேண்டும். உங்களது அடையாள அட்டை, முகவரிச் சான்று, போட்டோ போன்றவற்றின் நகல்களை இணைத்து, விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, ஒரு டிஜிட்டல் அக்கவுண்ட் தொடங்க வேண்டும். உங்களுக்கு ஒரு டிஜிட்டல் அக்கவுண்ட் எண் மற்றும் டிஜிட்டல் கார்டு வழங்கப்படும். பான் கார்டு, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, ஏடிஎம் கார்டு போன்று அந்த டிஜிட்டல் அட்டை, உங்கள் பெயர், அக்கவுண்ட் நம்பர், க்யூ.ஆர். கோடு போன்ற விபரங்களுடன் இருக்கும்.


அதன்பின் உங்களிடம் உள்ள காகித வடிவிலான பாலிசிகளை உரிய படிவங்களுடன் அல்லது இணைய கணக்கை அணுகி சமர்ப்பித்துடிஜிட்டல் வடிவில் மாற்றி விட்டால் முடிந்தது வேலை. அதன்பின்னர் உங்கள் காகித பாலிசிகள் செல்லாது. டிஜிட்டல் கார்டு மூலம் தேவைப்படும் இடங்களில் உங்கள் பாலிசியை காட்டலாம். அவை ஒரிஜினல் பாலிசியாக ஏற்றுக்; கொள்ளப்பட்டு உங்கள் கோரிக்கை ஏற்கப்படும்.


ஏதோ நமக்குத் தெரிந்த விஷயத்தை தெரியாத மத்தவங்களுக்கு சொல்லி ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்தப் பதிவு. இதுபோல் பல பதிவுகளுக்கான விஷயங்கள் நிறை இருக்கு. ஒரே நேரத்தில் அத்தனையும் பதிவிட்டால் அனைவருக்கும் சென்று சேராது. ஓவ்வொன்றாக உரிய இடைவெளியில் வரும்.

கட்டுரையாளர்: 

க. சங்கிலிக்காளைஆலோசகர்.  
தொடர்புக்குgsraj1979@gmail.com

 

 

பொறுப்புத் துறப்பு: 

இக்கட்டுரையில் இடம்பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களே. சாலியர் குரல் மற்றும் அதன் நிறுவனர்ஆசிரியர்துணை ஆசிரியர் மற்றும் தொடர்புள்ள அலுவலர்கள்பணியாளர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் ஆகிய எவருக்கும் எவ்வித பொறுப்பும் கிடையாது என்பதை அறிந்து கொள்ளவும். 

மேலும் இங்கு உபயோகப் படுத்தப்பட்டுள்ள படங்கள்சின்னங்கள் (லோகோ) மற்றும் இணையதள முகவரி ஆகியவை அதன் உரிமையாளர்களுக்குச் சொந்தமானவை. தகவலுக்காக மட்டுமே இங்கு அவை பயன்படுத்தப் பட்டுள்ளன.

ஞாயிறு, 4 டிசம்பர், 2022

காணாமல் போகுமா காசு பணம்?


இந்திய ரிசர்வ் வங்கி
, ஒரு மெய்நிகர் பணப்பரிமாற்ற முறையை அறிமுகம் செய்துள்ளது. கடந்த சில நாட்களாக மொத்த வணிகத்தில் சோதனை செய்யப்பட்ட மெய்நிகர் பணப்பரிமாற்றம், வெற்றி அடைந்ததனால் சில்லரை மற்றும் நுகர்வோர் வணிகத்தில் டிசம்பர் 01 முதல் சில வங்கிகள் மூலம் சோதனை செய்யப்படுகிறது.

