Latest posts

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

திங்கள், 30 ஜனவரி, 2017

பாதுகாப்பில்லா பெட்டகம் - வாதூலன்






இரண்டு வாரம் முன்பு, சில ஏடுகளிலும் ஊடகங்களிலும் வெளியான செய்தி பலரையும் பதற்றப்பட வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.
சென்னையில் வங்கிக் கிளையொன்றில், பாதுகாப்புப் பெட்டகங்கள் கொள்ளையடிக்கப்பட்டன என்பதுதான் அந்தச் செய்தி..
இதுபோன்ற கொள்ளை சம்பவம் இதுவரை அறிந்தே இராத ஒன்று. எனவேதான், நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த வங்கிக் கிளை, "அவசர விடுமுறை'யை அறிவித்து, வாடிக்கையாளர்களை அருகிலிருக்கும் வேறு கிளைகளை அணுகுமாறு கோரிக்கை விட்டிருக்கிறது.
"பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறோம், சேதம் எவ்வளவு என்பதை ஆராய்ந்து வருகிறோம்' என்று நிர்வாகத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வங்கியின் அறிக்கை மழுப்பலாகத் தெரிந்தாலும், நடைமுறை அதுதான்.
வங்கியில் பாதுகாப்பு பெட்டக சேவை என்பது, மிகத் தனியான வகை. இதில், வாடிக்கையாளர்களுக்கும் வங்கிக்கும் இடையே உள்ள உறவு, பிற கணக்குகளில் இருப்பது போலல்ல, கிட்டத்தட்ட இது வீட்டு உரிமையாளர்களுக்கும் வீட்டில் குடியிருப்போருக்கும் நிலவும் உறவு போன்றதுதான்.
ஒரு வீட்டை ஒருவருக்கு வாடகைக்குக் கொடுப்பது போல, வங்கி மேலாளர் பெட்டகத்தை ஒரு வாடிக்கையாளருக்கு வாடகைக்குக் கொடுக்கிறார். இல்லத்துக்கு முன்பணம் கொடுப்பது போல, பெட்டகத்துக்கும் நாலு மாச அட்வான்ஸ் தர வேண்டும் (வேறு வகையான டெபாஸிட்டுகள் நிறைய இருந்தால்கூட இதற்கான முன்பணம் அவசியமென்று வங்கி வற்புறுத்துகிறது).
அவ்வப்போது, வீட்டு வாடகை உயர்த்தப்படுவதுபோல வாடகை பெட்டக அளவுக்குத் தக்கபடி வாடகைத் தொகை மாறுபடும், வீட்டு உடமையாளருக்கு, வீட்டுக்குள் வைத்திருக்கும் பொருள்கள் என்னென்ன என்பதை தெரிவிக்க வேண்டியது எப்படி அவசியமில்லையோ, அதேபோல, பெட்டகத்தில் உள்ள பொருள்களின் விவரத்தை வாடிக்கையாளர் வங்கிக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை.
பெட்டகத்தில் இன்னின்ன பொருள் களைத்தான் வைக்க வேண்டும் என்கிற வரையறை எதுவும் கிடையாது. நகை, பாத்திரங்கள், உயில், வீட்டுப் பத்திரங்கள் என்று எதை வேண்டுமானாலும் வைக்கலாம் (சேதம் விளைவிக்கக் கூடிய சாமான்கள் இருக்கக் கூடாதென்று ஒப்பந்த படிவத்திலேயே ஒரு ஷரத்து உண்டு).
பெட்டகத்தைத் திறப்பதற்கு, வாடிக்கையாளருடன் வங்கி அதிகாரியும் உடன் செல்வார். அதிகாரியிடம் இருக்கும் Master Key யும், வாடிக்கையாளரின் சாவியும் இணைந்து செயல்பட்டால்தான், லாக்கரைத் திறக்க இயலும்.
பின்னர், நிதானமாக வாடிக்கையாளர் தேவையானவற்றை எடுத்தோ, வேறு பொருள்களை வைத்தோ, பூட்டிக் கொள்ளலாம். அப்போது அதிகாரி யாரும் அருகிலிருக்க மாட்டார். இதுதான் நடைமுறை.
பெட்டகத்தை உடைத்துத் திறக்க மிக அரிதான தருணங்களில் வங்கிக்கு உரிமை உண்டு. ஒரு குறிப்பிட்ட காலம் கடந்தும் கட்டணம் செலுத்தாமலிருந்தால் -- கடிதம், பதிவுத் தபால் எல்லாம் போட்டும் பதில் இல்லாமலிருந்தால் -- வங்கி அதிகாரி ஒரு சாட்சி முன், அதை திறந்து பார்ப்பார் (நூற்றுக்கு 99 சதவிகிதம் அதில் ஏதும் இருக்காது, பெட்டக வாடிக்கையாளர் எங்காவது வெளிநாட்டிலிருந்து, மறந்தும் போயிருப்பார்!).
வேறொரு சூழலிலும் பெட்டகத்தை உடைக்கலாம். புலனாய்வுத் துறையிலிருந்தோ, வருமான வரி அலுவலகத்திலிருந்தோ நோட்டீஸ் வந்தால், அவர்கள் முன்னிலையிலேயே உடைப்பார்கள்.
1976-ஆம் ஆண்டு அவசர நிலையின்போது, வருமான வரி அதிகாரிகள் ஒரு சிறிய பெட்டகத்தை உடைத்து, அதிலுள்ள கட்டு கட்டான நோட்டுகளை அரசு கணக்கில் வரவு வைத்தார்.
இன்னொன்றையும், இங்கு அவசியம் குறிப்பிட்டாக வேண்டும். பெட்டகத்திலுள்ள பொருள்களின் மீது வங்கிகளுக்கு உரிமை கிடையாது; அதாவது வாராக் கடன் உள்ள வாடிக்கையாளர் பெட்டகத்தில் நகையோ வேறு வீட்டு பத்திரமோ வைத்திருந்தால், அதை கடனுக்குச் சரி செய்யக் கூடாது.
பொதுவாக, வங்கிகளில் இரும்பறையில் (Double Lock) உள்ள தொகை; அடமானம் வைக்கப்பட்டிருந்த நகைகள் இவற்றுக்குக் காப்பீடு உண்டு. குத்து மதிப்பாகச் சில கோடிகளுக்குக் காப்பீடு எடுத்திருப்பார்கள்.
இதுதவிர, வங்கியிலிருந்து வேறு இடத்துக்குக் கொண்டு செல்லும் பணத்துக்கும் (Cash in trsnsit) காப்பீடு உண்டு. ஆனால், பெட்டகத்துள் இருக்கிற பொருள்களுக்கு காப்பீடு கிடையாது.
ஏனெனில் என்னென்ன வைக்கப்பட்டிருக்கின்றன, மதிப்பு எவ்வளவு என்பது வாடிக்கையாளருக்கு மட்டுமே தெரிந்த ரகசியம் ஆயிற்றே?
கூட்டுறவு வங்கியில் சில மாத முன் நிகழ்ந்த சம்பவத்தை இங்கே குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். வாடிக்கையாளர் ஒருவர் தன் பெட்டகத்திலுள்ள ஆவணங்களைக் கறையான் அரித்து விட்டதாக வழக்கு கொடுத்து, வெற்றியும் பெற்றிருக்கிறார்.
இதில் வங்கி செய்த தவறு, ஏற்கெனவே அவர் புகார் தந்தும் கண்டு கொள்ளவில்லை. நட்ட ஈடாக வங்கி ஒன்றரை லட்ச ரூபாய் வழங்குமாறு நீதியரசர் தீர்ப்பு அளித்திருக்கிறார்..
அண்மையில் நிகழ்ந்த கொள்ளை சம்பவத்தில், பாதிக்கப்பட்டவர் ஒருவர் அல்ல; பல வாடிக்கையாளர்கள். வங்கியில் காவலாள் இல்லையா? எச்சரிக்கை மணி வைக்கப்படவில்லையா? இருந்தும் அது செயல்படவில்லையா? வங்கியின் பாதுகாப்பு அம்சத்தில் ஏதாவது பெரியதவறு இருந்ததா?
பொதுவாக, வீட்டில் திருட்டுப் பயம் உண்டென்ற அச்ச உணர்வில்தான், வங்கியில் பெட்டகத்தை மக்கள் நாடுகிறார்கள், பாதுகாப்பு பெட்டகத்துக்கே பாதுகாப்பு இல்லையானால்? வங்கி நிர்வாகம் தீவிரமாக யோசிக்க வேண்டிய விஷயம் இது.











கைமாற்று வெண்பா - தஞ்சாவூர்க் கவிராயர்

Return to frontpage

ஓவியம்: முத்து

கைமாற்றுக் கேட்பதும் கொடுப்பதும் அந்தக் காலத்தில் சகஜமாக இருந்தது. கைமாற்று என்பது அன்றாடத் தேவைகளுக்கான அவசரப் பணமுடைகளைத் தீர்த்துவைக்கும் ஒரு குட்டிப் பணப் பரிமாற்றம்.. அவ்வளவே! இந்த விஷயத்தில் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது.

கைமாற்று வாங்கும் ‘கலை’

கைமாற்றுத் தொகை மிகவும் சொற்பமாகத்தான் இருக்கும். சிலர் சொன்னபடியே அதனைத் திருப்பிக் கொடுத்துவிடுவார்கள். சிலர் இழுத்தடிப்பார்கள். ஏற்கெனவே வாங்கியதைத் திருப்பிக் கொடுக்காமல் இருக்கிறோமே என்ற சங்கோஜம் சிறிதுமின்றி, மறுபடி மறுபடியும் கேட்கிறவர்களும் உண்டு.

மனமிரங்கி இவர்களுக்கும் உதவிய மனிதர்கள் ‘குடும்பக் கஷ்டம் அவர்களை அப்படிக் கேட்க வைக்கிறது. பாவம், இவர்கள் என்ன செய்வார்கள்?’ என்று தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொள்வார்கள்.

கைமாற்று வாங்குவதைக் கலையாகப் பயின்றவர்களும் உண்டு. இன்னாரிடம், இந்தச் சமயத்தில், இத்தனை மணிக்குப் போனால் கைமாற்று நிச்சயம் வாங்கிவிடலாம் என்று குறிபார்த்து அம்பு எய்யும் கில்லாடிகள் இவர்கள். நமக்குக் கைவிரிக்கும் நண்பர்கள், நைச்சியமாகப் பேசும் இத்தகைய நபர்களிடம் கைமாற்றுக் ‘கொடுத்து’ ஏமாந்திருக்கிறார்கள்.

அப்பாவின் ‘கைமாற்று’ உபாயம்!

கைமாற்று கேட்பதற்கு அப்பா கடைப்பிடித்த உபாயம் ஆச்சரியமானது.

வெண்பா!

அப்பா உள்ளூர்ப் பள்ளிக்கூடத்தில் தமிழாசிரியர். நான் ஆரம்பப் பள்ளி மாணவன்.

தபால் கார்டு அளவுக்குக் கத்தரித்த தாள்கற்றை அப்பாவின் மேஜை இழுப்பறையில் எப்போதும் தயாராக இருக்கும். அதில் ஒரு தாளை உருவி, முத்து முத்தான கையெழுத்தில் ஒரு வெண்பா எழுதி, என் கையில் கொடுப்பார் அப்பா. தன் சக ஆசிரியர் வீட்டில் கொண்டுபோய்க் கொடுக்குமாறு சொல்வார்.

வெண்பா வரிகள் ஒன்றிரண்டுகூட இப்போது ஞாபகத்தில் இருக்கின்றன.

‘தைமாதச் சம்பளத்தில் தவறாது தந்திடுவேன்

கைமாற்று பத்துரூபாய் தா!’ என்பதுபோல் அவை முடியும்.

நான் அதை வாங்கிக்கொண்டு ஒரே ஓட்டமாக ஓடுவேன். என் கையில் இருக்கிற வெண்பாச் சீட்டை வாங்கிப் படிக்கிற முகங்களை ஆவலுடன் பார்ப்பேன்.

சிலர் சீட்டைப் பார்த்து லேசாகப் புன்முறுவல் செய்வார்கள். சில பேர் அப்படியே நின்றுவிடுவார்கள். வேறு சிலரோ கண்களைத் துடைத்துக்கொண்டு என் முதுகைத் தடவிக் கொடுப்பார்கள்.

அப்பாவை நினைத்துப் பெருமையாக இருக்கும்.

கையில் தனியாகச் சில்லரை கொடுத்து ‘‘காப்பி சாப்பிடு தம்பி’’ என்பார்கள் சிலர். நான் வாங்க மாட்டேன். அவர்கள் கொடுக்கிற பணத்தைக் கொண்டுவந்து அப்படியே அப்பாவிடம் கொடுப்பேன்.

மாசத்தின் இரண்டாவது வாரத்திலேயே அந்தக் கஷ்ட தினங்கள் ஆரம்பமாகிவிடும். முக்கியமாக, அம்மாவை டாக்டரிடம் அழைத்துப் போவது…

அப்பா வெண்பா எழுத உட்கார்ந்துவிட்டால், ரொம்பப் பணமுடை வந்துவிட்டது என்று அர்த்தம்.

சாமிக்கண்ணு சார்தான் அடிக்கடி வெண்பாக்களுக்குப் பணம் கொடுப்பார். நான் கொண்டுபோய்த் தருகிற வெண்பாவை ஆறஅமரப் படிப்பார். படித்துவிட்டு ‘‘அடடா!’’ என்பார்.

‘‘அம்மாவுக்கு இப்போ எப்படி இருக்கு?’’ என்று பரிவோடு கேட்பார். பிறகு, பணம் கொடுப்பார்.

ஒருநாள் அப்பாவிடம் கேட்டேன்.

‘‘அப்படி என்னதான் எழுதறீங்க அந்தச் சீட்டுல?”

‘‘வெண்பாடா!’’

‘‘சரி, அதுக்கு ஏன் பணம்?’’

‘‘கைமாத்துடா!’’

பத்து ரூபாய்க்கு மேல் அப்பா கைமாற்றுக் கேட்க மாட்டார்.

பத்து ரூபாய் வந்துவிட்டால் வீட்டில் காபியில் சர்க்கரை தாராளமாய்க் கரையும். உப்புமா வாசனை மூக்கைத் துளைக்கும். யாரோ சன்னமாகப் பாடுவதுகூடக் கேட்கும்.

வெண்பாவும் வெற்றிச்செல்வி டீச்சரும்

வெண்பா விஷயமாக வெற்றிச்செல்வி டீச்சர் வீட்டில் ஒரு சம்பவம்.

நான் நீட்டிய வெண்பாவை வாங்கிக்கூடப் பார்க்காமல், ‘‘அதோ… ரேடியோ பெட்டி பக்கம் வைத்துவிட்டுப் போ!’’ என்றார். ஆனால், பத்து ரூபாய் கொடுத்தார். ‘வெண்பாவைப் படித்துக்கூடப் பார்க்காமல் ஏன் பணம் கொடுக்கணும். நாங்க என்ன பிச்சைக்காரர்களா?’

மனசே இல்லாமல் வாங்கி வந்து அப்பாவிடம் கொடுத்தேன். அப்பாவிடம் நடந்ததைச் சொன்னேன்.

‘‘இனிமே அந்த டீச்சருக்கு வெண்பா எல்லாம் எழுதாதீங்க!’’

‘‘சரிடா!’’ என்றார் சிரித்துக்கொண்டே.

அடுத்த தடவை வெற்றிச்செல்வி டீச்சர் வீட்டுக்கு கையில் ‘வெண்பா’ இல்லாமல் போனேன்.

பத்து ரூபாய் கொடுத்துவிட்டு ‘‘வெண்பா எங்கே?’’ என்று கேட்டார். பிறகு, உள்ளே என்னைக் கூப்பிட்டார்.

அங்கே பூஜை அறையில் சரஸ்வதி படத்தின் கீழே ஒரு சிறிய பிரம்புப் பெட்டி. அதில் நிறைய துண்டுத் தாள்கள். அவை எல்லாமே அப்பா எழுதிய கைமாற்று வெண்பாக்கள்.

‘‘புலவர்… அதான் உங்கப்பா எழுதியதை மொதல்ல சரஸ்வதி படிக்கணும். உங்க வீட்டு கஷ்டம்லாம் தீரணும். அப்புறம்தான் நான் ஆறஅமரப் படிப்பேன்!’’ என்றார் டீச்சர்.
எனக்கு நெஞ்சுக்குள் என்னவோ முட்டியது.

அவர் கொடுத்த பத்து ரூபாயை அப்பாவிடம் கொடுத்துவிட்டுச் சொன்னேன்:
‘‘இனிமே அந்த வெற்றிச்செல்வி டீச்சருக்கு மட்டும் வெண்பா எழுதுங்கப்பா!’’
அப்பா புன்னகைத்தார்..

- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com

உப்புமாவின் ருசி என்பது.. பா.ராகவன்


Return to frontpage



தமிழர்களால் மிக அதிகம் தூற்றப்பட்ட ஓர் உணவு உண்டென்றால் அது உப்புமாவாகத்தான் இருக்க முடியும். எனக்கு உப்புமா பிடிக்கும் என்று சொல்கிற பிரகஸ்பதிகள் ஒப்பீட்டளவில் வெகு சொற்பமே.