அது என்ன மெய்நிகர் பணம்? நீங்க கேட்கிறது எனக்குப் புரிகிறது. பழங்காலங்களில் ஒரு பொருள் நமக்குத் தேவைப்படுகிறது என்றால், நாம் ஒருவரிடம் சென்றுநம்மிடம் உள்ள ஒன்றைக் கொடுத்து, பதிலுக்கு நமக்குத் தேவையான பொருளைப் பெரும் பண்டமாற்று முறை புழக்கத்தில் இருந்தது. நெல் வைத்திருப்பவர் அதைக் கொடுத்து பருத்தி வாங்குவது, காய்கறி வாங்குவது என்று பண்டமாற்று முறையில் பொருட்கள் பரிமாறப்பட்டது. நாளடைவில் மதிப்புள்ள உலோகங்களால் நாணயம் உருவானது. தங்கம், வெள்ளி, தாமிரம் என்று அந்த உலோகத்தின் மதிப்புக்கு நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. பண்டமாற்று முறையின் நாகரீக வடிவமாக அனைவராலும் ஏற்றக் கொள்ளப்பட்ட உலோக நாணயங்கள் உலகம் முழுவதும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், வங்கிகள் உருவான பின்னர் பயன்படுத்துவதற்கு எளிதான முறை தேவையான நிலையில் ஒவ்வொரு நாடும் காகித நாணயம் அச்சிடத் தொடங்கிவிட்டன.

காகிதத்தால் தயாரிக்கப்பட்ட பணத்தில்அந்த நாட்டின் அரசு ஒரு உறுதியளித்திருக்கும். ப்ராமிசரி நோட்டு என்று நாம் முன்னர் யாரிடமாவது கடன் வாங்கும்போது கையெழுத்திட்டு கொடுப்போமே. அது போல் ஒரு வாசகம் காகிதப்பணத்தில் கையெழுத்துடன் இடம் பெற்றிருக்கும். அது என்னவெனில், இதை கொண்டு வரும் நபருக்கு இதில் குறிப்பிட்டுள்ள தொகையை கொடுக்க உறுதியளிக்கிறேன். நமது ரிசர்வ் வங்கி வெளியிடும் நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்துடன் உறுதிமொழி இடம்பெற்றிருக்கும்.

இன்றைய விஞ்ஞான முன்னேற்றம் கண்ட உலகில், ஒவ்வொரு நாடும் மற்ற நாடுகளுடன் செய்யக் கூடிய பரிவர்த்தனைகளுக்கு அமெரிக்க டாலர், யூரோ போன்ற பணங்களாக பரிமாற்றம் செய்கின்றனர்.

வங்கிகளும் இணைய சேவை, செல்போன் செயலி, டிஜிட்டல் வாலட் போன்றவற்றின் மூலம் பணப்பரிமாற்றம் செய்யும் முறைகளை அறிமுகப்படுத்தி விட்டனர்.

பிட்காயின், எரித்தரம் போன்ற தனியார் நிறுவனங்களின் மெய்நிகர் நாணயம் உருவாக்கப் பட்டு அதன் மதிப்பானது பங்குச்சந்தை போல் ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கின்றன.

அனைத்து வணிகங்களுக்கும் பொதுவான ஒரு விசயம் தட்டுப்பாடு மற்றும் வழங்கல், அதாங்க ஒங்களுக்குப் புரியற மாதிரி சொன்னா டிமாண்ட் மற்றும் சப்ளை. ஒரு பொருளுக்கு தேவை அதிகமிருக்கும் நிலையில் குறைந்த அளவே பொருள் கிடைத்தால், அதன் விலை ஏறும். அதே நேரத்தில் ஒரு பொருள் அதிகமாக கிடைக்கிறது, ஆனால் வாங்குவதற்கு அதிகம்பேர் முன்வரவில்லை என்றால் விலை குறையும்.

பங்குச் சந்தை, கமாடிட்டி சந்தை எனும் பொருட்களுக்கான ஊக வணிகம் மற்றும் மெய்நிகர் வணிக முறையில் ஊகங்களின் அடிப்படையில் செயற்கையாக மதிப்பு ஏறி இறங்கும் நிலையற்ற தன்மையின் காரணமாக பலர் பணத்தை இழக்க வாய்ப்பு அதிகம்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, ரிசர்வ் வங்கி சோதனை முறையில் டிஜிட்டல் கரன்சி வெளியிட்டுள்ளது. இந்த முறையில் உங்கள் வங்கி உங்களுக்கு ஒரு வாலட் உருவாக்கிக் கொடுக்கும். அதாவது உங்கள் மணிபர்ஸ், ஆனால் காகிதப்பணம் இல்லாத ஒரு டிஜிட்டல் மணிபர்ஸ். நீங்கள் அந்த வாலட்டில் பணம் வைத்துக் கொண்டு தேவைப்படும்போது உங்கள் வாலட்டிலிருந்து யாருக்கும் பணம் கொடுக்கவோ அல்லது மற்றவரிடமிருந்து உங்கள் வாலட்டுக்கு பணத்தை பெறவோ முடியும்.