உப்புமா மீதான இந்த துவேஷம் நமக்கு எப்படி உண்டானது என்று யோசித் துப் பார்த்தால் கிடைக்கும் பதில்களில் ஒரே ஒரு காரணம்தான் நியாயமானதாக இருக்கும். அது, உப்புமாவை வெகு சீக்கிரம் சமைத்துவிட முடியும் என்பது தான்! உடனே கிடைத்துவிடும் எதற்கும் அத்தனை மதிப்பு சேராது என்பது இயற்கையின் விதி. அவ்வகையில் உப்புமா ஒரு பாவப்பட்ட சிற்றுண்டி.

ஆனால், முற்றிலும் மாறுபட்ட கல் யாண குணங்களால் வடிவமைக்கப்பட்ட ஜீவராசியான எனக்கு, உப்புமா என்பது மிகவும் பிடித்தமான உணவு. அதன் மீதான நீங்காத விருப்பத்தை மிகச் சிறு வயதுகளில் என் பாட்டி உருவாக்கினார். விடுமுறை நாட்களில் சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் இருந்த பாட்டி வீட்டுக்குப் போகும்போதெல்லாம் உப்புமா பிராப் தம் சித்திக்கும்.
பாட்டியானவருக்கு அன்றைய தேதி யில் ஒரு டஜனுக்குச் சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ பேரப் பிள்ளைகள் இருந்தார்கள். நாலைந்து மகள்கள், இரண்டு மூன்று மகன்களைக் கொண்ட பிரம்மாண்ட குடும்ப இஸ்திரி அவர். எப்போதேனும் தான் நடக்கும் என்றாலும் மொத்தக் குடும்பமும் ஒன்றுகூடுகிற நாட்களில் அவருக்கு மூச்சுத் திணறிவிடும். அத் தனை பேரையும் உட்கார வைத்து தோசை வார்த்துப் போடுவதோ, பூரிக் கடை திறப்பதோ நடைமுறை சாத்தியமற்றது. தவிரவும் பகாசுர வம்சத்தில் உதித்தோர் யாரும் ஒன்றிரண்டுடன் திருப்தி கொள்பவர்களும் அல்லர்.

எனவே பாட்டி உப்புமா என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துவிடுவார்.

‘‘பிள்ளைகளா, இன்று அரிசி உப்புமா!’’
பாட்டியின் அரிசி உப்புமா வேள்வி யானது அரிசியை நனைத்து உலர்த்தி மாவு மெஷினுக்கு எடுத்துச் செல்வதில் தொடங்கும். அரிசிப் பதமும் இல்லா மல், ரவைப் பதமும் இல்லாமல் அவருக்கென ஒரு திரிசங்கு பதம் உண்டு. காசித் துண்டால் பரபரவென முதுகு தேய்க்கிற பதம் அது. அந்தப் பதத்தில் அதை அரைத்து எடுத்து வருவார். பரம தரித்திர சிகாமணியான என் தாத்தா, வீட்டுச் செலவுக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொடுத்த பணத்தோடு சரி. பாட்டி அதன்பிறகு எப்படிச் சமாளித்து வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியாது.

எனவே அரிசி உப்புமாவுக்கு அலங் கார விசேஷங்கள் ஏதும் இருக்காது. வெண்கலப் பானையில் அதிகம் எண்ணெய் காணாத, சும்மா தாளித்த வெறும் அரிசி உப்புமா. உண்மையில் அதைத் தின்னுவது சிரம சாத்தியம்தான். ஆனாலும் பாட்டியெனும் புத்திசாலி ஒரு காரியம் செய்வாள். சமைத்து இறக்கிய அரிசி உப்புமாவின் மீது ஒரு சிறு ஸ்பூன் அளவுக்கு நெய்யை ஊற்றி கப்பென்று மூடி வைத்துவிடுவாள்.

பத்திருபது நிமிஷங்களுக்குப் பிறகு அந்த உப்புமா பாத்திரத்தைத் திறந்தால் அடிக்கும் பாருங்கள் ஒரு மணம்! அந்த மணம்தான் அந்த உப்புமாவின் ருசியாகப் பரிமாணம் பெற்றிருக்கிறது என்று இப் போது தோன்றுகிறது. தோட்டத்தில் பறித்த பாதாம் இலைகளைக் கழுவி, ஆளுக்கு இரண்டு கரண்டி உப்புமாவைப் போட்டு, ஓரத்தில் ஒரு துண்டு மாங்காய் ஊறுகாயை வைத்துத் தருவார் பாட்டி.

என் சிறு வயதுகளில் உண்ட அந்த அரிசி உப்புமா இன்று வரை நாவில் நிற்கிறது.

பின்னாளில் வந்து சேர்ந்த என் தர்ம பத்தினி, கோதுமை ரவை உப்புமாவில் ஒரு புரட்சி செய்யும் முடிவுடன் வீட்டில் சாம்பார் வைக்கும் அனைத்து தினங்களிலும் இரவு உணவு கோதுமை ரவை உப்புமா என்றொரு சட்டம் கொண்டு வந்தார். இக்கலவரமானது எந்தளவுக்குச் சென்றது என்றால், காலை சமையல் கட்டில் இருந்து சாம்பார் வாசனை வரத் தொடங்கினாலே, ‘‘அப்பா இன்னிக்கு நைட் டின்னருக்கு ஓட்டலுக்குப் போலாமா?’’ என்று என் மகள் கேட்க ஆரம்பித்தாள்.

உண்மையில் கோதுமை ரவை உப்புமாவும் ஒரு நல்ல சிற்றுண்டிதான். சேர்மானங்கள் அதில் முக்கியம். உப்புமா வின் ருசி என்பது அதில் இடித்துச் சேர்க் கப்படும் இஞ்சியால் பூரணமெய்துவது. நீங்கள் எண்ணெயைப் பீப்பாயில் கொண்டு கொட்டுங்கள். மணக்க மணக்க நெய்யூற்றித் தாளியுங்கள். காய்கறிகள் சேருங்கள். வேர்க்கடலையோ, முந் திரியோ வறுத்துத் தூவுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உப்புமா ருசிப்பது இஞ்சியால் மட்டுமே. எவ்வளவு அதிகம் இஞ்சி சேருகிறதோ, அவ்வளவு அதிக ருசி.

என் நண்பர் ஈரோடு செந்தில்குமார் ஒரு ருசிகண்டபூரணர். திடீரென்று இரு பத்தி நாலு மணிநேர உண்ணாவிரதம், நாற்பத்தியெட்டு மணிநேர உண்ணா விரதம் என்று அறிவித்துவிட்டு வெறுந் தண்ணீர் குடித்துக்கொண்டு கிடப்பார். விரதம் முடிகிற நேரம் நெருங்குகிறபோது வீறுகொண்டு எழுந்துவிடுவார்.

‘‘சுவாமி! என்னோட இன்னிய மெனு சொல்றேன் கேளும். ஆறு முட்டை. முன்னூத்தம்பது கிராம் பன்னீர் உப்புமா. நூத்தம்பது கீரை. நூத்தம்பது வாழத்தண்டு. நூறு தயிர், ரெண்டு க்யூப் சீஸ். பத்தாதோன்னு எழுபது கிராம் வெண்ணெயும் முப்பது கிராம் நெய்யும் சேத்துக்கிட்டேன்.’’

மனைவியை இம்சிக்காத உத்த மோத்தமர் அவர். தனக்கு வேண்டியதைத் தானே சமைத்துக்கொள்கிற சமத்து ரகம்.

ஒருநாள் நட்டநடு ராத்திரி பன் னெண்டே காலுக்கு போனில் அழைத் தார். அப்போதுதான் விரதம் முடித்து, விருந்தை ருசித்திருப்பார் போலிருக் கிறது.

‘‘சுவாமி, உமக்கு அமிர்தத்தோட ருசி தெரியுமா? சொல்றேன் கேட்டுக்கங்க. நாலு கரண்டி நல்லெண்ணெய் எடுத்துக்கங்க. கடாய்ல ஊத்திக் காயவிட்டு ரெண்டு கரண்டி சாம்பார் மொளவொடி சேரும். காரம் சுருக்குனு இருந்தாத்தான் ருசிக்கும். ஆச்சா? அப்பறம், வரமொளவொடித் தூள் நாலு கரண்டி. வரமல்லி வாசம் பிடிக்கும்னா சாம்பார்த் தூள் அரகரண்டி எக்ஸ்ட்ரா. உப்பு, பெருங்காயம் உம்ம இஷ்டம். இதெல்லாம் வரிசையா போட்டா தளபுள தளபுளன்னு எண்ண கொதி வந்துரும். அடங்கறப்ப ஆஃப் பண்ணீரும். அஞ்சு நிமிஷம் மூடி வெச்சிட்டு அப்பறம் எடுத்து பன்னீர் உப்புமாவுக்குத் தொட்டு சாப்ட்டுப் பாரும். எங்க ஊர்ல மீனை வறுத்து வெச்சிக்கிட்டு இதத் தொட்டு சாப்டுவாங்க. மீனவிட இது பனீருக்குத்தான் அருமையாச் சேரும்!’’

பல வருஷங்களுக்கு முன்னால் டெல்லியில் கணபதி என்று எனக்கொரு நண்பர் இருந்தார். இப்போது இல்லை. காலமாகிவிட்டார். யு.என்.ஐ செய்தி நிறுவனத்தில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தவர். ஒருநாள் அவர் எனக்கு கீரை உப்புமாவை அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லி ஒரு ஓட்டலுக்கு அழைத்துப் போனார். அது உத்தரபிரதேசத்தில் குருட்சேத் திரத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சிறு டவுன். இப்போது பேர் மறந்துவிட்டது.

ரவையுடன் பாலக் கீரையைச் சேர்த்து வேகவைத்திருந்தார்கள். மிளகாய் சேர்மானம் கிடையாது. குறுமிளகுதான். நல்லெண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய். விசேடம் அதுவல்ல. கேரட்டுடன் பொடிப்பொடியாக நறுக்கிய கொய்யாக் காயை அந்த உப்புமா முழுதும் தூவிக் கொடுத்தார்கள். ருசி என்றால் அப்படியொரு ருசி!

உப்புமாவுக்கு இம்மாதிரியாகக் கொஞ்சம் கேனத்தனமான, அல்லது கலை மனத்துடன் அலங்கார விநோதங் கள் செய்தால் அது ஓர் உன்னதப் பட்சணமாகிவிடுகிறது.

சர்க்கரை தூவிய உப்புமாவை என்றாவது மசால் தோசைக்குள் வைத்து ருசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது ஒரு மினியேச்சர் சொர்க்கம்.

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerpara@gmail.com

ஞாயிறு, 29 ஜனவரி, 2017

குடல் எனும் கால்பந்து மைதானம்! டாக்டர் கு.கணேசன்

Dinakaran Daily news




காலை டிபனுக்கு மெதுமெதுவென்று இருக்கும் கேசரி, பொங்கல், வடையை மட்டுமா சாப்பிடுகிறோம்? கடிக்கவே முடியாத மைசூர்பாகையும், மெல்லவே முடியாத முறுக்கையும்தான் வயிற்றுக்குள் தள்ளுகிறோம். மதியம் மட்டன், மாலையில் பலகாரங்கள், இரவில் பஃபே விருந்து என்று வயிற்றைத் ‘தாக்குகிறோம்’. தசைப்பையாக இருக்கிற இரைப்பை எப்படி இதை சமாளிக்கிறது? ‘செரிமானம்’ என்ற ஒற்றை வார்த்தையில் இதை வர்ணித்துவிடலாம் என்றாலும், 24 மணி நேரமும் இயங்கும் ஒரு மினி தொழிற்சாலை மாதிரியான உணவுப்பாதையில் நிகழும் ஆச்சரியங்களைக் கொஞ்சம் விரிவாகச் சொன்னால்தான் ‘ருசி’க்கும்.ஆறடி உடலுக்குள் சுருண்டு படுத்திருக்கும் உணவுப்பாதையின் மொத்த நீளம் 30 அடி! இதை வாய், உணவுக்குழாய், இரைப்பை, சிறுகுடல், கல்லீரல், பித்தப்பை, கணையம், பெருங்குடல் என எட்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். இவை எல்லாமே கூட்டணி அமைத்துத்தான் செரிமானத்தை சாத்தியமாக்குகின்றன.

இந்தப் பாதையின் உள் மடிப்புகள், உறிஞ்சிகள், வால்வுகள், நரம்புகள் எல்லாவற்றையும் விரித்தோமானால், அகலத்தில் 100 சதுர மீட்டருக்கும் கூடவே இருக்கும். ஏறக்குறைய ஒரு ரக்பி விளையாட்டு மைதானம் அளவு. இதற்குள் பல்லாயிரம் கோடி பாக்டீரியாக்கள் நம்முடன் குடித்தனம் நடத்துகின்றன. பாக்டீரியா என்றதும் ‘அது கிருமியாச்சே, உடம்புக்கு ஆபத்தாகிவிடாதா?’ என்று யோசிக்க வேண்டாம்! இவை நமக்கு நன்மை செய்கிற பாக்டீரியாக்கள். இவை இல்லாமல் உணவின் செரிமானப் பயணம் சுகப்படாது!உடலுக்குள் இருக்கும் பெரிய மண்டலம், செரிமான மண்டலம்தான். என்னதான் அளவில் பெரிதாக இருந்தாலும், இதனால் ‘தனி ஆட்சி’ செய்ய முடியாது! மூளையுடன் சேர்ந்து ‘கூட்டாட்சி’தான் செய்ய முடியும்! கோடிக்கணக்கான நரம்பு செல்களும் அவற்றின் இழைகளும் இணைந்து பிணைந்து குடலுக்கும் மூளைக்கும் பாலம் அமைப்பது இதற்குத்தான். பசித்து சாப்பிடும் எதையும் வயிற்றுக்குள் வாங்கி, அதைச் சக்கையாக வெளியேற்றும் வரை செரிமான வேலை எதுவானாலும் மூளையின் கட்டளையை எதிர்பார்த்தே இருக்கிறது செரிமானப் பாதை!

நாம் விரும்பும் உணவை தூரத்தில் பார்த்தாலே நாக்கில் எச்சில் சுரக்கிறது... இது மூளை இடும் கட்டளை. உணவை வாயில் வைத்ததும், அந்த உணவின் அளவு, தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, அது அரைக்க வேண்டிய உணவா, நேரடியாக விழுங்க வேண்டிய உணவா என்று மூளைதான் வாய்க்குச் சொல்கிறது. அரைக்க வேண்டிய உணவென்றால், அதைப் பற்களுக்கு இடையில் ஒதுக்கி, அரைத்துக் கூழாக்கி, தொண்டைக் குழிக்குள் தள்ளுகிறது வாய். அதுவே திரவ உணவாக இருந்தால், நேரடியாகவே தொண்டைக்கு அனுப்பிவிடுகிறது.இந்த அற்புதப் பணிக்குத் தலையிலிருந்து தாடை வரை சுமார் 30 தசைகளும் இருபதுக்கும் மேற்பட்ட நரம்புகளும் ஒத்துழைக்கின்றன. உணவு தொண்டையை விட்டு இறங்கிய கொஞ்ச தூரத்தில் - அரை இன்ச் இடைவெளியில் - அந்த இரட்டையர்கள் இருக்கிறார்கள். உணவுக்குழாயும் மூச்சுக்குழாயும்தான் அந்த இரட்டையர்கள். மூச்சுக்குழாய் முன்பக்கமும் உணவுக்குழாய் இதன் பின்பக்கமும் இருக்க, மூச்சும் உணவும் அதனதன் பாதையில் செல்கின்றன.

எதையும் நிதானமாகச் சாப்பிட்டால் பிரச்னை இல்லை. அவசர அவசரமாகவோ, பேசிக்கொண்டோ சாப்பிட்டால், சாப்பிடும்போது சிரித்தால் பிரச்னைதான். ஒரே ஒரு உணவுப் பருக்கை தவறுதலாக மூச்சுக்குழாய்க்குள் நுழைந்து விட்டால் போதும்... கடுமையாக இருமல் வந்து மூச்சுத் திணறிப் போவோம். இதைத்தான் ‘புரையேறுதல்’ என்கிறோம். ‘சாப்பிடும்போது பேசக்கூடாது’ என்று வீட்டில் பெரியவர்கள் சொல்வதில் இந்த அறிவியலும் உண்டு! அடிக்கடி புரையேறினால் அதற்குப் பேச்சும் சிரிப்பும் காரணமாகாது. உணவுக்குழாய் புற்றுநோய், கோபத்தில் அமிலம் குடித்தது, தொண்டை நரம்பு வாதம் போன்றவை காரணமாக இருக்கலாம்.