அதுசரி, நாங்கதான் முன்னாடியே கூகுள்பே, போன்பே, பேடிஎம் மற்றும் எங்களது வங்கிகள் வழங்கும் பேமென்ட் செயலிகள் வழியாக பணம் கொடுக்கல் வாங்கல் செய்யறோமே. நீங்க என்ன புதுசா சொல்றீங்க என்று கேட்பது எனக்கு புரிகிறது.

நீங்கள் சொன்ன பேமெண்ட் செயலிகள், உங்கள் வங்கிக் கணக்கில் நீங்கள் வைத்துள்ள பணத்தை கொடுப்பதற்கோ, அல்லது உங்களுக்கு வரவேண்டிய பணத்தை உங்கள் வங்கிக் கணக்கில் செலுத்தவோ உருவாக்கப்பட்ட ஒரு செயலிதான். இந்த முறையில் உங்கள் பணம் உங்கள் வங்கிக் கணக்கில் மட்டுமே இருக்கும். சேமிப்புக் கணக்கு என்றால் வருடத்திற்கு சுமார் 3 அல்லது 4 சதவீதம் வட்டியும் கிடைக்கும்.

ஆனால், இந்த மெய்நிகர் முறையில், உங்கள் டிஜிட்டல் வாலட் என்பது உங்கள் மணிபர்ஸ் போல செயல்படும்.
உதாரணத்துக்கு, உங்கள் மணிபர்ஸ் உள்ளே 500 ரூபாய் நோட்டுக்கள் ஒரு நோட்டும். 200 ரூபாய் நோட்டுக்கள் மூன்றும், 100 ரூபாய் நோட்டுகள் ஏழும், 20 ரூபாய், 10 ரூபாய் என சில நோட்டுக்களும் இருக்குமே. அதுபோல நீங்கள் ஒருவருக்கு 250 ரூபாய் பர்ஸ் திறந்து எடுத்துக் கொடுத்து மீதி சில்லறை வாங்குகிறீர்கள் அல்லவா. அதையே காகிதப் பணமாக இல்லாமல் இந்த முறையில் நீங்கள் பணமாக கொடுக்கல் வாங்கல் செய்ய முடியும். இந்த முறையில் உங்கள் பணம் உங்கள் கையிலேயே இருக்கும். வங்கிக் கணக்கில் சேர்க்கப்படாது. மேலும் சேமிப்புக் கணக்கு போல வட்டி வருமானம் கிடைக்காது.

மேலும் உங்கள் வங்கிக் கணக்கு விபரங்களைக் கொடுத்து பரிமாற்றம் செய்யும்போது நடக்கும் மோசடிகள், செக் மோசடி, செயலியை தவறாகப் பயன்படுத்தி நடைபெறும் மோசடி, ஓ.டி.பி. மோசடி போன்றவை இந்த முறையில் தவிர்க்கப் படும். உங்கள் வாலட் எனும் மணிபர்ஸ் ஒரு தனி வங்கிக் கணக்கு போன்றே பணம் வைத்துக் கொள்ள பயன்படுத்தப்படும். மெய்நிகர் பரிமாற்ற முறையில் ப்ளாக் செயின் டெக்னாலஜி எனும் அதிகபட்ச பாதுகாப்பு முறையில் பணமானது டிஜிட்டல் டோக்கன்களாக மாற்றப்பட்டு உபயோகப்படுத்தப் படுவதால் டிஜிட்டல் பணம் யாரிடமிருந்து, யாருக்கு அல்லது எங்கு செல்கிறது என்பதைக் கண்காணிக்க முடியும்.