நமது உணவுக்குழாய் 25 செ.மீ. நீளமுள்ளது. தினமும் கிலோ கணக்கில் நாம் சாப்பிடும் உணவு எப்படிச் சரியாக உணவுக்குழாய்க்குள் செல்கிறது? இதுவும் மூளை இடும் கட்டளைதான். உணவுக்குழாய் தொடங்கும் இடத்தில் ஒரு வால்வு இருக்கிறது. இது எந்த நேரமும் மூடியபடி இருக்கும்; உணவை நாம் விழுங்கும்போது மட்டும் திறந்து வழிவிடும். அப்போது இது மூச்சுக்குழாயை மூடிவிடும். உணவு உள்ளே போனதும் மறுபடியும் உணவுக்குழாயை மூடிக்கொள்ளும். இந்த வால்வில் ஏதாவது பிரச்னை என்றாலும் புரையேறும்.உணவுக்குழாயை ஒரு தண்ணீர்க் குழாய் மாதிரி நினைத்துவிட வேண்டாம். நாம் விழுங்கும் உணவு  ‘தொபுகடீர்’ என்று இரைப்பையில் போய் விழுந்துவிடாது. இது ஒரு தசைக்குழாய்; அலை அலையாகத்தான் இயங்கும். மலைப்பாம்பு உணவை விழுங்கும்போது அலை தோன்றுவதைப் பார்க்க முடியும். அதுமாதிரிதான் தொண்டையிலிருந்து உணவும் அலை அலையாகத்தான் இரைப்பைக்கு வந்து சேரும். இந்த இடத்தில் எச்சிலின் மகிமையைச் சொல்ல வேண்டும். பலரும் நினைக்கிற மாதிரி எச்சில் என்பது எச்சமல்ல, பிடிக்காதவர்களைப் பார்க்கும்போது ‘தூ’ என்று துப்புவதற்கு!

செரிமானத்துக்கான உணவுப் பயணத்தை ரிப்பன் வெட்டித் தொடங்கி வைக்கும் முக்கியமான வி.ஐ.பி, எச்சில் எனும் உமிழ்நீர். தினமும் ஒன்றரை லிட்டர் உமிழ்நீர் சுரக்கிறது. இதில் ‘மியூசின்’ எனும் திரவம் இருக்கிறது. இதுதான் உணவை இளக வைத்து, வாயில் அரைப்பதற்கு இலகுவாக்குகிறது. இதில் உள்ள ‘டயலின்’ என்சைம், உணவில் உள்ள ஸ்டார்ச் சத்தை மால்டோஸாக மாற்றி இரைப்பைக்கு அனுப்புகிறது; ‘லைசோசைம்’ என்சைம், பாக்டீரியாக்களை அழிக்கிறது. அடுத்த முறை எச்சிலைத் துப்பும்போது இந்த மகிமைகளைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். உணவுக்குழாய் இரைப்பையில் இணையும் இடத்திலும் ஒரு வால்வு இருக்கிறது. இதைத் திறந்துதான் உணவு இரைப்பைக்குள் செல்கிறது. இரைப்பையில் அமிலமும் பெப்சினும் சுரக்கின்றன என்று ஏற்கனவே சொன்னோம். இரைப்பை தசை மிகவும் வலுவானது. நாம் சாப்பிடும் உணவு எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதைப் பிசைந்து, அமிலத்தோடு கலந்து, ஜூஸாக்கி, சிறுகுடலுக்கு அனுப்புகிறது. இந்த இயக்கத்தின்போது உணவிலுள்ள மாவுச்சத்தும் புரதச்சத்தும் செரிமானமாகின்றன.

இப்படி இரைப்பை உணவை அரைப்பதற்கு சராசரியாக மூன்று மணி நேரம் ஆகிறது. எனவே, ஒரு உணவைச் சாப்பிட்ட பிறகு மூன்று மணி நேரத்துக்குள் நொறுக்குத்தீனி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படிச் சாப்பிட்டால் செரிமானம் பாதிக்கப்படும். இரைப்பையிலிருந்து சிறுகுடல் தொடங்கும் பகுதிக்கு முன்சிறுகுடல் என்று பெயர். இதன் நுழைவாயிலில் ஒரு வால்வு இருக்கிறது. இதைத் திறந்துகொண்டு உணவு சிறுகுடலுக்குள் செல்கிறது. பெயர்தான் சிறுகுடலே தவிர, குட்டிப் பாம்பு போல வயிற்றில் சுருண்டு கிடக்கும் இதன் நீளம் 20 அடி. நடுச் சிறுகுடல், பின் சிறுகுடல் என்பன அடுத்த பகுதிகள்.இங்கு பெண்கள் கொசுவம் கட்டுவதுபோல் நிறைய மடிப்புகள் இருக்கின்றன. இவற்றை விரித்தால் ஒரு கால்பந்து மைதானத்தின் பரப்பளவு இருக்கும். சிறுகுடலில் உணவுச்சாறு அணை திறக்கப்பட்ட காவிரி மாதிரி வேகமாகச் சென்றுவிடாமல், சிற்றாறுபோல் நிதானமாகச் சென்றால், செரிமானம் நன்றாக நடக்கும். இதற்கான ஏற்பாடுதான் இந்த மடிப்புகள். இவற்றுடன் விரல்கள் மாதிரி நிறைய புடைப்புகளும் சிறுகுடலில் இருக்கின்றன.

இவற்றுக்கு ‘விரலிகள்’ (Villi) என்று பெயர். இவை மொத்தம் 3 கோடி. இவையே உணவுச் சத்தை உறிஞ்சி ரத்தத்துக்கு அனுப்புகின்றன. இந்த விரலிகளுக்கு நடுவில் சிறுகுடல் சுரப்பிகள் உள்ளன. தினமும் சுமார் ஒன்றரை லிட்டர் சிறுகுடல் ஜூஸை இவை சுரக்கின்றன. ஒன்று தெரியுமா? உடலில் இரைப்பை இல்லாமல்கூட வாழ்ந்துவிடலாம், சிறுகுடல் இல்லாமல் வாழமுடியாது. அப்படிச் சிறுகுடலில் என்னதான் நடக்கிறது? செரிமானத்துக்கு உதவும் பல்வேறு  என்சைம்கள் ‘மாநாடு’ நடத்துவது இங்குதான்.முதலில் இங்குள்ள பாக்டீரியாக்கள் உணவுச் சத்துக்களை நொதிக்க வைத்து செரிமானத்துக்குத் தயார் செய்கின்றன. கல்லீரலில் சுரக்கும் பித்தநீர், பித்தப்பையில் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டு, பித்தக்குழாய் வழியாக முன்சிறுகுடலுக்கு வருகிறது. கணைய ஜூஸும் சிறுகுடல் ஜூஸும் இங்கு ஒன்றுசேர்கின்றன. சிறுகுடலுக்குள் வந்துவிட்ட உணவுச்சாற்றுடன் இந்தச் சாறுகள் கூடிக் குதூகலிக்கின்றன.

துணியைத் துவைத்துப் பிழியும்போது அழுக்கு பிரிக்கப்படுவதைப்போல உணவு செரிமானமாகும்போது பிரிக்கப்பட்டு, உறிஞ்சப்பட்ட சத்துக்கள், கல்லீரலுக்குச் செல்கின்றன. அங்கிருந்து உடலின் தேவைக்கேற்ப சத்துக்களை கல்லீரல் அனுப்பி வைக்கிறது. இப்படிச் சக்கையாக மாற்றப்பட்ட உணவு, ஒரு திரவக்கழிவாக பெருங்குடலுக்குள் நுழைகிறது.சுமார் 5 அடி நீளமுள்ள பெருங்குடலை ஒரு கழிவுத் தொழிற்சாலை என்றுதான் சொல்ல வேண்டும். இங்கு திரவக்கழிவிலிருந்து தண்ணீரையும் தாதுக்களையும் உறிஞ்சி எடுத்துக்கொள்வதால், மீதமுள்ள கழிவு திடக்கழிவாகி, ஆசனவாய் வழியாக வெளியேறுகிறது. அதேவேளை பெருங்குடல் இப்படித் தண்ணீரை உறிஞ்சவில்லை என்றால் வயிற்றுப்போக்கு உண்டாகிறது.நாம் சாப்பிடும் உணவு குடலுக்குள் பயணம் செய்து கழிவாக வெளியில் வர சராசரியாக 42 மணி நேரம் ஆகிறது. முதல் நாள் சாப்பிட்ட கீரை மறுநாள் வெளியே வரவில்லையே என்று கவலைப்படுவோர் சங்கம் ஒன்று உண்டு. அவர்களுக்காகத்தான் இந்தப் புள்ளிவிவரம் சொன்னேன்!



Disclaimer:

Saliyar Kural and it’s Management is not responsible in any way for the contents in any Articles and news published into this blog of respective authors / publication of various newspapers/magazines.  

பொறுப்பாகாமை: 
பல்வேறு எழுத்தாளர்கள் மற்றும் செய்தித்தாள்கள் அல்லது பத்திரிக்கையில் இருந்து இந்த வலைப்பூவில் பதிவேற்றம் செய்யப்படும் கட்டுரைகள் மற்றும் செய்திகளில் இடம்பெற்றுள்ள விஷயங்களுக்கு சாலியர் குரல் மற்றும் அதன் நிர்வாகம் பொறுப்பல்ல. 

தற்காப்பு மருந்தும், தடுப்பூசிகளும்! - க.நாகப்பன்

Return to frontpage
கோப்புப் படம்: ராஜேஷ்குமார் சிங்


எந்தக் குழந்தைக்கும் அதன் உடல், மன ஆரோக்கியத்தைப் பெறுவதற்கான முழு உரிமை உள்ளது. அதன்படி குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய நோய்களை முன்கூட்டியே தடுக்கக் கூடிய தற்காப்பு மருந்தையும், தடுப்பூசியையும் பெறுவது ஒவ்வொரு குழந்தையின் உரிமை.

குழந்தைகளுக்கு சரியான நேரத்தில் சரியான அளவில் உணவு வழங்காமல் இருப்பது, தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசி போடாமல் தவிர்ப்பது உரிமை மீறல் செயல். இவற்றின் மீது பெற்றோருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கலாம். ஆனால், அதற்காக குழந்தைகள் விஷயத்தில் தடுப்பு மருந்தையும், தடுப்பூசியையும் தவிர்க்கக் கூடாது.

கோட்பாடுகள், கொள்கை ரீதியாக மாற்றுக் கருத்தோ, மாற்று முடிவோ இருந்தாலும் அதற்காக குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பணயம் வைக்கக் கூடாது.

இதுகுறித்த விரிவான பார்வையைக் கொடுக்கும் நோக்கத்துடன் குழந்தைகளுக்கான உணவுகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள் குறித்து குழந்தைகள் மருத்துவ நிபுணர் மற்றும் பேராசிரியர் டாக்டர் என்.கங்காவிடம் பேசினோம்.

குழந்தை பிறந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு என்ன மாதிரியான உணவுகளைக் கொடுக்கலாம்?

குழந்தை பிறந்து 180 நாட்கள் ஆன பிறகு தாய்ப்பாலுடன் சேர்த்து இயற்கையான குடும்ப சூழலுக்கு உகந்த நம் கலாச்சார உணவையே குழந்தைக்கு கொடுக்க வேண்டும். காலை உணவாக இட்லி, இடியாப்பம், ஆப்பம் போன்ற உணவுகளை குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

காலை 11 மணி அல்லது மாலை 3 மணிக்கு ஆரஞ்சு, ஆப்பிள், திராட்சை, லெமன் ஆகியவற்றை ஆறிய வெந்நீர் மற்றும் உப்பு அல்லது சர்க்கரையுடன் சேர்த்து பழச்சாறாகக் கொடுக்கலாம். ஆனால், இதை ஃபிரிட்ஜில் வைக்கக் கூடாது. இளநீர், பானகம் போன்றவற்றையோ வடித்த கஞ்சியில் உப்பு அல்லது நெய் சேர்த்தோ கொடுக்கலாம்.

மதியம் சாதத்தை கரண்டி அல்லது மத்தில் மசியச் செய்து அதில் உப்பு மற்றும் வெந்நீர் கலந்து கொடுக்கலாம். ரசம், பருப்பு, சாம்பார், வேகவைத்த காய்கறிகளை குழந்தைகளுக்கு கொடுப்பதில் எந்தத் தடையும் இல்லை. ஆனால், எண்ணெய்ப் பொருட்கள், காரம் மிகுந்த பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

மாலை சுமார் 5 மணிக்கு வாழைப்பழம், தோல் சீவி இட்லி தட்டில் வேகவைத்த ஆப்பிள், சப்போட்டா பழத்தின் கதுப்புப் பகுதி (சதைப் பகுதி) ஆகியவற்றைக் கொடுக்கலாம்.

கம்பு, கேழ்வரகு, சோளம் உள்ளிட்ட ஐந்து தானியங்கள் அல்லது ஏழு தானியங்கள் அல்லது ஒன்பது தானியங்களை வறுத்து, அரைத்து சத்துமாவாக, கஞ்சியாக, கூழாக குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். ஒவ்வொருநாளும் சுவை மாற்றத்துக்காக உப்பு, வெல்லம், பால் என சத்துமாவில் கலந்து கொடுக்கலாம்.

பழங்கள் சாப்பிட்டால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்று சொல்லப்படுகிறதே?

பழங்கள் சாப்பிடுவதால் குழந்தைக்கு சளி பிடிக்கும் என்று பதற வேண்டாம். சளிக்கும் பழங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது அறிவியல் உண்மை.

இரவு உணவை எப்போது வழங்கலாம்?

9 மாதங்களுக்குப் பிறகு இரவு உணவு வழங்கலாம். சுமார் 8 மணிக்கு இட்லி, இடியாப்பம், தோசை, சாதம் என எதுவாக இருந்தாலும் ஃபிரஷ் உணவாக இருக்க வேண்டும். காலையில் செய்து மிச்சமானது, ஃப்ரிட்ஜில் இருந்தது என இருக்கும் உணவுகளைக் கொடுக்கக் கூடாது.

அசைவ உணவை எப்போது கொடுக்கலாம்?

9-வது மாதம் முடிந்த பிறகு தட்டம்மை, தாளம்மை, புட்டாளம்மைக்கான தடுப்பூசி குழந்தைக்கு போடப்படும். அதற்குப் பிறகு குழந்தைக்கு முட்டை கொடுக்கலாம்.( அசைவ உணவு சாப்பிடும் பழக்கத்தைச் சார்ந்த குடும்பத்தினராக இருந்தால்)

முதல் 15 நாட்களுக்கு அவிச்ச முட்டையின் மஞ்சள் கரு மட்டுமே கொடுக்க வேண்டும். சிலருக்கு செரிமானம் ஆவதில் தாமதம், உப்புசம், வயிற்றுப்போக்கு என வர நேரிடும். அதற்காக முட்டை கொடுப்பதை நிறுத்தக் கூடாது. வேண்டுமென்றால் 1 அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை முட்டை கொடுக்கலாம். 15 நாட்களுக்குப் பிறகு முட்டையின் வெள்ளைக் கருவை சாப்பிடக் கொடுக்கலாம்.

அதற்குப் பிறகு மீன், ஈரல், கோழிக்கறி, எலும்பு சூப் ஆகியவற்றை குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம். 2 வயதுக்குப் பிறகே வேகவைத்த ஆட்டு இறைச்சியைத் தர வேண்டும். அந்த வயதில் தான் குழந்தைக்கு ஆட்டு இறைச்சி செரிமானம் ஆகும். 2 வயதுக்கு முன்பாக மட்டன் சூப் மட்டும் தரலாம்.

அசைவ உணவுக்கென்று ஒரு வாசனை உள்ளது. அந்த வாசனையை குழந்தை பழக வேண்டுமென்றால் ஒரு வயதுக்குள் அந்த ருசியை குழந்தைக்கு அறிய வைக்க வேண்டும். அப்போது பழக்காவிட்டால் குழந்தை அதற்குப் பிறகு அசைவம் சாப்பிடாமல் தவிர்ப்பதற்கான வாய்ப்பு உள்ளது.

ஒரு வயது குழந்தைக்கு எத்தனை வேளை உணவு ஊட்டலாம்?

1 வயது ஆனதும் காலை, 11 மணி, மதியம், 5 மணி, இரவு என 5 வேளைகளில் உணவு கொடுக்கலாம். ஒரு வயதுக்குள் கசப்பு தவிர எல்லா ருசிகளையும் குழந்தைக்குப் பழக்கலாம்.
வடை, சுண்டல், புட்டு என பண்டிகைகள் உள்ளிட்ட எந்த நாளிலும் வீட்டில் செய்யும் பலகாரங்களை மட்டுமே குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.

1 வயது முடிந்ததும் 4 முறை சாப்பிடக் கொடுக்கலாம். அப்போது தனியாக பிரத்யேகமாக எந்த உணவையும் வழங்க வேண்டிய அவசியம் இல்லை. வீட்டில் எல்லோரும் சாப்பிடும் உணவையே தாராளமாக தரலாம்.

சில பெற்றோர்கள் சாப்பிடு சாப்பிடு என்று குழந்தைகள் வாயில் திணிக்கிறார்களே. இது சரியா?

குழந்தை விரும்பி வாயில் உணவை வாங்கினால் மட்டுமே ஊட்ட வேண்டும். வாயில் திணிப்பதோ, கட்டாயப்படுத்துதோ கூடாது. அப்படி மீறிச் செய்தாலும் ஒரு பருக்கை சோற்றைக் கூட கூடுதலாகவோ, குறைவாகவோ குழந்தை சாப்பிடாது. குழந்தை போதும் போதாது என்பதை சமிக்ஞைகள், உடல்மொழி மூலம் வெளிப்படுத்திவிடும்.


குழந்தைகளுக்கு எப்படிச் சோறூட்ட வேண்டும்?