மேலும் இந்த புதிய முறையில் நம்மை ஏமாற்றி நமக்குத் தெரியாமல் மோசடியாக பணம் எடுக்கும் வாய்ப்பே கிடையாது. அவ்வாறு நடந்தாலும் நமது வாலட்டில் சேமித்த தொகை மட்டுமே பறிபோகும். ஆனால் விரைவில் உரிய நடவடிக்கை எடுத்து, திருடப்பட்ட பணத்தை மீட்பதற்கு எளிதாக இருக்கும் ஏனென்றால் டிஜிட்டல் டோக்கன் வடிவிலான கரன்சி யாரிடமிருந்து, யாருக்கு செல்கிறது என்பதை அதன் வரிசை எண் பயன்படுத்தி அது செல்லும் அனைத்து இடங்களையும் கண்காணிக்க முடியும். ஆனால் நமது வங்கிக் கணக்கில் உள்ள பணம் ஏதோ ஒரு வகையில் திருடுபோனால் அதை மீட்பதற்கு பெரும் சிரமத்தைச் சந்திக்க வேண்டும். அந்நிய நாட்டைச் சேர்ந்த ஹேக்கர்களால் திருடப்பட்டால் அதை மீட்பதே சிரமம்.

அதுபோல் நமது பாக்கெட்டில் உள்ள மணிபர்ஸ் திருடப்பட்டாலும் அதில் நாம் வைத்திருக்கும் ரொக்கப்பணம் எங்கு, யாருக்கு செல்கிறது என்பதைக் கண்காணிப்பதும் நடைமுறை சாத்தியம் இல்லாத செயல்.

முன்னரே நமது நாட்டில் மொபிக்விக் போன்ற சில டிஜிட்டல் வாலட்களும், நமது வாகனத்தில் பயன்படுத்தப்படும் ஃபாஸ்ட் டேக் எனப்படும் சுங்கக்கட்டண முறைக்கும் டிஜிட்டல் வாலட்கள் நம்மிடையே புழக்கத்தில் உள்ளன.

வங்கித் துறையில் மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும் இந்த முறை நாட்டின் பொருளாதாரத்தில் மாற்றம் கொண்டுவரும். இந்த புதிய முறை ஏற்படுவதற்கு காரணமான பிட்காயின் போன்ற தனியார் மெய்நிகர் கரன்சிகளும் அதில் ஏற்பட்ட மோசடிகளுமே காரணம் என்பது ஒரு பக்கம் என்றால் அந்த வகையிலான மோசடிகளைத் தவிர்க்க புதிய முறையினை அறிமுகப் படுத்திய நமது ரிசர்வ் வங்கி மற்றொரு காரணம். 

சோதனை அடிப்படையில், எஸ்.பி.ஐ., எஸ் பேங்க், ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்ஸிஸ் வங்கி போன்ற சில வங்கிகளில் இந்த முறை ரிசர்வ் வங்கியால் அறிமுகப்படுத்தப் பட்டு சில நகரங்களில் டிசம்பர் 1 முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இதெல்லாம் இருக்கட்டும், இந்த காகித, உலோக நாணயங்களுக்கு மாற்று வேண்டும் என்ற ஒரு விசயம் இந்தியாவில் கடந்த பல ஆண்டுகளாகவே பேசப்பட்டு வருகிறது. அதில் பெரும் முயற்சி எடுத்தவர்கள் யாரென்றால் ஒரே பதில் அர்த்தகிராந்தி.


மஹாராஷ்டிர மாநிலம், அவுரங்காபாத் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அர்த்தகிராந்தி பிரதிஷ்டான் எனும் அமைப்பு கடந்த பல ஆண்டுகளாக, பொருளாதாரம் மற்றும் அதன் முன்னேற்றம் குறித்து பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அர்த்தமுள்ள புரட்சி இயக்கம் என்ற பொருள்வரும் பெயரிலான இந்த அமைப்பு பல ஆண்டுகளாக நாடு முழுவதும் செயல்பட்டு வருகிறது. விபரங்களுக்கு http://www.arthakranti.org/

மக்களின் பொருளாதார நிலை மேம்பட, ஏழைகள், மத்திய வர்க்கம் மற்றும் வசதிபடைத்த உயர் வகுப்பினரிடையே உள்ள பொருளாதார வித்தியாசத்தைக் குறைத்து முன்னேற்றம் அடைய, அர்த்தகிராந்தி நமது பிரதமருக்கு கடந்த 2016 ஆண்டு முதல் சில ஆலோசனைகளை அளித்துள்ளது.

அதில் முக்கியமானது உயர்மதிப்பிலான காகித பணத்தை ஒழிப்பது. மக்கள் அனைவரையும் வங்கிச் சேவைக்குள் அல்லது டிஜிட்டல் பரிமாற்றத்திற்குள் கொண்டு வருவது. இதன்மூலம் கருப்புப்பணம், கடத்தல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றங்களைத் தடுத்தல், மிரட்டிப் பணம் பறித்தல், பொருளாதாரக் குற்றங்கள், திருட்டு, கள்ளநோட்டுகள் போன்றவற்றைத் தடுக்க முடியும். மேலும் லஞ்சம், ஊழல் போன்றவற்றை தடுக்க முடியும். வரி ஏய்ப்புகள் தவிர்க்கப்டும்.

மேலும், இரண்டாவது சீர்திருத்தமாக அவர்கள் முன்மொழிந்தது 2016 ஆண்டு காலகட்டத்தில் நம் நாட்டில் சுமார் 60 வகையான வரிகள் மக்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த வரிகள் அனைத்தையும் நீக்கிவிட வேண்டும். அனைத்து பணப் பரிமாற்றங்களும் வங்கி அல்லது டிஜிட்டல் முறையில் நடக்கும் நிலையில், பணம் பெறுபவருக்கு ஒரு சிறிய சதவீதம் பரிமாற்ற வரி என்று விதிக்க வேண்டும். ரொக்கமாக சிறிய அளவில் செய்யப்படும் பணப் பரிமாற்றத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும். தனிநபருக்க வருமானவரி, விற்பனை வரி போன்ற எவ்வித வரியும் விதிக்கக் கூடாது. புரிமாற்ற வரி என்ற பெயரில் நாடு முழுவது ட்ரான்ஸாக்ஷன் டாக்ஸ் மட்டுமே விதிக்கப்பட வேண்டும். நிறுவனங்களிடம் வட்டும் அவர்களது வருமாத்திற்கு வரி விதிக்கலாம். ஏற்றுமதி, இறக்குமதிக்கும் வரி விதிக்கலாம்.

இவ்வாறு செய்யும்போது, பொருளாதார ரீதியாக பலன் தேவைப்பட்டோருக்கு அவர்களது நிதிநிலைக்கேற்ப உதவியாக இருக்கும். மாறாக தற்போது உள்ள மறைமுக வரியான ஜி.எஸ்.டி. வரி முறையில் வசதி படைத்தவர்களுக்கும், மத்தியதர மற்றும் ஏழைகளுக்;கும் ஒரே வரி விதிக்கப்படுகிறது. மேலும், மாதச்சம்பளம் வாங்குபவர் தனது வருமானத்தில் உரிய வரி பிடித்தம் செய்த பின்னர் சம்பளம் வாங்குகிறார். ஒரு முறை வரிபிடித்தம் செய்யப்பட்டுவிட்ட நிலையில், அவர் கைவசம் வந்த மீதித் தொகையில், அவர் செலவு செய்யும் ஒவ்வொரு இடத்திலும் அவர் மீண்டும் மீண்டும் வரி செலுத்தும் நிலை உள்ளது. ஒரு முறை சம்பாதித்த வருமானத்திற்கு, அவர் வருமான வரி செலுத்திய பின்னரும், அதே பணத்திற்கு அவர் பல்வேறு இடங்களில் ஒவ்வொரு பொருள் அல்லது சேவை பெறும்போதும் வெவ்வேறு முறைகளில் வரி செலுத்த வேண்டியுள்ளது.