பொதுவாக குழந்தைக்கு சோறூட்டும்போது தாய் தன் கைகளை சுத்தமாக வைத்துக்கொண்டு, குழந்தையை இடுப்பில் வைத்துக்கொண்டு முகம் பார்த்து பேச்சு கொடுத்தபடியே ஊட்ட வேண்டும். குழந்தையின் கண்ணோடு கண் ஒட்டியபடி உணர்வுப்பூர்வமாக சோறூட்ட வேண்டுமே தவிர, டிவி பார்த்துக்கொண்டோ கவனத்தை வேறு எங்கோ வைத்துக்கொண்டோ சோறூட்டக் கூடாது.

குழந்தைகளுக்குத் தராமல் தவிர்க்க வேண்டியது என்ன?

பிஸ்கெட், பிரெட்டுக்கு தடா போடுவது சிறந்தது. இவற்றில் சோடா உப்பு கலந்திருப்பதால் குழந்தையின் உடலுக்கும், குடலுக்கும் ஒத்துவராது.

டீ,காபி பழக்கத்தை குழந்தைக்குக் கொண்டு வராமல் இருக்கலாம். டீயில் உள்ள டேனின், காபியில் உள்ள கஃபின் சின்னதாய் சுறுசுறுப்பை வரவழைக்கும் என்றாலும் அது நம்மை அடிமையாக்கிவிடும். அந்த பழக்கத்தால் குழந்தைகள் சாப்பாட்டை தள்ளிப்போடும் சூழல் உருவாகும்.

விளம்பரங்களில் வரும் பானங்களை அறவே தவிர்த்திடுங்கள்.

கடைகளில் வாங்கும் உணவுப் பொருட்களையோ டின்களில் அடைக்கப்பட்ட பவுடர் உள்ளிட்ட பொருட்களையோ கொடுப்பது குழந்தையின் செரிமானத்தில் பிரச்சினையை ஏற்படுத்தும்.

குழந்தையை எப்போது தானாக சாப்பிட வைக்கலாம்?

2 வயது ஆனவுடன் தாய் குழந்தைக்கு ஊட்டக் கூடாது. குழந்தையை தன் கைகளினால் சாப்பிட வைக்க வேண்டும். ஆரம்பத்தில் ஸ்பூனில் சாப்பிட எந்தக் குழந்தையும் பழகாது. அதனால் கைகளால் சாப்பிடச் சொல்லலாம். நகங்களை வெட்டி, இரு கைகளை சுத்தப்படுத்தி, குழந்தையை தானாக சாப்பிட வையுங்கள். 2 கைகளில் சாப்பிட்டாலும் தடுக்காதீர்கள்.

ஒரே மாதிரி உணவு கொடுக்கக் கூடாது. ஏன்?

குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவைக் கொடுத்தால் போரடித்துவிடும். அதனால் தினம் தினம் புதிய உணவுகளை கொடுக்க வேண்டும்.

வாழைக்காய், உருளைக்கிழங்கு என்ற இரு காய்கறிகளையே அதிகம் தரும் பெற்றோர்கள் உண்டு. அவரைக்காய், புடலங்காய், பூசணிக்காய் என 15-க்கும் மேற்பட்ட காய்கறிகளை குழந்தைகளுக்கு மாற்றி மாற்றி சமைத்துத் தரலாம். வானவில்லின் ஒவ்வொரு நிறத்திலும் ஒரு காய்கறி உள்ளது. அதை ஒவ்வொரு நாளைக்கும் தரலாம். சில பள்ளிகள் திங்கட்கிழமை என்றால் பச்சை நிற உணவு, செவ்வாய்க்கிழமை என்றால் மஞ்சள் நிற உணவு என அட்டவணைப்படுத்தி உள்ளன. அதே போல எல்லா பெற்றோர்களும் குழந்தைகளைப் பழக்கப்படுத்தலாம்.

இது குழந்தைகளுக்கு கவன ஈர்ப்பை ஏற்படுத்துவதுடன், வண்ணங்களும், காய்கறிகளின் பெயர்களும் மனதில் பதிந்து நினைவாற்றலை வளர்க்க உதவும்.


குழந்தைக்கு தேவையான சொட்டு மருந்துகள்?

தாய்ப்பாலே மிகச் சிறந்த சத்து மருந்து என்பதால் குழந்தை பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு எந்த சொட்டு மருந்தும், டானிக்கும் தேவையில்லை. காய்ச்சல் போன்ற நோய் வந்தால் அப்போதைக்கு மருத்துவர் உரிய மருந்து தருவார்.

குறை மாதத்திலோ அல்லது எடை குறைவாக பிறந்த குழந்தை என்றாலோ இரும்புச் சத்து குறைபாடு இருக்கும். அதனால் எலும்புகள் வலுவடைய வைட்டமின் டி மருந்து மருத்துவரால் கொடுக்கப்படும்.

மல்டி வைட்டமின் மருந்து, செரிமான மருந்து ஆகியவை குழந்தைக்கு தேவையில்லை.

இரும்புச்சத்து குறைவால் குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்பட்டால் வெல்லம், பனைவெல்லம், கீரை, நாட்டு சர்க்கரை ஆகியவற்றை சாப்பிட்டால் போதும்.

தடுப்பூசிகளை எந்தெந்த காலகட்டத்தில் போட வேண்டும்?

2 வயதுவரை குழந்தைகளுக்கு சுமார் 15 தடுப்பூசிகள் வரை போட வேண்டியது கட்டாயம். இதில் தமிழக அரசின் சுகாதாரத் துறை சார்பில் ஆறு அல்லது ஏழு தடுப்பூசிகளை அரசு மருத்துவமனைகளில் போடப்படுகிறது. மற்ற தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளில் போட்டுக் கொள்ளலாம்.

குழந்தையின் வருங்கால நலனைக் கருத்தில் கொண்டு எல்லா தடுப்பூசிகளையும் போட்டால் நோய்களைத் தடுக்கலாம். உடல்நலனை விட மிகப் பெரிய சொத்து குழந்தைக்கு எதுவும் இல்லை என்பதை உணர்ந்து பெற்றோர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும்.

குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்குள் பிசிஜி எனும் காசநோய் தடுப்பூசி, மஞ்சள் காமாலை பி தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து ஆகியவற்றை கொடுக்க வேண்டியது கட்டாயம். தற்போது குழந்தை எங்கு பிறந்தாலும் அரசு/தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிகளைப் போட்ட பிறகே டிஸ்சார்ஜ் செய்யப்படுவது வழக்கம்.

குழந்தை பிறந்த ஆறு, பத்து, பதினாறாம் வாரங்களில் டிபிடி முத்தடுப்பு ஊசி, மஞ்சள் காமாலை பி தடுப்பூசி, மூளைக்காய்ச்சலைத் தடுக்கும் ஊசி என ஐந்து தடுப்பூசியாக பென்டாவேலன்ட் தடுப்பூசி போடுவது அவசியம். இதனுடன் போலியோ சொட்டு மருந்தும் போட வேண்டும். இதை அரசு / தனியார் மருத்துவமனைகளில் போடுவது வழக்கம்.

9-வது மாதத்தில் தட்டம்மை, தாளம்மை, புட்டாளம்மையை தடுக்கும் தடுப்பூசி, போலியோ சொட்டு மருந்து, ஜப்பானிய மூளைக் காய்ச்சலை தடுக்கும் தடுப்பூசி போட வேண்டும்.

14 மாதங்களில் சின்னம்மை தடுப்பூசியும், 15 மாதங்களில் எம்.எம்.ஆர் தடுப்பூசியும் போட வேண்டும்.

ஒன்றரை வயதில் டிபிடி பூஸ்டர், போலியோ பூஸ்டர் தரப்பட வேண்டும்.

தமிழகத்தின் சில மாவட்டங்களில் மட்டும் போலியோ தடுப்பூசி போடப்படுகிறது.ரோட்டா வைரஸால் ஏற்படும் வயிற்றுப்போக்குக்குத் தடுப்பு சொட்டு மருந்து, குழந்தைக்கு 6, 10, 14 வாரங்கள் முடிந்ததும் மொத்தம் மூன்று தவணைகள் அதை வாய் வழி திரவமாக எடுத்துக்கொள்ளலாம்.

2 வயது முடியும்போது டைபாய்டு தடுப்பூசி போடுவது அவசியம். இந்த தடுப்பூசியில் 2 வகை உள்ளது. முதலாம் வகை தடுப்பூசிக்கு 150 ரூபாய் மட்டும் செலவாகும். இதை அடுத்தடுத்த 3 வருடங்களுக்கு ஒருமுறை போட வேண்டும்.

இரண்டாம் வகை தடுப்பூசியை ஒரு முறை போட்டால் போதும். 25 வயது வரைக்கும் பாதுகாப்பை தேடிக் கொடுக்கும்.