இதே ட்ரான்ஸாக்ஷன் டாக்ஸ் எனும் பரிமாற்ற வரி முறை கொண்டு வந்தால், ஒரு நபர் அவர் சம்பாதிக்கும் வருமானத்திற்கு ஒரே பரிமாற்ற வரி செலுத்தினால் போதும். உதாரணமாக எனது சம்பளம் அல்லது பிற தொகைகள் எனது வங்கிக் கணக்கில் சேர்ந்ததும் எனது வங்கி 2 சதவீதம் எனது கணக்கிலிருந்து நேரடியாக எடுத்து அரசுக்கு கொடுத்து விடும். நான் ஏதாவது பொருள் வாங்கும்போது அந்த கடைக்காரரின் வங்கி அவரது கணக்கில் இருந்து 2 சதவீதம் எடுத்து அரசுக்கு செலுத்திவிடும். இதுபோன்ற முறை இருந்தால் இத்தனை அரசு அலுவலகங்கள் வைத்து லட்சக்கணக்கான அலுவலர்களை வைத்து கண்காணித்து, நடவடிக்கை எடுக்கும் தேவை ஏற்படாது. வங்கிகளே அரசுக்கு நேரடியாக வரி வசூல் செய்து கொடுத்து அதற்கு சேவைக்கட்டணம் அரசிடமிருந்தே வசூலித்துக் கொள்ளும்.  

எனக்கென்னவோ அர்த்தகிராந்தி அமைப்பு சொன்ன முறைகளை அரசு படிப்படியாக செயல்படுத்தத் தொடங்கியிருப்பது கடந்த சில ஆண்டுகளாக நடக்கும் செயல்கள் மூலம் தெரிகிறது.


ஆனால், இதில் மிகப்பெரும் சவால் என்னவென்றால், நம் நாட்டின் அனைத்து கிராமங்களுக்கும், எல்லா தரப்பு மக்களுக்கு எளிதில் வங்கிச் சேவை கிடைக்கவும், எளிய முறையில் பரிமாற்றங்கள் செய்யவும் தேவையான வசதிகள் நம் நாட்டில் உள்ளதா என்றால், இல்லை என்பதே எனது பதிலாக இருக்கும்.

முதலில், நம் அரசு செய்ய வேண்டியது, அனைவருக்கும் எளிதில் வங்கிச் சேவைகளும், படிப்பறிவு மேம்பட்டிராத கிராம மக்களுக்கும் எளிதில் வங்கிச் சேவைகள் கிடைக்க உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும். கட்டணங்கள், விதிமுறைகள் போன்ற தடைகளை நீக்க வேண்டும். தாமதமில்லாமல், வங்கியில் நாள் முழுவதும் காக்க வைக்கப்படாமல், ஒவ்வொரு வீட்டுக்கும் நமது தமிழக அரசின் முன்னோடி திட்டங்களான இல்லம் தேடி கல்வி, “இல்லம் தேடி மருத்துவம் போன்று இல்லம் தேடி வங்கிச் சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்தால், அனைத்து மக்களும் வங்கிச் சேவைக்குள் வருவதற்கு தயங்கமாட்டார்கள்.

எனவே, நமது அரசு விரைவில் பொருளாதார மாற்றத்திற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் என நம்புகிறேன்.

 

கட்டுரையாளர்: 

க. சங்கிலிக்காளை

தொழில் முன்னேற்ற ஆலோசகர்.  

தொடர்புக்கு: gsraj1979@gmail.com

 

 

பொறுப்புத் துறப்பு: 

இக்கட்டுரையில் இடம்பெறும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்களே. சாலியர் குரல் மற்றும் அதன் நிறுவனர், ஆசிரியர், துணை ஆசிரியர் மற்றும் தொடர்புள்ள அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் செய்தித் தொடர்பாளர்கள் ஆகிய எவருக்கும் எவ்வித பொறுப்பும் கிடையாது என்பதை அறிந்து கொள்ளவும். 

மேலும் இங்கு உபயோகப் படுத்தப்பட்டுள்ள படங்கள், சின்னங்கள் (லோகோ) மற்றும் இணையதள முகவரி ஆகியவை அதன் உரிமையாளர்களுக்குச் சொந்தமானவை. தகவலுக்காக மட்டுமே இங்கு அவை பயன்படுத்தப் பட்டுள்ளன.