பன்றிக்காய்ச்சல், பறவைக்காய்ச்சல் இருந்தால் அரசு நோய் கண்டறிந்த மாவட்டங்களைப் பட்டியலிடும். அப்போது மட்டும் போட்டுக்கொள்ளலாம். வைரஸ் கிருமியின் தன்மையைப் பொறுத்து தடுப்பூசியும் மாறுபடுவதால் அந்த சூழலில் தடுப்பூசி போடுவதே சிறந்தது.
ஒரு வகை தீவிர மூளைக்காய்ச்சல் பரவுவதற்கான வாய்ப்பு இருந்தால், அதற்கான தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

ஐந்தரை வயதிலிருந்து ஆறு வயதுக்குள் டிபிடி பூஸ்டர், டிடி பூஸ்டர், எம்.எம்.ஆர் தடுப்பூசி ( 2-வது முறை) சின்னம்மை தடுப்பூசி போட வேண்டும்.

10 வயதில் டிடி தடுப்பூசி, விடுபட்டிருந்தால் டைபாய்டு தடுப்பூசி, எம்.எம்.ஆர் மற்றும் சின்னம்மை தடுப்பூசி, மஞ்சள்காமாலை ஏ தடுப்பூசி விடுபட்டிருந்தாலும் போட்டுக் கொள்ளலாம்.

10 வயதுக்கும் மேலான பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசியை 10 வயது, அதற்கடுத்த 2 மாதங்கள், அதற்கடுத்த ஆறு மாதங்கள் என மூன்று முறை போட்டுக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவமனைகளில் இந்த தடுப்பூசிக்கான விலை ரூ.2300. இந்த தடுப்பூசியை போட்டுக்கொள்வதால் பெண்களுக்கு பிறகாலத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு குறைவு. இதே தடுப்பூசியால் ஆண்களுக்கு பெனிஸ் கேன்சர் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த தடுப்பூசி வெளிநாட்டில் வளரிளம் பருவ ஆண்களுக்கு போடப்படுகிறது.

16- 18 வயதில் டிடி தடுப்பூசியை போடுவது அவசியம். இதனால் சின்ன சின்ன ரத்த காயங்களுக்கு தடுப்பூசி போட வேண்டிய அவசியம் இருக்காது. அதாவது பிளேடால் கீறியதால் ஏற்படும் காயம், பென்சில் சீவியதால் ஏற்பட்ட காயம் போன்றவற்றுக்கு எந்த தடுப்பூசியும் தேவைப்படாது என்றார் டாக்டர் என்.கங்கா.

தற்போது, தமிழகத்தில் உள்ள 64% பெற்றோர்கள் மட்டுமே குழந்தைக்கான கூடுதல் உணவை சரியாக தருகிறார்கள். இது தேசிய அளவில் 51% தான். (RSOC 2013-14)
ஒரு குழந்தையின் தேவைகள் வயதுக்கு ஏற்ப அதிகரிக்கும். 6 முதல் எட்டு மாத குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 600 கலோரிகள் தேவைப்படும். 9 முதல் 11 வரையான மாதங்களில் ஒரு நாளுக்கு 700 கலோரிகளும் 12 முதல் 23 மாதங்கள் நிறைவு பெற்ற குழந்தைகளுக்கு 900 கலோரிகள் தினமும் தேவைப்படும்.
பொதுவாகத் தடுப்பூசிகளைச் சரியான காலகட்டத்தில் குழந்தைகளுக்கு வழங்குவதால் 8 விதமான நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க முடியும். தற்போது இன்னும் சில தடுப்பு மருந்துகளும் சேர்க்கப்பட்டுள்ளதால் போலியோ, காசநோய், தட்டம்மை, டிப்தீரியா, கக்குவான், டெடனஸ், ஹெபாடிடிஸ்-பி, பொன்னுக்கு வீங்கி, ருபெல்லா, மூளைக் காய்ச்சல், விட்டமின் ஏ குறைபாடு, நிமோனியா, மெனிஞிடிஸ், ஓடிடிஎஸ், காது தொற்று ஆகிய 14 விதமான நோய்களில் இருந்து குழந்தைகளைக் காக்க முடியும்.
ஒரே தடுப்பூசியில் பலவிதமான நோய்களுக்கான மருந்துக் கூறுகளை சேர்த்துக் கொடுப்பதன் மூலம் அடிக்கடி தடுப்பூசி போட்டுக் கொள்ளும் நிலையில் இருந்து குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் நிவாரணம் ஏற்படும்.
இந்தியா முழுவதும் அதிக நோய்த் தொற்று ஆபத்து நிறைந்ததாக கருதப்படும் 297 மாவட்டங்களிலும் குழந்தைகளுக்கு முழுமையாக தடுப்பூசிகளை வழங்குவதற்காக இந்திரா தனுஷ் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

பிறப்புச் சான்றிதழுக்கும், பட்ஜெட்டுக்கும் உள்ள தொடர்பு குறித்து 'தோழமை'- குழந்தைகள் உரிமைகளுக்கான அமைப்பின் இயக்குநர் அ.தேவநேயன் கூறியதாவது:


பிறப்புச் சான்றிதழ் என்பது ஒரு குழந்தை எந்த நாட்டின் குடிமகன் என்ற அடையாளத்துக்காகவும், குழந்தை ஆணா, பெண்ணா, பிறந்த தேதி என்ன என்பதைக் கண்டறிவதற்காகவும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

ஆனால், பிறப்புச் சான்றிதழ் வைத்து மத்திய அரசின் பட்ஜெட்டில் குழந்தைகளுக்கான நிதியை ஒதுக்க முடியும்.

தற்போது பட்ஜெட்டில் குழந்தைகளுக்கான நிதி குறைந்த சதவீதமே ஒதுக்கப்படுகிறது. 2016-ம் ஆண்டில் 17% மட்டுமே குழந்தைகளுக்காக நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதி கூட இவ்வளவு குழந்தைகள் இந்தியாவில் இருப்பார்கள் என பொதுவாகக் கணக்கிட்டே ஒதுக்கப்படுகிறது.

பிறப்புச் சான்றிதழ் குழந்தையின் முக்கிய ஆவணம். அரசுப் பதிவேட்டின் படி பிறப்புச் சான்றிதழை அடிப்படையாகக் கொண்டு குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு குழந்தைகளுக்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கலாம். இதனால் குழந்தையின் பிறந்த நாள் முதல் ஒரு மாதக் குழந்தை, ஒரு வருடக் குழந்தை என சரியான புள்ளிவிவரம் கிடைக்கும். இதை வைத்தே குழந்தையின் ஆரம்ப கால பராமரிப்புக்கு நிதி ஒதுக்கலாம்.

ஆனால், நம் நாட்டில் 48% மட்டுமே பிறப்புச் சான்றிதழ் வாங்குகிறார்கள். எனவே, பிறப்புச் சான்றிதழ் குறித்த விழிப்புணர்வும் அவசர அவசியம் என்கிறார் தோழமை தேவநேயன்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுச் சேவைக்கான செலவு பட்ஜெட்டில் 2014-15-ல் ரூ.16,415 கோடியாக இருந்தது, 2015-16ல் ரூ.13,636 கோடியாகக் குறைந்தது. 2016-17 பட்ஜெட்டில் இதற்கு ரூ.15,873 கோடிதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
2015 -16ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டில், குழந்தைகளுக்கான திட்டங்களுக்கு மிகவும் குறைவாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முந்தைய பட்ஜெட்டுடன் ஒப்பிடுகையில், குழந்தைகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு, 17 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாகவும், 'கிரை' எனப்படும் குழந்தைகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.
எந்தெந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு?
2015-16ம் ஆண்டு பட்ஜெட்டில், குழந்தைகள் நலன் என்ற பிரிவில், தனித்தனியாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒதுக்கீடு சதவீதம்:
* குழந்தைகள் கல்வி - 79 சதவீதம்* குழந்தைகள் மேம்பாடு - 15 சதவீதம்* குழந்தைகள் பாதுகாப்பு - 1.8 சதவீதம்* குழந்தைகள் ஆரோக்கியம் - 3.0 சதவீதம்

க.நாகப்பன், தொடர்புக்கு: nagappan.k@thehindutamil.co.in

Disclaimer:

Saliyar Kural and it’s Management is not responsible in any way for the contents in any Articles and news published into this blog of respective authors / publication of various newspapers/magazines.  

பொறுப்பாகாமை: 
பல்வேறு எழுத்தாளர்கள் மற்றும் செய்தித்தாள்கள் அல்லது பத்திரிக்கையில் இருந்து இந்த வலைப்பூவில் பதிவேற்றம் செய்யப்படும் கட்டுரைகள் மற்றும் செய்திகளில் இடம்பெற்றுள்ள விஷயங்களுக்கு சாலியர் குரல் மற்றும் அதன் நிர்வாகம் பொறுப்பல்ல.